இராமாயணம் பகுதி - 83 - RAMAYANAM PART - 83


இராமாயணம் பகுதி - 83


இராமாயணம் பகுதி - 83 - RAMAYANAM PART - 83

போரில் வேள்விப்பகைஞன், இலட்சுமணனுடன் போர் புரிந்து மாண்டான். வச்சிரப்பல்லன் அனுமனின் கையால் மாண்டான். இலட்சுமணன், பிசாசன் என்னும் வீரனையும் கொன்றான். இராமர் ஆறு கோடி சேனைகளை அழித்தார். இலட்சுமணன், நான்கு கோடி சேனைகளை அழித்தார். போரில் படைத்தலைவர்கள் மாண்டச் செய்தியை தூதர்கள் இராவணனிடம் சென்று கூறினர். இதைக் கேட்டு இராவணன் மிகவும் கோபங்கொண்டான். இராவணன் தம்பி கரன். இவனின் மகன் மகரக்கண்ணன். ஒருமுறை காட்டில் இராமரும், இலட்சுமணரும் இருந்தபோது சூர்ப்பனகை அவர்களிடம் தவறாக நடக்க முற்பட்டாள். அப்பொழுது கோபங்கொண்ட இலட்சுமணன் சூர்ப்பனகையின் காதையும், மூக்கையும் அறுத்தான். உடனே தன் அண்ணன் இராவணனிடம் சென்று முறையிட்டாள். 

அப்பொழுது இராமரிடம் போர் புரிய சென்றவர்களுள் ஒருவன் தான் கரன். காட்டில் போர் புரியும் போது கரன் இராமரால் மாண்டான். மகரக்கண்ணன் இராவணனை தொழுது, பிதாவே! என் தந்தையை கொன்ற இராமனை நான் கொன்று என் பழியை தீர்த்துக் கொள்கிறேன். தாங்கள் என்னை போருக்கு அனுப்பி வையுங்கள். நான் இப்போரில் தங்களுக்கு வெற்றியை தேடித் தருவேன். நான் போருக்குச் செல்ல தாங்கள் விடை தாருங்கள் என்றான். இராவணன் அவனை அன்போடு தழுவி, மகனே! உன் வீரம் மேருமலையை விடச் சிறந்தது. நீ போரில் இராமனையும், இலட்சுமணனையும் கொன்று வெற்றி மாலை சூடி திரும்புவாயாக எனக் கூறி விடைக் கொடுத்தான். பிறகு இராவணன், ஐந்து கோடி சேனைகளை உடன் அனுப்பி வைத்தான். 

மகரக்கண்ணன், சேனைகள் புடைசூழ, முரசொலிகள் முழங்க போர்களத்திற்கு வந்து சேர்ந்தான். அங்கு இராமரை பார்த்து கோபங்கொண்டு, இராகவா! நீ என் தந்தையைக் கொன்று அரக்க குலத்திற்கு பழியை தேடி தந்து உள்ளாய். அதே போல் நான் உன்னையும், உன் தம்பியையும் கொன்று என் பழியை தீர்த்து கொள்ள போகிறேன் என்றான். பிறகு தன் மாய உருவினால் நெருப்பு மழை சிந்தியும், புயல்காற்று வீசியும், வானத்தில் இடி விழச் செய்தும் தன் உருவத்தினை மறைத்து பல மகரகண்ணன்கள் இருப்பது போல் தோற்றமளித்து போர் புரிந்தான். இவ்வாறு அவன் தன் உருவினை மாற்றி மாற்றி போர் புரிந்துக் கொண்டிருந்தான். இராமர் அவனை நோக்கி அம்புகளை ஏவினார். 

அதில் ஓர் அம்பு பட்டு அவன் உடம்பில் இருந்து இரத்தம் வலிந்தது. இதைப் பார்த்த இராமர், இரத்தம் சிந்தும் உருவமே மகரக்கண்ணனின் உண்மையான உருவம் என்பதைக் கண்டு கொண்டார். பிற உருவங்களில் இரத்தம் இல்லாததைக் கண்டார். மகரக்கண்ணனை தவிர மற்றவைகள் எல்லாம் மாயம் என்பதை உணர்ந்த இராமர், ஒரு தெய்வீக கணையை அவன் மீது ஏவினார். இதனால் அவனின் வலிமை குறைந்து அவன் மாண்டான். அரக்க தூதர்கள் இராவணனிடம் சென்று மகரக்கண்ணன் இராமனால் மாண்டான் என்னும் செய்தியைக் கூறினார்கள். இதைக்கேட்டு இராவணன் துன்பக்கடலில் ஆழ்ந்தான். இலங்கையில் அரக்கியர்கள் தங்கள் கணவர்கள் போரில் மாண்டதை அறிந்து கதறி அழுதுக் கொண்டிருந்தனர்.

இராவணன் இந்திரஜித்தை அழைத்து, மகனே! படைத்தலைவர்களும், கரன் மகனான மகரக்கண்ணனும் போரில் மாண்டனர். இப்போரில் உன்னைத் தவிர வேறு எவராலும் வெல்ல முடியாது. உனக்கு நிகரான மாவீரர்கள் இந்த உலகில் இல்லை. அந்த இராம, இலட்சுமணனை உன்னைத் தவிர வேறு எவராலும் வெல்ல முடியாது. நீ போருக்கு சென்று வெற்றியுடன் திரும்பி வா! எனக் கூறி விடை கொடுத்தான். இந்திரஜித் தன் தந்தையை வணங்கி போருக்கு புறப்பட்டான். இந்திரஜித், ஆயிரம் குதிரைகள் பூட்டிய தேரில் ஏறி, அசுர சேனைகள் புடைசூழ போர்க்களத்திற்கு வந்துச் சேர்ந்தான். அவனை பார்த்த வானர வீரர்கள் சிலர் பயத்தில் ஓடி ஒளிந்தனர். இராமர் வானர வீரர்களுக்கு பயம் நீங்க ஆறுதல் கூறினார். இராமர், அனுமனின் தோளிலும், இலட்சுமணன் அங்கதன் தோளிலும் ஏறி போர் புரிய தொடங்கினர்.

இராமரும், இலட்சுமணரும் தங்கள் கர வேகத்தையும், வில்வேகத்தையும் கொண்டு போர் புரிந்து கொண்டு இருந்தனர். இராம இலட்சுமணனின் வில் திறமையைக் கண்டு இந்திரஜித் வியந்து நின்றான். இராம இலட்சுமணனின் போர் திறமையைக் கண்டு அரக்க சேனைகள் பயந்து ஓடின. இந்திரஜித் நான் தனியாகவே போர் புரிந்து கொள்கிறேன் எனக் கூறி போர் புரிந்தான். அப்பொழுது இராமர் அவனின் தேரை உடைத்தெறிந்தார். இலட்சுமணனும், இந்திரஜித்தும் கடுமையாக போர் புரிந்தனர். அப்பொழுது இந்திரஜித் தன் மாய திறமையால் வானத்தில் போய் மறைந்தான். இலட்சுமணன் இராமரை பார்த்து, அண்ணா! நான் இப்பொழுது இவன் மேல் பிரம்மாஸ்திரத்தை ஏவ போகிறேன் என்றான்.

இராமர், தம்பி இலட்சுமணா! நீ பிரம்மாஸ்திரத்தை பயன்படுத்தினால் ஒரு நொடியில் உலகமே அழிந்துவிடும். அதனால் நீ பிரம்மாஸ்திரத்தை பயன்படுத்த வேண்டாம் என தடுத்து நிறுத்தினார். போரில் தோற்று மாய வேலை செய்து மறைந்த இந்திரஜித் யாரும் அறியாமல் இலங்கை நகரை அடைந்தான். இந்திரஜித்தை காணாததால், அவன் பயந்து ஓடி விட்டான் என நினைத்து இராம இலட்சுமணன் உள்ளிட்ட வானரப்படைகள் இளைப்பாறினர். இராமர், வானரப் படைகளுக்கு உணவு பொருட்களை கொண்டு வருமாறு விபீஷணனை அனுப்பினார். இராமர், தன் படைக்கலன்களுக்கு பூஜை செய்ய தனியாகச் சென்று விட்டார். இலட்சுமணன் மற்றும் மற்ற வானர வீரர்கள் மட்டுமே போர்க்களத்தில் இருந்தனர். இந்திரஜித் அரண்மனைக்கு சென்று இராவணனிடம் தான் மறைந்து நின்று பிரம்மாஸ்திரத்தை விடுவது என முடிவு செய்தான்.

அதற்கு மகோதரனை முதலில் சென்று போர் புரியுமாறு கூறினான். அவன் மாய போர் செய்து கொண்டிருக்கையில் நான் பிரம்மாஸ்திரத்தை செலுத்தி விடுவேன் எனக் கூறினான். (மாயப் போர் என்பது ஒருவரை ஒருவர் பார்க்காமல் போர் புரிவது.) மகோதரன் போர்க்களத்தில் மாய போர் புரிந்தான். அவன் ஆங்காங்கே நின்று போர் புரிந்தான். இதை கவனித்த இலட்சுமணன், பாசுபதாஸ்திரத்தை ஏவினார். இதில் அரக்க சேனையும், அவர்களது மாயமும் எரிந்து போனது. மாய விலகிய மகோதரன் அவ்விடத்தை விட்டு ஓடினான். அப்போது இந்திரஜித் யாரும் அறியாத வண்ணம் மறைந்து இருந்து பிரம்மாஸ்திரத்திற்கான மந்திரத்தை சொல்லிக் கொண்டு இருந்தான்.

தொடரும்.....

Post a Comment

0 Comments