இராமாயணம் பகுதி - 82 - RAMAYANAM PART - 82


இராமாயணம் பகுதி - 82


இராமாயணம் பகுதி - 82 - RAMAYANAM PART - 82

இராமர், ஒருவன் செய்த தீமைக்காக மட்டும் உலகை அழிப்பது முறையல்ல என நினைத்துக் கொண்டு மனதை தேற்றினார். அப்பொழுது கருட பகவான், வானத்தில் இருந்தப்படி அந்த இடத்தை வட்டமிட்டார். வானத்தில் இருந்தப்படியே இராமரை தொழுதார். பரம்பொருளே! உலக நாயகனே! உலகங்களை காக்கும் தேவனே! கருணை வடிவானவரே! மற்றவர்களின் துன்பங்களை நீக்குபவரே! இராமா! அருட்பொருஞ் ஜோதியே! கருணைக் கடலே! எனப் போற்றி வணங்கினார். இப்படி வானத்தில் வட்டமிட்டு பறந்துக் கொண்டிருந்த கருட பகவான், தன் சிறகுகளை அகல விரித்துக் கொண்டு இராமர் முன் வந்து நின்றான். கருட பகவானுடைய நிழல் பட்டவுடன் இலட்சுமணன் முதலானவர்களை கட்டியிருந்த நாகபாசம் விடுபட்டு விட்டது.

கருட பகவானின் நிழல் பட்டு மாண்ட அரக்கர்கள் எழவில்லை. கருட பகவானின் வரவு தீயவர்களுக்கு நல்லது செய்யவில்லை. அதுமட்டுமின்றி கருட பகவானின் நிழல் பட்டு வானரங்கள் மீண்டும் உயிர்பெற்று, போரில் ஏற்பட்ட காயங்களும், புண்களும் ஆறி புத்துயிர் பெற்றது போல் இராம்!... இராம்!... என இராமரின் ஜெபத்தை சொல்லிக் கொண்டு எழுந்தனர். நாகபாசம் விடுபட்டு நீங்கிய இலட்சுமணனை, இராமர் மார்போடு தழுவிக் கொண்டார். பிறகு கருடனை பார்த்து, ஐயா தாங்கள் யார்? நாங்கள் செய்த தவப்பயனால் தான் தாங்கள் இங்கு வந்துள்ளீர்கள். தாங்கள் வந்ததால் தான் நாகபாசத்தால் கட்டுண்டவர்கள் விடுபட்டுள்ளனர். தாங்கள் எங்களுக்கு செய்த உதவிக்கு நாங்கள் உங்களுக்கு என்ன கைம்மாறு செய்யப் போகிறோம் என்பது தெரியவில்லை. தங்களை நாங்கள் இதற்கு முன் பார்த்ததும் இல்லை. தங்களை பற்றியும் கேட்டதில்லை.

அன்பனே! தாங்கள் கைம்மாறு எதிர்பாராமல் எங்களுக்கு உதவி செய்து உள்ளீர்கள். இதற்கு நாங்கள் கோடான கோடி நன்றிகள் சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். எங்களின் அன்பை தங்களுக்கு தருகிறோம். இவர்கள் மீண்டும் உயிர் பெறுவார்களா? என நினைத்துக் கொண்டிருக்கும் தருணத்தில் தாங்கள் எவ்வித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் எங்களுக்கு உதவி செய்து உள்ளீர்கள் என்றார். இதைக் கேட்ட கருட பகவான், இராமரின் திருவடிகளை தொழுது வணங்கி, உங்கள் திருவடிக்கு கோடி வணக்கங்கள் என்று கூறிவிட்டு அங்கிருந்து பறந்து சென்றான். பிறகு அனுமன் இராமரிடம், பெருமானே! இலட்சுமணர் இறந்து விட்டார் எனவும், நாம் அனைவரும் இறந்து விட்டோம் எனவும் அன்னை சீதை நினைத்து வருந்திக் கொண்டு இருப்பார். அது மட்டுமின்றி அங்கு அரக்கர்கள் மகிழ்ச்சியில் இருப்பார்கள்.

ஆதலால், நாம் உயிர் பிழைத்துவிட்டோம் என்பதை இலங்கையில் உள்ளவர்கள் தெரிந்து கொள்ள நாம் ஆரவாரம் செய்வோம் என்றான். இராமர், அனுமனின் யோசனைக்கு உடன்பட்டு சம்மதித்தார். பிறகு வானரங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து உலகமே அதிரும் வண்ணம் ஆரவாரம் செய்தனர். இலங்கையில் இருவர் மட்டும் தூங்காமல் இருந்தனர். ஒருவன் இராவணன். இராவணன் சீதையை நினைத்துக் கொண்டு தூங்காமல் இருந்தான். மற்றொருவர் சீதை. சீதை இராமனையே நினைத்துக் கொண்டு தூங்காமல் இருந்தாள். இந்த ஆரவாரம் இலங்கை நகர் முற்றிலும் கேட்டது. இராவணன் இந்த ஆரவாரத்தைக் கேட்டு திடுக்கிட்டான். இது என்ன மாயம்? வானரங்களின் ஆரவாரம் செவிகளை பிளக்கிறதே! இலட்சுமணன் வில்லின் நாணொலியின் சத்தமும் கேட்கிறதே! அனுமனின் ஆரவாரமும் கேட்கிறதே! அப்படியென்றால் இவர்கள் அனைவரும் நாகபாசத்தில் இருந்து விடுப்பட்டு விட்டார்கள் என்பதை உணர்ந்தான்.

இராவணன் வானரங்களின் ஆரவாரத்தைக் கேட்டு இந்திரஜித்தின் மாளிகைக்கு விரைந்துச் சென்றான். அங்கு இந்திரஜித் போரினால் ஏற்பட்ட களைப்பால் மிகவும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தான். இராவணன், இந்திரஜித்தை எழுப்பினான். இந்திரஜித், தந்தையே! தாங்கள் ஏன் இவ்வளவு அவசரமாக என்னை எழுப்பினீர்கள் என்றான். இராவணன், மகனே! நீ நாகபாசத்தால் கொன்று விட்டேன் எனக் கூறியவர்கள், ஆரவாரம் செய்து கொண்டிருக்கும் ஓசை உனக்கு கேட்கவில்லையா? எனக் கேட்டான். இதைக் கேட்ட இந்திரஜித், இது எப்படி சாத்தியமாகும்? நாகபாசத்தால் கட்டுண்டவர்கள் எவ்வாறு மீள முடியும்? என்றான். அப்பொழுது தூதுவன் ஒருவன் அங்கு வந்தான். அரசே! நாகபாசத்தால் கட்டுண்டவர்களை பார்த்த இராமர், கோபங்கொண்டு நாகபாசத்தை ஏவியவனை கொல்வேன் என முனைந்தான்.

அப்பொழுது கருட பகவான், வானத்தில் இருந்து பறந்து வந்து தன் சிறகுகளை அகல விரிந்து நாகபாசத்தால் கட்டுண்டவர்களையும், போர்களத்தில் மாண்ட வானரங்களையும் காப்பாற்றி விட்டான் எனக் கூறினான். இதைக் கேட்ட இராவணன், என்னுடன் தோல்வி அடைந்த அந்த கருடனுக்கு இவ்வளவு ஆற்றலா? எனக் கோபம் கொண்டான். பிறகு இந்திரஜித்திடம், மகனே! நீ உடனே போர்களத்திற்குச் சென்று பிரம்மாஸ்திரத்தை ஏவி அவர்களை கொன்று விட்டு திரும்புவாயாக என்றான். இந்திரஜித், தந்தையே! நான் இன்று ஓய்வு எடுத்துக் கொண்டு நாளை போரில் நிச்சயம் அவர்களை வீழ்த்தி, உங்களுக்கு மன ஆறுதலை கொடுப்பேன் என்றான். இராவணன், இதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டு அங்கிருந்து வந்தான். இராவணன் தன் மாளிகைக்கு வந்தடைந்தான். அப்பொழுது படைத்தலைவர்கள் அங்கு வந்தனர்.

அவர்கள், அரச பெருமானே! தாங்கள் எங்களை போருக்கு அனுப்புமாறு வேண்டுகிறோம். அப்பொழுது அவர்களில் ஒருவன், அரசே! மாபக்கனும், புகைக்கண்ணனும் போரில் அவர்களை பார்த்து ஓடி வந்தவர்கள் எனக் கூறினான். இதைக் கேட்டு இராவணன் அவர்கள் மேல் பெருங்கோபம் கொண்டான். போரில் எதிரிகளை கண்டு பயந்து ஓடி வந்த நீங்கள் எல்லாம் வீரர்களா? இவர்களின் மூக்கை அறுத்தெறியுங்கள் என்றான். அப்பொழுது மாலி என்னும் வீரன் இராவணனை வணங்கி, அரசே! ஒருவனுக்கு வெற்றியும், தோல்வியும் மாறி மாறி வரும். வெற்றியும், தோல்வியும் யாருக்கும் நிரந்தரம் அல்ல. உங்கள் தம்பிமார்களும் போரில் தோற்றவர்கள் தான். அதனால் தோற்றவர்களின் மூக்கை அறுப்பது நியாயமாகாது என்றான்.

இதைக்கேட்டு இராவணன் கோபம் தணிந்து அவர்களை மன்னித்து, போருக்கு அவர்களுடன் பத்து கோடி வெள்ள சேனைகளை உடன் அனுப்பி வைத்தான். பிறகு படைத்தலைவர்களும், அரக்கப்படைகளும் கையில் ஆயுதங்களை ஏந்திக் கொண்டு போருக்கு புறப்பட்டனர். போருக்கு வரும் படைத்தலைவர்களின் ஆற்றலைப் பற்றி விபீஷணன், இராமரிடன் எடுத்துக் கூறினான். அரக்கப்படைகளும், வானரப்படைகளும் பெரும் ஆரவாரத்தோடு போர் புரியத் தொடங்கினர். இரு படைகளின் போர் மிகவும் கடுமையாக நடந்தது. புகைக்கண்ணன் அனுமனுடன் போர் புரிந்து மாண்டான். மாபக்கன், அங்கதனுடன் போர் புரிந்து மாண்டான். மாபெரும் வீரனான் மாலி, வானர படைத்தலைவன் நீலனுடன் போர் புரிந்து மாண்டான். 

தொடரும்.....

Post a Comment

0 Comments