இராமாயணம் பகுதி - 36 - RAMAYANAM PART - 36


இராமாயணம் பகுதி - 36


இராமாயணம் பகுதி - 36 - RAMAYANAM PART - 36

இராமர் இலட்சுமணர், ஜடாயுவை தேடி விரைந்து சென்றனர். அவர்கள் போகும் வழியில் ஒரு கொடிய வில் முறிந்து கிடப்பதையும், கவசம் அறுந்து கிடப்பதையும் கண்டனர். இதனைக் கண்ட இராமர் இங்கு பெரும் போர் நடத்திருக்க கூடும் என்றார். சிறிது தூரம் சென்றதும் இரத்த வெள்ளத்தில் ஜடாயு வீழ்ந்து இருப்பதை பார்த்து மிகவும் துன்பப்பட்டனர். இராமர் ஜடாயுவை பார்த்து புலம்பி அழுதார். வீட்டில் என் தந்தையை இழந்தேன். இங்கு தந்தைக்கு நிகரான தங்களை இழந்து விட்டேன். இனி நான் என்ன செய்வேன் என புலம்பி அழுதார். சிறிது மயக்கம் தெளிந்த ஜடாயு இராம இலட்சுமணரை பார்த்து மகிழ்ச்சி அடைந்தார்.

உங்களை என் உயிர் போகும் தருணத்தில் காண்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தாங்கள் சீதையை தனியே விட்டுவிட்டு எங்கே சென்றீர்கள். இராவணன் சீதையை கவர்ந்து செல்வதை கண்டு நான் அவனை தடுக்க முயற்சித்தும் தோற்றுவிட்டேன். இராவணன் சிவன் கொடுத்த வாளால் என் சிறகுகளையும் கால்களையும் அறுத்துவிட்டு, இங்கிருந்து தப்பித்து ஓடி விட்டான். இதைக்கேட்ட இராமர் பெரும் கோபம் கொண்டார். சீதையை அபகரித்து சென்றதையும், தங்களை இந்த நிலைமைக்கு ஆளாக்கியவனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த விண்ணுலகத்தவரை அழித்து விடுகிறேன் என்றார். ஜடாயு, இராமா! ஒரு பெண்ணை காட்டில் தனியாக விட்டுவிட்டு ஒரு மானின் பின் சென்றது உன் தவறு. நீ விண்ணுலகத்தவரை கோபித்துக் கொண்டு ஒரு பயனும் இல்லை. அவர்கள் நீ அரக்கர்களை அழிப்பாய் என உன் உதவியை நாடி இருக்கின்றனர்.

ஆதலால் நீ அரக்கர் குலத்தை அழித்து உன் மனைவியை காப்பாற்று என்று கூறினார். பிறகு ஜடாயுவின் உடலை விட்டு உயிர் பிரிந்தது. இராமரும் இலட்சுமணரும் ஜடாயுவின் பிரிவை தாங்கமுடியாமல் அழுதனர். பிறகு அவர்கள் ஜடாயுவுக்கு ஈமச் சடங்குகளை செய்தனர். இராம இலட்சுமணர் அன்றைய பொழுதை ஓர் இடத்தில் கழித்தனர். இரவெல்லாம் இராமர் தூங்கவில்லை. சீதையை நினைத்து மிகவும் வேதனையடைந்தார். பொழுது விடிந்தது. இராமரும் இலட்மணரும் சீதையை தேடி தெற்கு திசையை நோக்கி பயணித்தனர். இவர்கள் வெகுதூரம் சென்று கவந்தன் என்னும் அரக்கன் இருக்கும் வனத்தை அடைந்தனர். நண்பகல் வந்தது. கவந்தனை இந்திரன் வஜ்ஜாயுதத்தால் அடித்ததால் அவனின் தலை உடம்புக்குள் புகுந்து முண்டமாக மாறினான். கவந்தன் வனத்தில் வாழும் விலங்களையும், முனிவர்களையும் துன்புறுத்தி தீங்கு செய்து வந்தான். கவந்தனின் கையில் யாராவது அகப்பட்டால் உடனே அவன் தின்றுவிடுவான். அவன் கையை நீட்டி அள்ளினால் வனத்தில் உள்ள விலங்குகள், முனிவர்கள் எல்லாம் கையில் அகப்படுவர். அந்த அளவுக்கு அவனின் கை நீளமானது. சீதையை தேடி சென்ற இராமனும் இலட்சுமணனும் கவந்தனின் கையில் அகப்பட்டுக் கொண்டனர்.

கவந்தன், உங்களைக் கடவுளே எனக்கு உணவாக அனுப்பியிருக்கிறார். உயிர் மேல் வேண்டாம் என ஆசை வைக்க மிரட்டினான். இராமர் சீதையின் நினைவால் மிகவும் மனம் வருந்தி இருந்தார். இராமர் இலட்சுமணனிடம், தம்பி! எனக்கு ஏற்பட்ட துயரங்கள் போதும். இனியும் நான் உயிர் வாழ விரும்பவில்லை.

என்னை இவ்வரக்கனிடம் விட்டுவிட்டு நீ தப்பிச்செல் என்றார். இலட்சுமணன், அண்ணா! நாம் வனம் வரும் முன் அன்னை சுமித்திரை என்னிடம், இராமனுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் அவனுக்கு முன் நீ உயிர் துறந்துவிடு என்றார். ஆனால் இப்பொழுது நீங்கள் உயிர் துறந்தால், நான் எவ்வாறு நாடு திரும்ப முடியும். இறந்தால் இருவரும் இறப்போம் என்றார். அண்ணா! துன்பம் வரும்போது அதனை எதிர்க்க வேண்டும். அது தான் வீரம். இதனைக் கேட்ட இராமர் மனம் தேறினார்.

இலட்சுமணர், அண்ணா! நாம் இவனைக் கொல்லாமல் இவனுடைய தோள்களை மட்டும் வெட்டிவிடுவோம் என்றார். கவந்தன் இராம இலட்சுமணரை விழுங்க முன் வந்தான். அவர்கள் கவந்தனுடைய தோள்களை வெட்டித் தள்ளினார்கள். கவந்தன் கீழே விழுந்தான். பிறகு அவன் சாப விமோச்சனம் பெற்று சூரிய ஒளி போல் விண்ணில் தோன்றினான். இராமர் கவந்தனை நோக்கி, நீ யார்? எனக் கேட்டார். நான் விசுவாவசு என்ற பெயர் கொண்ட கந்தர்வன். ஒரு முனிவரின் சாபத்தால் அரக்கனாக மாறினேன். தாங்கள் என் தோள்களை வெட்டியவுடன், நான் என் பழைய உருவினை பெற்றேன். தங்களுக்கு கோடி வணங்கள். நான் சீதையை கண்டுபிடிக்க வழியை கூறுகிறேன். நீங்கள் தனியாக சீதையை கண்டுபிடிக்க இயலாது. தங்களுக்கு சுக்ரீவன் உதவி புரிவார். ஆதலால் தாங்கள் சுக்ரீவனை நாடி செல்லுங்கள். சுக்ரீவனின் மனைவியை வாலி கவர்ந்து சென்றுள்ளான். நீங்கள் சுக்ரீவனின் மனைவியை மீட்டு சுக்ரீவனிடம் நட்பு கொள்ளுங்கள். சுக்ரீவன் மிகவும் நல்லவன். அவன் வானரங்களின் தலைவன் ஆவான். சீதையை தேடி கண்டுபிடிக்க சுக்ரீவன் உதவி புரிவான் எனக் கூறிவிட்டு அங்கிருந்து மறைந்தான் கந்தர்வன்.

பிறகு இராம இலட்சுமணர் பல காடுகளையும், மலைகளையும் தாண்டி சென்று மதங்க மகரிஷி வாழும் ஆசிரமத்தை அடைந்தனர். அங்கு மகரிஷியின் சீடர்களுக்கு சபரி என்னும் மூதாட்டி பணிவிடை செய்து கொண்டு அங்கேயே தங்கியிருந்தாள். சபரி மூதாட்டி மகரிஷி யின் மாணவி ஆவார். அவள் இராமனின் வரவை எதிர்நோக்கி வழிபாடு செய்து கொண்டு இருந்தாள். சபரி மூதாட்டி இராம இலட்சுமணர் வருகையை எதிர்பார்த்து அவர்களுக்காக காய் கனிகளை சேகரித்து வைத்து இருந்தாள். இராம இலட்சுமணர் வருகையை பார்த்து இன்முகத்துடன் வரவேற்று உபசரித்தாள். சபரியின் அளவற்ற அன்பைக் கண்டு இராமர் நெகிழ்ந்து போனார். பிறகு சபரி இராமனின் துன்பங்களை கேட்டறிந்தார். அவள் சுக்ரீவனை துணையாகக் கொண்டு சீதையை கண்டுபிடிக்க கூறினாள். சுக்ரீவனை காண செல்லும் வழியையும் அவள் கூறினாள். பிறகு சபரி, இராம இலட்சுமணர் இருக்கும் போதே முக்தி நிலையை அடைந்தாள்.

இராமரும் இலட்சுமணரும் சுக்ரீவனை காண சபரி காண்பித்த வழியை நோக்கி பயணித்தனர். வழியில் மலைகள், காடுகளை கடந்து சென்றனர். பிறகு அவர்கள் பம்பை நதியை அடைந்தனர். பம்பையின் அழகையும், நீர் வளத்தையும், நில வளத்தையும் பார்த்த உடன் இராமருக்கு சீதையின் நினைவு வந்தது. அவர்கள் பம்பையில் நீராடிவிட்டு இறைவனை வழிப்பட்டு, பிறகு சோலையில் ஓர் இடத்தில் தங்கினார்கள். இராமர் இலட்சுமணரிடம், தம்பி! சீதை இங்கு இருந்தால் பம்பை நதியின் அழகை மிகவும் இரசித்திருப்பாள். ஆனால் இன்று அவள் என்னை நினைத்து மிகவும் வருந்தி கொண்டு இருப்பாள் என்றார். இதற்கு இலட்சுமணர், அன்னை! தங்களை நினைக்க மாட்டார் என்றார். இதைக் கேட்ட இராமருக்கு அதிர்ச்சி உண்டானது. தம்பி! உன் பதில் வித்தியாசமாக உள்ளது. கற்புடைய பெண்கள் தங்கள் கணவரை எப்போதும் நினைத்துக் கொண்டு இருப்பார்கள். அதேபோல் சீதையும் என்னை நினைத்துக் கொண்டு இருப்பாள் தானே? என்றார்.

அதற்கு இலட்சுமணர், கற்புடைய பெண்கள் நிச்சயம் தங்கள் கணவரை பிரியும்போது, நினைத்துக் கொண்டு இருப்பார்கள். ஆனால் அன்னை தங்களை மறந்தால் தானே நினைப்பார்கள். அன்னை தங்களை ஒரு நொடி கூட மறக்க மாட்டார்கள். ஆதலால் தான் தங்களை நினைக்க மாட்டார்கள் என்றேன் என்றார். இலட்சுமணனின் பேச்சு திறமையைக் கண்டு இராமர் வியந்து போனார். இராமர் மறுபடியும் சீதையை நினைத்து புலம்பினார். சுக்ரீவன் எங்கு உள்ளானோ? அவனை நாம் எப்படி கண்டுபிடிப்பது? சீதை எத்தகைய துன்பத்தை அனுபவித்துக் கொண்டு இருப்பாளோ? சீதையை நான் எப்பொழுது காண்பேன்? ஒரு பெண்ணின் துயரத்தை போக்க முடியாத எனக்கு எதற்கு வில்? என்று உலக மக்கள் அனைவரும் என்னை தூற்றுவார்களே எனக் கூறி இராமர் புலம்பினார். இலட்சுமணர் இராமரை சமாதானம் செய்தார்.

தொடரும்.....

Post a Comment

0 Comments