இராமாயணம் பகுதி - 74 - RAMAYANAM PART - 74


இராமாயணம் பகுதி - 74


இராமாயணம் பகுதி - 74 - RAMAYANAM PART - 74

அங்கதன் மயங்கி கீழே விழுந்ததை பார்த்த அனுமன் அங்கே ஓடி வந்தான். ஓர் பெரிய மலையை தூக்கி கும்பகர்ணனை நோக்கி வீசினான். கும்பகர்ணன் அம்மலையை தன் கையால் பிடித்து திரும்ப அனுமன் மீது வீசினான். அப்போது வானர வீரர்கள், அங்கதனை அங்கிருந்து தூக்கிச் சென்றனர். அனுமன் மறுபடியும் ஓர் மலையை தூக்கி, அரக்கனே! இந்த மலையை நான் உன் மேல் எறிவேன். இந்த மலையை உன்னால் தவிர்க்க முடியுமானால் நீ மிகவும் வலிமைமிக்கவன். உன் வலிமையை அனைவரும் போற்றுவர். அப்படி இல்லாமல் இந்த மலையால் தாக்கப்பட்டால் நீ என்னிடம் தோற்றவன் ஆவாய் பிறகு உனக்கும் எனக்கும் போர் இல்லை. நான் இங்கிருந்து சென்றுவிடுவேன் என்றான். கும்பகர்ணன் இதைக் கேட்டு, நான் உன் வலிமைக்கு குறைந்தவன் இல்லை எனக் கூறி சம்மதித்தான்.

பிறகு அனுமன் அந்த மலையை கும்பகர்ணன் மீது தூக்கி எறிந்தான். கும்பகர்ணன் அந்த மலையை தூள் தூளாக்கினான். இதனைப் பார்த்த அனுமன், இவன் மிகவும் வலிமை படைத்தவன். இவனை இராமரை தவிர வேறு எவராலும் கொல்ல முடியாது என நினைத்து அங்கிருந்துச் சென்றான். அப்பொழுது இலட்சுமணன் அங்கு வந்து போர் புரிவதற்கான அடையாளமான தன் நாணை இழுத்து பெரும் ஓசையை எழுப்பினான். பிறகு அங்கு ஆயிரமாயிரம் அம்புகளை ஏவி அரக்கப் படைகளை கொன்று குவித்தான். இலட்சுமணனின் கரவேகத்தை கண்டு கும்பகர்ணன் வியந்தான். பிறகு கும்பகர்ணன், இலட்சுமணன் முன்வந்து நின்றான். கும்பகர்ணன் தேரின் மீது ஏறி நின்று போர் புரிந்தான். இதனைப் பார்த்த அனுமன், இலட்சுமணை தன் தோளில் ஏறி நின்று போர் புரியச் செய்தான்.

கும்பகர்ணன் இலட்சுமணனை பார்த்து, இலட்சுமணா! நீயோ! இராமனின் தம்பி, நானோ இராவணனின் தம்பி. நம் இருவரின் போரை காண தேவர்கள் முதலானோர் இங்கு வந்துள்ளனர். சூர்ப்பனகையின் மூக்கை அறுத்த உன்னை, இன்று அடியோடு ஒழிப்பேன் என்றான். இலட்சுமணன், அரக்கனே! வீரர்கள் சொல்லால் பெருமை பேச மாட்டார்கள். வில்லால் தான் பேசுவார்கள். உன்னைப் போல் வீண் பேச்சு பேச நான் விரும்பவில்லை. நான் என் வில்லினால் பேசுவேன் என்றான். இலட்சுமணனுக்கும், கும்பகர்ணனுக்கும் மிக கடுமையாக போர் நடந்தது. கும்பகர்ணன் விடுத்த அம்புகளை எல்லாம், இலட்சுமணன் அடித்து ஒழித்தான். பிறகு இலட்சுமணன் தன் வில்லைக் கொண்டு, கும்பகர்ணனின் தேர் முதலியவற்றை ஒழித்தான். கும்பகர்ணன் மீதும் அம்புகளை ஏவி தாக்கினான். இதனால் கும்பகர்ணன் கடும்கோபம் கொண்டான்.

இப்பொழுதே உன்னை கொல்கிறேன் எனக் கூறி இலட்சுமணன் மீது கூர்மையான சூலாயுதத்தை வீசினான். இலட்சுமணன் அந்த சூலாயுத்தை ஒழித்தான். இலட்சுமணன், கும்பகர்ணன் தரையில் நின்று போர் புரிவதைக் கண்டு, மனமிரங்கி, அனுமனின் தோளில் இருந்து இறங்கி போர் புரிந்தான். அப்பொழுது இராவணன், கும்பகர்ணனுக்கு துணையாக அரக்க சேனைகளை அனுப்பி வைத்தான். புதியதாக ஓர் அரக்க படைகள் வருவதைக் கண்ட வானரங்கள் அங்கிருந்து ஓடினர். பிறகு கும்பகர்ணன், சுக்ரீவனிடம் போர் புரிய தொடங்கினான். அப்போது கும்பகர்ணன், சுக்ரீவன் மீது ஓர் கூர்மையான சூலாயுதத்தை எறிந்தான். சூலாயுதம் வந்த வேகத்தைப் பார்த்த அங்கிருந்தவர்கள் இறந்தான்! இறந்தான்! எனக் கத்தினார்கள். இதனைப் பார்த்த அனுமன், மின்னலை போல் வேகமாகச் சென்று அச்சூலாயுத்ததை பிடித்து ஒடித்தான். இதைப் பார்த்த கும்பகர்ணன், அனுமனின் வலிமையை பாராட்டினான்.

அனுமனின் வலிமையைக் கண்ட கும்பகர்ணன், நீ என்னுடன் போர் புரிய வா என்று அழைத்தான். அதற்கு அனுமன், நான் உன்னுடன் போர் செய்ய மாட்டேன் என முடிவு செய்த பிறகு உன்னுடன் போர் செய்வது தவறு எனக் கூறிவிட்டு அங்கிருந்துச் சென்றான். அப்பொழுது சுக்ரீவன், கும்பகர்ணனை தன் கைகளால் தாக்க தொடங்கினான். மிகவும் பலம் கொண்டு சுக்ரீவன் அவனைத் தாக்கினான். கும்பகர்ணன் அவனை பார்த்து, உன் வலிமை மிகவும் சிறந்தது. ஆனால் இன்று நான் உன்னை அழித்து விடுகிறேன் என்றான். பிறகு இருவரும் எதிரும்புதிருமாக மாறி மாறி சண்டையிட்டனர். இருவருக்கும் இடையில் கடும்போர் நிகழ்ந்தது. இருவரும் வெகுநேரம் சோர்வடையாமல் சண்டையிட்டனர். கும்பகர்ணனின் அடியை சுக்ரீவனால் தாங்க முடியவில்லை. இதனால் அவன் மயங்கி கீழே விழுந்தான்.

மயங்கிய சுக்ரீவனை, கும்பகர்ணன் தன் தோளில் தூக்கிக் கொண்டு நகருக்குள் சென்றான். அப்பொழுது சுக்ரீவன் எந்த உணர்வின்றி மயங்கி இருந்தான். அங்கிருந்த வானரங்கள், தங்கள் அரசன் கும்பகர்ணனின் கையில் அகப்பட்டு செல்வதைப் பார்த்து மிகவும் புலம்பி அழுதனர். இதைப் பார்த்த அரக்கர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். கும்பகர்ணன் சுக்ரீவனை தூக்கிச் செல்வதை பார்த்த அனுமன், இவனிடம் நான் சண்டையிட மாட்டேன் என சத்தியம் செய்துவிட்டேனே என நினைத்து என்ன செய்வதென்று தெரியாமல் கும்பகர்ணனை பின் தொடர்ந்து சென்றான். வானரங்கள் ஓடிச் சென்று இராமரிடம், எங்கள் அரசன் சுக்ரீவனை கும்பகர்ணன் தூக்கி கொண்டு செல்கிறான். இனி எங்களுக்கு யார் துணை எனக் கூறி அழுதார்கள். இதைக் கேட்ட இராமர், நெருப்பு போல் கண்கள் சிவக்க எழுந்தார்.

தன் வில் மற்றும் அம்பை கையில் எடுத்துக் கொண்டு கணப்பொழுதில் இலங்கை நகர் வாயிலை அடைந்தார். இராமர், சுக்ரீவனை இலங்கை நகருக்குள் கொண்டு சென்று விட்டால் பெரும் ஆபத்து ஏற்படும் என நினைத்து, கோட்டையின் வாயில்கள் அனைத்தையும் தன் அம்புகளை ஏவி அடைத்தார். அந்த அம்புகளை கடந்து இலங்கை நகருக்குள் செல்ல கும்பகர்ணனால் முடியவில்லை. பிறகு மிதிலை கடந்து போக நினைத்த அவனுக்கு அங்கும் அம்புகள் அவனை தடுத்தது. பிறகு அவன் இலங்கை நகருக்கு திரும்ப முடியாமல் திரும்பினான். திரும்பும்போது இராமர் அவனை எதிர்த்து நிற்பதை கண்டான். இராமா! உனக்காக தான் நான் காத்துக் கொண்டு இருந்தேன். வலிமையுடையவர் செய்யும் போரில், நான் உன் தம்பி இலட்சுமணனுடனும் போர் செய்யவில்லை, அனுமனுடனும் போர் செய்யவில்லை, சுக்ரீவனிடமும் போர் செய்யவில்லை.

ஏனென்றால் இவர்கள் யாரும் எனக்கு நிகரானவர்கள் இல்லை. உனக்காக தான் நான் காத்து கொண்டிருந்தேன். இந்த சுக்ரீவனை நீ காப்பாய் என்றால் நிச்சயம் நீ சீதையை மீட்பாய் என்றான். கும்பகர்ணன் பேசியதைக் கேட்டு இராமர் புன்னகைத்தார். பிறகு இராமர், சுக்ரீவனை தூக்கி கொண்டு வந்த உன்னையும், மலை போல் உள்ள உன் தோளையும் நான் சாய்க்கவில்லை என்றால் உனக்கு தோற்றவன் ஆவேன் என்று கூறிவிட்டு கும்பகர்ணனின் நெற்றியை குறி வைத்து அம்புகளை எய்தினார். பிறகு கும்பகர்ணனின் நெற்றியில் இருந்து இரத்தம் ஆறு போல் வலிந்தது. அந்த இரத்தம் சுக்ரீவனின் முகத்தில் பட்டு, மயக்கம் தெளிந்து எழுந்தான். அப்பொழுது கும்பகர்ணன் மயங்கி ஒரு மலை விழுவது போல் கீழே விழுந்தான்.

தொடரும்.....

Post a Comment

0 Comments