இராமாயணம் பகுதி - 73 - RAMAYANAM PART - 73


இராமாயணம் பகுதி - 73


இராமாயணம் பகுதி - 73 - RAMAYANAM PART - 73

கும்பகர்ணன் சொன்னதைக் கேட்ட விபீஷணன், அண்ணா! நான் தங்களிடம் சேர்ந்துக் கொள்ள வரவில்லை. தங்களிடம் வேறு செய்தியை சொல்ல வந்துள்ளேன் என்றான். கும்பகர்ணன், அப்படியென்றால் நீ கொண்டு வந்த செய்தியைக் கூறு என்றான். அண்ணா! கருணையே வடிவான இராமர், தங்களை அவர்களுடன் சேர்ந்துக் கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார். தாங்கள் அறவழியில் நடப்பீர்கள் என்றால் இராமருடன் வந்து சேர்ந்துக் கொள்ளுங்கள். இதுவே என்னுடைய விருப்பம் ஆகும். நீங்கள் இராமருடன் சேர்ந்துக் கொண்டால் நாம் நம் குலத்தை சிறப்புடன் ஆட்சி செய்யலாம். இராமர், தங்கள் மீது கொண்ட இரக்கத்தாலும், என் மீது கொண்ட அன்பாலும் உங்களை அழைத்து வரும்படி என்னை அனுப்பியுள்ளார். நீங்கள் என்னுடன் வருவது எனது விருப்பமும் ஆகும் என்றான்.

வீபீஷணன் கூறியதைக் கேட்டு, கும்பகர்ணன் கண்ணீர் தழும்ப விபீஷணனை தழுவிக் கொண்டான். விபீஷணா! உலக வாழ்க்கை நீரின் மேல் எழுதியதற்கு சமமாகும். என்னை நெடுங்காலம் வளர்த்த அண்ணனுக்காக உயிர் கொடுப்பது தான் என் கடமை. தன் கடமையை மறப்பவன் அறிவற்றவன். கடமை மட்டுமே உடைமை. என் துன்பத்தை நீ நீக்க வேண்டும் என நினைத்தால், நீ விரைந்துச் சென்று இராமனிடம் சேர்ந்துவிடு. பிரம்மன் உனக்கு எண்ணிலடங்கா வரத்தினை அளித்துள்ளார். அதனால் நீ சிரஞ்ஜீவியாக வாழப் போகிறவன். நீ அறவழியில் நடக்கும் இராமனிடம் இருப்பது தான் நியாயம். எனக்கு மரணமே புகழுக்குரியதாகும். இதுவரை எனக்கு உண்ண உணவும் அளித்து என்னை சுமந்த அண்ணனுக்கு உயிரை தருவது தான் சிறந்தது. இது என்னுடைய கடமையும் ஆகும்.

நான் போரில் அனுமன், அங்கதன், சுக்ரீவன், நீலன் முதலிய வானர வீரர்களை வென்று என் ஆற்றலை இந்த உலகிற்கு காட்டுவேன். வானரங்களின் உயிரை துறப்பேன். நீ தாமதிக்காமல் இராம இலட்சுமணரிடம் சேர்ந்துக் கொள். நமக்குள் இனி எந்த பேச்சுவார்த்தையும் வேண்டாம். நாங்கள் இறந்த பிறகு, எங்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை நீ செய்வாயாக. இன்று நம் உறவு முடிந்து விட்டது. இனி நாம் இருவரும் சந்திக்கவும் வாய்ப்பில்லை. ஆதலால் நீ இங்கிருந்துச் செல் என்றான். பிறகு இருவரும் கண்ணீர் தழும்ப தழுவிக் கொண்டனர். கும்பகர்ணன், விபீஷணனுக்கு விடைக்கொடுத்து அங்கிருந்து சென்றான். வீபீஷணன் அகமும், முகமும் மிகவும் வாடிப் போனது. இனியும் கும்பகர்ணனிடம் பேசுவதில் எந்த பயனும் இல்லை என நினைத்து அங்கிருந்து சென்றான். போகும் வழியில் நான் கும்பகர்ணனை எப்போது பார்க்கப் போகிறேன் என நினைத்து கும்பகர்ணனை திரும்ப திரும்ப பார்த்துக் கொண்டுச் சென்றான்.

கும்பகர்ணனும் தன் தம்பி விபீஷணனை பாசத்தோடு பார்த்தான். பிறகு இருவரும் அவரவர் வழியில் சென்றனர். விபீஷணன் இராமர் இருப்பிடத்தை அடைந்தான். அங்கு நடந்ததை அனைத்தையும் இராமரிடம் கூறினான், விபீஷணன். இராமர் விபீஷணனிடம், விபீஷணா! உன் முன்னால் உன் அண்ணன் கும்பகர்ணனை நான் எவ்வாறு கொல்ல முடியும்? அதற்காக தான் அவனை இங்கு அழைத்து வரச் சொன்னேன். ஆனால் கும்பகர்ணன் என் அழைப்பை மறுத்துவிட்டான். இனி என்னால் என்ன செய்ய முடியும். எல்லாம் விதியின் கையில் தான் உள்ளது என்றார். இப்படி இராமர் பேசிக் கொண்டிருக்கும் போது அரக்கப் படைகள், வானரப் படைகளை சூழ்ந்துக் கொண்டது. போர்க்களத்தில் பெரும் ஆரவாரம் உண்டானது.

போர் தொடங்கியது. அரக்க சேனைகளும், வானர சேனைகளும் எதிர்த்துப் போர் புரிந்தன. வானர வீரர்கள் கற்களையும், மலைகளையும், பாறைகளையும் அரக்கர்கள் மீது எறிந்தனர். அரக்கர்கள் வில், வேல், சூலம் முதலிய ஆயுதங்களை வானரங்கள் மீது எறிந்தனர். அரக்கர்களின் வில்லில் இருந்து வெளிவந்த அம்பு பல வானரங்களை கொன்றது. பதிலுக்கு வானரங்களும் மலை, பாறை, கல், மரம் முதலியவற்றை தூக்கி எறிந்தனர். இப்படி போர் மிக கடுமையாக நடந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்து கொண்டிருந்த தேவர்கள் திகைத்து நின்றனர். அப்பொழுது கும்பகர்ணன் போர்களத்திற்கு வந்தான். அவனிடம் பல வானரங்கள் அகப்பட்டனர். வானரங்கள் மலைகளை தூக்கி கும்பகர்ணன் மீது எறிந்தனர். ஆனால் அதை அவன் தூள் தூளாக்கினான்.

கும்பகர்ணன் தன்னிடம் அகப்பட்ட வானரங்களை வானத்தில் தூக்கி எறிந்தும், சில வானரங்களை வாயில் போட்டு உமிழ்ந்தும், சில வானரங்களை தன் கால்களால் மிதித்தும் கொன்றான். கும்பகர்ணன் இப்படி வானரங்களை கொன்று குவிப்பதை பார்த்த தேவர்கள் பயந்து ஓடினர். அப்போது நீலன், கும்பகர்ணன் மீது பெரும் மலையை தூக்கி எறிந்தான். கும்பகர்ணன் அதை தன் சூலத்தால் பொடி பொடியாக்கினான். பிறகு நீலன், கும்பகர்ணனின் தேரில் ஏறி அதிலிருந்த ஆயுதங்களை தூக்கி எறிந்தான். நீலன் எந்த ஆயுதங்களும் இல்லாமல் போர் புரிந்ததால், கும்பகர்ணனும் எந்த ஆயுதத்தையும் பயன்படுத்தவில்லை. நீலன் கும்பகர்ணனை என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றான்.

அப்போது கும்பகர்ணன், நீலனை தன் கையால் ஒரு தட்டு தட்டினான். இதனால் நீலன் மயங்கி கீழே விழுந்தான். இதைப் பார்த்த அங்கதன், கும்பகர்ணன் மீது ஓர் மலையை தூக்கி வீசினான். கும்பகர்ணன் அந்த மலையை தன் கைகளால் தூள் தூளாக்கினான். பிறகு அவன் அங்கதன் மீது ஓர் அம்பை ஏவினான். அங்கதன் அந்த அம்பை தன் கைகளால் பிடித்து கும்பகர்ணன் மீது எறிய ஓடி வந்தான். அப்போது கும்பகர்ணன், அங்கதனை பார்த்து, வானரமே! நீ யார்? வாலியின் மகனா? இல்லை சுக்ரீவனா? இல்லை இலங்கைக்கு தீ வைத்த அனுமனா? என்றான். அங்கதன், அரக்கப்படை தலைவனே! உன் அண்ணனான இராவணனை தன் வாலில் கட்டி, இரத்தம் சிந்த எட்டு திசைகளிலும் தாவி போர் புரிந்த வாலியின் மகன் நான். என் பெயர் அங்கதன்.

என் தந்தையை போலவே நானும் உன்னை என் வாலில் கட்டி இராமரின் பாதங்களில் வீழ்த்துவேன் என்றான். அப்போது கும்பகர்ணன், நீ சொல்வது சரிதான். உன் தந்தையை தன் ஓர் கணையால் வீழ்த்திய இராமனுக்கு நீ செய்ய வேண்டிய தொண்டு மிகவும் பாராட்டத்தக்கது என நகைத்தான். அப்போது அங்கதன், மலைகளை தூக்கி கும்பகர்ணன் மீது வீசினான். அம்மலை கும்பகர்ணன் மீது பட்டு பொடியானது. கும்பகர்ணன், தன் சூலாயுதத்தை அங்கதன் மீது வீசினான். அங்கதன் அந்த சூலாயுதத்தை தன் கைகளால் பிடித்து கும்பகர்ணன் மீது திருப்பி எறிந்தான். கும்பகர்ணன் அந்த சூலாயுதத்தை பொடி பொடியாக்கிவிட்டு அங்கதன் மார்பில் ஓங்கி குத்தினான். இதனால் அங்கதன் அந்த இடத்தில் மயங்கி விழுந்தான்.

தொடரும்.....

Post a Comment

0 Comments