இராமாயணம் பகுதி - 75
இராமரின் அம்பினால், கும்பகர்ணன் ஒரு மலை விழுவது போல் மயங்கி கீழே விழுந்தான். கும்பகர்ணனின் இரத்தம் சுக்ரீவனின் மேல் பட்டு அவன் மயக்கம் தெளிந்தான். அப்போது சுக்ரீவன் மயக்கம் தெளிந்ததை கண்டு இராமர் மகிழ்ந்தார். அங்கு கும்பகர்ணன் அம்பு பட்டு மயங்கி விழுந்திருப்பதைக் கண்ட சுக்ரீவன், இராமர் தான் இவ்வாறு செய்திருப்பார் என நினைத்தான். உடனே சுக்ரீவன் இராமர் எங்கே இருக்கிறார் என சுற்றியும் பார்த்தான். பிறகு இராமரைக் கண்டு மகிழ்ந்தான். அந்த மகிழ்ச்சியில் அவன் கும்பகர்ணனின் மீது பாய்ந்து (சுக்ரீவன் இராவணனிடம் கிரீடத்தில் இருந்து மணிகளை பறித்து வந்தது போல்) காதையும், மூக்கையும் கடித்து அதைக் எடுத்துக் கொண்டு சென்றான். கும்பகர்ணனின் காதையும், மூக்கையும் நம் அரசர் சுக்ரீவன் கடித்து விட்டதை வானரங்கள் ஒருவருக்கொருவர் சொல்லி மகிழ்ந்தனர்.
சிறிது நேரம் கழித்து கும்பகர்ணன் மயக்கம் தெளிந்தான். அப்போது தான் பிடித்து வைத்திருந்த சுக்ரீவன் தப்பி ஓடியதையும், தன் மூக்கையும், காதையும் கடித்து கொண்டு சென்றதை அறிந்து மிகவும் வருந்தினான். இதனால் கடுங்கோபம் கொண்ட கும்பகர்ணன் தன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய அவர்களை கொல்வேன் எனக் கூறிக் கொண்டு அங்கிருந்து எழுந்தான். தன் கையில் இருந்த வாள் மற்றும் கேடகம் கொண்டு வீசி வீசி போர் புரிந்தான். இதனால் பல வானரங்கள் மாண்டு விழுந்தனர். அப்போது ஜாம்பவான் இராமரிடம் சென்று, பெருமானே! இந்த கும்பகர்ணனை சீக்கிரம் கொல்லுங்கள். இல்லையெனில் நம் வானர படைகளை இவன் அழித்து விடுவான் என வேண்டினான். பிறகு இராமர் கும்பகர்ணனுடன் வந்த சேனைகள் அனைத்தையும் விரைந்து அழித்தார்.
இராமர் கும்பகர்ணன் கையில் இருந்த கேடகத்தை தன் அம்பை ஏவி அதை உடைத்தெறிந்தார். அப்போது கும்பகர்ணன் தன் கையில் இருந்த வாளைக் கொண்டு போர் புரிந்தான். பிறகு இராமர், கும்பகர்ணனை நோக்கி ஒவ்வொரு அம்பாக கணப்பொழுதில் செலுத்தினார். ஆனால் கும்பகர்ணன் இதையெல்லாம் தன் கையால் தடுத்து நிறுத்தினான். பிறகு மற்றொரு அம்பை ஏவி கும்பகர்ணனின் கையில் இருந்த வாளை உடைத்தெறிந்தார். தன் வாளை இராமன் உடைத்ததைக் கண்டு மற்றொரு வாளை கும்பகர்ணன் கையில் எடுத்துக் கொண்டு இராமரை தாக்க தொடங்கினான். அப்பொழுது இராமர் ஒவ்வொரு அம்பாக ஏவி கும்பகர்ணனிடம் இருந்த வாள், கேடகம், கவசம், சூலாயுதம் என அனைத்தையும் அறுத்தெறிந்தார்.
அப்பொழுது இராவணன் கும்பகர்ணனுக்கு உதவியாக ஒரு சூலப்படையை அனுப்பினான். பிறகு கும்பகர்ணன் அந்த சூலப்படையைக் கொண்டு போர் புரிய தொடங்கினான். ஆனால் இராமர் அந்த படைகள் அனைத்தையும் தன் வில்லுக்கு இரையாக்கினார். கடைசியில் கும்பகர்ணன் மட்டும் தனியாக வெறுங்கையுடன் நின்றான். அப்பொழுது இராமர் கும்பகர்ணனை பார்த்து, பெரும் சேனைகளுடன் போர் புரிய வந்த நீ இப்பொழுது எல்லாம் இழந்து நிற்கின்றாய். நீ பண்பில் சிறந்த, நீதிநெறியில் உயர்ந்த விபீஷணனின் சகோதரன் என்பதால் உன்மேல் கருணை காட்டுகிறேன். நீ இலங்கை நகருக்குச் சென்று நாளை திரும்பி வந்து போர் செய்கிறாயா? அல்லது இப்பொழுது என்னுடன் போரிட்டு மடிகிறாயா? உனது விருப்பம் எதுவோ அதன்படி செய் என்றார்.
கும்பகர்ணன் இராமரிடம், இராமா! என்னால் சூர்ப்பனகை போல் மூக்கறுக்கப்பட்டு உயிருடன் வாழ முடியாது. நான் இராவணனின் தவறை தடுக்க எவ்வளவோ முயற்சி செய்தேன். ஆனால் என்னால் அதை தடுக்க முடியவில்லை. இன்று நான் உன் முன்னால் மூக்கும், காதும் அறுக்கப்பட்டு உன் முன் தலைகுனிந்து நிற்கிறேன். இந்த நிலைமையில் என்னால் இலங்கை நகருக்கு சென்று உயிர் வாழ முடியாது. நான் வீரப்போர் புரிந்து உயிர் விடுவேனே தவிர நான் திரும்பி செல்ல மாட்டேன் என கூறிவிட்டு தன் பக்கத்தில் இருந்த மலை போன்ற பாறையை எடுத்து இராமரை நோக்கி வீசினான். இராமர் அதை தன் அம்பால் தூள்தூளாக்கினார். பிறகு கும்பகர்ணன் விடாமல் ஒவ்வொரு மலையாக எடுத்து இராமர் மீது வீசினான். இராமர் அதையெல்லாம் தன் அம்பிற்கு இரையாக்கினார். இவ்வாறு கும்பகர்ணனுக்கும், இராமருக்கும் இடையே கடும்போர் நிகழ்ந்தது. இராமர் ஓர் அம்பை கும்பகர்ணனை நோக்கி ஏவினார்.
ஆனால் அந்த அம்பு கும்பகர்ணன் அணிந்திருந்த சிவபெருமான் கொடுத்த கவசத்தைத் துளைத்துக் கொண்டு உள்ளே செல்ல முடியவில்லை. இதனால் இராமர், சிவபெருமான் அருளிய பாசுபதாஸ்திரத்தை எடுத்து, கும்பகர்ணன் மேல் ஏவி, அவனது கவசத்தை உடைத்தார். பிறகு இராமர் மற்றொரு அம்பை ஏவி கும்பகர்ணனின் வலக்கரத்தை அறுத்தெறிந்தார். ஆனால் கும்பகர்ணன் மற்றொரு கையால் வானரங்களை அடித்து வீழ்த்தினான். இதைப் பார்த்த தேவர்கள், இராமரிடம், இராமா! அவனின் மற்றொரு கையையும் அறுப்பாயாக எனக் கேட்டுக் கொண்டனர். பிறகு இராமர் மற்றொரு அம்பை செலுத்தி கும்பகர்ணனின் மற்றொரு கையையும் அறுத்தெறிந்தார். கும்பகர்ணன், என் கைகள் போனால் என்ன, என் கால்கள் உள்ளது. அதைக் கொண்டு போர் புரிவேன் எனக் கூறி வானரங்களிடம் போர் புரிந்தான். இதைப் பார்த்த இராமர், ஓர் அம்பை ஏவி கும்பகர்ணன் காலை அறுத்தெறிந்தார்.
ஆனால் கும்பகர்ணன் தன் மற்றொரு காலைக் கொண்டு போர் புரிய தொடங்கினான். பிறகு இராமர், கும்பகர்ணனின் மற்றொரு காலையும் ஓர் அம்பை ஏவி அறுத்தெறிந்தார். தன் கை, கால்கள் இழந்த கும்பகர்ணன் தன் வாயைக் கொண்டு ஊதி ஊதி போர் புரிந்தான். இராமர் கும்பகர்ணனின் தீர்க்கமான போரைக் கண்டு அதிசயத்து நின்றார். வெகு நேரம் கும்பகர்ணனால் ஊதி ஊதி போர் புரிய முடியவில்லை. பிறகு கும்பகர்ணன் இராமரை நினைத்து, காலவரம்பின்றி வாழ வேண்டிய நான் இராவணனின் பெண்ணாசையால் இன்று வீழ போகிறேன். இராமனின் வில்லின் ஆற்றலுக்கு முன் ஆயிரம் இராவணன் வந்தாலும் இராமனுக்கு இணையாக முடியாது என நினைத்தான். பிறகு கும்பகர்ணன் இராமரிடம், இராமா! நீ சிபிச்சக்ரவர்த்தி போல் அபயம் என்று வருபவரை காக்கும் பண்புடையவன். விபீஷணன் அரக்க குலத்தில் பிறந்திருந்தாலும், உன்னை நம்பி அடைக்கலம் தேடி வந்தான். என் தம்பி விபீஷணன் நற்குணசீலன், நீதிநெறி தவறாதவன். அவனை காப்பது உன்னுடைய கடமை.
இராவணன், தம்பி என்று பாராமலும் விபீஷணனை கொல்ல வருவான், நீ அவனிடமிருந்து விபீஷணை காப்பாற்று. உன் தம்பிகளில் ஒருவர் அல்லது நீயோ யாரேனும் வீபீஷணனை விட்டு பிரியாமல் அவனை காக்க வேண்டும். இராமா! அனைத்தும் அறிந்த பரம்பொருளே! நான் இறுதியாக உன்னிடம் ஒரு வரம் கேட்க வேண்டும். அதை நீ எனக்கு மறுக்காமல் தர வேண்டும் என்றான். இராமர், கும்பகர்ணா! நீ உன் வரத்தை கேள் என்றார். கும்பகர்ணன், இராமா! இந்த யுத்தத்தை தேவர்கள் முதலானோர் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். என்னை கை, கால்கள் இல்லாத முண்டம் என யாரும் ஏளனம் செய்யாத வண்ணம் என் கழுத்தை துண்டித்து யாருக்கும் எட்டாத தூரத்தில், கண்காணாமல் கடலில் போட்டு விடு. என் முண்டம் ஒருவர் கண்ணிற்கும் பட வேண்டாம். இந்த வரத்தை நீ எனக்கு அருள வேண்டும் என்றான். பிறகு இராமர், தன் அம்பினால் கும்பகர்ணனின் தலையை துண்டித்து, அது கடலில் மூழ்கும் படி செய்தார். கும்பகர்ணனின் தலை கடலில் மூழ்கியது.
தொடரும்.....
0 Comments