இராமாயணம் பகுதி - 72
கும்பகர்ணன், அண்ணா! முன்பு நீ தர்மத்தைக் கடைப்பிடித்ததால் வலிமையும், செல்வமும் உனக்குப் புகழைத் தந்தன. ஆனால் எப்போது நீ தர்மத்தை மீறினாயோ, அப்போதே உன் அழிவைத் நீ தேடிக் கொண்டு விட்டாய். இனி உன்னை எவராலும் காப்பாற்ற முடியாது. இராம இலட்சுமணரின் வாக்கில் சத்தியமும், குணத்தில் நல்லொழுக்கமும் நிறைந்துள்ளது. ஆனால் நமக்கு நெஞ்சில் வஞ்சகமும், வாக்கில் பொய்யும், செயலில் பாவமும் நிறைந்திருக்கின்றது. இவ்வாறு இருக்கையில் நமக்கு எப்படி வெற்றி உண்டாகும். நான் உனக்கு கடைசியாக ஒன்று சொல்கிறேன். கடலை கடந்து வந்த வானரங்களும் இன்னும் துணையாக இராம இலட்சுமணருக்கு இருக்கின்றனர். சீதை அசோக வனத்தில் பெரும் துன்பத்தில் உள்ளாள். வாலியின் மார்பைத் துளைத்த பாணமும் இன்னும் இராமனின் அம்புறா துணியில் உள்ளது.
ஆகவே, நீ சீதையை இராமரிடம் சென்று ஒப்படைத்துவிட்டு விபீஷணனுடன் சேர்ந்து வாழ்வதே நலம். அதுவே உனக்கும், நம் குலத்துக்கும் நல்லது. இல்லையென்றால் நம் அரக்க குலம் அழிவது நிச்சயம் என்றான். கும்பகர்ணனின் அறிவுரையைக் கேட்டு கொதித்து எழுந்த இராவணன், காலினால் நிலத்தை ஓங்கி மிதித்தான். கும்பகர்ணா! எனக்கு அறிவுரை சொல்ல நான் உன்னை இங்கு அழைக்கவில்லை. நீ எனக்கு அறிவுரை கூற அவசியமும் இல்லை. நான் ஆயிரம் பேருக்கு அறிவுரை கூறுபவன். நான் கல்லாத கலையும் இல்லை, நான் வெல்லாத போரும் இல்லை. வெள்ளிமலையை அள்ளி எடுத்த தோள்களை உடைய என்னை அந்த மனிதர்கள் அசைக்க முடியாது. அந்த குரங்குகளை போல் அந்த மனிதர்களை வணங்கி விபீஷணனுடன் சேர்ந்துக் கொள். அது தான் உனக்கு பொருந்தும். உன் வீரம் பயனற்று போனது.
நீ போருக்கு தகுதி இல்லாதவனாக ஆகிவிட்டாய். போ! இன்னும் மாமிசங்களும், கள்ளும் மீதம் உள்ளது. அதை உண்டு விட்டு போய் உறங்கு. என் பகைவரை எப்படி அழிப்பது என்பது எனக்கு தெரியும். நீ இங்கிருந்து செல் என்றான். பிறகு இராவணன் தன் ஏவலாட்களை அழைத்து, என் தேரையும், ஆயுதங்களையும் கொண்டு வருக. நானே போருக்குச் சென்று அனைவரையும் ஒழிப்பேன் என எழுந்தான். அப்பொழுது கும்பகர்ணன் இராவணனை பணிந்து வணங்கி, அண்ணா! என்னை பொறுத்தருள வேண்டும். நீ போருக்குச் செல்ல வேண்டாம். அடியேன் போருக்குச் செல்கிறேன். ஆனால் நான் திரும்பி வருவேன் என்பதை என்னால் சொல்ல இயலாது. நான் போரில் இறந்துவிட்டால் நீ சீதையை இராமனிடம் ஒப்படைப்பது தான் நலம். என்னை வென்றவர் தங்களையும் வெல்வர். உன் அரக்க படைகள் அழிவதும் நிச்சயம்.
உன் மகன் இந்திரஜித் போருக்குச் சென்றால், அவன் இலட்சுமணனின் வில்லினால் அழிவது நிச்சயம். பிறகு உனக்கு ஏற்படும் முடிவை அறிந்துக் கொண்டு அதற்கேற்ப முயற்சி செய். நான் கடைசியாக உங்களிடம் ஒன்று சொல்ல விரும்புகிறேன். நான் இதுநாள் வரைக்கும் ஏதேனும் தவறு செய்திருந்தால் அவற்றை பொறுத்தருள வேண்டும். இனி நான் தங்கள் முன் நின்று கொண்டிருப்பதில் ஒரு பயனும் இல்லை என கண்ணீர் மல்க இராவணனை ஏற இறங்க பார்த்துவிட்டு, மனம் நொந்து போருக்கு புறப்பட்டான். அண்ணா! நான் விடைப்பெற்று கொள்கிறேன் எனக் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றான். இராவணனின் கண்களில் கண்ணீர் நிரம்ப அசையாது கும்பகர்ணனை பார்த்துக் கொண்டிருந்தான். அங்கு கூடியிருந்த அனைவரும் துன்பத்தில் ஆழ்ந்தனர்.
கும்பகர்ணனுக்கு துணையாக ஏராளமான படைகளை இராவணன் அனுப்பி வைத்தான். கும்பகர்ணன் சேனைகள் புடைசூழ வானமும், வையகமும் நடுங்க தேரில் ஏறி போருக்குச் சென்றான். சூலம், வேல், வில், சக்கரம் முதலிய ஆயுதங்களை சுமந்துக் கொண்டு சேனைகள் அவன் பின் தொடர்ந்துச் சென்றன. பெரிய மலை போல் தேரில் வரும் கும்பகர்ணனை, இராமர் பார்த்து இவன் யார்? என விபீஷணனிடம் கேட்டார். பெருமானே! இவன் காற்றைவிட விரைந்து செல்லும் கால்களையுடையவன். இவன் தான் தவறாகக் கேட்டுவிட்ட ஒரு வரத்தினால் எப்போதும் உறங்கிக் கொண்டே இருப்பவன். சிவபெருமான் இவனுக்கு அளித்த சூலப்படை இவனிடம் இருக்கிறது. அந்தச் சூலாயுதத்தைக் கொண்டு இவன் போரில் தேவர்களை ஓட வைத்தவன். இவனின் பெயர் கும்பகர்ணன். இராவணனுக்கு இளைவன், எனக்கு மூத்தவன்.
கும்பகர்ணன், இராவணனிடம் சீதையை கவர்ந்து வந்தது தவறு என கூறியும் அதை இராவணன் கேட்கவில்லை. இவன் சூலத்தை எடுத்தால் அனைத்தையும் அழிக்கும் ஆற்றல் உடையவன். விபீஷணன் இப்படி கூறியதைக் கேட்ட சுக்ரீவன், இராமரிடம், கும்பகர்ணன் பேராற்றல் உடையவன். நற்குணத்தில் சிறந்தவன். இவனை கொல்வதால் நமக்கு என்ன பயன் கிடைக்கப் போகிறது. இவனை கொல்லாமல் நம்முடன் சேர்த்துக் கொண்டால், விபீஷணன் தன் அண்ணனை இழக்க மாட்டான் என்றான். இராமரும் சுக்ரீவனின் யோசனையைக் கேட்டு, இதை கும்பகர்ணனிடம் சொல்வது யார்? எனக் கேட்டார். உடனே விபீஷணன், தாங்கள் அனுமதி தந்தால் நானே சென்று கும்பகர்ணனிடம் சென்று பேசுகிறேன் என்றான். இராமர் விபீஷணனிடம், விபீஷணா! நீ கும்பகர்ணனிடம் சென்று, அவன் விரும்பினால் நம்முடன் வந்து சேர்ந்துக் கொள்ளச் சொல் என்றார்.
உடனே விபீஷணன் அங்கிருந்து புறப்பட்டு வானர சேனைகளை கடந்து கும்பகர்ணன் இருக்குமிடம் சென்றான். விபீஷணன் கும்பகர்ணனின் காலில் விழுந்து வணங்கினான். கும்பகர்ணன் விபீஷணனை தழுவிக் கொண்டான். கும்பகர்ணன் நீ ஏன் இங்கு வந்தாய்? நீ உத்தமன், நற்குணத்தில் சிறந்தவன். நம்மில் ஒருவனாவது உயிர் பிழைத்துக் கொண்டாய் என மகிழ்ந்திருந்தேன். தம்பி! விபீஷணா! நீ இங்கு வருவதற்கான காரணம் என்ன? உன்னால் நம் குலம் அழியாத புண்ணியமும், புகழும் பெற்றது என நினைத்திருந்தேன். இராமன் உன்னை கைவிட மாட்டான். இராமனிடம் நீ இருக்கும் வரையில் உனக்கு இறப்பு இல்லை. அப்படி இருக்கையில் அவர்களை விட்டு நீ ஏன் இங்கு வந்தாய்? தீவினைகள் அனைத்தும் நீங்கப் பெற்று, மெய்ஞானத்தை பெற்ற விபீஷணா! தவங்களைச் செய்து ஒழுக்கம், தர்மம் இவற்றை கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறாய்.
பிரம்மதேவன் உனக்கு அழிவு இல்லாத ஆயுளைக் கொடுத்திருக்கிறான். தம்பி விபீஷணா! உனக்கு அரக்க குலத்தின் குணங்கள் இன்னும் போகவில்லையா? நாங்கள் போரில் மாண்டு இறந்தால், நீ உயிருடன் இருந்தால் தானே எங்களுக்கு ஈமச் சடங்குகள் செய்ய முடியும். நீ இல்லையென்றால் எங்களுக்கு யார் இதைச் செய்வது? விபீஷணா! அங்கே பார்! போருக்கு தயாராக இராமரும், இலட்சுமணனும் உள்ளனர். எப்படி இருந்தாலும் அவர்கள் எங்கள் உயிரை பறிக்க போகிறார்கள். ஆதலால் நீ சென்று இராமனிடம் சேர்ந்துக் கொள். இராமர் போரில் வென்ற பிறகு, சீதை இராமனிடம் சேர்ந்த பிறகு, அவர்களின் முன்னிலையில் இலங்கையின் ஒப்பற்ற அரசனாக வேண்டும். அதனால் இப்பொழுது நீ இராமனிடன் சென்றுவிடு என்றான்.
தொடரும்.....
0 Comments