இராமாயணம் பகுதி - 71 - RAMAYANAM PART - 71


இராமாயணம் பகுதி - 71


இராமாயணம் பகுதி - 71 - RAMAYANAM PART - 71

இராவணன் சொன்னதைக் கேட்ட மாலியவான், பேரனே! நீ போருக்கு செல்வதற்கு முன், நான் இராமனின் திறமையைப் பற்றி கூறினேன். ஆனால் நீ அதை அலட்சியம் செய்துவிட்டாய். உன் தம்பி விபீஷணன் கூறியவற்றையும் நீ கேட்கவில்லை. மாற்றான் மனைவியை விரும்பினால், நெருப்பில் விழுந்த புழுவின் நிலைமை தான் கிடைக்கும். கற்பில் சிறந்தவளாய் விளங்கும் சீதையை விரும்புவது தவறானது. ஆதலால் நீ சீதையை இராமனிடம் ஒப்படைத்துவிட்டு இராமனின் கருணையை பெறுவாயாக. இதனால் உன் அசுர குலமும் தழைக்கும் என்றார். அப்பொழுது அரசவையின் முதலமைச்சர் மகோதரன் அங்கு வந்தான். அவன் மாய வேலை செய்வதில் வல்லவன். மகோதரன் இராவணனிடம், அரசே! ஒருவன் மனதில் அச்சம் வந்துவிட்டால் அது அவனை அழித்துவிடும். உன் ஆற்றலுக்கு நிகரானவர் இவ்வுலகில் எவரும் இல்லை.

அனைத்தையும் வென்றவன் நீ என்பதை புரிந்துக் கொள். இன்று வெல்பவர் நாளை தோற்பார். இன்று தோற்றவர் நாளை வெல்வார். இதுவே உலக நியதி. ஆதலால் நீ உன் பாட்டன் சொல்லைக் கேட்டு சீதையை இராமனிடம் ஒப்படைத்துவிடாதே. இவ்வாறு செய்தால் தேவர்கள் உன்னை பார்த்து சிரிப்பார்கள். இவ்வாறு நீ வருந்திக் கொண்டு இருந்தால் அந்த வானரங்கள் நம்மை எளிதாக அழித்துவிடுவார்கள். இன்று நீ தோற்றிருக்கலாம். நாளை நீ நிச்சயம் வெற்றி பெறுவாய் என்பதை மனதில் கொள்! என இராவணனை ஊக்கப்படுத்தினான். பிறகு மகோதரன், உன் தம்பி கும்பகர்ணனை அனுப்பலாம் என்றான். மகோதரனின் சொல்லைக் கேட்ட இராவணன், மனம் தேறினான். உடனே தன் ஏவலாட்களை அனுப்பி கும்பகர்ணனை அழைத்து வரும்படி கட்டளையிட்டான். ஏவலர்கள் கும்பகர்ணனின் மாளிகையை அடைந்தனர். அங்கு கும்பகர்ணன் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தான்.

ஏவலர்கள் கும்பகர்ணனை எழுப்ப முயன்றனர். எவ்வளவு முயன்றும் கும்பகர்ணனை அவர்களால் எழுப்ப முடியவில்லை. பிறகு அவர்கள் இரும்புத் தூணால் அவன் தலையிலும் செவியிலும் மோதினார்கள். அதற்கும் அவன் செவி சாய்க்காமல் தூங்கிக் கொண்டிருந்தான். பிறகு கிங்கரர்கள் வந்து இரும்பு உலக்கையினால் கும்பகர்ணனை இடித்து எழுப்ப முயன்றனர். இவர்கள் எவ்வளவு முயன்றும் கும்பகர்ணனை எழுப்ப முடியவில்லை. பிறகு கிங்கரர்கள் இராவணனிடம் சென்று கும்பகர்ணனை எவ்வளவு முயன்றும் உறக்கத்தில் இருந்து எழுப்ப முடியவில்லை என்றனர். இராவணன், யானைகளை விட்டு மிதிக்கச் செய்து எழுப்புங்கள் என்றான். அவ்வாறே யானைகளை விட்டு மிதிக்கச் செய்து கும்பகர்ணனை எழுப்ப முயன்றனர். அப்படியும் கும்பகர்ணன் எழுந்தபாடில்லை. மறுபடியும் கிங்கரர்கள் இராவணனிடம் சென்று யானைகள் மிதித்தும் கும்பகர்ணன் எழவில்லை என்றனர்.

இராவணன், ஆயிரம் மல்லர்களை அழைத்து வந்து கும்பகர்ணனை எழுப்பச் செய்யுங்கள் என்று கட்டளையிட்டான். மல்லர்கள் அங்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் உறங்கி கொண்டிருக்கும் கும்பகர்ணனை பார்த்து பயந்து நடுங்கினார்கள். அவர்கள் கும்பகர்ணனை அடித்து எழுப்ப பயந்து அவன் காதருகில் சங்கு, தாரை போன்ற ஊது கருவிகளை கொண்டு பெரும் ஓசை எழுப்பினர். இதற்கும் கும்பகர்ணன் சிறிதும் அசைவு கொடுக்கவில்லை. பிறகு கிங்கரர்கள், படைகலன்களில் தேர்ச்சிப் பெற்ற வீரர்களை அழைத்துவந்து கொம்பு, வலிமையுடைய தண்டு, சம்மட்டி, ஈட்டி போன்றவற்றைக் கொண்டு கும்பகர்ணனின் மார்பிலும், தலையிலும், தாடையிலும், மூட்டுகளிலும் அடித்தனர். அவர்கள் எவ்வளவு அடித்தும் கும்பகர்ணன் எழுந்தபாடில்லை. அவர்கள் தான் அடித்து அடித்து சோர்ந்து போனார்கள்.

மறுபடியும் கிங்கரர்கள் இராவணனிடம் சென்று, கும்பகர்ணன் எழவில்லை என்றனர். இராவணன் குதிரை படைகளை கும்பகர்ணன் மீது ஓடவிட்டு எழுப்புங்கள் எனக் கட்டளையிட்டான். அவ்வாறே கிங்கரர்களும் செய்தனர். ஆனால் இதுவும் பயனற்று போனது. குதிரை படைகள் கும்பகர்ணன் மீது சென்றது அவனுக்கு தாலாட்டுவது போல் இருந்தது. இதனால் அவன் ஆழ்ந்த தூக்கத்திற்குச் சென்றான். இவ்வளவு முயற்சி செய்தும் கும்பகர்ணன் எழுந்தபாடில்லை என இராவணனிடம் சென்று கூறினர். இதற்கு மேல் என்ன செய்வதென்று ஆலோசனைக் கேட்டனர். இராவணன் அவர்களிடம், வாள், சூலம், உலக்கை இவற்றைக் கொண்டு தாக்கியாவது கும்பகர்ணனை எழுப்புங்கள் என்றான். பிறகு ஆயிரம் வீரர்கள் கும்பகர்ணனின் கன்னங்களில் வாள், சூலம், உலக்கை கொண்டு தாக்கினர். அப்பொழுது கும்பகர்ணன் ஓர் பூதம் போல் எழுந்து அமர்ந்தான்.

தூக்கத்தில் இருந்து எழுந்த கும்பகர்ணனால் பசியை தாங்க முடியவில்லை. உடனே அவன் உணவு எங்கே? என்றான். உடனே சமைக்கப்பட்ட உணவுகள் வண்டி வண்டியாக கொண்டு வரப்பட்டது. பிறகு நூற்றுக்கணக்கான குடங்களில் கொண்டு வரப்பட்ட கள் அனைத்தையும் குடித்தான். இவ்வளவு சாப்பிட்ட பிறகும் கும்பகர்ணனுக்கு பசி இன்னும் அதிகமானது. பசி அடங்காததால் ஆயிரத்து இருநூறு எருமை கடாக்களை தின்ற பிறகு அவன் சிறிது பசியாறினான். பிறகு அவன் உறங்கச் சென்றான். அப்போது கிங்கரர்கள் பயந்து சென்று உன் அண்ணன் இராவணன் அழைத்ததாக அவன் காதில் சென்று கூறினார்கள். பிறகு அவன் ஒரு நெடுமலையை போல் எழுந்துச் சென்றான். கும்பகர்ணன் அரசவை சென்றடைந்ததும், இராவணனின் கால்களில் வீழ்ந்து வணங்கினான். இராவணன், கும்பகர்ணனை தன் தோளோடு தழுவிக் கொண்டான்.

அங்கு கும்பகர்ணன் தனக்கு விசாலமாக இருக்கும் ஓர் அரியணையில் அமர்ந்தான். பிறகு இராவணன், கும்பகர்ணனுக்கு நல்ல உடைகளையும், விசேஷமான ஆபரணங்களையும் கொடுத்து அணிந்து கொள்ளச் செய்தான். சந்தனக் குழம்பைக் கொண்டு வரச் செய்து, அதையும் அவன் உடலெங்கும் பூசிக்கொள்ளச் செய்தான். அவன் மார்பில் கவசத்தை அணிவித்து, நெற்றியில் வீர பட்டத்தைக் கட்டி போருக்குத் தயார் செய்தான். இதையெல்லாம் பார்த்த கும்பகர்ணன் இராவணனிடம், "எனக்குச் சிறப்பு செய்வதெல்லாம் எதற்காக" என்றான். அதற்கு இராவணன், இரண்டு மானிடர்கள், எழுபது வெள்ளம் வானர சேனையோடு இங்கு வந்துள்ளனர். அவர்கள் இலங்கையை சூழ்ந்து போரிட்டு, என்னையும் வென்று விட்டார்கள். ஆதலால் நீ சென்று அவர்களை உன் பசிக்கு இரையாக்கிக் கொள் என்றான். இதைக் கேட்டதும் கும்பகர்ணன் திடுக்கிட்டான்.

அண்ணா! போர் வந்துவிட்டதா! கற்புடைய சீதையின் துயரம் இன்னமும் தீரவில்லையோ? தேவலோகத்திலும், மண்ணுலகத்திலும் வளர்ந்த நமது புகழ் அழிந்து போனதோ? நாம் அனைவருமே அழியப் போகும் காலம் வந்து விட்டதோ? ஒருவனுக்கு நிலம் காரணமாகவும், பதவி காரணமாகவும் போர் வரும். ஆனால் உனக்கு ஒரு பெண்ணின் காரணமாக போர் வந்துவிட்டது. ஆனால் இன்று உனக்கு சீதையினால் அழிவு நேர்ந்து விட்டதே! அன்று அரசவை ஆலோசனையின் போது நானும், விபீஷணனும், பாட்டன் மாலியவானும் சீதையை விடுவிக்குமாறு சொன்ன அறிவுரைகளை நீ கேட்கவில்லை. விதியின் செயலை நாம் என்ன செய்வது? நம் குலத்தின் பண்பு அழிந்துவிட்டது. நம் உறவினர்களும், சேனைகளும், நம் குலமும் அழிய வழிவகுத்து விட்டாய். உன் நிலைமையை நினைத்தால் என் உள்ளம் பதறுகிறது. இனி நம் அசுர குலம் வாழுமோ! வாழாதோ! என்பது தெரியவில்லை என்றான்.

தொடரும்.....

Post a Comment

0 Comments