இராமாயணம் பகுதி - 70
இராமர் மற்றும் இராவணனின் யுத்தத்தைக் காண்பதற்கு பிரம்மன் முதலான தேவர்கள் வானத்தில் வந்து இராமர் வெற்றி பெற வாழ்த்தினார்கள். இராமர் இராவணனுடன் போர் புரிய ஆயத்தமாகி, தன் வலிமையான கோதண்டத்தின் நாணை இழுத்து ஓர் பேரொலி எழுப்பினார். இராவணன் வில்லை வளைத்து கணக்கற்ற அம்புகளை ஒரே நேரத்தில் தொடுத்தான். இராவணன் எய்த அம்புகளை துண்டுகளாக்கி, ஐந்து கொடிய கணைகளை இராமர் விடுத்தார். இந்த கணைகள் பல அரக்கர்களை ஒழித்தது. இராமர், இராவணனுக்கும் இடையில் கடும்போர் நடந்தது. இராமரின் கோதண்டத்தில் இருந்து வந்த அம்புகள் அரக்கர்களின் தலைகளை அறுத்தும் பல்லாயிர அரக்கர்களையும் வீழ்த்தியது. இராமரை சுமந்து கொண்டிருக்கும் அனுமன் தன் கைகளாலும், கால்களாலும் அரக்கர்களை கொன்று வீழ்த்தினான். எந்த திசையைப் பார்த்தாலும் அரக்கர்களின் பிணங்கள் குவிந்த வண்ணமாக கிடந்தன.
யானைகளும், குதிரைகளும் என அனைத்தும் இராமரின் அம்புகளுக்கு இரையாயின. கடைசியில் இராவணன் மட்டும் தனித்து நின்றான். தன் அரக்கர் படைகள் பிணங்களாக குவிந்து கிடப்பதை பார்த்த இராவணன் கடும்கோபம் கொண்டான். உடனே அவன் இராமரை நோக்கி அம்பு எய்தினான். இராமர் அந்த அம்பை உடைத்து தூள் தூளாக்கிவிட்டு மற்றொரு அம்பை இராவணனை நோக்கி எய்தினார். இந்த அம்பு இராவணனின் வில்லை அறுத்தது. இராமர் மறுபடியும் ஒரு அம்பை ஏவி இராவணனின் தேரை அறுத்து ஒடித்தார். ஆனால் இராவணனுக்கு புதிது புதியதாக தேர்கள் வந்து கொண்டிருந்தன. இராமர் புதியதாக வந்த அனைத்து தேர்களையும் அறுத்து ஒடித்தார். இராமர் மற்றொரு வில்லை ஏவி இராவணனின் தலையில் அலங்கரித்து கொண்டிருக்கும் பத்து மணி மகுடங்களையும் கீழே வீழ்த்தினார்.
அப்பொழுது இராவணன் சந்திரன் இல்லாத நிலவு போலவும், சூரியன் இல்லாத பகல் போலவும் காட்சியளித்தான். இராவணன் போர்கருவிகள், தன் வில், தேர், அரக்கர் படைகள் எதுவும் இல்லாமல் தன் கால் விரலால் நிலத்தை களைத்துக் கொண்டு, தலை குனிந்து நின்றான். இதனைப் பார்த்து கொண்டிருந்த தேவர்கள், "தர்மத்தை அழித்த பாவிகளின் நிலைமை இது தான்" என்றனர். இராமர் தன் எதிரில் தலைகுனிந்து நிற்கும் இராவணனை பார்த்து இரக்கம் கொண்டு, இராவணா! இப்பொழுது உன்னிடம் எதுவும் இல்லாமல் வெறும் கையுடன் இருக்கிறாய். இப்பொழுது உன்னை கொல்வது நன்றல்ல. இப்பொழுது தெரிந்துக் கொள்.
தர்மத்தால் மட்டுமே போர்களில் வெல்ல முடியுமே தவிர, வலிமையால் அல்ல. நான் உன்னை அரக்கர்களை கொன்றதை போல கொன்றிருப்பேன். ஆனால் தனித்து நிற்கும் உன்னை நிலையை பார்த்து உன்னை கொல்லாமல் விட்டுவிடுகிறேன். அரக்கனே! இங்கிருந்து ஓடிபோய் உன் நகரத்திற்குள் ஒளிந்துக் கொள் என்றார். உனக்கு நான் மறுபடியும் ஒரு வாய்ப்பளிக்கிறேன். சீதையை என்னிடம் ஒப்படைத்துவிட்டு, வீபிஷணனை இலங்கையின் அரசனாக முடிசூட்டிவிடு. உன்னை நான் மன்னித்து உயிருடன் விடுகிறேன். அப்படி இல்லையென்றால் என்னை எதிர்த்து போர் புரியும் ஆற்றல் உன்னிடம் இருந்தால் உன் சேனைகளை திரட்டி என்னை எதிர்த்து போரிடு என்றார். இப்பொழுது நீ இங்கிருந்து செல். உன் மனைவி உன்னை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பாள். நாளை உன் படைகளை திரட்டி கொண்டு இங்கு வா என்றார்.
தோல்வி என்பதை அறியாத இராவணன் இன்று தன் வீரத்திற்கு இழுக்கு நேர்ந்துவிட்டதை நினைத்து இராவணனால் ஒன்றும் பேச முடியவில்லை. இன்று ஒரு மனிதன் தன்னை "இன்று போய் நாளை வா" என்று சொல்லும் அளவிற்கு தன் நிலைமை தாழ்ந்து போனதை நினைத்து ஏளனமாக சிரித்தான். பிறகு இராவணன் நிலத்தை பார்த்தவாறே தன் அரண்மனையை நோக்கிச் சென்றான்.
முதல் போர் முடிவு பெற்றது.
இறுதியாக இராவணனிடம் இருந்தது வீரம் மட்டும் தான். இராவணன் போரில் தன் பெருமைகளை இழந்துவிட்டு, இராமர் கொடுத்த உயிர் பிச்சையை மட்டும் வைத்துக் கொண்டு அரண்மனை நோக்கிச் சென்று கொண்டிருந்தான். இராவணன் இலங்கைக்குள் நுழையும் போது சூரியன் மறைய தொடங்கியது. இராவணன் இலங்கையில் நுழையும் போது அவன் எத்திசையும், யாரையும் பார்க்கவில்லை. தலையை குனிந்தவாறு அரண்மனை நோக்கி சென்று கொண்டிருந்தான். அரண்மனையில் இராவணன் வரும்போது இருக்கும் பரபரப்பு அன்று அங்கு தென்படவில்லை. அங்கு இராவணனின் மனைவிமார்களும், உறவினர்களும், சேனைத்தலைவர்களும் நின்று கொண்டிருக்க அவன் யாரையும் பார்க்காமல் நேராக தன் அறைக்குச் சென்று போரில் எவ்வாறு வெல்வது என்பதைப் பற்றி ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினான்.
இராவணன் மெய்க்காப்பாளனை அழைத்து தூதர்கள் நால்வரை அழைத்து வரும்படி சொன்னான். உடனே தூதர்கள் நால்வரும் அங்கு வந்துச் சேர்ந்தார்கள். அவர்கள் மனகதி, வாயுவேகன், மருத்தன், மாமேகன் என்பவர்கள். இராவணன் அவர்களிடம் நான்கு திசைகளுக்கும் சென்று அரக்கர்களை ஒன்று திரட்டி வரும்படி கூறினான். பின் இராவணன் யாரையும் பார்க்க விருப்பமின்றி தன் படுக்கைக்குச் சென்றான். சீதையை மட்டும் மனதில் நினைத்துக் கொண்டிருந்த இராவணனுக்கு இப்பொழுது கவலை தொற்றிக் கொண்டது. கவலையால் இராவணனுக்கு தூக்கம் வரவில்லை. நான் பெற்ற தோல்வியைக் கண்டு தேவர்கள் சிரிப்பார்கள். என் பகைவர்களும், மண்ணுலகத்தில் உள்ளோரும் சிரிப்பார்கள்.
அது மட்டுமின்றி அழகும், அன்பும், மென்மையும் உடைய சீதை என்னைப் பார்த்து சிரிப்பாளே என நினைத்து கவலை கொண்டான். இராவணன் தூக்கம் வராமல் தன் படுக்கையில் இருந்து எழுந்து அரசவைக்குச் சென்று தன் அரியணையில் அமர்ந்தான். இராவணன் கவலையுடன் இருப்பதைக் கண்டு இராவணனின் பாட்டன் மாலியவான், எழுந்து அன்புடன் கேட்டார். பேரப்பிள்ளையே! உன் முகம் ஏன் இவ்வளவு வாடி இருக்கின்றது. உன் துன்பத்திற்கான காரணம் என்னவென்று கேட்டார். இராவணன், பல வெற்றிகளை கண்ட நான் இன்று ஒரு மனிதனிடம் தோற்றுவிட்டேன். இராமன் என் சேனைகள் அனைத்தையும் அழித்து விட்டான். இந்திரன், சிவன், திருமால் ஆகிய மூவரையும் வென்ற பேராற்றல் உடைய நான், இராமனிடம் இன்று தோற்றுவிட்டேன்.
நான் திக் விஜயம் செய்தபோது இந்திரன், திருமால், பிரம்மன், ஈசன் என அனைவரையும் வென்று விட்டேன். ஆனால் இன்று ஒரு மனிதனான இராமனை என்னால் வெல்ல முடியவில்லை என்பதை நினைத்து வருந்துகிறேன். இராமன் வீரம் நிறைந்தவன். அவன் என்னுடன் போர் புரியும்போது கோபமோ, பரபரப்போ தெரியவில்லை. மிகவும் நுணுக்கமாக போர் புரிந்தான். இன்று அவன் மிகுந்த கோபத்துடன் போர் புரிந்திருந்தால் நான் இன்று தங்கள் முன் பேசி கொண்டிருக்கமாட்டேன். இராமனின் போரின் வீரத்தை நான் என்னவென்று சொல்வது? இராமனின் பாணங்கள் அனைத்தும் எரிக்கும் வல்லமை உடையது. இராமரிடம் தன் பெருமைகள் அனைத்தையும் இழந்துவிட்டு, இங்கு வந்துள்ளேன் என மிகவும் வருத்தத்துடன் கூறினான்.
தொடரும்.....
0 Comments