மகாபாரதம் பகுதி - 05
மன்னனே! கங்காதேவியாகிய நான் ஒருமுறை பிரம்மலோகம் சென்றபோது. அங்கே பல தேவர்கள் இருந்தனர். அப்போது அங்கிருந்த வாயுபகவான், தேவர்களின் மனவுறுதியைச் சோதிப்பதற்காக ஒரு சோதனை செய்தான். என்னுடைய மார்பகங்கள் தெரியும்படியாக எனது ஆடையை காற்றடித்து பறக்க வைத்தான். ஆசாபாசங்களுக்கு அப்பாற்பட்ட தேவர்கள் அனைவரும் கண்ணை மூடிக் கொண்டனர். ஆனால், வருண தேவன் மட்டும் என் அங்கங்களை பார்த்து ரசித்தான். இதனால், அங்கிருந்த பிரம்மன் கடும் கோபமடைந்தார். ஏ வருண தேவரே! ஒரு பெண்ணை அவளறியாமல் இருந்த நேரத்தில் ரசித்த நீ பூமியில் மானிதனாகப் பிறப்பாய் என்று சாபமிட்டார். அவ்வாறே என்னை பார்த்து, எந்தச் சூழலிலும் ஒரு பெண்ணானவள் தன் மானத்தைக் காக்க முயன்றிருக்க வேண்டும், காற்றடித்த வேளையில் நீ அதைச் செய்யத் தவறியதுடன், ஒரு ஆண்மகனின் மனம் பேதலிக்கவும் காரணமாக இருந்தாய். எனவே நீயும் பூமியில் மனுஷியாகப் பிறப்பாய். இந்த வருண தேவனுக்கு வாக்கப்பட்டு சாப ஈவிமோசனம் பெறும் காலம் வரை வாழ்ந்து, இங்கே மீண்டும் வருவாய் என்றார்.
நான் மிகுந்த கவலையுடன் பூலோகம் நோக்கி வந்து கொண்டிருந்தேன். அப்போது அஷ்டவசுக்களான 8 திசைகளின் காவலர்கள் என் எதிரே வந்தனர். அவர்களில் பிரபாசன் என்பவனும் ஒருவன். அவர்களும் கவலை பொங்கும் முகத்துடன்தான் காட்சியளித்தனர். அப்போது நான் அவர்களிடம் கவலைக்கான காரணத்தை கேட்டேன். தாயே! இந்த பிரபாசன் தனது மனைவி மீது மிகுந்த மோகம் கொண்டவராக, இருப்பதுடன் அவள் சொன்னதையெல்லாம் செய்வான். அவள் பேராசைக்காரி. நினைத்ததையெல்லாம் அடைய விரும்புபவள். வசிஷ்டரின் ஆசிரமத்தில் நினைத்தவற்றை தரக்கூடிய காமதேனு எனும் பசு இருந்தது.
அதைப் பிடித்து வந்து தன்னிடம் தரும்படி கணவனிடம் அவள் சொன்னாள். இவனும் அவள் மீதுள்ள மோகத்தால், பசுவைத் திருட முயற்சி செய்தான்.அதற்கு நாங்கள் அவனை கண்டிக்காது அவனது நண்பன் என்ற முறையிலே அவனுக்கு துணையாக சென்று வசிஷ்டரின் ஆசிரமத்துக்குள் புகுந்து, காமதேனுவைத் திருடினோம். இதனால் கோபமடைந்த வசிஷ்டர் , நாங்கள் பூமியில் மானிடர்களாகப் பிறக்கும் படி சாபமிட்டார்.
எங்களுக்கான சாப விமோசனம் பற்றி அவரிடம் கேட்டோம். நீங்கள் பூமியில் பிறந்தவுடன் இறந்து விட்டீர்களென்றால், மீண்டும் திசைக்காவலர் பதவியைப் பெறுவீர்கள். என்று அவர் கருணையுடன் சொன்னார். அதனால் பூமியில் பிறக்கவும், எங்களை உடனே கொல்லும் மனதுடையவளுமான ஒரு தாயை தேடி கொண்டிருக்கிறோம். நீங்கள் எங்கே செல்கிறீர்கள்? என்று கேட்டார்கள். நானும் எனது சாபம் பற்றி அவர்களிடம் சொல்லி, அவர்கள் மீது இரக்கம் கொண்டு, குழந்தைகளே! வருண தேவன் பூமியில் சந்தனு என்ற மன்னனாகப் பிறப்பான். நான் அவனது மனைவியாக வாழ்ந்து உங்களை எனது வயிற்றில் பிரசவிக்கிறேன். பிறந்த உடனேயே உங்களை ஆற்றில் எறிந்து கொன்று, உங்கள் பதவியை உடனடியாகக் கிடைக்கச் செய்கிறேன் என்றேன். அதன்படி எனக்கு பிறந்த 7 குழந்தைகளையும் கொன்றேன். மனைவியின் மோகத்தில் சிக்கிய பிரபாசனே இந்த எட்டாவது குழந்தை. வசிஷ்டரின் சாபப்படி இவன் இந்த பூமியில் பெண்ணாசையே இல்லாமல் வாழ்வான். உலகம் உள்ளளவும் இவனது புகழ் பூமியில் நிலைத்திருக்கும், என்றாள்.
தானே உலகிற்கு மழையை கொடுக்கும் வரு தேவன் என்று சந்தனு மன்னன் சந்தோஷப்பட்டாலும், இப்பிறவியில் தன் குலம் விருத்தியடையாமல் போனது பற்றி வருத்தப்பட்டான். கங்கா! நமது 7 குழந்தைகளும் இறந்து விட்டார்கள். இவனும் பெண்ணாசையே இல்லாமல் இருந்தால், நம் சந்திரகுலம் எவ்வாறு விருத்தியடையும்? என்னோடு எனது குலமே அழிந்து விடும். நாம் இன்னும் பல குழந்தைகளை பெற்றெடுப்போம். அதன்பின் இருவருமே தேவலோகம் செல்லலாம், என்றான்.அதற்கு கங்கா தேவி விரக்தியாக சிரித்தாள். மன்னரே! நீங்கள் எனது நிபந்தனையை மீறி கேள்வி கேட்டு விட்டீர்கள். எப்போது கேள்வி கேட்கிறீர்களோ, அப்போது நான் உங்களைப் பிரிந்து விடுவேன் என்று சொல்லித்தானே உங்களைத் திருமணம் செய்தேன். இனி உங்களோடு நான் வாழமாட்டேன். இந்த மகனுடன் நதியில் கலந்து விடுவேன்.
அவன் வாலிபன் ஆனபிறகு உங்களிடம் தருவேன், என்று கூறி விட்டு கங்கையில் மறைந்து விட்டாள் கங்கா தேவி. கங்காவின் நினைவில் சந்தனு மூழ்கி கிடந்தான். அவள் எப்போது வருவாள் என்று காத்திருந்தான். கங்காதேவிக்கு முன்னதாக அவன் சில பெண்களைத் திருமணம் செய்திருந்தான். அவர்களாலும் அவனைத் தங்கள் வசப்படுத்த முடியவில்லை. வேட்டைக்கு போய் தன் மனதை அதில் திருப்ப முயன்றான். அப்போது கங்கைக்கரைக்கு சென்று, தன் மனைவி வரமாட்டாளா என காத்துக்கிடப்பான். ஆண்டுகள் பல சென்றது. ஒருநாள் அவன் கங்கைக்கரையில் நின்ற போது, பூணூல் அணிந்து கையில் வில்லேந்திய வாலிபன் ஒருவனைப் பார்த்தான். பார்த்தவுடனேயே அவன் தனது மகன் தான் என்பதை உள்ளுணர்வால் புரிந்துகொண்டான் சந்தனு. அவனை நோக்கி ஓடிவந்தான். அந்த வாலிபன் சந்தனு மீது மோகனாஸ்திரத்தை எய்தான்.
அவன் தனது தந்தை என்பதை தேவவிரதன் அறிந்திருக்கவில்லை. சந்தனு மயக்கமடைந்து கீழே விழுந்து கிடந்தார். அ அப்போது சந்தனு மீது இரக்கம் கொண்ட கங்கா தேவி, தன் மகனுடன் கங்கையின் கரைக்கு வந்து அவனுடைய தலையை அன்போடு வருடினாள். தன் மகனிடம், இவர் வேறு யாரும் இல்லை உன் தந்தை, என்றாள். அவள் கைப்பட்டதுமே சந்தனு எழுந்தான். அவனை அன்போடு தழுவிக் கொண்ட கங்காதேவி, அரசரே! நான் இன்று தேவலோகம் செல்கிறேன். உங்களிடம் சொன்னபடி உங்கள் மகனை உங்களிடமே ஒப்படைத்து விட்டேன். இவனது பெயர் தேவவிரதன். பரசுராமரின் திருவருளால் அவரது ஆயுதங்களையே பெற்றவன். சிறந்த வில்லாளி மற்றும் வீரன். இவனோடு சேர்ந்து நீங்கள் இனி நாட்டை ஆளலாம், என்று சொல்லிவிட்டு, அவன் பதிலுக்கு சிறிது நேரங்கூட காத்திராமல், நதியில் சென்று மறைந்தாள்.
தொடரும்.....
0 Comments