மகாபாரதம் பகுதி - 02 - MAHABHARATHAM PART - 02

 

 மகாபாரதம் பகுதி - 02



மகாபாரதம் பகுதி - 02 - MAHABHARATHAM PART - 02

நஹூஷன் பாம்பாக மாறிய பின், அவனது மகன் யயாதி அரசனாக பொறுப்பேற்றான். அவன் அழகிலும், வீரத்திலும் மிகவும் சிறந்தவன். இவனிடம் ஒரு நல்ல பழக்கம்  உள்ளது. அது என்னவென்றால், இவனுக்கு கோபமே வராது என்பதுதான். இவனது பொறுமையை  வியாசரும் பாராட்டியுள்ளார்.

இந்த பொறுமைசாலிக்கு, அசுரர்களின் குருவான சுக்ராச்சாரியார் தன் மகளான தேவயானையைத் திருமணம் செய்து வைத்தார். அந்த தம்பதியரின் இனிய இல்லறத்தில், யது, துருவஸ் என்ற மகன்கள் பிறந்தனர். இந்த பொறுமைசாலியான யயாதிக்கு இறைவன் சோதனையை கொடுத்தான். ஒருநாள்,  அசுரர்களின் மன்னனான விருஷவர்பனை அவர்களின் குலகுரு சுக்ராச்சாரியார் அழைத்தார். விருஷா! நீ என் மகள் தேவயானையை  யயாதிக்கு திருமணம் செய்து வைத்துள்ளதை  அறிவாய். கணவன் வெளியூர் சென்றிருந்த நேரத்தில் தேவயானிக்கு உற்ற துணை யாருமில்லை. எனவே,  உனது மகள் சன்மிஷ்டை தேவயானையுடன் அரண்மனையில் தங்கட்டும். தேவயானையும், அவளும் ஒன்று சேர்ந்து இருந்தால், ஒருவருக்கொருவர் துணையாகவும், தோழிகளாகவும் விளங்குவர், என்றார் சுக்ராச்சாரியார் .

விருஷவர்பன் குலகுருவின் கட்டளைக்கு அடிபணிந்து. சன்மிஷ்டையை தேவயானையின் வீட்டில் கொண்டு சேர்த்தான். அவர்கள் சிறந்த தோழிகளாயினர். இந்நேரத்தில் அரசாங்க பணியாக வெளியூர் சென்றிருந்த யயாதி அரண்மனைக்கு வந்து சேர்ந்தான்.  அந்த வேளையில்  அரண்மனையில் ஒரு அழகுச்சிலை நடமாடுவதைக் கண்ட மன்னன் யயாதி  அவளை யாரென்று விசாரித்து தெரிந்து கொண்டான். தோழியின் கணவன் என்ற முறையில், விருஷவர்பனின் மகளான சன்மிஷ்டை யயாதியுடன் அடிக்கடி பேசுவாள். யயாதி பொறுமைசாலியாக  இருந்தாலும்  உணர்வுகள் இல்லாதவன்  அல்ல.  அதனால்   தன் மனைவியை விட பேரழகு மிக்க சன்மிஷ்டையை அவன் காதலிக்க ஆரம்பித்தான். சன்மிஷ்டையும், அந்த பேரரசனின் வலையில் சிக்கி விட்டாள். ஆனால் இந்த விஷயம் தேவயானைக்குத் தெரியாது.

காதலர்கள் ஒரு நாள் தனிமையில் சந்தித்தனர். தாலி கட்டி மனைவியாக்கினால், தேவயானைக்குத் தெரிந்து விடும் என்பதனால் அவளை கந்தர்வ மணம் செய்து கொண்டான். பின்பு தம்பதியர் ஒளிவாக வாழ்ந்ததன் மூலம் சன்மிஷ்டை கர்ப்பவதியாகி விட்டாள்.  இதனால் சன்மிஷ்டை தேவயானையை விட்டு பிரிந்து சென்று விட்டாள். அவளை தனி மாளிகை ஒன்றில் குடி வைத்தான் யயாதி. இப்படியாக பல ஆண்டுகள்  கடந்தது. இவ்வாறாக சன்மிஷ்டை  பூரு, த்ருஹ்யு, அனு என்ற மகன்களைப் பெற்றாள். 03 குழந்தைகள் பிறக்கும் வரைக்கும் யயாதி தன் முதல் மனைவியான தேவயானியிடம்  மாட்டி கொள்ளாமல் தான் இருந்தான்.

ஆனால் ஒருநாள் தந்தையைத் தேடி குழந்தைகள் அரண்மனைக்கு வந்து விட்டனர். அவர்கள்  மூவரும் தேவயானியியன் கண்ணில் பட்டனர். மூவருமே, யயாதியை அச்சில் வார்த்தது போல் இருக்க, சந்தேகப்பட்ட தேவயானை இதுபற்றி விசாரித்தாள். சன்மிஷ்டையும், யயாதியும் தனக்கு துரோகம் செய்துவிட்டனர்  என்பதை புரிந்து கொண்ட அவள் யயாதியுடன் வாழமாட்டேன் என்று கூறி தனது தந்தை வீட்டுக்குச் சென்றாள். அழுதுகொண்டே வீட்டுக்கு  சென்ற தேவயானை, தகப்பனாரிடம் நடந்த  அனைத்தையும் கூறினாள். 

சுக்ராச்சாரியாரும் கட்டியவன் தான் உனக்கு  புகழ், என்று கூறும் சாதாரண தந்தையா . அசுரர்களுக்கே அவர் குருவல்லவா! அதிகாரம் மிக்க அவர், யயாதியை தன் வீட்டுக்கே வரச்சொன்னார் . துரோகி! உன்னிடம் இளமை இருக்கும் தைரியத்தில் தானே இப்படி காதல் நாடகம் நடத்துகிறாய். ஒழியட்டும் உனது இளமை. இனி நீ கிழவனாக பூமியில் வலம் வருவாய்! உன்னைப் பார்ப்பவர்கள் காமத்தால் அறிவிழந்த துரோகி என தூற்றட்டும், என்றார்.     இந்த சாபத்தால் யயாதி உடனடியாக கிழவனானான். அசுரகுருவே! என்னை மன்னித்து. எனக்கு  சாபவிமோசனம் அளியுங்கள், என அவர் காலில் விழுந்தான் யயாதி .  அதற்கு சுக்ராச்சாரியார்  நீ மீண்டும் இளமையைப் பெற ஒரே ஒருவழிதான் இருக்கிறது. உனது முதுமையை ஒரு இளைஞனுக்கு தாரை வார்த்து கொடுத்து விட்டு,  அவனது இளமையை நீ வாங்கிக் கொள்ளலாம். இதைத் தவிர வேறு வழியில்லை என்றார்.  பின், தேவயானை அவனுடன் வர மறுத்து விட்டாள் . அதனால் அவன் வருத்தத்துடன் சன்மிஷ்டையிடமே சென்றான். அவள் யயாதியைக் கண்டு அதிர்ந்து போனாள் . யயாதி பலரிடமும் இளமையை வேண்டி நின்றான் ஆனால்  யாரும் முன்வரவில்லை . இதனால் கண்ணீர்  வடித்துக்கொண்டிருந்த யயாதியின்  முன் , ஒரு இளைஞன் வந்து நின்றான்.

தொடரும் .....

Post a Comment

0 Comments