மகாபாரதம் பகுதி - 01 - MAHABHARATHAM PART - 01

 

மகாபாரதம் பகுதி - 01


மகாபாரதம் பகுதி - 01 - MAHABHARATHAM PART - 01


மகாபாரதம் என்னும்  இதிகாசத்தை இயற்றியவர் வியாசர். ஒரு கதாசிரியர், தன்னையும் ஒரு பாத்திரமாக இணைத்துக் கொண்ட பெருமை இக்காவியத்தை சாரும். மகாபாரதத்தின்  முக்கியஸ்தர்களாக  பாண்டுவுக்கும் , திருதராஷ்டிரனுக்கும், விதுரனுக்கும் பிறந்தவர்களே கருதப்படுகின்றனர். மகாபாரதத்தில்  கிருஷ்ணன் கீதையைப் போதித்து, வாழ்க்கையின் யதார்த்த நிலையைச் சுட்டிக்காட்டியுள்ளதால், இதை ஐந்தாவது வேதம் என்றும் சொல்லுவர். இக்காவியமானது சூதாட்டத்தின் கொடுமையை விளக்கி பாமரனும் படித்து புரிந்து கொள்ளக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

ராமபிரான் சூரியவம்சத்தில் அவதரித்தது போல், பஞ்ச பாண்டவர்கள் சந்திர குலத்தில் பிறந்தவர்கள். பாற்கடலை தேவாசுரர்கள் கடைந்த போது, தோன்றியவன் சந்திரன். இவன் 14 கலைகளைக் கொண்டு, தினமும் ஒன்றாக சூரியனுக்கு கொடுப்பான். திரும்பவும் அதை வாங்கிக் கொள்வான். சூரியன், இவனிடம் இருந்து பெறும் கலையால் குளிர்ச்சியடைந்து  உலகத்தை எரிக்காமல் வைத்திருக்கிறான். சந்திரன் தாரை என்பவளைத் திருமணம் செய்து பெற்ற மகனே புதன். 

ஒரு முறை மனு  என்ற அரசனின் மகனான இளன் என்பவன் காட்டுக்கு வேட்டையாட வந்தான். இந்தக் காட்டின் ஒரு பகுதியிலுள்ள குளத்தில், ஒருசமயம் சிவபெருமானின் மனைவியான பார்வதி நீராடிக் கொண்டிருந்தாள். அப்போது அங்கு வந்த ஆடவர் சிலர், அவள் குளிக்கும் அழகை ரசித்தனர். கோபமடைந்த பார்வதி அவர்களைப் பெண்ணாகும்படியும், இனி அந்த ஏரிப்பகுதிக்குள் யார் நுழைகிறார்களோ, அவர்கள் பெண்ணாக மாறுவர் என்றும் சபித்துவிட்டாள். அவள் பூவுலகை விட்டு, சிவலோகம் சென்ற பிறகும் கூட அந்த சாபம் மாறவில்லை. இதையறியாத இளன் அந்த ஏரிப்பகுதிக்குள் நுழைந்தானோ இல்லையோ, பெண்ணாக மாறி விட்டான்.

இளன் வருத்தத்துடன் இருந்த வேளையில், அழகுப் பதுமையாக இருந்த இளனை அங்கு வந்த புதன் பார்த்தான். அவளது கதையைக் கேட்ட புதன், இளனுக்கு ஆறுதல் சொல்லி அவளைத் திருமணம் செய்து கொண்டான். பின் இளனுக்கு  இளை என்ற பெயரும்  வந்தது. புதனுக்கும், இளன் என்ற இளைக்கும் புரூரவஸ் என்ற மகன் பிறந்தான். புரூரவஸ் வளர்ந்து வாலிபன் ஆனான். அழகில் அவனுக்கு இணையாக யாருமில்லை. ஒருமுறை இவன் வான்வெளியில் ஒரு பெண்ணை சில அசுரர்கள் கடத்திச் செல்வதைப் பார்த்தான். அவள்  தனது மானத்தைக் காத்துக் கொள்ள கதறினாள். பறக்கும் தேர் வைத்திருந்த புரூரவஸ், அவளைக் காப்பாற்றுவதற்காக மின்னல் வேகத்தில் பறந்து சென்று அசுரர்களை எதிர்த்து போரிட்டான். அசுரர்கள் இவனின்  தாக்குதலை தாங்க முடியாமல், ஓடிவிட்டனர். அப்பெண்ணை பார்த்த அவன் நீ தேவலோகத்து ஊர்வசியோ? என்றான். அவள் அதற்கு தலை குனிந்து, நான் நிஜமாகவே ஊர்வசி தான் , என் மானம் காத்த நீங்களே எனக்கு இனி என்றும் பாதுகாவலாக இருக்க வேண்டும் என்றாள். ஊர்வசியே தனக்கு மனைவியாகப் வரப்போகிறாள் என்று மகிழ்ந்த புரூரவஸ், அவளைத் திருமணம் செய்து கொண்டான். அவர்களது இல்லறத்தில் அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு ஆயு என்று பெயரிட்டனர். இவ்வாறாக சந்திர வம்சம் பூமியில் பெருகியபடி இருந்தது. 

ஆயுவிற்கு நஹுஷன் என்ற மகனும் பிறந்தான். இவன் 100 அசுவமேத யாகங்களைச் செய்து தேவலோகத்தையே பிடித்துக் கொண்டவன். தேவலோகத்தின்  மன்னனான இந்திரனை விரட்டிவிட்டு, அரசனாகி விட்டான். அதிகார மமதையுடனும், காம போதையுடனும் இந்திரலோகத்தை ஜெயித்ததால், இந்திரனின் மனைவியான இந்திராணியை தனக்கே சொந்தம் என கருதி அவளை ஒரு அறையில் அடைத்து விட்டான்.  ஆனால் இந்திராணியோ அவனது ஆசைக்கு இணங்க மறுத்து விட்டாள். ஒருநாள் போதை உச்சிக்கேற, இந்திராணியான அவளை வலுக்கட்டாயமாக அடைவதற்காக தன் பல்லக்கில் ஏறி புறப்பட்டான் நஹுஷன். அந்த  பல்லக்கை சுமக்கும்படி முனிவர்களை மிரட்டினான். அவர்களும் அதற்கிணங்கி தூக்கிச் சென்றனர். அந்த  முனிவர்களுள் அகத்தியரும் ஒருவர் . அவர் குள்ளமாக இருந்ததால், மற்றவர்களைப் போல வேகமாகச் செல்ல முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த நஹுஷன், ஏய் அகத்தியரே! மற்றவர்கள் வேகமாகச் செல்லும் போது, உனக்கு மட்டும் என்னவாம்! என்று, முதுகில் ஓங்கி மிதித்தான். அதனால் மகாதபஸ்வியரான அகத்தியருக்கு கோபம் வந்து விட்டது . சிறுவனே! அதிகார மமதை, காமபோதைக்கு ஆட்பட்டு, தபஸ்விகளை துன்புறுத்தினாயதோடு , வயதில் பெரியவர்களை மதியாமல், காலால் மிதித்தும் விட்டாய். எனவே நீ பாம்பாகப் போ, என சாபமிட்டார். அதனால் அவன் பாம்பாக மாறி, தேவலோகத்தில் இருந்து பூமியில் விழுந்தான்.

தொடரும் .....


Post a Comment

0 Comments