திருக்குறள் அதிகாரம் 123 - பொழுதுகண்டு இரங்கல் - POLUTUKANDU IRANGAL


பொழுதுகண்டு இரங்கல் 


திருக்குறள் அதிகாரம் 123 - பொழுதுகண்டு இரங்கல் - POLUTUKANDU IRANGAL


குறள் 1221                                                          

மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும் 
வேலைநீ வாழி பொழுது 

மு.வ விளக்க உரை - பொழுதே! நீ மாலைக்காலம் அல்ல; (காதலரோடு கூடியிருந்து பிறகு பிரிந்து வாழும்) மகளிரின் உயிரை உண்ணும் முடிவுக் காலமாக இருக்கினறாய்!  

சாலமன் பாப்பையா விளக்க உரை - பொழுதே! நீ வாழ்க! முன்பெல்லாம் வருவாயே அந்த மாலையா நீ என்றால் இல்லை; திருமணம் செய்து கொண்ட பெண்களின் உயிரை வாங்கும் பொழுது நீ. 

கலைஞர் விளக்க உரை - நீ மாலைப் பொழுதாக இல்லாமல் காதலரைப் பிரிந்திருக்கும் மகளிர் உயிரைக் குடிக்கும் வேலாக இருப்பதற்காக உனக்கோர் வாழ்த்து!  

குறள் 1222                                                          

புன்கண்ணை வாழி மருள்மாலை எங்கேள்போல் 
வன்கண்ண தோநின் துணை 

மு.வ விளக்க உரை - மயங்கிய மாலைப்பொழுதே! நீயும் எம்மைப்போல் துன்பப்படுகின்றாயே! உன் துணையும் எம் காதலர் போல் இரக்கம் அற்றதோ?  

சாலமன் பாப்பையா விளக்க உரை - பகலும் இரவுமாய் மயங்கும் மாலைப்பொழுதே! என்னைப் போலவே நீயும் ஒளி இழந்த கண்ணோடு இருக்கிறாயே; உன் கணவரும் என் கணவரைப் போல் கொடியவரோ? 

கலைஞர் விளக்க உரை - மயங்கும் மாலைப் பொழுதே! நீயும் எம்மைப் போல் துன்பப்படுகின்றாயே! எம் காதலர் போல் உன் துணையும் இரக்கம் அற்றதோ? 

குறள் 1223                                                          

பனியரும்பிப் பைதல்கொள் மாலை துனியரும்பித் 
துன்பம் வளர வரும் 

மு.வ விளக்க உரை - பனி தோன்றிப் பசந்த நிறம் கொண்ட மாலைப் பொழுது எனக்கு வருத்தம் ஏற்பட்டுத் துன்பம் மேன்மேலும் வளரும்படியாக வருகின்றது. 

சாலமன் பாப்பையா விளக்க உரை - அவர் என்னைப் பிரிவதற்கு முன்பு என்முன் வரவே நடுக்கம் எய்தி மேனி கறுத்து வந்த இந்த மாலைப் பொழுது இப்போது எனக்குச் சாவு வரும்படி தோன்றி, அதற்கான துன்பம் பெருகும்படி நாளும் வருகின்றது. 

கலைஞர் விளக்க உரை - பக்கத்தில் என் காதலர் இருந்த போது பயந்து, பசலை நிறத்துடன் வந்த மாலைப் பொழுது, இப்போது என் உயிரை வெறுக்குமளவுக்குத் துன்பத்தை மிகுதியாகக் கொண்டு வருகிறது 

குறள் 1224                                                       

காதலர் இல்வழி மாலை கொலைக்களத் 
தேதிலர் போல வரும் 

மு.வ விளக்க உரை - காதலர் இல்லாத இப்போது, கொலை செய்யும் இடத்தில் பகைவர் வருவது போல் மாலைப்பொழுது ( என் உயிரைக் கொள்ள) வருகின்றது. 

சாலமன் பாப்பையா விளக்க உரை - அவர் என்னைப் பிரியாமல் என்னுடன் இருந்தபோது எல்லாம் என் உயிர் வளர வந்த இந்த மாலைப் பொழுது, அவர் என்னைப் பிரிந்து இருக்கும் இப்போது, கொலைக் காலத்திற்கு வரும் கொலையாளிகள் போலக் கருணை இல்லாமல் வருகிறது. 

கலைஞர் விளக்க உரை - காதலர் பிரிந்திருக்கும்போது வருகிற மாலைப் பொழுது கொலைக் களத்தில் பகைவர் ஓங்கி வீசுகிற வாளைப்போல் வருகிறது 

குறள் 1225                                                       

காலைக்குச் செய்தநன் றென்கொல் எவன்கொல்யான் 
மாலைக்குச் செய்த பகை 

மு.வ விளக்க உரை - யான் காலைப்பொழுதிற்குச் செய்த நன்மை என்ன? (என்னைத் துன்புறுத்துகின்ற) மாலைப் பொழுதிற்குச் செய்த பகையான தீமை என்ன? 

சாலமன் பாப்பையா விளக்க உரை - காலைக்கு நான் செய்த நன்மை என்ன? மாலைக்கு நான் செய்த தீமை என்ன? 

கலைஞர் விளக்க உரை - மாலைப் பொழுதாகிவிட்டால் காதல் துன்பம் அதிகமாக வருத்துகிறது அதனால் பிரிந்திருக்கும் காதலர் உள்ளம் “காலை நேரத்துக்கு நான் செய்த நன்மை என்ன? மாலை நேரத்துக்குச் செய்த தீமைதான் என்ன?” என்று புலம்புகிறது 

குறள் 1226                                                       

மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத 
காலை அறிந்த திலேன் 

மு.வ விளக்க உரை - மாலைப் பொழுது இவ்வாறு துன்பம் செய்ய வல்லது என்பதைக் காதலர் என்னை விட்டு அகலாமல் உடனிருந்த காலத்தில் யான் அறியவில்லை. 

சாலமன் பாப்பையா விளக்க உரை - முன்பு எனக்கு மகிழ்ச்சி தந்த மாலைப்பொழுது இப்படித் துன்பம் தரும் என்பதை, என்னை மணந்த காதலர் என்னைப் பிரிவதற்கு முன்பு நான் அறிந்தது கூட இல்லை. 

கலைஞர் விளக்க உரை - மாலைக்காலம் இப்படியெல்லாம் இன்னல் விளைவிக்கக் கூடியது என்பதைக் காதலர் என்னை விட்டுப் பிரியாமல் இருந்த போது நான் அறிந்திருக்கவில்லை 

குறள் 1227                                                       

காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி 
மாலை மலருமிந் நோய் 

மு.வ விளக்க உரை - இந்த காமநோய், காலைப்பொழுதில் அரும்பாய்த் தோன்றி, பகற்பொழுதெல்லாம் பேரரும்பாய் வளர்ந்து மாலைப்பொழுதில் மலராகின்றது. 

சாலமன் பாப்பையா விளக்க உரை - காதல் துன்பமாகிய இப்பூ, காலையில் அரும்புகிறது; பகலில் முதிர்கிறது; மாலைப்பொழுதில் மலர்ந்து விடுகிறது. 

கலைஞர் விளக்க உரை - காதல் என்பது காலையில் அரும்பாகி, பகல் முழுதும் முதிர்ச்சியடைந்து, மாலையில் மலரும் ஒரு நோயாகும் 

குறள் 1228                                                       

அழல்போலும் மாலைக்குக் தூதாகி ஆயன் 
குழல்போலும் கொல்லும் படை 

மு.வ விளக்க உரை - ஆயனுடைய புல்லாங்குழல், நெருப்புப்போல் வருத்தும் மாலைப்பொழுதிற்குத் தூதாகி என்னைக் கொல்லும் படையாகவும் வருகின்றது. 

சாலமன் பாப்பையா விளக்க உரை - முன்பு இனிதாய் ஒலித்த ஆயனின் புல்லாங்குழல் இப்போது நெருப்பாய்ச் சுடும் மாலைப் பொழுதிற்கு் தூதானது மட்டும் அன்றி, என்னைக் கொல்லும் ஆயுதமுமாகிவிட்டது. 

கலைஞர் விளக்க உரை - காதலர் பிரிவால் என்னைத் தணலாகச் சுடுகின்ற மாலைப்பொழுதை அறிவிக்கும் தூதாக வருவது போல வரும் ஆயனின் புல்லாங்குழலோசை என்னைக் கொல்லும் படைக்கருவியின் ஓசைபோல் அல்லவா காதில் ஒலிக்கிறது 

குறள் 1229                                                       

பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு 
மாலை படர்தரும் போழ்து 

மு.வ விளக்க உரை - அறிவு மயங்கும்படியாக மாலைப்பொழுது வந்து படரும்போது, இந்த ஊரும் மயங்கி என்னைப் போல் துன்பத்தால் வருந்தும். 

சாலமன் பாப்பையா விளக்க உரை - இதற்கு முன்பு நான் மட்டும்தான் மயங்கித் துன்புற்றேன்; இனிப் பார்த்தவர் எல்லாம் மதி மயங்கும்படி மாலைப் பொழுது வரும்போது இந்த ஊரே மயங்கித் துன்பப்படும். 

கலைஞர் விளக்க உரை - என் அறிவை மயக்கும் மாலைப் பொழுது, இந்த ஊரையே மயக்கித் துன்பத்தில் ஆழ்த்துவது போல் எனக்குத் தோன்றுகிறது 

குறள் 1230                                                       

பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை 
மாயுமென் மாயா உயிர் 


மு.வ விளக்க உரை - ( பிரிவுத் துன்பத்தால்) மாயமாய் நின்ற என் உயிர், பொருள் காரணமாகப் பிரிந்து சென்ற காதலரை நினைந்து மயங்குகின்ற இம் மாலைப்பொழுதில் மாய்கின்றது. 

சாலமன் பாப்பையா விளக்க உரை - அவர் என்னைப் பிரிந்தபோது பொறுத்துக் கொண்ட என் உயிர், பொருள் மயக்கமே பெரிதாக உடைய அவரை நினைத்து மயங்கும் இந்த மாலைப் பொழுதில் மடிகின்றது. 

கலைஞர் விளக்க உரை - பொருள் ஈட்டுவதற்கச் சென்றுள்ள காதலரை எண்ணி மாய்ந்து போகாத என்னுயிர், மயக்கும் இந்த மாலைப் பொழுதில் மாய்ந்து போகின்றது

நன்றி

Post a Comment

0 Comments