திருக்குறள் அதிகாரம் 76 - பொருள் செயல்வகை - PORUL SEYALVAKAI


பொருள் செயல்வகை 


திருக்குறள் அதிகாரம் 76 - பொருள் செயல்வகை - PORUL SEYALVAKAI


குறள் 751  

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் 
பொருளல்ல தில்லை பொருள் 

மு.வ விளக்க உரை - ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும், மதிப்புடையவராகச் செய்வதாகிய பொருள் அல்லாமல் சிறப்புடைய பொருள் வேறு இல்லை.  

சாலமன் பாப்பையா விளக்க உரை - தகுதி அற்றவரையும்கூடத் தகுதி உடையவராக ஆக்கிவிடும் தகுதி உடையது, பணமே அன்றி வேறொன்றும் இல்லை. 

கலைஞர் விளக்க உரை - மதிக்கத் தகாதவர்களையும் மதிக்கக்கூடிய அளவுக்கு உயர்த்திவிடுவது அவர்களிடம் குவிந்துள்ள பணத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை.  

குறள் 752  

இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை 
எல்லாரும் செய்வர் சிறப்பு 

மு.வ விளக்க உரை - பொருள் இல்லாதவரை (வேறு நன்மை உடையவராக இருந்தாலும்) எல்லாரும் இகழ்வார், செல்வரை (வேறு நன்மை இல்லாவிட்டாலும்) எல்லாரும் சிறப்பு செய்வர்.  

சாலமன் பாப்பையா விளக்க உரை - பணம் இல்லாதவரை எல்லாரும் இகழ்வர். செல்வரையோ எல்லாரும் பெருமைப்படுத்துவர். 

கலைஞர் விளக்க உரை - பொருள் உள்ளவர்களைப் புகழ்ந்து போற்றுவதும் இல்லாதவர்களை இகழ்ந்து தூற்றுவதும்தான் இந்த உலக நடப்பாக உள்ளது. 

குறள் 753  

பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும் 
எண்ணிய தேயத்துச் சென்று 

மு.வ விளக்க உரை - பொருள் என்று சொல்லப்படுகின்ற நந்தா விளக்கு, நினைத்த இடத்திற்குச் சென்று உள்ள இடையூற்றைக் கெடுக்கும் 

சாலமன் பாப்பையா விளக்க உரை - பணம் எனப்படும் அணையா விளக்கு அயல்நாட்டிற்குள்ளும் சென்று பகையாகிய இருளைப் போக்கும். 

கலைஞர் விளக்க உரை - பொருள் என்னும் அணையா விளக்கு மட்டும் கையில் இருந்துவிட்டால் நினைத்த இடத்துக்குச் சென்று இருள் என்னும் துன்பத்தைத் துரத்தி விட முடிகிறது. 

குறள் 754  

அறனீனும் இன்பமும் ஈனும் திறனறிந்து 
தீதின்றி வந்த பொருள் 

மு.வ விளக்க உரை - சேர்க்கும் திறம் அறிந்து தீமை ஒன்றும் இல்லாமல், சேர்க்கப் பட்டுவந்த பொருள் ஒருவனுக்கு அறத்தையும் கொடுக்கும் இன்பத்தையும் கொடுக்கும். 

சாலமன் பாப்பையா விளக்க உரை - நேரிய வழிகை அறிந்து, தீமை ஏதும் செய்யாமல் சம்பாதிக்கப்பட்ட பணம் அறத்தையும் தரம்; இன்பத்தையும் தரும். 

கலைஞர் விளக்க உரை - தீய வழியை மேற்கொண்டு திரட்டப்படாத செல்வம்தான் ஒருவருக்கு அறநெறியை எடுத்துக்காட்டி, அவருக்கு இன்பத்தையும் தரும். 

குறள் 755  

அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம் 
புல்லார் புரள விடல் 

மு.வ விளக்க உரை - அருளோடும், அன்போடும் பொருந்தாத வழிகளில் வந்த செல்வத்தின் ஆக்கத்தைப் பெற்று மகிழாமல் அதைத் தீமையானது என்று நீக்கிவிட வேண்டும். 

சாலமன் பாப்பையா விளக்க உரை - பிறர்மீது இரக்கமும் அன்பும் இல்லாமல் சேர்க்கும் பணச் சேமிப்பை ஏற்காது விட்டு விடுக 

கலைஞர் விளக்க உரை - பெரும் செல்வமாக இருப்பினும் அது அருள் நெறியிலோ அன்பு வழியிலோ வராதபோது அதனைப் புறக்கணித்துவிட வேண்டும்.

குறள் 756  

உறுபொருளும் உல்கு பொருளுந்தன் ஒன்னார்த் 
தெறுபொருளும் வேந்தன் பொருள் 

மு.வ விளக்க உரை - இறையாக வந்து சேரும் பொருளும், சுங்கமாகக் கொள்ளும் பொருளும், தன் பகைவரை வென்று திறமையாகக் கொள்ளும் பொருளும் அரசனுடைய பொருள்களாகும். 

சாலமன் பாப்பையா விளக்க உரை - வாரிசுதாரர் இல்லாமல் வந்த பொருள் வெளிநாட்டு பொருட்களுக்கு விதிக்கப்படும் வரி தன் பகைவர் தனக்குக் கட்டும் கப்பம் என்னும் இவை எல்லாம் அரசிற்கு உரிய பொருள்களாம். 

கலைஞர் விளக்க உரை - வரியும், சுங்கமும், வெற்றி கொள்ளப்பட்ட பகை நாடு செலுத்தும் கப்பமும் அரசுக்குரிய பொருளாகும். 

குறள் 757  

அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும் 
செல்வச் செவிலியால் உண்டு 

மு.வ விளக்க உரை - அன்பினால் பெறப்பட்ட அருள் என்றுக் கூறப்படும் குழந்தை, பொருள் என்றுக் கூறப்படும் செல்வமுள்ள செவிலித் தாயால் வளர்வதாகும். 

சாலமன் பாப்பையா விளக்க உரை - அன்பு பெற்றெடுத்த அருள் என்னும் குழந்தை, பொருள் எனப்படும் இன்பம் தரும் வளர்ப்புத் தாயால் வளரும். 

கலைஞர் விளக்க உரை - அன்பு என்கிற அன்னை பெற்றெடுக்கும் அருள் என்கிற குழந்தை, பொருள் என்கிற செவிலித் தாயால் வளரக் கூடியதாகும். 

குறள் 758  

குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன் 
றுண்டாகச் செய்வான் வினை 

மு.வ விளக்க உரை - தன் கைப்பொருள் ஒன்று தன்னிடம் இருக்க அதைக் கொண்டு ஒருவன் செயல் செய்தால், மலையின் மேல் ஏறி யானைப் போரைக் கண்டாற் போன்றது. 

சாலமன் பாப்பையா விளக்க உரை - தன் கையிலே பணம் இருக்க ஒரு செயலைச் செய்யத் தொடங்குவது, ஒருவன் மலை மேல் ஏறி நின்று யானைச் சண்டையைக் கண்டது போலாம். 

கலைஞர் விளக்க உரை - தன் கைப்பொருளைக்கொண்டு ஒரு தொழில் செய்வது என்பது யானைகள் ஒன்றோடொன்று போரிடும் போது இடையில் சிக்கிக் கொள்ளாமல் அந்தப் போரை ஒரு குன்றின் மீது நின்று காண்பதைப் போன்று இலகுவானது. 

குறள் 759  

செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும் 
எஃதனிற் கூரிய தில் 

மு.வ விளக்க உரை - ஒருவன் பொருளை ஈட்டவேண்டும், அவனுடைய பகைவரின் செருக்கைக் கெடுக்க வல்ல வாள் அதைவிடக் கூர்மையானது வேறு இல்லை. 

சாலமன் பாப்பையா விளக்க உரை - எதையும் சாதிக்க எண்ணுவோர் பணத்தைச் சம்பாதியுங்கள்; பகைவரின் அகங்காரத்தை அறுக்கும் கூரிய ஆயுதம், பணத்தைவிட வேறு இல்லை. 

கலைஞர் விளக்க உரை - பகைவரின் செருக்கை அழிக்கும் தகுதியான கருவி பொருளைத் தவிர வேறொன்றும் இல்லாததால் அதனைச் சேமிக்க வேண்டியுள்ளது. 

குறள் 760  

ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க் கெண்பொருள் 
ஏனை இரண்டும் ஒருங்கு 

மு.வ விளக்க உரை - சிறந்ததாகிய பொருளை மிகுதியாக ஈட்டியவர்க்கு, மற்ற அறமும் இன்பமுமாகிய இரண்டும் ஒரு சேரக்கைகூடும் எளிய பொருளாகும். 

சாலமன் பாப்பையா விளக்க உரை - நல்ல வழியில் மிகுதியாகப் பணம் சேர்த்தவர்க்கு மற்ற அறமும் இன்பமும் எளிதாக் கிடைக்கும் பொருள்களாகும். 

கலைஞர் விளக்க உரை - அறம் பொருள் இன்பம் எனும் மூன்றினுள் பொருந்தும் வழியில் பொருளை மிகுதியாக ஈட்டியவர்களுக்கு ஏனைய இரண்டும் ஒன்றாகவே எளிதில் வந்து சேரும். 

நன்றி

Post a Comment

0 Comments