இராமாயணம் பகுதி - 89
இந்திரஜித் மாண்டச் செய்தியை இராவணனிடம் கூறினால் நம்மை கொன்று விடுவானோ என அஞ்சி தூதர்கள் சொல்ல பயந்தனர். தேவர்களும், அரக்கர்களும் பயந்து ஓடி ஒளிந்தனர். கடைசியில் அரக்கன் ஒருவன் மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு இராவணனிடம் செல்லச் சென்றான். அவன் இராவணன் முன் கை கால்கள் நடுங்க நின்றான். அசுர குலத்தின் வேந்தனே! இளவரசர் இந்திரஜித் போரில் இலட்சுமணனால் மாண்டார் எனக் கூறினான். இதைக்கேட்டு இராவணன் கோபங்கொண்டு அவன் தலையை வெட்டி வீசினான். இந்திரனையே வென்ற இந்திரஜித்தை இலட்சுமணன் கொன்றுவிட்டான் என்பதை நினைத்து மிகவும் கோபங்கொண்டான். உடனே இராவணன் போர்க்களத்திற்குச் சென்று இந்திரஜித்தின் உடலைக் கண்டு கதறி அழுதான்.
என் செல்வமே! எனக்கு முன் நீ மாண்டாயே! உன் ஆற்றல் மேரு மலையை போன்றது. நீ எனக்குச் செய்ய வேண்டிய ஈமச்சடங்குகளை, நான் உனக்கு செய்யும் படி விதி செய்துவிட்டதே. நீ இறந்த செய்தியை அறிந்து இந்திரன் முதலான தேவர்கள் மகிழ்ந்திருப்பார்களே! நீ இன்றி இனி நான் என்ன செய்யப் போகிறேன் என தலையில் அடித்துக் கொண்டு மிகவும் புலம்பி கதறி அழுதான். அப்போது அவன், இந்திரஜித் வில்லோடு அறுப்பட்ட கையைக் கண்டு ஆறாத் துயரம் அடைந்தான். இராவணன், இந்திரஜித்தை அரண்மனைக்குச் கொண்டு சென்று பஞ்சு மெத்தையில் படுக்க வைத்து அழுதான். இந்திரஜித் இறந்த செய்தி மண்டோதரிக்கு தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்டு மகனே! மகனே! என அலறிக் கொண்டு இந்திரஜித் காலடியில் வந்து வீழ்ந்தாள்.
என் அன்பு செல்வமே! என் ஆருயிரே! இனி உன்னை நான் என்று காண்பேன்! எவரும் வெல்ல முடியாத வலிமை உன்னிடம் இருந்தததே! நீ சிறு வயதில் அரண்மனைக்கு சிங்க குரளைக் கொண்டு அவற்றிற்கு சினமூட்டி விளையாடி மகிழ்வாயே. அது போன்ற காட்சியே இனிமேல் நான் எப்போது காணப் போகிறேன். உனக்கு நேர்ந்த இந்த நிலைமை தானே, நாளை உன் தந்தைக்கும் உண்டாகும் எனக் கூறி புலம்பி அழுதாள். இந்திஜித்தின் மனைவிமார்களும், இந்திரஜித்தைக் கண்டு கதறி அழுதனர். இலங்கையில் உள்ள அரக்கர்கள் அனைவரும் இந்திரஜித் மாண்ட செய்தியை அறிந்து கதறி அழுதனர். இராவணன் இவற்றை எல்லாம் கண்டு மிகவும் கோபம் கொண்டான். உடனே அவன் இவ்வளவு துன்பத்திற்கும் காரணம் சீதை தான். நான் இப்பொழுதே சீதையை வெட்டி வீழ்த்துகிறேன் எனக் கூறிக் வாளை உருவிக் கொண்டு அசோக வனத்தை நோக்கிச் சென்றான்.
இராவணனை தடுக்க மந்திரிமார்களும், இராவணனின் மனைவிமார்களும் எவ்வளவோ முயற்சித்தும் முடியாமல் போயிற்று. அப்போது மகோதரன் இராவணனை தடுத்து, அரசே! சற்று பொறுமையாக இருங்கள். அவரப்பட்டு அந்நியாய செயலை செய்து விடாதீர்கள். ஒரு பெண்ணை கொல்வது வீரனுக்கு அழகல்ல. அவ்வாறு தாங்கள் கொன்றாலும் தேவர்கள் முதலானோர் தங்களை பார்த்து கைக்கொட்டி சிரிப்பார்கள். நீங்கள் சீதையை அடைவது தான் நல்லது. தங்களுக்கு கோபமும், ஆத்திரமும் வந்தால் அதை இராம இலட்சுமணன் மேல் காட்டுங்கள். சீதையை கொன்றுவிட்டு நாளை போரில் இராமனையும், இலட்சுமணனையும் வெல்வதில் என்ன பயன் உள்ளது? அதனால் தாங்கள் பொறுமையாக இருக்க வேண்டும் என ஆறுதல் கூறினான்.
மகோதரன் கூறியதைக் கேட்டு இராவணன் திரும்பிச் சென்றான். இராவணன் தன் ஏவலாட்களிடம் உலகில் உள்ள அரக்கர்கள் அனைவரும் இங்கு வர வேண்டும் என கட்டளையிட்டான். இராவணனின் கட்டளைப்படி உலகில் உள்ள அரக்கர்கள் இலங்கையை வந்தடைந்தனர். இராவணனின் தூதர்கள், இராவணனுக்கு படைகளை அறிமுகம் செய்தனர். இவர்கள் சாகத் தீவினர், இவர்கள் குசைத் தீவினர் என அங்கு வந்த ஆயிரம் ஆயிரம் படைகளை அறிமுகம் செய்தான். இவர்கள் அனைவரும் மேரு மலையை தூள்தூளாக்குவர். இவர்களால் முடியாத செயல் என்பது எதுவும் கிடையாது என்றனர். பிறகு இராவணன் அங்கிருந்துச் சென்று அரண்மனையின் கோபுரத்தின் மேல் நின்று அரக்கர்களின் எண்ணிக்கையை பார்த்தான்.
அதன் பின் இராவணன் படைத்தலைவர்களை அழைத்து, இப்போர் ஏற்பட்டதற்கான காரணத்தை விவரமாக கூறினான். அவனுக்கு சீதை மீது ஏற்பட்ட காதலை பற்றியும் கூறினான். அதற்கு அப்படைத்தலைவர்கள், மனிதர்களிடமும், வானரங்களிடமும் போரிடவா எங்களை அழைத்தீர்கள் என்றனர். அப்பொழுது வன்னி என்னும் தலைவன். அந்த மனிதர்கள் யார்? உங்களை காட்டிலும் அவர்கள் வலிமையானவர்களா? எனக் கேட்டான். அப்போது மாலியவான் அவர்களிடம், அவர்கள் வானரங்கள் என்று அலட்சியம் செய்யாதீர்கள். அவர்களில் ஒருவன் இங்கு வந்து அசோக வனத்தை அழித்து, இலங்கை நகரையும் தீமூட்டிவிட்டு சென்றுவிட்டான். அது மட்டுமின்றி பிரம்மாஸ்திரத்தால் வீழ்ந்தவர்களை சிறு பொழுதில் சஞ்சீவி மலையைக் கொண்டு வந்து அவர்களை உயிர்பித்துவிட்டான்.
இராமன் திருபாற்கடலை கடைந்த வாலியைக் கொன்றவன் என்றான். இதிலிருந்து ஒரே வழி சீதையை விடுவிப்பது தான் என்றான். ஆனால் அதற்கு வன்னி என்பவன், அரசனின் தம்பிமார்களும், மகன்களும் மாண்டபின் சீதையை விடுவிப்பது தவறு. எதிரிகளை வென்று காண்பிப்பது தான் சிறந்தது என்றான். பிறகு அவன் இராவணனைப் பார்த்து, வேந்தனே! இவ்வளவு நடந்த போதிலும் தாங்கள் ஏன் போருக்குச் செல்லவில்லை எனக் கேட்டேன். அதற்கு இராவணன் முதல் நாள் போரில் தோற்றதைக் கூறாமல், எனக்கு மனிதர்கள் மீதும், குரங்குகள் மீதும் போர் செய்ய கேவலமாக இருந்தது என்றான். பிறகு படைத் தலைவர்கள், நாங்கள் செல்கிறோம். இன்றுடன் போர் முடிந்துவிட்டது என எண்ணிக் கொள்ளுங்கள் எனக் கூறிவிட்டு சென்றனர்.
போருக்குச் செல்ல படைகள் தாயாராயின. அந்தப் படைகள் மூலப்படை, கூலிப்படை, நாட்டுப்படை, காட்டுப்படை, துணைப்படை, பகைப்படை. இவற்றில் மூலப்படையே தொன்மையானது என அவர்கள் நாங்களே செல்கிறோம் எனக் கூறிவிட்டுச் சென்றனர். மூலப்படையைக் கண்ட வானரங்கள் பயந்து ஓடி ஒளிந்தனர். நீலனும், அங்கதனும் வானரங்களை தடுத்து நிறுத்தி யாரும் பயப்பட வேண்டாம் எனக் கூறினர். அதற்கு வானரங்கள், அங்கே பாருங்கள்! அங்கு வருபவர்கள் எல்லாம் அசுர சேனைகள். உலகத்தை அழிக்கும் ஆற்றல் படைத்தவர்கள். இவர்களுடன் போர் புரிய ஆயிரம் இராமர் வந்தாலும், இலட்சுமணன் வந்தாலும் முடியாது. நாம் உயிர் வாழ்வதற்கு மலைகளும், குகைகளும் உள்ளது. பசியாற காய், கனிகள் இருக்கிறது எங்களுக்கு அது போதும் என நடுநடுங்கக் கூறினார்கள்.
தொடரும்.....
0 Comments