இராமாயணம் பகுதி - 86
ஜாம்பவான், அனுமனே! உடனே வேகமாக சென்றுச் சூரியன் உதிப்பதற்கு முன் மருந்து மலையைக் கொண்டு வர வேண்டும் என்று அனுமனிடம் வேண்டிக் கூறினான். உடனே அனுமன் தன் பெரிய உருவத்தை எடுத்து, நிலத்தில் காலை ஊன்றி வானுயர பறந்தான். (வேகமாக பறப்பதில் அனுமனுக்கு நிகர் எவரும் இல்லை. இருப்பினும் தான் பறந்த வேகத்தை பார்த்து அனுமனுக்கே ஆச்சரியம்தான். தன்னால் இவ்வளவு விரைவாக பறக்க முடியுமா என்று? தான் வணங்கி வழிபடும் இராமரின், உடன்பிறப்பு அல்லவா அங்கு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறது. அதை அனுமனின் அங்கங்களும் உணர்ந்திருக்க வேண்டும். அதனால்தான் பறப்பதில் இவ்வளவு வேகம்). அனுமன், ஜாம்பவான் கூறிய வழியில் சென்று இமயமலையை அடைந்தான். அங்கே கயிலை மலையில் உமை அம்மையுடன் சிவனைக் கண்டு கண்ணுதற்குரிய கடவுளாக, எண்ணுதற்கரிய புண்ணியமென்று வணங்கி அவரது அருளைப் பெற்றான்.
பிறகு ஏம கூட மலையையும், நிடத மலையையும் கடந்துச் சென்றான். இவற்றையெல்லாம் கடந்து மேரு மலையை அடைந்தான். அங்கு பிரம்மதேவனையும், இலட்சுமி தேவியுடன் வீற்றிருக்கின்ற விஷ;ணு மூர்த்தியைக் கண்டு வியந்து பயபக்தியுடன் பணிந்தார். ஆயிரம் ஆதித்தர்கள் ஒருங்கே உதித்தது போன்ற பேரொளிப் பிழம்பாக விளங்கும் சதாசிவ மூர்த்தியையும் மனோன்மணி அம்மையையும் கண்டு பிறவியின் பேறாக எண்ணி, ஆறாகக் கண்ணீர் வடித்து அஞ்சலி செய்தான். பிறகு இந்திரபகவானை வணங்கி தொழுதான். எண்திசைக் காவலரைக் கண்டு கைகூப்பினார். இவர்களின் ஆசியைப் பெற்ற அனுமன், உத்தர குரு என்ற புண்ணிய பூமியை அடைந்தான். அங்கே ஆதித்தனைக் கண்டார்.
அங்கு இளமை மாறாது உயிரும் உடலும்போல ஒன்றுபட்டு வாழ்கின்ற புண்ணிய ஆத்மாக்களைக் கண்டான். பிறகு அங்கிருந்து நீலகிரி மலையை அடைந்து, அதற்கடுத்துள்ள சஞ்சீவி மலை என்னும் மருந்து மலையை அடைந்தான். அதனைக் காக்கின்ற தெய்வங்கள், அனுமனை பார்த்து, நீ யார்? நீ இங்கு வந்ததற்கான காரணம் என்ன? எனக் கேட்டன. அனுமன், தெய்வங்களே! நான் வாயு குமாரன், அனுமன். நான் இராமரின் தூதன். போரில் மாண்ட இராம பக்தர்களை உயிர்ப்பிக்க மருந்து கொண்டு செல்ல வந்தேன் என்று கூறினான். அத்தெய்வங்கள், நீ வேண்டிய மருந்துகளை கொண்டு சென்று, மீண்டும் இங்குக் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்று கூறி மறைந்தன. அதன் பிறகு, திருமாலின் சக்கரத்தாழ்வார் வந்து காட்சி தந்து கருணை காட்டி மறைந்தார். பிறகு அனுமன், ஜாம்பவான் கூறிய மருந்துகளைப் பிரித்தெடுப்பது அரிதான செயல் என எண்ணினான்.
ஜாம்பவான் கூறிய மருந்தின் விவரம் :
சஞ்சீவ கரணி - இறந்தவர்களை உயிர் பிழைக்க செய்யும் மருந்து
சந்தான கரணி - உடல் பல துண்டுகளாகப் பிளவு பட்டுப் போயிருந்தால் அதனை ஒட்ட வைக்கும் மருந்து
சல்லிய கரணி - உடலில் பாய்ந்த படைக்கருவிகளை வெளியே எடுக்கும் மருந்து
சமனி கரணி - சிதைந்து போன உருவத்தை மீண்டும் பழையபடியே பெறுவதற்கான மருந்து
அனுமன், இங்கேயே நின்றுக் கொண்டு மருந்து பற்றி யோசித்துக் கொண்டிருந்தால் கால தாமதம் ஆகிவிடும் என நினைத்தான். பிறகு அனுமன் சஞ்ஜீவி மலையை வேரோடு பெயர்த்து எடுத்துத் தன் ஒரு கையில் வைத்துக் கொண்டு வான வழியில் இலங்கை நோக்கிப் புறப்பட்டான்.
அனுமன் சஞ்சீவி மலையை தேடிச் சென்ற பிறகு ஜாம்பவானும், விபீஷணனும் இராமரை காண விரைந்து வந்தனர். இருவரும் இராமரின் நிலைமையைக் கண்டு வருந்தினர். பிறகு இவர்கள் இராமரின் திருவடிகளை தொட்டு வணங்கினர். இதனால் இராமர் உணர்ச்சி பெற்று கண்களை மெதுவாக விழித்தார். இராமர், தன் முன் கண்ணீருடன் நிற்கும் விபீஷணனையும், ஜாம்பவானையும் பார்த்தார். இராமர் விபீஷணனை பார்த்து, விபீஷணா! நீ உணவு கொண்டுவர சென்றதால் நீ பிரம்மாஸ்திரத்தில் இருந்து தப்பித்தாய். ஜாம்பவானை பார்த்து, நீ சாகா வரம் பெற்றதால் உயிர் பிழைத்தாய் என்றார். பிறகு இராமர், இலட்சுமணனின் நிலையையும், நம் வானரப்படையின் நிலையையும் பார்த்தாயா? இதற்கு மேல் நான் இராவணனை வெல்வதில் என்ன பயன்? என் தம்பியை இழந்த பின் நான் வெற்றி காண்பதில் என்ன பயன் இருக்கிறது.
இலட்சுமணன், இந்திரஜித் மீது பிரம்மாஸ்திரத்தை ஏவுகிறேன் எனக் கூறினான். ஆனால் நான் பிரம்மாஸ்திரத்தை ஏவ வேண்டாம் எனக் கூறி விட்டுச் சென்றேனே. அந்த பிரம்மாஸ்திரத்தால் என் தம்பிக்கு ஆபத்து வரும் என நான் நினைக்கவில்லை. நான் என் தம்பியின் பக்கத்தில் இருந்திருந்தால் பிரம்மாஸ்திரத்தில் இருந்து காப்பாற்றியிருப்பேன். என் தம்பியை இழந்த பின் நான் உயிர் வாழ்வதில் என்ன பயன்? நான் என் உயிரை துறப்பது தான் உத்தமம் என்றார். இதைக் கேட்ட ஜாம்பவான், பெருமானே! தங்களிடம் நான் ஒன்று சொல்ல வேண்டும். உலகை காத்தருளும் நீங்கள் இவ்வாறு பேசுதல் கூடாது. இந்த நேரத்தில் தாங்கள் மனம் தளராமல் தைரியமுடன் செயல்பட வேண்டும். நான் அனுமனிடம் வடக்கே சஞ்சீவி மலைக்குச் சென்று இறந்தவர்களை உயிர்பிக்கும் மருந்தை கொண்டு வரச் சொல்லிருக்கிறேன்.
அனுமன் இன்னும் சிறிது நேரத்தில் இங்கு வந்து விடுவான் தாங்கள் கவலைக் கொள்ள வேண்டாம் என்றான். இப்படி ஜாம்பவான் சொல்லிக் கொண்டு இருக்கும் போது அனுமன், வடக்கிலிருந்து கடும் வேகத்துடன் வந்துக் கொண்டு இருந்தான். இந்த வேகத்தினால் பூமியே நடுநடுங்கிப் போனது. அனுமனை கண்ட ஜாம்பவான், அனுமன் வந்துவிட்டான்! அனுமன் வந்துவிட்டான்! என மகிழ்ச்சியில் கத்தினான். அனுமன் ஒரு பறவை வருவது போல் வந்து மெதுவாக நிலத்தில் இறங்கினான். ஆனால் சஞ்சீவி மலை அரக்கர்கள் உள்ள இடத்திற்கு வர மறுத்ததால், அனுமன் மலையை வானத்தில் நிற்க வைத்து விட்டு வந்தான். சஞ்சீவி மலையின் காற்று வந்து பட்டதால், பிரம்மாஸ்த்திரத்தால் வீழ்ந்தவர்கள் புத்துயிர் பெற்று எழுவது போல் பெரும் வலிமையுடன் எழுந்தனர்.
(ஆனால் இராவணனின் கட்டளைப்படி அரக்கர்கள் கடலில் வீசப்பட்டதால் அவர்கள் உயிர் பெற்று எழ வாய்ப்பில்லாமல் போனது.) இராமர், உயிர் பெற்று எழுந்த இலட்சுமணனை ஆனந்த கண்ணீருடன் அன்போடு தழுவிக் கொண்டார். பிறகு இராம இலட்சுமணர், அனுமனை பார்த்து, அனுமனே! தசரத குமாரர்களான நாங்கள் மாண்டு இருப்போம். இப்பொழுது உன்னால் திரும்பவும் உயிர் பெற்று எழுந்துள்ளோம். எங்களுக்கு உயிர் கொடுத்த மாவீரனே! உன் புகழ் என்றென்றும் வாழ்க என வாழ்த்தினர். அனுமன் ஒன்றும் பேசாமல் அடக்கத்தோடு இராமரை வணங்கினான்.
தொடரும்.....
0 Comments