இராமாயணம் பகுதி - 85 - RAMAYANAM PART - 85


இராமாயணம் பகுதி - 85


இராமாயணம் பகுதி - 85 - RAMAYANAM PART - 85

சீதை, பெருமானே! தங்களுக்கு என்னால் தான் இந்த துன்பம் நேர்ந்ததே. கண் இமைக்காமல் என்னை காத்த இலட்சுமணா! அண்ணன் இறக்கும் முன் நான் என் உயிரை விடுவேன் என உன் அன்னை சுமித்திரையிடம் கூறினாயே. அதுபோல் இன்று செய்து விட்டாயே. கடலை கடந்து வந்து என்னைக் கண்டு சென்ற அனுமனே! உனக்கு இந்நிலைமை நேர்ந்துவிட்டதே எனக் கூறி கதறி அழுதாள். பெருமானே! நான் தீராப் பழிக்கு ஆளாகிவிட்டேன். இனி என்னை காக்க யார் இருக்கிறார்கள் எனக் கூறிக் கொண்டு கீழே விழ முயன்றாள். அப்பொழுது திரிசடை சீதையை தடுத்தாள். பிறகு சீதையை அன்போடு தழுவிக் கொண்டாள். அம்மா சீதை! இதெல்லாம் மாயை. மாய மானை அனுப்பியதும், உன் தந்தை போல் மாய ஜனகரை உன் முன் கொண்டு வந்து நிறுத்தியதும் அரக்கர்கள் செய்த மாய வேலை என்பதை நினைவில் கொள்வாயாக.

அங்கு வீழ்ந்து இருக்கும் உன் கணவனை பார்! இராமனின் உடலில் அம்பு பட்ட இடமும் தெரியவில்லை. இரத்த காயங்களும் தெரியவில்லை. அதுமட்டுமில்லாமல் இங்கு ஒரு அரக்கர்கள் கூட தென்படவில்லை. இது எல்லாம் அரக்கர்களின் மாய செயல் என்பதை உணர்வாயாக. நான் கண்ட கனவு பொய்யாகாது. உனக்கு நேர்ந்த நல்ல நிமித்தங்களையும் நினைத்துப் பார். நிச்சயம் தர்மம் தலைத்தோங்கும். பாவச்செயல்கள் செய்யும் அரக்கர்களின் நிலைமை நிச்சயம் ஒரு முடிவுக்கு வரும். நீ அழாதே என ஆறுதல் கூறினாள். பிறகு திரிசடை, சீதா! முன்பு நாகப்பாசத்தால் கட்டுண்டவர்கள் விடுபட்டு ஆரவாரம் செய்த ஒலி உனக்கு கேட்டது அல்லவா? நிச்சயம் இவர்கள் திரும்பி வருவார்கள். இராமர் இறந்திருந்தால் இந்த ஏழு உலகங்களும் அழித்திருக்கும். 

நீ சிரஞ்சீவியாக இருக்க வேண்டும் என அனுமனுக்கு கொடுத்த வரம் பொய்யாகாது. உன் கற்பின் திறனுக்கும் அழிவு வராது. பிரம்மாஸ்திரத்தால் வீழ்ந்து கிடப்பவர்கள் நிச்சயம் உயிர் பெறுவார்கள். நீ உன் மனதை தெளிவுப்படுத்திக்கொள் என ஆறுதல் கூறினாள். சீதை, திரிசடை தாயே! இதுவரை தாங்கள் சொன்ன எதுவும் பொய்யாகவில்லை. தக்க சமயத்தில் தாங்கள் எனக்கு அறிவுரை கூறியுள்ளீர்கள். தாங்கள் கூறிய வார்த்தைகளை தெய்வமாக நினைத்து, நான் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்றாள். நிச்சயம் எம்பெருமான் என்னை வந்து காப்பார் எனக் கூறினாள். பிறகு அரக்கியர்கள் புஷ;பக விமானத்தை மீண்டும் அசோக வனத்திற்கே கொண்டு சென்று சீதையைக் காவலில் வைத்தனர். 

இராமரின் கட்டளைப்படி உணவு சேகரிக்க சென்ற விபீஷணன் போர்க்களத்திற்கு வந்தான். போர்க்களத்தில் பிரம்மாஸ்திரத்தால் வீழ்ந்து கிடக்கும் வானர வீரங்களை கண்டு அதிர்ச்சி அடைந்தான். அங்கதன், சுக்ரீவன் முதலான வானர வீரர்கள் வீழ்ந்துக் கிடப்பதைக் கண்டு மிகவும் கவலை அடைந்தான். பிறகு விபீஷணன், இராமன் மயங்கி கிடப்பதைக் கண்டு அவனது கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. என்ன செய்வதென்று தெரியாமல் சிறிது நேரம் குழம்பி இருந்தான். விபீஷணன், இராமரை உற்றுப் பார்த்தபோது இராமரின் உடலில் எந்த அம்பும் துளைக்கவில்லை என்பதைக் கண்டுகொண்டான்.

விபீஷணன் பிரம்மாஸ்திரத்தால் மாளாதவர் எவரேனும் உள்ளார்களா எனச் சுற்றியும் பார்த்தான். உடனே அவனின் கண்களில் அனுமன் தென்பட்டான். அனுமன் அருகில் சென்று, அவன் மேல் பட்டிருந்த அம்புகளை தூக்கி எறிந்தான். பிறகு தண்ணீரைக் கொண்டு அனுமனின் முகத்தில் தெளித்தான். அனுமன் இராம இராம என சொல்லிக் கொண்டு எழுந்தான். விபீஷணனை பார்த்த அனுமன் மகிழ்ச்சியில் கட்டி தழுவிக் கொண்டான். பிறகு அனுமன், விபீஷணா! இராமர் எங்கே இருக்கிறார்? எப்படி இருக்கிறார்? எனக் கேட்டான். விபீஷணன், இலட்சுமணனின் நிலைமையை கண்ட இராமர் அழுது தோய்ந்து மயக்கத்தில் உள்ளார் எனக் கூறினான். பிறகு இருவரும் இராம இலட்சுமணரும் மற்றும் மற்ற வானர வீரர்களும் இந்த இடர்ப்பாட்டில் இருந்து மீள்வதற்கு ஏதேனும் வழி உள்ளதா என யோசித்தனர்.

அனுமனுக்கு உடனே ஜாம்பவான் ஞாபகம் வந்தது. உடனே விபீஷணனிடம் ஜாம்பவான் எங்கே? அவனுக்கு இறப்பு என்பது கிடையாது. அவன் நமக்கு ஏதேனும் நல்ல வழியை காட்டுவான் என்றான். பிறகு இருவரும் ஜாம்பவானை தேடினர். ஜாம்பவான், உடலெங்கும் அம்புகள் துளைத்ததால் மிகுந்த துன்பத்துடனும், சோர்வைடைந்த உணர்விலும், கண்கள் மங்கிய நிலையில் மயக்கத்தில் இருந்த ஜாம்பவானை கண்டனர். தன்னை நோக்கி யாரோ வருவதை உணர்ந்த ஜாம்பவான், வருவது யார்? என்னை காக்க வந்த இராமனா? இல்லை இலட்சுமணனா? அல்லது அனுமனா? இல்லை விபீஷணனா? என எண்ணினான். ஜாம்பவானை பார்த்த விபீஷணன் மகிழ்ச்சியில் கண்டுவிட்டேன்! கண்டுவிட்டேன்! எனக் கத்தினான். 

குரலைக் கேட்டு வந்திருப்பது விபீஷணன் என்பதை அறிந்து கொண்டான், ஜாம்பவான். பிறகு அருகில் இருப்பவன் யார்? என்பதை அறியாமல், நீங்கள் யார்? எனக் கேட்டான். அனுமன், நான் அடியேன் அனுமன் வந்திருக்கிறேன் என்றான். இதைக்கேட்ட ஜாம்பவான் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தான். நாம் இறக்கவில்லை, பிழைத்துக் கொண்டோம் என மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தான். பிறகு ஜாம்பவான் இராம இலட்சுமணர், வானரங்களின் நிலைமை கேட்டு அறிந்துக் கொண்டான். இதைக் கேட்ட ஜாம்பவான், இவர்கள் அனைவரும் பிழைக்க வைக்க அனுமன் ஒருவனால் மட்டுமே முடியும் என்றான். அனுமனே! நீ உடனே சஞ்சீவி மலைக்குச் சென்று சாவா மருந்தைக் கொண்டு வந்தால் இங்கு உள்ள அனைவரும் பிழைத்து எழுவார்கள். அங்கு பல அதிசய மூலிகைகள் இருக்கின்றன.

இறந்தவர்களை உயிர் பிழைக்க செய்யும் மருந்து, உடல் பல துண்டுகளாகப் பிளவுபட்டுப் போயிருந்தால் அதனை ஒட்ட வைக்கும் மருந்து, உடலில் பாய்ந்த ஆயுதங்களை வெளியே எடுக்கும் மருந்து, சிதைந்து போன உருவத்தை மீண்டும் பழையபடியே பெறுவதற்கான மருந்து என்று தனித்தனியாக உள்ளது. அங்கு சென்று அந்த மருந்துகளை கொண்டுவா. தாமதம் செய்தால் பெரிய இழப்பு ஏற்படும். அம்மலைக்கு போகும் வழியை நான் உனக்கு கூறுகிறேன் என்றான். தென் கடலுக்கு ஒன்பதனாயிரம் தொலைவில் இமயமலை இருக்கின்றது. இமயத்துக்கு அப்பால் ஒன்பதனாயிரம் தொலைவில் ஏமகூட மலை இருக்கிறது. அம்மலைக்கு அப்பால் ஒன்பதனாயிரம் தூரத்தில் நிடதமலை இருக்கின்றது. அதற்கு அப்பால் ஒன்பதனாயிரம் தொலைவில் மேரு மலை இருக்கிறது. மேரு மலைக்கு அப்பால் ஒன்பதனாயிரம் தூரத்தில் நீலகிரி இருக்கின்றது. நீலகிரிக்கு அப்பால் நாலாயிரம் தூரத்தை கடந்தால் மருந்துமலை இருக்கின்றது.

தொடரும்.....

Post a Comment

0 Comments