மகாபாரதம் பகுதி - 96
அவன் சல்லி யனிடம், சல்லியா! இகழ்ந்து பேசாதே! இப்போது பார் என் வலிமையை! என் ஒரே பாணத்தால் பீமன் மட்டுமல்ல, அர்ஜுனனையும் சேர்த்து அழிப்பேன், என்றான் வீரத்துடன். ஆனால், சல்லியன் சொன்னதே நடந்தது. பீமன் தனது தேரில் கர்ணன் முன்னால் வந்து நின்றான். அவனது பாணங்கள் கர்ணனை காயப்படுத்தின. கர்ணன் மயங்கி விழுந்து விட்டான். பின்னர், சல்லியன் தான் அவனுக்கு மயக்கம் தெளிவிக்க வேண்டியதாயிற்று. மயக்கம் தெளிந்து எழுந்த கர்ணன், பீமனைச் சுற்றி நின்ற அரசர்களை அம்பெய்து கொன்றான். இதனால், பாதுகாப்பற்ற நிலையில் இருந்த பீமன் பின்வாங்கினான். பீமனின் நிலையைக் கண்ட கிருஷ்ணர், தேரை கர்ணன் அருகே ஓட்டினார். இப்போது அர்ஜுனன், கர்ணன் மீது பாணங்களைப் பொழிந்தான். அஸ்வத்தாமன் கர்ணனுக்கு உதவியாக வந்தான். இருவருமாக கிருஷ்ணர் மீதும், அர்ஜுனர் மீதும் பதில் பாணங்களைத் தொடுத்தனர். அஸ்வத்தாமனின் பாணங்களுக்கு அர்ஜுனனால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. அவன் சோர்வடைந்தான். இதைக் கண்ட கிருஷ்ணர், அர்ஜுனா! அஸ்வத்தாமனின் பாணங்களுக்கு கலங்காதே. அவனை அவ்வளவு எளிதில் ஜெயிக்க முடியாது என்பது நிஜமே. ஆனால், அவனும் தோற்கடிக்கத் தக்கவன் தான்! அவனது மார்பை குறிவைத்து அம்புகளை விடு, என்றார். கிருஷ்ணர் சொல்லி முடிப்பதற்குள், அர்ஜுனன் தன்னிடமிருந்த சக்திவாய்ந்த சந்திரபாணத்தை அவன் மீது எய்ய, அஸ்வத்தாமன் மயங்கிச் சாய்ந்தான். இதைப் பார்த்த துச்சாதனன் அவனைக் காப்பாற்றி ஒரு தேரில் ஏற்றிச்சென்று விட்டான். அவனுக்கு மயக்கம் தெளிந்ததும், மீண்டும் கர்ணனின் அருகில் வந்து போர் செய்தான்.
இது ஒருபுறம் நடக்க, பீமன் தன் சபதத்தை நிறைவேற்ற துச்சாதனன் அருகில் சென்றான். துச்சாதனா! நீ பெரும் வீரன்! அன்றைய தினம் சபையிலே நீ ஒரு பெண்ணின் துயிலை உரிந்து வீரத்தைக் காட்டினாயே! அந்த வீரத்தை இன்றும் இந்த உலகம் பாராட்டிக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட பராக்கிரமம் மிக்க உன்னுடன் போரிடுவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. அநேகமாக, திரவுபதி இன்று தன் கூந்தலை முடிந்து விடுவாள் என்றே எண்ணுகிறேன். இன்று நீ; நாளை துரியோதனன். இருவரையும் கொன்று விடுவேன், என்று எக்காளமாகப் பேசி சிரித்தான்.
துச்சாதனன் பதிலுக்கு ஏதும் சொல்லவில்லை. அமைதியாக நின்ற அவன் அருகில் கவுரவ சகோதரர்கள் ஒன்பது பேர் வந்து நின்றனர். அவர்கள் ஒன்பது பேரையும் பாணம் எய்து கொன்றான் பீமன். இதனால், ஆத்திரமடைந்த துச்சாதனன் பீமனுடன் கடுமையாகப் போரிட்டான். இரண்டு மலைகள் மோதியது போல் இருந்தது. மிக நீண்டநேரம் போர் நீடித்தது. ஒரு கட்டத்தில், துச்சாதனனின் கழுத்தை ஒடித்து அவனது முதுகுப்புறமாக திருப்பிய பீமன், அவனது தொடைகளைப் பிடித்து இழுத்து துண்டித்தான். ரத்தம் வழிய குற்றுயிராக கிடந்த அவனது கைவிரல்களை பிடித்த அவன், இந்த விரல்கள் தானே என் திரவுபதியைத் தொட்டன, என்றவாறே அவற்றை ஒடித்து தள்ளினான். பெண் பாவம் பொல்லாதது. பெண்களை அவர்களின் விருப்பமின்றி யார் ஒருவன் தொடுகிறானோ, அவர்களுக்கெல்லாம் இதுதான் கதி. கொலைப் பாவமான பிரம்மஹத்தி தோஷத்துக்கு கூட விடிவு கிடைத்து விடும். ஆனால், ஒரு பெண்ணை இம்சைப்படுத்துபவனுக்கு எத்தனை ஜென்மம் எடுத்தாலும் பிராயச் சித்தம் கிடையாது.
அது துச்சாதனன் விஷயத்தில் உண்மையானது. அத்தோடு விட்டானா பீமன்! வெறி அவனது தலைக்கு ஏறியது. அவனது வயிற்றைக் கிழித்து குடலை உருவினான். பின்னர் அலக்காகத் துõக்கி, அவனது ரத்தத்தைக் குடிக்க ஆரம்பித்து விட்டான். அந்தக்காட்சி, இரணியனைக் கொன்ற நரசிம்ம மூர்த்தி போல இருந்தது. என்ன தான் கொடுமைக்காரன் என்றாலும், ஒருவனை இந்தளவுக்கு இம்சைப்படுத்திக் கொல்வது என்பது போர்க்களத்தில் நின்றவர்களுக்கே பிடிக்கவில்லை. அவர்கள் கண்ணீர் வடித்தனர். இதைப் பார்த்த கிருஷ்ணர் பீமனிடம், பீமா! துச்சாதனனைக் கொன்றது சரி. ஆனால், ரத்தம் குடிக்கக்கூடாது, என்று கடுமையாகச் சொன்னதும், அவனது உடலை கீழே போட்டுவிட்டு சென்ற பீமன், தர்மரிடம் அதைச் சொல்லி ஆனந்தப்பட்டான். துச்சாதனனின் மரணம், கவுரவர் படைத் தலைவனான கர்ணனை மிகவும் பாதித்து விட்டது. அவன் அயர்ச்சியுடன் நின்றான்.
பின்னர், சல்லியனின் வார்த்தைகளால் சுதாரித்த அவன் பாண்டவர் படையுடன் கடுமையாக மோதினான். ஆனால், அர்ஜுனன் கர்ணனின் மகனான விருஷசேனனை அந்த சமயத்தில் கொன்று விட்டான். இதனால், கர்ணன் மீண்டும் மூர்ச்சித்து விழுந்தான். சல்லியன் அவனுக்கு மயக்கம் தெளிவித்து, ஆறுதல் வார்த்தைகள் சொன்னான். இந்த சமயத்தில் ஒரு திருப்பம் நிகழ்ந்தது. துரோணரின் மகன் அஸ்வத்தாமன் துரியோதனனிடம் சென்றான். மகாராஜா! நீங்களும், தருமரும் தொடங்கிய இந்தப்போர் 17 நாட்களாகியும் முடிந்தபாடில்லை. என் தந்தை மட்டுமின்றி, பீஷ்மர் போன்ற மகாத்மாக்களும், தங்கள் சகோதரர்களும், பலநாட்டு மன்னர்களும் அழிந்து போனார்கள். போனது போகட்டும். இப்போது எஞ்சியுள்ள உங்கள் தம்பிமார் களுடன் சென்று தர்மருடன் சமாதானம் செய்து, இருவரும் அவரவருக் குரிய பூமியை ஆண்டுவாருங்கள், என்று அறிவுரை சொன்னான். துரியோதனன் அதை ஏற்கவில்லை. அஸ்வத்தாமா! ஒன்று இந்தப் போரில் வெற்றி, அல்லது வீரமரணம். இதைத் தவிர எந்த சமாதானத் துக்கும் நான் தயாராக இல்லை, என்று சொல்லி அவனை அனுப்பிவிட்டான். பின்பு கர்ணனிடம் சென்று, மகனை இழந்து தவித்த அவனுக்கு ஆறுதல் சொன்னான். கர்ணன் ஆவேசத்துடன், துரியோதனா! இனியும் பொறுக்கமாட்டேன். அர்ஜுனனின் தலையை அறுக்கும் அம்பை போரில் பயன்படுத்தப் போகிறேன். அவனைக் கொல்லாமல் திரும்பமாட்டேன், என்று சொன்னான். அவனது தேர் அர்ஜுனனை நோக்கிப் பாய்ந்தது.
கர்ணனது தேரைச் சுற்றி கோபக்கனல் வீசும் கண் களுடன் கிருபாச்சாரியார், அஸ்வத்தாமன், சகுனி முதலானவர்கள் நின்றனர். அர்ஜுனன் அவன் மீது அம்புகளைச் சரமாரியாகப் பாய்ச்சினான். கர்ணனும் பதிலுக்குத் தாக்க இந்த யுகமே முடிந்துவிடுமே என்று விண்ணோர்களே பயந்து விட்டனர். கர்ணனின் திறத்தை அடக்க கிருஷ்ணரும், அர்ஜுனனின் திறத்தை அடக்க சல்லியனும் மிகத்திறமையாக தேரோட்டினர். அவர்கள் இருவரும் தேரோட்டுவதில் சமவலிமை படைத்தவர்கள் என்றே அனைவரும் பேசிக் கொண்டனர். கிருஷ்ணருக்கு எவ்வகையிலும் குறைந்தவனில்லை என்று காட்டும் வகையில் சல்லியன் நடந்து கொண்டான். அதுமட்டுமின்றி கர்ணனிடம் சொல்லி, கிருஷ்ணரைத் தேரோட்ட முடியாமல் செய்ய அம்புகளால் தடுப்புச்சுவர் எழுப்பச் சொன்னான். இதை சரக்கூடம் என்பார்கள். இது கர்ணனுக்கு மிகுந்த பலனளித்தது. கிருஷ்ணரால் அந்த தடுப்பைத் தாண்டி தேரோட்ட முடியவில்லை. உடனே தன் மாயையை பயன்படுத்தி, கிருஷ்ணரும் அவ்வாறே செய்ய கர்ணனின் தேரும் மாட்டிக் கொண்டது. அர்ஜுனன் மிகவும் களைத்துப்போய் அம்புகளை எய்ய முடியாமல் நின்றான். கிருஷ்ணர் அவனிடம், ஏன் எழுதப்பட்ட சித்திரம் போல அப்படியே நிற்கிறாய்? சாதாரண சூழலை விட, மாட்டிக்கொள்ளும் நேரங் களில் தான் மனிதன் தனது புத்தியை வேகமாகப் பயன்படுத்த வேண்டும். உம்..அம்புகளைத் தொடு, என்று அவசரப்படுத்தினார். அர்ஜுனனும் சுதாரித்து நெருப்பைக் கக்கும் ஆக்கினேயாஸ்திரத்தை கர்ணன் மீது பிரயோகம் செய்தான்.
அதில் இருந்து வெளிப்பட்ட வெப்பம் களத்தில் நின்ற ஏராளமான வீரர்கள், யானை, குதிரைகளை கருகச் செய்தபடியே கர்ணனை நோக்கிப் பாய்ந்தது. அஞ்சாநெஞ்சனான கர்ணன், அந்த அஸ்திரத்தை எதிர்கொள்வதில் பெருமிதமடைந்தான். வருணபகவான் தனக்குத் தந்த வருணாஸ்திரத்தை எதிர் பிரயோகம் செய்தான். அதில் இருந்து சிந்திய பெருவெள்ளமான தண்ணீர், எதிரே வந்த நெருப்பு அஸ்திரத்தை அழித்து விட்டது.இப்படியாக பல்வேறு சிறப்புமிக்க அஸ்திரங்களை இருவரும் பிரயோகித்தனர். அர்ஜுனன் விட்ட எல்லா அஸ்திரங்களையும் மாவீரன் கர்ணன் ஒடித்து தள்ளிவிட்டான். அர்ஜுனனின் வாவ்யாஸ்திரத்துக்கு சர்ப்பா ஸ்திரம், கர்ணனின் பூர்ணசந்திர அஸ்திரத்துக்கு அந்தகாரஸ்திரம், ஐந்திர அஸ்திரத்துக்கு, சூரிய அஸ்திரம், பிரமாஸ்திரத்துக்கு ருத்திராஸ்திரம் என மாறி மாறி தொடுத்தனர். இவையெல்லாம் பார்ப்பதற்கு சாதாரண அம்புகள் போல் தோன்றும்.
ஆனால், இதில் அடங்கியுள்ள மந்திரசக்தியாலும், தேவர்களால் தரப்பட்டது என்பதாலும் இவற்றுக்குரிய சக்தி மிகமிக அதிகம். இப்படி எந்த அஸ்திரமுமே இருதரப்புக்கும் பலன் தராததால் இருவரும் கைசோர்ந்தனர். சற்று ஓய்வுக்குப்பிறகு, கர்ணன் காண்டவவனத் தகனத்தின் போது, தன்னிடம் வந்து சேர்ந்த அஸ்வசேனன் என்னும் நாகக் குழந்தையை நினைத்தான். அது நாகாஸ்திரமாக அவன் கையில் வந்து சேர்ந்தது. இந்த அஸ்திரத்தைத் தான் ஒரே ஒருமுறை அர்ஜுனன் மீது எய்ய வேண்டும் என்று குந்திதேவி வரம் பெற்றிருந்தாள்.அந்த அஸ்திரம் ஐந்து வாய் களைக் கொண்டிருந்தது. காண்டவ வனத்தை அர்ஜுனன் அக்னிக்கு பரிசாகக் கொடுத்து எரித்தபோது, தட்சகன் என்ற பாம்பின் மனைவியும், கர்ப்பிணி யுமாக இருந்த நாகமாது என்பவள் தீயிலிருந்து தப்ப விண்ணை நோக்கிப் பறந்தாள். அர்ஜுனன் அந்தப்பாம்பின் மீது அம்பெய்தான். அது இருகூறாகி விழுந்தபோது, இந்திரன் அதைத் தாங்கிப் பிடித்து பாம்பின் உடலில் இருந்த அவளது குழந்தையை வெளியில் எடுத்தான். அஸ்வசேனன் என்று பெயர் பெற்ற அக் குழந்தை, அர்ஜுனனுக்கு எதிரி கர்ணன் என்பதைக் கண்டுபிடித்து அவனிடம் போய் அடைக்கலமானது. அதுவே நாகாஸ்திர வடிவில் இருந்தது. தன் தாயைக் கொன்ற அர்ஜுனனைப் பழிவாங்க அது காத்திருந்தது. அந்த அஸ்திரத்துக்கு சந்தனம் பூசி, துõபம் காட்டி, பூக்களால் பூஜை செய்த கர்ணன் அதை அர்ஜுனன் மீது எய்தான். அதை தனது அர்த்தசந்திர பாணத்தை வீசி துண்டித்துவிட்டான் அர்ஜுனன். துண்டான ஐந்து தலைகளுடன் வந்த அந்த பாணம், கர்ணனிடம் திரும்பி வந்து, மீண்டும் ஒருமுறை என்னை அர்ஜுனன் மீது ஏவு, என்று கெஞ்சியது.
கர்ணன் மறுத்தான். நாகாஸ்திரமே! உன்னை மீண்டும் ஒருமுறை எய்ய முடியாமைக்காக வருந்துகிறேன். குந்திதேவியிடம் உன்னை ஒருமுறை மட்டுமே எய்வேன் என்று வாக்கு கொடுத்துள்ளேன். எனவே உன்னை மீண்டும் பிரயோகிக்க மாட்டேன், என்றான். நாகாஸ்திரம் அது கேட்டு மிகவும் வருத்தப்பட்டது. செல்லியனும் அந்த அஸ்திரத்தை மீண்டும் அர்ஜுனன் மீது ஏவச்சொன்னான். அதையும் வாக்குத்தவறாத கர்ணன் கேட்க மறுத்துவிட்டான். கர்ணா! என் தாயை கொன்றவனை பழிதீர்க்கலாம் என்றே உன்னை சரணடைந் தேன். ஆனால், நீயோ ஒருமுறை எய்ததுடன் நிறுத்திக் கொண்டாய். அதுவும் குறிதவறி விட்டது. என் விதி அவ்வளவுதான், என்று சொல்லிவிட்டு நாகாஸ்திரம் மறைந்து விட்டது. நாகாஸ்திரத்துக்கே தப்பிவிட்ட அர்ஜுனனைக் கண்டு பாண்டவர் படையினர் ஆரவாரம் செய்தனர். இதைப் பார்த்த சல்லியன் கோபத்துடன், கர்ணா! நான் சொன்னதையும், மகாநாகாஸ்திரம் சொன்னதையும் கேட்க நீ மறுத்துவிட்டாய். இனி நான் உனக்கு தேரோட்ட மாட்டேன். அர்ஜுனனை உன்னால் கொல்ல முடியாது என்பது தெளிவாகி விட்டது. உன்னை நண்பனாக அடைந்ததற்காக துரியோதனன் தோற்கப்போவதும் நிஜமாகி விட்டது, என்று சொல்லிவிட்டு தேரில் இருந்து இறங்கிச் சென்று விட்டான்.கர்ணனே இப்போது தேரை ஓட்ட வேண்டியதாயிற்று. அவன் மிகவும் நொந்து போயிருந்தான். தனது பாணங்கள் இப்படி செயலற்று போக காரணம் என்ன என்று யோசித்தான். அப்போது தான் பரசுராமர் அவன் கண்கள் முன் நிழலாடினார்.
0 Comments