இராமாயணம் பகுதி - 35 - RAMAYANAM PART - 35


இராமாயணம் பகுதி - 35


இராமாயணம் பகுதி - 35 - RAMAYANAM PART - 35

சீதையை வலுகட்டாயமாக இழுத்து தன் புஷ்பரக விமானத்தில் ஏற்றிக் கொண்டு அங்கிருந்து பறந்து சென்றான். சீதை, என் பெருமானே! எங்கே உள்ளீர்கள்? இலட்சுமணா! உன்னை தவறாக எண்ணி விட்டேன். பிடிவாதமாய் உன்னை துரத்தினேனே! என்று கதறி அழுதாள். இராவணன் சீதையை பிடித்துக் கொண்டு தேரை வேகமாக செலுத்தினான். அரக்கனே! என் கணவருக்கு பயந்து மாய மானை அனுப்பி என்னை கவர்ந்த நீ, என் கணவரை பார்த்து பயப்படுகிறாய் என்பது தெரிகிறது. கீழே காட்டிலுள்ள செடிகொடி, மரங்கள் மற்றும் மலைகளிடம் இவ்வரக்கன் என்னை கவர்ந்து செல்வதை என் கணவர் இராமனிடம் சொல்லுங்கள் என்று கதறி அழுதாள். கடவுளை நினைத்து தொழுதாள்.

மரத்தின் மேல் அரை தூக்கமாக அமர்ந்திருந்த ஜடாயு, வானத்தில் வேகமாக சென்று கொண்டிருந்த ரதத்தை பார்த்தான். சீதையின் குரலைக் கேட்டு யார் என்பதை தெரிந்து கொண்டான். சீதையும் மரத்தின் மேல் அமர்ந்திருந்த ஜடாயுவை கண்டாள். சீதை ஜடாயுவிடம், இந்தக் கொடிய அரக்கன் என்னை கவர்ந்து கொண்டு செல்கிறான். தாங்கள் இவ்வரக்கனை எதிர்த்தால் தங்களையும் இவன் கொன்று விடுவான். தாங்கள் இந்த செய்தியை இராமனிடம் சொல்லுங்கள் என்று அழுதாள். ஜடாயு இராவணனை பார்த்து, தம்பி இராவணா! நான் கழுகுராஜன், ஜடாயு. நானும் உன்னை போல் நீண்ட நாட்களாக அரசு புரிந்தவன். நீ செய்யும் இச்செயல் பெரும் பாவமாகும். மக்களை காக்கும் அரசன் இத்தகைய செயலை செய்யலாமா? நீ இப்பாவச் செயலை செய்வதால் நீ அழிந்து போவது உறுதி.

ஜடாயு பேசியதைக் கேட்ட இராவணன் பெரும் கோபம் கொண்டான். நிறுத்து! இதற்கு மேல் ஒரு வார்த்தையும் பேசாதே. அந்த மனிதர்களை என் முன் வரச்சொல், அவர்களை கொன்றுவிடுகிறேன். உயிர்மேல் ஆசை இருந்தால் ஓடிப்போய் விடு என்றான். அரக்கனே! உடனே அவளை விட்டுவிட்டு இங்கிருந்து செல், இல்லையென்றால் நீ அழிந்து போவாய். இராமனின் தேவியை கவர்ந்து செல்வது உன் அழிவிற்கான பாதை ஆகும். இராமன் இல்லாத நேரத்தில் நீ சீதையை கவர்ந்து செல்வது உன் கோழைதனத்தை காட்டுகிறது. இராமனிடம் யுத்தம் செய்ய துணிவில்லாமல் இப்படி கோழைதனமாய் சீதையை கவர்ந்து செல்கிறாயா! நான் இருக்கும் வரையில் சீதையை இங்கிருந்து கவர்ந்து செல்லவிடமாட்டேன். நீ வீரன் என்றால் என்னுடன் வந்து போரிடு என்று சொல்லி ஜடாயு மேலே பறந்தான். ஜடாயு பறந்த வேகத்தில் மரங்களும், மலைகளும் ஒன்றொன்று மோதிக் கொண்டன.

இராவணன் பெரும் கோபங்கொண்டு ஜடாயுவைத் தாக்கினான். இராவணனை அங்கிருந்து செல்லாமல் தடுத்து நிறுத்தினான், ஜடாயு. தன் சிறகுகளாலும், மூக்காலும் போர் புரிந்தான் ஜடாயு. ஜடாயு தன் மூக்கால் இராவணனை உடல் முழுவதும் கீறினான். இராவணனின் உடலில் இரத்தம் சிந்தியது. வலி தாங்க முடியாமல் இராவணன் சீதையை தன் கையில் பிடித்துக் கொண்டு ஜடாயுவை விரட்டினான். இராவணன் ஒரு சூலாயுதத்தை எடுத்து ஜடாயு மீது வீசினான். அந்த சூலாயுதம் செயலற்றுப் போய் கீழே விழுந்தது. பிறகு இராவணன் தன் தண்டாயுதத்தை எடுத்து ஜடாயு மீது வீசினான். தண்டாயுதத்தால் ஜடாயு அடிபட்டுக் கீழே விழுந்தான்.

ஜடாயு கீழே விழுந்த நேரம் பார்த்து இராவணன் தேரை வானத்தில் வேகமாக செலுத்தினான். சீதை மிகுந்த துன்பத்தால் அழுதாள்.

இதைக் கண்ட ஜடாயு சீதைக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டே மேலெழுந்து இராவணனை தாக்கினான். இந்தக் கோர யுத்தம் நீண்ட நேரம் நடந்தது. மிகுந்த கோபம் கொண்ட இராவணன் தன்னிடம் இருந்த உடைவாளை உறுவி ஜடாயுவின் சிறகுகளையும், கால்களையும் வெட்டி வீழ்த்தினான். அந்த வாள் சிவபெருமான் இராவணனுக்குக் கொடுத்த வாள். தன் சிறகுகளையும் கால்களையும் இழந்த ஜடாயு இராமரை நினைத்து இராம் இராம் என சொல்லிக் கொண்டு தரையில் விழுந்து இறந்தான். இதனைக் கண்ட தேவர்களும் முனிவர்களும் பெரும் துயரம் அடைந்தனர்.

சீதை ஜடாயுவின் மரணத்தை பார்த்து மிகவும் வேதனைப்பட்டாள். தன்னை காப்பாற்ற வந்த ஜடாயுவுக்கு நேர்ந்த இந்த நிலைமையை கண்டு சீதை மிகவும் வருந்தினாள். இராவணன் இலங்கையை அடைந்தான். அங்கு அசோக வனத்தில் சீதையை சிறை வைத்தான். கொடிய அரக்கர்களை கொண்டு சீதையை காவல் புரிய வைத்தான்.

சீதையை தனியே விட்டுட்டு மனம் வருந்தி இலட்சுமணர் இராமரை நோக்கிச் சென்றார். மாரீசனின் குரலைக் கேட்டு சீதை தன்னை நினைத்து மிகவும் துன்பப்படுவாள் என எண்ணி இராமர் வேகமாக திரும்பிக் கொண்டு இருந்தார். வரும் வழியில் தொலைவில் இலட்சுமணன் வருவதை கண்டார் இராமர். இலட்சுமணரை பார்த்ததும் இராமரின் மனம் பதைப்பதைத்தது. இலட்சுமணனை சீதைக்கு காவலாக அங்கே இரு என்று சொல்லியிருந்தும், இவன் இங்கு வருவதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டு இலட்சுமணரை நோக்கி வந்தார் இராமர். இலட்சுமணர் இராமரை கண்டதும் அருகில் வந்து வணங்கி, இராமரை தழுவி கொண்டார். பிறகு இராமர் நீ சீதையை தனியாக விட்டுவிட்டு இங்கே வருவதற்கான காரணம் என்ன என்று வினவினார்.

இலட்சுமணர் நடந்தவற்றை எல்லாம் விவரமாக கூறினான். அன்னை! அரக்கன் குரலை தங்கள் குரல் தான் என்று கூறி என்னை வலுகட்டாயமாக அனுப்பி வைத்தார். நான் தங்களின் குரல் இல்லை என எவ்வளவு சொல்லியும் அன்னை அதை கேட்கவில்லை. அன்னை சீதை, தன்னை கடிந்து பேசி அனுப்பியதை கூறினார். இதை கேட்ட இராமன் அனைத்துக்கும் தானே காரணம் என்று மனம் வருந்தினார். தம்பி! நீ மானை பிடிக்க வேண்டாம் என சொல்லியும், நான் மானை பிடிக்க வந்தது என் தவறு தான் எனக் கூறினார். பிறகு இருவரும் சீதை அங்கே தனியாக இருப்பாள் என விரைந்து பர்ணசாலைக்கு திரும்பினர். இருவரும் பர்ணசாலையை அடைந்தனர். பர்ணசாலை வெறுமையாக இருந்தது. அங்கே சீதை இல்லாததை கண்டு இராமர் திடுக்கிட்டார். பெரும் துயரம் அடைந்தார். இராமர் சீதையை நினைத்து துயரத்தில் மூழ்கினார்.

இலட்சுமணர், பர்ணசாலை வெளியில் தேர் சுவடு இருப்பதை கண்டார். அத்தேர் தெற்கு நோக்கி பயணித்துள்ளது என்பதை கண்டு இராமரிடம் கூறினார். அண்ணா! நாம் நேரத்தை வீணடிக்காமல் விரைந்து சென்று அன்னையை காப்பாற்றுவோம் என கூறினார் இலட்சுமணர். இராமர், நீ சொல்வதும் சரிதான். வா! உடனே பின் தொடர்ந்து செல்வோம் எனக் கூறி இருவரும் பின் தொடர்ந்தனர். தேரின் சுவடை நோக்கி இருவரும் சென்றனர். சிறிது தூரம் சென்றதும் தேரின் சுவடு மறைந்து விட்டது. தேரின் சுவடு மறைந்ததை பார்த்து இராமர் திகைத்து நின்றார். இலட்சுமணர், அண்ணா! தேரின் சுவடு மறைந்தால் என்ன? தேர் தெற்கு நோக்கி சென்றுள்ளது என்பது உறுதியாக தெரிகிறது. நாம் தெற்கு நோக்கி செல்வோம் எனக் கூறினார். இருவரும் தெற்கு நோக்கி சென்றார்கள்.

அவர்கள் சிறிது தூரம் சென்றதும் வழியில் வீணைக்கொடி ஒன்று அறுந்து கிடப்பதை பார்த்தார்கள். இலட்சுமணர் வீணைக் கொடியைப் பார்த்து இது இராவணனுடையது என்றார். வீணைக் கொடி ஜடாயுவின் மூக்கினால் அறுப்பட்டுள்ளதை பார்த்தனர். இராவணனிடம் போர் புரிந்து அவன் தேரை உடைத்து வீணைக்கொடியை அறுத்தவர் ஜடாயு பெரியப்பா என்பதை உணர்ந்தனர். பிறகு இருவரும் ஜடாயுவை தேடி சென்றனர். வழியில் பல தலைகள், பல கைகள் அறுப்பட்டு கிடந்தன. இதனைப் பார்த்த இராமர், சீதையை கவர்ந்து சென்றவர் பல அரக்கர்கள் போல் தெரிகிறது என்றார். இலட்சுமணர், அண்ணா! இராவணனுக்கு பல தலைகள், பல கைகள் உண்டு. இவன் பல தலைகள், பல கைகள் அறுக்கப்பட்டாலும் திரும்ப முளைக்கும் வரம் பெற்றவன். இங்கு பல தலைகள், பல கைகள் அறுக்கப்பட்டுள்ளது. ஆனால் கால்கள் அறுப்பட வில்லை. ஆதலால் இராவணன் தான் அன்னையை கவர்ந்து சென்றுள்ளான் என்றார்.

தொடரும்.....

Post a Comment

0 Comments