இராமாயணம் பகுதி - 26
பரதனுக்கும் சத்ருகனுக்கும் செய்தி சொல்லி அழைத்து வரும்படி தூதுவரை அனுப்பினார், வசிஷ்டர். பரதனும், சத்ருகனும் அயோத்திக்கு திரும்பினார்கள். அவர்கள் தந்தை தசரதர் இறந்து விட்டார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். அதன் காரணமும் அவர்களுக்கு தெரிய வந்தது. தாய் கைகேயி பெற்ற இரண்டு வரத்தால் தன் தந்தைக்கு மரணமும், அண்ணன் ராமனும் வனவாசம் செல்ல காரணமாயிற்று. அதனால் தாய் கைகேயி மீது மிகுந்த கோபம் கொண்டனர். அண்ணன் ராமன் வனவாசம் செல்ல தான் காரணம் என்பதை அறிந்து மிகவும் வேதனைப்பட்டான், பரதன். தாய் கௌசலையிடம் சென்று மனமுருக மன்னிப்பு கேட்டான்.
தசரதர் தன் மரண தருவாயில் கைகேயி எனக்கு மனைவியும் இல்லை, பரதன் எனக்கு மகனும் இல்லை எனக் கூறி தன் கடைசி ஈமச்சடங்குகளை பரதன் செய்யக் கூடாது என்று சொன்னதை அறிந்து மிகவும் வருந்தினான், பரதன். சத்ருகன், தசரதனின் இறுதி ஈமச்சடங்குகளை செய்தான். அதன் மூலம் தான் தாய்க்கு தலைப்பிள்ளை, தந்தைக்கு கடைப்பிள்ளை உருவானது. என்னும் சம்பிரதாயம் வசிஷ்டர் பரதனிடம் முடி சூட்டி கொள்ள கூறினார். ஆனால் பரதன் நான் முடி சூட்டி கொள்ள மாட்டேன். அண்ணன் ராமன் தான் முடி சூட்டி கொள்ள வேண்டும். அவர் தான் அயோத்தியை ஆள வேண்டும். நான் கானகம் சென்று அண்ணனை அழைத்து வருகிறேன். அண்ணன் வரவில்லை என்றால் நான் அயோத்திக்கு திரும்ப மாட்டேன். அண்ணன் ராமனை அழைத்து வர பரதன் உறுதியாக இருந்தான்
ராமர், சீதை, லட்சுமணர் இருள் சூழ்ந்த கானகத்தில் தங்களின் வனவாச பயணத்தை தொடங்கினார்கள். அவர்கள் புண்ணிய நதியான கங்கையை அடைந்தார்கள். ராமர், சீதை, லட்சுமணர் மூவரும் கங்கையில் மூழ்கி மகிழ்ந்தார்கள். கங்காதேவி! ராம பெருமானே! உலகில் உள்ள மனிதர்கள் என்னில் மூழ்கி அவர்களது பாவங்களை நீக்குகின்றனர். ஆனால் நீ இன்று என்னில் மூழ்கியதால் என்னிடம் இருந்த பாவங்கள் நீங்கின என்று கூறி ராமரை தொழுது வணங்கினாள். முனிவர்கள் அவர்களுக்கு காய், கனிகளை தந்தார்கள். அவர்கள் அதனை உண்டு மகிழ்ந்தார்கள். கங்கை கரையில் சிருங்கி பேரம் என்ற நகரில் வாழ்பவன் குகன். இவன் வேடர் குலத்தின் தலைவன். கருமையான மேனியும், திரண்ட தோள்களும், அகன்ற மார்பும் உடைய தோற்றத்தை உடையவன்.
குகன் இராமனை காண வேண்டும் என்று எண்ணினான். அதனால் மீன்களை நெய்யில் பொரித்து மிளகு தூள் தூவி இராமருக்காக எடுத்து சென்றான். குகன், இராமர் தங்கி இருக்கும் தவப்பள்ளியை அடைந்தான். அந்த ஆசிரமத்தில் முன் நின்று காவல் புரிந்து கொண்டு இருக்கும் இலட்சுமணர் குகனை பார்த்து, நீ யார்? எதற்காக இங்கு வந்துள்ளாய் எனக் கேள்வி கேட்டார். ஐயா! நான் ஒரு வேட குலத்தின் தலைவன். என் பெயர் குகன். நான் இங்கு இருக்கும் இராம மூர்த்தியை காண வந்துள்ளேன் என்றான்.
இலட்சுமணர், இங்கேயே நில் என்று கூறிவிட்டு உள்ளே சென்று இராமரை, அண்ணா! தங்களை குகன் என்ற வேட குலத்தின் தலைவன் காண வந்து இருக்கின்றான். அவனை உள்ளே விடலாமா? எனக் கேட்டார். இராமர் அவனை என்னிடம் அனுப்பு என்று கூறினார். பிறகு இலட்சுமணர் குகனுக்கு இராமனை காண அனுமதி அளித்தார். குகன் உள்ளே சென்று பரம்பொருளான இராமரை வணங்கினான். ஐயனே! தங்களுக்காக மீனை பொரித்து கொண்டு வந்துள்ளேன். அதை தாங்கள் ஏற்று கொள்ள வேண்டும் என வேண்டினான். குகனே! மிக்க மகிழ்ச்சி. நீ கொண்டு வந்த உணவை நான் ஏற்று கொண்டேன் என்றார். உனக்கு என் மேல் உள்ள அன்பு, ஆழத்தை காண முடியாத கடல் போல் இருக்கிறது. நீ என்னுடன் இங்கேயே இரு என்றார், இராமர்.
குகன் இராமரை பலமுறை பார்த்தும், போதும் என்ற எண்ணம் அவனுக்கு வரவில்லை. இராமரின் அனுமதி பெற்று குகன் அங்கு தங்கினான். குகன் இலட்சுமணரிடம், இராமர் தவக்கோலம் பூண்டு கானகம் வரக் காரணம் என்ன என்று வினவினான்.
தாய் கைகேயின் வரத்தின்படி இராமர் வனவாசம் செல்லவும், பரதர் அயோத்தியை ஆளவும் கட்டளை அருளினார். அதன்படி இராமர் இக்கானகத்தில் வாழ்கிறார் என்றார், இலட்சுமணர். இதனைக் கேட்ட குகன் வெந்த புண்ணில் வேலை பாய்ந்தது போல் மிகவும் வருந்தினார். அன்றிரவு ஆசிரமத்தில் குகன் காவல் புரிந்தான். அவன் இலட்சுமணர் ஒரு மாற்றாந்தாயாகிய மகன் தானே? அவனை எப்படி நம்புவது என்று எண்ணி குகன் இலட்சுமணனுக்கும் சேர்த்து காவல் புரிந்தான்.
இலட்சுமணரும் கண் இமைக்காமல் காவல் புரிந்தார். பொழுது விடிந்தது. இராமர், சீதை, இலட்சுமணர் நீராடி தங்களின் காலை கடன்களை முடித்தனர். இராமர் குகனைப் பார்த்து, ஓடம் கொண்டு வா! நாங்கள் கங்கையை கடந்து வனவாசம் செல்ல வேண்டும் என்றார். இதைக் கேட்ட குகன் அதிர்ச்சி அடைந்தான். தங்களுக்கு தொண்டு செய்ய நானும் மற்றும் வேடர்களும் உள்ளோம். கங்கை மிகவும் புனிதமான இடமாகும். இங்கு நறுமண மலர்களும், காய் கனிகள் என அனைத்தும் இருக்கின்றன. தங்களுக்காக நான் எதையும் செய்வேன். தங்களுக்காக தொண்டு செய்ய காத்து கொண்டு இருக்கிறேன். தாங்கள் இங்கேயே இருக்க வேண்டும் என மனமுருக வேண்டிக் கொண்டான்.
இராமர் குகனை கட்டி தழுவிக் கொண்டார். குகனே! நீ இனிமேல் எனக்கு தம்பி. இன்று முதல் தசரதருக்கு ஐந்து புதல்வர்கள் இலட்சுமணர், பரதன், சத்ருக்கன் உனக்கு தம்பிமார்கள். பரதனிடம் அயோத்தியை ஆளும் அரசியல் பொறுப்பை ஒப்படைத்து வந்துள்ளேன். நீ அயோத்தி சென்று பரதனுக்கு துணையாக இரு. 14 ஆண்டுகள் 14 நாட்கள் போல் சென்று விடும். பிறகு நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து வாழ்வோம். என் சொல்லை மீற வேண்டாம். இப்பொழுது எங்களுக்காக ஓடம் கொண்டு வா என்றார். குகன் கண்ணீர் தழும்ப ஓடத்தை கொண்டு வந்தான். இராமர், சீதை, இலட்சுமணர் மூவரும் ஓடத்தில் ஏறினார்கள். குகன் இராம நாமத்தை பாடிக் கொண்டு ஓடத்தை செலுத்தினான். அவர்கள் அக்கரையை சேர்ந்தார்கள். இராமன் குகனை பார்த்து, நீ கவலைப்படாமல் செல். மீண்டும் ஒன்று சேர்ந்து மகிழ்ச்சியாய் இருப்போம் என்று கூறி குகனை திருப்பி அனுப்பினார்.
இராமர் அங்கிருந்து புறப்பட்டு சித்ரகூடத்தில் உள்ள பரத்வாஜ முனிவரின் ஆசிரமத்தை அடைந்தார். அங்கு பரத்வாஜ முனிவரை கண்டு வணங்கி, அவரின் சொற்படி சித்ர கூடத்திற்கு அருகில் உள்ள மந்தாகினி நதிக்கரையில் ஓர் ஆசிரமத்தை அமைத்து தங்கினார்கள். சிறிது நாட்கள் அங்கு தங்கினார்கள். பிறகு அவர்கள் பயணத்தை தொடர்ந்தார்கள். அவர்கள் பயணத்தின் போது வழியில் யமுனை நதியை கண்டார்கள். அவர்கள் யமுனை நதியில் நீராடி, காய்கனிகளை உண்டு பசியாறினார்கள். இலட்சுமணர் மூங்கில்களை வெட்டி தெப்பம் அமைத்து, மூவரும் தெப்பத்தில் ஏறி அக்கரையை அடைந்தார்கள். அங்கு பர்ணசாலை ஒன்றை அமைத்தார், இலட்சுமணர். இலட்சுமணரின் பர்ணசாலை அமைக்கும் திறனை கண்டு வியந்து இராமர் இலட்சுமணரை வாழ்த்தினார்.
தொடரும்.....
0 Comments