தலையேழு வள்ளல்கள்
சகரன்
சகாரன்
சிபிச்சக்கரவத்தி
துந்துமாரி
நளன்
நிருதி
அக்கரன்
அந்திமான்
கர்ணன்
சந்தமான்
சிசுபாலன்
வக்கிரன்
சத்தன்
பாரி
ஓரி
காரி
நள்ளி
எழினி அல்லது அதியமான்
பேகன்
குமணன்
குமணன் சங்ககால மன்னர். முதிரம் இவர் நாடு. இவர் சிறந்த கொடையாளி. பெருஞ்சித்திரனார், பெருந்தலைச்சாத்தனார் ஆகிய புலவர்கள் இவரைப் பாடியுள்ளனர். இவர் கடையெழு வள்ளல்கள் காலத்துக்குப் பின்னர் வாழ்ந்தவர். இவரது தம்பி இளங்குமணன்.குமணன் அரசனாக விளங்கியபோது பெருஞ்சித்திரனார் தன் வறுமை நிலையைக் கூறிக் குமணனிடம் தான் யானைமீது செல்லும் வகையில் பரிசில் தருமாறு வேண்டினார். அவனும் அவ்வாறே கொடுத்தான். தன் இல்லம் திரும்பும் வழியில் இளவெளிமான் நாட்டுக்கு வந்து தன் பெருமிதம் தோன்றத் தன் யானையை அவனது காவல்மரத்தில் கட்டிவிட்டு, அவனிடமே சென்று தன் பெருமிதத்தை வெளிப்படுத்தினார்.
குமணனை அவன் தம்பி இளங்குமணன் நாடுகடத்திவிட்டான். குமணன் காட்டில் தலைமறைவாக வாழ்ந்துவந்தான். குமணனிடம் பரிசில் பெறச் சென்ற புலவர் பெருந்தலைச்சாத்தனார் நிலைமையைத் தெரிந்துகொண்டு காட்டிற்குச் சென்று குமணனைப் பாடினார். புலவருக்குத் தரக் குமணனுக்குத் தன்னைத் தவிர வேறொன்றும் இல்லை. குமணன் தன் வாளைப் புலவர்க்குக் கொடுத்தான். குமணன் தலையைக் கொண்டுவருவோருக்குத் தக்க பரிசில் வழங்கப்படும் என்று இளங்குமணன் அறிவித்திருந்தான். குமணன் தன் வாளைப் புலவருக்குக் கொடுத்தது, தன் தலையையே வெட்டியெடுத்து எடுத்துச் செல்வதற்காகவே. குமணன் தந்த வாளே தனக்குப் போதும் என்று வாளைமட்டும் எடுத்துக்கொண்டு புலவர் இளங்குமணனிடம் வந்து வாளைக் காட்டி நிகழ்ந்ததைக் கூறினார். இளங்குமணன் புலவர்க்குப் பரிசில் நல்கியிருக்கலாம். அதைக்கொண்டு புலவர் தன் வறுமையைப் போக்கிக்கொண்டிருக்க வேண்டும்.
குமணன் என்பவர் பழனிமலைத் தொடரினை ஆண்டு வந்த அரசனாவார். இவர் முதிரம் எனும் ஊரை தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தார். இவர் குறுநில மன்னர். கடையேழு வள்ளல்களின் காலத்திற்குப் பிற்பட்டவர் என்பதும், தலையேழு வள்ளல்களில் ஒருவர் என்பதும் செய்தியாகும். பழநிக்கும் உடுமலைப்பேட்டைக்கும் இடையே குமணமங்கலம் என்று ஊர் இவரது பெயரில் அழைக்கப்படுகிறது. கொமரமங்கலம் காசி விசுவநாதர் கோயில் என்பதை இவர் உருவாக்கினார். மன்னர் காசிக்கு சென்று காசி விசுவநாதரை தரிசித்து வந்தார். தன்னுடைய மக்களுக்கும் காசிக்கு சென்று வழிபட முடியாது என்பதால் அங்கிருந்து சிவலிங்கத்தினை பெற்று தன்னுடைய ஊரிலேயே காசிவிசுவநாதருக்கு கோயில் அமைத்தார். அம்மன்னருடைய பெயரே ஊரின் பெயரானது.
சிபிச் சக்கரவர்த்தி
சோழன் சிபிச் சக்கரவர்த்தி என்று பெயரிட்டு பொதுவாக வழங்கப்படும் சோழன் பெரு வேந்தன் வரலாற்றைப் பண்டைய நூல்கள் பறைசாற்றுகின்றன. மன்னர் யயாதியின் மகன்களில் ஒருவர் அனு. அவருக்கு மூன்று மகன்கள் சபாநரன், சசு, பரோக்ஷன் ஆவர். அதில் , சபாநரன் மகன் காலநரன் அவனின் மகன் ஸ்ருஞ்ஜயன், அவனின் மகன் ஜனமேஜய. அவனின் மகன் மகாசீலன். அவனின் மகன் மஹாமனஸ். அவனுக்கு இரண்டு மகன்கள் ஒன்று உசீநரன் மற்றொன்று திதிசு. உசீநரனின் மகனே சிபி ஆவார். அதுபோல் திதிசு மகன் ருசத்ரதன் அவன் மகன் ஹேமன். அவன் மகன் சுதபஸ்.அவன் மகன் பலி. பலிலின் மகன்களே அங்கன், வங்கன், கலிங்கன் மற்றும் ஆந்திரன். இவர்கள் பெயரிலேயே தேசங்கள் உருவாகின.
புறநானூறு
புறா ஒன்று குறுநடை போட்டு நடந்துகொண்டிருந்தது. ஆண்பருந்து ஒன்று அதனை இரையாக்கிக்கொள்ளத் தன் கூரிய நகங்களால் பற்ற வந்தது. புறா தப்பிப் போய் சிபி அரசனின் வீட்டுக்குள் புகுந்துகொண்டது. சிபி புறாவை எடுத்துக்கொண்டு வந்து வெளியில் பறக்கவிடப் பார்த்தான். புறாவுக்காகப் பருந்து வட்டமிடுவதையும் பார்த்தான். புறாவையும் காப்பாற்ற வேண்டும், பருந்துக்கும் இரை வேண்டும். எண்ணிப் பார்த்தான். புறாவின் எடைக்கு எடை தன் உடலிலிருந்து பருந்துக்கு உணவு தரத் தீர்மானித்தான். சீர் செய்யும் தராசின் ஒரு தட்டில் புறாவையும் மறு தட்டில் தன்னையும் நிறுத்துக் காட்டித் தன்னைப் பருந்துக்கு அளித்தான்.
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் கொடைத்திறம் மிக்கவன். என்றாலும் இவனது முன்னோன் புறாவைக் காப்பாற்ற வழங்கிய கொடையை எண்ணுகையில் அது பரம்பரைக் குணம் என்றே கொள்ளத்தக்கது என்று புலவர் மாறோக்கத்து நப்பசலையார் குறிப்பிட்டுள்ளார். அவர் யானைத் தந்தத்தின் இருபுறமும் தொங்கும்படி உருவாக்கப் பட்டிருந்த அக்காலத் தராசு பற்றிய குறிப்பினையும் தந்துள்ளார். இந்தப் புலவர் நப்பசலையார் தமது மற்றொரு பாடலிலும் அந்த அரசனைக் குறிப்பிடும்போது இவன் புறவின் இன்னலைப் போக்கிய செய்தியைக் குறிப்பிடுள்ளார்.
கோவூர் கிழார் என்னும் புலவரும் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைக் குறிப்பிடும்போது புறாவின் துன்பம் போக்கியவனின் வழிவந்தவன் எனக் குறிப்பிடுகிறார்.
சிலப்பதிகாரம்
தன் கணவன் கோவலனைக் கொன்ற பாண்டியனிடம் வழக்குரைக்கச் சென்ற கண்ணகி, தன்னைப் பற்றியும், தன் சோழன் அருளாட்சி பற்றியும் எடுத்துரைக்கும்போது சிபி மன்னன் வரலாற்றை எடுத்துரைக்கிறாள்.
கங்கை ஆற்றின் தென்கரையில் ஆரிய அரசர்கள் அமைத்துத் தந்த வெள்ளிடைப்பாடி படைவீட்டில் இருந்துகொண்டு மாடலனைத் தனியே அழைத்து வினவியபோது, சோழநாட்டின் ஆட்சியைப் பற்றிக் கூறுகையில், புறாவின் துன்பமும், பருந்தின் துன்பமும் விலகுமாறு தன் உடம்பை அரிந்து புறாவின் எடை அளவு பருந்துக்கு இரையாகத் தந்த சிபி மன்னன் வழிவந்த ஆட்சி அது என்று கூறுகிறான்.
பெருந்தொகை மற்றும் விம்பிசார கதை
பெருந்தொகை நூலில் இடம் பெற்றுள்ள பாடல் ஒன்று புத்தன் வழங்கிய கொடையைப் போல, சிபி தன்னிடம் இரந்த இந்திரனுக்குத் தன் எலும்பு ஒன்றை வழங்கியதோடு மட்டுமன்றி, புறாவுக்காகத் தன் உடல் முழுவதையும் கொடுத்தான் என்று குறிப்பிடுகிறது.
கம்பராமாயணம்
இராமனின் சூரிய குலப் பெருமையைச் சனகனுக்குக் கூறும் விசுவாமித்திரர் சிபிச் சக்கரவர்த்தி சூரிய குலத்தில் தோன்றியவன் என்று குறிப்பிடுகிறார்.
பாரி முல்லைக்குத் தேர் தந்தது போலவும், பேகன் மயிலுக்குப் போர்வை தந்தது போலவும், குமணன் தன் தலையை எடுத்துக்கொள்ளும்படி பெருஞ்சித்திரனாருக்கு வாள் தந்தது போலவும் சிபி புறாவிற்காக தன்னைத் தந்ததும் கொடைமடம்.
வேள்பாரி
வேள்பாரி பறம்பு மலையை தலைமை இடமாய் கொண்டு ஆட்சி செய்த குறுநில மன்னர் ஆவார். கடைச்சங்கக் காலத்தைச் சார்ந்தவர். வேளிர் குலத்தின் எவ்வி குடியில் பிறந்ததால் வேள்பாரி என அழைக்கப்பட்டார். பாரி பறம்பு மலையையும் அதனைச் சூழ்ந்த பகுதிகளையும் ஆண்டவர். வேள் பாரி ஆயர் இனத்தை சார்ந்தவர்.பறம்புநாடு 300ஊர்களைக் கொண்டதாகும். பறம்புமலை, பிறம்பு மலை என்றாகி இப்பொழுது பிரான்மலை என்று அழைக்கப்படுகிறது. சங்ககாலத்தில் பாண்டிய அரசின் எல்லைப் பகுதியாகச் சுட்டப் பெற்றது பறம்புமலை ஆகும். பக்தி இலக்கியக் காலத்தில்.இம்மலை கொடுங்குன்றம் என்று வழங்கப்பட்டது. பிரான்மலை சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர், காரைக்குடி திருப்பத்தூர் வட்டத்தில் சிவகங்கை ஒன்றியத்தில் கிருங்காக்கோட்டை என்னும் ஊரின் அருகில் உள்ளது. பாரியின் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் மொத்தம் 300 கிராமங்களே இருந்தன. அப்படி இருந்த போதிலும் அவர் மூவேந்தர்களை விடப் பெரும் புகழ் பெறக்காரணம் அவரது கொடைத்தன்மையே. கேட்போருக்கு இல்லை எனாது அளிப்பவர்.
இவர் கடையெழு வள்ளல்களில் ஒருவராகச் சங்க இலக்கியத்தில் போற்றப்படுபவர். புலவர் கபிலர் பாரியின் நண்பர். திருச்சியிலிருந்து மதுரை செல்லும் வழியில் கொட்டாம்பட்டியிலிருந்து விலகிச் செல்லும் சாலையில் கிழக்கு நோக்கிச் சென்றால் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது பிரான்மலை. பாண்டியநாட்டில் உள்ளது திருவாதவூர். அவ்வூரில் பிறந்தவர் கபிலர் எனும் புலவர், இவர் சங்கத்தமிழ் இலக்கியப்பரப்பில் மிக அதிகமான பாடல்களைப் பாடியவர் என்ற பெருமைக்குரியவர். இவர் கலையழகுமிக்க கவிதைகளைப் பாடியவர், பொய்யாநாவிற்கபிலர் என்று புகழப்படுபவர். இவர் பாரியின் மிகநெருங்கிய நண்பராவார். பாரியைப் பற்றி இறவாப்புகழுடைய பாடல்களைப்பாடியவர் கபிலர்.
மூவேந்தர்களும் பொறாமை கொள்ளும் அளவிற்கு அரசர் வேள்பாரியின் புகழ் தென்னகம் முழுவதும் பரவி இருந்தது. பாரி மூவேந்தரால் வஞ்சித்துக் கொல்லப்பட்டார். வேள்பாரிக்கு இருமகளிர் உண்டு. அங்கவை சங்கவை ஆகியோர் இவரது மகள்கள் ஆவர். ஆதரவின்றிருந்த பாரியின் மகள்களுக்குத் திருமணம் செய்து வைக்க எண்ணி ஔவையார் முயன்றபோது அதனைத் தடுக்க மூவேந்தர்கள் முயன்றனர். ஆனால் ஔவையார் அவர்களைத் தடுத்து நிறுத்தி கரபுரநாதர் கோவிலில் மணம் செய்து வைத்தார். அந்தக் கோவில் தற்போது சேலத்தில் உத்தமசோழபுரம் என்ற பகுதியில் உள்ளது. மேலும் அருகில் வீரபாண்டி, சேலம் உள்ளது. பாரியை ஒளவைப் பெருமாட்டியும் சிறப்பித்துப் பாடியுள்ளார்.
வள்ளல்கள் எல்லாரையும் விட உயர்ந்தவனாகப் பாரியைத் தமிழ்ச்சான்றோர்கள் போற்றுவர். அதற்குக் காரணம், அப்பெருமன்னன் படர்வதற்குக் கொழுகொம்பின்றித் தவித்த முல்லைக்கொடிக்குத் தான் ஏறி வந்த தேரினையே ஈந்த புகழ்ச்செயலே காரணம் என்பர். ஒரு முல்லைக் கொடிக்காகத் தான் ஊர்ந்து வந்த தேரை ஈந்த சிறப்பால் பாரி வள்ளல்களிலேயே தலைசிறந்தவராகப் போற்றப்படுகின்றார். இதனைக் கபிலர் சிறப்பித்துப் பாடுகின்றார். ஆளுடைய நம்பி என்று புகழ்பெற்ற சுந்தரர் திருத்தொண்டத்தொகை என்ற புகழ்பெற்ற பதிகத்தைப் பாடியவர். இவர் பாரியையே கொடைக்கு எல்லையாகச் சுட்டினார். பாரியைப் பற்றிய பாடல்கள் புறநானூறு என்னும் சங்கத்தொகை நூலுள் பல உள்ளன.
ஆய் ஆண்டிரன்
ஆய் கடையெழு வள்ளல்களுள் ஒருவர். பொதியமலைச் சாரலில் உள்ள ஆய்க்குடியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த ஆயர் குல மன்னன் ஆவான் . இவரை வேள் ஆய் என்றும் ஆய் ஆண்டிரன் என்றும் வழங்குவர்.
ஒளி பொருந்திய நீல நிறமுள்ள நச்சரவம் ஒன்று இவருக்கு ஓர் அரிய ஆடையை அளித்ததாம். நாகம் நல்கிய ஒளிமிக்க ஆடையை இவர், ஆலமரத்தின் கீழிருந்த செல்வராகிய சிவபெருமானுக்கு அளித்தாராம்.இதனை இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் சிறுபாணாற்றுப்படையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நீலநாகம் நல்கிய கலிங்கம்
ஆலஅமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த
சாவம் தாங்கிய சாந்துபுலர் திணிதோள்
ஆர்வ நன்மொழி ஆயும்
வேள்ஆயைப் போற்றி ஆயை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடிய பாடல்களும், துறையூர் ஓடைகிழார் பாடிய பாடலும் புறநானூற்றில் உள்ளன.புறநானூறு மட்டுமின்றி அகநானூறு,குறுந்தொகை மற்றும் சிறுபாணாற்றுப்படை முதலியவற்றிலும் இவரை பற்றிய மேலும் சில பாடல்கள் எழுதப்பட்டுள்ளன. இவர் தன்னை அண்டி வருபவர்களுக்கு,களிறுகளை பரிசாக அளிக்கும் கொடை குணம் கொண்டவர். இதனை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் இவரை பற்றி எழுதிய பாடல்களில் இருந்து அறியலாம்.
அதியமான் நெடுமான் அஞ்சி
அதியமான் நெடுமான் அஞ்சி தகடூரை ஆண்ட சங்ககால மன்னர்களுள் ஒருவர். அதியர் என்போர் சங்ககாலக் குடிமக்கள். இவர்களின் தலைமகனாக விளங்கியவர்களை அதியர் கோமகன் என்றனர். கோமான் என்பது 'கோமகன்' என்பதன் மரூ பெயர். அதியமான் என்பது அதியர் கோமான் என்பதன் மரூ பெயர். அஞ்சி என்பது இவரது இயற்பெயர். இவன் ஆட்சிக்கு உட்பட்டிருந்த நாடு தலைநீர் நாடு எனப் பெயர் பெற்றிருந்தது. தலைநீர் என்பது ஒகேனக்கல் அருவியின் சங்ககாலப் பெயர்.
அக்காலத்து அதியமான்களுள் இவரைப் பற்றியே அதிக தகவல்கள் தெரியவருகின்றன. பல சங்கத் தமிழ் நூல்களில் இம்மன்னனைப் பற்றிய குறிப்புக்கள் கணப்படுகின்றன. புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை, பதிற்றுப்பத்து, சிறுபாணாற்றுப்படை ஆகிய நூல்களில் நெடுமான் அஞ்சி பற்றிய குறிப்புக்கள் வருகின்றன. ஔவையார், அஞ்சியத்தை மகள் நாகையார், பரணர், இடைக்கழிநாட்டு நல்லூர் நத்ததத்தனார், அரிசில்கிழார், பெருஞ்சித்திரனார், மாமூலனார் ஆகியோர் பாடிய பாடல்களில் இவரைப் பற்றிய தகவல்கள் உள்ளன.
அஞ்சியின் வீரமும், கொடைச் சிறப்பும் ஔவையார் முதலிய புலவர்களின் பாடல்களின் கருப்பொருட்களாக உள்ளன. திண்மையான உடல்வலி பொருந்தியவன் என்றும்; சேரன் சோழன், பாண்டியன் உட்பட்ட ஏழு அரசர்களை எதிர்த்து நின்று வென்றவர் என்றும் புலவர்கள் இவனைப் புகழ்ந்து பாடுகின்றனர். இவனது அரண்மனைக்கு இல்லையென்று வருவோர்க்கு அடையாத வாயிலைக் கொண்டது என்றும், அவரது கைகள் மழையைப் போல் ஈயும் தன்மையது என்றும் பாடல்கள் அவரைப் புகழ்கின்றன. தனக்குக் கிடைத்த சாவா மருந்தாகிய நெல்லிக்கனியைத் தான் உண்ணாது ஔவையாருக்குக் கொடுத்தார் என்றும் அவரது கொடையின் திறம் பேசப்படுகிறது.
அக்காலத்தில் மலைநாட்டை ஆண்ட மலையமான் திருமுடிக் காரி என்பவருடன் போரிட்டு அவரது தலைநகரமான திருக்கோவிலூரை அஞ்சி கைப்பற்றியதாகத் தெரிகிறது. காரிக்குச் சார்பாகச் சேர மன்னன் பெருஞ் சேரல் இரும்பொறை என்பான் நெடுமான் அஞ்சியுடன் போர் தொடுத்தார். சோழ மன்னனும், பாண்டியனும் அதியமானுக்கு ஆதரவாக இருந்தனர் எனினும்,இப்போரில் தோற்று இறந்தார். இப் போரை நேரில் கண்ட புலவர்கள் பாடிய நூலே தகடூர் யாத்திரை என்பது. இந்நூல் இன்று முழுமையாகக் கிடைக்கவில்லை.
மேற்படி இலக்கியச் சான்றுகள் மட்டுமன்றி, இம்மன்னன் பற்றிய குறிப்புடன் கூடிய ஜம்பைக் கல்வெட்டு என அறியப்படும், தமிழ் பிராமிக் கல்வெட்டு ஒன்று ஜம்பை என்னும் இடத்தில் கிடைத்துள்ளது. ஜம்பை, தென்னாற்காடு மாவட்டம் திருக்கோயிலூருக்கு அண்மையில் உள்ளது. சமண முனிவருக்கு இம்மன்னன் கற்படுக்கைகள் வெட்டிக் கொடுத்தது பற்றி இக் கல்வெட்டுக் கூறுகிறது. சதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி என்று இம்மன்னனின் பெயர் இக் கல்வெட்டில் தெளிவாகக் காணப்படுகிறது. இது கிமு 3 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 2 ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியைச் சேர்ந்தது எனக் கொள்ளப்படுகிறது.
வல்வில் ஓரி
கடையெழு வள்ளல்களுள் ஒருவனான ஓரி சிறந்த வில்லாளி. கொல்லிமலைக்கும் அதைச் சார்ந்த நாட்டிற்கும் தலைவன். இவர் வல்வில் ஓரி எனவும் ஆதன் ஓரி எனவும் அழைக்கப்பெறுவார். தமிழகத்தின் கொல்லிமலைப்பகுதியில் ஆண்டுதோறும் வல்வில் ஓரியின் நினைவாக திருவிழா கொண்டாடப்படுகிறது. இவர் வேட்டுவகவுண்டர் சமுதாய மரபு வழி மன்னர் ஆவார்.
ஒரு முறை வல்வில் ஓரி ராசபுரம் என்னும் பகுதியில் (தற்போது இராசிபுரம்) வேட்டையாட சொல்லும் போது அங்கு ஒரு பன்றியின் மீது அம்பினை செலுத்த, அப்பன்றியானது ஒரு புதரில் போய் மறைந்து விட, அந்த இடத்தில் வல்வில் ஓரி சென்று பார்க்கும் போது அங்கு பன்றிக்கு பதிலாக ஒரு சிவலிங்கமும், அச்சிவலிங்கத்தின் மீது வல்வில் ஓரி எய்த அம்பும், அந்த அம்புபட்டதால் அந்த சிவலிங்கத்தில் ரத்தமும் கசிந்தது. இதைக் கண்ட ஓரி சிவன்தான் தன்னை பன்றி வடிவில் வந்து சோதித்ததாக எண்ணி அவ்விடத்திலேயே சிவபெருமானுக்கு ஸ்ரீ கைலாச நாதர் திருக்கோயில் என்ற பெயரில் ஆலயம் எழுப்பினான். இதனை குறிக்கும் வகையில் அந்த ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயிலின் கொடிமரத்தில் சிவபெருமானை குறிக்கும் வகையில் முள் புதரின் முன் பன்றி வடிவமும், வல்வில் ஓரியை குறிக்கும் வகையில் வாளும் கேடயமும், பொறிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு இவ்வாலய கோபுரத்தின் பின்புறத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
இவன் கடையெழு வள்ளல்களுள் மற்றொருவனான காரியோடு போரிட்டு மாண்டான். நாட்டை வென்ற காரி அதை சேரமான் பெருஞ்சேரலிரும்பொறைக்குக் கொடுத்தான். நற்றிணையில் இவன் பரணரால் சிறப்பிக்கப்பட்டுள்ளான். புறநானூற்றில் வன்பரணர், கழைதின் யானையார் என்போர் இவனைப் புகழ்ந்து பாடிய பாடல்கள் உள்ளன.
காரி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.
காரி கடையெழு வள்ளல்களுள் திருக்கோயிலூரைத் தலைநகராகக் கொண்டு மலாட்டை ஆட்சி புரிந்தவர். திருக்கோயிலூர்க்கு மேற்கே தென்பெண்ணையாற்றின் தென்கரை அடங்கிய பகுதியே மலாடு ஆகும். இவர் மலையமான் திருமுடிக்காரி என்றும், மலையமான் என்றும், கோவற் கோமான் என்றும் அழைக்கப்படும் வள்ளலாவார். இரவலரிடம் எப்போதும் அருள் நிறைந்த சொற்களைப் பேசும் இயல்பினர்.
உலகத்தார் கேட்டு வியக்கும் வகையில் இவர் கொடுத்த கொடை ஒலிக்கும் மணியைக் கழுத்திலும் ஆடுகின்ற அழகிய ‘தலையாட்டம்’ என்ற அணியைத் தலையிலும் அணிந்த குதிரையையும் ஏனைய செல்வங்களையும் இனிய மொழிகளுடன் இரவலர்க்கு இல்லை என்னாது அளித்தார்.
காரியைப் போற்றிப் பாராட்டிப் புலவர்களான கபிலர், பெருஞ்சாத்தனார், நப்பசலையார் ஆகியோர் பாடிய பாடல்கள் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளன.
ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தய தமிழகத்தில் சேர, சோழ, பாண்டிய நாடுகளுக்கிடையே, தென்பெண்ணை ஆற்றங்கரையில் ஒரு நாடு அமைந்திருந்தது. மலைகள் அதிகம் கொண்டது என்பதால் மலையமா நாடு என்று மலாடு என்றும் அழைக்கப்பட்ட நாடு அது. அந்த மலைகளுள் பெரியது முள்ளூர் மலை. மலையடிவாரத்தில் முள்ளுள்ள கொடிகள் பல முளைத்து மலையின் மேல் ஊர்ந்து செல்லும் காரணத்தினால் அப்பெயர் பெற்றிருந்தது. அம்மலை நாடு பெண்ணையாற்றின் உதவியால் பலவளங்களும் பெற்றுச் சிறந்திருந்தது. திருக்கோவிலூரை தலைநகரமாகக் கொண்ட அம்மலையமா நாட்டை காரி என்ற சிற்றரசன் ஆண்டு வந்தான். அவன் முதலில் முள்ளூருக்கும் முள்ளூர் மலைக்கும் தலைவனாகிப் பிறகு மலை நாட்டிற்கே திருமுடி புனைந்து அரசன் ஆனான். அவனுடைய குதிரை கார் நிறமுடையது. அதனால் அவன் மலையமான் திருமுடிக்காரி என்று அழைக்கப்பட்டான்.
காரி ஒரு சிறந்த கல்விமான். ஊர்கள் தோறும் கல்விக்கூடங்கள் பல அமைத்தவன். பாலின பேதமின்றி மக்கள் கல்வியறிவு பெற ஏற்பாடு செய்தவன். காரி கல்வியில் சிறந்து விளங்கியதோடு மட்டும் நில்லாமல் போர்ப் பயிற்சியிலும் வலிமை கொண்டவனாக விரும்பினான். எனவே, தனக்கென ஒரு பஞ்சகல்யாணி குதிரையைத் தேர்ந்தெடுத்து அதனைப் போருக்கு ஏற்ப பழக்கினான். அத்துடன் வில், வாள், வேல் போன்ற படைக்கல பயிற்சிகளிலும் பங்கேற்று வல்லமையாளனாக விளங்கினான். அதனால் மூவேந்தர்களும் தங்களுக்கு வேண்டிய பொழுதெல்லாம் அவனைப் படைத்துணையாக அழைப்பர். காரி எப்பக்கமோ வெற்றி அப்பக்கமே என்ற நிலையில் காரியின் போர்த்திறன் பெரிதும் போற்றப்பட்டது.ஒருமுறை சோழ வேந்தர் பரம்பரையில் வந்த பெருநற்கிள்ளி என்ற சிற்றரசன் உறையூரை ஆண்டு வந்தான். அவனுடைய காலத்தில், சேரர் பரம்பரையில் தோன்றிய யானைக்கண் சேய் என்னும் சிற்றரசன் தொண்டி என்ற ஊரை ஆண்டு வந்தான். யானைக்கண்ணுக்கு உறையூர் மீது ஒரு கண். அதனால் அவன் பெருநற்கிள்ளியைப் பகைத்துக்கொண்டு உறையூரின் மீது அநீதியாகப் படை எடுத்துச் சென்றான். கிள்ளியோடு சண்டையிட்டு பலத்த சேதம் ஏற்படுத்தினான். முடிவில் கிள்ளிக்கு தோல்வியும் இறப்பும் ஏற்பட்டு விடும் என்கிற சூழல் உருவாகியிருந்தது. இந்நிலையில் காரி செய்தியறிந்தான். காரி, கிள்ளியின் பழைய நண்பன். நண்பனுக்கு உதவும்பொருட்டு பெருஞ்சேனையுடன் உறையூர் அடைந்தான். யானைக்கண் சேயின் படைகளை துரத்தியடித்தான்.
காரி வீரத்தில் மட்டுமின்றி நெஞ்சின் ஈரத்திலும் நிகரில்லாத வள்ளலாக இருந்தான். போரில் செய்த உதவிகளின் பொருட்டு மூவேந்தர்களும் அவனுக்கு பல பொருள்களைப் பரிசிலாகவும், ஞாபகார்த்தமாகவும் வழங்குவார்கள். அங்ஙனம் பெற்ற செல்வத்தை ஒருபோதும் தன்னுடையதாக கொண்டதில்லை காரி. அவன் அவனுடைய இல்லத்தலைவி தவிர்த்து மற்ற அனைத்தும் பிறருடையது என்ற எண்ணம் கொண்டிருந்தான். காரி தன்னுடைய அரண்மனை வாயிலில் எவர் வந்து நின்றாலும் வந்தவர்களின் தரத்தையும் திறத்தையும் சீர்த்தூக்கி பாராமல் அனைவருக்கும் வேண்டுவன அளித்தான்.
நள்ளி
நள்ளி கடையெழு வள்ளல்களுள் ஒருவர். மலைவளம் செறிந்த கண்டீர நாட்டினர். இவரை நளிமலை நாடன் என்றும், கண்டீரக் கோப்பெரு நள்ளி என்றும், பெரு நள்ளி என்றும் வழங்கினர். நள்ளி, தம் பால் வந்தவர்க்கு நல்குரவால் பின்னர் நலியாதவாறும், வேறோருவர் பால் சென்று இரவாதவாறும் நிரம்ப நல்கும் இயல்பினர்.நள்ளியைப் போற்றிப் பாராட்டி வன்பரணர் பாடிய பாடல்களைப் புறநானூற்றில் காணலாம்.
பேகன்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.
பேகன் கடையெழு வள்ளல்களுள் ஒருவர். பழனி மலைக்குத் தலைவர். மழை வளம் மிக்க அம்மலையின் காட்டில் மயில்கள் திரிந்து கொண்டிருக்கும். ஒருநாள் அப்படித் திரிந்து கொண்டிருந்த ஒரு மயில் அகவியதைக் கேட்டு, அது குளிரால் நடுங்கி அகவியது என்று நினைத்தார். அவரகத்தே அருள் உணர்ச்சி பெருகவே, தமது போர்வையை அம்மயிலுக்குப் போர்த்தினார். மயில் போர்வையைப் பயன்படுத்திக் கொள்ளுமா? கொள்ளாதா? எனச் சிறிதும் எண்ணிப் பாராமல் இத்தகைய செயல் செய்தார். இதனையே கொடைமடம் எனச் சான்றோர் போற்றிக் கூறினர்.
இவரைப் பற்றிய பாடல்கள்
பரணர் - உதவாத இடங்களிலும் பெய்யும் மழை போலப் பேகன் கொடையில் மடையன். ஆனால் படையில் போர் புரியும்போது மடையன் அல்லன்.பேகன் யானைமீது செல்லும் பழக்கம் கொண்டவன். மயில் உடுத்திக்கொள்ளாது, போர்த்திக்கொள்ளாது என்பது அவனுக்குத் தெரியும். தெரிந்திருந்தும் தன் போர்வையை மயிலுக்குப் போர்த்திவிட்டான். எதுவாகிலும், எந்த அளவினதாயினும் கொடுக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டு கொடுப்பவன். இந்தப் பிறவியில் கொடுத்தால் வரும் பிறவியில் பயன் கிடைக்கும் என்று மறுமை நோக்குவது அன்று அவன் கொடை. பிறர் வறுமையில் வாடக்கூடாது என்று எண்ணிக் கொடுப்பதுதான் அவன் கொடை.
கபிலர் - பேகன் குதிரையில் சென்று சினங்கொண்டு போர் புரிபவன். என்றாலும் அவன் கைகள் வள்ளண்மை மிக்கவை. இப்படிப் புகழ்ந்த கபிலர் உன் மனைவி அழுவதை நிறுத்த வேண்டும் என்று அவனை வேண்டுகிறார்.
இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் - பேகன் ஆண்ட நாடு பெருங்கல் நாடு எனப் போற்றப்பட்டது. பேகன் ஆவியர் குடிப் பெருமகன். மழை பொழிந்த மலையில் ஆடிய மயிலுக்குத் தன் ஆடையைப் போர்த்திவிட்டவன். இவனுக்குப் பின் ஓய்மான் நாட்டில் நல்லியக்கோடன் வள்ளலாகத் திகழ்ந்தான் என்கிறார்
பெருஞ்சித்திரனார் - குமணனைப் பாடும்போது ஏழு வள்ளல்களுக்குப் பின் இருக்கும் வள்ளல் குமணன் ஒருவனே என்று குறிப்பிடுகிறார். அப்போது முருகக் கடவுள் காக்கும் உயர்ந்த உச்சியை உடைய பெருங்கல் இருக்கும் நாட்டை உடையவன் என்று குறிப்பிடுகிறார்.
எழினி
எழினி என்னும் பெயருடன் சங்ககாலத்தில் பல மன்னர்கள் வாழ்ந்துவந்தனர். இவர்களைப் பாடிய புலவர்களைக் கொண்டும், அந்த மன்னர்களைப் பற்றி அவர்கள் தரும் செய்திகளிலிருந்தும் இவர்கள் வெவ்வேறு மன்னர்கள் எனத் தெரிகிறது.
ஏழு வள்ளல்களில் ஒருவனாக அதியமானை ஒரு புலவர் காட்டுகிறார், அவனை அவர் ஔவைக்கு நெல்லிக்கனி ஈந்த அதிகன் எனக் குறிப்பிடுகிறார். இந்த அதியமானின் மகன் எழினியை மற்றொரு புலவர் அந்த ஏழு வள்ளல்களில் ஒருவன் என்கிறார். அதியமான் மரபினர் முதன் முதலாகத் தமிழ்நாட்டுக்குக் கரும்பைக் கொண்டுவந்து பயிரிட்டனர். எழினி என்னும் சொல் திரைச்சீலையைக் குறிக்கும். எனவே எழினி என்னும் பெயர் குடிமக்களுக்குப் பாதுகாப்பு வழங்குபவன் எனப் பொருள்படும்.
ஔவையார் தன்னிடமிருந்த மாக்கிணை என்னும் பறையை முழக்கிக்கொண்டு, விடியல் பொழுதில் கொடும்பூண் எழினி வாயிலில் நின்று அவன் புகழைப் பாடினாராம். பகைவர் கோட்டைகளைக் கைப்பற்றி அவர் நாட்டில் கழுதை ஏர் பூட்டி உழுது வரகும் கொள்ளும் விதைத்தானாம். உடனே வெளிவந்த அவன் பாசிவேர் போல் கிழிந்திருந்த ஔவையின் ஆடைக்கு மாற்றாடையாக நுண்ணூல் கலிங்கம் தந்து விருந்து படைத்தானாம். உப்பு வண்டி மேட்டில் ஏறும்போதும் பள்ளத்தில் இறங்கும்மோதும் முன்னும் பின்னும் கவியாமல் இருப்பதற்காக வண்டியில் சேம - அச்சு என்று ஒரு மரத்தைக் கட்டித் தொங்கவிட்டிருப்பர். எழினி ஔவையைச் சேம - அச்சு போல் பேணிவந்தானாம்.
நன்றி
0 Comments