திருக்குறள் அதிகாரம் 130 - நெஞ்சொடு புலத்தல் - NEJCHODU PULATHTHAL


நெஞ்சொடு புலத்தல் 


திருக்குறள் அதிகாரம் 130 - நெஞ்சொடு புலத்தல் - NEJCHODU PULATHTHAL


குறள் 1291                                                          

அவர்நெஞ் சவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே 
நீயெமக் காகா தது 

மு.வ விளக்க உரை - நெஞ்சே! அவருடைய நெஞ்சம் ( நம்மை நினையாமல் நம்மிடம் வராமல்) அவர்க்குத் துணையாதலைக் கண்டும் நீ எமக்குத் துணையாகாதது ஏன்?  

சாலமன் பாப்பையா விளக்க உரை - நெஞ்சே! அவருடைய நெஞ்சு நம்மை எண்ணாது அவருக்கே துணையாய் நிற்பதை அறிந்தும், நீ எனக்குத் துணை ஆகாமல் அவரையே நினைக்கக் காரணம் என்ன? 

கலைஞர் விளக்க உரை - நெஞ்சே! நம்மை நினைக்காமல் இருப்பதற்கு அவருடைய நெஞ்சு அவருக்குத் துணையாக இருக்கும்போது நீ எமக்குத் துணையாக இல்லாமல் அவரை நினைத்து உருகுவது ஏன்?  

குறள் 1292                                                          

உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச் 
செறாஅரெனச் சேறியென் நெஞ்சு 

மு.வ விளக்க உரை - என் நெஞசே! நம்மேல் அன்பு கொள்ளாத காதலரைக் கண்டபோதும், அவர் வெறுக்கமாட்டார் என்று எண்ணி அவரிடம் செல்கின்றாயே!  

சாலமன் பாப்பையா விளக்க உரை - என் நெஞ்சே! என்மீது அன்பு இல்லாதவரை உள்ளபடியே நீ அறிந்திருந்தும் நாம் போனால் அவர் கோபப்படமாட்டார் என்று எண்ணி நீ அவரிடமே செல்லுகின்றாய்! 

கலைஞர் விளக்க உரை - நெஞ்சே! நம்மிடம் அன்பு காட்டாதவர் அவர் எனக் கண்ட பிறகும், நம்மை வெறுக்க மாட்டார் என நம்பி அவரிடம் செல்கின்றாயே 

குறள் 1293                                                          

கெட்டார்க்கு நட்டாரில் என்பதோ நெஞ்சேநீ 
பெட்டாங் கவர்பின் செலல் 

மு.வ விளக்க உரை - நெஞ்சே! நீ உன் விருப்பத்தின்படியே அவர் பின் செல்வதற்குக் காரணம், துன்பத்தால் அழிந்தவர்க்கு நண்பர் இல்லை என்னும் எண்ணமோ? 

சாலமன் பாப்பையா விளக்க உரை - நெஞ்சே! நீ என்னிடம் இல்லாமல் உன் விருப்பப்படியே அவரிடம் செல்லக் காரணம், இந்த உலகத்தில் கெட்டுப் போனவர்களுக்கு நண்பர் இல்லை என்பதனாலோ? 

கலைஞர் விளக்க உரை - நெஞ்சே! நீ எனை விடுத்து அவரை விரும்பிப் பின் தொடர்ந்து செல்வது, துன்பத்தால் அழிந்தோர்க்கு நண்பர்கள் துணையிருக்க மாட்டார்கள் என்று சொல்வது போலவோ? 

குறள் 1294                                                       

இனியன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே 
துனிசெய்து துவ்வாய்காண் மற்று 

மு.வ விளக்க உரை - நெஞ்சே! நீ ஊடலைச் செய்து அதன் பயனை நுகர மாட்டாய்; இனிமேல் அத்தகையவற்றைப் பற்றி உன்னோடு கலந்து எண்ணப் போகின்றவர் யார்? 

சாலமன் பாப்பையா விளக்க உரை - நெஞ்சே! நீ அவரைப் பார்க்கும்போது இன்பம் நுகர எண்ணுகிறாயே தவிர, அவர் தவறுகளை எண்ணி ஊடி, பிறகு உறவு கொள்ள எண்ணமாட்டாய். ஆதலால் இனி இது போன்றவற்றை உன்னோடு யார் ஆலோசனை செய்வார்? நான் செய்யமாட்டேன். 

கலைஞர் விளக்க உரை - நெஞ்சே! முதலில் ஊடல் செய்து பிறகு அதன் பயனைக் கூடலில் நுகர்வோம் என நினைக்க மாட்டாய்; எனவே அதைப்பற்றி உன்னிடம் யார் பேசப் போகிறார்கள்? நான் பேசுவதாக இல்லை 

குறள் 1295                                                       

பெறாஅமை அஞ்சும் பெறினபிரி வஞ்சும் 
அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு 

மு.வ விளக்க உரை - ( காதலரைப் பெறாதபோது) பெறாமைக்கு அஞ்சும்; பெற்றால் பிரிவை நினைத்து அஞ்சும்; ( இவ்வாறாக) என் நெஞ்சம் தீராத துன்பம் உடையதாகின்றது. 

சாலமன் பாப்பையா விளக்க உரை - என் கணவர் என்னைப் பிரிந்து இருந்தபோது அவர் இல்லாததற்குப் பயப்படும்; அவர் வந்துவிட்டால், பிரிவாரே என்று பயப்படும். ஆகவே என் நெஞ்சம் நீங்காத துன்பத்தைப் பெற்றிருக்கிறது. 

கலைஞர் விளக்க உரை - என் நெஞ்சத்துக்குத் துன்பம் தொடர் கதையாகவே இருக்கிறது காதலரைக் காணவில்லையே என்று அஞ்சும்; அவர் வந்து விட்டாலோ பிரிந்து செல்வாரே என நினைத்து அஞ்சும் 

குறள் 1296                                                       

தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத் 
தினிய இருந்ததென் நெஞ்சு 

மு.வ விளக்க உரை - காதலரைப் பிரிந்து தனியே இருந்து அவருடைய தவறுகளை நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போல் துன்பம் செய்வதாக இருந்தது. 

சாலமன் பாப்பையா விளக்க உரை - காதலர் பிரிவைத் தனியே இருந்து நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போலக் கொடுமையாக இருந்தது. 

கலைஞர் விளக்க உரை - காதலர் பிரிவைத் தனியே இருந்து நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போலக் கொடுமையாக இருந்தது 

குறள் 1297                                                       

நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாவென் 
மாணா மடநெஞ்சிற் பட்டு 

மு.வ விளக்க உரை - காதலனை மறக்க முடியாத என்னுடைய சிறப்பில்லாத மட நெஞ்சினோடு சேர்ந்து, மறக்கத் தகாததாகிய நாணத்தையும் மறந்து விடடேன். 

சாலமன் பாப்பையா விளக்க உரை - தன்னை மறந்த காதலரைத் தான் மறக்க முடியாத, என் நிலையில்லாத மடநெஞ்சோடு கூடி, நான் நாணத்தையும் மறந்துவிட்டேன். 

கலைஞர் விளக்க உரை - அவரை மறக்க முடியாமல் வாடும் என்னுடைய சிறப்பில்லாத மட நெஞ்சத்துடன் சேர்ந்து மறக்கக் கூடாது நாணத்தையும் மறந்து விட்டேன் 

குறள் 1298                                                       

எள்ளின் இளிவாமென் றெண்ணி அவர்திறம் 
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு 

மு.வ விளக்க உரை - உயரின் மேல் காதல் கொண்ட என் நெஞ்சம், பிரிந்த காதலரை இகழ்ந்தால் இழிவாகும் என்று எண்ணி அவருடைய உயர்ந்த பண்புகளையே நினைக்கின்றது. 

சாலமன் பாப்பையா விளக்க உரை - உயிர்மேல் காதலை உடைய என் நெஞ்சு, நாமும் அவரை இகழ்ந்தால் பிறகு நமக்கும் இழிவுவரும் என்று எண்ணி, அவர் வரவையும் கலவியையுமே நினைத்து நின்றது. 

கலைஞர் விளக்க உரை - பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும் 

குறள் 1299                                                       

துன்பத்திற் கியாரே துணையாவார் தாமுடைய 
நெஞ்சந் துணையல் வழி 

மு.வ விளக்க உரை - ஒருவர்க்குத் துன்பம் வந்தபோது, தாம் உரிமையாகப் பெற்றுள்ள நெஞ்சமே துணையாகா விட்டால், வேறு யார் துணையாவார்? 

சாலமன் பாப்பையா விளக்க உரை - ஒருவரது துன்பத்திற்குத் தாம் உரிமையாகப் பெற்றிருக்கும் தம் நெஞ்சமே துணையாகாதபோது, வேறு யார் துணையாவார்? 

கலைஞர் விளக்க உரை - துன்பம் வரும்போது அதனைத் தாங்குவதற்கு நெஞ்சமே துணையாக இல்லாவிட்டால் பிறகு யார் துணையாக இருப்பார்? 

குறள் 1300    
                                                   
தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய 
நெஞ்சம் தமரல் வழி 

மு.வ விளக்க உரை - ஒருவர்க்கு தாம் உரிமையாகப் பெற்ற நெஞ்சமே உறவாகாதபோது அயலார் உறவில்லாதவராக இருப்பது எளிதேயாகும். 

சாலமன் பாப்பையா விளக்க உரை - நமக்குரிய நெஞ்சமே நம்முடன் உறவாக இல்லாத போது, மற்றவர் உறவில்லாதவராக இருத்தல் என்பது எளிதேயாகும். 

கலைஞர் விளக்க உரை - நமக்குரிய நெஞ்சமே நம்முடன் உறவாக இல்லாத போது, மற்றவர் உறவில்லாதவராக இருத்தல் என்பது எளிதேயாகும்

நன்றி

Post a Comment

0 Comments