திருக்குறள் அதிகாரம் 117 - படர்மெலிந் திரங்கல் - PADARMELIN THIRANGAL


படர்மெலிந் திரங்கல் 


திருக்குறள் அதிகாரம் 117 - படர்மெலிந் திரங்கல் - PADARMELIN THIRANGAL


குறள் 1161  

மறைப்பேன்மன் யானிஃதோ நோயை தறைப்பவர்க் 
கூற்றுநீர் போல மிகும் 

மு.வ விளக்க உரை - இக் காமநோயைப் பிறர் அறியாமல் யான் மறைப்பேன், ஆனால் இது இறைப்பவர்க்கு ஊற்று நீர் மிகுவது போல் மிகுகின்றது.   

சாலமன் பாப்பையா விளக்க உரை - என் காதல் துன்பத்தை மற்றவர் அறிந்துவிடக்கூடாது என்று மறைக்கவே செய்தேன்; ஆனாலும் இறைக்க இறைக்க ஊற்றுநீர் பெருகுவது போல மறைக்க மறைக்க என் துன்பமும் பெருகவே செய்கிறது. 

கலைஞர் விளக்க உரை - இறைக்க இறைக்கப் பெருகும் ஊற்றுநீர் போல, பிறர் அறியாமல் மறைக்க மறைக்கக் காதல் நோயும் பெருகும்.  

குறள் 1162  

கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க் 
குரைத்தலும் நாணுத் தரும் 

மு.வ விளக்க உரை - இக் காமநோயைப் பிறர் அறியாமல் முற்றிலும் மறைக்கவும் முடியவில்லை, நோய் செய்த காதலர்க்குச் சொல்வதும் நாணம் தருகின்றது.  

சாலமன் பாப்பையா விளக்க உரை - இந்தத் துன்பத்தை என்னால் மறைக்கவும் முடியவில்லை. துன்பத்தைத் தந்த இவருக்கு (எழுத்தில் தொலைபேசியில்) இதைச் சொல்லவும் வெட்கமாக இருக்கிறது. 

கலைஞர் விளக்க உரை - காதல் நோயை என்னால் மறைக்கவும் முடியவில்லை; இதற்குக் காரணமான காதலரிடம் நாணத்தால் உரைக்கவும் முடியவில்லை. 

குறள் 1163  

காமமும் நாணும் உயிர்காவாத் தூங்குமென் 
நோனா உடம்பின் அகத்து 

மு.வ விளக்க உரை - துன்பத்தைப் பொருக்காமல் வருந்துகின்ற என் உடம்பினிடத்தில் உயிரே காவடித்தண்டாகக் கொண்டு காமநோயும் நாணமும் இருப்பக்கமாக தொங்குகின்றன. 

சாலமன் பாப்பையா விளக்க உரை - காதல் துன்பத்தையும், அவரிடம் சொல்ல முடியாமல் நான்படும் வெட்கத்ததையும் தாங்க முடியாத என் உடம்பில், என் உயிரையே காவடித் தண்டாகக் கொண்டு அதன் ஒரு புறத்தில் காதல் நோயும், மறுமுனையில் வெட்கமும் தொங்குகின்றன. 

கலைஞர் விளக்க உரை - பிரிவைத் தாங்கமுடியாது உயிர் துடிக்கும் என் உடலானது, ஒருபுறம் காதல் நோயும் மறுபுறம் அதனை வெளியிட முடியாத நாணமும் கொண்டு காவடி போல விளங்குகிறது. 

குறள் 1164  

காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும் 
ஏமப் புணைமன்னும் இல் 

மு.வ விளக்க உரை - காமநோயாகிய கடல் இருக்கின்றது. ஆனால் அதை நீந்திக்கடந்து செல்வதற்கு வேண்டிய காவலான தோணியோ இல்லை. 

சாலமன் பாப்பையா விளக்க உரை - காதல் துன்பம், வெட்கம், இவ்விரண்டிலும் என்னுள் மிகுந்திருப்பது காதல் துன்பம் என்னும் கடலே; அதைக் கடக்கப் பாதுகாப்பான படகுதான் இல்லை. 

கலைஞர் விளக்க உரை - காதல் கடல்போலச் சூழ்ந்துகொண்டு வருத்துகிறது ஆனால் அதை நீந்திக் கடந்து செல்லப் பாதுகாப்பான தோணிதான் இல்லை. 

குறள் 1165  

துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு
நட்பினுள் ஆற்று பவர் 

மு.வ விளக்க உரை - ( இன்பமான) நட்பிலேயே துயரத்தை வரச் செய்வதில் வல்லவர். ( துன்பம் தரும் பகையை வெல்லும்) வலிமை வேண்டும்போது என்ன ஆவாரோ? 

சாலமன் பாப்பையா விளக்க உரை - இன்பம் தருவதற்குரிய நட்பிலேயே துன்பத்தைத் தரம் இவர், பகைமையில் என்னதான் செய்வாரோ? 

கலைஞர் விளக்க உரை - நட்பாக இருக்கும்போதே பிரிவுத்துயரை நமக்குத் தரக்கூடியவர், பகைமை தோன்றினால் எப்படிப்பட்டவராய் இருப்பாரோ? 

குறள் 1166 

இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால் 
துன்பம் அதனிற் பெரிது 

மு.வ விளக்க உரை - காமம் மகிழ்விக்கும்போது அதன் இன்பம் கடல் போன்றது; அது வருத்தும்போது அதன் துன்பமோ கடலைவிடப் பெரியது. 

சாலமன் பாப்பையா விளக்க உரை - காதல் மகிழ்ச்சி கடல்போலப் பெரிது; ஆனால் பிரிவினால் அது துன்பம் செய்யத் தொடங்கிவிட்டால் அத்துன்பம் கடலைக் காட்டிலும் பெரிது. 

கலைஞர் விளக்க உரை - காதல் இன்பம் கடல் போன்றது காதலர் பிரிவு ஏற்படுத்தும் துன்பமோ, கடலைவிடப் பெரியது. 

குறள் 1167  

காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன் 
யாமத்தும் யானே உளேன் 

மு.வ விளக்க உரை - காமம் என்னும் வெள்ளத்தை நீந்தியும் அதன் கரையை யான் காணவில்லை; நள்ளிரவிலும் யான் தனியே இருக்கின்றேன். 

சாலமன் பாப்பையா விளக்க உரை - காதல் துன்பமாகிய கடலை நீந்தியும் என்னால் கரை காண முடியவில்லை. நள்ளிரவுப் பொழுதினும் உறங்காமல் நான் தனியாகவே இருக்கிறேன். 

கலைஞர் விளக்க உரை - நள்ளிரவிலும் என் துணையின்றி நான் மட்டுமே இருக்கிறேன்; அதனால், காதலின்பக் கடும் வெள்ளத்தில் நீந்தி, அதன் கரையைக் காண இயலாமல் கலங்குகிறேன். 

குறள் 1168  

மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா 
என்னல்ல தில்லை துணை 

மு.வ விளக்க உரை - இந்த இராக்காலம் இரங்கத்தக்கது; எல்லா உயிரையும் தூங்கச் செய்துவிட்டு என்னை அல்லாமல் வேறு துணை இல்லாமல் இருக்கின்றது. 

சாலமன் பாப்பையா விளக்க உரை - பாவம் இந்த இரவு! இது எல்லா உயிர்களையும் தூங்கச் செய்துவிட்டுத் தனியாகவே இருக்கிறது. இதற்கு என்னைத் தவிர வேறு துணை இல்லை! 

கலைஞர் விளக்க உரை - `இரவே! உலகில் உள்ள எல்லா உயிர்களையும் நீ உறங்கச் செய்துவிட்டுப் பாவம் இப்போது என்னைத்தவிர வேறு துணையில்லாமல் இருக்கிறாய். 

குறள் 1169  

கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள் 
நெடிய கழியும் இரா 

மு.வ விளக்க உரை - ( பிரிந்து துன்புறுகின்ற) இந்நாட்களில் நெடுநேரம் உடையனவாய்க் கழிகின்ற இராக்காலங்கள், பிரிந்த கொடியவரின் கொடுமையை விடத் தாம் கொடியவை. 

சாலமன் பாப்பையா விளக்க உரை - இப்போதெல்லாம் இரவுகள் கழிவதற்கு நெடும்பொழுது ஆகிறது; என்னைப் பிரிந்து போன என் கணவரின் கொடுமையிலும் இவை மிகக் கொடுமையாக இருக்கின்றன. 

கலைஞர் விளக்க உரை - இந்த இரவுகள் நீண்டுகொண்டே போவதுபோல் தோன்றும் கொடுமை இருக்கிறதே அது காதலரின் பிரிவால் ஏற்படும் கொடுமையைவிடப் பெரிதாக உள்ளது.

குறள் 1170  

உள்ளம்போன் றுள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர் 
நீந்தல மன்னோவென் கண் 

மு.வ விளக்க உரை - காதலர் உள்ள இடத்திற்கு என் மனத்தைப்போல் செல்ல முடியுமானால், என் கண்கள் இவ்வாறு வெள்ளமாகிய கண்ணீரில் நீந்த வேண்டியதில்லை. 

சாலமன் பாப்பையா விளக்க உரை - என் மனம் போலவே என் கண்களும் என்னவர் இருக்கும் ஊருக்குச் செல்ல முடியுமானால், அவை கண்ணீர் வெள்ளத்தில் நீந்தமாட்டா. 

கலைஞர் விளக்க உரை - காதலர் இருக்குமிடத்துக்கு என் நெஞ்சத்தைப் போலச் செல்ல முடியுமானால், என் கருவிழிகள், அவரைக் காண்பதற்குக் கண்ணீர் வெள்ளத்தில் நீந்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.

நன்றி

Post a Comment

0 Comments