திருக்குறள் அதிகாரம் 111 - புணர்ச்சி மகிழ்தல் - PUNARCHCHI MAKIZHTHAL


புணர்ச்சி மகிழ்தல் 


திருக்குறள் அதிகாரம் 111 - புணர்ச்சி மகிழ்தல் - PUNARCHCHI MAKIZHTHAL


குறள் 1101  

கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும் 
ஒண்தொடி கண்ணே உள 

மு.வ விளக்க உரை - கண்டும் கேட்டும் உண்டும் முகர்ந்தும் உற்றும் அறிகின்ற ஐந்து புலன்களாகிய இன்பங்களும் ஒளி பொருந்திய வளையல் அணிந்த இவளிடத்தில் உள்ளன. 

சாலமன் பாப்பையா விளக்க உரை - விழியால் பார்த்து, செவியால்கேட்டு, நாவால் உண்டு, மூக்கால் மோந்து, உடம்பால் தீண்டி என் ஐம்பொறிகளாலும் அனுபவிக்கும்படும் இன்பம் ஒளிமிக்க வளையல்களை அணிந்த மனைவியிடம் மட்டுமே உண்டு. 

கலைஞர் விளக்க உரை - வளையல் அணிந்த இந்த வடிவழகியிடம்; கண்டு மகிழவும், கேட்டு மகிழவும், தொட்டு மகிழவும், முகர்ந்துண்டு மகிழவுமான ஐம்புல இன்பங்களும் நிறைந்துள்ளன.  

குறள் 1102  

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை 
தன்னோய்க்குத் தானே மருந்து 

மு.வ விளக்க உரை - நோய்களுக்கு மருந்து வேறு பொருள்களாக இருக்கின்றன, ஆனால் அணிகலன் அணிந்த இவளால் வளர்ந்த நோய்க்கு இவளே மருந்தாக இருக்கின்றாள்.  

சாலமன் பாப்பையா விளக்க உரை - நோய்களுக்கு மருந்து பெரும்பாலும், அந்நோய்களுக்கு மாறான இயல்பை உடையவையே. ஆனால் இவள் தந்த நோய்க்கு இவளே மருந்து. 

கலைஞர் விளக்க உரை - நோய்களைத் தீர்க்கும் மருந்துகள் பல உள்ளன; ஆனால் காதல் நோயைத் தீர்க்கும் மருந்து அந்தக் காதலியே ஆவாள். 

குறள் 1103  

மென்றோள் துயிலின் இனிதுகொல் 
தாமரைக் கண்ணான் உலகு 

மு.வ விளக்க உரை - தாமரைக் கண்ணனுடைய உலகம், தாம் விரும்பும் காதலியரின் மெல்லிய தோள்களில் துயிலும் துயில் போல் இனிமை உடையதோ. 

சாலமன் பாப்பையா விளக்க உரை - தாம் விரும்பும் மனைவியின் மெல்லிய தோளைத் தழுவித் தூங்கும் உறக்கத்தைவிடத் தாமரைக் கண்ணனாகிய திருமாலின் உலகம் இனிமை ஆனதோ? 

கலைஞர் விளக்க உரை - தாமரைக் கண்ணான் உலகம் என்றெல்லாம் சொல்கிறார்களே, அது என்ன! அன்பு நிறைந்த காதலியின் தோளில் சாய்ந்து துயில்வது போல அவ்வளவு இனிமை வாய்ந்ததா? 

குறள் 1104  

நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும் 
தீயாண்டுப் பெற்றாள் இவள் 

மு.வ விளக்க உரை - நீங்கினால் சுடுகின்றது, அணுகினால் குளிர்ச்சியாக இருக்கின்றது, இத்தகைய புதுமையானத் தீயை இவள் எவ்விடத்திலிருந்து பெற்றாள். 

சாலமன் பாப்பையா விளக்க உரை - தன்னை நீங்கினால் சுடும், நெருங்கினால் குளிரும் ஒரு தீயை என் உள்ளத்தில் ஏற்ற, இவள் அதை எங்கிருந்து பெற்றாள்? 

கலைஞர் விளக்க உரை - நீங்கினால் சுடக்கூடியதும் நெருங்கினால் குளிரக் கூடியதுமான புதுமையான நெருப்பை இந்த மங்கை எங்கிருந்து பெற்றாள். 

குறள் 1105  

வேட்ட பொழுதின் அவையவை போலுமே 
தோட்டார் கதுப்பினாள் தோள் 

மு.வ விளக்க உரை - மலரணிந்த கூந்தலை உடைய இவளுடைய தோள்கள் விருப்பமான பொருள்களை நினைத்து விரும்பிய பொழுது அவ்வப் பொருள்களைப் போலவே இன்பம் செய்கின்றன. 

சாலமன் பாப்பையா விளக்க உரை - நாம் விரும்பும் பொருள்கள் விரும்பியபொழுது விரும்பியவாறே இன்பம் தருவது போல, பூச்சூடிய கூந்தலை உடைய இவள் தோள்கள் இவளுடன் எப்போது கூடினாலும் இன்பம் தருகின்றன. 

கலைஞர் விளக்க உரை - விருப்பமான பொருள் ஒன்று, விரும்பிய பொழுதெல்லாம் வந்து இன்பம் வழங்கினால் எப்படியிருக்குமோ அதைப் போலவே பூ முடித்த பூவையின் தோள்கள் இன்பம் வழங்குகின்றன. 

குறள் 1106  

உறுதோ றுயிர்தளிர்ப்பத் தீண்டலாற் பேதைக் 
கமிழ்தின் இயன்றன தோள் 

மு.வ விளக்க உரை - பொருந்து போதெல்லாம் உயிர் தளிர்க்கும் படியாகத் தீண்டுதலால் இவளுக்கு தோள்கள் அமிழ்தத்தால் செய்யப்பட்டிருக்க வேண்டும். 

சாலமன் பாப்பையா விளக்க உரை - இவளை அணைக்கும்போது எல்லாம் வாடிக் கிடந்த என் உயிர் தளிர்க்கும்படி என்னைத் தொடுவதால், இவளின் தோள்கள் அமிழ்தத்தில் செய்யப்பட்டவை போலும். 

கலைஞர் விளக்க உரை - இந்த இளமங்கையைத் தழுவும் போதெல்லாம் நான் புத்துயிர் பெறுவதற்கு இவளின் அழகிய தோள்கள் அமிழ்தத்தினால் ஆனவை என்பதுதான் காரணம் போலும். 

குறள் 1107  

தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால் 
அம்மா அரிவை முயக்கு 

மு.வ விளக்க உரை - அழகிய மா நிறம் உடைய இவளுடைய தழுவுதல், தம்முடைய வீட்டிலிருந்து தாம் ஈட்டிய பொருளைப் பகுந்து கொடுத்து உண்டாற் போன்றது. 

சாலமன் பாப்பையா விளக்க உரை - அழகிய மா நிறப் பெண்ணாகிய என் மனைவியிடம் கூடிப் பெறும் சுகம், தன் சொந்த வீட்டில் இருந்து கொண்டு, தன் உழைப்பில் வந்தவற்றைத் தனக்குரியவர்களுடன் பகிர்ந்து உண்ண வரும் சுகம் போன்றது. 

கலைஞர் விளக்க உரை - தானே உழைத்துச் சேர்த்ததைப் பலருக்கும் பகுத்து வழங்கி உண்டு களிப்பதில் ஏற்படும் இன்பம், தனது அழகிய காதல் மனைவியைத் தழுவுகின்ற இன்பத்துக்கு ஒப்பானது. 

குறள் 1108  

வீழும் இருவர்க் கினிதே வளியிடை 
போழப் படாஅ முயக்கு 

மு.வ விளக்க உரை - காற்று இடையறுத்துச் செல்லாதபடி தழுவும் தழுவுதல், ஒருவரை ஒருவர் விரும்பிய காதலர் இருவருக்கும் இனிமை உடையதாகும். 

சாலமன் பாப்பையா விளக்க உரை - இறுக அணைத்துக் கிடப்பதால் காற்றும் ஊடே நுழைய முடியாதபடி கூடிப் பெறும் சுகம், விரும்பிக் காதலிப்பார் இருவர்க்கும் இனிமையானதே. 

கலைஞர் விளக்க உரை - காதலர்க்கு மிக இனிமை தருவது, காற்றுகூட இடையில் நுழைய முடியாத அளவுக்கு இருவரும் இறுகத் தழுவி மகிழ்வதாகும். 

குறள் 1109 

ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம் 
கூடியார் பெற்ற பயன் 

மு.வ விளக்க உரை - ஊடுதல், ஊடலை உணர்ந்து விடுதல், அதன்பின் கூடுதல் ஆகிய இவை காதல் வாழ்வு நிறைவேறப் பெற்றவர் பெற்ற பயன்களாகும். 

சாலமன் பாப்பையா விளக்க உரை - படுக்கைக்குப் போகுமுன் சிறு ஊடல் செய்தல், தவறு உணர்ந்து சமாதானம் ஆதல், அதன்பின் கூடல் இவை அல்லவா திருமணம் செய்து கொண்டவர் பெற்ற பயன்கள்! 

கலைஞர் விளக்க உரை - ஊடல் கொள்வதும், அதனால் விளையும் இன்பம் போதுமென உணர்ந்து அதற்கும் மேலான இன்பம் காணப் புணர்ந்து மயங்குவதும் காதல் வாழ்வினர் பெற்றிடும் பயன்களாகும். 

குறள் 1110  

அறிதோ றறியாமை கண்டற்றால் காமம் 
செறிதோறும் சேயிழை மாட்டு 

மு.வ விளக்க உரை - செந்நிற அணிகலன்களை அணிந்த இவளிடம் பொருந்துந்தோறும் காதல் உணர்தல்,நூற் பொருள்களை அறிய அறிய அறியாதமைக் கண்டாற் போன்றது. 

சாலமன் பாப்பையா விளக்க உரை - நூல்களாலும் நுண் அறிவாலும் அறிய அறிய முன்னைய நம் அறியாமை தெரிவதுபோல, நல்ல அணிகளை அணிந்திருக்கும் என் மனைவியுடன் கூடக் கூட அவள் மீது உள்ள என் காதற்சுவையும் புதிது புதிதாகத் தெரிகிறது. 

கலைஞர் விளக்க உரை - மாம்பழ மேனியில் அழகிய அணிகலன்கள் பூண்ட மங்கையிடம் இன்பம் நுகரும் போதெல்லாம் ஏற்படும் காதலானது, இதுவரை அறியாதவற்றைப் புதிதுபுதிதாக அறிவதுபோல் இருக்கிறது.

நன்றி

Post a Comment

0 Comments