திருக்குறள் அதிகாரம் 101 - நன்றியில் செல்வம் - NANRIYIL SELVAM


நன்றியில் செல்வம் 


திருக்குறள் அதிகாரம் 101 - நன்றியில் செல்வம் - NANRIYIL SELVAM


குறள் 1001  

வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான் 
செத்தான் செயக்கிடந்த தில் 

மு.வ விளக்க உரை - ஒருவன் இடமெல்லாம் நிறைந்த பெரும் பொருளைச் சேர்த்து வைத்து அதை உண்டு நூகராமல் இறந்து போனால் அவன் அந்த பொருளால் செய்ய முடிந்தது ஒன்றுமில்லை.  

சாலமன் பாப்பையா விளக்க உரை - தன் வீடு நிறையப் பெரும்பொருள் சேர்த்து வைத்திருந்தும், கஞ்சத்தனத்தால் அதை அனுபவிக்காதவனுக்கு அப்பொருளால் பயன் இல்லை. ஆதலால் அவன் இருந்தாலும் இறந்தவனே. 

கலைஞர் விளக்க உரை - அடங்காத ஆசையினால் வீடு கொள்ளாத அளவுக்குச் செல்வத்தைச் சேர்த்து வைத்து அதனை அனுபவிக்காமல் செத்துப் போகிறவனுக்கு, அப்படிச் சேர்க்கப்பட்ட செல்வத்தினால் என்ன பயன்?  

குறள் 1002  

பொருளானாம் எல்லாமென்றீயா திவறும் 
மருளானாம் மாணாப் பிறப்பு 

மு.வ விளக்க உரை - பொருளால் எல்லாம் ஆகும் என்று பிறர்க்கு ஒன்றும் கொடுக்காமல் இறுகப்பற்றிய மயக்கத்தால் சிறப்பில்லாத பிறவி உண்டாம்.  

சாலமன் பாப்பையா விளக்க உரை - பொருளால் எல்லாவற்றையும் சாதிக்கலாம் என்று எண்ணி அதைத் தேடிய பின் தானும் அனுபவிக்காமல், பிறர் தேவைக்கும் அதைத் தராமல் கஞ்சனாக வாழ்பவனின் மயக்கத்தால் அவனுக்கு முழுமையற்ற பேய்ப்பிறப்பு உண்டாகும். 

கலைஞர் விளக்க உரை - யாருக்கும் எதுவும் கொடுக்காமல், தன்னிடமுள்ள பொருளால் எல்லாம் ஆகுமென்று, அதனைவிடாமல் பற்றிக் கொண்டிருப்பவன் எந்தச் சிறப்புமில்லாத இழி பிறவியாவான். 

குறள் 1003  

ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர் 
தோற்றம் நிலக்குப் பொறை 

மு.வ விளக்க உரை - சேர்த்து வைப்பதையே விரும்பிப் பற்றுள்ளம் கொண்டு புகழை விரும்பாத மக்கள் பிறந்து வாழ்தல் நிலத்திற்கு பாரமே ஆகும். 

சாலமன் பாப்பையா விளக்க உரை - மற்றவரைவிட நாம் அதிகம் பொருள் சேர்க்க வேண்டும் என்று பொருள் சேர்ப்பதையே விரும்பிப் புகழை விரும்பாத மனிதரின் பிறப்பு இப்பூமிக்குப் பாரமே. 

கலைஞர் விளக்க உரை - புகழை விரும்பாமல் பொருள் சேர்ப்பது ஒன்றிலேயே குறியாக இருப்பவர்கள் பிறந்து வாழ்வதே இந்தப் பூமிக்குப் பெரும் சுமையாகும். 

குறள் 1004  

எச்சமென் றென்னெண்ணுங் கொல்லோ ஒருவரால் 
நச்சப் படாஅ தவன் 

மு.வ விளக்க உரை - பிறர்க்கு உதவியாக வாழாதக் காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவன் , தான் இறந்த பிறகு எஞ்சி நிற்பது என்று எதனை எண்ணுவானே. 

சாலமன் பாப்பையா விளக்க உரை - பிறர்க்கு ஏதும் வழங்காதவன் ஆதலால் எவராலும் விரும்பப்படாத அவன், தன் காலத்திற்குப் பின் தன்னை நினைவுபடுத்தி நிற்கப்போவது என்று எதை எண்ணுவான்? 

கலைஞர் விளக்க உரை - யாராலும் விரும்பப்படாத ஒருவன், தன் மரணத்திற்குப் பிறகு எஞ்சி நிற்கப் போவது என்று எதனை நினைத்திட முடியும்? 

குறள் 1005 

கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க் கடுக்கிய 
கோடியுண் டாயினும் இல் 

மு.வ விளக்க உரை - பிறர்க்கு கொடுத்து உதவுவதும் தான் நுகர்வதும் இல்லாதவர்க்கு மேன் மேலும் பெருகிய பல கோடிப் பொருள் உண்டானாலும் பயன் இல்லை. 

சாலமன் பாப்பையா விளக்க உரை - தேவைப்படுவோர்க்குக் கொடுப்பதும், தேவை கண்டு தாம் அனுபவிப்பதும் இல்லாதவர்க்குப்பல மடங்காக அடுக்கிய கோடிப் பொருள் இருந்தாலும் இல்லாததே ஆகும். 

கலைஞர் விளக்க உரை - கொடுத்து உதவும் பண்பினால் இன்பமுறும் இயல்பு இல்லாதவரிடம், கோடி கோடியாகச் செல்வம் குவிந்தாலும் அதனால் பயன் எதுவுமில்லை. 

குறள் 1006  

ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன் 
றீத லியல்பிலா தான் 

மு.வ விளக்க உரை - தானும் நுகராமல் தக்கவற்க்கு ஒன்று கொடுத்து உதவும் இயல்பும் இல்லாமல் வாழ்கின்றவன், தன்னிடமுள்ள பெருஞ் செல்வத்திற்கு ஒரு நோய் ஆவான். 

சாலமன் பாப்பையா விளக்க உரை - தானும் அனுபவிக்காமல், தகுதியானவர்க்குத் தரும் மனப்பாங்கும் இல்லாமல் வாழ்பவனிடம் இருக்கும் பெரும் செல்வம் ஒரு நோயே. 

கலைஞர் விளக்க உரை - தானும் அனுபவிக்காமல் தக்கவர்களுக்கு உதவிடும் இயல்பும் இல்லாமல் வாழ்கிறவன், தன்னிடமுள்ள பெருஞ்செல்வத்தைத் தொற்றிக்கொண்ட நோயாவான். 

குறள் 1007  

அற்றார்க்கொன் றாற்றாதான் செல்வம் மிகநலம் 
பெற்றாள் தமியள்மூத் தற்று 

மு.வ விளக்க உரை - பொருள் இல்லாத வறியவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவாதவனுடையச் செல்வம், மிக்க அழகு பெற்றவள் தனியாக வாழ்ந்து முதுமையுற்றாற் போன்றது. 

சாலமன் பாப்பையா விளக்க உரை - ஏதும் இல்லாதவர்க்கு ஏதாவது ஒன்றைக் கொடுத்து உதவாதவன் செல்வம், மிகுந்த அழகு பெற்ற பெண், திருமணமாகாமலே முதுமை அடைந்தது போலாம். 

கலைஞர் விளக்க உரை - வறியவர்க்கு எதுவும் வழங்கி உதவாதவனுடைய செல்வம், மிகுந்த அழகியொருத்தி, தன்னந்தனியாகவே இருந்து முதுமையடைவதைப் போன்றது. 

குறள் 1008  

நச்சுப் படாதவன் செல்வம் நடுவூருள் 
நச்சு மரம்பழுத் தற்று 

மு.வ விளக்க உரை - பிறர்க்கு உதவாத காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவனுடைய செல்வம், ஊர் நடுவில் நச்சு மரம் பழுத்தாற் போன்றது. 

சாலமன் பாப்பையா விளக்க உரை - எவராலும் விரும்பப்படாதவனின் செல்வம் ஊரின் நடுவே நின்ற நச்சு மரம் பழுத்தது போலாம். 

கலைஞர் விளக்க உரை - வெறுக்கப்படுகிறவரிடம் குவிந்துள்ள செல்வமும், ஊர் நடுவே நச்சு மரத்தில் காய்த்துக் குலுங்குகின்ற பழமும் வெவ்வேறானவையல்ல! 

குறள் 1009  

அன்பொரீஇத் தற்செற் றறநோக்கா தீட்டிய 
ஒண்பொருள் கொள்வார் பிறர் 

மு.வ விளக்க உரை - பிறரிடம் செலுத்தும் அன்பையும் விட்டுத் தன்னையும் வருத்தி அறத்தையும் போற்றாமல் சேர்த்து வைத்தப் பெரும் பொருளைப் பெற்று நுகர்பவர் மற்றவரே. 

சாலமன் பாப்பையா விளக்க உரை - பிறர்க்கு ஈயாமல் அன்பை விட்டு விலகி, எதையும் அனுபவிக்காமல் தன்னை வருத்தி, அறத்தை எண்ணாது சேர்த்த பொருளை மற்றவர் அனுபவிப்பர். 

கலைஞர் விளக்க உரை - அன்பெனும் பண்பை அறவே நீக்கி, தன்னையும் வருத்திக் கொண்டு, அறவழிக்குப் புறம்பாகச் சேர்த்துக் குவித்திடும் செல்வத்தைப் பிறர் கொள்ளை கொண்டு போய் விடுவர். 

குறள் 1010  

சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி 
வறங்கூர்ந் தனைய துடைத்து 

மு.வ விளக்க உரை - புகழ் பொருந்திய செல்வர் உற்ற சிறிய வறுமை உலகத்தைக் காக்க வல்ல மேகம் வறுமை மிகுந்தாற் போன்ற தன்மை உடையது. 

சாலமன் பாப்பையா விளக்க உரை - பிறர்க்குக் கொடுத்துப் புகழ்மிக்கவர் ஆகிய செல்வர்கள் சிறிது காலம் வறுமைப்பட நேர்ந்தால், அது மழை தரம் மேகமே வறுமைப்பட்டது போலாம். 

கலைஞர் விளக்க உரை - சிறந்த உள்ளம் கொண்ட செல்வர்களுக்கேற்படும் சிறிதளவு வறுமையின் நிழல்கூட, மழை பொய்த்து விட்டதற்கு ஒப்பானதாகும்.

நன்றி

Post a Comment

0 Comments