திருக்குறள் அதிகாரம் 67 - வினைத்திட்பம் - VINAITHTHITPAM


வினைத்திட்பம் 


திருக்குறள் அதிகாரம் 67 - வினைத்திட்பம் - VINAITHTHITPAM


குறள் 661  

வினைத்திட்பம் என்ப தொருவன் மனத்திட்பம் 
மற்றைய எல்லாம் பிற 

மு.வ விளக்க உரை - ஒரு தொழிலின் திட்பம் என்று சொல்லப்படுவது ஒருவனுடைய மனதின் திட்பமே (உறுதியே) ஆகும், மற்றவை எல்லாம் வேறானவை.   

சாலமன் பாப்பையா விளக்க உரை - ஒரு செயலை இடையில் விடாது செய்து முடிப்பதற்கான செயல் உறுதி என்பது ஒருவனின் மன உறுதியே. மற்றவை உறுதி எனப்படமாட்டா. 

கலைஞர் விளக்க உரை - மற்றவை எல்லாம் இருந்தும் ஒருவரது மனத்தில் உறுதி மட்டும் இல்லாவிட்டால் அவரது செயலிலும் உறுதி இருக்காது.  

குறள் 662 

ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின் 
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள் 

மு.வ விளக்க உரை - இடையூறு வருவதற்கு முன்பே நீக்குதல், வந்த பின் தளராமை ஆகிய இந்த இரண்டினது வழியே வினைத்திட்பம் பற்றி ஆராய்ந்தவரின் கொள்கையாம்.  

சாலமன் பாப்பையா விளக்க உரை - பழுதுபடும் செயல்களைச் செய்யாது இருப்பது, பழுதுபட்டாலும் மனம் தளராமல் இருப்பது இவ்விரண்டும் நீதிநூல் பல ஆய்ந்தவர்களின் கோட்பாடு என்று கூறுவர். 

கலைஞர் விளக்க உரை - இடையூறு வருவதற்கு முன்பே அதனை நீக்கிட முனைவது, மீறி வந்து விடுமேயானால் மனம் தளராது இருப்பது ஆகிய இரண்டு வழிகளுமே அறிவுடையோர் கொள்கையாம். 

குறள் 663  

கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின் 
எற்றா விழுமந் தரும் 

மு.வ விளக்க உரை - செய்யும் செயலை முடிவில் வெளிப்படும் படியாக செய்யும் தகுதியே ஆண்மையாகும், இடையில் வெளிபட்டால் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும். 

சாலமன் பாப்பையா விளக்க உரை - ஒரு செயலை முடிவில் வெளிப்படுத்துவதே ஆளுமை, இடையிலேயே வெளிப்படுத்தினால் அது செயலைச் செய்பவனுக்கு நீங்காத துன்பத்தைத் தரும். 

கலைஞர் விளக்க உரை - செய்து முடிக்கும் வரையில் ஒரு செயலைப்பற்றி வெளிப்படுத்தாமலிருப்பதே செயலாற்றும் உறுதி எனப்படும் இடையில் வெளியே தெரிந்துவிட்டால் அச்செயலை நிறைவேற்ற முடியாத அளவுக்கு இடையூறு ஏற்படக்கூடும். 

குறள் 664  

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் 
சொல்லிய வண்ணம் செயல் 

மு.வ விளக்க உரை - இச் செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம் என்று சொல்லுதல் எவர்க்கும் எளியனவாம், சொல்லிய படி செய்து முடித்தல் அரியனவாம். 

சாலமன் பாப்பையா விளக்க உரை - நான் இந்தச் செயலை இப்படிச் செய்யப் போகிறேன் என்று சொல்லுவது எல்லார்க்கும் சுலபம்; சொல்லியபடியே அதைச் செய்து முடிப்பதுதான் கடினம். 

கலைஞர் விளக்க உரை - சொல்லுவது எல்லோருக்கும் எளிது; சொல்லியதைச் செய்து முடிப்பதுதான் கடினம்.

குறள் 665 

வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண் 
ஊறெய்தி உள்ளப் படும் 

மு.வ விளக்க உரை - செயல் திறனால் பெருமைபெற்று உயர்ந்தவரின் வினைத் திட்பமானது நாட்டை ஆளும் அரசனிடத்திலும் எட்டி மதிக்கப்பட்டு விளங்கும். 

சாலமன் பாப்பையா விளக்க உரை - எண்ணங்களால் சிறந்து, பெருமை மிக்கவர்களின் செயல் உறுதி. அரசு வரை செல்வதால் மற்றவர்களாலும் மதிக்கப்படும். 

கலைஞர் விளக்க உரை - செயல் திறனால் சிறப்புற்ற மாண்புடையவரின் வினைத் திட்பமானது, ஆட்சியாளரையும் கவர்ந்து பெரிதும் மதித்துப் போற்றப்படும். 

குறள் 666  

எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார் 
திண்ணியர் ஆகப் பெறின் 

மு.வ விளக்க உரை - எண்ணியவர் (எண்ணியபடியே செயல் ஆற்றுவதில்) உறுதியுடையவராக இருக்கப்பெற்றால் அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர். 

சாலமன் பாப்பையா விளக்க உரை - ஒன்றைச் செய்ய எண்ணியவர் அதைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற மனஉறுதியை உடையவராக இருந்தால், அடைய நினைத்தவற்றை எல்லாம் அவர் எண்ணப்படியே அடைவார். 

கலைஞர் விளக்க உரை - எண்ணியதைச் செயல்படுத்துவதில் உறுதி உடையவர்களாக இருந்தால் அவர்கள் எண்ணியவாறே வெற்றி பெறுவார்கள். 

குறள் 667 

உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க் 
கச்சாணி யன்னார் உடைத்து 

மு.வ விளக்க உரை - உருளும் பெரிய தேர்க்கு அச்சில் இருந்து தாங்கும் சிறிய ஆணிப் போன்றவர்கள் உலகத்தில் உள்ளனர், அவர்களுடைய உருவின் சிறுமையைக்கண்டு இகழக் கூடாது. 

சாலமன் பாப்பையா விளக்க உரை - அச்சாணி சிறியது எனினும் உருளுகின்ற பெரிய தேருக்கு அது உதவுவது போல, மன உறுதி உடையவர்கள் வடிவத்தால் சிறியர் எனினும் செயலால் பெரியர் என்பதால் அவரை இகழக்கூடாது. 

கலைஞர் விளக்க உரை - உருவத்தால் சிறியவர்கள் என்பதற்காக யாரையும் கேலி செய்து அலட்சியப்படுத்தக் கூடாது பெரிய தேர் ஓடுவதற்குக் காரணமான அச்சாணி உருவத்தால் சிறியதுதான் என்பதை உணர வேண்டும். 

குறள் 668 

கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது 
தூக்கங் கடிந்து செயல் 

மு.வ விளக்க உரை - மனம் தளராமல் ஆராய்ந்து துணிந்து ஏற்றத் தொழிலைச் சோர்வு கொள்ளாமல் காலந் தாழ்த்தாமல் செய்து முடிக்க வேண்டும். 

சாலமன் பாப்பையா விளக்க உரை - மனம் தெளிந்து செய்யத் துணிந்த செயலைத் தடுமாறாமல் தாமதிக்காமல் செய்க. 

கலைஞர் விளக்க உரை - மனக் குழப்பமின்றித் தெளிவாக முடிவு செய்யப்பட்ட ஒரு செயலைத் தளர்ச்சியும், தாமதமும் இடையே ஏற்படாமல் விரைந்து நிறைவேற்ற வேண்டும். 

குறள் 669 

துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி 
இன்பம் பயக்கும் வினை 

மு.வ விளக்க உரை - (முடிவில்) இன்பம் கொடுக்கும் தொழிலைச் செய்யும் போது துன்பம் மிக வந்த போதிலும் துணிவு மேற்கொண்டு செய்து முடிக்க வேண்டும். 

சாலமன் பாப்பையா விளக்க உரை - ஒரு செயலைச் செய்யும்போது துன்பம் அதிகமாக வந்தாலும் முடிவில் இன்பம் தரும் அச்செயலை மனம் தளராமல் செய்க. 

கலைஞர் விளக்க உரை - இன்பம் தரக்கூடிய செயல் என்பது, துன்பம் வந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் துணிவுடன் நிறைவேற்றி முடிக்கக் கூடியதேயாகும். 

குறள் 670 

எனைத்திட்ப மெய்தியக் கண்ணும் வினைத்திட்பம் 
வேண்டாரை வேண்டா துலகு 

மு.வ விளக்க உரை - வேறு எத்தகைய உறுதி உடையவராக இருந்தாலும், செய்யும் தொழிலில் உறுதி இல்லாதவரை உலகம் விரும்பிப் போற்றாது. 

சாலமன் பாப்பையா விளக்க உரை - எத்தனை வகை உறுதி உடையவராக இருந்தாலும் செயல் உறுதி இல்லாதவரை உயர்ந்தோர் மதிக்கமாட்டார். 

கலைஞர் விளக்க உரை - எவ்வளவுதான் வலிமையுடையவராக இருப்பினும் அவர் மேற்கொள்ளும் செயலில் உறுதியில்லாதவராக இருந்தால், அவரை உலகம் மதிக்காது. 

நன்றி

Post a Comment

0 Comments