திருக்குறள் அதிகாரம் 58 - கண்ணோட்டம் - KANNOTTAM


கண்ணோட்டம் 


திருக்குறள் அதிகாரம் 58 - கண்ணோட்டம் - KANNOTTAM


குறள் 571 

கண்ணோட்டம் என்னுங் கழிபெருங் காரிகை 
உண்மையான் உண்டிவ் வுலகு 

மு.வ விளக்க உரை - கண்ணோட்டம் என்று சொல்லப்படுகின்ற மிகச் சிறந்த அழகு இருக்கும் காரணத்தால் தான், இந்த உலகம் அழியாமல் இருக்கின்றது.

சாலமன் பாப்பையா விளக்க உரை - முகம் பார்த்தல் என்னும் பேரழகு மனிதருள் இருப்பதால்தான் மக்கள் வாழ்க்கை தொடர்கின்றது. 

கலைஞர் விளக்க உரை - இந்த உலகம், அன்பும் இரக்கமும் இணைந்த கண்ணோட்டம் எனப்படுகிற பெரும் அழகைக் கொண்டவர்கள் இருப்பதால்தான் பெருமை அடைகிறது.

குறள் 572 

கண்ணோட்டத் துள்ள துலகியல் அஃதிலார் 
உண்மை நிலக்குப் பொறை 

மு.வ விளக்க உரை - கண்ணோட்டத்தினால் உலகியல் நடைபெறுகின்றது, கண்ணோட்டம் இல்லாதவர் உயிரோடு இருத்தல் நிலத்திற்குச் சுமையே தவிர வேறு பயனில்லை.  

சாலமன் பாப்பையா விளக்க உரை - மக்கள் வாழ்க்கை கண்ணோட்டத்தால்தான் இயங்குகின்றது அக்கண்ணோட்டம் இல்லாதவர் வாழ்வது இப்பூமிக்கு பாரமே. 

கலைஞர் விளக்க உரை - அன்புடன் அரவணைத்து இரக்கம் காட்டும் கண்ணோட்டம் எனப்படும் உலகியலுக்கு, மாறாக இருப்பவர்கள் இந்தப் பூமிக்குச் சுமையாவார்கள்.

குறள் 573 

பண்ணென்னாம் பாடற் கியைபின்றேற் கண்ணென்னாங் 
கண்ணோட்டம் இல்லாத கண் 

மு.வ விளக்க உரை - பாடலோடு பொருந்துதல் இல்லையானால் இசை என்ன பயனுடையதாகும், அதுபோல் கண்ணோட்டம் இல்லாவிட்டால் கண் என்ன பயனுடையதாகும். 

சாலமன் பாப்பையா விளக்க உரை - பாடப்படும் பாடலுக்குப் பொருந்தவில்லை என்றால் ராகத்தால் என்ன பயன்? அதுபோல கண்ணோட்டம் இல்லை என்றால் கண்ணால்தான் என்ன பயன்? 

கலைஞர் விளக்க உரை - இரக்க உணர்வு, அன்பு எனும் கண்ணோட்டத்துடன் பொருந்தி வராத கண்ணும், பாடலுடன் பொருந்தி வராத இசையும் பயன் தராதவையாகும்.

குறள் 574 

உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினாற் 
கண்ணோட்டம் இல்லாத கண் 

மு.வ விளக்க உரை - தக்க அளவிற்குக் கண்ணோட்டம் இல்லாத கண்கள் முகத்தில் உள்ளவை போல் தோன்றுதல் அல்லாமல் வேறு என்ன பயன் செய்யும். 

சாலமன் பாப்பையா விளக்க உரை - வரம்பிற்கு உட்பட்ட கண்ணோட்டம் இல்லாத கண், முகத்தில் இருப்பது போல் இருக்கிறதே தவிர, அதனால் வேறு என்ன பயன் உண்டு? 

கலைஞர் விளக்க உரை - அகத்தில் அன்பையும் இரக்கத்தையும் சுரக்கச் செய்யாத கண்கள் முகத்தில் உள்ளவைபோல் தோன்றுவதைத் தவிர, வேறு எந்தப்பயனும் இல்லாதவைகளாகும். 

குறள் 575 

கண்ணிற் கணிகலங் கண்ணோட்டம் அஃதின்றேற் 
புண்ணென் றுணரப் படும் 

மு.வ விளக்க உரை - ஒருவனுடைய கண்ணுக்கு அணிகலமாவது கண்ணோட்டம் என்னும் பண்பே, அஃது இல்லையானால் புண் என்று உணரப்படும். 

சாலமன் பாப்பையா விளக்க உரை - ஒருவன் கண்ணிற்கு அணியும் நகை கண்ணோட்டமே; அந்த நகை மட்டும் இல்லை என்றால் அது புண் என்று பெரியோரால் அறியப்படும். 

கலைஞர் விளக்க உரை - கருணையுள்ளம் கொண்டவருடைய கண்ணே கண் என்று கூறப்படும் இல்லையானால் அது கண் அல்ல; புண்.

குறள் 576 

மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ 
டியைடந்துகண் ணோடா தவர் 

மு.வ விளக்க உரை - கண்ணோட்டதிற்க்கு உரிய கண்ணோடுப் பொருந்தி இருந்தும் கண்ணோட்டம் இல்லாதவர் (கண் இருந்தும் காணாத ) மரத்தினைப் போன்றவர். 

சாலமன் பாப்பையா விளக்க உரை - கண் பெற்றிருந்தும் கண்ணோட்டம் இல்லாதவர் இயங்கினாலும் மண்ணோடு சேர்ந்து இயங்காமல் நிற்கும் மரம் போன்றவரே. 

கலைஞர் விளக்க உரை - ஒருவர்க்குக் கண் இருந்தும்கூட அந்தக் கண்ணுக்குரிய அன்பும் இரக்கமும் இல்லாவிட்டால் அவர் மரத்துக்கு ஒப்பானவரே ஆவார்.

குறள் 577 

கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார் 
கண்ணோட்டம் இன்மையும் இல் 

மு.வ விளக்க உரை - கண்ணோட்டம் இல்லாத மக்கள் கண் இல்லாதவரே ஆவர், கண் உடைய மக்கள் கண்ணோட்டம் இல்லா திருத்தலும் இல்லை. 

சாலமன் பாப்பையா விளக்க உரை - கண்ணோட்டம் இல்லாதவர் கண் இல்லாதவரே; கண் இருப்பவர் கண்ணோட்டம் இல்லாதவராக இருப்பதும் இல்லை. 

கலைஞர் விளக்க உரை - கருணை மனம் கொண்டவர்க்கு இருப்பதே கண்கள் எனப்படும்; கருணையற்றோர் கண்ணற்றோர் என்றே கருதப்படுவார்கள்.

குறள் 578 

கருமஞ் சிதையாமற் கண்ணோட வல்லார்க் 
குரிமை உடைத்திவ் வுலகு 

மு.வ விளக்க உரை - தம் தம் கடமையாகிய தொழில் கெடாமல் கண்ணோட்டம் உடையவராக இருக்க வல்லவர்க்கு இவ்வுலகம் உரிமை உடையது. 

சாலமன் பாப்பையா விளக்க உரை - தம் செயலுக்குச் சேதம் வராமல் கண்ணோட்டம் கொள்ளும் ஆற்றல் உடையவர்க்கு இந்த உலகம் சொந்தமாகும். 

கலைஞர் விளக்க உரை - கடமை தவறாமையிலும், கருணை பொழிவதிலும் முதன்மையாக இருப்போருக்கு இந்த உலகமே உரிமையுடையதாகும். 

குறள் 579 

ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணுங்கண் ணோடிப் 
பொறுத்தாற்றும் பண்பே தலை 

மு.வ விளக்க உரை - தண்டித்தற்குரிய தன்மை உடையவரிடத்திலும் கண்ணோட்டம் செய்து ( அவர் செய்த குற்றத்தைப்) பொருத்துக் காக்கும் பண்பே சிறந்தது. 

சாலமன் பாப்பையா விளக்க உரை - தம்மை வருத்தும் இயல்புடையவரிடத்திலும் கண்ணோட்டம் கொண்டு, அவர்தம் பிழையைப் பொறுக்கும் பண்பே சிறந்தது. 

கலைஞர் விளக்க உரை - அழிக்க நினைத்திடும் இயல்புடையவரிடத்திலும் பொறுமை காட்டுவது மிக உயர்ந்த பண்பாகும்.

குறள் 580 

பெயக்கண்டு நஞ்சுண் டமைவர் நயத்தக்க 
நாகரிகம் வேண்டு பவர் 

மு.வ விளக்க உரை - எவராலும் விரும்பத்தக்க நாகரிகமான கண்ணோட்டத்தை விரும்புகின்றவர், பழகியவர் தமக்கு நஞ்சு இடக்கண்டும் அதை உண்டு அமைவர். 

சாலமன் பாப்பையா விளக்க உரை - எல்லாராலும் விரும்பத்தக்க நாகரிகத்தை விரும்புபவர், தமக்கு நெருக்கமானவர் நஞ்சையே தருகிறார் என அறிந்தும் கண்ணோட்டம் காரணமாக அதை உண்டு அவருடன் பழகுவர். 

கலைஞர் விளக்க உரை - கருணை உள்ளமும் பண்பாடும் உள்ளவர்கள், தம்முடன் பழகியவர்கள் நஞ்சு கொடுத்தாலும் அதை அருந்திக் களிப்படைவார்கள்.

நன்றி

Post a Comment

0 Comments