திருக்குறள் அதிகாரம் 55 - செங்கோன்மை - SENGKONMAI


செங்கோன்மை


திருக்குறள் அதிகாரம் 55 - செங்கோன்மை - SENGKONMAI


குறள் 541 

ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டும் 
தேர்ந்துசெய் வஃதே முறை 

மு.வ விளக்க உரை - யாரிடத்திலும் (குற்றம் இன்னதென்று) ஆராய்ந்து, கண்ணோட்டம் செய்யாமல் நடுவுநிலைமைப் பொருந்தி (செய்யத்தக்கதை) ஆராய்ந்து செய்வதே நீதிமுறையாகும். 

சாலமன் பாப்பையா விளக்க உரை - குடிமக்கள் செய்யும் குற்றத்தை ஆய்ந்து எவரிடத்தும் விருப்பு, வெறுப்பு இல்லாமல், நடுநிலையோடு நூல்வழி ஆராய்ந்து, குற்றத்திற்கு ஏற்ற தண்டனையை வழங்குவதே நேர்மையான ஆட்சி. 

கலைஞர் விளக்க உரை - குற்றம் இன்னதென்று ஆராய்ந்து எந்தப் பக்கமும் சாயாமல் நடுவுநிலைமை தவறாமல் வழங்கப்படுவதே நீதியாகும்.

குறள் 542 

வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் 
கோனோக்கி வாழுங் குடி 

மு.வ விளக்க உரை - உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நம்பி வாழ்கின்றன, அதுபோல் குடிமக்கள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர். 

சாலமன் பாப்பையா விளக்க உரை - உயிர்கள் எல்லாம் மழையை எதிர்பார்த்தே வாழும்; குடிமக்களோ ஆளுவோரின் நேர்மையான ஆட்சியை எதிர்பார்த்தே வாழ்வர். 

கலைஞர் விளக்க உரை - உலகில் உள்ள உயிர்கள் வாழ்வதற்கு மழை தேவைப்படுவது போல ஒரு நாட்டின் குடிமக்கள் வாழ்வதற்கு நல்லாட்சி தேவைப்படுகிறது.

குறள் 543

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் 
நின்றது மன்னவன் கோல் 

மு.வ விளக்க உரை - அந்தணர் போற்றும் மறைநூலுக்கும் அறத்திற்கும் அடிப்படையாய் நின்று உலகத்தைக் காப்பது அரசனுடைய செங்கோலாகும். 

சாலமன் பாப்பையா விளக்க உரை - அறிவை வளர்த்துக் கொள்பவர்தம் ஞான நூல்களுக்கும், அறத்திற்கும் அடிப்படையாய் இருப்பது ஆளுவோரின் நேர்மையான ஆட்சியே. 

கலைஞர் விளக்க உரை - ஓர் அரசின் செங்கோன்மைதான் அறவோர் நூல்களுக்கும் அறவழிச் செயல்களுக்கும் அடிப்படையாக அமையும்.

குறள் 544 

குடிதழீஇக் கோலோச்சு மாநில மன்னன் 
அடிதழீஇ நிற்கும் உலகு 

மு.வ விளக்க உரை - குடிகளை அன்போடு அணைத்துக் கொண்டு செங்கோல் செலுத்துகின்ற அரசனுடைய அடியைப்பொருந்தி உலகம் நிலை பெறும். 

சாலமன் பாப்பையா விளக்க உரை - குடிமக்களை அணைத்துக் கொண்டு, நேர்மையான ஆட்சியை நடத்தும் சிறந்த ஆட்சியாளரின் கால்களைச் சுற்றியே மக்கள் வாழ்வர். 

கலைஞர் விளக்க உரை - குடிமக்களை அரவணைத்து ஆட்சி நடத்தும் நல்லரசின் அடிச்சுவட்டை நானிலமே போற்றி நிற்கும். 

குறள் 545

இயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்ட 
பெயலும் விளையுளுந் தொக்கு 

மு.வ விளக்க உரை - நீதி முறைப்படி செங்கோல் செலுத்தும் அரசனுடைய நாட்டில் பருவ மழையும் நிறைந்த விளைவும் ஒருசேர ஏற்படுவனவாகும். 

சாலமன் பாப்பையா விளக்க உரை - அரச நீதிநூல்கள் கூறியபடி, நேர்மையாக ஆளும் ஆட்சியாளரிடம் பருவமழையும், குறையாத விளைச்சலும் சேர்ந்தே இருக்கும். 

கலைஞர் விளக்க உரை - நீதி வழுவாமல் ஓர் அரசு நாட்டில் இருக்குமேயானால் அது, பருவகாலத்தில் தவறாமல் பெய்யும் மழையினால் வளமான விளைச்சல் கிடைப்பதற்கு ஒப்பானதாகும்.

குறள் 546 

வேலன்று வென்றி தருவது மன்னவன் 
கோலதூஉங் கோடா தெனின் 

மு.வ விளக்க உரை - ஒருவனுக்கு வெற்றி பெற்றுத் தருவது வேல் அன்று, அரசனுடைய செங்கோலே ஆகும், அச் செங்கோலும் கோணாதிருக்குமாயின். 

சாலமன் பாப்பையா விளக்க உரை - ஆட்சியாளருக்கு வெற்றி தருவது ஆயுதம் அன்று; அவரின் நேரிய ஆட்சியே; அதுவும் தவறான ஆட்சியாக இல்லாதிருக்க வேண்டும். 

கலைஞர் விளக்க உரை - ஓர் அரசுக்கு வெற்றியைத் தருவது பகைவரை வீழ்த்தும் வேலல்ல; குடிமக்களை வாழவைக்கும் வளையாத செங்கோல்தான். 

குறள் 547 

இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை 
முறைகாக்கும் முட்டாச் செயின் 

மு.வ விளக்க உரை - உலகத்தை எல்லாம் அரசன் காப்பாற்றுவான், நீதிமுறை கெடாதவாறு ஆட்சி செய்வானாயின் அரசனை அந்த முறையே காப்பாற்றும். 

சாலமன் பாப்பையா விளக்க உரை - ஆட்சியாளர் பூமியைக் காப்பர்; அவரையோ அவரது குறையற்ற நேர்மையான ஆட்சி காக்கும். 

கலைஞர் விளக்க உரை - நீதி வழுவாமல் ஓர் அரசு நடைபெற்றால் அந்த அரசை அந்த நீதியே காப்பாற்றும். 

குறள் 548 

எண்பதத்தான் ஓரா முரறசெய்யா மன்னவன் 
தண்பதத்தான் தானே கெடும் 

மு.வ விளக்க உரை - எளிய செவ்வி உடையவனாய் ஆராய்ந்து நீதி முறை செய்யாத அரசன், தாழ்ந்த நிலையில் நின்று (பகைவரில்லாமலும் ) தானே கெடுவான்.

சாலமன் பாப்பையா விளக்க உரை - நீதி தேடி வருவார்க்கு எளிய காட்சியாளனாய், நீதி தேடுவார் சொல்வதைப் பலவகை நூலாரோடும், ஆராய்ந்து நீதி வழங்காத ஆட்சியாளன். பாவமும் பலியும் எய்தித் தானே அழிவான். 

கலைஞர் விளக்க உரை - ஆடம்பரமாகவும், ஆராய்ந்து நீதி வழங்காமலும் நடைபெறுகிற அரசு தாழ்ந்த நிலையடைந்து தானாகவே கெட்டொழிந்து விடும்.

குறள் 549

குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல் 
வடுவன்று வேந்தன் தொழில் 

மு.வ விளக்க உரை - குடிகளைப் பிறர் வருந்தாமல் காத்து, தானும் வருந்தாமல் காப்பாற்றி, அவற்களுடைய குற்றங்களைத் தக்க தண்டனையால் ஒழித்தல், அரசனுடைய தொழில் பழி அன்று. 

சாலமன் பாப்பையா விளக்க உரை - அயலவர் அழிக்காமல் குடிமக்களையும் தன்னையும் காத்து, குடிகளின் குறைகளைக் களைந்து நேரிய ஆட்சி செய்வது, ஆட்சியாளருக்குக் குறை ஆகாது. அது அவர் தொழில். 

கலைஞர் விளக்க உரை - குடிமக்களைப் பாதுகாத்துத் துணை நிற்பதும், குற்றம் செய்தவர்கள் யாராயினும் தனக்கு இழுக்கு வரும் என்று கருதாமல் தண்டிப்பதும் அரசின் கடமையாகும்.

குறள் 550

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் 
களைகட் டதனொடு நேர் 

மு.வ விளக்க உரை - கொடியவர் சிலரைக் கொலைத்தண்டனையால் அரசன் ஒறுத்தல் பயிரைக் காப்பாற்றக் களையைச் களைவதற்க்கு நிகரான செயலாகும். 

சாலமன் பாப்பையா விளக்க உரை - கொடியவர்களுக்கு மரண தண்டனை கொடுத்துத் தக்கவரைக் காப்பது, உழவன் களையைக் களைந்து பயிரைக் காப்பதற்குச் சமம். 

கலைஞர் விளக்க உரை - கொலை முதலிய கொடுமைகள் புரிவோரை, ஓர் அரசு தண்டனைக்குள்ளாக்குவது பயிரின் செழிப்புக்காகக் களை எடுப்பது போன்றதாகும்.

நன்றி

Post a Comment

0 Comments