திருக்குறள் அதிகாரம் 33 - கொல்லாமை - KOLLAMAI


கொல்லாமை
 

திருக்குறள் அதிகாரம் 33 - கொல்லாமை - KOLLAMAI


குறள் 321

அறவினை யாதெனின் கொல்லாமை கோறல் 
பிறவினை எல்லாந் தரும் 


மு.வ விளக்க உரை - அறமாகிய செயல் எது என்றால் ஒரு உயிரையும் கொல்லாமையாகும், கொல்லுதல் அறமல்லாத செயல்கள் எல்லாவற்றையும் விளைக்கும். 

சாலமன் பாப்பையா விளக்க உரை - அறச்செயல் எது என்றால், பிற உயிர்களைக் கொலை செய்யாது இருப்பதே; கொல்வது அனைத்துப் பாவங்களையும் தரும். 

கலைஞர் விளக்க உரை - எந்த உயிரையும் கொல்லாதிருப்பதே அறச்செயலாகும் கொலை செய்தல் தீயவினைகள் அனைத்தையும் விளைவிக்கும் 

குறள் 322

பகுத்துணடு பல்லுயி ரோம்புதல் நூலோர் 
தொகுத்தவற்று ளெல்லாந் தலை 


மு.வ விளக்க உரை - கிடைத்ததைப் பகுந்து கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும். 

சாலமன் பாப்பையா விளக்க உரை - இருப்பதைப் பகிர்ந்து உண்டு, பல உயிர்களையும் பாதுகாப்பது, நூல் எழுதியவர்கள் தொகுத்த அறங்களுள் எல்லாம் முதன்மையான அறமாகும். 

கலைஞர் விளக்க உரை - இருப்போர் இல்லாதோர் என்றில்லாமல், கிடைத்ததைப் பகிர்ந்துகொண்டு, எல்லா உயிர்களும் வாழ வேண்டும் என்ற சமநிலைக் கொள்கைக்கு ஈடானது வேறு எதுவுமே இல்லை 

குறள் 323 

ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன் 
பின்சாரப் பொய்யாமை நன்று
 

மு.வ விளக்க உரை - இணையில்லாத ஓர் அறமாகக் கொல்லாமை நல்லது, அதற்கு அடுத்த நிலையில் கூறத்தக்கதாகப் பொய்யாமை நல்லது. 

சாலமன் பாப்பையா விளக்க உரை - உயிர்களைக் கொல்லாத செயல், அறங்களுள் எல்லாம் சிறந்த தனி அறமாம். அதற்கு அடுத்துச் சிறந்த அறம் பொய்யாமை. 

கலைஞர் விளக்க உரை - அறங்களின் வரிசையில் முதலில் கொல்லாமையும் அதற்கடுத்துப் பொய்யாமையும் இடம் பெறுகின்றன 

குறள் 324

நல்லா றெனப்படுவ தியாதெனின் யாதொன்றுங் 
கொல்லாமை சூழும் நெறி 


மு.வ விளக்க உரை - நல்ல வழி என்று அறநூல்களால் சொல்லப்படுவது எது என்றால், எந்த உயிரையும் கொல்லாத அறத்தைப் போற்றும் நெறியாகும். 

சாலமன் பாப்பையா விளக்க உரை - நல்ல வழி எது என்றால், எந்த உயிரையும் கொலை செய்யாமல் அறம் காக்கும் வழிதான். 

கலைஞர் விளக்க உரை - எந்த உயிரையும் கொல்லக் கூடாது எனும் நெறி காப்பதுதான் நல்லற வழி எனப்படும் 

குறள் 325

நிலையஞ்சி நீத்தாரு ளெல்லாங் கொலையஞ்சிக் 
கொல்லாமை சூழ்வான் தலை 


மு.வ விளக்க உரை - வாழ்க்கையின் தன்மையைக்கண்டு அஞ்சித் துறந்தவர்கள் எல்லாரிலும், கொலைசெய்வதற்க்கு அஞ்சிக் கொல்லாத அறத்தைப் போற்றுகின்றவன் உயர்ந்தவன். 

சாலமன் பாப்பையா விளக்க உரை - வாழ்க்கை நிலைக்கு அஞ்சி மனத் துறவு கொண்டவருள் எல்லாம் கொலை செய்வதால் வரும் பாவத்திற்கு அஞ்சி வாழ்பவன் உயர்ந்தவன் ஆவான். 

கலைஞர் விளக்க உரை - உலகியல் நிலையை வெறுத்துத் துறவு பூண்டவர் எல்லோரையும்விடக் கொலையை வெறுத்துக் கொல்லாமையைக் கடைப்பிடிப்பவரே சிறந்தவராவார் 

குறள் 326 

கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல் 
செல்லா துயிருண்ணுங் கூற்று
 

மு.வ விளக்க உரை - கொல்லாத அறத்தை மேற்கொண்டு நடக்கின்றவனுடைய வாழ்நாளின் மேல், உயிரைக்கொண்டு செல்லும் கூற்றுவனும் செல்லமாட்டான். 

சாலமன் பாப்பையா விளக்க உரை - கொலை செய்யாமல் வாழ்வதைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்பவனின் வாழ்நாளின்மேல் உயிர் உண்ணும் கூற்று குறுக்கிடாது. 

கலைஞர் விளக்க உரை - கொலை செய்யாமையை வாழ்வில் அறநெறியாகக் கொண்டவரின் பெருமையை வியந்து, சாவுகூட அவர் உயிரைப் பறிக்கத் தயங்கி நிற்கும் 

குறள் 327

தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறி 
தின்னுயிர் நீக்கும் வினை 


மு.வ விளக்க உரை - தன் உயிர் உடம்பிலிருந்து நீங்கிச் செல்வதாக இருந்தாலும், அதைத் தடுப்பதற்காகத் தான் வேறோர் உயிரை நீக்கும் செயலைச் செய்யக்கூடாது. 

சாலமன் பாப்பையா விளக்க உரை- தன் உயிரையே இழக்க நேர்ந்தாலும், பிற இன்னுயிரை அதன் உடம்பிலிருந்து போக்கும் செயலைச் செய்யவேண்டா. 

கலைஞர் விளக்க உரை - தன்னுயிரே போவதாக இருப்பினும்கூட அதற்காக இன்னொரு உயிரைப் போக்கும் செயலில் ஈடுபடக்கூடாது 

குறள் 328

நன்றாகும் ஆக்கம் பெரிதெனினுஞ் சான்றோர்க்குக் 
கொன்றாகும் ஆக்கங் கடை 


மு.வ விளக்க உரை - கொலையால் நன்மையாக விளையும் ஆக்கம் பெரிதாக இருந்தாலும், சான்றோர்க்குக் கொலையால் வரும் ஆக்கம் மிக இழிவானதாகும். 

சாலமன் பாப்பையா விளக்க உரை - வேள்விகளில் கொலை செய்வதால் நன்மை வரும், செல்வம் பெருகும் என்றாலும், பிற உயிரைக் கொல்வதால் வரும் செல்வத்தைச் சான்றோர் இழிவானதாகவே எண்ணுவர். 

கலைஞர் விளக்க உரை - பெரிதாக நன்மை தரக்கூடிய அளவுக்கு ஒரு கொலை பயன்படக் கூடுமெனினும், நல்ல பண்புடைய மக்கள், அந்த நன்மையை இழிவானதாகவே கருதுவார்கள் 

குறள் 329

கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர் 
புன்மை தெரிவா ரகத்து 


மு.வ விளக்க உரை - கொலைத்தொழிலினராகிய மக்கள் அதன் இழிவை ஆராய்ந்தவரிடத்தில் புலைத்தொழிலுடையவராய்த் தாழ்ந்து தோன்றுவர். 

சாலமன் பாப்பையா விளக்க உரை - கொலை செய்வதைத் தொழிலாகக் கொண்டு வாழும் மக்கள், அத்தொழிலின் தீமையை அறியாதவர் என்றாலும், அறிந்த பெரியோர் மனத்துள் அவர்கள் கீழான செயல் செய்பவராய் எண்ணப்படுவார். 

கலைஞர் விளக்க உரை - பகுத்தறிவை இழந்து செயல்படும் கொலைகாரர்களைச் சான்றோர் உள்ளம், இழிதகைப் பிறவிகளாகவே கருதும் 

குறள் 330

உயிருடம்பின் நீக்கியா ரென்ப செயிருடம்பின் 
செல்லாத்தீ வாழ்க்கை யவர் 


மு.வ விளக்க உரை - நோய் மிகுந்த உடம்புடன் வறுமையான தீய வாழ்க்கை உடையவர், முன்பு கொலை பல செய்து உயிர்களை உடம்புகளில் இருந்து நீக்கினவர் என்று அறிஞர் கூறுவர். 

சாலமன் பாப்பையா விளக்க உரை - நோய் நிறைந்த உடம்புடன், வறுமையால், இழிந்த வாழ்க்கையை இன்று வாழ்பவர்கள், முற்பிறப்பில் பிற உயிர்களை உடம்பிலிருந்து நீக்கிக் கொலை செய்தவர் என்று அறிந்தோர் கூறுவர். 

கலைஞர் விளக்க உரை - வறுமையும் நோயும் மிகுந்த தீய வாழ்க்கையில் உழல்வோர், ஏற்கனவே கொலைகள் பல செய்தவராக இருப்பர் என்று முன்னோர் கூறுவர்

நன்றி

Post a Comment

0 Comments