திருக்குறள் அதிகாரம் 17 - அழுக்காறாமை - ALUKKARAMAI


அழுக்காறாமை


திருக்குறள் அதிகாரம் 17 - அழுக்காறாமை - ALUKKARAMAI


குறள் 161 

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத் 
தழுக்கா றிலாத இயல்பு 


மு.வ விளக்க உரை - ஒருவன் தன் நெஞ்சில் பொறாமை இல்லாமல் வாழும் இயல்பைத் தனக்கு உரிய ஒழுக்க நெறியாகக் கொண்டு போற்ற வேண்டும். 

சாலமன் பாப்பையா விளக்க உரை - உள்ளத்துள் பொறாமை இல்லாமல் வாழும் குணத்தை, ஒருவன் தனக்கு உரிய ஒழுக்கமாகக் கொள்க 

கலைஞர் விளக்க உரை - மனத்தில் பொறாமையில்லாமல் வாழும் இயல்பை ஒழுக்கத்திற்குரிய நெறியாகப் பெற்று விளங்கிட வேண்டும் 

குறள் 162

விழுப்பேற்றின் அஃதொப்ப தில்லையார் மாட்டும் 
அழுக்காற்றின் அன்மை பெறின் 


மு.வ விளக்க உரை - யாரிடத்திலும் பொறாமை இல்லாதிருக்கப் பெற்றால், ஒருவன் பெறத்தக்க மேம்பாடான பேறுகளில் அதற்கு ஒப்பானது வேறொன்றும் இல்லை. 

சாலமன் பாப்பையா விளக்க உரை - எவர் இடத்தும் பொறாமை கொள்ளாதிருப்பதை ஒருவன் பெற்றால் சீரிய சிறப்புகளுள் அது போன்றது வேறு இல்லை. 

கலைஞர் விளக்க உரை - யாரிடமும் பொறாமை கொள்ளாத பண்பு ஒருவர்க்கு வாய்க்கப் பெறுமேயானால் அதற்கு மேலான பேறு அவருக்கு வேறு எதுவுமில்லை 

குறள் 163

அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம் 
பேணா தழுக்கறுப் பான் 


மு.வ விளக்க உரை - தனக்கு அறமும் ஆக்கமும் விரும்பாதவன் என்று கருதத் தக்கவனே, பிறனுடைய ஆக்கத்தைக் கண்டு மகிழாமல் அதற்காகப் பொறாமைப்படுவான். 

சாலமன் பாப்பையா விளக்க உரை - பிறர் உயர்வு கண்டு மகிழாமல் பொறாமைப்படுபவன், அறத்தால் வரும் புண்ணியத்தை வேண்டா என மறுப்பவன் ஆவான் 

கலைஞர் விளக்க உரை - அறநெறியையும், ஆக்கத்தையும் விரும்பிப் போற்றாதவன்தான், பிறர் பெருமையைப் போற்றாமல் பொறாமைக் களஞ்சியமாக விளங்குவான் 

குறள் 164

அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின் 
ஏதம் படுபாக் கறிந்து 


மு.வ விளக்க உரை - பொறாமைப்படுதலாகிய தவறான நெறியில் துன்பம் ஏற்படுத‌ை அறிந்து, பொறாமை காரணமாக அறமல்லாதவைகளைச் செய்யார் அறிவுடையோர். 

சாலமன் பாப்பையா விளக்க உரை - பொறாமை கொண்டால் துன்பம் வரும் என்பதை அறிந்து அறிவுடையோர் பொறாமை காரணமாகத் தீமைகளைச் செய்யமாட்டார் 

கலைஞர் விளக்க உரை - தீய வழியில் சென்றால் துன்பம் ஏற்படுமென்பதை அறிந்தவர்கள் பொறாமையினால் தீச்செயல்களில் ஈடுபடமாட்டார்கள்

குறள் 165 

அழுக்கா றுடையார்க் கதுசாலும் ஒன்னார் 
வழுக்கியுங் கேடீன் பது 


மு.வ விளக்க உரை - பொறாமை உடையவர்க்கு வேறு பகை வேண்டா. அஃது ஒன்றே போதும், பகைவர் தீங்கு செய்யத் தவறினாலும் தவறாது கேட்டைத் தருவது அது. 

சாலமன் பாப்பையா விளக்க உரை - பொறாமை உடையவர்க்குத் தீமை தரப் பகைவர் வேண்டியதில்லை; பொறாமையே போதும் 

கலைஞர் விளக்க உரை - பொறாமைக் குணம் கொண்டவர்களுக்கு அவர்களை வீழ்த்த வேறு பகையே வேண்டா அந்தக் குணமே அவர்களை வீழ்த்தி விடும் 

குறள் 166 

கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் 
உண்பதூஉ மின்றிக் கெடும் 


மு.வ விளக்க உரை - பிறர்க்கு உதவியாகக் கொடுக்கப்படும் பொருளைக் கண்டு பொறாமைப்படுகின்றவனுடைய சுற்றம், உடையும் உணவும் இல்லாமல் கெடும். 

சாலமன் பாப்பையா விளக்க உரை - பிறர்க்குக் கொடுப்பதைக் கண்டு பொறாமைப் படுகிறவனின் குடும்பம், உடுக்கவும், உண்ணவும் இல்லாமல் அலையும். 

கலைஞர் விளக்க உரை - உதவியாக ஒருவருக்குக் கொடுக்கப்படுவதைப் பார்த்துப் பொறாமை கொண்டால் அந்தத் தீய குணம், அவனை மட்டுமின்றி அவனைச் சார்ந்திருப்போரையும் உணவுக்கும், உடைக்கும்கூட வழியில்லாமல் ஆக்கிவிடும் 

குறள் 167 

அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவள் 
தவ்வையைக் காட்டி விடும் 


மு.வ விளக்க உரை - பொறாமை உடையவனைத் திருமகள் கண்டு பொறாமைப்பட்டுத் தன் தமக்கைக்கு அவனைக் காட்டி நீங்கி விடுவாள். 

சாலமன் பாப்பையா விளக்க உரை - பிறர் உயர்வு கண்டு பொறாமைப்படுபவனைப் பார்க்கும் திருமகள் வெறுப்புக் கொண்டு தன் அக்காள் மூதேவிக்கு அவனை அடையாளம் காட்டிவிட்டு விலகிப் போய்விடுவாள். 

கலைஞர் விளக்க உரை - செல்வத்தை இலக்குமி என்றும், வறுமையை அவளது அக்காள் மூதேவி என்றும் வர்ணிப்பதுண்டு பொறாமைக் குணம் கொண்டவனை அக்காளுக்கு அடையாளம் காட்டிவிட்டுத் தங்கை இலக்குமி அவனைவிட்டு அகன்று விடுவாள் 

குறள் 168 

அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத் 
தீயுழி உய்த்து விடும் 


மு.வ விளக்க உரை - பொறாமை என்று கூறப்படும் ஒப்பற்ற பாவி, ஒருவனுடைய செல்வத்தைக் கெடுத்துத் தீய வழியில் அவனைச் செலுத்தி விடும். 

சாலமன் பாப்பையா விளக்க உரை - பொறாமை எனப்படும் ஒப்பில்லாத பாவி எவனிடம் இருக்கிறதோ, அவனது செல்வத்தை அழிப்பதோடு, அவனை நரகத்திலும் அது சேர்க்கும் 

கலைஞர் விளக்க உரை - பொறாமை எனும் தீமை ஒருவனுடைய செல்வத்தையும் சிதைத்துத் தீய வழியிலும் அவனை விட்டுவிடும் 

குறள் 169

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் 
கேடும் நினைக்கப் படும் 


மு.வ விளக்க உரை - பொறாமை பொருந்திய நெஞ்சத்தானுடைய ஆக்கமும், பொறாமை இல்லாத நல்லவனுடைய கேடும் ஆராயத் தக்கவை 

சாலமன் பாப்பையா விளக்க உரை - பொறாமை கொண்ட மனத்தவனின் உயர்வும், அது இல்லாத நல்லவனின் தாழ்வும் பற்றி ஆராய்க 

கலைஞர் விளக்க உரை - பொறாமைக் குணம் கொண்டவனின் வாழ்க்கை வளமாக இருப்பதும், பொறாமைக் குணம் இல்லாதவனின் வாழ்க்கை வேதனையாக இருப்பதும் வியப்புக்குரிய செய்தியாகும் 

குறள் 170

அழுக்கற் றகன்றாரும் இல்லையஃ தில்லார் 
பெருக்கத்தில் தீர்ந்தாரு மில்
 

மு.வ விளக்க உரை - பொறாமைப்பட்டுப் பெருமையுற்றவரும் உலகத்தில் இல்லை; பொறாமை இல்லாதவராய் மேம்பாட்டிலிருந்து நீங்கியவரும் இல்லை. 

சாலமன் பாப்பையா விளக்க உரை - பொறாமை கொண்டு உயர்ந்தவரும் இல்லை. அது இல்லாதபோது தாழ்ந்தவரும் இல்லை 

கலைஞர் விளக்க உரை - பொறாமை கொண்டதால் புகழ் பெற்று உயர்ந்தோரும் இல்லை; பொறாமை இல்லாத காரணத்தால் புகழ் மங்கி வீழ்ந்தோரும் இல்லை

நன்றி

Post a Comment

0 Comments