திருக்குறள் அதிகாரம் 12 - நடுவு நிலைமை - NADUVU NILAIMAI


நடுவு நிலைமை 


திருக்குறள் அதிகாரம் 12 - நடுவு நிலைமை - NADUVU NILAIMAI


குறள் 111 

தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற் 
பாற்பட் டொழுகப் பெறின் 

மு.வ விளக்க உரை - அந்தந்தப் பகுதிதோறும் முறையோடு பொருந்தி ஒழுகப்பெற்றால், நடுவுநிலைமை என்று கூறப்படும் அறம் நன்மையாகும். 

சாலமன் பாப்பையா உரை - பகைவர், நண்பர், அயலார் என்னும் பிரிவினர் தோறும் நீதி தவறாது பின்பற்றப்படுமானால் நடுவுநிலைமை என்று சொல்லப்படும் ஓர் அறம் மட்டுமே வாழ்க்கைக்குப் போதும். 

கலைஞர் உரை - பகைவர், அயலோர், நண்பர் எனப்பகுத்துப் பார்த்து ஒருதலைச் சார்பாக நிற்காமல் இருத்தலே நன்மை தரக்கூடிய நடுவுநிலைமை எனும் தகுதியாகும் 

குறள் 112 

செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி 
எச்சத்திற் கேமாப் புடைத்து 


மு.வ விளக்க உரை - நடுவுநிலைமை உடையவனின் செல்வவளம் அழிவில்லாமல் அவனுடைய வழியில் உள்ளார்க்கும் உறுதியான நன்மை தருவதாகும். 

சாலமன் பாப்பையா உரை - நீதியை உடையவனின் செல்வம் அழியாமல் அவன் வழியினர்க்குப் பாதுகாப்பாக இருக்கும் 

கலைஞர் உரை - நடுவுநிலையாளனின் செல்வத்திற்கு அழிவில்லை; அது, வழிவழித் தலைமுறையினர்க்கும் பயன் அளிப்பதாகும் 

குறள் 113 

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை 
அன்றே யொழிய விடல் 


மு.வ விளக்க உரை - தீமை பயக்காமல் நன்மையே தருவதானாலும் நடுவு நி‌லைமை தவறி உண்டாகும் ஆக்கத்தை அப்போதே கைவிட வேண்டும். 

சாலமன் பாப்பையா உரை - நன்மையே தருவதாக இருந்தாலும் நீதியை விட்டு விலகுவதால் வரும் லாபத்தை, அப்பொழுதே விட்டு விடுக. 

கலைஞர் உரை - நடுவுநிலை தவறுவதால் ஏற்படக்கூடிய பயன் நன்மையையே தரக் கூடியதாக இருந்தாலும், அந்தப் பயனைக் கைவிட்டு நடுவுநிலையைத்தான் கடைப்பிடிக்க வேண்டும் 

குறள் 114 

தக்கார் தகவிலர் என்ப தவரவர் 
எச்சத்தாற் காணப் படும் 


மு.வ விளக்க உரை - நடுவுநிலைமை உடையவர் நடுவுநிலை‌மை இல்லாதவர் என்பது அவரவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழாலும் பழியாலும் காணப்படும். 

சாலமன் பாப்பையா உரை - இவர் நீதியாளர், இவர் நீதியற்றவர் என்ற வேறுபாட்டை அவரவர் தம் செல்வம், புகழ், பிள்ளைகளின் ஒழுக்கம் ஆகியவற்றால் அறிந்து கொள்ளலாம். 

கலைஞர் உரை - ஒருவர் நேர்மையானவரா அல்லது நெறி தவறி, நீதி தவறி நடந்தவரா என்பது அவருக்குப் பின் எஞ்சி நிற்கப்போகும் புகழ்ச் சொல்லைக் கொண்டோ அல்லது பழிச் சொல்லைக் கொண்டோதான் நிர்ணயிக்கப்படும் 

குறள் 115 

கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக் 
கோடாமை சான்றோர்க் கணி 


மு.வ விளக்க உரை - கேடும் ஆக்கமும் வாழ்வில் இல்லாதவை அல்ல; ஆகையால் நெஞ்சில் நடுவுநிலைமை தவறாமல் இருத்தலே சான்றோர்க்கு அழகாகும். 

சாலமன் பாப்பையா உரை - தீமையும் நன்மையும் எல்லார்க்கும் முன்பே குறிக்கப்பட்டு விட்டன; இதை அறிந்து நெஞ்சத்தால் நீதி தவறாது இருப்பது சான்றோர்க்கு அழகாகும். 

கலைஞர் உரை - ஒருவர்க்கு வாழ்வும், தாழ்வும் உலக இயற்கை; அந்த இரு நிலைமையிலும் நடுவுநிலையாக இருந்து உறுதி காட்டுவதே பெரியோர்க்கு அழகாகும் 

குறள் 116 

கெடுவல்யான் என்ப தறிகதன் நெஞ்சம் 
நடுவொரீஇ அல்ல செயின் 


மு.வ விளக்க உரை - தன் நெஞ்சம் நடுவுநிலை நீங்கித் தவறு செய்ய நினைக்குமாயின், நான் கெடப்போகின்றேன் என்று ஒருவன் அறிய வேண்டும். 

சாலமன் பாப்பையா உரை - தன் நெஞ்சம் நீதியை விட்டுவிட்டு அநீதி செய்ய எண்ணி னால், அதுவே தான் கெடப் போவதற்கு உரிய அறிகுறி. 

கலைஞர் உரை - நடுவுநிலைமை தவறிச் செயல்படலாம் என்று ஒரு நினைப்பு ஒருவனுக்கு வந்து விடுமானால் அவன் கெட்டொழியப் போகிறான் என்று அவனுக்கே தெரியவேண்டும் 

குறள் 117 

கெடுவாக வையா துலகம் நடுவாக 
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு 


மு.வ விளக்க உரை - நடுவுநிலைமை நின்று அறநெறியில் நிலைத்து வாழகின்றவன் அடைந்த வறுமை நிலையைக் கேடு என கொள்ளாது உலகு. 

சாலமன் பாப்பையா உரை - நீதி என்னும் அறவாழ்வு வாழ்ந்தும் ஒருவன் வறுமைப்பட்டுப் போவான் என்றால், அதை வறுமை என்று உயர்ந்தோர் எண்ணவேமாட்டார். 

கலைஞர் உரை - நடுவுநிலைமை தவறாமல் அறவழியில் வாழ்கிற ஒருவருக்கு அதன் காரணமாகச் செல்வம் குவியாமல் வறுமை நிலை ஏற்படுமேயானால் அவரை உலகம் போற்றுமே தவிரத் தாழ்வாகக் கருதாது 

குறள் 118 

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபாற் 
கோடாமை சான்றோர்க் கணி 


மு.வ விளக்க உரை - முன்னே தான் சமமாக இருந்து, பின்பு பொருளைச் சீர்தூக்கும் துலாக்கோல் போல் அமைந்து, ஒரு பக்கமாக சாயாமல் நடுவுநி‌லைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும். 

சாலமன் பாப்பையா உரை - முதலில் சமமாக நின்று பிறகு தன்மீது வைக்கப்பட்ட பாரத்தை நிறுத்துக் காட்டும் தராசு போல, நீதிக்குரிய இலக்கணங்களால் அமைந்து ஓரம் சார்ந்து விடாமல் இருப்பது சான்றோராகிய நீதிபதிகளுக்கு அழகாம். 

கலைஞர் உரை - ஒரு பக்கம் சாய்ந்து விடாமல் நாணயமான தாரசு முள் போல இருந்து நியாயம் கூறுவதுதான் உண்மையான நடுவுநிலைமை என்பதற்கு அழகாகும் 

குறள் 119 

சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா 
உட்கோட்டம் இன்மை பெறின் 


மு.வ விளக்க உரை - உள்ளத்தில் கோணுதல் இல்லாத தன்மையை உறுதியாகப் பெற்றால், சொல்லிலும் கோணுதல் இல்லாதிருத்தல் நடுவுநிலைமையாம். 

சாலமன் பாப்பையா உரை - மனம் ஓரஞ் சாராமல் சமமாக நிற்குமானால் சொல்லிலும் அநீதி பிறக்காது; அதுவே நீதி. 

கலைஞர் உரை - நேர்மையும் நெஞ்சுறுதியும் ஒருவர்க்கு இருந்தால் அவரது சொல்லில் நீதியும் நியாயமும் இருக்கும் அதற்குப் பெயர்தான் நடுவுநிலைமை 

குறள் 120 

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் 
பிறவும் தமபோல் செயின் 

மு.வ விளக்க உரை - பிறர் பொருளையும் தம் பொருள் போல் போற்றிச் செய்தால், அதுவே வாணிகம் செய்வோர்க்கு உரி‌ய நல்ல வாணிக முறையாகும். 

சாலமன் பாப்பையா உரை - பிறர் பொருளையும் தம் பொருள் போலக் காத்து, வியாபாரம் செய்தால் வியாபாரிகளுக்கு நல்ல வியாபார முறை ஆகும். 

கலைஞர் உரை - பிறர் பொருளாக இருப்பினும் அதனைத் தன் பொருளைப் போலவே கருதி நேர்மையுடன் வாணிகம் செய்தலே வணிக நெறியெனப்படும்

நன்றி

Post a Comment

0 Comments