இராமாயணம் பகுதி - 92 - RAMAYANAM PART - 92


இராமாயணம் பகுதி - 92


இராமாயணம் பகுதி - 92 - RAMAYANAM PART - 92

இராமரும், இராவணனும் போர் புரிய எதிரெதிரே நின்று கொண்டிருந்தனர். அப்பொழுது இராவணனின் மந்திர ஆலோசனையின் அமைச்சரான மகோதரன் இராமரை நோக்கி அம்புகளை ஏவினான். இராமர், அந்த அம்புகளை தன் அம்புகளால் தகர்த்தெறிந்தார். பிறகு மகோதரனின் படைகள் இராமரை தாக்க ஓடி வந்தன. இராமர் அந்த அரக்க படைகளை அம்பு மழை பொழிந்து அழித்தார். இப்பொழுது மகோதரன் மட்டும் தனியாக நின்று கொண்டிருந்தான். இராமர், மகோதரனை நோக்கி ஒரு கணையை ஏவினார். அந்த கணை மகோதரனின் தலையை துண்டித்துச் சென்றது. மகோதரன் அந்த இடத்திலேயே மாண்டொழிந்தான். மகோதரனின் மரணத்தை கண்டு இராவணன் கடுங்கோபம் கொண்டான். அவன் கண்கள் கோபத்தால் சிவந்தது. இராவணனுடைய படைகள் இராமரை சூழ்ந்து ஓடி வந்தன. இராமர் அம்புகளால் அரக்கர்களை அழித்து கொண்டு இருந்தார்.

அப்பொழுது இராவணனுக்கு சில தீய நிமித்தங்கள் ஏற்பட்டன. இராவணின் இடது கண்ணும், இடது தோளும் துடித்தன. இராவணன் கழுத்தில் இருந்த மாலை அழுகி நாற்றம் வீசியது. இருப்பினும் இராவணன் இந்த மனிதனா? என்னை வெல்லப் போகிறான். நான் வெள்ளி மலையை அள்ளி எடுத்தவன். இந்திரனை வென்றவன் என்று கூறினான். இராவணன், இந்த இராமனை நான் புழுவை நசுக்குவது போல் நசுக்கி கொல்வேன் என கர்ஜனை செய்தான். உடனே இராவணன், இராமரை நோக்கி ஆயிரமாயிரம் அம்புகளை ஏவினான். அந்த அம்புகள் இராமர் இருந்த இடத்தையே மறைத்துவிட்டது. இதைப்பார்த்து வானரங்கள் அஞ்சி நடுங்கினர். விண்ணுலகத்தவரும் இதைக் கண்டு அஞ்சி நடுங்கினர். இராவணன் தன் தேரை விண்ணிலும், மண்ணிலும் சுழன்று சுழன்று சுத்தினான்.

அதேப் போல் மாதலியும், இராவணன் செல்லும் இடமெல்லாம் அவன் முன் தேரை நிறுத்தி நிலை தடுமாற வைத்தான். இராவணன் அர்த்த சந்திர பாணத்தை ஏவி, இராமரின் தேரில் இருந்த கொடியை அறுத்தெறிந்தான். உடனே இராவணன், இராமரின் தேரில் இருந்த கொடி அறுத்தெறிந்ததைக் கண்டு மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தான். இதைப்பார்த்த கருட பகவான், இராமரின் தேரில் கொடியாக வந்து நின்றார். பிறகு இராமர் ஒரு சிறந்த கணையை ஏவி இராவணனின் தேரில் இருந்த வீணைக்கொடியை அறுத்தெறிந்தார். இதைப் பார்த்து கோபங்கொண்ட இராவணன், இராமர் மீது தாமதப் படையை ஏவினான். தாமதப்படை புயல், மழை, நெருப்பு என மாறி மாறி சுழன்றுக் கொண்டு இராமரை நோக்கி வந்தது. இராமர், தெய்வப் படைக்கலன்களில் சிறந்த அஸ்திரமான சிவாஸ்திரத்தை தாமதப் படை மீது ஏவினார்.

தாமதப் படை சிதறி வௌ;வேறு திசையில் போய் விழுந்தது. பிறகு இராவணன், இராமரை நோக்கி அசுராஸ்திரத்தை ஏவினான். அந்த அஸ்திரம் கோடிக்கணக்கான அஸ்திரங்களாக பிரிந்து நெருப்பு பொறியாக இராமரை நோக்கி வந்துக் கொண்டிருந்தது. இராமர் அசுராஸ்திரத்தை, அக்னி கணையால் நொடிப்பொழுதில் பொடியாக்கினார். இராவணன் மறுபடியும், மண்டோதரியின் தந்தையுமான, இராவணனின் மாமன் மயன் கொடுத்த ஒரு சிறந்த அஸ்திரத்தை இராமர் மீது ஏவினான். இராமர், அந்த அஸ்திரத்தை காந்தர்வக் கணையைக் கொண்டு பொடிப்பொடியாக்கினார்.

இராவணன், இந்த இராமனை சாதாரண அஸ்திரத்தை கொண்டு வீழ்த்த முடியாது. நான் மிகச் சிறந்த அஸ்திரத்தை ஏவி இராமனைக் கொல்லுவேன் என்றான். பிறகு இராவணன், மாயாஸ்திரத்தை எடுத்து அதனை மலர்களால் அர்ச்சனை செய்து, பிறகு சிவபெருமானை வழிபட்டு இராமர் மீது ஏவினான். அந்த அஸ்திரம் மறைந்த அரக்கர்களை அதாவது இந்திரஜித், கும்பகர்ணன், அட்சய குமாரன், அதிகாயன், மூலப்படை முதலிய அரக்கர்கள் எழுந்து ஆரவாரம் செய்வது போல் இருந்தது. இந்த அஸ்திரத்தை பார்த்து தேவர்கள், வானரங்கள் அஞ்சி நடுங்கினர். இராமர், இந்த அஸ்திரத்தை பெரியதாக பொருட்படுத்தாமல் ஞானாயஸ்திரத்தை ஏவினார். இதனால் மாயாஸ்திரம் இருந்த இடம் தெரியாமல் பொடியானது. மறுபடியும் இராவணன் மிகவும் பலம் பொருந்திய சூலாயுதத்தை இராமர் மீது ஏவினான். அந்த சூலாயுதம் இராமரை கொல்ல வந்துக் கொண்டிருந்தது. இராமர், அந்த அஸ்திரத்தை பொடியாக்க பல கணைகளை ஏவினார்.

ஆனால் அவை எல்லாமே சூலாயுதத்துக்கு முன்னால் பயனற்று போனது. சூலாயுதம் இராமரின் மார்பை நோக்கி வந்துக் கொண்டிருந்தது. இதைப் பார்த்து வானரங்கள் திகைத்து நின்றனர். தேவர்கள் இனி இராமர் உயிர் பிழைப்பது கடினம் என கண்கலங்கி நின்றனர். பரம்பொருளான இராமர் "ம்" என்ற ஓங்கார ஒலியை எழுப்பினார். இந்த ஓங்காரத்தால் சூலாயுதம் பொடி பொடியாகி இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. இதைப்பார்த்த இராவணனும் ஆச்சர்யம் அடைந்தான். சக்தி வாய்ந்த சூலாயுதம் ஒரு சாதாரண மனிதனால் அழிந்துவிட்டதை நினைத்து அதிர்ச்சி அடைந்தான்.

இவன் என்ன சிவபெருமானா? அப்படி இருந்தால் இவனுக்கு மூன்று கண்களும், நீலமேகம் போன்ற நிறமுடைய மேனியும் இருக்க வேண்டும். அதனால் இவன் சிவன் இல்லை.

சிவன் இல்லையென்றால் பிரம்மதேவனா? பிரம்ம தேவனாக இருந்தால் நான்கு முகங்களும், எட்டு கண்களும் இருக்க வேண்டும் அல்லவா? அதனால் இவன் பிரம்மதேவன் இல்லை.

பிரம்மதேவன் இல்லையென்றால் இவன் திருமாலா? திருமாலாக இருந்தால் இவன் கையில் சங்கு சக்கரம் இருக்க வேண்டும் அல்லவா? அதனால் இவன் திருமாலும் இல்லை.

நான் பலகாலம் தவமிருந்து முயன்று பெற்ற வரங்களையெல்லாம் அழித்து விட்டான். இவன் தெய்வப்பிறவியாக இல்லாதபோது தவம் செய்யும் முனிவனாக இருப்பானா? அப்படி இவன் தவமுனிவனாக இருந்தால் இந்த இளம் வயதில் இவ்வளவு வலிமைகள் பெற இயலாதே. இந்த உலகத்தையே அழிக்கக்கூடிய இந்த சூலாயுதத்தை ஓங்காரம் ஓசையை கொண்டு அழித்து விட்டான். அப்படியென்றால் விபீஷணன் கூறியது உண்மை தானோ? இவன் பரம்பொருளே தான். விபீஷணன் கூறியவற்றை நான் இப்பொழுது உணர்கிறேன். இவன் யாராக இருந்தால் எனக்கென்ன? அந்த பரம்பொருளாக இருந்தால் தான் எனக்கென்ன? இவனை வெல்லாமல் நான் பின் வாங்க மாட்டேன் என எண்ணினான். பிறகு இராவணன் அரக்கர்கள் நிரம்பிய நிருதிப் படையை ஏவினான். இராமர், நிருதிப் படையை கருடப் படையை கொண்டு அழித்தார். பிறகு இராமர் ஒரு சிறந்த கணையை இராவணன் மீது ஏவினார். அந்தக் கணை இராவணன் கழுத்தை அறுத்துச் சென்றது.

தொடரும்.....

Post a Comment

0 Comments