இராமாயணம் பகுதி - 32 - RAMAYANAM PART - 32


இராமாயணம் பகுதி - 32


இராமாயணம் பகுதி - 32 - RAMAYANAM PART - 32

தேவர்களும், ரிஷிகளும் ஆகாயத்திலிருந்து யுத்தத்தை பார்க்க வந்தனர். ஆனால் அவர்கள் இராமர் தனியாக யுத்தத்தில் எப்படி பங்கு கொள்ள போகிறார் எனக் கவலை கொண்டார்கள்.

சேனைகள் பெரும் ஓசையை எழுப்பிக் கொண்டு பர்ணசாலையை வந்தடைந்தது. அரக்கர்கள் எழுப்பிய ஓசையினால் விலங்குகள் எல்லாம் பயந்து ஓடின. இராமர் வில்லை ஏந்தி கொண்டு யுத்ததிற்கு ஆயத்தமாக நின்று கொண்டு இருந்தார். ராட்ஷச சேனைகள் இராமரை சூழ்ந்து கொண்டன. யுத்தம் மிக கோரமாக ஆரம்பித்தது. அரக்கர்களால் இராமரின் உடல் மிகவும் அடிபட்டும் அவர் தளராமல் எதிர்த்து யுத்தம் புரிந்தார். அச்சமயத்தில் இராமர் நாணை பூட்டுவதோ, நாணில் இருந்து அம்பு வெளிவருவதோ கண்ணுக்கு தெரியவில்லை. அந்த அளவுக்கு வேகமாக யுத்தம் புரிந்தார். இராமரின் பாணங்களுக்கு ஆயிரக்கணக்கான அரக்கர்கள், யானைகள், குதிரைகள் இரையாயின. அரக்கர்களின் சேனைகள் நிர்முலமாகின.

இதைக்கண்ட தூஷணன் ஒரு பெரும் படையை கூட்டி கொண்டு இராமனின் மீது பாய்ந்தான். சிறிது நேரம்தான் தூஷணம் அட்டகாசங்கள் நடந்தது. பிறகு இராமரின் பாணங்களுக்கு தூஷணனின் படைகள், தேர்கள், குதிரைகள், யானைகள் என அனைத்தும் இரையாயின. பெரும் கோபங்கொண்டு தூஷணன் தன் தண்டாயுதத்தை கொண்டு இராமன் மீது பாய்ந்தான். இராமனின் ஒரே பாணத்திலேயே அவன் தரையில் விழுந்து இறந்தான். தூஷணன் இறந்ததை பார்த்த மற்ற அரக்கர்கள் இராமர் மீது பாய்ந்தனர். இராமர் எல்லா அரக்கர்களையும் தன் பாணங்களை கொண்டு கொன்றார். இவ்வாறு கரனுடன் வந்த எல்லா சேனைகளும் இராமரின் கோதண்டத்துக்கு இரையாயின. அரக்கர்களில் மீதம் இருந்தவர்கள் கரன் மற்றும் திரிசரஸ் தான். கோபங்கொண்ட கரன் இராமருடன் சண்டையிட முன் சென்றார். அப்போது திரிசரஸ் கரனை தடுத்து நிறுத்தி, இராமனை கொன்று நான் வெற்றி பெறுவேன், இல்லையென்றால் நான் இறந்த பின் நீ ராமனை எதிர்த்து நின்று சண்டையிடு என கூறி திரிசரஸ் முன் சென்றான். அவன் இராமனை தாக்க எவ்வளவோ முயற்சித்தான். முடிவில் இராமர் அவன் மேல் ஒரு பாணத்தை எய்தினார். அவன் அவ்விடத்திலேயே இறந்தான்.

இதனைப் பார்த்த கரன், கோபங்கொண்டு தேரில் ஏறி இராமரை நோக்கி பாணத்தை எய்தினான். அப்பாணத்தால் இராமரின் கவசம் அறுந்து கீழே விழுந்தது. பிறகு இராமர் வில்லை எடுத்து, கரனுடைய வில், தேர் என அனைத்தையும் அழித்தார். கரன் தன் தேர், வில் என அனைத்தும் இழந்து நின்றான். கடைசியில் அவன் தன் கதாயுதத்தை கையில் எடுத்தான். இராமர் கரனை பார்த்து, அரக்கனே! வனத்தில் தவம் இருக்கும் முனிவர்களை பல தீய செயல்கள் செய்து இம்சித்து வந்தாய். உலகில் எவன் ஒருவன் தீய செயல்கள் செய்து பலரின் வெறுப்பை பெறுகிறானோ அவன் ஒரு நாள் அழிவது உறுதி. அதேபோல் இன்று நீ அழிவது நிச்சயம். உன் பசிக்காக பல முனிவர்களை கொன்று தின்றாய்? ஆனால் இன்று என் பாணத்தால் உனக்கு அழிவு நிச்சயம் என்றார்.

கரன் உடனே, அற்ப மனிதனே! யாரும் தன்னைதானே புகழ்ந்து கொண்டு பேச மாட்டார்கள். நீ பேசும் பேச்செல்லாம் அற்பத்தனமான பேச்சு. முடிந்தால் நீ என்னை வென்று காட்டு. இன்று உனக்கு எமனாக நான் இருக்கிறேன். உன்னை கொல்வதற்காகவே நான் இங்கு வந்துள்ளேன் என்று கூறி அவன் தன் கையில் வைத்து இருந்த கதாயுதத்தை சுழற்றி இராமர் மீது வீசினான். இராமரும் கதாயுதத்தை பார்த்து பாணத்தை எய்தினார். கதாயுதம் துண்டு துண்டாக நொறுங்கி தரையில் விழுந்தது. பிறகு கரன் பக்கத்தில் இருந்த மரத்தை பிடுங்கி, இராமர் மீது வீசினான். இராமர் தன் வில்லை கொண்டு தன்னை நோக்கி வந்த மரத்தை தடுத்தார். உடனே இராமர் தன் கையில் வைத்திருந்த திவ்விய பாணத்தை கரன் மீது எய்தினார். கரன் அவ்விடத்திலே தன் உயிரை மாய்த்தான். இந்த யுத்தத்தை பார்த்து கொண்டு இருந்த தேவர்களும். ரிஷிகளும் மலர்மாரி பொழிந்தார்கள்.

இராமர், அரக்கர் கூட்டத்தை அழித்துவிட்டு ஆசிரமம் திரும்பினார். சீதையும், இலட்சுமணனும் மலைக்குகையில் இருந்து திரும்பி ஆசிரமத்திற்கு வந்தனர். வெற்றியோடு திரும்பி வந்த இராமனை சீதையும், இலட்சுமணனும் கண்ணீர் மல்க வரவேற்றனர்.

சூர்ப்பனகை, நான் இராமன் மீது வைத்த காதலால் என் மூக்கு, காதுகளை மட்டும் இழக்கவில்லை என் சகோதரர்களாகிய உங்களையும் நான் இழந்துள்ளேன் என்று புலம்பி அழுதாள். எனக்கு நேர்ந்த இந்த அநியாயத்தை நான் இராவணனிடம் சென்று முறையிடுவேன் என்று கூறி இலங்கைக்கு விரைந்து சென்றாள். இலங்கையில் இராவணன் ஓர் மணிமண்டபத்தில் கம்பீரமாக வீற்றிருந்தான். அரம்பையர்கள் ஆடிக் கொண்டு இருந்தார்கள். அந்த மண்டபத்தில் கூடியிருந்த அரசர்கள் எப்போது இராவணன் தங்கள் பக்கம் திரும்புவானோ என்று எதிர்பார்த்து கரங்களைக் கூப்பிக்கொண்டு பணிவாக நின்று கொண்டிருந்தார்கள்.

தேவர்கள் எல்லாம் இராவணனின் சபையில் பணிவிடை செய்து கொண்டு இருந்தார்கள். இவ்வளவு கம்பீரமாய் அமர்ந்திருந்த இராவணனின் காலடியில் சூர்ப்பனகை வந்து வீழ்ந்தாள். இராவணன் தன் தங்கை சூர்ப்பனகையின் நிலைமையை கண்டு பெரும் கோபம் கொண்டான். தங்கையே! உன்னை இக்கதிக்கு ஆளாக்கியவர்கள் யார்? உன் மூக்கையும், காதையும் அறுத்தவர்கள் யார்? எவ்வளவு துணிவு இருந்தால் அவர்கள் உன்னை இவ்வாறு செய்து இருப்பார்கள். அவர்கள் யாராக இருந்தாலும் நான் உயிருடன் விடமாட்டேன் என கோபம் பொங்க கூறினான். அங்கு இராவணனின் கோபத்தை பார்த்து கூடியிருந்தவர்கள் அஞ்சி நடுங்கினார்கள். சூர்ப்பனகை! சொல், உன்னை இக்கதிக்கு ஆளாக்கியவர்கள் யார்?

சூர்ப்பனகை, அண்ணா! தவக்கோலம் பூண்டு இருவர் வனத்திற்கு வந்துள்ளார்கள். அவர்கள் தசரதனின் குமாரர்கள். வீரத்தில் சிறந்தவர்கள். வில்வித்தையில் நன்கு தேறியவர்கள். எல்லா கலைகளையும் நன்கு கற்று தேர்ந்தவர்கள். தர்ம நெறியில் நடப்பவர்கள். அவர்கள் இருவருக்கும் ஈடு இணை யாரும் இல்லை. அவர்கள் பெயர் இராமன், இலட்சுமணன். அது மட்டுமில்லாமல் அவர்கள் அரக்கர் குலத்தை அழிப்போம் என்று சபதம் எடுத்துள்ளார்கள். என்னை இக்கதிக்கு ஆளாக்கியதும் அந்த மனிதர்கள் தான். உனக்கு இப்படியொரு தீங்கு செய்த அவர்கள் உயிரோடு இருக்கலாமா? காட்டில் காவல் புரிந்து கொண்டு இருக்கும் கரனிடம் சென்று சொன்னாயா? என்றான் இராவணன். இதை கேட்ட சூர்ப்பனகை ஒப்பாரி வைத்து அழுதாள். பிறகு நான் முதலில் கரனிடம் தான் சென்று முறையிட்டேன். அவன் தூஷணன் மற்றும் திரிசரஸ் தலைமையில் பெரும் படைகளை அழைத்து கொண்டு இராமனிடம் யுத்தம் செய்ய சென்றான்.

இராமன் தனி ஒருவனாய் நின்று கரன், தூஷணன், திரிசரஸ் மூவரையும் படையோடு தன் பாணங்களால் கொன்றுவிட்டான். இதனைக்கேட்ட இராவணின் கண்கள் நெருப்பு குழம்பு போல் எரிந்தது. சூர்ப்பனகையிடம், உன் காதையும், மூக்கையும் அறுக்கும்படி நீ அவர்களை என்ன செய்தாய்? என்று கேட்டான் இராவணன். என்னுடைய இக்கதிக்கான காரணம் அவர்களுடன் இருக்கும் சீதை தான். அவள் மகாலட்சுமி போல் பேரழகு உடையவளாக இருக்கிறாள். அவளால் தான், நான் என் காதையும் மூக்கையும் இழந்தேன். அவள் இராமனுடைய மனைவி. அழகின் சொரூபமாய் தங்கச்சிலை போல் உள்ளாள். அவளை பார்த்ததும் நானே ஒரு நிமிடம் மயங்கிவிட்டேன். உலகில் அவளை காட்டிலும் அழகி வேறு யாரும் இல்லை என்று பலவாறாக சீதையின் அழகைப் பற்றி கூறினாள்.

சீதையின் அழகைப் பற்றி கேட்டதும் இராவணனுக்கு சீதையின் மேல் காதல் வந்தது. சூர்ப்பனகை இராவணனிடம், அண்ணா! நீ சீதையை திருமணம் செய்து இராமனை என்னிடம் ஒப்படைத்து விடு என்றாள்.

தொடரும்.....

Post a Comment

0 Comments