இராமாயணம் பகுதி - 28
விராதன் என்ற கொடிய அரக்கன் ஒருவன் இராமர், இலட்சுமணர், சீதை முன்பு வந்து நின்றான். அவன் இராம, இலட்சுமணரை கொன்று தின்னும் நோக்கத்தில் அங்கு வந்து நின்றான். சீதையை கண்டவுடன் அவனுக்கு சீதை மீது காதல் வந்தது. இவள் என்ன அழகு! இதுவரை நான் இவ்வளவு அழகை கண்டதில்லை. தங்கச்சிலை போல் உள்ளாள் என கூறி சீதையை கவர்ந்து விண்ணில் பறந்து சென்றான். திடீரென்று வந்த ஓர் அரக்கன் சீதையை தூக்கிச் சென்றதும், இராமனும் இலட்சுமணரும் திகைத்தனர். அவர்களின் கோபம் தலைத்தோங்க தங்கள் வில்லை எடுத்து நாணைப் பூட்டி, விராதனைக் கூவி அழைத்து அடே! அற்பனே! இப்படியொரு வஞ்சகம் செய்துவிட்டு எங்கே போகிறாய்? திரும்பு என்றார்கள்.
விராதன், மனிதர்களே! பிரம்மதேவன் அளித்துள்ள வரத்தினால் எனக்கு மரணம் இல்லை. உலகத்தில் உள்ளோர் அனைவரையும் ஆயுதம் இல்லாமலே அழிக்கும் ஆற்றல் படைத்தவன் நான். இந்த அழகியை எனக்கு அளித்த நன்றிக்கடனுக்காக உங்கள் உயிரை விட்டுவிட்டேன். போனால் போகிறது, உங்களுக்கு உயிர் பிச்சை அளிக்கிறேன். இந்த பெண்ணை என்னிடம் விட்டுவிட்டு உயிர் பிழைத்து ஓடிவிடுங்கள் என்றான்.
இராமர் தன் வில்லின் நாணை இழுத்து ஒரு பேரொலியை எழுப்பினான். அவ்வொலி ஏழு உலகங்களும் அஞ்சும் வண்ணம் ஒலித்தது. சீதை அவ்வரக்கன் பிடியில் கதறிக் கொண்டிருந்தாள். சீதையை கீழே விட்டுவிட்டு, அவ்வரக்கன் மிகுந்த கோபத்துடன் தன் கையிலிருந்த கொடிய சூலத்தை இராமர் மீது வீசினான். அவன் வீசிய அந்த சூலாயுதத்தால் அனைத்துலகங்களும் அஞ்சி நடுங்கியது. அந்த சூலாயுதம் மின்னலை போல் இராமரின் மார்பை நோக்கி வந்து கொண்டு இருந்தது. இராமன் தன் கோதண்டத்தில் இருந்து ஓர் அம்பை பூட்டி அந்த அரக்கன் வீசிய சூலத்தின் மேல் எய்தினார். அந்த சூலம் இரண்டாக உடைந்து பூமியின் எல்லையில் போய் விழுந்தது. இதனால் அரக்கனின் கோபம் மேலும் அதிகமானது. அவ்வரக்கன் மலைகளையெல்லாம் வேரோடு பிடுங்கி இராமர் மீது எறிந்தான். இராமர், ஒன்றன்பின் ஒன்றாக வரும் மலைகளை தன் வாளியால் அடித்து, அவை மீண்டும் அவ்வரக்கன் மீதே விழும்படி செய்தார்.
காயங்களால் புண்பட்ட உடலோடு விராதன் ஒரு பெரிய மரத்தைப் பிடுங்கி இராமன் மீது வீசினான். இராமர் பன்னிரெண்டு அம்புகளை ஏவி, அந்த மரத்தை துண்டு துண்டாக்கி கீழே தள்ளிவிட்டு, பன்னிரெண்டு அம்புகளை அவ்வரக்கனின் உடலின் பாகங்களிலும் உட்புகுமாறு செலுத்தினார். அவன் கோபத்துடன் காட்டு பன்றிபோல் தன் உடலை உதறினான். அவன் உடலில் அம்பு துளைத்த இடங்களில் இரத்தம் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது. இவன் சாகா வரம் பெற்றவன் என்பதால் ஆயுதத்திற்கும் இவன் சாகவில்லை. அதனால் இவனின் கரங்களை வெட்டிவிடுவோம் என்று இராமனும் இலட்சுமணரும் முடிவு செய்து, தங்கள் உடைவாளை எடுத்து அவன் தோளை பார்த்து வீசினார்கள். மிகவும் கோபமடைந்த அவ்வரக்கன், அவர்களை அப்படியே அழுத்திப் பிடித்துக் கொண்டு வானத்தில் பறந்து சென்றான். இராம இலட்சுமணரும் வானத்தில் பறப்பதை பார்த்து தரையிலிருந்த சீதையின் மனம் துடிதுடித்தது. 'அரக்கனே! அவர்களை விட்டுவிடு. என்னை வேண்டுமானால் உண்டு கொள்' எனக் கூறி கதறி அழுதாள். இதனைக் கண்ட இலட்சுமணர் இராமரிடம், அன்னை மிகவும் மனம் வருந்துகிறாள், தாங்கள் இவனிடம் இப்படி விளையாடலாமா?' என்று கேட்டான்.
இலட்சுமணா! இவனை கொல்வது எனக்கு ஒரு பொருட்டே அல்ல என்று சொல்லிக்கொண்டே தன் காலால் அந்த அரக்கனை எட்டி உதைத்தார். அவ்வரக்கன் உடனே கீழே விழுந்தான். வாளால் அவன் தோள்கள் இரண்டையும் வெட்டி வீழ்த்தினர். அவ்வரக்கன் கோபத்தால் தாக்குவதற்கு ஓடிவர, இராமர், இலட்சுமணா! இவனை பூமிக்கடியில் புதைத்துவிடுவோம் என்று சொல்லி காலால் உந்தி தள்ளினார். அவன் ஓர் ஆற்றங்கரையிலிருந்த பெரும்பள்ளத்தில் வீழ்ந்து புதைந்துபோனான்.
விராதன் ஒரு கந்தர்வனாக இருந்தவன். குபேரர் இட்ட சாபத்தினால் கொடிய அரக்கனாக மாறி பிறவி எடுத்தான். இராமர் காலால் உதைபட்டதும் அவனுக்கு இருந்த சாபம் நீங்கி அவனுடைய பழைய கந்தர்வ உடல் அவனுக்கு கிடைக்கப்பெற்றது. அந்த கந்தர்வன் இராமபிரான் திருவடியில் வீழ்ந்து பணிந்து வணங்கினான். 'இராமா! உனது திருவடி என்மீது பட்டதால், என் வினைகளெல்லாம் தீர்ந்து பிறவிக் கடல் கடந்தேன்' என்றான். நீ எப்படி அரக்கனாக உருவெடுத்தாய்? என்று இராமர் கேட்டார். அதற்கு விராதன், இராமா! நான் விண்ணுலகில் குபேரனது ஆட்சிக்கு உட்பட்டவன். தும்புரு எனும் கந்தர்வனாக விண்ணுலகில் வாழ்ந்து கொண்டிருந்தேன்.
தேவலோகத்தில் அரம்பை என்னும் பெண்ணின் மீது காதல் கொண்டு அவளோடு கூடினேன். இதைக் கண்ட குபேரர் என்னை அரக்கனாகப் பிறக்கும்படி சாபமிட்டார். நான் செய்த தவறுக்காக வருந்தி, எனக்கு சாப விமோச்சனம் தர வேண்டினேன். குபேரர் 'நீ இராமனின் காலடிபட்டு சாப விமோச்சனம் பெறுவாய்' என்றார். அன்று முதல் இன்று வரை நான் தீய வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்தேன். தங்களின் பொற்பாதம் என்மேல் பட்டதும் சாபம் நீங்கப் பெற்றேன் என்றான் விராதன். இராம பெருமானே! நான் இதுவரை செய்த தவறுகளை எல்லாம் மன்னித்து பொறுத்தருள்வாயாக! என்று சொல்லி கந்தர்வன் விண்ணுலகிற்குச் சென்றான்.
பிறகு மூவரும் அங்கிருந்து புறப்பட்டு தண்டகவனத்தை அடைந்தனர். தண்டகவனத்தில் அரக்கர்களின் தொல்லைகளால் அவதியுற்று வரும் முனிவர்களுக்கு இராமனின் வரவு மகிழ்ச்சியை அளித்தது. அனைவரும் ஒன்று சேர்ந்து இராமனிடம் சென்றனர். இராமரின் தோற்றத்தைக் கண்டு மெய்மறந்து நின்றனர். முனிவர்கள் மூவரையும் அழகிய ஓர் ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்றனர். முனிவர்கள் இராமனிடம், இராமா! இனி நீங்கள் இங்கேயே தங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.
அன்று இரவு முனிவர்கள் அவரவர் இடம் சென்று தங்கினர். மறுநாள் முனிவர்கள் அனைவரும் கூட்டமாக வந்து இராமனை தரிசித்தனர். முனிவர்களே! உங்களின் குறை என்ன? என்று இராமர் கேட்டார். முனிவர்கள் இராமா! இரக்க உணர்வு சிறிதும் இல்லாத அரக்கர்கள் இங்கே இருக்கிறார்கள். அவர்கள் செய்கின்ற அநியாயங்கள் காரணமாக அறநெறி துறந்தோம் தவச்செயல் நீத்தோம், புலி வாழும் காட்டில் வாழ்கின்ற மான்களைப் போல ஆனோம். எங்களுக்கு நற்கதி கிடைக்குமா?
அரக்கர்கள் செய்யும் கொடுமையை இந்திரனிடம் சென்று முறையிடலாம் என்றால், அவனோ அரக்கர்களுக்குப் பணிவிடை செய்பவனாக இருக்கிறான். பிறகு நாங்கள் யாரிடம் சென்று முறையிடுவது? நாங்கள் செய்த தவத்தின் பயனாக தான் இப்போது நீ இங்கே வந்திருக்கிறாய். இராமா! சூரியனை போல நீ வந்திருக்கிறாய். எங்கள் வாழ்வில் சூழ்ந்திருக்கும் இருளை நீக்கி வெளிச்சத்தை கொண்டு வர வேண்டும். எங்கள் துயரங்கள் நீங்கவேண்டும். இராமர் முனிவர்களை தேற்றி கவலையை விடுங்கள். உங்களுக்கு இடர் புரிபவர் யாராயினும் அவர்கள் வேறு அண்டத்திற்கு சென்று ஒளிந்து கொண்டாலும் அவர்களை நான் விடமாட்டேன். அவர்கள் என் அம்புக்கு இரையாவது நிச்சயம். பயப்பட வேண்டாம் என்றார்.
முனிவர்களே! என் தந்தை இறந்ததும், என் தாய்மார்கள் துன்பம் அடைந்ததும், என் தம்பி என்னுடன் கஷ்டப்படுவதும், என் நகரத்து மக்கள் துன்பமடைந்ததும், நான் வனம் செல்ல நேர்ந்ததும், நான் செய்த புண்ணியத்தின் பலன் என்று நினைக்கிறேன். இராமர் சொன்னதும் முனிவர்கள் இராமா! அப்படி என்றால் உன் வனவாசம் முடியும் வரை நீ இங்கேயே தங்கி எங்கள் துன்பங்களை நீக்கி வாழவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்.
தொடரும்.....
0 Comments