முதலில் தோன்றியது யார் ? - MUTHALIL THONRIYATHU YAAR ?


முதலில் தோன்றியது யார் ?


முதலில் தோன்றியது யார் ? - MUTHALIL THONRIYATHU YAAR ?


எல்லைகளுக்கு உட்படாத அபரிவிதமான சக்திகளை தன்னகத்தே கொண்டு எல்லாம் கொண்டவராகவும், ஆனால் எதிலும் பற்று இல்லாமல் அமைதியாக இருந்து யோக நிலையில் அமர்ந்து பல திருவிளையாடல்களை புரிந்த சிவபெருமானை பற்றியும் அவரால் இயற்றப்பட்ட பல  திருவிளையாடல்களை நாம் இங்கு காண்போம். சிவபுராணம் என்பது சிவபெருமானின் தோற்றம், அவரின் சக்திகள் மற்றும் அவரால் இயற்றப்பட்ட திருவிளையாடல்களின் தொகுப்பாகும்.

புராணம் என்றால் என்ன?

புராணம் என்பது நம் முன்னோர்களால் எக்காலத்தில் வாழும் மானிட பிறவிகளுக்காக அளிக்கப்பட்ட ஒரு வரப்பிரசாதம் ஆகும். புராணம் என்றால் தொன்மை என்று பொருள். பல பெருமைகளை கொண்ட தொன்மையான நம் நாட்டில் வாழ்ந்த முன்னோர்களால் எதிர்காலத்தில் நிலவும் சங்கடங்களை
களையவும், அறவழியில் சென்று தீர்வு காணும் விதமாக இயற்றப்பட்ட கதைகளின் சங்கமம் ஆகும். 
விந்தைகளுடன் கூடிய பல நன்மை பயக்கும் கதைகளையும், ஞான மார்க்கத்தின் அவசியத்தையும் பல காலம் தவறாமல் யுகங்களாக அனைவரிடத்திலும் இனிமையாகவும் எளிதில் புரியும் வண்ணம் இறைவனை கொண்டு படைக்கப்பட்ட அரும் பெரும் ஞான பொக்கிஷம் தான் இந்த புராணம்.

பிரளயம் 

பிரளயம் ஒன்று உண்டாகி உலகில் உள்ள அனைத்து உயிர்களும் இறந்து போய் விட்டன. உலகின் எப்பகுதியை கண்டாலும் நீரால் சூழப்பட்டு இருந்தன. சகல லோகங்களும் நீரினால் மூழ்கி சமுத்திரமாக காட்சியளித்தன. அந்த பிரளயத்தின் காரணமாக சிருஷ்டிக் கர்த்தாவான பிரம்ம தேவர் மயக்கமுற்று ஆழ்ந்த நித்திரையில் இருந்தார். நீர்ப்பரப்பின் மீது ஆதிசேஷன் மேல் ஸ்ரீமந் நாராயணன் சயனித்திருந்தார். திடீரெனக் கண் விழித்து பார்த்த பிரம்மாவுக்கு பிரளயத்தின் விளைவாக அனைத்து லோகங்களும் நீரினால் அழிந்து போயின என்பதை கண்டார்.

பிரளயத்தின் விளைவாக யாவற்றையும் மறந்த பிரம்ம தேவருக்கு தாம் தான்
சிருஷ்டி கர்த்தா என்ற ஒன்று மட்டும் நினைவில் இருந்தது. மீண்டும்
தன் பணியான சிருஷ்டித்தல் தொழிலை செய்ய தொடங்கினார். தாம் எண்ணிய பணிக்கு உதவும் வகையில் யாரேனும் உள்ளாரா எனப்பார்த்தார்.
அப்போது ஆனந்த நித்திரையில் இருந்த நாராயணனை கண்டார். தான் எண்ணிய பணியை நிறைவேற்ற தனக்கு உதவியாக இருக்கும் வகையில் இன்னொருவரை கண்ட பிரம்மா அவர் அருகில் சென்றார். நித்திரையில் இருந்த நாராயணனை எழுப்பி சர்வ உலகங்களும் அழிந்துள்ள இந்த தருவாயில் நித்திரையில் ஆழ்ந்து இருக்கும் நீர் யார்?

என வினவினார். நித்திரையில் ஆழ்ந்த ஸ்ரீமந் நாராயணன் யாவும் மறந்தவராக காட்சியளித்தார். பின்பு சிறிது காலத்திற்கு பின் யாம் யாரென்றும், தம்முடன் உரையாடுபவர் யாரென்றும் அறிந்த ஸ்ரீமந் நாராயணன் என்ன குழந்தாய் வேண்டும்? என வினவினார். இதைக் கேட்ட பிரம்மதேவர், யாரை குழந்தை என்று அழைக்கிறாய் என சினமுடன் கேட்டார். நான் யார் என்று நீர் அறிவீரோ? நானே இந்த சிருஷ்டியை படைத்தவன்! நானே உன்னையும் படைத்தவன் என்று கர்வத்தோடு பிரம்மதேவர், ஸ்ரீமந் நாராயணனிடம் சினத்துடன் உரையாடினார். ஸ்ரீமந் நாராயணன் இவரின் பதில் உரையை கேட்டு சினம் கொள்ளாமல் கனிவான குரலில் நீரே எம்மிடமிருந்து தோன்றியவன் என்று பதில் உரையை அளித்தார். இதைக்கேட்ட பிரம்மதேவர் நானே உன்னை படைத்தவன்
என்று கர்வத்தோடு உரையாடினார்.

ஸ்ரீமந் நாராயணன் சிரித்த இன்முகத்தோடு நீரே என் நாபிக் கமலத்தில் இருந்து தோன்றிய தாமரை மலரில் உதயமானவர் என்றும், இதுவே உன் பிறப்பின் ரகசியம் என்றும் கூறினார். இதை சற்றும் ஏற்றுக்கொள்ளாத பிரம்மதேவர் எதிர்வாதம் புரிந்தார். இருவருக்கும் இடையில் இருந்த உரையாடல் கடும் வாக்குவாதமாக மாறியது. அவ்வேளையில் அக்னி சொரூப ஜோதி உருவத்தில் அண்டத்தின் பரம்பொருளான சிவபெருமான் லிங்க வடிவில் தோன்றினார். இதைக்கண்ட இருவரும் தம்மை விட சக்தி இன்னொருவர் இருக்கக்கூடும் என அறிந்தனர். அவ்விருவரும் தங்கள் வாதத்திற்கான மூலக் காரணத்தை கூறி நீரே இதற்கு தீர்வு வழங்க வேண்டும் என்று வேண்டினர். அப்போது லிங்க ரூபத்தில் இருந்து ஒரு அசரீரி உருவாகியது. அதாவது இருவரில் யார் எனது அடியை அல்லது முடியை முதலில் காண்கிறீர்களோ அவரே முதலில் தோன்றியவர் என்று அந்த அசரீரி உரைத்தது.

இதுவே சரியென முடிவெடுத்த இருவரும் அன்னப்பறவை அவதாரம் எடுத்து லிங்கத்தின் முடியை காண பிரம்மதேவர் தனது பயணத்தை தொடங்கினார். ஸ்ரீமந் நாராயணன் வெண்பன்றியின் அவதாரம் எடுத்து லிங்கத்தின் அடியை காண தனது பயணத்தை தொடங்கினார். 
ஸ்ரீமந் நாராயணன் மற்றும் பிரம்ம தேவர் இருவரும் பல யுகங்களாக தனது பயணத்தை மேற்கொண்ட போதும் இருவராலும் அடியையோ, முடியையோ காண இயலவில்லை. ஸ்ரீமந் நாராயணன் இந்த லிங்க வடிவம் முடிவற்றது என்பதை உணர்ந்து தனது பழைய இடத்தை நோக்கி பயணத்தை தொடங்கினார். 

ஆனால், பிரம்ம தேவர் லிங்க வடிவத்தின் உச்சியை காணும் முயற்சியை கைவிடாமல் பயணத்தை தொடர்ந்தார். ஒரு சிறு கால் இடைவெளியில் லிங்க வடிவத்தின் உச்சியில் இருந்து தாழம் பூ வருவதை பிரம்ம தேவர் கண்டார். பிரம்ம தேவர் தாழம் பூவின் அருகில் சென்று லிங்கத்தின் உச்சியை அடைய இன்னும் எவ்வளவு காலம் பிரயாணம் மேற்கொள்ள வேண்டும் என வினவினார். அதற்கு தாழம் பூ இன்னும் பல கோடி யுகங்கள் கடந்து செல்ல வேண்டும் என்று கூறியது.

இதை கேட்ட பிரம்ம தேவர் மலைப்புற்று இனியும் பல கோடி ஆண்டுகள் பயணம் செய்ய வேண்டுமா என யோசித்தார். சிறிது நேர சிந்தனைக்கு பின் தாழம் பூவிடம் ஒரு உபயம் வேண்டும் என பிரம்ம தேவர் வேண்டினார். பிரம்ம
தேவரின் வேண்டுகோளை ஏற்று, வேண்டிய உதவியை அளிப்பதாக தாழம் பூ வாக்குறுதி கொடுத்தது. பிரம்ம தேவரும், தாழம் பூவும் பயணம் ஆரம்பித்த இடத்திற்கு செல்ல பயணம் மேற்கொண்டனர். ஆனால் இவர்கள்
இருவரும், சர்வமும் உணர்ந்த பரம்பொருள் இவை அனைத்தையும் கண்டுக்கொண்டு உள்ளார் என்பதை மறந்தனர். 

இறுதியாக ஸ்ரீமந் நாராயணன் இருக்கும் இடத்தை அடைந்த பிரம்ம தேவர் நாராயணனிடம் தான் லிங்கத்தின் முடியை கண்டதாகவும் அதற்கு, இந்த தாழம் பூவே சாட்சி என கூறினார். தாழம் பூவும் பிரம்மாவிடம் கொடுத்த வாக்குறுதிக்கு இணங்கி ஆமாம் பிரம்ம தேவர் லிங்கத்தின் முடியை கண்டதாக பொய் சாட்சி கூறியது. தாழம் பூ உரைப்பது பொய் என அசரீரி சினத்துடன் உரைத்தது. லிங்கத்தில் இருந்து வந்த அசரீரியை கேட்ட பிரம்ம தேவர் அதிர்ந்து போனார். அப்போது

ஸ்ரீமந் நாராயணன் என்ன நிகழ்ந்தது என அறியாமல் நின்றார்.பின்பு பிரபஞ்சத்தின் ஜோதி லிங்கமானது சிவபெருமானாக காட்சியளித்தார். ஆனால், சிவபெருமானை காண இயலாத வகையில் ஒளியானது பிரகாசித்தது. மீண்டும் இருவரும் சிவபெருமானை வணங்க ஒளியின் பிரகாசம் குறைந்து அவர்களுக்கு பரிபூரணமாக சிவபெருமான்  காட்சியளித்தார். காட்சியளித்த சிவபெருமான் பிரம்மாவை நோக்கி நீர் செய்தது தவறு என உரைத்தார். செய்த தவறுக்காக நீர் படைக்கும் சிருஷ்டியில் உனக்கு கோவில் இல்லாமல் போகவும், பொய் சாட்சி சொன்ன தாழம் பூ பூஜைக்கு பயன்படாமல் போகட்டும் என சபித்து விட்டார்.

தான் செய்த தவறை உணர்ந்த பிரம்ம தேவர் சிவனிடம் மன்னிக்கும்படி வேண்டி அருளினார். சினம் கொண்ட சிவபெருமான் செய்த தவறை உணர்ந்த பிரம்ம தேவரை மன்னித்தருளினார். பின் இருவரும் சிவனை வணங்கி நின்றனர். அப்போது சிவபெருமான் திருமாலை காக்கும் தெய்வமாகவும், பிரம்மாவை படைக்கும் தெய்வமாகவும் இருக்க அருள் புரிந்தார். மேலும் திருமால் சிவபெருமானிடம் பிரபஞ்ச உபதேசம் செய்தருள வேண்டும் என வணங்கி நின்றார். சிவபெருமானும் அவரின் வேண்டுதலை ஏற்று உபதேசம் செய்தார். சிவபெருமான் அருளிய உபதேசங்களில் இருந்து திருமால் மந்திரத்தையும், அதை கடைபிடிக்கும் முறைகள் யாவையும் உணர்ந்தார். பின் திருமால் தான் கற்ற உபதேசத்தை பிரம்ம தேவருக்கு சிவன் அருளிய முறையில் உபதேசம் செய்தார். திருமால் உபதேசிக்கும் பொழுது சிவபெருமான் அங்கு காட்சியளித்தார். பிரம்ம தேவர் சிவபெருமானிடம் சிருஷ்டியில் வாழும் உயிர்கள் அறவழியில் நடந்து மோட்சம் அடையும் வழியையும் போதிக்கும்மாறு வேண்டியருளினார். 

சிவபெருமானும் அவரின் வேண்டுகோளை ஏற்று அருள் பாவித்தார். அடியும், முடியும் இன்றி முடிவற்றதாக உள்ள லிங்க வடிவத்தை வழிப்பட்டால் வாழும் வாழ்க்கையில் எது உண்மையான அன்பு மற்றும் எதில் எல்லா வகையான நிம்மதிகள் உள்ளன என்பதை அறிந்து பிறவிகளின் உன்னத நிலையான பிறவா நிலையை அடைவார்கள் என்று ஞான வழியை போதித்தார். படைப்புக் கடவுளான பிரம்மா உயிர்களை படைக்க தொடங்கினார். அந்த உயிர்கள் உயிர் வாழ தேவையான உயிர் வாயுவை அளிக்குமாறு திருமாலிடம் பிரம்மா வேண்டினார். பிரம்மாவின் வேண்டுகோளுக்கு இணங்கி அவர் உயிர வாயுவை அளித்தார். உயிர்கள் வாழ்வதற்கானஇடத்தையும், பிரம்மாவின் வேண்டுகோளுக்கு இணங்கி அண்டம் மற்றும் நிலப்பரப்புகளையும் படைத்தார்.

திருமால் படைத்த நிலப்பரப்பில் திருமால் அருளால் உயிர்கள் படைப்பு உண்டாக்கினார். தோன்ற ஆரம்பித்தன. பிரம்மா தொழிலை தொடங்கினார். படைப்பு தொழில் அவருக்கு உதவும் வகையில் பிள்ளைகளை ஆனால், அவர்களால் எந்தவித பயனும் இல்லாததால் மனம் சோர்ந்தார். அவ்வேளையில் சிவபெருமான் அங்கு தோன்றி அவரின் சோகத்திற்கான காரணத்தை அறிந்து அந்த குறையை நிவர்த்தி செய்வதாகவும் கூறி மறைந்தார். சிவனின் அருளால் அவர் எண்ணியவாறு பிரஜாபதிகளை படைத்தார். பிரஜாபதிகள் என்பவர்கள் பிரம்மாவால் படைப்பு தொழிலுக்கு உதவியாக இருக்கும் வகையில் படைக்கப்பட்டவர்கள். பிரம்ம தேவர் மொத்தம் பத்து பிரஜாபதிகளை தோற்றுவித்தார். மரீசி, அத்திர, அங்கிரசர், புலஸ்தியர், புலகர், கிருது, வசிஷ்டர், தக்கன், பிருகு, நாரதர் போன்றவர்கள் பிரம்மாவால் படைக்கப்பட்டவர்கள்.

பின்பு சப்தரிஷிகளை தோற்றுவித்தார். அதன் பின் உயிரினங்கள் மற்றும் மானிடர்கள்  தோற்றுவிக்கப்பட்டனர். ரிஷிகளின் தோற்றத்திற்கு பின் அவர்களால் தேவர்களும் அசுரர்களும் படைக்கப்பட்டனர்.

நன்றி

Post a Comment

0 Comments