இராமாயணம் பகுதி - 52 - RAMAYANAM PART - 52


இராமாயணம் பகுதி - 52


இராமாயணம் பகுதி - 52 - RAMAYANAM PART - 52

இராவணன் திரும்பி சென்ற பிறகு அரக்கிகள் சீதையை சூழ்ந்து கொண்டனர். அவர்கள் சீதையிடம், அரசன் இராவணன் உன் மீது உண்மையான ஆசை வைத்து இருக்கிறார். அவரை நீ ஏற்றுக் கொள். இல்லையேல் உன்னை நாங்களே கொன்று தின்று விடுவோம் என்றனர். நீ இராவணனை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் உன்னால் உயிர் வாழ முடியாது. இனியும் இராமன் வந்து உன்னை காப்பாற்றுவான் என எண்ணிக் கொண்டு இருக்காதே. இராவணன் இம்மூவுலகுக்கும் அதிபதி ஆவான். அவனை நீ ஏற்று கொள்வதை விட உனக்கு வேறு வழி இல்லை என பலவாறு சீதையை துன்புறுத்திக் கூறினர். இவர்களின் துன்புறுத்தல்களை கேட்ட திரிசடை தூக்கத்தில் இருந்து எழுந்தாள். உடனே அவள் மற்ற அரக்கிகளிடம், இனியும் நீங்கள் சீதையை துன்புறுத்துவதை நிறுத்திக் கொள்ளுங்கள். சீதையின் கணவன் இராமன் சீதையை மீட்டுச் செல்ல போகிறார். இது நான் கண்ட கனவு ஆகும்.

பொதுவாக விடியற்காலையில் காணும் கனவு பலிக்கும் என்று சொல்வார்கள் என்றாள். இதைக் கேட்ட மற்ற அரக்கிகள் உன் கனவை விரிவாக கூறு என்றனர். நான் வெள்ளைக்குதிரை கொண்ட தங்கத்திலான புஷ்பரக தேரில் இராமனும் இலட்சுமணும் வந்து சீதையை மீட்டுச் சென்றனர். இராவணன் அத்தேரில் இருந்து தள்ளப்பட்டு கழுதை மீது ஏறி தென் திசை நோக்கிச் சென்றான். அவனுடன் கும்பகர்ணனும் சென்றான். விபீஷணன் மட்டும் யானை மீது அமர்ந்திருந்தான். இலங்கை நகரம் தீப்பிடித்து எரிவது போலவும் கண்டேன் என்றாள். இதைக் கேட்ட சீதை மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள். திரிசடை தாயே! நீ கண்ட கனவு பலித்தால் நிச்சயம் நான் உனக்கு உதவி செய்வேன் என்றாள். இருந்தாலும் சீதை இராவணனின் தொல்லைகளையும், மற்ற அரக்கிகளின் அச்சுறுத்தல்களையும் நினைத்து மிகவும் வேதனையடைந்தாள்.

இதையெல்லாம் மரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த அனுமன் இது தான் சரியான தருணம் நான் அன்னை சீதையிடம் பேசுவதற்கு என நினைத்தான். அதனால் அனுமன் ஒரு மந்திரத்தைச் சொல்லி அரக்கிகள் அனைவரையும் ஆழ்ந்த தூக்கத்திற்கு போகும்படி செய்தான். அரக்கிகள் என்றும் ஒன்றாக தூங்குவதை காணாத சீதை இன்று ஒன்றாக தூங்குவதைக் கண்டாள். சீதை தனக்கு ஏற்பட்ட துன்பங்களை நினைத்து மிகவும் வருந்தினாள். என் இராமன் எப்போது வந்து என்னை மீட்க போகிறான். மாய மானின் பின்னால் என் இராமனையும் இலட்சுமணனையும் அனுப்பினேனே. அதற்கு பதிலாக தான் இன்று இந்த கொடுமையை அனுபவித்துக் கொண்டு இருக்கிறேன் என நினைத்து வேதனைப்பட்டாள்.

அப்பொழுது இராமனின் நாமத்தை உச்சரித்துக் கொண்டு அனுமன் சீதை முன் தோன்றி சீதையை தொழுது வணங்கினான். அனுமன் திடீரென்று தோன்றியதால் சீதை அனுமனை பார்த்து பயந்தாள். அன்னையே! தாங்கள் பயப்பட வேண்டாம். நான் இராமனின் அடியேன் ஆவேன். இராமனின் கட்டளையினால் தங்களை தேடி இங்கு வந்தேன். தங்களை இலங்கை முழுவதும் தேடி கண்டுபிடிக்க முடியாமல் கடைசியில் இங்கு கண்டுவிட்டேன். நான் தங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் என்றான். அனுமன் பேசியதைக் கேட்ட சீதை நிச்சயம் இவன் அரக்கனாக இருக்க முடியாது என நினைத்தாள். பிறகு சீதை அனுமனை உற்று நோக்கினாள். இவன் என் கணவன் இராமன் பெயரை கூறுவதால் நிச்சயம் இவன் நல்லவனாக தான் இருக்கக்கூடும் என நினைத்தாள். சீதை அனுமனை பார்த்து நீ யார்? என வினவினாள்.

அனுமன் சீதையை வணங்கிவிட்டு, இராமர் தங்களை விட்டு பிரிந்த பிறகு அவருக்கு சூரிய குமாரான சுக்ரீவனின் நட்புக் கிடைத்தது. சுக்ரீவன் குரங்கினத் தலைவன் ஆவான். சுக்ரீவனுடைய அண்ணன் வாலி. வாலி சுக்ரீவனுக்கு தீங்கு இழைத்ததால் இராமர் அவனை தன் பாணத்தால் வீழ்த்தினார். நான் சுக்ரீவனுடைய அமைச்சன் அனுமன். இராவணன் தங்களை கவர்ந்து சென்ற போது, தங்களுடைய ஆபரணங்களை ஓர் துணியில் கட்டி நாங்கள் இருந்த ருசியமுக பர்வதத்தில் தூக்கி எறிந்தீர்கள். அதை நாங்கள் பத்திரபடுத்தி வைத்திருந்தோம். பிறகு நாங்கள் அந்த அணிகலன்களை இராமரிடம் காண்பித்தோம். இராமர் அணிகலன்களை பார்த்து அது தங்களுடைய அணிகலன்கள் தான் என்பதை உறுதி செய்தார். ஆனால் இராமர் தங்களுடைய அணிகலன்களை பார்த்து மிகவும் துன்பப்பட்டார்.

இராமரும் இலட்சுமணரும் நான் கவர்ந்து சென்ற செய்தியை எவ்வாறு அறிந்தனர் எனக் கேட்டாள் சீதை. அதற்கு அனுமன், இராவணன் தூண்டுதலால் மாய மான் போல் வந்த மாரீசனை இராமன் கொன்று விட்டார். ஆனால் அவனோ இறக்கும் தருவாயில் சீதா! தம்பி இலட்சுமணா! என கூறிக் கொண்டு இறந்தவிட்டான். தாங்களோ அது இராமர் என நினைத்து இலட்சுமணரை கடிந்து பேசி இராமரை காண அனுப்பிவிட்டீர்கள். பர்ணசாலை நோக்கி வரும் வழியில் தம்பி இலட்சுமணன் வருவதை கண்ட இராமர், சீதையின் தூண்டுதலால் தான் இலட்சுமணன் இங்கே வந்துள்ளான் என்பதை இராமர் புரிந்துக் கொண்டார். பிறகு தங்களை தனியே விட்டு வந்ததால் அங்கு தங்களுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்து விடுமோ என நினைத்து விரைந்து இருவரும் பர்ணசாலை வந்தடைந்தனர். அங்கு தங்களை காணாமல் இராமர் மிகவும் துன்பப்பட்டார்.

பிறகு அவர்கள் இருவரும் தேரின் சுவடை வைத்து தெற்கு நோக்கி வந்தனர். அவர்கள் வரும் வழியில் ஜடாயு உயிர் துறக்கும் நிலையில் இருப்பதை கண்டனர். ஜடாயு அவர்களிடம் இராவணன் தங்களை கவர்ந்து சென்ற செய்தியை கூறினார். பிறகு இராமரும், இலட்சுமணரும் தங்களை தேடி எங்களை வந்தடைந்தனர் என்றான். இதைக் கேட்ட சீதை, இராமனுக்கு ஏற்பட்ட துன்பத்தை நினைத்து மிகவும் வருந்தினாள். சீதை அனுமனிடம், மாருதியே! இவ்வளவு சிறிய உருவம் கொண்ட நீ எவ்வாறு இக்கடலை கடந்து வந்தாய் எனக் கேட்டார். சீதை இவ்வாறு கேட்டதால் அனுமன் தன் முழு உருவத்தையும் காட்ட நினைத்தான். பிறகு அனுமன் வானை முட்டும் அளவிற்கு தன் உருவத்தை வளர்த்து நின்றான். அனுமனின் உருவத்தைக் கண்ட சீதை, மாருதி! போதும் உன் உருவத்தை ஒடுக்கிக் கொள் என்றாள். அனுமன், தங்கள் வார்த்தையே எனக்கு கட்டளையாகும் எனக் கூறிக் கொண்டு தன் உருவத்தை சிறிதாக்கி நின்றான்.

பிறகு அனுமன் இராமரின் கட்டளைப்படி, சுக்ரீவன் தங்களை தேடச் சொல்லி பெரும் சேனையை எட்டுத் திசைகளுக்கும் செல்லுமாறு அனுப்பினார். தெற்கு திசையில் தங்களை தேடி வந்த வானர சேனைகளின் தலைவன் அங்கதன் ஆவான். அவன் தங்களை தேடும் பொருட்டு என்னை இலங்கைக்கு அனுப்பியவன். நான் தங்களை கண்டுபிடித்து விட்டு வருவேன் என்று எனக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றான். சீதை அனுமன் சொன்னத்தை கேட்டு அளவற்ற மகிழ்ச்சி அடைந்தாள். மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வடித்தாள். சீதை அனுமனிடம் இராமர் நலமாக உள்ளாரா? என வினவினாள். இராமர் நலமாக உள்ளார். ஆனால் தங்களை நினைத்து மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறார். இலட்சுமணரும் நலமாக இருக்கிறார். ஆனால் அவர் தங்களை கஷ்டத்தில் இருந்து காப்பாற்ற முடியவில்லை என்ற வருத்தத்தில் உள்ளார் என்றான்.

தொடரும்.....

Post a Comment

0 Comments