சிவவாக்கியர் அருளிய சிவவாக்கியம் மூலமும் உரையும் - THE SOURCE AND TEXT OF THE SHIVAVAKYAM REVEALED BY SHIVAVAKYAR


சிவவாக்கியர் அருளிய சிவவாக்கியம் 

மூலமும் உரையும்


சிவவாக்கியர் அருளிய சிவவாக்கியம் மூலமும் உரையும் - THE SOURCE AND TEXT OF THE SHIVAVAKYAM REVEALED BY SHIVAVAKYAR

 
சிவவாக்கியம் - 001 (காப்பு )

அரியதோர் நம சிவாயம் ஆதியந்தம் ஆனதும் 
ஆறிரண்டு நூறு தேவர் அன்றுரைத்த மந்திரம் 
கரியதோர் எழுத்தை உன்னி சொல்லுவேன் சிவ வாக்கியம் 
தோஷ தோஷ பாவ மாயை தூர தூர ஓடவே.

மிகவும் அரியதான நவசிவய என்ற அஞ்செழுத்தே ஆதியும் அந்தமும் ஆகி உள்ளது. எண்சான் உடம்பைப் பெற்ற அறிய பிறவியை அடைந்த மனிதர்களும் முப்பத்து முக்கோடி தேவர்களும் அன்றும் இன்றும் ஓதி வருவதும் அனைவருக்கும் எடுத்துரைத்த மந்திரம் 'ஓம் நமசிவய' என்பதே. அதுவே அனைத்தும் அடங்கிய ஒரெழுத்தானதையும் என் உயிரில் வாலையாக விளங்குவதையும் உணர்ந்து அந்த ஓரெழுத்தை தியானித்து அதன் உள்ளிருக்கும் சிவனை அறிந்து இதனை அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும் என்றே ஈசனை தியானித்து இந்த சிவ வாக்கியம் என்ற நூலைச் சொல்லுகின்றேன். இதனைப் படித்து உணர்பவர்களுக்கு எல்லா தோஷங்களும், பற்றிய பாவ வினைகளும், தொடரும் மாயைகள் யாவும் விலகி தானே வெகு தூரம் ஓடிவிடும்.


சிவவாக்கியம் - 002

கரியதோர் முகத்தையுற்ற கற்பகத்தைக் கைதொழக் 
கலைகள் நூற்கண் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே 
பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம் 
பேயனாகி ஓதிடும் பிழை பொறுக்க வேண்டுமே.

"கரியதோர் முகத்தையுற்ற கற்பகம்" இது உபதேசத்தினால் உணர்ந்து கொள்ள வேண்டிய மெய்ப்பொருள். இந்த ஒரு பொருளை உலகோர் உணர்வதற்கே இந்த சிவவாக்கியம் முழுவதும் சொல்லி இருக்கின்றார் சிவவாக்கியர். கரிய நிறமுடைய தும்பிக்கையை முகத்தில் உடையவரும் கேட்ட வரங்கள் யாவையும் கற்பகத்தருவை போல் வழங்கும் கருணை உடையவரான கணபதியை கைகள் தொழுது வேண்டுகின்றேன். ஆய கலைகள் அறுபத்தி நான்கும், வேத ஆகம புராண சாஸ்திர நூல்களில் உள்ள உண்மைகளும், முக்கண் ஞான அறிவும் என் கருத்தில் தோன்றி இந்நூலில் உதிக்க வேண்டும். அறிஞர் பெருமக்களும், வயதில் சிறியவராயினும் ஞானம் பெற்றவர்களும், யோக ஞானம் அனைத்தையும் கற்று உணர்ந்தவர்களும் மற்றும் யாவரும் பேயனாகிய யான் சொல்லுகின்ற சிவ வாக்கியத்தில் உள்ள தவறுகளை பொறுத்து அருள வேண்டும்.


சிவவாக்கியம் - 003

ஆன அஞ்செழுத்துளே அண்டமும் அகண்டமும் 
ஆன அஞ்செழுத்துளே ஆதியான மூவரும் 
ஆன அஞ்செழுத்துளே அகாரமும் மகாரமும் 
ஆன அஞ்செழுத்துளே அடங்கலாவ லுற்றதே.

நமசிவய என்ற அஞ்செழுத்துக்குள்ளே அண்டமாகிய இவ்வுலகமும் அகண்டமாகிய ஆகாய வெளியும் அமைந்துள்ளது. ஆதி பராசக்தியினால் ஆன அஞ்செழுத்தே ஆதியாகி, அதிலேயே பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகளும் அமர்ந்திருக்கின்றனர். அந்த அஞ்செழுத்தின் உள்ளேயே அகாரமாகவும் மகாரமாகவும், அறிவும் மனமும், ஒளியும் இருளும், இறையும் மாயையுமாய் அமைந்துள்ளது. ஆதலின் இந்த அஞ்செழுத்தை அறிந்துணர்ந்து ஓதுங்கள். இந்த அஞ்செழுத்துக்குள் தான் அனைத்து தத்துவங்களும் அடங்கி அது நமக்குள்ளேயே பஞ்சாட்சரமாகி உற்ற பொருளாய் உட்கலந்து இருக்கின்றது.


சிவவாக்கியம் - 004

ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த சோதியை 
நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்து போய் 
வாடி வாடி வாடி வாடி மாண்டு போன மாந்தர்கள் 
கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே

அருட்பெருஞ் சோதியான ஆண்டவனாகிய ஈசனை அங்கும் இங்கும் ஓடி ஓடி தேடுகின்றீர்கள். அவன் உங்கள் உடம்பின் உள்ளே கலந்து சோதியாக ஓடி உலாவுவதைக் காணாது, அவனையே நாடி பற்பல இடங்களுக்கும் ஓடி ஓடி தேடியும் அலைந்தும் காண முடியாமல் உங்கள் ஆயுள் நாட்கள் கழிந்து போய் கொண்டிருக்கிறது. அவனை ஞான நாட்டத்துடன் நாடி அச்சோதியாகிய ஈசன் நம் உடலிலேயே உட்கலந்து நிற்பதை, மாண்டு போகும் மனிதர்கள் எண்ணற்ற கோடி பெறற்கரிய இம் மானிடப் பிறவியை பெற்ற இவர்கள் என்றுதான் சோதியாக இறைவன் தம்முள்ளே கலந்து நிற்பதை உணர்ந்து கொள்வார்களோ? தம்முளே உறையும் உயிரை அறியாமல் அவ்வுயிரை ஈசனிடம் சேர்த்து பிறவா நிலை பெற முயலாமல் அவனை அகிலமெங்கும் தேடி ஓடி நாடி வாடி இறந்து போகின்றனரே.


சிவவாக்கியம் - 005

"உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக் கத்தினால் இருத்தியே கபாலம் ஏற்றவல்லீறேல் விருத்தரும் பாலராவர் மேனியும் சிவந்திடும் அருள் தரித்த நாதர் பாதம் அம்மை பாதம் உண்மையே".

நம் உடம்பில் கழுமுனை நாடியில் மூலாதாரத்தில் தனஞ்செயன் எனும் பத்தாவது வாய்வு ஒடுங்கி பாம்பைப் போல் சுருண்டு உறங்கிக் கொண்டிருக்கின்றது. இதையே யோகிகள் குண்டலினி சக்தி என்பர். தாயின் கர்ப்பத்திலிருந்து முழு உருவமாய் வெளிவரும் பொது தனஞ்செயன் என்ற இக்காற்றின் செயலால் தான் பிண்டம் பிறக்கின்றது. அதன் பிறகு எச்செயலும் இன்றி மூலாதாரத்திலேயே ஒடுங்கி உள்ளது. உயிர் உடம்பை விட்டு போன பிறகு மூன்று நாட்கள் இருந்து இவ்வுடம்பை அழுகச் செய்தபின் கபாலத்தைப் பிளந்து வெளியேறும். .ஆதலால் இதனை நன்குஅறிந்து வாசியோகம் எனும் யோக தந்திரத்தால் கருத்தோடு இருத்தி அதனை எழுப்பி சுழுமுனையினால் முதுகுத் தண்டின் வழியாக மேலே ஏற்றி கபாலம் எனும் உச்சியில் உள்ள சகஸ்ரதளத்தில் கொண்டு சேர்த்து தியானம் செய்து வரவேண்டும். இதனை முழுமுயற்சியுடன் பயிற்சி செய்து தொடர்ச்சியாக தியானத்தில் இருந்து வருபவர்கள் கிழவனாக இருந்தாலும் இளமை பெற்று மெய்பரவசத்தால் குழந்தையைப் போல் மாறுவர். அவர்கள் உடல் பொன் நிறமாக மாறும். இந்த யோக தந்திரத்தை முறையாக அனுசரித்து செய்து வந்தால் இறையருள் கிடைக்கப் பெற்று இன்புறலாம். நம் உடம்பிலேயே சிவசக்தி திருவடியான் பாதம் மெய்ப்பொருள் என்பதுவே உண்மை


சிவவாக்கியம் - 006

“வடிவு கொண்ட பெண்ணை மற்றொருவன் நத்தினால் 
விடுவனோ அவனை முன்னர் வெட்டவேண்டும் என்பனே 
நடுவண் வந்து அழைத்த பொது நாறும் இந்த நல்லுடல் 
சுடலை மட்டும் கொண்டு போய்த் தொட்டி கைக் கொடுப்பரே".

அழகிய பெண்ணைக் கண்டு மணமுடித்துக் கொண்டவன் அப்பெண்ணை வேறு ஒருவன் தொட்டு விட்டால், விடாதே அவனைப் பிடித்துக் கட்டுங்கள் . முதலில் அவனை வெட்டவேண்டும் என்று அரிவாளை எடுப்பான்.. அந்த அழகிய பெண்ணை விதிவசத்தால் எமன் வந்து உயிரை எடுத்துப் போய்விட்டால் என்ன செய்வாய். . மிக அழகிய பெண்ணாயிற்றே என்று அந்தப் பிணத்தை அப்படியே வைத்திருக்க முடியுமா? அவ்வுடம்பில் பிணவாடை வீசி நாற்றமடிக்குமல்லவா. ஆகவே அதனை அந்த அழகிய உடம்பை, சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று தோட்டியின் கையில் கொடுத்து அவன், அந்த தோட்டி, அவ்வுடலை தொட்டுத் தூக்கி எரிக்கவோ, புதைக்கவோ சொல்லுவார்கள். அப்போது மட்டும் அந்த தொட்டியின் மீது கோபம் வருவதில்லையே? அது ஏன் என்று யோசியுங்கள். . அந்த அழகின் மீதிருந்த மோகமோ அன்போ எங்கே போயிற்று என சிந்தியுங்கள்.. அப்போது புரியும் அழியும் பொருள்களின் மீதுள்ள ஆசை நிலைப்பதில்லை என்று.


சிவவாக்கியம் - 007

“என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்தது இல்லையே 
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்தது கொண்ட பின் 
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்தது காண வல்லரோ 
என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டேனே”.

எனக்குள்ளே ஒன்றான மெய்ப்பொருளாக இறைவன் இருக்கின்றான் என்பதை நான் முன்பு அறிந்து கொள்ளவில்லை. அப்பரம்பொருளை பல இடங்களில் தேடியும், நல்ல நூல்களைப் படித்தும், நல்லோரிடம் பழகியும், நல்ல குருநாதர் மூலம் அது என்னிடமே இருப்பதை யான் அறிந்து கொண்டேன். . தனக்குள் இருந்த உயிரை அறிந்து அதனுள் இருக்கும் ஈசனை யார் காண வல்லவர்கள்.. என்னிலே இருந்த அந்த மெய்ப்பொருளை அறிந்து அதையே என் உள்ளத்தில் இருத்தி தியானத்தில் இருந்து, இருந்து அந்த உண்மையை யான் உணர்ந்து கொண்டேன்.


சிவவாக்கியம் - 008

நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை 
நினைப்புமாய் மறப்புமாய் நின்ற மாயை மாயையோ 
அனைத்துமாய் அகண்டமாய் அநாதி முன் அனாதியாய் 
எனக்குள் நீ உனக்குள் நான் நினைக்கு மாற தெங்கனே

நான் தியானத்திலிருந்து நினைப்பது ஒன்றான மெய்ப் பொருளே, அது நீயேயன்றி வேறு ஒன்றையும் நான் கண்டது இல்லை. நான் தியானத்தில் அமர்ந்து நான் என் நினைவை புருவ மத்தியில் நிறுத்தி பார்க்கும்போது அங்கு உன் நினைவைத் தவிர வேறு நினைவு இல்லை. நான் நினைப்பதாகவும், மறப்பதாகவும், நின்ற மனம் ஒரு மாயையோ,இவ்வுலகில் உள்ள அனைத்துமாகவும் எல்லாம் அடங்கியுள்ள ஆகாயமாகவும் அநாதி காலங்களுக்கும் முன் உள்ள அனாதியாகவும் உள்ளவன் நீயே. எனக்குள் நீ இருப்பதுவும் உனக்குள் நான் இருந்ததையும் உணர்ந்த பிறகு எல்லாம் உன்செயல் என்று அறிந்த பிறகு உன்னை நினைப்பது எவ்விதம் என் ஈசனே, உன்னை மறந்தால் தானே நினைக்க முடியும். உன்னை மறவேன் நானே!!!!


சிவவாக்கியம் - 009

மண்ணும் நீ விண்ணும் நீ மறிகடல்கள் ஏழும் நீ 
எண்ணும் நீ எழுத்தும் நீ இசைத்த பண் எழுத்தும் நீ 
கண்ணும் நீ மணியும் நீ கண்ணுளாடும் பாவை நீ 
நண்ணும் நீர்மை நின்ற பாதம் நண்ணுமாறு அருளிடாய் "

பூமியாகவும், ஆகாயமாகவும், ஏழு கடல் நீராகவும், காற்று நெருப்பு என பஞ்ச பூதங்களாக இருப்பவனும் நீயே. எட்டிரண்டு என்ற எண்ணாகவும், அகார உகார எழுத்தாகவும் ஆகி இசையுடன் கூடிய தேவாரப் பண்ணாகவும், ஏழு ஸ்வரங்களான சரிகமபதநி என்ற ராக எழுத்தாகவும் உள்ளவன் நீயே. கண்ணாகவும், கண்மணி யாகவும், கண்ணுள் ஆடும் பாப்பாவாகவும் ஆனவனும் நீயே.. இப்படி அனைத்துமாய் உள்ள உண்மையான பிரம்மா ஞானத்தை எனக்கு வழங்கி என்னுள் நீராகி நின்ற நினது திருவடி பாதத்தை என்றும் என் தியானத்தில் வைக்க அருள்செய் ஈசா!


சிவவாக்கியம் - 010

அரியும் அல்ல அயனும் அல்ல அப்புறத்தில் அப்புறம் 
கருமை செம்மை வெண்மையைக் கடந்து நின்ற காரணம் 
பெரியதல்ல சிறியதல்ல பற்றுமின்கள் பற்றுமின்கள் 
துரியமும் கடந்து நின்ற தூர தூர தூரமே

மெய்ப் பொருள் விஷ்ணுவுமல்ல, பிரம்மாவும் அல்ல. விஷ்ணுவாலும், பிரம்மாவாலும் அடி முடி காண முடியாமல் அப்பாலுக்கப்பாலாய் நின்றவன் ஈசன். அவன் அதுவாகி அப்புறத்தில் அப்புறமாய் கருமை செம்மை வெண்மை நிறங்களைக் கடந்து நின்ற சோதியாகி காரணப் பொருளாய் நமக்குள்ளேயே இருக்கிறான். அச்சிவனே சீவனாக கருமையிலும் சிகப்பு வெள்ளை அணுக்களிலும் கலந்து நின்று உயிரும் உடலும் இயங்க காரணமாக இருக்கின்றான். அவனுடைய திருவடி நமக்குள் இருப்பதை உணருங்கள். . அது பெரியதும் இல்லை,சிறியதும் இல்லை, யாவிலும் நடுவாய் இருப்பது. அப்பாதத்தையே பற்றி நின்று தியானியுங்கள். அது துரியமாகிய ஆஞ்ஞா கமலத்தில் ஆகாயத் தத்துவத்தையும் கடந்து நிற்பதால் வெகு தூரமாய் தோன்றுகின்றது. இதனை தனக்குள்ளேயே அறிவை அறிந்து உண்மையை என்று உணர்ந்து தியானியுங்கள்.


சிவவாக்கியம் - 011

அந்தி மாலை உச்சி மூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும் 
சாந்தி தர்ப்பணங்களும் தபங்களும் செபங்களும் 
சிந்தை மேவு ஞானமும் தினம் செபிக்கு மந்திரம் 
எந்தை ராம ராம ராம ராம என்னும் நாமமே 

அதிகாலை, மதியம், மாலை என்று மூன்று நேரங்களிலும் நீராடி குளித்து விட்டு இயம நியமங்களுடன் இருந்து சந்தியா வந்தனம் தர்ப்பணங்கள் போன்றவைகளை செய்வதும், பெறற்கரிய தவங்கள் புரிந்து காயத்ரி செபம் செய்வதும், இதனால் வரும் பலன்களால் சிந்தையில் எப்போதும் ஞானம் ஒன்றையே வைத்து தியானம் செய்வதினால் வரும் பலன்களும் எந்தையாகிய ஸ்ரீ இராமனின் ராம மந்திர செபத்தை செய்வதனாலே கிடைக்கும். ஆதலால் என் குருநாதரின் இராம நாமத்தை தினமும் செபித்து தியானித்திருங்கள்.


சிவவாக்கியம் - 012

கதாவு பஞ்ச பாதகங்களைத் துறந்த மந்திரம் 
இதாம் இதாம் இதல்ல என்று வைத்துழலும் ஏழைகாள் 
சதா விடாமல் ஓதுவார் தமக்கு நல்ல மந்திரம் 
இதாம் இதாம் இராம ராம ராம என்னும் நாமமே.

செய்த பாவங்கள் யாவும் அகலவும், பஞ்சமா பாதகங்களை செய்யா வண்ணம் காப்பதற்கும் ஒதுவதற்குரிய அறிய மந்திரம் இதுவாக இருக்குமோ அல்லது அதுவாக இருக்குமோ என்று பற்பல மந்திரங்களை ஓதி உச்சரித்து வையகத்தில் வாழ்ந்து உழன்று வரும் ஏழை பக்தர்களே! இதோ சர்வ நேரந்த்திலும் சர்வ காலங்களிலும் உச்சரித்து ஒதுவத்ர்குரிய அறிய நல்ல மந்திரம் இதுதான் என்பதனை உணர்ந்து எப்போதும் இராம ராம ராம என்னும் நாமத்தை என்றும் மறவாது ஓதி உயர்வடையுங்கள்.


சிவவாக்கியம் - 013

நானா தேது? நீய தேது? நடுவில் நின்றது ஏதடா? 
கோனதேது? குருவதேது? கூறிடும் குலாமரே 
ஆனதேது? அழிவதேது? அப்புறத்தில் அப்புறம் 
ஈனதேத்று? ராம ராம ராம என்ற நாமமே

நான் என்று ஆனது எது? நீ என்பது எது? ஞாமாகி நமக்குள் நடுவாக நின்றது என்ன? கோனாகி இவ்வுடலை ஆட்சி செய்வது எது? குருவாக அமைந்திருப்பது எது? அது என்பதை எதுவென்று கூறிடுங்கள் எமக்குள மக்களே! ஆதியாக ஆனது எது? அது நம் உடம்பில் அழியாத பொருளாய் நின்றது எது? அது நம் உடம்பிலேயே அப்புரத்துக்கும் அப்புறமாய் வெளியாக நின்று உடல் அழிந்த பிறகும் கூட வருவது எது என்பதை நன்கு சிந்தித்து அறிந்து கூறுங்கள். இவை யாவும் ஒன்றே என அறிவை அறியவைத்து நம் பிறவியை ஈடேற்ற சரியானது இராம நாமமே என்பதை உணர்ந்து இராம மந்திரத்தை ஓதுங்கள்.


சிவவாக்கியம் - 014

சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாதப் பட்டரே 
வேர்த்து இரைப்பு வந்தபோது வேதம்வந்து உதவுமோ 
மாத்திரைப் போதும்முளே யறிந்து தொக்க வல்லிரேல் 
சாத்திரப்பை நோய்கள் ஏது சத்திமித்தி சித்தியே.

சாஸ்திரங்கள் வேத பாராயணங்கள் போன்றவைகளை தினமும் ஓதுகின்ற சட்டநாதப்பட்டரே! உங்களுக்கு நோய்வேர்த் வந்து மாரடைப்பு ஏற்பட்டு வேர்த்து இறைத்து உயிர் ஊசலாடும் போது நீங்கள் சொல்லி வந்த வேதம் அந்நேரம் வந்து உதவுமோ? உதவாது ஆதலால் ஒரு நொடி நேரமாவது உங்களுக்குள்ளே உள்ள மைப்போருளை அறிந்து வாசியோகம் செய்து அதையே தொக்கியிருந்து தியானம் செய்து வந்தீர்களானால் சோற்றுப் பையான இவ்வுடம்பிற்கு நோய் என்பது வராது. மரண காலத்திலும் ஈசன் கருணையினால் சக்தியும், முத்தியும், சித்தியும் கிடைக்க மெய்பொருளை அறிந்து தியானியுங்கள். தினம் தினம் தாங்கள் சொல்லி வந்த வேத சாத்திரங்களுக்கும் அதனால் சக்தி கிட்டி முக்திபெற்று சித்தி அடைவீர்கள்.


சிவவாக்கியம் - 015

தூரம் தூரம் தூரம் என்று சொல்லுவார்கள் சோம்பர்கள் 
பாரும் விண்ணும் எங்குமாய்ப் பரந்த அப்பராபரம் 
ஊரு நாடு காடு தேடி உழன்று தேடும் ஊமைகள் 
நேரதாக உம்முள்ளே அறிந்துணர்ந்து கொள்ளுமே.

இறைவன் வெகு தூரத்தில் இருக்கின்றான் என்றும் அவனை ஆன்மீக நாட்டம் கொண்டு அடையும் வழி வெகுதூரம் என்றும் சொல்லுபவர்கள் சோம்பேறிகள். அவன் பார்க்கும் இடமெங்கும் நீக்கமற நிறைந்து மண்ணாகவும், வின்னாகவும் எங்கும் பறந்து இருக்கின்றான். அவனை பல ஊர்களிலும், பல தேசங்களிலும் பற்பல காடுகளிலும் மலைகளிலும் உழன்று அலைந்து தேடும் ஊமைகளே! அவ்வீசன் உனக்குள் உள்ளதை உணர்ந்து முதுதண்டு வளையாமல் நேராக பத்மாசனத்தில் அமர்ந்து தியானித்து அறிந்து உணர்ந்து கொள்ளுங்கள்.


சிவவாக்கியம் - 016 

நாலு வேதம் ஓதுவீர் ஞான பாதம் அறிகிலீர் 
பாலுள் நெய் கலந்தவாறு பாவிகாள் அறிகிலீர் 
ஆழம் உண்ட கண்டநீர் அகத்துளே இருக்கவே 
காலன் என்று சொல்லோவீர் கனவிலும் மஃது இல்லையே.

ரிக், யஜூர், சாம,அதர்வணம் என்ற நான்கு வேதங்களும் நன்றாக மனப்பாடம் செய்து ஒதுவீர்கள். ஆனால் அந்த நான்கு வேதங்களும் சொல்லும் ஞான பாதம் எது என்பதை அறிவீர்களா? அமுதம் வேண்டி திருப்பார் கடலை கடையும்போது, ஆதிசேசன் கக்கிய ஆலகால விஷத்தை உண்டு அவனியைக் காத்த நீலகண்டன் நம் உள்ளத்தில் இருப்பதையும் ஞானபாதம் எனும் மெய்ப்பொருளை அறிந்தவர்க்கும் காலன் என்ற எம் பயம் கிடையாது. அதை அறிந்து அதையே எண்ணி தியானிப்பவர்களுக்கு கனவில் கூட எம பயமோ எம வேதனையோ இருக்கவே இருக்காது.


சிவவாக்கியம் - 017

வித்தில்லாத சம்பிராதாயம் மேலும் இல்லை கீழும் இல்லை 
தச்சிலாது மாளிகை சமைந்தவாற தெங்ஙனே 
பெற்ற தயை விற்றடிம்மை கொள்ளுகின்ற பேதைகாள் 
சித்திலாத பொது சிவனில்லை இல்லை இல்லையே.

பரம்பொருளே அனைத்துக்கு வித்தாக இருக்கின்றது. அதனாலேயே எல்லா சம்பிரதாயங்களும் மேலுலகிலும், பூலோகத்திலும் அமைந்துள்ளது. அவனின்றி ஓரணுவும் அசையாது தச்சன் இல்லாது மாளிகை அமையுமா?அஸ்திவாரம் இல்லாத கட்டிடம் எழும்புமா? நம் உடம்பில் உயிராகி வித்தாகி இருப்பவன் ஈசன், மானிடப் பிறவிகள் சிவனை வித்தாகக் கொண்டே நடமாடும் கோயிலாக உடம்பு அமைந்துள்ளது. பெற்ற தாயை மறந்து(விற்று) விட்டுமற்ற பெண்களை அடிமை கொள்ளும் பேதை மக்களே!! பெற்ற ஞானத்தை விற்று சிவன் உறையும் சீவர்களை அடிமைகளாக மாற்றுகின்ற பேத ஞானிகளே!!! சிவன் இல்லது போனால் அந்த சீவனும் இல்லையே!!! இந்த உடம்பும் இல்லையென ஆகிவிடும் என்பதனை உணர்ந்து அச்சிவனையே நினைத்து தியானம் செய்யுங்கள்.


சிவவாக்கியம் - 018

அஞ்சும் மூன்றும் எட்டதாம் அநாதியான மந்திரம் 
நெஞ்சிலே நினைந்துகொண்டு நீருருச் செபிப்பீரேல் 
பஞ்சமான பாதகங்கள் நூறு கோடி செய்யினும் 
பஞ்சு போல் பறக்கும் என்று நான் மறைகள் பன்னுமே

'நம சிவய என்ற அஞ்செழுத்தும்' எ, உ, ம் என்ற மூன்றெழுத்தும் சேர்ந்த 'ஓம் நமசிவய' என்ற எட்டெழுத்து மந்திரமே அனாதியாக விளங்கும் ஈசனின் மந்திரம், இதுவே அநாதியான மந்திரம். இதனை நன்கு அறிந்து கொண்டு நம் உள்ளமாகிய கோவிலிலே இறுத்தி நினைந்து நீங்கள் கண்ணீர் விட்டு அழுது உருக் கொடுத்து செபித்து தியானியுங்கள். எந்த ஜென்மத்தில் செய்த பஞ்சமா பாதகங்களும், பாவங்களும் அனைத்தும் இம்மந்திர செபத்தால் காற்றில் பஞ்சு பறப்பது போல் நம்மை விட்டு பறந்துவிடும். எவ்வித பழிபாவங் களையும் செய்யா வண்ணம் நம்மை நன்னெறியில் நடக்கச் செய்யும் என்று நான்கு மறைகளும் சொல்லுகின்றது. "ஓம் நமசிவய"


சிவவாக்கியம் - 019

அண்டவாசல் ஆயிரம் பிரசண்டவாசல் ஆயிரம் 
ஆறிரண்டு நூர்கொடியான வாசல் ஆயிரம் 
இந்த வாசல் ஏழை வாசல் ஏக போகமான வாசல் 
எம்பிரான் இருக்கும் வாசல் யாவர் கணவல்லரோ?

இவ்வுலகத்திற்கும் பிற உலகங்களுக்கும் ஆயிரமாயிரம் வழிகள் வாசல்களாக அமைந்திருக்கின்றது. எண் சாண் உடம்பு எண்ணாயிரம் கோடி உயிர்களிலும் கோடிக்கணக்கான வாசல்கள் கொண்டு இப்பூமியில் இலங்கி வருகின்றது. இதிலே இறைவன் பத்தாவது வாசலிலிருந்து உலாவுகின்றான். இந்த வாசல் ஏழை வாசலாகவும், ஏகமாகி நின்று இறை இன்பம் கிட்டும் வாசலாகவும் எளிமையாக எல்லோரிடமும் மறைவாக இருக்கின்றது. இந்த பத்தாவது வாசலை அறிந்து யோகா ஞானத்தால் அவ்வாசலின் பூட்டைத் திறந்து எம்பிரானாகிய ஈசன் இருக்கும் வாசலை யாவர் காணவல்லவர்கள்.


சிவவாக்கியம் - 020

சாம நாலு வேதமும் சகல சாத்திரங்களும் 
சேமமாக ஓதிலும் சிவனை நீர் அறிகிலீர் 
கம நோயை விட்டுநீர் கருத்துளே உணர்ந்தபின் 
ஊமையான காயமாய் இருப்பன் எண்கள் ஈசனே

காலம் தவறாது நான்கு வேதங்களையும், சகல சாஸ்திரங்களையும் வெகு நேர்த்தியாகவும், ஒழுங்காகவும், மிக அழகாகவும், நன்றாக ஓதி வந்தாலும் சிவன் தங்களுக்குள் நீராக உள்ளதை அறியார்கள். தன உடம்பில் உயிர் இருப்பதையும், அதற்குள் சிவன் இருப்பதையும் அறிந்துணரமாட்டார்கள். தனக்குள் உட்பகையாக இருக்கும் காமம் என்ற நோயை அகற்றிவிட்டு அதே காமம் தோன்றும் இடத்தில் கருத்துடன் எண்ணத்தை வைத்து ஈசனை உணர்ந்து தியானித்தால் நம்மில் ஊமை எழுத்தாகி சூட்சும உடம்பில் இருப்பான் எண்கள் ஈசன் என்பதை அறிந்து நீங்களும் உணர்ந்து தியானியுங்கள்.


சிவவாக்கியம் - 021

சங்கிரண்டு தாரை ஒன்று சன்னல் பின்னல் ஆகையால் 
மங்கி மாளுதே உலகில் மானிடங்கள் எத்தனை 
சந்கிரன்டையும் தவிர்த்து தாரையூத வல்லிரேல் 
கொங்கை மங்கை பங்கரோடு கூடி வாழல் ஆகுமே.

நமது மூக்கு ஒன்று, வாசல்கள் இரண்டு. அவைகளில் நம் காற்றானது இடகலை, பிங்கலை, சுழுமுனை எனும் நாடிகளில் சன்னல் பின்னலாக ஓடி நடந்துக் கொண்டிருக்கிறது. இப்படியாக ஒவ்வொரு சுவாசத்திலும் பிராணனில் இருந்து நாலு அங்குலம் நஷ்டமடைகிறது. அதனால் பிணி மூப்பு ஏற்பட்டு ஆயுளும் மங்கி, மாண்டு போகும் மனிதர்கள் கோடானு கோடி இப்படியாக ஓடிக் கொண்டிருக்கும் மூச்சை சந்திரகலை, சூரியக்கலை வழியாக கட்டுப்படுத்தி பிரனாயமத்தினால் பிராண வாயுவைப் பெருக்கி ரேசகம், பூரகம், கும்பகம், செய்து உடம்பையும், உயிரையும் வளர்க்கவேண்டும். இதனை நன்கு அப்பியாசித்து இடபிங்களைகளை ஒழுங்குபடுத்தி சுழுமுனை எனும் வாசலைத் திறந்தது வாசியினால் தாரை ஊதுவதைப் போல் ஊதி மூலாதாரத்தில் மூண்டெழும் கனலை மேலேற்றி அனலுடன் கூட்டி சோதியில் சேர்க்க வல்லவர்கள் ஆனால் அழகில் சிறந்த அம்மையை இடபாகம் கொண்ட ஈசருடன் கூடி வாழலாம்.


சிவவாக்கியம் - 022

தங்கம் ஒன்று ரூபன் வேறு தன்மையான வாறு போல் 
செங்கன் மாலும் ஈசனும் சிறந்திருந்ததும்முளே 
விங்களங்கள் பேசுவோர் விளங்குகின்ற மாந்தரே 
எங்குமாகி நின்ற நாமம் இந்த நாமமே.

தங்கம் என்ற ஒரு பொருளில் இருந்தே கம்மல், வளையல், மோதிரம், தாலி, மூக்குத்தி போன்ற நகைகள் பல வகைகளில் உருவாகி வெவ்வேறு தன்மைகளில் விளங்குகின்றது. அதுபோலவே ஒன்றான பிரமத்தில் இருந்தே திருமாலும், ஈசனும் சிறந்த மெய்ப்பொருளில் அமர்ந்திருந்து நமக்குள்ளே இருக்கின்றார்கள். இதனை அறியாமல் விஷ்ணு பெரியது, சிவன் பெரியது என்று வியாக்கியானங்கள் பேசி வாழ்பவர்கள் வாழ்வு விளங்காது. நமக்குள் இருந்த பரம்பொருளே இப்பிரபஞ்சம் முழுவதும் நின்றிப்பதை அறிந்து சிவனும் ஈசனும் ஒன்றாகவே விளங்கும் ஓரெழுத்தை உணர்ந்து தியானியுங்கள்.


சிவவாக்கியம் - 023

அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து 
அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள் 
அஞ்செழுத்தில் ஒரேழுத்து அறிந்து கூற வல்லிரேல் 
அஞ்சல் அஞ்சல் என்று நாதன் அம்பலத்தில் ஆடுமே.

ஐந்து பூதங்களால் பிறந்து அந்த ஐந்து பூதங்களின் தன்மைகளால் வளர்ந்து அஞ்செழுத்தில் உண்மைகளை உணராது அதனை பஞ்சாட்சரமாக வெறும் வாயால் மட்டும் அஞ்செழுத்து மந்திரமாக ஓதி வரும் பஞ்சபூதங்களால் ஆன பாவிகளே பஞ்சபூதங்களும் நமக்குள்ளே பஞ்சாட்சரமாக இயங்கி வருகிறது என்ற உண்மையை உணர்ந்து, அறிந்து அதனை அஞ்செழுத்தால் அதற்குறிய இடத்தில் வைத்து ஓதி தியானியுங்கள். நமசிவய என்ற அஞ்செழுத்தில் ஒரேழுத்து என்ன என்பதை அறிந்து அதிலேயே நினைவால் நிறுத்தி செபித்து தியானிக்க வல்லவர்களானால் அந்த அஞ்செழுத்தும் ஒரேழுத்தாகி நிற்கும் அம்பலமான கோயிலில் ஈசன் அஞ்சல் அஞ்சல் என்று நடராஜனாக ஆடி நிற்பான்.


சிவவாக்கியம் - 024

அஞ்சும் அஞ்சும் அஞ்சுமே அனாதியான தஞ்சுமே 
பிஞ்சு பிஞ்சதல்லவோ பித்தர்காள் பிதற்றுவீர் 
நெஞ்சிலஞ்சு கொண்டு நீர் நின்று தொக்க வல்லிரேல் 
அஞ்சுமில்லை யாருமில்லை அனாதியாகத் தோன்றுமே

அஞ்செழுத்தே ஐந்து பூதங்களாகவும், ஐந்து புலன்கலாகவும் நமது உடம்பில் இருந்து இயங்கி அனாதியான பஞ்சாட்சரமாக இருக்கின்றது. அதுவே சீவனாகி என்றும் அன்னதியாக உள்ள சிவனால் ஜீவிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது. அதுவே பின்ஜெழுத்தான வாலையாக ஒரேழுத்தாகி உள்ளது. இதனை அறியாமல் பித்தர்களைப் போல் வெறும் வாயால் மட்டுமே பிதற்றுவதால் பயன் ஏது? அந்த அஞ்செழுத்தாக ஆகியிருப்பது இன்னது என்பதை அறிந்து கொண்டு நெஞ்சமாகிய கோவிலிலே அஞ்செழுத்து ஓதி உள்ளம் உருகி கண்ணீர் கசிந்து அங்கேயே நினைவை நிறுத்தி அதிலேயே நின்று தியானிக்க வல்லவர்க்கு அஞ்செழுத்தும் இல்லை ஆறாதாரங்களும் இல்லை. அஞ்செழுத்தும், ஆறு ஆதாரங்களில் உள்ள தெய்வ சக்திகளும் ஒன்றான சிவமாகி அனாதியாகத் தோன்றும்.


சிவவாக்கியம் - 025

நீளவீடு கட்டுநீர் நெடுங்கதவு சாத்துறீர் 
வாழ வேணு மேன்றல்லோ மகிழ்ந்திருந்த மாந்தரே 
காலன் ஓலை வந்த போது கையன்கன்று நிற்பிரே 
ஆலமுண்ட கண்டர் பாதம் அம்மை பாதம் உண்மையே

தான் மகிழ்ச்சியுடன் வாழவேண்டும் என்பதற்காக நீளமாக பெரிய வீட்டைக் கட்டி வேறு எவரும் உள்ளே நுழையாவண்ணம் பெரிய நிலைக்கதவுடன் அமைத்து வைத்திருக்கும் மனிதர்களே!! எத்தனை கதவுகள் அமைத்து சாத்தி வைத்தாலும் எமனின் ஓலையில் எழுதியபடி உயிர் போகும் தருணத்தில் எதைக் கொண்டும் தடுக்க இயலாமல் நம்மால் எதுவும் ஆகாது என கைவிரித்து நிற்பார்கள். ஆலகால விஷத்தை உண்டு அகிலம் முழுமையும் காத்த நீலகண்டராகிய ஈசன் பாதமும் அம்மை சக்தியின் பாதமும் நம்மிடம் உள்ளதை உணர்ந்து அத்திருவடிகளைப் பற்றி தியானியுங்கள். அத்திருவடி சத்தியமாய் நம்மை கரை சேர்க்கும். இது உண்மையே!!!!


சிவவாக்கியம் - 026

வீடெடுத்து வேள்வி செய்து மெய்யினோடுபொய்யுமாய் 
மாடு மக்கள் பெண்டீர் சுற்றம் என்றிருக்கும் மாந்தர்காள் 
நாடு பெற்ற நடுவர் கையில் ஓலை வந்து அழைத்திடில் 
ஓடு பெற்ற அவ்விளை பெறாது காண் இவ்வுடலமே.

மெய்யாகிய வீட்டை அறியாது பொய்யான வாழ்வை நம்பி, புது வீட்டைக் கட்டி வேள்விகள், செய்து புது மனை புகுவிழா நடத்தி, மாடு மக்கள் மனைவி சொந்தம் பந்தம் என அனைவரோடும் எப்போதும் இப்படியே இருப்போம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களே! நல்லது கேட்டது என்பதை நடுவாக இருந்து தீர்ப்பளிக்கும் இறைவனின் இறுதி ஓலை எமன் கையில் கிடைத்து இவ்வுயிரை கொண்டு போனால் மண்ணால் செய்த ஓடு பெரும் விலை கூட பெறாது ஒரு காசுக்கும் உதவாது இவ்வுடம்பு என்பதனைக் கண்டு அறிந்து உணர்ந்து கொள்ளுங்கள். ஆதலின் இவ்வுடலில் ஈசன் இருக்கும்போதே அவனை உங்களில் கண்டுணர்ந்து தியானியுங்கள்.


சிவவாக்கியம் - 027

ஓடம் உள்ள போதலோ ஓடியே உலாவலாம் 
ஓடம உள்ள போதலோ உறுதி பண்ணிக் கொள்ளலாம் 
ஓடமும் உடைந்த பொது ஒப்பிலாத வெளியிலே 
ஆடுமில்லை கோலுமில்லை யாருமில்லையானதே

ஒடமாகிய இவ்வுடம்பு இருந்தால்தான் அங்கும் இங்கும் ஓடி உலவலாம். இந்த உடம்பில்தான் உயிர் உள்ளது என்பதையும் அதிலேதான் இறைவன் இருக்கின்றான் என்பதையும் அறிந்து பிராணாயாமம், வாசியோகம், தியானம், தவம் போன்றவைகளை அறிந்து புரிந்து இவ்வுடம்பை உறுதியான கல்பதேகமாக மாற்றிக் கொள்ளலாம். இதை உணராது இவ்வுடலை விட்டு உயிர்போய் ஆகாயத்தில் மறைந்து விட்டால் அப்போது இவ்வுடலில் ஆடிக் கொண்டிருந்த உயிரும் இல்லை. அதனை மேய்த்துக் கொண்டிருந்த ஈசனும் இல்லை என்றாகி தம மனைவி மக்களோ, சொந்த பந்தங்களோ, யாரும் இல்லாது போய்விடும். ஆகவே இவ்வுடம்பில் உயிர் இருக்கும் பொழுதே இறைவனை அறிந்து தியானம் செய்யுங்கள். பிறவிப் பெருங்கடலை கடந்து கரை சேரலாம்.


சிவவாக்கியம் - 028

அண்ணலே அனாதியே அனாதிமுன் அனாதியே 
பெண்ணும் ஆணும் ஒன்றலோ பிறப்பதற்கு முன்னெலாம் 
கண்ணில் ஆணின் சுக்கிலம் கருவில் ஓங்கும் நாளிலே 
மன்னுளோரும் வின்னுளோரும் வந்தவாறு எங்ஙகனே

நம் ஆருயிரில் ஆதி, அனாதி அந்தமாக உள்ளவன் சிவனே. அவனே அனாதிக்கும் முன் தோன்றிய அனாதியாக என்றும் நம் ஆன்மாவில் உறைகின்றான். பிறப்பதற்கு முன் எல்லா ஆன்மாக்களும் ஒரேழுத்தாக ஒன்றாகவே இருந்தது. அவைகளுக்கு ஆன, பெண் என்ற பேதம் ஏதும் கிடையாது. அது கண்ணில் நினைவாகத் தோன்றி ஆணிடம் சுக்கிலமாக உற்பத்தியாகி உருவாகின்றது. அப்போதே ஆன்மாவில் ஆண்டவன் நுழைந்து விடுகின்றான். பின்னரே உருவாகி ஆன்மா வளர்கின்றது. இப்படித்தான் மண்ணில் வாழும் மனிதர்களாகவும், விண்ணில் சேரும் தேவர்களாகவும் அனைவரும் வந்தனர் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.


சிவவாக்கியம் - 029

பண்டுநான் பறித்து எறிந்த பன்மலர்களை எத்தனை? 
பாழிலே செபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனை? 
மிண்டனாய்த் திரிந்தபோது இரைத்தநீர்கள் எத்தனை? 
மீளவும் சிவாலயங்கள் சூழவந்தது எத்தனை?

தன் வாழ் நாளில் முன்பு வீணாய்ப் பறித்து எறிந்த பன்வகை மலர்கள் எத்தனையோ? மற்றவரை பாழாக்குவதற்கு செபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனையோ? இளைஞனாய் திமிரெடுத்து திரிந்தபோது சிற்றின்பத்தில் இரைத்த நீர்கள் எத்தனையோ? இம்மாதிரி செய்ய தகாதவைகளை செய்து இதனால் ஏற்பட்ட பாவங்கள் அகல சுற்றி வந்த சிவாலயங்கள் எத்தனையோ என்பதை உணர்ந்தறியுங்கள்.


சிவவாக்கியம் - 030

அண்டர்கோன் இருப்பிடம் அறிந்து உணர்ந்த ஞானிகள் 
பண்டரிந்த பான்மை தன்னை யார் அறிய வல்லரோ? 
விண்டவேதப் பொருளை அன்றி வேறு கூற வகையிலா 
கண்டகோயில் தெய்வமென்று கைஎடுப்பது இல்லையே

அண்டங்கள் யாவினுக்கும் அரசனான ஈசனை, அவன் கோனாக அமர்ந்து தனக்குள் ஆட்சி செய்யும் இடம் இதுவென அறிந்து, உணர்ந்த ஞானிகள் அவனையே அறிவதற்காக பட்ட பாட்டினையும், இழந்த பொருளையும், அலைந்த அனுபவங்களையும், அலைந்து தேடியதையும் யாராவது அறிய முடியுமா? வேதங்கள் வெளிப்படுத்தும் மெய்ப் பொருளை ஈசனாக அறிந்தவர்கள் தனக்குள்ளே இறைவனைக் கண்டு கண்ட அதே தெய்வம் என உணர்ந்தவர்கள் காணுகின்ற கோயில்களில் எல்லாம் தெய்வம் இருப்பதாக எண்ணி கைதொழ மாட்டார்கள்.


சிவவாக்கியம் - 031

நெருப்பை மூட்டி நெய்யை விட்டு நித்தம் நித்தம் நீரிலே 
விருப்பமொடு நீர் குளிக்கும் வேத வாக்கியம் கேளுமின் 
நெருப்பும் நீரும் உம்முளே நினைந்து கூற வல்லிரேல் 
சர்க்கம் அற்ற சோதியை தொடர்ந்து கூடல் ஆகுமே!

நாள்தோறும் குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு நெருப்பை மூட்டி அதில் நெய்யை வார்த்து வேதங்களை ஓதும் வேதியர்! அந்த வேதங்கள் சொல்கின்ற மெய்பொருளை உணருங்கள். சிகாரமாக அதை "சிவயநம" என்ற பஞ்சாட்சரத்தால் நினைத்து கூறி வந்து தியானிப்பவர்களானால் அம்மெய்ப் பொருள் சுருக்கமே அற்ற சக்தியாக இருப்பதை உணருங்கள். இதனை முறையாக தொடர்ந்து செய்து வந்தால் சோதி நிலைத்து ஈசன் அருள் பெற்று அவனோடு சேர்ந்து வாழலாம்.


சிவவாக்கியம் - 032

பாட்டிலாத பரமனை பரமலோக நாதனை 
நாட்டில்லாத நாதனை நாரிபங்கன் பாகனை 
கூட்டிமெல்ல வாய் புதைத்து குணுகுனுத்த மந்திரம் 
வேட்டகாரர் குசுகுசுப்பை கூப்பிடா முடிந்ததே.

பாட்டுக்கள் யாவும் பரமனையே பாடுகிறது. எல்லா லோகங்களுக்கும் அவனே நாதன். எல்லா நாடும் அவன் நாடே. மௌனமாக விளங்கும் பரம்பொருளே நாதமாகவும், விந்தாகவும் விளங்குகின்றது. நாரணன் தங்கையான சக்திக்கு தன் இடப்பாகம் தந்த சிவனை தம உடம்பிலேயே இருப்பதை அறிந்து கொண்டு வாய் மூடி மௌனமாக இருந்து உச்சரிக்க வேண்டிய மந்திரமே 'ஓம் நமசிவய' அவனை எண்ணி தியானம் செய்ய வாசி யோகம் தெரிய வேண்டும். அது இரவில் வேட்டைக்கு செல்லும் வேட்டைக்காரர்கள் மற்றவர்களிடம் பேசி தெரிவிக்க குசு குசு வென்று கூப்பிடுவார். இந்த இரகசிய பாஷையை அறிந்துகொண்டு அதன்படி வாசியோகபயிற்சி செய்துவந்தால் இப்பிறவிப் பிணி முடிய அதுவாகிய ஈசன் திருவடி கிட்டும்.


சிவவாக்கியம் - 033

செய்ய தெங்கிலே இளநீர் சேர்ந்த காரணங்கள் போல் 
ஐயன்வந்து என்னுளம் புகுந்து கோயில் கொண்டனன் 
ஐயன்வந்து என்னுளம் புகுந்து கோயில் கொண்டபின் 
வையகத்தில் மாந்தர் முன்னம் வாய் திறப்பது இல்லையே!

தென்னை மரத்தின் மேலே காய்க்கும் தேங்காயின் உள்ளே இளநீர் எப்படி சேர்ந்துள்ளதோ, அது போலவே ஈசன் எனது உள்ளத்தில் புகுந்து கோயில் கொண்டு இருக்கின்றான். என் உள்ளம் என்பதையும் அதிலே என் ஐயன் புகுந்து கோயில் கொண்ட இடம் எது என்பதையும் தெரிந்து கொண்டபின் இவ்வுலகத்தில் உள்ள ஆசைவயப்பட்ட மாந்தர்கள்முன்னம் வாய் திறந்து பேசா மௌனியானேன்.


சிவவாக்கியம் - 034

மாறுபட்ட மணி துலக்கி வண்டின் எச்சில் கொண்டு 
போய் ஊறுபட்ட கல்லின்மீதே ஊற்றுகின்ற மூடரே 
மாறுபட்ட தேவரும் அறிந்து நோக்கும் என்னையும் 
கூறுபட தீர்க்கவோ குருக்கள் பாதம் வைத்தே.

செம்பு, பித்தளை, வெண்கலம் போன்றவைகளின் கலப்பினால் மாறுபட்டு செய்த ஓசை மணியை ஒலித்து, வண்டின் எச்சிலாகிய தேனைக் கொண்டு உளியினால் பற்பல வகைகளில் உடைத்து செதுக்கப்பட்ட கற்சிலையின் மீது ஊற்றி அபிஷேகம் செய்து அதன் உட்பொருளை அறியாத மூடர்களே! மெய்ப்பொருளாகிய ஈசன் நம்மிடமே மாறுபட்ட அண்டக்கல்லாக இருப்பதை அறிந்து அதிலேயே அபிஷேகம் செய்து அதனையே நோக்கி தியானிக்கவும், செய்த பாவங்கள் யாவையும் கூறுபட்டு தீர்க்கவும் மெய்குருவின் திருவடிகளை சிந்தையில் வைத்து தவம் செய்யுங்கள்.


சிவவாக்கியம் - 035

கோயிலாவது ஏதடா குழந்கலாவது ஏதடா 
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே 
கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே 
ஆவதும் அழிவதும் இல்லை இல்லை இல்லையே.

கோயில் என்பது என்ன? குளங்கள் ஆவது எது? என்பதை அறியாமல் புறத்தில் அமைந்துள்ள கோயில்களையும் குளங்களிலும் தீர்த்தமாடி வணங்கிவரும் எம்குலமக்களே ! நமது உடம்பினுள் கோயிலாகவும், குலமாகவும் மனமே அமைந்துள்ளது. அம்மனதை நிலைநிறுத்தி தியானித்தால் ஆன்மாவை அறிந்து கொள்ளலாம். அவ்வான்மா என்றும்நித்தியமாக உள்ளது என்பதையும் அது உற்பனம் ஆவதும் இல்லை உடம்பைப் போல் அழிவதும் இல்லை என்பதையும் உணர்ந்து கொள்ளுங்கள்.


சிவவாக்கியம் - 036

செங்கலும் கருங்கலும் சிவதசாதி லிங்கமும் 
செம்பிலும் தராவிலும் சிவன் இருப்பன் என்கிறீர் 
உம்பாதம் அறிந்து நீர் உம்மை நீய் அறிந்தபின் 
அம்பலம் நிரந்த நாதர் ஆடல் பாடல் ஆகுமே!

செங்கற்களாலும், கருங்கற்களாலும், சிகப்பு நிறம் பொருந்திய சாதி லிங்கத்திலும், செம்பினாலும், தராவினாலும் செய்யப்பட்ட சிலைகளிலும் சிவன் இருக்கிறான் என்கின்றீர்களே! உம்மிடம் சிவன் இருப்பதை அறிவீர்களா? உம்மை நீரே அறிந்து உமக்குள்ளே உயிரை உணர்ந்து அதில் கோயில் கொண்டு விளங்கும் சிவனின் திருவடியைப் பற்றி அதையே நினைந்து ஞான யோகம் செய்து தியானத்தால் திறந்து நான் யார் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். நமக்குள்ளே திருசிற்றம்பலமாக விளங்கும் ஈசனின் நடனத்தையும் அதனால் அடையும் நாதலயமும் கிடைத்து இன்புறலாம்.


சிவவாக்கியம் - 037

பூசை பூசை என்று நீர் பூசைசெய்யும் பேதைகாள் 
பூசையுள்ள தன்னிலே பூசை கொண்டது எவ்விடம் 
ஆதிபூசை கொண்டதோ அநாதி பூசை கொண்டதோ 
ஏது பூசை கொண்டதோ இன்னதென்று இயம்புமோ

கால நேரம் தவறாமல் பூசை செயம் பக்தர்காள், பூசை என்றால் என்ன என்பதை அறிவீர்களா? "பூ" என்பது நமது ஆன்மா. "சை" என்பது அசையாமல் நிறுத்துவது. இதுவே உண்மையான பூசையாகும். இந்த பூசையை நமக்குள்ளேதான் செய்ய வேண்டும். ஆன்மாவான பூவை அது எந்த இடத்தில் இருக்கிறதோ அன்க்கேயே நினைத்து நினைத்து நிறுத்தி அசையாமல் இருத்துவதே பூசை என்பதை அறிந்து கொள்ளுங்கள். அதை யோக தியானத்தால்தான் நமக்குள்ளே செய்ய வேண்டும். இதை விட்டு நீங்கள் செய்கின்ற பூசைகள் யாவும் புறச்சடங்குகளே. ஆதியான சக்தியோ அநாதியான சிவனோ இந்த பூசையை ஏற்றுக் கொண்டார்களா? ஆதலால் அப்பூசை செய்து தியானியுங்கள். அதனை ஆதியாகவும் அனாதியாகவும் நம் உயிரில் உறையும் சிவனும் சக்தியும் ஏற்றுக் கொள்வார்கள்.


சிவவாக்கியம் - 038

இருக்கு நாலு வேதமும் எழுத்தை அறவோதிலும் 
பெருக்க நீறு பூசிலும் பிதற்றிலும் பிரான் இரான் 
உருக்கி நெஞ்சை உட்கலந்து உண்மை கூற வல்லிரேல் 
சுருக்கம் அற்ற சோதியைத் தொடர்ந்து கூடலாகுமே!

இருக்கும் நான்கு வேதங்களில் உள்ள எழுத்துக்கள் யாவையும் மனப்பாடம் செய்து நன்கு ஒதுவதினாலோ, உடம்பு முழுமையும் நிறைத்து பதினாறு பட்டைகள் போட்டு விபூதி பூசுவதினாலேயோ, 'சிவசிவ' என வெறும் வாயால் பிதற்றுவதினாலோ எம்பிரானாகிய சிவன் இருப்பதில்லை. நமக்குள்ளேயே உள்ள சிவனை அறிந்து நெஞ்சுருகி கண்ணில் நீர் மல்கி கசிந்து நினைந்து தியானிக்க வேண்டும். அந்த உண்மையான மெய்ப் பொருளை உணர்ந்து கொண்டு தியானம் தொடர்ந்து செய்தால் சர்க்கம் இல்லாத சோதியான அப்பரம் பொருளோடு கூடி வாழ்வோம்.


சிவவாக்கியம் - 039

கலத்தில் வார்த்து வைத்த நீர் கடுத்த தீ முடுக்கினால் 
கலத்திலே கரந்ததோ கடுத்த தீ குடித்ததோ 
நிலத்திலே கரந்ததோ நீள் விசும்பு கொண்டதோ 
மனத்தின் மாசை நீக்கியே மனத்துள்ளே கரந்ததோ.

வெண்கலப்பானையில் பிடித்து வைத்த நீரை அடுப்பில் வைத்து தீயை அதிகமாக எரியவிட்டால், அப்பானையில் உள்ள நீர் முழுவதும் சுண்டிப்போய் ஆவியாகிவிடும். அப்பணியில் முழுவதும் வைத்த நீர் அதிலேயே கரைந்து மறைந்ததா? கடுமையாக எரியவிட்ட தீ குடித்ததா? அல்லது நிலமாகிய மண்ணில் கரைந்ததா? அணைந்ததும் அடங்கிய ஆகாயத்தை அடைந்ததா? என்பதை சிந்தியுங்கள். அந்த நீர் ஆவியாகி ஆகாயத்தை அடைந்ததுவே உண்மை என்பதைப் புரிந்து கொண்டு நம் மனதினுள்ளே உள்ள மாயையான பாவங்களையும், குற்றங்களையும் நீக்கி அதே மனதை இறைவன் பால் செலுத்தி தியானம் செய்து வந்தால் நம் ஆன்மாவை மனமாகிய ஆகாயத்தில் கரைக்கலாம். எப்படி நீரானது பானையில் தீயால் மறைந்ததோ அது போல தியானத்தீயால் ஆகாயம் ஆளலாம்.


சிவவாக்கியம் - 040

பறைச்சியாவது ஏதடா பணத்தியாவது ஏதடா 
இறைச்சி தோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ 
பறைச்சிபோகம் வேறதோ மனத்திபோகம் வேறதோ 
பறைச்சியும் பணத்தியும் பகுத்து பாரும் உம்முள்ளே

பறைச்சி என்பதும் பார்ப்பனத்தி என்பதும் ஏனாடா? அவர்கள் அனைவரும் பெண்கள்தானே. யாவருக்கும் தசை தோல், எலும்பு யாவும் ஒரே மாதிரிதானே அமைந்துள்ளது. அதில் எதிலாவது இவள் தாழ்ந்த சாதி, அவள் உயர்ந்த சாதி என்று எழுதப்பட்டா இருக்கிறது? பெண்கள் பால் கிடைக்கும் சிற்றின்பம் யாவருக்கும் ஒன்றாகவே அனுபவம் கிடைக்கிறது. இவை யாவையும் நன்கு பகுத்தறிந்து உனக்குள்ளே இருக்கும் இறையை உணர்ந்து தியானம் செய்து பாருங்கள்.


சிவவாக்கியம் - 041

வாயிலே குடித்த நீரை எச்சில் என்று சொல்லுறீர் 
வாயிலே குதப்பு சொல் வேதமெனப் படக் கடவதோ 
வாயில் எச்சில் போக வென்று நீர்தனைக் குடிப்பீர்காள் 
வாயில் எச்சில் போன வண்ணம் வந்திருந்து சொல்லுமே

மற்றவர் வாய் வைத்த நீரை எச்சில் என்று சொல்லி கீழே கொட்டுகின்றீர்களே! உங்கள் வாயால் எச்சிலோடு கலந்து சொல்லும் வார்த்தைகளை மட்டும் வேதம் என்கின்றீர்கள் வாயில் உள்ள எச்சில் போக அவ்வாயினால்தான் நீரைக்குடிக்கின்றீர்கள். வாயில் உள்ள எச்சிலும் நீர்தான். ஆதலால் வாயில் உள்ள எச்சில் எவ்வாறு எவ்வண்ணம் போனது என்பதை எனக்கு வந்திருந்து சொல்லுங்கள்.


சிவவாக்கியம் - 042

ஓதுகின்ற வேதம் எச்சில் உள்ள மந்திரங்கள் எச்சில்
போதகங்களானது எச்சில் பூதலங்கள் ஏழும் எச்சில் 
மாதிருந்த விந்து எச்சில் மதியும் எச்சில் ஒலியும் எச்சில் 
ஏதில் எச்சில் இல்லதில்லை இல்லை இல்லை இல்லையே.

வாயினால் ஓதுகின்ற வேதம், மந்திரங்களாக உள்ளவை, உண்ணும் உணவு, ஏழு உலகங்கள், பெண்களிடம் விட்ட விந்து, அறிவு, சப்தங்கள் யாவுமே எச்சில்தான், ஆகவே அனைத்திலும் நீராகிய எச்சிலால் ஆனது என்பதை அறிந்து கொள்ளுங்கள். நீரில்லாமல் ஏதும் இல்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.


சிவவாக்கியம் - 043

பிறப்பதற்கு முன்னெல்லாம் இருக்குமாற தெங்கனே 
பிறந்து மண்ணிறந்து போய் இருக்குமாற தெங்கனே 
குறித்துநீர் சொல்லாவிடில் குறிப்பில்லாத மாந்தரே 
அறுப்பனே செவி இரண்டும் அஞ்செழுத்து வாளினால்.

பிறப்பதற்கு முன்பு நாம் எங்கிருந்தோம், பிறந்து வளர்ந்து வாழ்ந்து இறந்தபின் எங்கே போய் இருப்போம் என்பதை எண்ணிப்பாருங்கள். இப்பிறவியின்மேன்மையை உணராமல் எந்த இலட்சியமும் இல்லாமல் மறைந்து போகும் மானிடர்களே! உங்கள் பிறவியை அறுக்கவும், மீண்டும் பிறவாமல் இருக்கவும் அஞ்செழுத்து என்றும் பஞ்சாட்சர மந்திரத்தை உங்கள் காதுகளில் ஓதுகின்றேன்.


சிவவாக்கியம் - 044

அம்பலத்தை அம்பு கொண்டு அசங்கேன்றால் அசையுமோ 
கம்பமற்ற பாற்கடல் கலங்கென்றால் கலங்குமோ 
இன்பமற்ற யோகியை இருளும் வந்து அனுகுமோ 
செம்பொன் அம்பலத்துலே தெளிந்த்ததே சிவாயமே.

அம்பலமாய் இருக்கின்ற ஆகாயத்தை அம்பைவிட்டு அசை என்றால் அசையுமா? கலங்கம் இல்லாத திருப்பாற்கடலை கலங்க முயன்றால் கலங்குமா? அதுபோல் உலக இன்பங்களைத் துறந்து செவ்வனே யோக, தியானம் பயின்று வந்த யோகிகளிடம் துன்பமாகிய இருள் கிட்டே அணுகுமா? செம்மையான பொன்னம்பலத்தில் சோதியாக விளங்கும் சிவனை அறிந்து தெளிந்து "சிவாய நம" என தியானம் செய்து உண்மையை உணர்ந்துகொள்ளுங்கள்.


சிவவாக்கியம் - 045

சித்தம் ஏது சிந்தை ஏது சீவன் ஏது சித்தரே 
சத்தி ஏது சம்பு ஏது சாதி ஏது பேதம் அற்ற தேது 
முத்து ஏது மூலம் ஏது மூல மந்திரங்கள் ஏது 
வித்தில்லாத விதத்திலே இன்னதென்று இயம்புமே.

சித்தரென்றும் அவதாரமென்றும் சொல்லித் திரியும் ஞானிகளே! சித்தம் என்று சொல்லுமிடம் ஏது? சிந்தனை எங்கு தோன்றுகிறது? சீவனாகிய உயிர் எங்குள்ளது? சத்தியாகிய வாலை இருப்பிடம் எது? சம்பு எனப்படும் ஈசன் உலாவும் இடம் எது? சாதி பேதம் இல்லாதது எது? முத்தியை அழிப்பது எது? உடம்புயிருக்கு மூலம் எது? மூல மந்திரமான ஒரேழுத்து எது என்பதையெல்லாம் அறிவீர்களா? வித்தே இல்லாமல் வித்தாக என்றும் நித்தியமாய் விளங்கும் உளதாய் இலதாய் உள்ள பொருளை இதுதான் அது என்று விளக்கமாக இயம்புங்கள்


சிவவாக்கியம் - 046

சித்தமற்று சிந்தையற்று சீவனற்று நின்றிடம் 
சத்தியற்று சம்புவற்று சாதிபேத மற்று நன் 
முத்தியற்று மூலமற்று மூல மந்திரங்களும் 
வித்தை இத்தை ஈன்ற விதத்தில் விளைந்ததே சிவாயமே.

தியான நிலையில் சித்தத்தையும், சிந்தையையும், சீவனையும் அறிந்து அது நின்ற இடத்தில் மனதை நிறுத்த வேண்டும். அங்கு வாலையாகிய சக்தியையும் அறிவாகிய சிவனையும் சாதி பேதம் ஏதும் இன்றி இரண்டும் ஒன்றான மெய்ப்பொருளில் சேர்க்கவேண்டும். அதுவே முக்திக்கு வித்தாகும். இந்த ஓரெழுத்தை மேலே ஏற்றி ஆறு ஆதாரங்களையும் கடந்து, சகஸ்ரதளத்தில் சேர்க்க வாசியென்ற யோக வித்தையை அறிந்து பயிற்சி செய்ய வேண்டும். ஞான வித்தையான பிரமமான ஒரெழுத்தெனும் விதத்தில்தான் அஞ்செழுத்தும் விளைந்து பஞ்சபூதங்களாய் விரிந்து நிற்கிறது.


சிவவாக்கியம் - 047

சாதியாவது ஏதடா சலம் திரண்ட நீரலோ 
பூதவாசல் ஒன்றலோ பூதம் ஐந்தும் ஒன்றலோ 
காதில்வாளி காரைகம்பி பாடகம் பொன் ஒன்றலோ 
சாதி பேதம் ஓதுகின்ற தன்மை என்ன தன்மையே.

ஆண், பெண் என்பது தானே சாதி, இதில் பல சாதிகள் எதப்பா? இவ்வுலகம் முழுமையும் நீர்தான் நிரம்பியுள்ளது. அதுபோலவே உயிரும் நீராகத்தான் உள்ளது. உடம்பில் பத்தாம் வாசலாகவும், பஞ்சபூதமாகவும், பஞ்சாட்சரமாகவ்வும் உள்ள பொருள் ஒன்றே. அது நகைகளில் காதில் அணியும் தோதாகவும், மூக்கில் அணியும் மூக்குத்தியாகவும், கைகளில் அணியும் வளையல் போன்ற பல வகையாகவும் இருப்பது தங்கம் ஒன்றே. இதை அறியாமல் எல்லா உயிர்களும் இறைவனிடம் இருந்து வந்ததை உணராமல் சாதி, பேதம் பேசுகின்ற உங்களின் தன்மைகளை என்னவென்று கூறுவேன்!!!!


சிவவாக்கியம் - 048

கறந்தபால் முலைப்புகா கடைந்த வெண்ணை மோர்புகா 
உடைந்த போன சங்கின் ஓசை உயிர்களும் உடற்புகா 
விரிந்தபூ உதிந்த்தகாயும் மீண்டும்போய் மரம்புகா 
இறந்தவர் பிழைப்பதில்லை இல்லை இல்லை இல்லையே!

பசுவின் மடியில் இருந்து கறந்த பால் மீண்டும் பசுவின்முலைக் காம்புகளில் சேராது, மோரிலிருந்து கடைந்தெடுக்கப்பட்ட வெண்ணெய் மீண்டும் மோராகாது. உடைந்து போன சங்கிலிருந்து ஓசை வராது, அதிலிருந்து வெளிவரும் உயிர் மீண்டும் அவ்வுடலாகிய சங்கில் புகாது. விரிந்த பூ மொட்டாகாது மரத்திலிருந்து உதிர்ந்த காய் மீண்டும் மரத்தில் ஓட்ட முடியாது. அது போல்தான் நம் உடம்பை விட்டு உயிர்போய் விட்டால் மீண்டும் அவ்வுடம்பில் சேர்ந்து பிழைக்க வைக்க முடியவே முடியாது. ஆகவே உடம்பில் உயிர் உலாவிக் கொண்டிருக்கும்போதே யோக தியானம் செய்து இறைவனை அடைந்து பிறவா நிலை அடையுங்கள்.


சிவவாக்கியம் - 049

அறையினில் கிடந்துபோது அன்று தூமை என்கிறீர் 
துறை அறிந்து நீர் குளித்த அன்று தூமை என்கிறீர் 
பறையறைந்து நீர் பிறந்த அன்று தூமை என்கிறீர் 
புரை இலாத ஈசரோடு போருந்துமாறது எங்ஙனே?

பெண்கள் அறையில் ஒதுங்கிக் கிடந்தால் தீட்டு அவர்கள் குளிக்கும் அறையில் குளித்தால் தீட்டு, தாரைத் தப்பை சப்தத்துடன், பிறந்தால் தீட்டு, இறந்தால் தீட்டு என்று சொல்கின்றீர்களே! இவ்வுடம்பில் உயிரில் உள்ள தீட்டோடுதானே ஈசன் பொருந்தி இருக்கின்றான். அதனை அறியாமல் தீட்டு என்று ஒதுக்குவதில் என்ன பயன் கண்டீர்கள்?


சிவவாக்கியம் - 050

தூமை தூமை என்றுளே துவண்டு அலையும் ஏழைகாள் 
தூமையான பெண்ணிருக்க தூமை போனது எவ்விடம் 
ஆமைபோல மூழ்கி வந்து அநேகவேதம் ஒதுரீர் 
தூமையும் திரண்டுருண்டு சொற்குருக்கள் ஆனதே.

தீட்டாகிவிட்டதே, தூமையாகிவிட்டதே என்று சொல்லி துவண்டு வருந்தி அலையும் ஏழைகளே! தூமையானவாலைப்பெண் உனக்குள்ளேயே இருக்கும்போது தீட்டு என்பது உன்னைவிட்டு எவ்விடம் போகும். அதுபோனால் உனது உயிரும் உடலை விட்டு போய்விடும். ஆமையைப் போல் நீரில் தலையை மூழ்கிவிட்டு, தீட்டு போய்விட்டதாகக் கூறி அனேகவித வேத மந்திரங்களை ஒதுகின்றீர்கள். அந்த வேத சாஸ்திரங்களை உங்களுக்குச் சொல்லித் தந்த சொற்குருக்களும் இந்த தூமையினால்தான் உருவாக்கி வளர்ந்து திரண்டுருண்டு ஆனவர்கள்தான் என்பதனை அறிந்துணருங்கள்.


சிவவாக்கியம் - 051

சொற்குருக்கள் ஆனதும் சோதிமேனி ஆனதும் 
மெய்க்குருக்கள் ஆனதும் வேணபூசை செய்வதும் 
சற்குருக்கள் ஆனதும் சாத்திரங்கள் சொல்வதும் 
செய்க்குருக்கள் ஆனதும் திரண்டுருண்ட தூமையே

சொற்குருக்கள் ஆனவர்களும், சோதியான ஈசன் உடம்பில் ஆவதும், மெய்க்குருக்கள் ஆனவர்களும் வேண்டிய பூசை செய்வதும் சற்குருக்கள் ஆனவர்களும், சாஸ்திரங்கள் யாவும் சொல்வதும் செய்க்குருக்கள் ஆனவர்களும் ஆகிய அனைவருமே தூமையில் கருவாகி திரண்டுருண்டு உருவானவர்களே.


சிவவாக்கியம் - 052

கைவடங்கள் கொண்டு நீர் கண்சிமிட்டி நிற்கிறீர் 
எவ்விடங்கள் கண்டு நீர் எண்ணி எண்ணிப் பார்க்கிறீர் 
பொய் இறந்த சிந்தையை பொருந்தி நோக்க வல்லிரேல் 
மெய் கடந்து உம்முளே விரைந்து கூடல் ஆகுமே.

எவ்வளவோ கை முறைகள் கொண்டு யோக ஞானம் கற்றாலும் நம் மெய்யில் மெய்யான இடம் எதுவென அறியாமல் கண்களை சிமிட்டி நிற்கிறீர்கள். ஈசன் இருக்கும் இடம்எங்கே என்று தெரிந்து கொள்ளாமல் எவ்விடத்தில் மனதை இறுத்தி தியானம் செய்கிறீர்கள். பொய்யாயின யாவையும் ஒழித்து மெய்ப் பொருளை நன்கு உணர்ந்து, அங்கேயே சிந்தையைப் பொருத்தி அதையே நோக்கி தியானிக்க வல்லவர்கலானால் மெய்ப்பொருளில் சோதியாக விளங்கி எல்லாவற்றையும் கடந்து நின்ற ஈசனை உங்களுக்குள்ளேயே கண்டு விரைவில் சேர்ந்து கூடி இறவா நிலையைப் பெறுங்கள்.


சிவவாக்கியம் - 053

ஆடு காட்டி வேங்கை அகப்படுத்து மாறுபோல் 
மாடு காட்டி என்னைநீ மதிமயக்கல் ஆகுமோ 
கோடு காட்டி யானையைக் கொன்றுரித்த கொற்றவா 
வீடு காட்டி என்னைநீ வெளிப்படுத்த வேணுமே

ஆட்டை கட்டி வைத்து, வலை விரித்து வேங்கைப் புலியை பிடிப்பது போல் மாடு, மக்கள், செல்வம் என்ற ஆசை வலைக்குள் என்னை அகப்படுமாறு மயங்கச் செய்வது முறையோ!! தாருகாவனத்து முனிவர்கள் எல்லாம் நம் அறிவால் எதையும் சாதிக்கும் சக்தி நமக்கு இருக்க நாம் என் ஈசனை வணங்க வேண்டும் என ஆணவம் பெருகி இறைவனை மதியாது யாகம் செய்தனர். ஈசன் பிச்சடனராக நிர்வாண கோணத்தில் தாருகாவனம் சென்றார். ஈசனை கண்ட ரிஷி பத்தினிகள் அனைவரும் அவர் அழகில் மயங்கிய வண்ணம் அப்படி அப்படியே தங்கள் நிலை மறந்து பின் தொடர்ந்தனர். இதனைக் கண்ட முனிவர்கள் இறைவனை உணராது கோபம் கொண்டு யாகத் தீயிலிருந்து யானையை உருவாக்கி ஈசனைக் கொள்ள ஏவினர். ஈசன் அதனைக் கொன்று அதன் தோலை உரித்து அணிந்துகொண்டார். அதுபோலன்றி ஆணவம் அகங்காரம் என்னைப் பற்றாமல் என் அறிவை மயக்காமல் மெய்யான வீட்டை எனக்குக் காட்டி அந்த வழியிலே தியானம் கூட்டி உன்னை அடையும் வழியைக்காட்டி என்னை வெளிப்படுத்த வேண்டும்.


சிவவாக்கியம் - 054

இடது கண்கள் சந்திரன் வலது கண்கள் சூரியன் 
இடக்கை சங்கு சக்கரம் வலக்கை சூழ மான்மழு 
எடுத்தபாதம் நீள்முடி எண்திசைக்கும் அப்புறம் 
உடல் கடந்து நின்ற மாயம் யாவர்காண வல்லரோ

உனது இடது கண் சந்திரன், வலது கண் சூரியன். இடது கையில் சங்கு சக்கரமும் வலது கையில் மான் மழுவையும் கொண்டு பிரம்மாவும் விஷ்ணுவும் அடிமுடி காண இயலாமல் பூமிக்கும் வானத்திற்கும், எட்டு திசைகளுக்கும் அப்புறமாய் நின்ற சிவனே! நீ என் உடம்பில் கலந்து நின்ற மாயத்தை யார் காண வல்லவர்கள்? என் உடம்பினில் மனதை அறிந்து மாயையே நீக்கி அறிவாய் நீ உள்ளதை அறிந்து கொண்டேன்.


சிவவாக்கியம் - 055

நாழியப்பும் நாழியுப்பும் நாழியான வாறுபோய் 
ஆழியோனும் ஈசனும் அமர்ந்து வாழ்ந் திருந்திடும் 
ஏறில்ஏறும் ஈசனும் இயங்கு சக்ர தரனையும் 
வேறுகூறு பேசுவார் வீழ்வர்வீண் நரகிலே.

ஒரு படி நீரில் ஒரு படி உப்பைச் சேர்த்தால் அது அந்நீரிலேயே கரைந்து ஒரு படி உப்பு நீராகத்தான் இருக்கும். அதுபோலதான் திருப்பாற் கடலில் பள்ளி கொண்ட விஷ்ணுவும் திருசிற்றம்பலத்தில் நடனமிடும் ஈசனும் ஒன்றாகவே நம் உள்ளத்தில் அமர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் இடத்தை அறிந்து கொள்ளுங்கள். எருதாகிய நந்தியில் ஏறும் ஈசனையும் சக்ராயுதத்தை உடைய விஷ்ணுவையும் அதுதான் பெரிது, இதுதான் பெரிது என வேறுபடுத்திக் கூறுபவர்கள் மெய்ப்பொருளை அறியமாட்டாது கொடுமையான நரகக் குழியில் வீழ்வார்கள்.


சிவவாக்கியம் - 056

தில்லை நாயகன் அவன் திருவரங்கனும் அவன் 
எல்லையான புவனமும் அமர்ந்து ஏகமுத்தியானவன் 
பல்லுநாவும் உள்ளபேர் பகுந்துகூறி மகிழுவார் 
வல்லபங்கள் பேசுவார் வாய்புழுத்து மாய்வரே!

தில்லையில் ஆடும் நடராஜனும் அதுவே. திருவரங்கத்தில் பள்ளி கொண்ட நாராயணனும் அதுவே. எல்லா உலகங்களுக்கும் எல்லையான ஆகாயமாகவும், பிரம்மம் ஆனா ஏகமாகவும், முத்தீயாகவும் இருப்பது அதுவே. பாலும் தீ நாக்கும் உள்ளவர்கள் சிவனே பெரியவன் என்றும் அல்ல பெருமாளே பெரியவன் என்றும் அவரவர் எண்ணம்போல் படித்ததை மட்டும் வைத்து பேசி மகிழ்வார்கள். புராணக் கதைகளில் நடந்த வல்லபங்களை கூறி வேறுபடுத்தி பேசுபவர்கள் தன் ஆன்மாவை அறியமாட்டது வாய்புழுத்து மடிவார்கள்.


சிவவாக்கியம் - 057

எத்திசைக்கும் எவ்வுயிர்க்கும் எங்களப்பன் எம்பிரான் 
முத்தியான வித்துளே முளைத்தெழும் தவச்சுடர் 
சித்தமும் தெளிந்துவேத கோயிலும் திறந்தபின் 
அத்தனாடல் கண்டபின் அடங்கலாடல் காணுமே.

எட்டு திசைகளுக்கும், எல்லா உயிர்களுக்கும் தந்தையாக இருப்பவன் எம்பிரானாகிய ஈசனே. சக்தியாகிய நம் உடம்பில் வித்தாகவும், உயிராகவும், அறிவாகவும் விளங்கும் வாலியை அறிந்து தியானம் செய்ய செய்ய அருட்பெருஞ் சோதியாக ஆண்டவன் வருவான். சித்தம் தெளிந்து, அறிவை அறிந்து நான்கு வேதங்களும் கூறும் உள்ளமாகிய கோயிலின் வாசலை திறந்து ஈசனின் நடனங்கண்டு ஆனந்தம் அடைந்து அமைதி பெறலாம்.


சிவவாக்கியம் - 058

உற்ற நூல்கள் உம்முளே உணந்துனர்ந்து பாடுவீர் 
பற்றறுத்து நின்றுநீர் பராபரங்கள் எய்துவீர் 
செற்றமாவை யுள்ளரைச் செருக்கறுத்து இருந்திடில் 
சுற்றமாக உம்முளே சோதி என்றும் வாழுமே.

இறைவனுக்கு உற்ற நூல்களை உணர்ந்துணர்ந்து பாடுங்கள். பற்றுக்களை அறத்து, தவத்தில் நிட்று பராபரமான எசனை சேருங்கள். பகைமைகளை ஒழித்து உள்ளத்தில் மாசுகளை அறுத்து, பத்தாம் வாசலை திறந்து ஆணவத்தையும், கர்வத்தையும் அழித்து மெய்ப்பொருளை அறிந்து தியானம் செய்து வந்தால் உனக்குள் பரிசுத்தமான மெய்ப்பொருளில் ஈசன் சோதியாக என்றென்றும் நிலைத்து வாழ்வார் மரணம் இல்ல பெருவாழ்வில் வாழலாம்.


சிவவாக்கியம் - 059

போதடா எழுந்ததும் புனலதாகி வந்ததும் 
தாதடா புகுந்ததும் தானடா விளைந்ததும் 
ஓதடா அஞ்சுமூன்றும் ஒன்றைத்தான வக்கரம் 
ஓதடா இராமராம ராமவென்னும் நாமமே

காலைப் பொழுதில் எழுந்தது அது என்ன என்பதையும், நீராகி, நின்று வந்த அது என்ன என்பதையும் நாத விந்தான தாதுவை புகுந்து நெருப்பாகி விளைந்த அது என்ன? என்பதி எல்லாம் நமக்குள் நன்கு அறிந்து அது "மெய்பொருளே" என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.அது பஞ்சபூத தன்மையைக் காட்டும் "நமசிவய" எனும் ஐந்தெழுத்தாகவும் அறிவு, உணர்வு, நினைவு என்பவைகளை உணர்த்தும் அகாரம், உகாரம், இகாரம் என்ற மூன்றெழுத்து ஓம் எனும் ஓங்காரகமாக உள்ளதை உணர்ந்து ஓம் நமசிவய எனும் அச்சரத்தை உங்களுக்குள் ஓதி உயர்வடையுங்கள். ஒரெழுத்தான வித்திலிருந்து ஐந்து மூன்றும் எட்டாகி உடம்பாக விளங்குவதை உணர்ந்து அதுவே ராம மந்திரமாக இருப்பதை அறிந்து ராமநாமத்தை ஓதி தியானியுங்கள்.


சிவவாக்கியம் - 060

அகாரம் என்ற அக்கரத்துள் அவ்வுவந்து உதித்ததோ 
உகாரம் என்ற அக்கரத்துள் உவ்வு வந்து உதித்ததோ 
அகாரமும் உகாரமும் சிகாரமின்றி நின்றதோ 
விகாரமற்ற யோகிகாள் விரித்துரைக்க வேணுமே

அகாரம் என்ற 'அ' எழுத்தில் ஒரெழுத்தான அவ்வு தோன்றியதோ! உகாரம் என்ற 'உ ' எழுத்தில் ஊமைஎழுத்தான உவ்வு வந்து தோன்றியதோ! இந்த எட்டிரண்டுமான 'அ'வும் 'உ''வும் 'சி'என்ற சிகாரம் இன்றி தோன்றியிருக்க முடியுமா? இதனை எவ்வித மன விகாரமும் அற்ற யோகிகளே விரிவாக எடுத்துரைத்து விளக்க வேண்டும். எந்த மொழி எழுத்துக்களுக்கு முதல் எழுத்தாக இருப்பது () புள்ளியாகவும், பேசும் எழுத்தாக மாறும் பொது 'சி'யாகவும் உள்ளது, ஆதலால் சிகாரம் இல்லாமல் எந்த எழுத்தும் நிற்காது என்பதி புரிந்துகொண்ட அந்த ஓரெழுத்தை உணர்ந்துதியானியுங்கள்...


சிவவாக்கியம் - 061

அறத்திறங்களுக்கும் நீ அகண்டம் என்திசைக்கும் நீ 
திறதிறங்களுக்கும் நீ தேடுவார்கள் சிந்தை நீ 
உறக்கம் நீ உணர்வு நீ உட்கலந்த சோதி நீ 
மறக்கொணாத நின் கழல் மறப்பினும் குடிகொளே

ஈஸ்வரா! தர்மகாரியங்கள் யாவும் நீ, அகண்டங்கள் அனைத்துக்கும் எட்டு திசைகளுக்கும் காரணமானவன் நீ. உன்னை அடைய வேண்டும் என்று தேடுவோர்களின் சிந்தையிலும் மெய்யறிவாகவும் உள்ளவன் நீ. மெய் ஞானா விஞ்ஞானத் திறன்களுக்கும் அதில் ஆராய்ந்து சாதிக்கும் திறமைகளுக்கும் காரணம் நீ. தூக்கத்தில் கிடைக்கும் சுகம் நீ. உன்னை உணரும் உணர்வும் நீ ஏன் உடலில் உட்கலந்து நிற்கும் சோதியும் நீ கனவிலும், நனவிலும் மறக்கக் கூடாத நின் திருவடியை அடியேன் அறியாது மறந்து போனாலும் ஏன் உடலாகிய வீட்டில் மனத் தாமரையில் வந்து குடியிருந்து ஆண்டு கொள்.


சிவவாக்கியம் - 062

அண்டம் நீ அகண்டம் நீ ஆதிமூல மானோன் நீ 
கண்டம் நீ கருத்தும் நீ காவியங்கள் ஆனோன் நீ 
புண்டரீக மன்றுளே புனருகின்ற புண்ணியர் 
கொண்ட கோலமான நேர்மை கூர்மை என்ன கூர்மையே.

நாராயணா! இவ்வுலகம் நீ அகண்டங்கள் யாவும் நீ. முதலையின் பிடியில் அகப்பட்ட கஜேந்திரன் என்ற யானை ஆதிமூலமே என்று அபயக்குரலிட்டு அலற அதனைக் காத்து ரட்சித்து அனைத்துக்கும் ஆதிமூலமாக ஆனவன் நீ. ஆபத்து வரும் காலத்தில் காப்பவன் நீ. ஏன் கருத்தினுள்ளே தெளிவாகத் திகழ்பவன் நீ. இதிகாச காவியங்களான மகாபாரதத்தின் நாயகன் நீ. ஆயிரம் இதழ் தாமரையான சகஸ்ரதளத்தில் நின்று யோக தியானம் செய்யும் புண்ணியோர்கள் புண்டரீகம் எனும் மைப் பொருளில் சேர்ந்து அதிலேயே தவ்வக்கோலம் பூண்டிருப்பர். நடுவாக அமைந்த கூர்மையொத்த இடத்தில் உன்னைக் கண்டு ஆனந்தம் பெற்று உன்னுடைய கூர்ம அவதாரத்தை எண்ணி ஆமையைப் போல் ஐம்புலன் களை உள்ளடக்கி சமாதி எண்டும் பேரின்ப நிலையை அடைவார்கள்.


சிவவாக்கியம் - 063

மை அடர்ந்த கண்ணினார் மயக்கிடும் மயக்கிலே 
ஐ இறந்து கொண்டு நீங்கள் அல்லல் உற்றிருப்பீர்கள் 
மெய் அறிந்த சிந்தையால் விளங்கு ஞானம் எய்தினால் 
உய்யரிந்து கொண்டு நீங்கள் ஊழிகாலம் வாழ்விரே

மைத் தீட்டிய அழகிய கண்களை உடைய இளம் பெண்கள் ஆடவரை காம வலை வீசி வீழ்த்தி மயக்கிடும் பாழ்வாழ்வெனும் இம்மையையில் அகப்பட்டு வீணான சந்தேகங்களிலும், எம வேதனை பயத்தினாலும் பிடிக்கப்பட்டு நீங்கள் துன்பப்பட்டு வாழ்ந்து உழன்று வருகின்றீர்கள். உங்கள் உடம்பிலேயே உள்ள உயிரை அறிந்து அதில் விளங்கும் மெய்ப்பொருளை உணர்ந்து அதையே சிந்தையில் நினைந்து தியானியுங்கள். இதுவே இப்பிறவி உய்வடையும் வழி என்பத அறிந்து ஞானத்தினால் நீங்கள் தவம் புரிந்து வந்தால் மரணமிலாப் பெரு வாழ்வைப் பெற்று இறைவனோடு எக்காலமும் நித்தியமாய் வாழ்வீர்கள்.


சிவவாக்கியம் - 064

கருவிருந்த வாசலால் கலங்குகின்ற ஊமைகாள் 
குருவிருந்து சொன்ன வார்த்தை குறித்து நோக்க வல்லிரேல் 
உருவிலங்கு மேனியாகி உம்பராகி நின்று நீர் 
திருவளங்கு மேனியாகிச் சென்று கூடலாகுமே

பெண்களின் மீதுள்ள சிற்றின்ப ஆசையால் ஆழிவில் ஏற்படும் பல துன்பங்களாலும், நோய்களாலும் பாதிக்கப் பட்டு வெளியில் சொல்ல முடியாமல் கலங்கித் தவிக்கும் ஊமை மக்களே!! நல்ல குருவாக இருந்து வாழ்ந்து காட்டியவர்கள் சொன்ன உபதேச வார்த்தைகளை நன்கு புரிந்து கொண்டு அந்த ஒன்றையே குறித்து நோக்கி தியானம் செய்ய வல்லவர்க ளானால் அருவாக இருந்த அப்பொருளே உருவாக இலங்கி சோதி மேனியாகி நின்ற ஈசருடன். ஒன்றாகி இணைக்கும். அதுவே உங்களை உத்தமராக ஆக்கி உள் தமரைத் திறந்து ஈசன் திருவாக விளங்கி திகழும் பொன்மேனியில் பொன்னம்பலத்தில் சென்றுகூடி பேரின்பத்தை கூட்டி வைக்கும்.


சிவவாக்கியம் - 065

தீர்த்தம் ஆடவேண்டுமென்று தேடுகின்ற தீனர்காள் 
தீர்த்தம் ஆடல் எவ்விடம் தெளித்து நீர் இயம்பிலீர் 
தீர்த்தமாக உம்முளே தெளிந்து நீர் இருந்த பின் 
தீர்த்தமாக உள்ளதும் சிவாயம் அஞ்செழுத்துமே.

தலம், தீர்த்தம், மூர்த்தம் என்றும் நல்ல தீர்த்தங்களில் மூழ்கி நீராடினால் அநேக பாவங்களும் அகன்றுவிடும் என்றும் காவிரி, கங்க, யமுனா என்று தீர்த்தங்களைத் தேடி ஓடும் அன்பர்களே!! அப்படி யெல்லாம் தேடித் தீர்த்தமாடியதால் செய்த பாவம் யாவும் போய்விட்டதா? பாவங்கள் அகல தீர்த்தமாடுவது எந்த இடம் என்று நீங்கள் தெளிவாகச் சொல்ல வேண்டும் உங்களுக்குள் தெளிந்த தீர்த்தமாக உள்ள நீரையும் அது இருக்கும் இடத்தையும் தெரிந்து கொண்டீர்களா? அவ்வாறு அனைத்து பாவங் களையும் போக்க வல்லதாக உள்ள தீர்த்தமாகிய அது பஞ்சாட்சரம் என்ற மெய்ப்பொருள் என்பதை அறிந்துகொள்ளுங்கள் அதிலேயே பஞ்சபூதங்களும் உள்ளதை உணர்ந்து சிவயநம என்று அஞ்செழுத்தை ஓதி அதையே நினைந்து நெகிழ்ந்து நீராடும் வழியை அறிந்து தியானம் செய்யுங்கள்.


சிவவாக்கியம் - 066

கழுத்தையும் நிமிர்த்தி நல்ல கண்ணையும் விழித்து நீர் 
பழ்த்தவாய் விழுந்து போன பாவமென்ன பாவமே 
அழுத்தமான விதத்திலே அனாதியாய் இருப்பதோர் 
எழுத்திலா எழுத்திலே இருக்கலாம் இருந்துமே

கழுத்தையும் நிமிர்த்து அலறிக் கொண்டே நல்ல கண்களையும் விழித்துக் கொண்டே பாம்பின் வாய் அகப்பட்ட தவளையைப் போல் நீங்கள் மரணத்தின் வாயில் அகப்பட்டு இம்மாய வாழிவில் வாழ்ந்து கொண்டிருப்பது என்ன பாவமோ!! ஒ மனிதர்களே!! இந்த மாயப்பொய் வால்ழ்வு பான்பின் வாய் வீழ்ந்து இரையாகும் தவளைப் போன்று நாம் சிறிது சிறிதாகச் சாவதாக அல்லவா? அமைந்துள்ளது. இப்படிப்பட்ட இம்மரணத்தை வென்று மீண்டும் பிறவாதிருக்க நம் ஆன்மாவில் அழுத்தமான வித்தாக விளங்கும் மெய்ப்பொருளை உணர்ந்து அது அனாதியாய் உள்ள ஒரேழுத்தாக இருப்பதை அறிந்து அந்த உணர்வுறு மந்திரத்திலேயே மனதை நிறுத்தி வாசியாய் இருத்தி தியானம் செய்து வாருங்கள். மாயை நீங்கி சிவத்தோடு என்றும் இருக்கலாம்.


சிவவாக்கியம் - 067

கண்டுநின்ற மாயையும் கலந்து நின்ற பூதமும் 
உண்டுறங்கு மாறு நீர் உணர்ந்திருக்க வல்லிரேல் 
பண்டை ஆறும் ஒன்றுமைய்ப் பயந்த வேத சுத்தராய் 
ஆண்ட முத்தியாகி நின்ற ஆதிமூலம் ஆவீரே.

இவ்வுலக வாழில் மாயையான உடம்பில் கலந்து நின்ற பஞ்சபூதங் களையும் கண்டு தியானித்திருங்கள். உண்பதையும் உறங்குவதையும் அனுபவித்து அறிவது போல் உங்களுக்குள் உள்ள உண்மைப் பொருளை உணர்ந்து அதிலேயே மனதை நிறுத்தி தியானித்திருக்க வல்லவர்களா னால் ஆறு ஆதாரங்களும் ஒன்றாக ஆகி வேதங்கள் கூறும் பரிசுத்தமான இடத்தில் மெய்ப்பொருள் இருப்பதை அறிந்து கொள்ளலாம். அதை அறிந்து கொண்டாலே இந்த அண்டத்தில் முக்தி அடையலாம். அதிலேயே நின்று யோக சாதகத்தால் மூன்று தீயையும் இணைத்து தவம் புரிந்தால் ஆதிமூலமான அப்பரம் பொருளை அடைவீர்கள்.


சிவவாக்கியம் - 068

மூலநாடி தன்னிலே முளைத்தெழுந்த சோதியை 
நாலு நாழி உம்முளே நாடியே இருந்த பின் 
பாலனாகி வாழலாம் பரப்பிரமம் ஆகலாம் 
ஆலமுண்ட கண்டர் ஆணை அம்மை ஆணை உண்மையே.

மூலநாடியான சுழுமுனையில் வாசியோகம் செய்து அதனால் வரும் நாத சப்தத்தால் அங்கெ தோன்றி எழுந்த சோதியில் மனம் பொருத்தி நான்கு நாழிகை நேரம் தியானம் செய்ய வேண்டும் இதனைத் தொடர்ந்து நாடி செய்து தவம் புரியும் யோக ஞான சாதகர்கள் என்றும் இளமையோடு பாலனாக வாழ்வார்கள்.அதன் பலனாய் அவர்களே பரப்பிரமமாய் அவார்கள் இது ஆலகால விஷம் உண்ட நீலகண்டர் மீதும் அம்மையான உமையவள் மீது ஆணையிட்டு சத்தியம் என்று சொல்கின்றேன்


சிவவாக்கியம் - 069

ஈன்ற வாசலுக்கே இரங்கி எண்ணிறந்து போவீர்காள் 
கான்ற வாழை மொட்டலர்ந்த காரணம் அறிகிலீர் 
நான்ற வாசலைத் திறந்து நாடி நோக்க வல்லிரேல் 
தோன்ற மாயை விட்டொழிந்து சோதி வந்து தோன்றுமே

பெண்கள் மேல் கொண்ட மையலினால் அவர்களுக்கு இரங்கி வாழ்நாள் முழுதும் உழைத்து இளைத்து மாண்டு போகின்ற மனிதர்காள் வாழையடி வாழையாக வாழைமரம் கன்று ஈன்றதாயும் பூ பூத்து காய்க்கும் காரணத்தை அறிவீர்களா!! மனிதர்களுக்கும் வாழைக்கும் நீரே வித்தான காரணத்தை அறிந்து கொள்ளுங்கள் மனம், புத்தி, சித்தம். அகங்காரம் என்ற நான்கும் இருக்கும் நந்தியின் வாசலைத் திறந்து மெய்ப்பொருளையே நாடி நோக்கியிருந்து தியானித்திருக்க வல்லவர் ஆனால் மனத்தினால் தோன்றுகின்ற மாயைகள் யாவும் நம்மைவிட்டு ஒழிந்து நம்முள் அருட்பெரும் ஜோதியாக ஈசன் வந்து தோன்றுவான்.


சிவவாக்கியம் - 070

உழலும் வாசலுக்கு இறங்கி ஊசலாடும் ஊமைகாள் 
உழலும் வாசலைத் துறந்து உண்மை சேர எண்ணிலிர் 
உழலும் வாசலைத் துறந்து உண்மை நீர் உணர்ந்த பின் 
உழலும் வாசல் உள்ளிருந்த உண்மை தானும் ஆவீரே!!

வீடு மனைவி மக்கள் செல்வம் என்று அதற்காகவே அலைந்து உலக வாழ்வில் இன்ப துன்பங்களில் ஊசலாடிக் கொண்டிருக்கும் ஊமை மக்களே நம்மை மீண்டும் பிறவிப்பிணியில் ஆட்படுத்தி உழலும் அந்த வாசலைத் துறந்து உண்மையை உணர்ந்து மெய்ப்பொருள சேர்ந்து மீதும் பிறவா நிலை பெற எண்ணம் வையுங்கள். அனைத்தையும் துறந்து அவனே கதியென சரணடைந்து தன்னைத் தான் அறிந்து தனக்குள்ளேயே இறைவன் இருக்கும் உண்மையை உணர்ந்து தியானியுங்கள் நம்மில் இருக்கும் பத்தாம் வாசலில் உள்ளிருந்து உழலும் சோதியான மெய்ப் பொருளையே பற்றி இருங்கள் நீயே அதுவாகிய பெருன்மையாக ஆவீர்கள்


சிவவாக்கியம் - 071

இருக்கவேண்டும் என்றபோது இருத்தலாய் இருக்குமோ 
மரிக்கவேண்டும் என்றாலோ மண்ணுலே படைத்தனர் 
சுருக்கமற்ற தம்பிரான் சொன்ன அஞ்செழுத்தையும் 
மரிக்குமுன் வணங்கிடீர் மருந்தெனப் பதம் கெடீர்

நாம் எப்பொழுதும் இப்படியே இருக்க வேண்டும் என்று நினைத்தால் இருக்க முடியுமா? இருந்து இறக்க வேண்டும் என்று தானே இப்பூமியில் நம்மைப் படைத்தனர். குறுகிய எண்ணம் இல்லாத என் குருநாதன் எனக்கு உபதேசித்த சிவனாம என்ற அஞ்செழுத்தையும் இறப்பதற்கு முன் அறிந்து கொண்டு வணங்கி செபம் செய்து தியானம் செய்யுங்கள். அதுவே இப்பிறவிப் பிணி தீர்க்கும் மருந்தாக இருப்பதை உணராமல் இறை திருவடியை மறந்து கெடுகின்றீர்கள்.


சிவவாக்கியம் - 072

அம்பத்தொன்றில் அக்கரம் அடக்கம் ஓர் எழுத்துளோ 
விண்பறந்த மாத்திரம் வேதம் நான்கும் ஒன்றலோ 
விண்பறந்த மூல அஞ்செழுத்துளே முளைத்ததே 
அங்கலிங்க பீடமாய் அமர்ந்ததே சிவாயமே.

'நமசிவய' என்ற அஞ்செழுத்துக்கும் ( 9+11+4+15+12 = 51 ) எண்களைக் கொடுத்து அம்பத்தோர் அட்சரங்களாக்கி அமைத்து அதை ஒரேழுத்தான 'சி'யில் அடக்கினர். ஆகாயத்தில் பறந்து நின்ற சோதியான சிகாரமும், வேதங்கள் நான்கும் கூறும் சிகாரமும் ஒன்றே. மூலாதரத்திலிருந்து ஆஞ்ஞா வரை ஓம் நமசிவய என்று உச்சரித்து தியானியுங்கள். நம் உடம்பிலேயே இழிந்கமாகவும், பீடமாகவும் அமைத்திருப்பது சிவமே என்பதை உணருங்கள்.


சிவவாக்கியம் - 073

சிவாயம் என்ற அட்சரம் சிவன் இருக்கும் அட்சரம் 
உபாயம் என்று நம்புதற்கு உண்மையான அட்சரம் 
கபாடம் உற்ற வாசலைக் கடந்து போன வாயுவை 
உபாயம் இட்டு அழைக்குமே சிவாய அஞ்செழுத்துமே

சிவயநம என்ற மந்திரமே சிவன் இருக்கும் அட்சரமாகும். நமக்கு ஆபத்து வரும் காலங்களில் உபாயமாக வந்து காப்பதற்கு நம்பி உபாசிக்க உண்மையாக உள்ள மந்திரம் இதுவே. நம் பிராணனிலிருந்து கடந்க்ஹு போன பிராண வாயுவை மீண்டும் நம் பிரானநிலேயே சேர்த்து ஆயுளைக் கூட்ட பிரானவாமம் செய்தால் அதற்கு உற்ற துணையாக இருப்பது சிவாயநம எனும் அஞ்செழுத்து மந்திரமே. ஆதலின் அதை ஓதி தியானியுங்கள். அதுவே உங்களுக்கு உபாயமாக என்றும் வரும்.


சிவவாக்கியம் - 074

உருவும் அல்ல வெளியும் அல்ல ஒன்றை மேவி நின்றதல்ல 
மருவும் அல்ல காதம் அல்ல மற்றதல்ல அற்றதல்ல 
பெரியதல்ல சிறியதல்ல பேசும் ஆவி தானும் அல்ல 
அரியதாகி நின்ற நேர்மை யாவர் காண வல்லரே

உருவாக உள்ளது ஆனால் உருவும் அல்ல. வெளியாகி இருப்பது ஆனால் வெளியும் அல்ல. ஐம்புலன்களில் உருவாக உள்ளது, ஆனால் உருவும் அல்ல. ஐம்புலன்களில் ஒன்றை சேர்ந்து இருப்பது ஆனால் அதைச் சார்ந்து நிற்கவில்லை. மறுவாக உள்ளது ஆனால் தூரம் அல்ல. பஞ்சபூதங்களில் எல்லாம் உள்ளது அனால் மற்றதல்ல. பாசம் அற்றிருப்பது ஆனால் பாசம் அற்றதல்ல. மிகவும் பெரியது ஆனால் பெரியதும் அல்ல. மிகவும் சிறியது ஆனால் சிறியதும் அல்ல. பேசும் தன்மை கொண்டது ஆனால் பேசாதது. ஆன்மா தானாகி தற்பரமாய் நின்ற அதை அறிவதற்கு அறிய மெய்ப்போருல்களின் உண்மைகளை யார் அறிந்துகொண்டு தியானம் செய்து காண வல்லவரோ!!


சிவவாக்கியம் - 075

ஆத்துமா அனாதியோ அனாத்துமா அனாதியோ? 
மீத்திருந்த ஐம்பொறி புலன்களும் அனாதியோ? 
தர்க்கமிக்க நீல்களும் சதாசிவமும் அனாதியோ? 
வீக்கவந்த யோகிகாள் விரைந்து உரைக்க வேணுமே?

உனக்குள் இருக்கும் ஆன்மா அனாதியா? அனைத்திலும் இருக்கும் ஆண்டவன் அனாதியா? உனக்குள் ஐம்போரிகலாகவும், ஐந்து புலன்கலாகவும், இருப்பவை அனாதியா? தத்துவ விளக்கங்கள், உண்டென்றும் இல்லையென்றும் தர்க்கம் செய்யும் வேதாகம நூல்கள் அனாதியா? அல்லது ஆஞ்ஞாவில் உள்ள சதாசிவம் அனாதியா? என்பதை யோக ஞானம் விளக்க வரும் யோகிகளே எது அநாதி என்பதயும் எது நித்தியம் என்பதை அனைவரும் உணரும் வண்ணம் விரைந்து வந்து கூறவேண்டும்.


சிவவாக்கியம் - 076

அறிவிலே பிறந்திருந்த ஆகமங்கள் ஓதுறீர் 
நெறியிலே மயங்குகின்ற நேர்மை ஒன்று அறிகிலீர் 
உறியிலே தயிர் இருக்க ஊர் புகுந்து வெண்ணை தேடும் 
அறிவிலாத மாந்தரோடு அனுகுமாறது எங்ஙனே

அறிவிலே பிறந்த ஏடுகளைப் படித்து மனனம் செய்து வேத ஆகமங்கள் ஓதுவார்கள். யோக ஞானா நெறியிலே நின்று தியானம் செய்து மயக்கத்தை ஒழித்து மெய்ப்பொருளை அரிய மாட்டார்கள். தனது வீட்டின் உறியிலே தயிராக வைத்துக் கொண்டு ஊரெல்லாம் அலைந்து வெண்ணை தேடுகின்ற மூடரைப் போல உனக்குள்ளேயே இருக்கும் இறைவனை அங்கும் இங்குமாய் தேடி அலையும் அறிவை அறியாதவுருக்கு எப்படி எடுத்துரைத்துஅணுகுவது.


சிவவாக்கியம் - 077

இருவர் அரங்கமும் பொருந்தி என்புருகி நோக்கிலீர் 
உருவரங்கம் ஆகி நின்ற உண்மை ஒன்றை ஒர்கிலீர் 
கருவரங்கம் ஆகி நின்ற கற்பனை கடந்து பின் 
திருவரங்கம் என்று நீர் தெளிந்திருக்க வல்லீரே

சக்தியாகிய உடலும் சிவனாகிய உயிரும் ஒரே நினைவோடு அன்பால் என்புருகி தியானம் செய்யுங்கள். நமக்குள் உருவாக அரங்கத்தில் ஒளியாக நின்று ஒன்றாய் இருக்கும் உண்மையை உணர்ந்து அதுவே இறைவன் குடியுருக்கும் கோயிலாக இருப்பதைக் கண்டு அறிந்து அத்திருவரங்கத்தில் உடலையும் உயிரையும் இணைத்து சிவத்தில் கரைய தவம புரியுங்கள்.


சிவவாக்கியம் - 078

கருக்குழியில் ஆசையைக் காதலுற்று நிற்கிறீர் 
குறுக்கிடும் ஏழைகள் குலாவுகின்ற பாவிகாள் 
திருத்துருத்தி மெய்யினால் சிவந்த அஞ்செழுத்தையும் 
உருக்கழிக்கும் உம்மையும் உணர்ந்துணர்ந்து கொள்ளுமே

பெண்ணின்ப ஆசையால் காதல் வயப்பட்டு அதே நினைவில் நிற்கின்றீர்கள். அந்த குறிப்பைத் தவிர அதனால் வரும் துன்பங்களை அறியாத ஏழைகளே! பெண்ணின்பத்தினை பெரிதாக போற்றி குலாவுகின்ற பாவிகளே! அதனால் உங்கள் உடம்பு உருக்குலைந்து உயிர் போய்விடுமே! ஆதலால் நல்ல குருநாதர் உன்னைத் திருத்திக் கற்றுக்கொடுக்கும் உண்மையான யோகத்தை செய்து நமது மெய்யில் பஞ்சாட்சரமாக இருக்கும் மெய்ப்பொருளை அறிந்து 'சிவயநம' என்ற அஞ்செழுத்தை ஓதி உனக்குள்ளேயே உணர்ந்து தியானித்து அறிந்து கொள்ளுங்கள்.


சிவவாக்கியம் - 079

மண்ணிலே பிறக்கவும் வழக்கலாது உரைக்கவும் 
எண்ணிலாத கோடி தேவர் என்னது உன்னது என்னவும் 
கண்ணிலே மணி இருக்கக் கண் மறைந்தவாறு போல் 
என்னில் கோடி தேவரும் இதின் கனார் விழிப்பதே.

இருவினை பாவ புண்ணியத்தால்தான் மண்ணில் பிறக்கின்றோம். கடவுள் உண்டென்றும் இல்லையென்றும் வழக்குகள் பேசுகின்றோம். எண்ணில்லாத கோடி தேவர்களையும் என்னுடையது, உன்னுடையது என்றும் உரிமை கொண்டாடுகின்றோம். அதனால் இறைவனை அறிந்து கொண்டீர்களா? அவ்வண் உனக்குள்ளேயே அதுவாக இருப்பதை உணருங்கள். கண்களில் இருக்கும் கண்மணியால் எல்லாம் காணப்பட்டாலும் அதனை அக்கண்ணே மறைப்பதுபோல் தனக்குள் இருக்கும் ஆன்மாவை காணமுடியாது மையை மறைக்கின்றது. இதனை தியானத்தால் அகக்கண் திறந்து பார்த்தால் எல்லா தெய்வங்களும் இதன் கண் இருப்பதை அறிந்து கொள்ளுங்கள்.


சிவவாக்கியம் - 080

மண்கலம் கவிழ்ந்த போது வைத்து வைத்து அடுக்குவார் 
வெண்கலம் கவிழ்ந்த போது வேணும் என்று பேணுவார் 
நன்கலம் கவிழ்ந்த போது நாறும் என்று போடுவார் 
எண்கலந்து நின்ற மாயம்என்ன மாயம் ஈசனே.

மண்பானை கவிழ்ந்து உடைந்து போனால் அது தேவைப்படும் என எடுத்து அடுக்கி வைப்பார்கள். வெண்கலப் பானை வீழ்ந்து நசுங்கிப் போனால் அது வேணும் என்று பாதுகாப்பார்கள். ஆனால் நமது உடம்பை விட்டு உயிர் போய் கிடக்கும் போது அதனைப் பிணம் என்று இகழ்ந்து அது கிடந்தால் நாறும் எனக் கூறி குழிவெட்டிஅதனில் போட்டு மூடிவிடுவார்கள். இப்படி ஒரு காசுக்கும் கூட உதவாத என் எண்சாண் உடம்பில் நீ நின்று ஆடிய மாயம்தான் என்ன மாயமையா ஈசனே!!!


சிவவாக்கியம் - 081

மிக்க செல்வம் நீர் படைத்த விறகுமேவிப் பாவிகாள் 
விறகுடன் கொளுத்தி மேனி வெந்து போவது அறிகிலீர் 
மக்கள் பெண்டிர் சுற்றம் மாயை காணும் இவையெலாம் 
மறலி வந்து அழைத்த பொது வந்து கூடலாகுமோ?

பாவச் செயல்கள் செய்து நிறைந்த செல்வங்களைப் பெற்றும் நிம்மதி இன்றி வாழும் பாவிகளே நீர் இறந்து போனால் சுடுகாட்டிற்கு கொண்டு போய் விறகு, விராடியினால் அடுக்கி தீ வைத்து எரித்து இவ்வுடம்பு ஒருபிடி நீரும் இல்லாது சாம்பலாவதை அறிய மறந்தீர்களே! மக்கள், மனைவி, உறவு என்பவர்கள் யாவும் வெறும் மாயை என்பதை உணருங்கள்.எமன் வந்து இவ்வுயிரை எடுத்து போகும் பொது நீ செய்த புண்ணிய பாவமின்றி வேறு யாரும் கூட வரமாட்டார்கள்.


சிவவாக்கியம் - 082

ஒக்க வந்து மாதுடன் செறிந்திடத்தில் அழகியே 
ஒருவராகி இருவராகி இளமை பெற்ற ஊரிலே 
அக்கணித்து கொன்றை சூடி அம்பலத்தில் ஆடுவார் 
அஞ்செழுத்தை ஓதிடில் அநேக பாவம் அகலுமே

ஒத்து வாழும் பெண்ணுடன் சிற்றின்பத்தில் ஈடுபடும்போது அதையே யோகமாக்கி பேரின்பம் அடையும் பட்டணம் ஒன்று என்றும் இளமையோடு இருக்கின்றது .அந்த இடத்தில் ருத்திராட்ச மாலையும் கொன்றை மலரையும் சூடி ஈசன் உள்ளமாகிய அம்பலத்தில் நடனமாடிக் கொண்டிருக்கின்றார்.அவனை அறிந்து அஞ்செழுத்து மந்திரத்தை ஓதி தியானம் செய்தால் செய்த அநேக பாவங்கள் யாவும் அகன்று விடும்.


சிவவாக்கியம் - 083

மாடு கன்று செல்வமும் மனைவி மைந்தர் மகிழவே 
மாட மாளிகைப்புறத்தில் வாழுகின்ற நாளிலே 
ஓடிவந்து காலதூதர் சடுதியாக மோதவே 
உடல் கிடந்தது உயிர் கழன்ற உண்மை கண்டும் உணர்கிலீர்

மாடமாளிகைகள் கட்டி மாளிகைகள் கட்டி மாடு, கன்று போன்ற சகல செல்வங்களையும் சம்பாதித்து தம் மனைவி மக்களோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நாட்களில், திடீரென்று விபத்தில் நடப்பது போல் எமதூதர்கள் ஒரு நொடியில் உயிரைக் கொண்டு போன பின் அவ்வுடல் பிணமாக கிடப்பதைக் கண்டும் உயிர் போனதை உணர்ந்தும் உயிரை அறியாமல் இருக்கின்றீர்கள் அவ்வுடலில் உயிராய் நின்ற ஈசன் ஆட்டுவித்த உண்மையை உணர்ந்து இரவா நிலைபெற்று இறைவனை சேர தியானம் செய்யுங்கள்.


சிவவாக்கியம் - 084

பாடுகின்ற உம்பருக்கு ஆடு பாதம் உன்னியே 
பழுதிலா கர்ம கூட்டம் இட்ட எண்கள் பரமனே 
நீடு செம்பொன் அம்பலத்துள் ஆடு கொண்ட அப்பனே 
நீலகண்ட காலகண்ட நித்தியா கல்லியாணனே

பரமனையே பாடுகின்ற உத்தமபக்தர்கள் இறைவனின் ஆடுகின்ற திருவடியையே தியானிப்பார்கள்.குற்றமில்லாத கர்ம யோகிகள் கூட்டம் அரஹர என கோஷம் இட்டுக் கூவி நாதோபாசானையால் அழைப்பதும் எங்கள் பரமனையே . என்றென்றுமுள்ள செம்மையான பொன்னம்பலத்துள் சோதியாக நின்று நடராஜனாக ஆடல் புரியும் எங்கள் அப்பனே.நீயே ஆழம் உண்ட நீலகண்டன், நீயே காலனை உதைத்த காலகண்டன், நீயே நித்தியமுமாய் ஆனந்தம் தரும் கல்யாண குணத்தவன்.


சிவவாக்கியம் - 085

கானமற்ற காட்டகத்தில் வெந்தெழுந்த நீறுபோல் 
ஞானமற்ற நெஞ்சகத்தில் நல்லதேதும் இல்லையேல் 
ஊனமற்ற சோதியோடு உணர்வு சேர்ந்து அடங்கினால் 
தேனகத்தில் ஊறல்போல் தெளிந்ததே சிவாயமே

இவ்வுடம்பை சுடுகாட்டில் வைத்து எரிக்கும் போது அது ஒன்றுக்கும் உதவாத ஒரு பிடி சாம்பலாகும்.அது போல ஞானம் சிறிதும் இல்லா நெஞ்சம் உடையவர்களிடம் நல்லது ஒன்றும் இருக்காது .அறிவாக சுடர் விடும் சோதியை அறிந்து அங்கேயே உன் உணர்வையும், மனதையும் நிலை நிறுத்தி தியானம் செய்து வந்தால் தேனில் ஒடுங்கியிருந்த ருசியானது நாவில் ஊறுவதுபோல் ஈசனின் அருளால் ஆனந்தம் கிடைக்கும்.


சிவவாக்கியம் - 086

பரவி ஓடி உம்முளே பறந்து வந்த வெளிதனை 
நிரவியே நினைந்து பார்க்கில் நின்மலம் அதாகுமே 
உருகி ஓடி எங்குமாய் ஓடும் சோதி தன்னுளே 
கருதுவீர் உமக்கு நல்ல காரணம் அதாகுமே

ஆகாயமாய் நமக்குள் இருக்கும் மனம் எங்கும் பரவி ஓடிக் கொண்டிருக்கின்றது. அந்த மனத்தை குவித்து நம்மில் வெட்ட வெளியான இடத்தில் நிறுத்தி நினைவால் நினைந்து தியானம் செய்ய மனத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி அது சுத்த நிர்மலமாய் ஆகும் .பார்க்கும் இடமெலாம் நீக்கமற நிற்கும் சோதியை தனக்குள்ளே கண்டு பரம்பொருளையே எப்போதும் கருத்தில் வைத்து தியானியுங்கள் . அதுவாகிய மெய்ப்பொருளே இறவாநிலை பெற காரணமாகும்.


சிவவாக்கியம் - 087

சோதி பாதி ஆகி நின்று சுத்தமும் பலித்து வந்து 
போதியாத போதகத்தை ஓதுகின்ற பூர்ணா 
வீதியாக ஓடி வந்து வின்னடியின் ஊடுபோய் 
ஆதிநாதன் என்று அனந்த காலம் உள்ளதே.

பூரணமாகிய சோதியில் ஆண் பாதி, பெண் பாதியாக அர்த்தனாரீயாக நின்றது எது எனவும், எனக்குள் பரிசுத்தமான இடம் எது எனவும் காட்டி, எனக்கு யோகம் தியானம் செய்யும் முறைகளையும் போதித்து உபதேசித்த மெயகுருனாதனே வாசி யோகத்தில் குண்டலினி சக்தியானது மூலாதாரத்திலிருந்து முதுகுத் தண்டின் வீதி வழியாக மேலேறி சகஸ்ரதளத்தை அடைந்து வெளியாக விளங்கும் இடத்தின் அடியில் சென்று சேருகின்றது. அங்கெ சோதியாகவும், நாதனாகவும், ஆதியாகவும் ஈசன் அனாதியாக எப்போதும் இருக்கின்றான்.


சிவவாக்கியம் - 088

இறைவனால் எடுத்த மாடத் தில்லையம் பலத்திலே 
அறிவினால் அடுத்த காயம் அஞ்சினால் அமைந்ததே 
கருவு நாதம் உண்டுபோய் கழன்ற வாசல் ஒன்பதும் 
ஒருவராய் ஒருவர் கோடி உள்ளுளே அமைந்ததே

நமது உடம்பிலேயே சிவன் இருக்கும் சிதம்பரமாகிய ஆகாயத் தலத்தில் அறிவாக விளங்கும் சித்தத்தை அறியுங்கள். அவ்வறிவால் அமைந்த இவ்வுடலானது மண், நீர், தீ, காற்று, ஆகாயம் என பஞ்சபூதங்களால் அடுக்கடுக்காக ஆராதாரங்களாய் அமைந்து உள்ளது. தாயின் கருவினிலே புகும் விந்து நாதத்தை உண்டு உருவாக்கி ஒன்பது வாசல் கொண்ட உடலுயிர் வளர்ந்து இப்பூமியில் வெளிவுறம். அப்படிவரும் கோடிக்கணக்கான உயிர் ஒவ்வொன்றிலும் சிவனே அதனுள் அமர்ந்துள்ளார் என அறியுங்கள்.


சிவவாக்கியம் - 089

நெஞ்சிலே இருந்திருந்து நெருங்கி ஓடும் வாயுவை 
அன்பினால் இருந்து நீர் அருகிருத்த வல்லிரேல் 
அன்பர் கோயில் காணலாம் அகலும் எண் திசைக்குளே 
தும்பி ஓடி ஓடியே சொல்லடா சுவாமியே!

நெஞ்சிலே இருந்து ஓடிக் கொண்டிருக்கும் பிராணவாயுவை யோகப் பயிற்சியினால் நிறுத்தி அன்பெனும் பக்தியுடன், தியானம் செய்து, வாசியை உங்களுக்குள்ளேயே இருத்த வல்லவர்கலானால் அவ்வாசி யானது நம் பிராணனில் கலந்து இறைவன் இருப்பிடத்தை காட்டும்.செய்த பாவவினைகள் யாவும் அகலும் எண்திசைகள் யாவிலும் இயங்கும் ஈசனை அறிந்துணர்ந்து, தும்பியானது ரீங்காரம் இடுவதைப் போல உனக்குள்ளே வாசியை ஓட்டி தியானம் செய்து இறைவனை அடையுங்கள்.


சிவவாக்கியம் - 090

தில்லையை வணங்கி நின்ற தெண்டனிட்ட வாயுவே 
எல்லையைக் கடந்து நின்ற ஏக போக மாய்கையே 
எல்லையைக் கடந்து நின்ற சொர்க்கலோக வெளியிலே 
வெள்ளையும் சிகப்புமாகி மெய் கலந்து நின்றதே!

தில்லையில் ஆடும் ஈசன் நம் உடலில் இடங்கொண்டு ஆகாய எல்லையில் ஆடி நம்மை ஆட்டுவிக்கின்றான்.வாசிக் காற்றை மேலேற்றி செய்யும் பயிற்சியினால் அவ்வாசியானது ஈசனை வணங்கி அவனுடன்சேர்க்கின்றது. மனமெனும் எல்லையைக் கடந்து ஏகமாக நின்று எல்லா இன்ப போகங்களையும் அடையச் செய்வது மாயையே. மனமே வாசியாகி எல்லையாகவிருக்கும் ஆகாயத்தையும் கடந்து இறையைச் சேர்வதுவே ஆனந்தம். அவ்விறையையே உயிராக வெள்ளையும் சிகப்புமாக நம் உடலில் மெய்ப்பொருளாக நின்றது.


சிவவாக்கியம் - 091

உடம்பு உயிர் எடுத்ததோ உயிர் உடம்பு எடுத்ததோ 
உடம்பு உயிர் எடுத்தபோது உருவம் ஏது செப்புவீர் 
உடம்பு உயிர் எடுத்தபோது உயிர் இறப்பது இல்லையே 
உடம்பு மெய் மறந்து கண்டு உணர்ந்து ஞானம் ஓதுமே!!!

உடம்பானது உயிர் எடுத்து வந்ததா? அல்லது உயிரானது உடம்பு எடுத்துக் கொண்டு வந்ததா? உடம்புதான் உயிர் எடுத்ததென்றால் உயிர் உயிர் வந்த பிறகுதானே உடம்பே தோன்றுகிறது உடம்பில் உள்ள உயிருக்கு உருவம் ஏது சொல்லுங்கள். உடம்பும் உயிரும் கூடிய மனிதன் இறந்த பின்னும் அவன் ஆன்மா அழிவது இல்லையே. ஆகவே இவ்வுடம்பு உண்மையல்ல, என்பதை உணர்ந்து, ஆன்மாவே மெய் என்பதை அறிந்து உடம்பில் மெய்ப் பொருளாக இறைவன் இருப்பதைக் கண்டு தன்னை மறந்த தியான நிலையிலோ இருந்து உணர்ந்து கொண்டு ஞானம் போதியுங்கள்.


சிவவாக்கியம் - 092

அவ்வெனும் எழுத்தினால் அகண்டம் ஏழும் ஆகினாய் 
உவ்வெனும் எழுத்தினால் உருத்தரித்து நின்றனை 
மவ்வெனும் எழுத்தினால் மயங்கினார்கள் வையகம் 
அவவும் உவ்வும் மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே!!!

"ஓம்" என்ற ஓங்காரத்தில்தான் அனைத்தும் தோன்றுகின்றது. "ஓம்" என்பதில் அகாரம், உகாரம், மகாரம் என்ற மூன்று தத்துவங்கள் எழுத்துக்களாக அமைந்துள்ளது. அதில் "அ" என்னும் ஆகாயத் தத்துவத்தில் ஏழு உலகமும் ஆகி நிற்கின்றது. "உ" என்னும் விந்து தத்துவத்தில்தான் உருவம் தரித்து உருவாகின்றது. "ம்" என்னும் தத்துவத்தினால்தால் இவ்வுலகம் முழுவது மயங்குகின்றது. இதில் அவ்விலும், உவ்விலும் மவ்விலும் அமர்ந்திருப்பது "சி" என்னும் சிகாரமே.


சிவவாக்கியம் - 093

மந்திரங்கள் உண்டுநீர் மயங்குகின்ற மானிடர் 
மந்திரங்கள் ஆவது மறத்தில் ஊறல் அன்றுகான் 
மந்திரங்கள் ஆவது மதித்தெழுந்த வாயுவை 
மந்திரத்தை உண்டவர்க்கு மரணம் ஏதும் இல்லையே!!!

மந்திரங்கள் யாவையும் படித்து ஓதி மயங்குகின்ற மனிதர்களே !மந்திரம் என்பது மனதின் திறமே !மந்திரங்கள் தர்ம வழியையே பின்பற்றும் . மந்திரங்களை உணர்ந்து உச்சரிக்கும் பொது அதில் ஏழும் சப்தங்களின் அதிர்வலைகள் மூலாதாரத்தில் மோதி அங்கிருக்கும் கனலான வாயுவை எழுப்புதற்கே அன்றோ அமைக்கப்பட்டது. அதனால் வாசி மேலே ஏறி பிராணசக்தி கூடி மரணமில்லா பெருவாழ்வு அடைவார்கள். மந்திரங்களை முறையாக அறிந்து ஓதி ஆறு ஆதாரங்களிலும் நிறுத்தி தியாநிப்பவர்களுக்கு மரணம் ஏதும் இல்லையே!!!


சிவவாக்கியம் - 094

என்ன என்று சொல்லுவேன் இலக்கணம் இலாததை 
பண்ணுகின்ற செந்தமிழ் பதம் கடந்த பண்பென 
மின்னக்த்தில் மின் ஒடுங்கி மின்னதான வாறு போல் 
என்னகத்தில் ஈசனும் யானும் அல்லது இல்லையே.

இலக்கணம் இல்லாத தமிழைப் போல் இலட்சியம் ஏதுமில்லாத மனிதர்களை என்னவென்று சொல்லுவது. பண்ணிசைத்துப் படும் செந்தமிழ் பாடல்கள் யாவும், பரம்பொருளின் பாதம் பற்றி இறைவனை அடைவதே குறிக்கோள் என்பதே மனிதனின் பண்பு என்றுகூறுகின்றது. மின்னலாது தோன்றி, மின்னளிலேயே ஒடுங்கி, மின்னலாக மறந்தது, அது எங்கிருந்தும் ஒளியைப் பெற்றுக் கொள்ளாமல், மேக மூட்டங்களின் மோதலால் தானே தோன்றி ஒடுங்குவதைப் போல் எனக்குள் மன ஓட்டத்தை நிறுத்தி வாசியால் கனலும் அனாலும் கலந்து என்னுள் சோதியான ஈசனைக் கண்டு தியானம் செய்தேன் .அங்கு என்னையும் ஈசனையும் தவிர வேறு யாரும் இல்லையே!


சிவவாக்கியம் - 095

ஆலவித்தில் ஆல்ஒடுங்கி ஆழமான வாறு போல் 
வேறு வித்தும் இன்றியே விளைந்து போகம் எய்திடீர் 
ஆறு வித்தை ஒர்கிளீர் அறிவிலாத மாந்தரே 
பாரும் இத்தை உம்முளே பரப்பிரமம் ஆவீரே!

மிகச்சிறிய ஆலவிதைக்குள் பெரிய ஆலமரம் ஒடுங்கியிருந்து வளர்ந்து மிகப் பெரிய ஆலமரமாக ஆகின்றது. அதுபோல பரம் பொருளே ஓரெழுத்து வித்தாக இருந்து, விளைந்து இன்ப துன்பமுறும் உடலாக உலாவுகின்றது. ஒரேழுத்தே பிரமமாகி நமக்குள் இருப்பதை அறிந்து அதனை நம் உடலில் உள்ள ஆறு ஆதாரங்களிலும் வாசியை ஏற்றி இறக்கி யோகவித்தை செய்வதை அறியாமல் இருக்கும் அறிவிலாத மனிதர்களே!! உமக்குள்ளேயே இந்த வாசி யோகத்தைச்செய்து பாருங்கள். மெய்ப்பொருளை அறிந்துப் பார்ப்பானைப் பார்த்து, வித்தாக உள்ள ஈசனை தியானம் செய்யுங்கள். நீங்களே அந்த பரப்பிரம்ம்மம் ஆவீர்கள்.


சிவவாக்கியம் - 096

அவ்வுதித்த மந்திரம் அகாரமாய் உகாரமாய் 
எவ்வெழுத்து அறிந்தவர்க்கு ஏழுபிறப்பு அது இங்கிலை 
சவ்வுதித்த மந்திரத்தை தற்பரத்து இருத்தினால் 
அவவும் உவ்வும் மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே

ஒரேழுத்து மந்திரமே முதல் எழுத்தாகிய அகாரம் தோன்றுவதற்கும் உயிர் எழுத்தாகி உகாரம் தோன்றுவதற்கும் காரணமாய் உள்ளது.அது எவ்வாறு என்பதை அறிந்து தியாநிப்பவர்களுக்கு இங்கு ஏழு பிறப்பு என்பது இல்லை என்றாகிவிடும் தொண்டைச் சவ்வில் உதிக்கும் அந்த மந்திரத்தை 'ம்' என்று ஓதி தன்னிடமே உள்ள பரம்பொருளில் இருத்தி தியானியுங்கள்.அகாரத்திலும், உகாரத்திலும், மகாரத்திலும் சிகாரமாய் அமர்ந்திருப்பது ஊமைஎழுத்தே என்பதை உணருங்கள்.


சிவவாக்கியம் - 097

நவ்விரண்டு காலத்தை நவின்ற மவ் வயிறதாய் 
சிவ்வேரண்டு தோளதாய் சிறந்த வவ்வு வாயதாய் 
யவ்விரண்டு கண்ணதாய் அமர்ந்து நின்ற நேர்மையில் 
செவ்வாய் ஒத்து நின்றதே சிவாயம் அஞ்செழுத்துமே!

பஞ்சாட்சரம் நமது உடம்பில் நகாரம் இடுப்பிலிருந்து கால்கள் வரையிலும், மகாரம் வயிறாகவும், சிகாரம் நெஞ்சிலிருந்து இரண்டுதோள்கள் ஆகவும், வகாரம் தொண்டையாவும், யகாரம் இரண்டு கண்களாகவும் அனைவருக்கும் நேர்மையாக அமைந்துள்ளது. தூலத்தில் இவ்வாறு அமைந்துள்ள அஞ்செழுத்து சூட்சமத்தில் செம்மையான மெய்ப்பொருளாக அதே பஞ்சாட்சரமாக ஒத்து இருப்பதைஅறிந்து தியானித்து சிவமே அஞ்செழுத்தாக இருப்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.


சிவவாக்கியம் - 098

இரண்டுமொன்று மூலமாய் இயங்கு சக்கரத்துளே 
சுருண்டு மூன்று வளையமாய் சுணங்கு போல் கிடந்ததீ 
முரண்டெழுந்த சங்கின் ஓசை மூலநாடி ஊடுபோய் 
அரங்கன் பட்டணத்திலே அமர்ந்ததே சிவாயமே!

மூலாதார சக்கரத்தின் உள்ளே பாம்பைப் போல் சுருண்டு மூன்று வளையமாக குண்டலினி சக்தி கனலான தீயாக இருந்து தூங்கிக் கொண்டுள்ளது. அதனை வாசியோகத்தில் விழிப்புறச் செய்தால் அச்சக்தியானது சங்கின் ஓசையுடன் கிளம்பும். அவ்வாசியை சுழுமுனை எனும் மூலனாடியால் முதுகுத் தண்டின் வழியாக மேலேற்றி சகஸ்ரதளத்தில் கொண்டு சேர்க்க வேண்டும். அது சக்தியும்சிவனும் ஒன்றாகி இயங்கும் அரங்கன் பள்ளி கொண்ட இடத்தில் சிவமாக அமர்ந்திருப்பதை அறிந்து யோகஞான சாதகத்தால் தியானம் செய்து உணர்ந்து கொள்ளுங்கள்.


சிவவாக்கியம் - 099

கடலிலே திரியும் ஆமை கரையிலே ஏறி முட்டையிட்டுக் 
கடலிலே திரிந்தபோது ரூபமான வாறு போல் 
மடலுலே இருக்கும் எண்கள் மணியரங்க சோதியை 
உடலுலே நினைத்து நல்ல உண்மையானது உண்மையே!

கடலில் வாழும் ஆமையானது கரையில் ஏறி முட்டையிட்டு மணலைப் போட்டு மூடிவிட்டு கடலுக்கே சென்று விடும். பின் கடலில் திரிந்து கொண்டே நினைவாலே அடைகாக்கும். அதனால் முட்டைகள் பொறித்து அவை ரூபமாக வெளிவரும். அதன் பின்னரே தாயுடன் சேர்ந்து ஆமை குஞ்சுகளும் கடலில் திரயும். அவை ரூபம் அடைவதற்கு தாய் ஆமையின் நினைவே காரணமாய் இருந்தது போல், நம் உள்ளமாகிய தாமரையில் இருக்கும் மணியாக விளங்கும் அருட்பெருஞ் சோதியான ஆண்டவனை உடலுக்குள்ளேயே மெய்ப் பொருளாக இருப்பதை எண்ணி நினைத்து தியானியுங்கள்.


சிவவாக்கியம் - 100

மூன்று மண்டலத்திலும் முட்டி நின்ற தூணிலும் 
நான்ற பாம்பின் வாயிலும் நவின்றெழுந்த அட்சரம் 
ஈண்ட தாயும் அப்பனும் எடுத்துரைத்த மந்திரம் 
தோன்றும் ஓர் எழுத்துளே சொல்ல எங்கும் இல்லையே!

அக்னி மண்டலம், சூரிய மண்டலம், சந்திர மண்டலம் ஆகிய மூன்று மண்டலங்கள் நம் உடற் தத்துவத்தில் உள்ளது. சந்திரகலை, சூரிய கலை சுழுமுனை நாடிகளில் ஓடும் காற்றை வாசியாக்கி மூலாதாரத்தில் செலுத்தி தூணாகிய முதுகுத் தண்டினில் முட்டி மேலேற்ற எண்டும் பாம்பைப் போல் சுருண்டு உறங்கும் குண்டலினி சக்தியை ஓங்காரத்தில் எழும் அகார உகார அட்சரத்தால் எழுப்பி உண்ணாக்கில் வைத்து ஊதவேண்டும். இந்த மந்திரமே பெற்ற தாயும் தந்தையும் எடுத்துரைத்த ஓங்காரமாகும். அதுவே 'ம்' என்ற நாத ஒலியுடன் சோதியான பிரம்மத்தில் சேரும், ஒரெழுத்தில் தோன்றுவதே ஓங்காரம். இதனைச் சொல்லித்தர யாரும் எங்கும் இல்லையே.
 

சிவவாக்கியம் - 101

மூன்று மூன்று மூன்றுமே மூவர் தேவர் தேடிடும் 
மூன்றும் அன்ஜெழுத்துமாய் முழங்கும் அவ்வெழுத்துளே 
ஈன்ற தாயும் அப்பனும் இயங்குகின்ற நாதமும் 
தோன்றும் மண்டலத்திலே சொல்ல எங்கும் இல்லையே.

ஓம் என்ற ஓங்காரத்தில் ஒன்பது வகையான சூரியன், சந்திரன், அக்னி, நட்சத்திரம், ஆகாயம், காற்று, நெருப்பு,நீர், பூ மி என அனைத்தும் தோன்றியது. இதனை மூவர்களும், தேவர்களும் தேடினார்கள். அது அ, உ, ம்என்ற மூன்றேழுத்தாகவும், 'நமசிவய' அன்ஜெழுத்தாகவும் அனைத்தும் அடங்கிய ஒரேழுத்தாகவும் இருப்பதை உணர்ந்து கொள்ளுங்கள். இந்த ஓங்காரமே நமையீன்ற தாய், தந்தையாகவும், நாத விந்தாகவும் இயங்கி வருகின்றது. அதுவே மூன்று மண்டலத்திலும் அ, உ, ம் என்ற எழுத்தாக இருந்து வருகின்றது. இந்த ஓங்கார உட்பொருளையும் ஒரேழுத்து உண்மையையும் சொல்ல எங்கும் யாரும் இல்லையே. ஆதலால் ஓங்காரத்தின் அனுபவ உண்மைகளை அனைவரும் அறிந்து தியானியுங்கள்.


சிவவாக்கியம் - 102

சொருகின்ற பூதம் போல் சுனங்குபோல் கிடந்த நீர் 
நாறுகின்ற கும்பியில் நயந்தெழுந்த மூடரே 
சீருன்கின்ற ஐவரைச் சிணுக்கறுக்க வல்லீரேல் 
ஆறு கோடி வேணியார் ஆறில் ஒன்றில் ஆவீரே!

உண்ணும் உணவின் சக்தியினால் பஞ்சபூதங்களால் உருவான சுக்கிலமானது விந்து பையில் சேருகின்றது. அதனை காம வேட்கையால் நாறுகின்ற சாக்கடையில் வீழ்ந்து எழுவதைப் போல சிற்றின்பத்தில் விரும்பி வீணாக்கும் மூடர்களே! காமத்தைத் தூண்டும் ஐம்புலன்களையும் ஐந்தெழுத்தால் அடக்கி, வாசி யோகத்தால் அந்நீரை அனலாக மாற்றி, மேலேற்றி காம கோபத்தை அறுக்க வல்லவர்களானால் மனிதர்களில் கோடியில் ஒருவராகி ஆறு ஆதாரங்களையும் கடந்து ஒன்றாக ஒளிரும் சோதியாக ஆவீர்கள்.


சிவவாக்கியம் - 103
 
வட்டமென்று உம்முளே மயக்கிவிட்ட திவ்வெளி 
அட்டறக் கரத்துளே அடக்கமும் ஒடுக்கமும் 
எட்டும் எட்டும் எட்டுமாய் இயங்கு சக்கரத்துளே 
எட்டலாம் உதித்து எம்பிரானை நாம் அறிந்தபின்

பிரம்மம் உனக்குள்ளே வட்டமாக நின்று ஆட்டுவித்து வெளியான ஆகாயத்தில் திகழ்கிறது. 'ஓம்நமசிவய'எனும் எட்டு அட்சரத்துக்குள்ளே தான் ஐம்புலன் அடக்கமும் தியான ஒடுக்கமும் நிறைந்துள்ளது. எண்சான் உடம்பில் எட்டாகிய அகாரத்தில் எட்டுத் திசைகளாகவும், பதினாறு கோணமுமாக இயங்கும் வெட்டாத சக்கரத்துளே சோதியாக உதிப்பவன் ஈசன். நாம் இதனை நன்கு அறிந்து அந்த இடத்திலேயே 'ஓம்நமசிவய'என்று ஓதி தியானிப்போம்.


சிவவாக்கியம் - 104

பெசுவானும் ஈசனே பிரமஞானம் உம்முளே 
ஆசையான ஐவரும் அலைத்தலைகள் செய்கிறார் 
ஆசையான ஐவரை அடக்கி ஓர் எழுத்திலே 
பெசிடாது இருப்பிரேல் நாதன் வந்து பேசுமே

மனசாட்சியாக இருந்து பேசுபவன் ஈசன், உனக்குள் பிரமத்தை அறிந்து ஞானம் பெற்று தியானம் செய்யுங்கள். ஆசைகள் ஐம்புலன்களால் வெளிப்பட்டு ஞானமடைய தடை செய்து, நம்மை அலைக்கழித்து துன்புறுத்துகின்றன. அவ்விச்சையை விட்டு ஐம்புலன்களையும் அடக்கி ஒரேழுத்திலேயே மனதை நிறுத்தி மௌனமாக இருந்து தவம் செய்து வந்தால் உள்ளிருக்கும் ஈசனே குருநாதனாக வந்து பேசுவான்.


சிவவாக்கியம் - 105

நமசிவாய அஞ்செழுத்தும் நல்குமேல் நிலைகளும் 
நமசிவாய அஞ்சில் அஞ்சும் புராணமான மாயையும் 
நமசிவாய அஞ்செழுத்து நம்முளே இருக்கவே 
நமசிவாய உண்மையை நன்கு உரை செய் நாதனே

'நமசிவய' என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை அனுதினமும் உபாசித்து வந்தால் எல்லா வளமும் நலமும் மேலான நிலைகளும் கிடைக்கும். நமசிவாய எனும் அஞ்செழுத்தே பஞ்சபூதங்கலாகவும், புராணங்களாகவும், மாயையாக வும் அமைந்துள்ளது. இந்த அஞ்செழுத்து நமக்குள்ளேயே ஆறாதாரங்களிலும், பஞ்சாட்சரமான மெய்ப்பொருளாகவும் இருப்பதை அறிந்து அது எப்போதும் நித்தியமாய் உள்ளது என்பதை உணர்ந்து நமசிவாய! உண்மையை நன்றாக உபதேசியுங்கள் குருநாதரே!!


சிவவாக்கியம் - 106

பரம் உனக்கு எனக்கு வேறு பயம் இல்லை பராபரா 
கரம் எடுத்து நித்தலும் குவித்திடக் கடவதும் 
சிரம் உருகி ஆர்த்தலும் சிவபிரானே என்னலும் 
உரம் எனக்கு நீ அளித்த ஓம் நமசிவாயவே!!!

நீயே பரம்பொருள் என அறிந்து என் உடல், பொருள், ஆவியை உனக்கே என ஒப்படைத்துவிட்டேன். . அதனால் எனக்கு வேறு பயம் ஏதும் இல்லாதிருக்கிறேன் பராபரனே .உன்னை தினமும் கைக்கூப்பி வணங்கிடவும், மெய் பக்தியினால் சிரம் உருகி கண்ணீர்விட்டு ஆர்த்தார்த்து அழுதிடவும், எந்நேரமும் என் பிராணனை சிவசிவ என வாசியிலேற்றி தியானித்திடவும், என் உயிருக்கும், உடலுக்கும் உறுதுணையாக வந்து நான் வாழ உரமாக இருப்பது நீ எனக்கு உபதேசித்த 'ஓம்நமசிவய' என்னும் மந்திரமே.


சிவவாக்கியம் - 107

பச்சை மண் பதுப்பிலே புழுபத்திந்த வேட்டுவன் 
நிச்சலும் நினைத்திட நினைந்த வண்ணம் ஆயிடும் 
பச்சாமன் இடிந்து பொய் ப்றந்ததும்பி ஆயிடும் 
பித்தர்காள் அறிந்துகொள் பிரான் இயற்று கோலமே!

தும்பியான குளவியானது ஈரமான மண்ணைக் கொண்டு அழகிய கூடுகட்டி உணர்வுள்ள புழுவை வேட்டையாடி கொண்டு வந்து அடைக்கும். பின் எந்நேரமும் தன்னைப் போல் மாற்றுவதற்கு ரீங்கார ஓசையுடன் கொட்டிக்கொண்டே இருக்கும். இப்படி ஒரே நினைவோடு செய்யும் அதன் செயலால் அப்புழுவானது குளவி நினைத்தவாறே குளவியாக மாறிவிடும். அற்ப உயிராக இருந்த புழு குளவியாகி அக்கூட்டை உடைத்துக்கொண்டு தும்பியாக பறந்து செல்லும். இதனை அறிந்து கொண்டு ஒரே நினைவோடு பிராணனை இறைவனோடு இணைக்க தியானம் செய்யுங்கள். ஈசன் நடத்தும் நாடகமே எல்லாம் என்பதை உணருங்கள்.


சிவவாக்கியம் - 108

ஒழியத்தான காசிமீது வந்து தங்குவோர்க்கெலாம் 
வெளியதான சோதிமேனி விஸ்வநாதனானவன் 
தெளியு மங்கை உடன் இருந்து செப்புகின்ற தாரகம் 
எளியதோர் இராம ராம ராமவிந்த நாமமே!!!

வெளியில் காசிமாநகரில் ஜோதிர்லிங்கமாக இருப்பவன் விஸ்வநாதன். நம் உடம்பில் ஒளிவீசும் இடமான புருவமத்தியையே கங்கை ஆறு ஓடும் காசி எனப் புகலப்படும். அவ்விடத்தில் ஈசனை கன்டு தியானம் செய்பவர், வெட்ட வெளியாக சோதிமேனி கொண்டு விளங்கும் விஸ்வநாதனாக காட்சி தருவான். அங்கு இடகலையும், பிங்கலையும் இணைந்து சுழுமுனையில் வாசியை ஏற்றி இறக்கி நிறுத்து தியானிப்பதற்கு எளியதான மந்திரம் இராம நாமமே


சிவவாக்கியம் - 109

விழியினோடு புனல் விளைந்த வில்வவல்லி யோனியும் 
வெளியிலே பிதற்றலாம் விளைவு நின்றது இல்லையே 
வெளிபரந்த தேசமும் வெளிக்குள் மூல வித்தையும் 
தெளியும் வல்ல ஞானிகாள் தெளிந்திருத்தல் திண்ணமே

கண்களில் கண்ணீர் சிந்தி அன்பால் விளைந்த கரும்புவில்லைக் கொண்ட மனோன்மணி ஆத்தாளை ஐந்தாவது யோனியில் பிறந்து அறிந்து கொள்ள வேண்டும். வெளியிலே அவள் சக்தியை உணராமல் எப்படி வேண்டுமானாலும் பிதற்றலாம். ஆனால் அவளுடைய அருட்செயல்களால் ஏற்படும் விளைவுகள் யாவும் எப்போதும் நிற்பதில்லை. பரந்து காணப்படும் ஆகாயம் நம் மனமாக இருப்பதை அறிந்து தன் ஆன்மாவில் மூல வித்தாக ஈசன் மெய்ப்பொருளாக இருப்பதை உணர்ந்து தெளிந்த ஞானிகள் திண்ணமாக தியானத்தில் இருப்பார்கள்.


சிவவாக்கியம் - 110

ஓம் நமசிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்தபின் 
ஓம் நமசிவாயமே உணர்ந்து மெய் தெளிந்த பின் 
ஓம் நமசிவாயமே உணர்ந்து மெய் அறிந்தபின் 
ஓம் நமசிவாயமே உட்கலந்து நிற்குமே!

ஓம் நமசிவாய என்பதை நன்றாக உணர்ந்து அதை நம் உடலில் உணர்ந்து கொள்ள வேடும். ஓம் நமசிவாய என்பது என்ன என்பதை எல்லாம் உணர்ந்து அதன் மெய்யான தன்மைகளை சிந்தித்து தெளிந்து கொள்ள வேண்டும்.ஓம் நமசிவாய என்பது நம் உடம்பில் உயிராக உள்ள மெய்ப்பொருளே என்பதை அறிந்து கொள்ள வேண்டும் .இப்படி அனைத்துமாய் இருக்கும் பஞ்சாட்சரம் நம் உடம்பிலும், உயிரிலும் கலந்து நிற்பதை ஓம் நமசிவாய என ஓதி தியானியுங்கள்.


சிவவாக்கியம் - 111

அல்லல் வாசல் ஒன்பதும் அடைத்தடைந்த வாசலும் 
சொல்லும் வாசல் ஓர் ஐந்தும் சொம்மிவிம்மி நின்றது 
நல்ல வாசலைத் திறந்து ஞான வாசல் ஊடுபோய் 
எல்லை வாசல் கண்டவர் இனிப்பிரப்பது இல்லையே!

ஒன்பது வாசல் கொண்ட இவ்வுடம்பு இவ்வுலக வாழ்வில் அல்லல் படுத்துகின்றது. அருத்தடைத்த வாசலாகவும், சொர்க்கக் வாசலாகவும் உள்ள பத்தாம் வாசலை அறிந்து கொள்ளுங்கள். அங்குதான் ஒரேழுத்து பஞ்சாட்சரமாக மின்னிக்கொண்டு நிற்கிறது. அந்த நல்ல வாசலில் ஐந்தெழுத்தை ஓதி நந்தி விலகி ஈசன் உறையும் ஞான வாசலில் சேந்து இன்புறலாம். இதுவே இறைவன் இருக்கும் எல்லைவாசல் என கண்டறிந்து தியானமும் தவமும் புரிபவர்கள் இனி இப்பூமியில் பிறப்பது இல்லையே!!!


சிவவாக்கியம் - 112

ஆதியானது ஒன்றுமே அநேக அநேக ரூபமாய் 
சாதி பேதமாய் எழுந்து சர்வ ஜீவன் ஆனது 
ஆதியோடு இருந்து மீண்டு எழுந்து ஜென்மம் ஆனபின் 
சோதியான ஞாநியாகிச் சுத்தம்மை இருப்பவனே!!!!

ஆதியிலிருந்தே பிரமமான ஒன்றிலிருந்தே அநேக அநேக ரூபங்களாகி மனித சாதி, மிருக சாதி, பறவை சாதி என பல பேதங்கலாகத் தோன்றி சகல உயிர்களாக ஆனது. முன்பிறவியில் ஆதியை அறிந்து தியானித்தவர்கள் நிலையடையாது மீண்டும் ஜென்மம் எடுத்தவர்கள் விட்ட குறை பற்றி வந்து மைப் பொருளை அறிந்து கொள்வார்கள். யோக ஞான சாதகத்தை தொடர்ந்து செய்து சுத்த ஜோதியான ஈசனை உணர்ந்து சுத்த ஞானியாகி இறைவனை அடைய பாடுபட்டு வாழ்ந்திருப்பர்.


சிவவாக்கியம் - 113

மலர்ந்த தாது மூலமாய் வையகம் மலர்ந்ததும் 
மலர்ந்த பூ மயக்கம் வந்து அடுத்ததும் விடுத்ததும் 
புலன்கள் ஐந்தும் பொறிகலங்கி பூமிமேல் விழுந்ததும் 
இலங்கலங்கி நின்ற மாயம் என்ன மாயம் ஈசனே!!!!

மூலமான வித்திலிருந்து இயங்கும் நாத வித்து எனும் தாதுக்களால் இந்த பூமியும் உயிர்களும் தோற்றியது. இவ்வுலக வாழ்வில் வரும் இன்ப துன்பங்களின் அனுபவங்களால் இறைவனை அடுத்தும், விடுத்தும் வாழ்ந்து, மலர்ந்த பூக்கள் உதிருவது போல் வாழ்வு முடிந்ததும் ஐம்புலன்களும் பொறிகளும் கலங்கி பூமியில் மரணமடைகின்றனர். பிறப்பு, இறப்பு எனும் இவ்வுலக மாயையில் சிக்கி உழலும் மனிதர்கள் உடம்பில் நீ நின்று ஆட்சி செய்யும் மாயம் என்ன மாயம் ஈசனே!!!!


சிவவாக்கியம் - 114

பாரடங்க உள்ளதும் பரந்த வானம் உள்ளதும் 
ஓரிடமும் இன்றியே ஒன்றி நின்ற ஒண் சுடர் 
ஆரிடமும் இன்றியே அகத்திலும் புறத்துளும் 
சீரிடங்கள் கண்டவன் சிவன் தெளிந்த ஞானியே

பூமியில் அடங்கியுள்ள யாவிலும் ஆகாயமாக விரிந்துள்ள அனைத்திலும் அங்கிங்கெனாதபடி நீக்கமற நிறைந்த பரம்பொருளே சோதியாக உள்ளது. அச்சோதியே எல்லா உயிரிலும் வியாபஈத்து அவரவர் மனத்துள்ளும் புற உடம்பிலும் மெய்ப் பொருளாக விளங்கி நிற்கின்றது. அதனை அறிந்து தன சீவனிலே சிவனைக் கண்டு தியானிக்கும் யோகி தெளிந்த ஞானியே!!!


சிவவாக்கியம் - 115

மன்கிடாரமே சுமந்து மலையுள் ஏறி மறுகுறீர் 
எண்படாத காரியங்கள் இயலும் என்று கூறுகிறீர் 
தம்பிரானை நாள்தோறும் தரையிலே தலைபடக் 
கும்பிடாத மாந்தரோடு கூடி வாழ்வது எங்ஙனே!

மண்பாண்டமாகிய இவ்வுடலைச் சுமந்து ஏறாத மலையிலேல்லாம் ஏறி துன்புறுகின்றீர்கள். என்னால் ஆகாத காரியங்கள் யாவையும் செய்ய முடியும் என ஆணவத்தோடு கூறுகின்றீர்கள். தமக்குள்ளே இருக்கும் ஈசனை அறிந்து கொள்ளாமல் இருந்தாலும், கோயிலில் சென்று நாள்தோறும் இறைவனை தரிசித்து தரையில் தலைப்பட வனாகவும் மாட்டீர்கள். இப்படிப்பட்ட மனிதர்களோடு எப்படி என்னால் சேர்ந்து வாழ முடியும்.


சிவவாக்கியம் - 116

நாவினூல் அழிந்ததும் நலம்குலம் அழிந்ததும் 
மேவுதேர் அழிந்ததும் விசாரமும் குறைந்ததும் 
பாவிகாள் இதென்ன மாயம் வாமநாடு பூசலை 
ஆவியார் அடங்கு நாளில் ஐவரும் அடங்குவார்.

நாவில் பேச்சு அழிந்ததும், நலமுடன் வாழ்ந்த மனித குலம் அழிந்ததும், தான் பயன்படுத்தி மென்மையாக பாதுகாத்த வாகனங்கள் அழிந்ததும் இவைகளால் ஏற்படும் மன உளைச்சல்களால் இறை விசாரம் குறைந்ததும் இயற்கையாகவே எப்போதும் நடந்து வரும் மாயம் என்பதை அறியாமல் வாழும் பாவிகளே. வாமநாடு எனும் வலப்பக்கமாய் இருந்து உழன்ற நம் ஆன்மா போகும் நாளில் பஞ்சபூதங்களும் ஒவ்வொன்றாகவே மறைந்துவிடும்.


சிவவாக்கியம் - 117

வீடெடுத்து வேள்வி செய்து மெய்யரோடு பொய்யுமாய் 
மாடு மக்கள் பெண்டிர் சுற்றம் என்றியிருக்கும் மாந்தர்காள் 
நாடு பெற்ற நண்பர் கையில் ஓலை வந்து அழைத்த போது 
ஆடு பெற்றதவ்விலை பெறாது காணும் இவ்வுடல்.

உண்மையினையும் பொய்யினையும் பேசி சம்பாதித்து புது வீட்டைக் கட்டி யாகங்கள் செய்து குடி புகுந்து செல்வம், மக்கள், மனைவி, சுற்றத்தினர் என்று மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கும் மாந்தர்களே! உயிர் போகும் ஓலையின்படி உங்கள் உயிரை கொண்டு போக எமன் வந்து அழைத்துப் போகும்போது அவையெல்லாம் கூட வருமா? ஒன்றுக்கும் உதவாமல் உதிர்ந்துபோகும் இலைகள் கூட ஆடு, மாடுகள் தின்பதற்காவது உதவும். ஆனால் இந்த உடலைவிட்டு உயிர்போய் விட்டால் ஒன்றுக்கும் உதவாது போகும் இவ்வுடல் என்பதை உணர்ந்து உங்கள் உயிரில் உள்ள ஈசனைக் கண்டு தியானியுங்கள்.


சிவவாக்கியம் - 118

இல்லை இல்லை என்று நீர் இயம்புகின்ற ஏழைகாள்
இல்லை என்று நின்றதொன்றை இல்லை என்னலாகுமோ 
இல்லை அல்ல ஒன்றுமல்ல இரண்டும் ஒன்றி நின்றதை 
எல்லை கண்டு கொண்ட பேர் இனி பிறப்பது இல்லையே!!!

கடவுள் இல்லை, இல்லை என்று இயம்புகின்றவர்கள் எதுவும் இல்லா எழைகளாவார்கள். இல்லையென்றும், உண்டென்றும் சொல்லுமாறு தனக்குள்ளேயே நானாக நின்ற ஆன்மாவையும், ஆன்மாவில் ஆண்டவனையும், அறியாமல் இல்லை என்று சொல்ல என்ன ஆகுமோ? அது இல்லாததும் இல்லை, ஒன்றும் உள்ளதும் அல்ல. சக்தியாகவும், சிவனாகவும் இரண்டும் ஒன்றி நின்ற மெய்ப்பொருளை அறிந்து உணர்ந்து, நினைந்து, தியானித்து சும்மா இருக்கும் சமாதிநிலை என்ற எல்லையைக் கண்ட தவசீலர்கள், மரணமில்லா பெருவாழ்வடைந்து இறைவனுடன் இரண்டறக் கலப்பார்கள். அவர்கள் இனி இம்மாயா உலகில் பிறப்பெடுக்க மாட்டார்கள்....


சிவவாக்கியம் - 119

காரகார கார கார காவல் ஊழி காவலன் 
போரபோர போர போர போரில் நின்ற புண்ணியன் 
மாரமார மார மார மரங்கள் எழும் எய்தஸ்ரீ 
ராமராம ராமராம ராம என்னும் நாமமே!!

எப்படி மாற்றிப் போட்டும் நாமசெபம் செய்தாலும் அது உண்மையை உணர்ந்தும். உண்மையாக உச்சரிக்கும் மந்திரங்களின் உட்கருத்து மாறாது. அது அகங்காரத்தை அழித்து தீரத்தைக் கொடுக்கும். உலகங்கள் யாவையும் காத்து ரட்சிக்கும் இறைவன், இராவண வதம் செய்யா போரில் நின்ற புண்ணியன், வாலியை வதம் செய்ய மாமரங்கள் ஏழையும் பானத்தில் துளைத்தவன் ராமன். அதுபோல நம் உடலில் உள்ள மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அனாகதம், விசுத்தி, ஆஞ்ஞா, சகஸ்ராரம் என்ற ஏழு சக்கரங்களையும் ஸ்ரீராம நாமத்தில் பரிசுத்தமாக்கி, அவைகளின் ஆற்றலால் தியானம், தவம் மேலோங்கி பிறவா நிலையடைய துணையாக நிற்பது ஸ்ரீராம நாமமே!!!!


சிவவாக்கியம் - 120

நீடுபாரிலே பிறந்து நேயமான காயந்தான் 
வீடுபேறு இது என்றபோது வேண்டி இன்பம் வேண்டுமோ 
பாடி நாலு வேதமும் பாரிலே படர்ந்ததோ 
நாடு ராம ராமராம ராம என்னும் நாமமே !!!

இப்பூவுலகில் பல பிறவிகள் எடுத்து பிறந்த இவ்வுடம்பை இது என்னுடையது என எண்ணி இருக்கின்றோம்!!! இது வீடுபேறு எனும் இன்பம் பெற வேண்டினால் கிடைக்குமா? அதற்கு நான்கு வேதங்களையும் நன்கு பாடிப் பழகி இவ்வுலகமெங்கும் இறை நிறைத்திருக்கும் இயல்பை அறிந்து தன உடம்பையும், உயிரையும் உணர்ந்து யோக ஞான நாட்டமுடன் தியானம் கடைபிடியுங்கள். அதற்கு உற்ற துணையாக வருவது ராமநாமம்!!! இராம நாமத்தில் ஓரெழுத்தும் ஓங்காரமும் உள்ளதை உணருங்கள்.


சிவவாக்கியம் - 121

உயிரு நன்மையால் உடல் எடுத்துவந்து இருந்திடுமே 
உயிர் உடம்பு ஒழிந்தபோது ரூபரூபமாயிடும் 
உயிர் சிவத்தின் மாயை ஆகி ஒன்றை ஒன்று கொன்றிடும் 
உயிரும் சத்திமாயை ஆகி ஒன்றை ஒன்று தின்னுமே!!!

உயிரானது நல்வினை, தீவினைக்கேற்ப உடலைப் பெற்று இப்புவியில் வந்து வாழ்ந்து வருகின்றது. உடம்பைவிட்டு உயிர் போனபோது அது உருவம் ஒழிந்து அரூபமாக ஆகின்றது. உயிர் என்பது சிவமென்ற பரம்பொருளின் மாயையாகி, மெய்ப்பொருளாகி அனைத்தையும் தன்னுள் மறைத்து மறைந்திடுமே!!! உயிர் சிவனாகவும், உடம்புச் சக்தியாகவும் இருப்பதை அறிந்து தியான தவத்தால் ஒன்றிணைத்து சமாதி இன்பம்அடைபவர், உடம்பை உயிரில் கரைத்து இரண்டும் ஒன்றாகி சிவத்தை அடைவர்.


சிவவாக்கியம் - 122

நெட்டெழுத்து வட்டமோ நிறைந்தமல்லி யோனியும் 
நெட்டெழுத்தில் வட்டமொன்று நின்ற தொன்றும் கண்டிலேன் 
குற்றெழுத்தில் உற்றதொன்று கொம்பு கால் குறித்திடில் 
நெட்டெழுத்தின் வட்டம் ஒன்றில் நேர்படான் நம் ஈசனே!!!

அ' முதல் 'ஔ' வரை உள்ள நேட்டேழ்த்துக்கள் யாவும் வட்டத்தில் இருந்து தோன்றுவதைப் போல் வட்டமான பிரமத்திலிருந்தே நால்வகை யோனிகளிலும் உயிர்கள் உலகுக்கு வருகின்றது. எல்லா எழுத்திலும் ஒரேழுத்து நின்றதை கண்டுகொள்ளுங்கள் .குற்றெழுத்தாகிய 'க' முதல் 'ன' வரை யில் அகார ஒலியில் உற்றிருப்பதை உணருங்கள். அதில் கொம்பு, கால் ஆகியவைச் சேர்த்தால் எழுத்துக்களின் ஒலி மாறுவதை அறியுங்கள். உதாரணமாக 'ச' என்பதில் கொம்பு போட்டால் 'சி' என்ற சிவனாகவும், 'சி என்ற சீவனாகவும், கொம்பு கால்சேர்த்தால் செ, சே, சு, சூ, சா, சொ, சோ, என்று ஒலி மாறுகிறது. இப்படி விளங்கும் எழுத்துக்கள் யாவும் ஒரெழுத்தில் இருந்தே உற்பத்தி ஆகி மொழியில் நிற்பதைப் போல் பிரம்மமான ஈசனிடம் இருந்தே அனைத்தும் ஆகி நிற்பதை உணர்ந்து தியானியுங்கள்


சிவவாக்கியம் - 123

விண்ணிலுள்ள தேவர்கள் அறியொணாத மெய்ப்பொருள்
கண்ணிலாணியாகவே கலந்து நின்ற தென் பிரான் 
மன்னிலாம் பிறப்பறுத்து மலரடிகள் வைத்த பின் 
அண்ணலாரும் எம்முளே அமர்ந்து வாழ்வது உண்மையே!!!

அமிர்தம் உண்டு அழியாமல் வானுலகில் இருக்கும் தேவர்களும் அறிய முடியாதது மெய்ப்பொருள். அதனை ஈசன் எனக்கு அறிவித்து கண்ணில் ஆணியைப் போல் கலந்து நிற்கிறான் என் குருபிரான்.. மெய்ப் பொருளை அறிந்தாலே இம்மண்ணில் பிறப்பு, இறப்பு இல்லாது போகும் ஈசனின் திருவடிகளை சிந்தையில் வைத்து தியானியுங்கள். இந்த ஞானத்தை பெற்ற யோகியரிடத்தில் அண்ணலாக ஈசன் சோதி வடிவாய் அமர்ந்து வாழ்வதும் சத்தியமே.


சிவவாக்கியம் - 124

வின் கடந்து நின்ற சோதி மேலை வாசலைத் திறந்து 
கண்களிக்க உள்ளுளே கலந்து புக்கிருந்த பின் 
மண்பிறந்த மாயமும் மயக்கமும் மறந்துபோய் 
எண் கலந்த ஈசனோடு இசைந்திருப்பது உண்மையே!!!

உனக்குள் வின்வேளியாக இருக்கும் மனத்தை கடந்து அப்பால் சோதியாக உலாவும் ஈசனை அறிந்து மேலைவாசல் என்னும் பத்தாம் வாசலை யோக ஞானத்தால் திறந்து தியானிக்க வேண்டும். அப்போது கண்களிக்க உனக்குள்ளே கலந்து புகுந்திருக்கும் இறைவனை தரிசிக்கலாம். இம்மண்ணிலே பிறவி எடுக்கும் மாயமும், மயக்கத்தைத் தருகின்ற சுக போகங்கள் யாவும் மறைந்துபோய் விடும். விண்ணில் நிற்கும்சூரியனைப் போல் என்னில் அகாரத்தில் கலந்து நிற்கும் ஈசனோடு இணைந்து இருப்பது உண்மையாகும்.


சிவவாக்கியம் - 125

மூலமான மூச்சதில் மூச்சறிந்து விட்ட பின் 
நாலுநாளு முன்னிலோரு நாட்டமாகி நாட்டிடில் 
பாலனாகி நீடலாம் பரப்பிரம்மம் ஆகலாம் 
ஆலம் உண்ட கந்தர் ஆணை அம்மை ஆணை உண்மையே!!!

இவ்வுடலுக்கு மூலமாக இயங்கும் பிராணவாயுவை அறிந்து பிராணாயாமம் எனும் மூச்சுப் பயிற்சியை செய்யவேண்டும். நம் பிராணனில் இருந்து வெளியேறும் நாலு அங்குல மூச்சை இந்த யோகத்தில் நாட்டம் வைத்து ரேசகம், கும்பகம், பூரகம், என்று வாசியை நாட்டி செய்து வந்தீர்களானால் என்றும் இளமை பெற்று பாலனாக வாழலாம். இது ஆலகால விஷம் உண்ட நீலகண்டர் மீதும் அவ்விஷத்தை தடுத்த என் அன்னையின் மீதும் ஆணையிட்டுக் கூறுகின்றேன்.


சிவவாக்கியம் - 126

மின் எழுந்து மின் பறந்து மின் ஒடுங்கும் வாறு போல் 
என்னுள் நின்ற என்னுள் ஈசன் என்னுள்ளே அடங்குமே 
கண்ணுள் நின்ற கண்ணில் நேர்மை கண் அறிவிலாமையால் 
என்னுள் நின்ற என்னை யானும் யான் அறிந்தது இல்லையே!

மின்னல் வானில் தோன்றி மின்னலாக ஒளிவீசி மின்னளுக்குல்லேயே ஒடுங்கிவிடுகிறது. அதுபோல என் உடலில் நின்று என் உயிருள் உள்ள ஈசன் நானாக எனக்குள்ளேயே ஒடுங்கி அடங்கியுள்ளான். கண்ணிலே நின்று கண்ணிலே நேர்படும் பிம்ம்பத்தைக் கண்கள் அறியாத தன்மையினால் கண்ணைப் பற்றிய அறிவு இல்லாமையால் என்னுள் நின்ற ஆன்மாவையும் அதனுள் நின்றிலங்கும் ஆண்டவனையும் நான் எனும் ஆணவத்தால் யான் அறிய முடியாமல் ஆனதே.


சிவவாக்கியம் - 127

இருக்கலாம் இருக்கலாம் அவனியில் இருக்கலாம் 
அரனுமால் பிரமனும் அண்டம் ஏழு அகற்றலாம் 
கருக்கொளாத குழியிலே காலிலாத கண்ணிலே 
நெருப்பறை திறந்த பின்பு நீயும் நானும் ஈசனே!!

இந்த அவனியில் தியான தவத்தை மேற்கொண்டு அதனால் சித்தி பெற்று சித்தர்களைப் போல் எப்போதும் இருக்கலாம். அரண், அரி, பிரமன் என்ற மூவர்களையும் கண்டு வணங்கி அண்டங்கள் எழும் சுற்றி வரலாம். ஐந்தாவது யோனியில் பிறந்து அது கருக்கொளாத குழி, நாற்றமில்லா யோனி என்பதை உணர்ந்து புருவமத்தி எனும் மூன்றாவது கண்ணில் சுழுமுனை தாளைத் திறந்து நெருப்பாற்றைக் கடந்து சோதியில் கலந்து பின்பு நீயும் எச்சனே என்று அறிந்து கொள்ளலாம்.


சிவவாக்கியம் - 128

ஏகபோகம் ஆகியே இருவரும் ஒருவராய் 
போகமும் புணர்ச்சியும் போருந்துமாறது எங்ஙகனே 
ஆகிலும் அழகிலும் அதன் கண் நேயம் ஆனபின் 
சாகிலும் பிறக்கிலும் இவை இல்லை இல்லையே!!

ஏகமனதுடன் ஆணும் பெண்ணும் கூடி இருவரும் ஒருவராகி புணர்ந்து போகம் செய்கின்ற சிற்றின்பம் எல்லா உயிர்களுக்கும் பொதுவாக பொருத்தி ஒத்து இருக்கின்றதே அது எங்ஙகனம்?அதுபோல் ஏகமாக உனக்குள் செய்யும் யோகத்தால் சக்தியும் சிவனும் ஒன்றாகி கலந்து பேரின்ப அனுபவத்தை ஞானிகளும் சித்தர்களும் பொதுவாக இருப்பதை உணர்ந்தனர். அனைத்தும் ஆவதற்கும், அழிவதற்கும், அழகிற்கும் காரணம் சிவமே என்பதை அறிந்து அன்பு வைத்து தியானியுங்கள். தன்னம்பிக்கையுடன் பாடுபட்டு மெய்நிலை அடைந்தவர்களுக்கு இப்பூவுலகில் சாவதும் பிறப்பதும் இல்லாது போகும்.


சிவவாக்கியம் - 129

வேதம் நாளும் போதமாய் விரவும் அங்கி நீரதாய் 
பாதமே லிங்கமாய் பரிந்து பூசை பண்ணினால் 
காதினின்று கடைதிறந்து கட்டறுத்து ஞானிகள் 
ஆதி அந்தமும் கடந்து அரிய வீடு அடைவரே!!!

நாண்டு வேதங்களில் உள்ள மெய்ப்பொருள் பஞ்சபூதங்களாய் விரிந்து நம் உடம்பில் நீராய் நிற்கின்றது. அதுவே ஈசன் திருவடியாகவும் இழிந்கமாகவும் இருப்பதை அறிந்து ஆன்மா எனும் பூவை அசையாமல் நிறுத்தி தியானிக்க வேண்டும். அப்போது வாசியானது லயமாகி நாத சப்தத்துடன் நம் காதுகளில் கேட்கும். அந்நாத ஒலியால் மெய் வாசலைத் திறந்து மனமெனும் பேயை தவத்தால் கட்டறுத்த ஞானிகள் ஆதி அந்தமும் கடந்து அனாதியாய் உள்ள சிவத்தை அடைந்து அரிய வீடு பேறை அடைவார்கள்.


சிவவாக்கியம் - 130

பருத்தி நூல் முறுக்கிவிட்டு பஞ்சி ஓதும் மாந்தரே 
துருத்தி நூல் முறுக்கிவிட்டு துன்பம் நீங்க வல்லிரேல் 
கருத்தில் நூல் கலைபடும் கலைநூல் கழிந்திடும் 
திருத்திநூல் கவலறும் சிவாய அஞ்சு எழுத்துமே.

நைந்துபோன பருத்தி நூலினால் நெய்த ஆடைகளை உடுத்தி பஞ்சப்பாட்டு பாடி வாழும் மனிதர்களே! உங்களுக்குள் இருக்கும் குண்டலினி சக்தியை வாசியோகத்தால் துருத்திக் கொண்டு ஊதுவதுபோல ஊத்தி விழிப்புறச் செய்து மேலேற்றினால் துன்பங்கள் யாவும் தானே நீங்கும். இந்த யோகத்தால் தியானிப்பவர் சிந்தையில் கருத்துள்ள நல்ல நூல்களும் உதிக்கும். பல கலை ஞானத்திலும் சிறந்து விளங்குவர். காலன் எனும் எமன் அணுகான். வாழ்நாள் காலங்கள் திருத்தி ஆயுள் அமையும். கவலைகள் யாவும் அற்றுப் போகும். ஆகவே 'சிவயநம' என அஞ்செழுத்தை ஓதி தியானம் செய்யுங்கள்.


சிவவாக்கியம் - 131

சாவதான தத்துவச் சடங்கு செய்யும் ஊமைகாள் 
தேவர் கல்லும் ஆவரோ சிரிப்பதன்றி என் செய்வேன் 
மூவராலும் அறியொணாத முக்கணன் முதற்கொழுந்து 
காவலாக உம்முளே கலந்திருப்பன் காணுமே!!

ஒன்றுக்கும் உதவாத தத்துவச் சடங்குகள் செய்து செத்துப் போகும், உண்மையை உணராத ஊமை மனிதர்களே!! வெறும் கல்லுக்கு செய்யும் சடங்குகள் இறைவனைச் சேருமோ? எல்லாம் படைத்த ஈசன் கல்லாகவா இருப்பான்!!! இதைக் கண்டு சிரிக்காமல் வேறு என்ன செய்வேன். அறிவு, உணர்வு, நினைவு என்ற மூன்றாலும் அறிய முடியாத முக்கண்ணனான ஈசனின் முதல் பிள்ளையான கணேசன் உனக்குக் காவலாக உனக்குள்ளேயே பிண்டக்கல்லாக கலந்திருப்பதை கண்டு தியானம் செய்யுங்கள்.


சிவவாக்கியம் - 132

காலை மாலை நீரிலே முழுகும் அந்த மூடர்காள் 
காலை மாலை நீரிலே கிடந்த தேரை என் பெறும் 
காலமே எழுந்திருந்து கண்கள் மூன்றில் ஒன்றினால் 
மூலமே நினைப்பிராகில் முத்தி சித்தி யாகுமே!!!

காலையும் மாலையும் மனச்சுத்தம் செய்யத் தெரியாமல் உடல் சுத்தம் மட்டுமே செய்து நீரில் மூழ்கி குளித்துவிட்டு மோட்சம் அடைவோம் எனக்கூறும் மூடர்களே!!! எப்போதும் நீரிலேயே வாழும் தவளையால் முத்தி அடைய முடியுமா? அதிகாலையிலே எழுந்து தியானம் செய்து மூன்றாவது கண்ணாகிய புருவமத்தியில் ஒன்றி யோக ஞானப் பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சக்தியை வாசியால் மேலேற்றி மெய்ப் பொருளை நினைத்து தியானித்து இருப்பிராகில் அதுவே முத்தி அடைவதற்கும், சித்தி பெறுதற்கும் வழியாகும்.


சிவவாக்கியம் - 133

எங்கள் தேவர் உங்கள் தேவர் என்றிரண்டு தேவரோ 
இங்கு மங்குமாய் இரண்டு தேவரே இருப்பாரோ 
அங்கும் இங்கும் ஆகிநின்ற ஆதிமூர்த்தி ஒன்றலோ 
வங்கவாரம் சொன்ன பேர்கள் வாய் புழுத்து மாள்வரே!!!


எங்கள் கடவுள் இது என்றும் உங்கள் கடவுள் அது என்றும் இரண்டு கடவுளா இருக்கின்றது? இங்கொன்றும் அங்கொன்றும் இரண்டு தெய்வம் இருக்குமா? அங்கும் இங்கும் எல்லாமாய் ஆகி நின்ற ஆதிமூர்த்தியான சிவம் ஒன்றல்லவா, எங்கும் உள்ள ஒரே கடவுள். இது பெரியது என்றும் உங்களது சிறியது என்றும் கூறி இறைவனின் உண்மையை உணராது வாதம் பேசுபவர்கள் வாய்புழுத்து மாள்வார்கள்.


சிவவாக்கியம் - 134

அறையறை இடைக்கிடந்த அன்று தூமை என்கிறீர் 
முறை அறிந்து பிறந்தபோதும் அன்று தூமை என்கிறீர் 
துறை அறிந்து நீற்குளித்தால் அன்று தூமை என்கிறீர் 
போரை இலாத நீசரோடும் போருந்துமாறது எங்ஙனே.

இளம்பெண்களை மாதத்தில் மூன்று நாட்கள் அறையில் ஒதுக்கி வைப்பது ஏன் என்றால் அவள் தீட்டு என்று சொல்கின்றார்கள். பத்து மாதம் கருவிலிருந்து பிறந்த குழந்தைகளுக்கும் தீட்டு என்கிறார்கள். இறந்த சாவுக்குப் போய்விட்டு குளத்தின் துறைகளில் குளிக்கும் காரணம் கேட்டால் அதற்கும் தீட்டு என்கிறார்கள். இப்படி எதற்கெடுத்தாலும் தீட்டு எனும் பொறுமை இல்லாத நீசர்கலோடும் நீ தீட்டாகவே பொருந்தி இருப்பது எவ்வாறு இறைவா?


சிவவாக்கியம் - 135

சுத்தம் வந்த வெளியிலே சலமிருந்து வந்ததும் 
மத்தமாகிய நீரிலே தவண்டு மூழ்கும் மூடரே 
சுத்தம் ஏது சுட்டதேது தூய்மை கண்டு நின்றது ஏது? 
பித்தர் காயம் உற்றதேது பேதம் ஏது போதமே.

சுத்தமான ஆகாயத்திலிருந்து சுத்தமான மழைநீர் பெய்கிறது.இதனை உனக்குள் அறியாது சிற்றின்ப நீரிலே மூழ்கி அதனாலேயே பல துன்பங்களுக்கு ஆட்பட்டு விந்து விட்டு நொந்து கெடும் மூடரே!!! நீரிலே மூழ்குவது மட்டும் சுத்தம் அல்ல. மனதிலுள்ள மாசுக்களை நீக்குவதே சுத்தம். சுத்தம் ஏது? தீயாக சுட்டது ஏது? என்பதை அறிந்து அது பேதம் ஏதும் இல்லாத மெய்ப்பொருளாய் இருப்பதை அறிந்து உணர்ந்து மனதை அதிலேயே இருத்தி தியான போதத்தில் திளைத்திடுங்கள்.


சிவவாக்கியம் - 136

மாதா மாதம் தூமைதான் மறந்துபோன தூமைதான் 
மாத மற்று நின்றலோ வளர்ந்து ரூபம் ஆனது 
நாதம் ஏது வேதம் ஏது நற்குலங்கள் ஏதடா 
வேதம் ஓதும் வேதியா விளந்தாவாறு பேசடா!!

மாதம்தோறும் பெண்களுக்கு இயற்கையாய் வரும் தூமையே அவள் தூய்மையானவள் என்பதற்கு சான்று. அது நின்று போனால் அவள் கருவைத் தான்கியிருக்கின்றால் என்பதே காரணம். அத்தீட்டில் கலந்தே உடலும் உயிரும் வரர்ந்து உருவமாகி ஜனிக்கின்றது. நாதமும் விந்துவும் கலந்தே உயிர்கள் யாவும் உண்டானது. இதில் நாதம் எது? வேதம் எது? நற்குலங்கள் எது? எல்லாம் அத்தூயமையில் இருந்தே தோன்றியுள்ளது என்பதனை அறியாமல் வேதங்களை வெறும் வாயால் ஓதுவதால் மட்டும் உயர்ந்த குளம் எனப் பேசும் வேதியரே! நீங்கள் இப்போவியில் இவை இல்லாமல்தானோ விளைந்தீர்களா? அது எப்படி எனக் கூறுங்கள்!!!


சிவவாக்கியம் - 137

தூமை அற்று நின்றலோ சுதீபமுற்று நின்றது 
ஆண்மை அற்று நின்றலோ வழக்கமற்று நின்றது 
தான்மைஅற்று ஆண்மை அற்று சஞ்சலங்கள் அற்று நின்ற 
தூமை தூமை அற்ற காலம் சொல்லும் அற்று நின்றதே!!!

பெண்ணிடம் தூமை என்ற மாதவிலக்கு நின்ற பிறகுதான் அங்கெ கருவாகி, ஆண், பெண், அலி என்ற தன்மையற்ற பிண்டமாக உயிர் நிற்கின்றது. அதன் பின் அப்பிண்டம் சிசுவாகி கருவறையில் வளர்ந்து குழந்தையாக வெளிவருகிறது. அது வளர்ந்து வாழ்கையில் அடையும் இன்ப துன்பங்களை பெற்று தான் என்ற ஆணவத்தால் பல சஞ்சலங்களை அடைந்து மரணம் அடைகிறது. அத்தூமையால் ஆனா உடம்பில் உயிர் போன பின் பிணம் என்ற பேர் பெற்றது, தூமை அற்றதால் என்பதனை அறியுங்கள். ஆகவே தீட்டில்லாத உடம்பு சவமே!!!


சிவவாக்கியம் - 138

ஊறி நின்ற தூமையை உறைந்து நின்ற சீவனை 
வேறு பேசி மூடரே விளந்தவாறது ஏதடா 
நாறுகின்ற தூமையல்லோ நற்குலங்கள் ஆவன 
சீறுகின்ற மூடனே அத்தூமை நின்ற கோலமே!!!

தாயின் கருவறையில் சுக்கில சுரோனித கலப்பால் தூமையில் ஊறி நின்று உருவான உயிர் மனித குலத்திற்கு பொதுவாக அமைந்துள்ளது அறியாமல் நீ வேறு குலம் நான் வேறு குலம் என்று வேறுபடுத்திப் பேசுகின்ற முட்டாள்களே! அதனால் நீங்கள் அடைந்த பலன் என்ன? நாற்றம் வீசும் தூமையில் பிறந்தவர்கல்தால் மனிதனில் ஞானியராகவும், சித்தர்களாகவும், நற்குலங்களலாகவும் உள்ளார்கள். இதை உணராது கோபப்படும் முட்டாள்களே! அத்தூமையில் பரிசுத்தனாய் நின்ற ஈசனின் களத்தை கண்டுணர்ந்து ஒன்றி தியானம் செய்யுங்கள்.


சிவவாக்கியம் - 139

தூமை கண்டு நின்ற பெண்ணின் தூமை தானும் ஊறியே 
சீமை எங்கும் ஆணும் பெண்ணும் சேர்ந்து உலகம் கண்டதே 
தூமை தானும் ஆசையாய் துறந்திருந்த சீவனை 
தூமை அற்று கொண்டிருந்த தேசம் ஏது தேசம்?

தீட்டு நின்ற பெண்ணின் தீட்டில் ஊறி வளர்ந்த உயிரே ஊர்கள் எங்கும் ஆண்களும் பெண்களுமாய் சேர்ந்து வாழ்ந்து வருவதை இவ்வுலகம் முழுமையும் காண்கின்றோம். காம ஆசையால் தீட்டில் தோன்றி உருவாக்கி நின்ற தன்னை அறிந்தவர்கள் எல்லா ஆசைகளையும் துறந்து இவ்வுலகில் சிவனையே தியானித்து இருப்பார்கள். இருக்கும் அனைத்து சீவனிலும் தீட்டு இல்லாமல் இருக்கும் தேசம் எங்காவது உள்ளதா?


சிவவாக்கியம் - 140

வேணும் வேணும் என்று நீர் வீண் உழன்று தேடுவீர் 
வேணும் என்று தேடினாலும் உள்ளதல்லது இல்லையே 
வேணும் என்று தேடுகின்ற வேட்கையைத் துறந்தபின் 
வேணும் என்ற அப்பொருள் விரைந்து கானல் ஆகுமே!!

உலகில் பிறப்பெடுத்த மனிதர்கள் இறைநிலை அடைவதற்கும், எட்டு சித்திகளை பெறுதற்கும், பிறவிப் பிணிமுதல் வரும் பிணிகள் யாவையும் நீக்குவதற்கும், பொன் செய்யும் வித்தைகள் செவதற்கும், மெய்ப்பொருள் கிடைக்கவேண்டும். அது கிடைத்தால் எல்லாம் செய்து வளமோடு வாழலாம் என்று வீனாசைக் கொண்டு பல இடங்களிலும் அலைந்து தேடுகிறார்கள். அது வேணும் என்று எங்கு சென்று தேடினாலும் கிடைக்காது. உனக்குள்ளே உள்ளதாகவும்,இல்லாததாகவும் இருப்பதை அறிந்து கொண்டு வேண்டும் என்ற ஆசைகள் யாவையும் துறந்து தியானம் செய்யுங்கள். உண்மையான யோக ஞான சாதனங்கள் வேண்டும் என்ற அந்த மெய்ப்பொருள் கிடைக்கப் பெற்று விரைவில் சோதியான ஈசனை காண்பீர்கள் !!!


சிவவாக்கியம் - 141

சிட்டர் ஒத்து வேதமும் சிறந்த ஆகமங்களும் 
நட்ட காரணங்களும் நவின்ற மெய்மை நூல்களும் 
கட்டி வைத்த போதகம் கதைக்குகந்த பித்தெலாம் 
பொட்டதாய் முடிந்ததே பிரானை யான் அறிந்தபின்.

வேத பண்டிதர்கள் ஓதும் நான்கு வேதங்களும், சிறந்ததாய் விளங்கும் ஆகம சாஸ்திரங்களும், கோயில் கட்டி அதன் கருவறையில் கற்சிலைகள் நட்டு வைத்து கும்பாபிஷேகம் செய்யும் காரணங்களும், திருமந்திரம், திருக்குறள், திருவாசகம் போன்ற உன்னதமான நூல்களும், யோகா தவத்தால் கட்டிச் சேர்த்து வைத்த போதப் பொருளும், இராமாயணம், மகாபாரதம், புராணம் போன்ற கதைகளில் எல்லாம் உகந்ததாகச் சொல்லாப்படும் பிரமம் போன்ற இவை யாவும் எனக்குள் இருக்கும் எம்பிரான் ஈசனை அறிந்தபின் எனக்குள்ளேயே ஒரு பொட்டாக ஒரே மெய்ப்போருளாகவே முடிந்திருக்கிறதே என்பதை உணர்ந்து கொண்டேன்.


சிவவாக்கியம் - 142

நூறு கோடி ஆகமங்கள் நூறுகோடி மந்திரம் 
நூறுகோடி நாள் இருந்தும் ஓதினால் அதன்பயன் 
ஆறும் ஆறும் ஆருமாய் அகத்தில் ஓர் எழுத்துமாய் 
ஏறுசீர் எழுத்தை ஓத ஈசன் வந்து பேசுமே.

எவ்வளவோ ஆகமங்கள், அதில் எத்தனயோ மந்திரங்கள், வாழ்நாள் காலம் முழுவதும் இருந்து ஒதிவந்தாலும், அதனால் மெய்நிலை அடைய முடியுமா? அதன் பயனால் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற பதினெட்டுப் படிகளையும் கடந்து அகத்தில் ஓர் எழுத்தாக மெய்ப் பொருளை அடைந்து அதையே நினைந்து 'சிவயநம' என்று ஓதி தியானிக்க சோதியாக உலாவும் ஈசனே உன் குருவாக வந்து பேசுவான்.


சிவவாக்கியம் - 143

காலை மாலை தம்மிலே கலந்து நின்ற காலனார் 
மாலை காலை யாச்சிவந்த மாயம் ஏது செப்பிடீர் 
காலை மாலை அற்று நீர் கருத்துளே ஒடுங்கினால் 
காலை மாலை ஆகி நின்ற காலன் இல்லை இல்லையே!

இரவும் பகலும் தனக்குள்ளேயே கலந்து நிற்கும் இறைவனார், இரவும் பகலுமாய் சிவந்த சோதியாக நின்றிலங்கும் மாயம் எப்படி என்பதனைச் சொல்லுங்கள். அது மெய்ப் பொருளாக இருப்பதை அறிந்து இரவும் பகலும் எந்நேரமும் கருத்துக்கள் உதிக்கும் சிந்தையிலே நினைவு ஒடுங்கி சிவத்தியானம் செய்து வந்தால் இராப்பகல் இல்லாத இடத்தில் ஈசன் சோதியாக திகழ்வான். அதனால் எமன் வருவான் என்பதோ, எமபயம் என்பதோ, தியானம் செய்பவர்களுக்குக் கிடையாது.


சிவவாக்கியம் - 144

எட்டு மண்டலத்துளே இரண்டு மண்டலம் வளைத்து 
இட்ட மண்டலத்துளே எண்ணி ஆறு மண்டலம் 
தொட்ட மண்டலத்திலே தோன்றி மூன்று மண்டலம் 
நட்ட மண்டபத்திலே நாதன் ஆடி நின்றதே!!

எட்டாகிய எண்சான் உடம்பிலே இரண்டாகிய உயிர் உள்ளது. இப்படி எட்டும் இரண்டுமாய் இணைந்த இத்தேகத்தில் மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆஞ்ஞா ஆகிய ஆறு ஆதாரங்கள் உள்ளது. இவ்வுடம்பில் சூரியமண்டலம், சந்திரமண்டலம், அக்நிமண்டலம், என்ற மூன்று மண்டலங்கள் இருக்கின்றது. இப்படி உள்ள உடம்பாகிய மண்டபத்தில் நடுவாக இருந்து நாதனாகிய ஈசன் ஆடி நின்று ஆட்டுவிக்கின்றான்!!!


சிவவாக்கியம் - 145

நாலிரண்டு மண்டலத்துள் நாத நின்றது எவ்விடம் 
காலிரண்டு மூலநாடி கண்டதங்கு உருத்திரன் 
சேரண்டு கண்கலந்து திசைகள் எட்டு மூடியே 
மேலிரண்டு தான் கலந்து வீசி ஆடி நின்றதே!!!

எண்சான் உடன்பில் நாதன் நின்றது எந்த இடம்? இடகலை, பிங்கலை எனும் மூச்சில் மூலநாடியான சுழுமுனையில் ஏற்றி இறக்கி, வாசிப் பயிற்சியினால் தீயாக விளங்கும் ருத்திரனை கண்டு அங்கு சந்திர, சூரியனாக விளங்கும் இரண்டு கண்களையும் ஒன்றாக இணைத்து எட்டுதிசைகளையும் மூடி அகக்கண்ணைத் திறந்து தியானம் செய்யுங்கள். மேலான அவ்வாசலில் சக்தியும், சிவனும் கலந்து சிவமாக ஆடி நிற்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.


சிவவாக்கியம் - 146

அம்மை அப்பன் அப்புநீர் அறிந்ததே அறிகிலீர் 
அம்மை அப்பன் அப்புநீர் அரிஅயன் அரனுமாய் 
அம்மை அப்பன் அப்புநீர் ஆதியாதி ஆனபின் 
அம்மை அப்பன் அன்னை அன்றி யாரும் இல்லை ஆனதே.

தாயாகவும் தந்தையாகவும் நாத விந்துதான் அப்புவான நீராக இருப்பதை அறிந்தும் நாத விந்தை அறியாமல் உள்ளீர்களே. அப்பு எனும் நீரே விஷ்ணு, பிரம்மா, சிவன் எனும் மும்மூர்த்திகளாக இருக்கின்றனர். அந்த நீரே ஆதிக்கும் ஆதியான அனாதியாகவும், பிரமமாகவும் இருப்பதை உணர்ந்து அது ஒன்றையே எண்ணித் தியானியுங்கள். அதுவே அம்மையாகவும், அப்பனாகவும் வாலை அன்னையாகவும் இருந்து அருளும்.


சிவவாக்கியம் - 147

உருத்தரிப்பதற்கு முன் உடல் கலந்தது எங் ஙனே 
கருத்தரிப்பதற்கு முன் காரங்கள் எங்ஙனே 
பொருத்தி வைத்த போதமும் போருந்துமாறது எங்ஙனே 
குருத்திருத்தி வாய்த்த சொல் குறித்துணர்ந்து கொள்ளுமே!!!

ஆன்மா உருத்தரிப்பதற்கும் உடம்பு எடுப்பதற்கும் முன் தாய் தந்தை உடல் கலந்தது எவ்வாறு? அது நினைவு எனும் ஆகாயத்தில், அதனால் தோன்றிய சுக்கில சுரோணித கலப்பால் நீராகி தாயின் கருவில் சிசுவாக வளர காரணங்கள் என்ன? அது உகாரமாகிய உணர்வால் இரு வினைக்கு ஒப்பவே. இவ்வுடலில் பொருத்தி வைத்த போதப் பொருள் பொருந்தி இருப்பது எவ்விடம்? அது அகாரமாகிய அறிவாகி மெய்ப்பொருளாக உடம்பில் உள்ளது. இவை யாவையும் குரு திருத்தமாக சொல்லித்தந்து உபதேசித்ததை உணர்ந்து அதையே குறித்து தியானித்து இறவாநிலைப் பெறுங்கள்.


சிவவாக்கியம் - 148

ஆதிஉண்டு அந்தம் இல்லை அன்றி நாலு வேதம் 
இல்லை சோதி உண்டு சொல்லும் இல்லை சொல்லிறந்தது ஏதும் இல்லை
ஆதியான மூவரில் அமர்ந்திருந்த வாயுவும் 
ஆதி அன்று தன்னையும் யார் அறிவது அண்ணலே!!!

ஆதியை அறிந்து, அது ஒன்றையே பற்றி, தவம் புரியும் ஞானிகள் அழிவது இல்லை. அவர்களுக்கு நான்கு வேதமும் தேவை இல்லை. அவர்கள் சோதியான ஈசனைக் கண்டு அங்கெ சொல் ஏதும் இல்லாமல் சொல்லிறந்த தன்மையும் இல்லாமல் மௌனத்தில் ஊன்றி சும்மா இருப்பார்கள். ஆதியான அணுவில் அயன், அரி, அரன் என மூவரும் இருப்பதை உணர்ந்து, பிரா ணசக்தியாக வாலை அமர்ந்தே தானாகி நிற்பதனையும் உணர்ந்து தியானத்தில் இருப்பார்கள். இதனை வேறு யார் அறிவார்கள் அண்ணலே!!!


சிவவாக்கியம் - 149

புலால் புலால் அதேன்று பேதமைகள் பேசுறீர் 
புலாலை விட்டு எம்பிரான் பிரிந்திருப்பது எங்ஙனே 
புலாலுமாய்ப் பிதற்றுமாய் பெருலாவும் தானுமாய் 
புலாலிலே முளைத்தெழுந்த பித்தன் காணும் அத்தனே!

நாறும் இறைச்சியிலான இவ்வுடம்பு இதுவென்று அறிந்தும் வேறுபடுத்தி இகழ்ச்சியாகப் பேசுகிறீர்கள். இறைச்சியிலான உடம்பைவிட்டு இறைவன் பிரிந்து தானாகி இருந்தது எவ்வாறு? உடம்பாகவும், உயிராகவும் இருந்து வாசியாகி உலாவிக்கொண்டு தானாகி நின்ற பரம்பொருள் இவ்வுடம்பில்தான் வித்தாக முளைத்து முதலாக உள்ளது. இதனை நன்கு உணர்ந்து கொண்டு இவ்வான்மாவை மேம்படுத்த, சோதியாக எழுந்த ஈசானை கண்டு தியானம் செய்யுங்கள்.


சிவவாக்கியம் - 150

உதிரமான பால் குடித்து ஒக்க நீர் வளர்ந்ததும் 
இதரமாய் இருந்தது ஒன்று இரண்டு பட்டது என்னலாம் 
மதிரமாக விட்டதேது மாமிசப்புலால் அதென்று 
சதிரமாய் வளர்ந்ததேது சைவரான மூடரே!!!

தாயின் இரத்தத்திலிருந்து உருவான பாலைக் குடித்துதான் நீங்கள் வளர்ந்தீர்கள். சதையாக இருந்த ஒன்றிலிருந்தே பிண்டம் உருவாகி வெளிப்பட்டு தாயாகவும், சேயாகவும் இரண்டானது. அமிர்தமான தாய்ப்பால் கொடுப்பதும் மாமிசப்புலாலான சதைதானே. மாமிசத்தில் இருந்தே உருவாகி மாமிசமாகவே வளர்ந்த நீங்கள் மாமிசமில்லாத சதுரமான நான்கில் நின்று வளராமல் இருந்தது எது என்பதை அறிவீர்களா? மற்றவரை சைவர் இல்லையென வெறுக்காது சைவத்தைக் கடைப்பிடியுங்கள்.


சிவவாக்கியம் - 151

உண்டகல்லை எச்சில் என்று உள்ளெரிந்து  போடுறீர்  
கண்ட எச்சில் கையலோ பரமனுக்கும் ஏறுமோ
கண்ட எச்சில் கேளடா கலந்த பாணி அப்பிலே
கொண்ட சுத்தம் ஏதடா குறிப்பிலாத மூடரே!

புறச்சடங்குகளால் செய்யப்படும் பூஜைகளில் நிவேத்தியமாக படைக்கப்படும் பிரசாதங்களை ஒரு குழந்தை அறியாது எடுத்து தின்றுவிட்டால் அது எச்சில் பட்டுவிட்டது என்று சொல்லி யாருக்கும் பயனில்லாது கீழே எறிந்து விட்டு வேறு பிரசாதம் செய்து படைக்கின்றார்கள். கண்ட கண்ட இடங்களில் எல்லாம் கைப்பட்டு எச்சிலான இவர்கள் கையால் செய்த பிரசாதங்களை மட்டும் இறைவன் ஏற்று உண்பானோ? எச்சிலாலே தோன்றிய உடம்பில் தானே கைகள் கலந்து இருக்கின்றது? அதனை சுத்தமான நீரில் கழுவி கைகளைத் துடைத்தால் சுத்தம் வந்துவிடுமா? குறிக்கோள் ஏதும் இல்லாத மூடரே! சுத்தம் என்பது என்ன? இவ்வுடலில் பரிசுத்தனாய் ஈசன் இருக்கும் இடம் எது என்பதை அறிந்து மனமாகிய அகத்தை சுத்தம் செய்து இறைவனை தியானியுங்கள்.


சிவவாக்கியம் - 152

ஓதி வைத்த நூல்களும் உணர்ந்து கற்ற கல்வியும்
மாது மக்கள் சுற்றமும் மறக்க வந்த நித்திரை
ஏதுபுக்கொளித்ததோ எங்குமாகி நின்றதோ
சோதிபுக் கொளித்த மாயம் சொல்லடா சுவாமியே!!!  

படித்தறிந்து பாதுகாக்கும் நூல்களும், உணர்ந்து கற்ற கல்வியும், மனைவி, சுற்றத்தினர் என யாவையும் மறக்கும் படியான மரணம் என்று ஒன்று வந்ததே! அது ஏன் வந்தது என்பதை சிந்தியுங்கள். உடலோடிருந்து உலாவிய உயிர் மரணம் வந்ததும் எங்காவது சென்று ஒளிந்து கொண்டதோ? அல்லது எங்குமான வானத்தில் நின்றதோ? சோதியான ஈசனை அடைந்ததா?  ஒளியாக நின்ற உயிர் ஒழிந்த மாயம் எங்கு என்பதை சுவாமி வேடம் போட்டு திரிபவர்களே சொல்லவேண்டும். எல்லாம் ஈசன் செயல் என்பதை உணர்ந்து, மரணமில்லாப் பெரு வாழ்வை அடைய முயற்சியுங்கள்.


சிவவாக்கியம் - 153 

ஈ ணெருமையின் கழுத்தில் இட்ட பொட்டணங்கள் போல்  
மூணு நாலு சீலையில் முடிந்தவிழ்க்கும் மூடர்காள்
மூணு நாலு லோகமும் முடிவிலாத மூர்த்தியை
ஊணி ஊணி நீர் முடிந்த உண்மை என்ன உண்மையே!

கன்று ஈன்ற எருமை மாட்டின் கழுத்தில், கண் திருஷ்டி படக்கூடாது என்பதற்காக மூன்று பொட்டணங்களை வைத்து முடிச்சுப் போட்டு வைப்பார்கள். அதுபோல பிராமணர்கள் குளிக்கும்போது ஒரு துண்டில் மூன்று முடிச்சுப்போட்டு கழுத்தில் போட்டுக்கொண்டு தண்ணீரில் மூழ்குவார்கள். பின் அந்த முடிச்சுக்களை அவிழ்த்துத் தண்ணீரிலே போட்டுவிட்டு முன்ஜென்மம், இந்த ஜென்மம், மறுஜென்மம் ஆகிய முப்பிறவிகளின் கர்மவினையை தொலைத்துவிட்டேன் என்று சொல்லித் தலை முழுகுவார்கள். ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களை விட்டுவிட்டேன் என்றும் விளக்கம் சொல்லுவார்கள். இதனால் அவைகள் அகன்றுவிடுமா? ஏழு உலகங்களிலும் ஆதியந்தம் இல்லாத அநாதியான ஈசனை உங்கள் ஊண் உடம்பிலே உணர்ந்து அதிலே ஊன்றி அறிவு, உணர்வும், மனம் ஆகிய மூன்றையும் முடிந்து தியானியுங்கள். மும்மலங்களும், மூவினைகளும் தானே விலகும். இதுவே உண்மையாக இறைவனை அடையும் வழி.


சிவவாக்கியம் - 154

சாவல் நாலு குஞ்சது அஞ்சு தாயதான வாறு போல்
காயமான கூட்டிலே கலந்து சண்டை கொள்ளுதே
கூவமான கிழநரிக்கூட்டிலே புகுந்த பின்
சாவல் நாலு குஞ்சது அஞ்சும் தான் இறந்து போனவே!

நான்கு சாவல்களையும் ஐந்து குஞ்சுகளையும் அதன் தாய்க் கோழியையும் ஒரே கூட்டில் அடைத்து வைத்தால் அவை ஒன்றுக் கொன்று கூவி கொத்தி சண்டை போடுகிறது. அக்கூட்டில் ஒரு கிழநரி புகுந்துவிட்டால் அவை யாவும் இறந்து போய்விடும். அது போலவே மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய நான்கும், பஞ்ச பூதங்களும், ஆன்மாவும் நம் உடம்பான கூட்டில் இருந்து ஐம்புலன்களாக சண்டையிட்டுக் கொண்டிருக்கிறது. இவ்வுயிரை, உடம்பில் புகுந்து எமன் கொண்டு போய்விட்டால் அந்தக் கரணம் நான்கும், பஞ்சபூதங்களும் மறைந்து போய்விடும் என்பதையும், எல்லா தத்துவங்களும், ஆன்மாவில் அடங்கிவிடும் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். 


சிவவாக்கியம் - 155

மூலமாம் குளத்திலே முளைத்தெழுந்த கோரையை
காலமே எழுந்திருந்து நாலு கட்டு அறுப்பிரேல்
பாலனாகி வாழலாம் பரப்பிரம்மம் ஆகலாம்
ஆழம் உண்ட க ண்டர் பாதம் அம்மை பாதம் உண்மையே.

அதிகாலை எழுந்து நமது மூலாதார சக்கரத்தில் இருக்கும் குண்டலினி சக்தியை பிராணாயாம பயிற்சி செய்து கோரையைப் போல முளைக்கும் கோழையாகிய எமனைக் கட்டறுத்து வெளியேற்ற வேண்டும். பின் வாசியோகம் செய்து பிராணசக்தியை மேலேற்றி ரேசக பூரக கும்பகம் என்று மூச்சை கட்டுப்படுத்தி, மனதை இறைவனுடன் இருத்தி, நான்கு நாழிகை நேரம் முயற்சியுடன் தியானப் பயிற்சியைத் தொடர்ச்சியாக தினமும் செய்து வரவேண்டும். இதனை விடாமல் தொடர்ந்து செய்து வரும் யோகிகள் பாலனாகி வாழ்ந்து பரப்பிரம்மம் ஆவார்கள். ஆலம் உண்ட நீலகண்டர் பாதமும் அம்மை பாதமும் நம்முள் அமர்ந்திருப்பதை உண்மையாய் உணர்ந்து தியானியுங்கள்.


சிவவாக்கியம் - 156  

செம்பினில் களிம்பு வந்த சீதரங்கள் போலவே
அம்பினில் எழுதொணாத அணியரங்க சோதியை
வெம்பி வெம்பி வெம்பியே மெலிந்து மேல் கலந்திட
செம்பினில் களிம்பு விட்ட சேதி ஏது காணுமே!

செம்பினில் களிம்பு வந்து சேர்ந்தது போல் நீ செய்த பாவங்கள் உயிரில் சேர்ந்து அது அழிவதற்கு காரணமாகின்றது. ஆகவே இச்சீவனை பாவங்கள் சேரா வண்ணம் சிவனோடு சேர்த்து தியானியுங்கள். அச்சிவன் நம் உடம்பில் எழுதா எழுத்தாகவும், அணி அரங்கமான அழகிய சிற்றம்பலத்தில் சோதியாக உள்ளான். அதனை அறிந்து அவனையே நினைந்து வெம்பி வெம்பி அழுது உன் உயிரும் ஊணும்  உருக உணர்ந்து தியானம் செய்து வாருங்கள். செம்பினில் களிம்பு போனால் தங்கமாவது போல் நீயும் பாவங்கள் நீங்கி இறைவனோடு சேர்ந்து இன்புறலாம்.


சிவவாக்கியம் - 157 

நாடி நாடி நம்முளே நயந்து காண வல்லிரேல்
ஓடி ஓடி மீளுவார்  உம்முளே அடங்கிடும்
தேடி வந்த காலனும் திகைத்திருந்து போய்விடும்
கோடி காலமும் உகந்து இருந்தவாறு எங்ஙனே!

இறைவனை அடைவதற்கான வழி, அவனையே நாடி அவன் புகழைப் பாடி அவனை நயந்து தேடி நமக்குள்ளேயே கண்டு கொண்டு, யோகமும் தியானமும் பழகவேண்டும். அதனால் நம்மில் இருந்து வெளியேறி ஓடும் மூச்சு நமக்குள்ளேயே ஒடுங்கி பிராணசக்தி கூடி உயிரிலேயே   அடங்கிடும். இப்படியே தினமும் செய்ய வல்லவர்களுக்கு ஆயுள் கூடி தேடி வரும். எமனே திகைத்து திரும்பிடுவான், அவர்கள் கல்பகோடி காலமும் ஈசனோடு உகந்து இருப்பார்கள். ஆகவே யோக ஞான சாதனங்களைக் கைக்கொண்டு பிறவாநிலை பெறுங்கள்.


சிவவாக்கியம் - 158 

பிணங்குகின்றது ஏதடா பிரஞ்ஞை கெட்ட மூடரே
பினங்கிலாத பேரொளி பிராணனை அறிகிலீர்
பிணங்கும் ஓர் இருவினைப் பிணக்கு அறுக்க வல்லீரே
பிணங்கிலாத பெரிய இன்பம் பெற்றிருக்கலாகுமே!!!

கோபம் கொள்வது ஏது என்பதை உணராத மூடரே!! சாந்தமான பேரொளியாக ஈசன் உன் பிராணனில் இருப்பதை அறியாமல் இருக்கிறீர்கள். இவ்வுலகில் பிறக்க வைக்கும் நல்வினை, தீவினை எனும் இரு வினைகளை யோக ஞானத்தால் பிணக்கு அறுத்து தியானம் செய்ய வல்லவர்கலானால் ஈசன் அருளால் பேரின்பம் பெற்று மரணமில்லா பெருவாழ்வில் இருக்கலாகுமே.


சிவவாக்கியம் - 159 

மீன் இறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர்
மீன் இருக்கும் நீரல்லோ மூழ்வதும் குடிப்பதும்
மான் யாரிச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர்
மானுரித்த தோலலோ மார்பு நூல் அணிவதும்.

மீன் இறைச்சி வேதம் ஓதும் பிராமணர்கள் எப்போதும் உண்பதில்லை. அசைவத்தை உண்பதால் அசுத்தம் வந்துவிடும் என்றிடும் அவர்கள் மீன் இருக்கும் நீரில்தான் குளிக்கின்றார்கள், அதையேதான் குடிக்கின்றார்கள். தின்னாமல் குடிப்பதில் மட்டும் சுத்தமாகிவிடுமா? மான் இறைச்சியை உண்பதில்லை என்று சொல்லும் பிராமணர்கள் அந்த மானை உரித்த தோலில் பூணூல் அணிகின்றார்களே, இறைச்சி உண்ணாமல் இருப்பதால் மட்டும் இறைவனை அடையமுடியாது. சுத்தம் என்பது அவரவர் எண்ணத்தில்தான் இருக்கின்றது.


சிவவாக்கியம் - 160 

ஆட்டிறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர்
ஆட்டிறைச்சி அல்லவோ யாகம் நீங்கள் ஆற்றலே
மாட்டிறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர்
மாட்டிறைச்சி அல்லவோ மரக்கறிக் கிடுவது.

ஆட்டின் இறைச்சியை அந்தணர்கள் உண்பதில்லை. ஆனால் ஆட்டை பள்ளியிட்டு அவ்விறைச்சியை யாகத்தில் போட்டு செய்வது ஏன்? அக்காலத்தில் யாகங்களில் ஆட்டிறைச்சியை இட்டு செய்தார்கள் வேதியர்கள், இக்காலத்தில் மாட்டின் பாலிலிருந்து உண்டான நெய்யினை இட்டு செய்கின்றார்கள். மாட்டிறைச்சி தின்பதில்லை வேதியர்கள், ஆனால் அவர்கள் உண்ணும் காய்கறிகளுக்குப் போடுவது மாட்டிறைச்சியே. உணவுப் பழக்கத்தினாலோ, ஆசார அனுட்டனங் கலாலோ இறைவனை அடைந்து விடமுடியாது.


சிவவாக்கியம் - 161 

அக்கிடீர் அனைத்துயிர்க்கும் ஆதியாகி நிற்பதும்
முக்கிடீர் உமைப்பிடித்து முத்தரித்து விட்டதும்
மிக்கிடில் பிறந்து இறந்து மாண்டு மாண்டு போவதும்
ஒக்கிடில் உமக்கு நான் உணர்த்து வித்தது உண்மையே!

(அக்கிடீர்=நீரும், நெருப்பும்) ஆதியாக உள்ள மெய்ப்பொருளே அனைத்து உயிர்களிலும் நீராகவும், நெருப்பாகவும் இருக்கின்றது. அதுவே உங்களிடம் அறிவு, உணர்வு, மனம் என்று மூன்றாக தரித்து முப்பொருளாய் உணராது இப்பூமியில் பிறந்து இறந்து பிறந்து மாண்டு போகிறார்கள். ஆகவே மெய்ப்பொருளை அறிந்து அதையே ஒத்து தியானம் செய்வதுவே இப்பிறவித் தளையிலிருந்து ஆன்மா விடுதலை அடைவதற்கான வழி என நான் உங்களுக்கு உணர்த்துவிக்கும் உண்மையாகும்.

 
சிவவாக்கியம் - 162 

ஐயன் வந்து மெய்யகம் புகுந்தவாறது எங்ஙகனே
செய்ய தெங்கு இளங்குரும்பை நீர் புகுந்த வண்ணமே
ஐயன் வந்து மெய்யகம் புகுந்து கோயில் கொண்ட பின்
வையத்தில் மாந்தரோடு வாய் திறப்பது இல்லையே!

ஈசன் ஏன் உடன்பின் உள்ளே புகுந்தது எங்ஙகனமெனில் தென்னை மரத்தின் மேலே இளங் குரும்பையில் நீர் புகுந்து இருப்பது போலத்தான். இறைவன் என் மெய்யாகிய உடம்பில் உள்ளமாகிய கோயிலில் உறைவதை நான் அறிந்து கொண்டபின் அந்த மெய்ப்பொருள் நாட்டத்திலேயே ஒன்றி தியானம் செய்வதைத் தவிர வேறு எண்ணம் ஏதுமில்லையே. ஆதலால் இவ்வுலகில் மதத்தாலும், இனத்தாலும், சாதியாலும் பிரிந்து தீங்கையே செய்து தீவினைகளை சேர்த்துக் கொண்டு இறக்கப் போகும் மாந்தர்களோடு நான் வாய் திறந்து பேசுவதில்லை.

 
சிவவாக்கியம் - 163
 
நவ்வு மவ்வையும் கடந்து நாடொணாத சியின் மேல்
வவ்வு யவ்வுளும் சிறந்த வன்மை ஞான போதகம்
ஒவ்வு சுத்தியுள் நிறைந்து உச்சியூடுருவியே      
இவ்வகை அறிந்த பேர்கள் ஈசன் ஆணை ஈசனே!

அஞ்செழுத்தில் 'ந' என்ற சுவாதிட்டானத்தையும், 'ம' என்ற மணிப்பூரகத்தையும் கடந்து அனாகத்தில் உள்ள 'சி' யின் மேல் இருக்கும் விசுத்தியில் 'வ'வும் ஆஞ்ஞாவில் 'ய' வும் ஓதி உணரவேண்டும். இந்த நமசிவய என்ற அஞ்செழுத்து நம் உடம்பில் மண், நீர், தீ, காற்று, ஆகாயம் என்ற பஞ்சபூதங்களாக இருப்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். மூலாதாரத்தில் 'ஓம்' என்ற அட்சரத்தால் குண்டலினி சக்தியை, வாசியால் மேலேற்றி நினைவால் "ஓம் நமசிவய" என்று ஓதி ஒவ்வொரு சக்கரத்திலும் அதற்குறிய  எழுத்தை நிறுத்தி அப்பியாசித்து வரவேண்டும். தூலத்தில் "ஓம் நமசிவய" எனும் இந்த பஞ்சாட்சரமே உள்ளே சூட்சுமமாகவும் எல்லா வல்லமையும் உள்ள சிறந்த ஞான போதப் பொருளாக இருக்கிறது. அதுவே உச்சியில் உள்ள மெய்ப் பொருள். இதற்குள் ஈசன் சோதியாக இருப்பதை உணர்ந்து "சிவயநம ஓம்" என்ற பஞ்சாட்சரத்தை அங்கு நிறுத்தி தியானிக்க வேண்டும். இப்படி மூலாதாரத்தில்  இருந்து உச்சி வரை முதுகுத்தண்டின் வழியாக ஊடுருவி வாசியை மெய்ப் பொருளில் உள்ள சோதியில் சேர்க்கவேண்டும். "ஓம் நமசிவய" என்ற பஞ்சாட்சரமே நம் உடம்பில் தூலமாகவும், உயிரில் சூட்சுமமாகவும் இருப்பதை அறிந்து இந்த யோக ஞானத்தை உணர்ந்து தவம் புரிபவர்கள் ஈசனாகவே ஆவார்கள்!! இது அந்த பஞ்சாட்சரமாக விளங்கும் ஈசன் மீது ஆணை.

 
சிவவாக்கியம் - 164 

அக்கரம் அன்னதியோ ஆத்துமம் அனாதியோ
புக்கிருந்த பூதமும் புலன்களும் அனாதியோ
தர்க்கமிக்க நூல்களும் சாத்திரம் அனாதியோ
தற்பரத்தை ஊடறுத்த சற்குரு அனாதியோ!

அட்சரங்களாக இருக்கும் மந்திரங்கள், ஆன்மா எனும் உயிர், உலகத்தில் உள்ள பஞ்சபூதங்கள், உடலில் உள்ள ஐம்புலன்கள், தத்துவங்களை அலசி ஆராய்ந்து இயற்றிய நூல்கள், வேத சாஸ்திரங்கள் ஆகியவைகள் யாவும் அனாதியாக என்றும், எங்கும், எப்போதும் இருப்பது. இவற்றின் அனைத்து நுட்பங்களும் நமக்குள்ளேயே தற்பரமாக விளங்கும் சற்குருவான ஈசனே அநாதி என்பதனை அறிந்து தியானியுங்கள்.

 
சிவவாக்கியம் - 165
 
பார்த்ததேது பார்த்திடில் பார்வையூடழிந்திடும்
கூர்த்ததாய் இருப்பிரேல் குறிப்பில் அச்சிவம் அதாம்
பார்த்த பார்த்த போதெலாம் பார்வையும் இகந்துநீர்
பூத்த பூத்த காயுமாய் பொருந்துவீர் பிறப்பிலே!

எல்லாவற்றையும் பார்த்தது எது என்பதை அறிந்து, அதையே பார்த்து தியானிக்க பார்வை ஒடுங்கி, அகக்கண் திறந்திடும். அதையே குறியாகக் கொண்டு மெய்ப்பொருளை உணர்ந்து சுழுமுனையில் கூர்மையான நினைவை குவித்திருந்தால் சோதியைக் காணலாம். அதுவே சிவம் ஆகும். ஆகவே தியானம் செய்யும் போதெல்லாம் பார்ப்பானையே பார்த்திரு. அதை விடுத்து நினைவை பல இடங்களில் வைத்து, பார்வையை பலவிதங்களில் செலுத்தி தியானத்தை இகழ்ந்து மறந்தால் நீங்கள் மீண்டும் பூத்த பூவும் காயுமாய் பிறப்பிறப்பில் உழலுவீர்.

 
சிவவாக்கியம் - 166

நெற்றி பற்றி உழலுகின்ற நீலமா விளக்கினைப்
பற்றி ஒற்றி நின்று நின்று பற்றறுத்து என்பலன்
உற்றிருந்து பாரடா உள்ளொளிக்கு மேல் ஒளி
அத்தனார் அமர்ந்திடம் அறிந்தவன் அனாதியே!

நெற்றியைப் பற்றி உழன்று கொண்டிருக்கின்ற ஒரு நீல நிறம் உடைய விளக்கை குறு தொட்டுக் காட்ட உணர்ந்து கொள்ளுங்கள். பின் அதையே பற்றி அறிவு, உணர்வு,  நினைவு என்ற மூன்றையும் ஒன்றாக்கி நின்று தியானிக்க உலகப் பற்றுக்கள் யாவும் நீங்கும். அதனால் அநேக பலன்கள் கிடைக்கும். அதுவே இறைவனை அடையும் வழி என்பதை அறிந்து அந்நீல   விளக்கையே உற்று நோக்கி தியானிக்க உள்வெளிக்குள் பரம்பொருள் ஒளி பொருந்திய சோதியாக ஒளிறும் . அதுவே ஈசன் அமர்ந்திருக்கும் இடம் என்பதை அறிந்து தவம் புரிபவர்கள் என்றும் அனாதியாக உள்ள ஈசனை அடைவார்கள்.

 
சிவவாக்கியம் - 167
 
நீரை அள்ளி நீரில்விட்டு நீ நினைந்த காரியம்
ஆரை உன்னி நீரெல்லாம் அவத்திலே இறைக்கிறீர்
வேரை உன்னி வித்தை உன்னி வித்திலே முளைத்தெழுந்த
சீரை உன்ன வல்லிரேல் சிவபதங்கள் சேரலாம்.

பிராமணர்கள் குளித்து முடித்த பின்னர் அந்நீரில் நின்றபடியே, மூன்று முறை தண்ணீரை கைகளில் அள்ளி அத் தண்ணீரிலேயே மந்திரங்களை முணுமுணுத்து விடுவார்கள்.  இதற்கு வாக்கு, மனம், செயல் என்ற மூன்றையும் திரிகரண சுத்தி செய்வதாகச் சொல்லுவார்கள். இவையெல்லாம் இறைவனுக்கே செய்கின்ற சடங்குகள் தானே!! இதனால் இறைவனை அடைய முடியுமா? உனக்குள்ளேயே வேராக இருக்கும் ஆன்மாவையும், வித்தாக இருக்கும் இறைவனையும் அறிந்த அதிலேயே முளைத்து எழுகின்ற சிகரத்தை உணர்ந்து 'சிவயநம' என்று உனக்குள் பரவச் செய்து தியானம் செய்ய வல்லவர்களானால் சிவத்தின் திருவடியில் சேரலாம்.


சிவவாக்கியம் - 168
 
நெற்றியில் தியங்குகின்ற நீலமா விளக்கினை
உய்த்துணர்ந்து பாரடா உள்ளிருந்த சோதியை
பத்தியில் தொடர்ந்தவர் பராமயம் அதானவர்
அத்தளத்தில் இருந்த பேர்கள் அவர் எனக்கு நாதரே!!!

விளக்கில் எரியும் தீபத்தை உற்றுப் பார்த்தால் அதன் நடுவில் நீல நிறம் பொருந்திய ஒளி வீசுவதை உணரலாம். அதுபோல நமது நெற்றியில் இயங்கிக் கொண்டிருக்கின்ற நீல நிறமாக விளங்கிக்கொண்டிருக்கும் ஆன்மாவை அறிந்து கொள்ளுங்கள். அதுவே இப்பிறவி உய்யும் வழி என உணர்ந்து அதன் உள்ளேயே அருட்பெருஞ் ஜோதியாகி விளங்கும் ஈசனைத் தியானித்துப் பாருங்கள். அவரே அனைத்திற்கும் நாதன் என்பதை உணர்ந்து, பக்தியால் பாடியும், ஆடியும் கண்ணீர்விட்டு கசிந்து தொடர்ந்து தியானியுங்கள். நீங்களே அப்பறம்போருளாக ஆவீர்கள். அதிலேயே இருந்து தியானமும் தவமும் செய்பவர்கள் எனக்கும் குருநாதன் அவார்கள். 


சிவவாக்கியம் - 169
 
கருத்தரிக்கும் முன்னெலாம் காயம் நின்றது எவ்விடம்
உருத்தரிக்கும் முன்னெலாம் உயிர்ப்பு நின்றது எவ்விடம்
அருள்தரிக்கும் முன்னெலாம் ஆசை நின்றது எவ்விடம்
திருக்கறுத்துக் கொண்டதே சிவாயம் என்று கூறுவீர்!!!

தாயின் வயிற்றில் கருவாக தரிப்பதற்கு முன்பு உடம்பு எங்கு எவ்வாறு இருந்தது. உருவாக்கி வளர்வதற்கு முன்பு உயிர் இருந்த இடன் எது. இறை அருள் கிடைப்பதற்கு முன்பு ஆசைகளின் மனம் நின்றது எவ்விடம் என்பதை, யாவும் சந்தேகங்கள் ஏதுமின்றி திருக்கமுடன் தெரிந்த கொண்டு 'சிவயநம' என்ற அஞ்செழுத்தாக இருப்பதை அறிந்து கொண்டு பஞ்சாட்சரத்தை சொல்லி தியானியுங்கள்.


சிவவாக்கியம் - 170
 
கருத்தரிக்கு முன்னெலாம் காயம் நின்றது தேயுவில்
உருத்தரிக்கு முன்னெலாம் உயிர்ப்பு நின்றது அப்புவில்
அருள் தரிக்கு முன்னெலாம் ஆசை நின்றது வாயுவில்
திருக்கறுத்துக் கொண்டதே சிவாயம் என்று கூறுவீர்.

ஆகாயத்திலிருந்து ஆன்மா கருத்தரிக்கும் முன்பு காயமான உடம்பு, தாய் தகப்பனின் உஷ்ணத்தில் தீயாக நின்றிருந்தது. உருவாக ஆவதற்கு முன்பு உயிர் சுக்கில சுரோனித நீராகி நின்றது. இறை அருளால் உயிர் உடம்பாகி வெளிவருவதற்கு முன்பு மனமானது ஆசையாக காற்றில் நின்றது. பின் தாயின் கருவறை என்ற மண்ணில் சிசுவாக வளர்ந்து உடலுயிராய் பிறவி வந்தது என்பதை திருத்தமாக தெரிந்துகொண்டு 'சிவயநம' என்ற பஞ்சாட்சரத்தை உணர்ந்து சொல்லி தியானம் செய்யுங்கள்.


சிவவாக்கியம் - 171 

தாதர் செய் தீமையும் தலத்தில்செய் கீழ்மையும்
கூத்தருக்கு கடைமக்கள் கூடி செய்த காரியம்
வீதி போகும் ஞானியை விரைந்து கல் எறிந்ததும்
பாதகங்கள் ஆகவே பலித்ததே சிவாயமே!

மக்கள் தொண்டு மகேசன் தொண்டு என்று தொண்டு செய்ய வந்தவர்கள் சுயநலமாக செய்யும் தீமைகளும், தலம் எனப்படும் கோயில், பள்ளி, ஆஸ்ரமம் போன்ற அறச்சாலைகளில் நடக்கும் கீழான செயல்களும், கூத்தாடிப் பிழைப்பவர்க்கு இழிவான கடைமக்கள் கூடிச் செய்கின்ற தீங்கும், வீதி வழியாகப் போகும் ஞானியை பழித்துரைத்துக் கல்லால் எரிந்து அடித்ததும் தப்பாமல் திரும்பி வந்து அவர்களுக்கு பாதகங்கள் ஆகவே பலித்து,  துன்புற்று சாவார்கள். நீங்கள் செய்த பழிபாவங்கள் நீங்க 'சிவயநம' என்ற அஞ்செழுத்தை ஓதி பாதகங்கள் செய்யாது வாழுங்கள்.

 
சிவவாக்கியம் - 172
 
ஓடி ஓடி பாவிழைத்து உள்ளங்கால் வெளுத்ததும்
பாவியான பூனை வந்து பாவிலே குதித்ததும்
பணிக்கன் வந்து பார்த்ததும் பாரம் இல்லை என்றதும்
இழை அறுந்து போனதும் என்ன மாயம் ஈசனே!!

நெசவு நெய்யும் பாவைப்போல அங்கும் இங்கும் ஓடியோடி உழைத்து மூச்சானது ஓடி ஒய்ந்து உயிர்போகின்ற தருனஹ்தில் உங்கள் உள்ளங்கால் வெளுத்து படுக்கையில் படுத்ததும் அச்சமயம் ஓடிய நேசவுப்பாவிலே பூனை வந்து குதித்ததும், பாவிழை அறுந்து போவது போல, எமன் வந்து உயிரை எடுத்துப் போவது போனதும் மூச்சு நின்றதும், மருத்துவன் வந்து பார்த்து உயிர் போய்விட்டது என்பதும், பாவிலே நூல் இழை அறுந்து தறி ஓட்டம் நின்றுபோவது போலவே உடம்பைவிட்டு உயிர் மூச்சு நின்று போவது யாவும் உன்மாயமே ஈசனே!! 

 
சிவவாக்கியம் - 173
 
சதுரம் நாலு மறையும் எட்டுதான தங்கி மூன்றுமே
எதிரத்தான வாயு ஆறு என்னும் வட்ட மேவியே
உதிரந்தான் வரிகள் எட்டும் என்னும் என் சிரசின் மேல்
கதிரதான காயகத்தில் கலந்தேழுந்த நாதமே!!

சதுரம் எனப்படும் நான்கு வேதங்களும் எண்சான் உடம்பிலே தங்கி, மூன்றான ஓங்காரமாய் இருக்கின்றது. அதையே பிரனவமாக்கி மூன்றெழுத்தால் ஆறு ஆதார வட்டங்களிலும் வாசியினால் மேலேற்றிப் பயில வேண்டும். உயிரிலிருந்தே உதிரங்கள் எட்டாகிய உடம்பு முழுவதும் ஓடிக் கொண்டிருப்பதை உணர்ந்து அகார, உகாரத்தை உயிரில் அறிந்து சிரசு எனும் தலை உச்சியில் சூரியனாக இருக்கும் சூட்சும உடம்பில் சுழுமுனையில் அவ்வாசியினைச் சேர்க்க நாத ஒலி கேட்டுக்கொண்டே இருக்கும். 

 
சிவவாக்கியம் - 174
 
நாலொடாறு பத்து மேல் நாலு மூன்றும் இட்டபின்
மேலு பத்து மாறுடனூமே திரண்ட தொன்றுமே
கோழி அஞ்ச்செழுத்துடே குருவிருந்து கூறிடில்
தொழு மேனி நாதமாய்த் தோற்றி நின்ற கோசமே

மூலாதாரத்தில் நான்கு இதழ் கமலமாகவும் 'ஓம்' என்ற மூன்று எழுத்தாகவும், சுவாதிட்டானத்தில் ஆறு இதழ் கமலமாகவும் 'ந' என்ற மண் பூதமாகவும், மணிப் பூரகத்தில் பத்து இதழ் கமலமாகவும் 'ம' என்ற நீர்பூதமாகவும், அனாகத்தில் பனிரெண்டு இதழ் கமலமாகவும் 'சி' என்ற நெருப்பு பூதமாகவும், விசுத்தியில் பதினாறு இதழ் கமலமாகவும் 'வ' என்ற காற்றுப் பூதமாகவும், ஆஞ்ஞாவில் இரண்டு இதழ் கமலமாகவும் 'ய' என்ற ஆகாயப் பூதமாகவும் உயிர் ஒன்றாகவும் உங்கள் உடம்பில் அஞ்செழுத்து அமைந்துள்ளது. இதனை உண்மையான குறு விரும்பி உபதேசித்து அதை உன் உடம்பிலேயே உணர்ந்து உபாசித்தால் நாத ஒலித் தோன்றும். அந்த நாதம் 'ஓம் நமசிவய' கோசமாக எழுந்து நிற்கும்.   

 
சிவவாக்கியம் - 175
 
கோஷமாய் எழுந்ததும் கூடுருவி நின்றதும் தேசமாய்
பிறந்ததும் சிவாயம் அஞ்செழுத்துமே
ஈசனார் இருந்திடம் அனேக னேகே மந்திரம்
ஆசனம் நிரந்து நின்ற ஐம்பத்தோர் எழுத்துமே!

ஐயும், கிலியும், சவ்வும், றீயும், ஸ்ரீயும் என்ற கோச அட்சரங்களாக எழுந்து கூடாகிய உடலுக்குள் ஊடுருவி நின்று இத்தேசத்தில் தேகம் எடுத்து பிறந்ததும் 'நமசிவய' என்ற அஞ்செழுத்து மந்திரத் தத்துவத்தாலே தானே. சோதியான ஈசனையும், அவன் நம் உடம்பில் தற்பரமாய் நின்ற இடத்தையும் தான், அனைத்து மந்திரங்களும் வேதங்களும் சொல்கின்றது. அதனை ஐந்து ஐந்து கட்டங்களாக வரைந்து 'நமசிவய'  என்ற அஞ்செழுத்தின் பீஜ அட்சரமாக அ, இ, உ, எ, ஒ என்ற எழுத்தையும் கோச அட்சரங்களால் ஐயும், கிலியும், சவ்வும், றீயும், ஸ்ரீயும் எழுத்தையும் அமைத்து 9, 11, 4, 15, 12 என்ற என்னையும் கொடுத்து அது மொத்தம் ஐம்பத்தொன்று என்பதையே ஐம்பத்தோர் அட்சரம் என்பார்கள்.  

 
சிவவாக்கியம் - 176
 
அங்கலிங்க பீடமாய் ஐம்பத்தோர் எழுத்திலும்
பொங்கு தாமரையிலும் பொருந்துவார் அகத்திலும்
பங்கு கொண்ட சோதியும் பரந்த அஞ்செழுத்துமே
சிங்கநாத ஓசையும் சிவாயம் அல்லது இல்லையே!!

உடம்பில் உள்ள அங்கத்தை பீடமாக இலிங்கமே ஐம்பத்தொரு அட்சரமாக உள்ளது. சகஸ்ரார தலமான தாமரையில் மனதை நிறுத்தி தியானத்தில் பொருந்துவார்கள் அகத்தில் சக்தியும் சிவனுமாய் பக்குகொண்டிருக்கும் சோதியாக பரந்து இருப்பதும் பஞ்சாட்சரமே! இந்த அஞ்செழுத்தில் சிகரமாகும் நாத ஒளியாகவும் இருப்பதும் பஞ்சாட்சரமே. இதை அறிந்துணர்ந்து ஒலியையும், ஒளியையும் ஒன்றாக்கி தியானியுங்கள்.    

 
சிவவாக்கியம் - 177 

உவமையிலாப் பேரொளிக்குள் உருவமானது எவ்விடம்?
உவமையாக்கி அண்டத்தில் உருவி நின்றது எவ்விடம்?
தவம்தான பரமனார் தரித்து நின்றது எவ்விடம்?
தற்பரத்தில் சலம் பிறந்து தாங்கி நின்றது எவ்விடம்?
 
எதனோடும் ஒப்பிடமுடியாத தனித்தன்மையான பேரொளி நம்முள் உருவமாக நிற்பது எவ்விடம்? ஆகாயத்திற்கு உவமையான மனம் அண்டத்திலும் பிண்டத்திலும் அமைந்திருப்பது எந்த இடம்? தவத்திற்கு உரிமையான பரமனார் மெய்ப்பொருளாய் தரித்து நின்றது எந்த இடம்? தன் உடம்பில் நீராக நின்று தாங்கி தற்பரமாய் இருப்பது எந்த இடம்?

 
சிவவாக்கியம் - 178
 
சுகமதாக எருது மூன்று கன்றை ஈன்றது எவ்விடம்?
சொல்லு கீழு லோகம் ஏழும் நின்றவாறது எவ்விடம்?
அவளதான மேருவும் அம்மைதானது எவ்விடம்/
அவனும் அவளும் ஆடலாம் அருஞ்சீவன் பிறந்ததே!!!

மாடான மனதில்தான் புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய மூன்றும் பிறந்தது. அந்த நான்கு அந்த கரணங்களும் உடம்பில் எங்கு இருக்கின்றது. சொல்லும் வார்த்தைகள் தோன்றுவதும் ஏழு உலகங்களாக நின்றதும் அதுவாக இருப்பதும் எவ்விடம். அவளதான வாலை மேரு சக்கரமாகவும் அம்மையான மனோன்மணியாகவும் அமர்ந்திருந்தது எவ்விடம்? அவனும் அவளும் ஆடியே அருஞ்சீவன் உருவானது. எல்லாம் சிவசக்தியின் திருவிளையாடல் என்பதை புரிந்து தியானம் செய்து இச்சீவனை சிவனோடு சேருங்கள்.   .

 
சிவவாக்கியம் - 179
 
உதிக்குகின்றது எவ்விடம் ஒடுங்குகின்றது எவ்விடம்?
கதிக்குகின்றது எவ்விடம் கண்ணுறக்கம் எவ்விடம்?
மதிக்க நின்றது எவ்விடம் மதி மயக்கம் எவ்விடம்?
வித்திக்கவல்ல ஞானிகள் விரித்துரைக்க வேணுமே!

மனம் உதிப்பதும், ஒடுங்குவதும் எந்த இடம்? கதியாகிய வாசி இருப்பது எந்த இடம்? கண்ணுறக்கம் கொள்வது எந்த இடம்? யாவரும் மதின்க்கும்படி நின்றது எவ்விடம்? மதியாகிய அறிவும் மயக்கமான மாயையும் தோன்றிய இடம் எது என்பதையெல்லாம் விதியை வெல்ல ஞானம் போதிக்க வந்த குருமார்களே!! சீடர்கள் ஆறியும் வண்ணம் விரிவாக எடுத்துச் சொல்ல வேண்டும்.

 
சிவவாக்கியம் - 180 
 
திரும்பி ஆடு வாசல் எட்டு திறம் உரைத்த வாசல் எட்டு
மருந்கிலாத கோலம் எட்டு வன்னியோடு வாசல் எட்டு
துரும்பிலாத கோலம் எட்டு சுற்றி வந்த மருளரே
அரும்பிலாத பூவும் உண்டு ஐயன் ஆணை உண்மையே!

மீண்டும் மீண்டும் இப்பூவுலகில் பிறந்திறந்து உழலும் உடல் எண்சான் அளவே. அந்த எட்டான உடலில் திறமாக செயல்படும் உயிர் எட்டாகிய ஆகாரத்தின் வாசலில் உள்ளது. அது ஆகாயமான எட்டாகி இருக்கும் கோலமும் அதிலே வன்னி எனும் தீயாக ஈசன் இருந்து ஆடும் இடம் அகாரம். அந்த எட்டான அகாரத்தில் ஒரு தூசோ, துரும்போ அண்டாது. பரிசுத்தமான கோலமாய் உள்ள இடமாகிய அகாரத்தில்தான் சோதி உள்ளது. இதனை யாவும் எட்டாக விளங்கும் தன் உடம்பிலே காணாமல் வேறு எங்கெங்கோ சுற்றி வருகின்ற மருள் பிடித்த மனிதர்களே! அரும்போ, மோட்டோ இல்லாத பூவாக உன் ஆன்மா உனக்குள் இருப்பதை உணர்ந்து அதிலேயே தியானித்து பிறவா நிலை பெற வாருங்கள். இது என் ஐயன் மீது ஆணையிட்டு உண்மையாகச் சொல்லுகின்றேன்.


சிவவாக்கியம் - 181 

தானிருந்து மூல அங்கி தணல் எழுப்பி வாயுவால்
தேனிருந்து அறை திறந்து தித்தி ஒன்று ஒத்தவே
வானிருந்து மதிய மூன்று மண்டலம் புகுந்த பின்
ஊனிருந் தளவு கொண்ட யோகி நல்ல யோகியே!!  

யோக ஞான சாதகத்தால் உடம்பில் உள்ள மூலாதாரத்தில் தீயாக இருக்கும் குண்டலினியை அங்கிருக்கும் தனஞ்செயன் என்ற பத்தாவது வாயுவால் வாசியை மேலே எழுப்பி கபாலத்தில் உள்ள கோழையை அகற்றி அமிர்தம் உண்ணவேண்டும். அது தேனைப் போல ஆயிரம் மடங்கு தித்திப்பைக் கொடுப்பது. ஆகாயத்தாமரையில் உள்ள இவ்வமுதத்தை வாசியோகத்தால் கறந்து சந்திர மண்டலம், ஆதித்த மண்டலம், அக்னி மண்டலம் ஆகிய மூன்று மண்டலத்திலும் கரைத்து தம் உடம்பில் தினந்தோறும் அளவுடன் சேர்க்கும் யோகிகள் நல்ல யோகிகளே!!! 

 
சிவவாக்கியம் - 182 

முத்தனாய் நினைந்த போது முடிந்த அண்டத்துச்சிமேல்
பத்தனாரும் அம்மையும் பரிந்து ஆடல் ஆடினார்
சித்தரான ஞானிகாள் தில்லை ஆடல் என்பீர்காள்
அத்தன் ஆடல் உற்றபோது அடங்கல் ஆடல் உற்றவே. 

முக்தியைப் பெற நினைத்து முனைந்து தியானம் புரிகின்ற போது ஆதி அந்தமாக முடிந்த ஆகாயத் தாமரையின் உச்சியில் அப்பனும், அம்மையும் பரிவுடன் நடனம் ஆடுவதை அறியலாம். இதனை தவம் முடித்த சித்தர்களும், ஞானிகளும் தனக்குள் நின்று பரம்பொருள் ஆடுவதையே தில்லையில் ஈசனுக்கும் ஈஸ்வரிக்கும் நடந்த ஆட்டம் இதுவே என்பார்கள். இந்த வண்ணம் உடலில் நின்று ஆட்டுவிக்கும் அம்மை அப்பன் ஆட்டம் நின்று போனால் உயிர் பொய் உடம்பு ஆடிய ஆட்டம் எல்லாம் அடங்கிவிடும். ஆகவே இதனை நன்கு அறிந்துணர்ந்து நினைந்து தியானியுங்கள். 

 
சிவவாக்கியம் - 183 

ஒன்றும் ஒன்றும் ஒன்றுமே உலகனைத்தும் ஒன்றுமே
அன்றும் இன்றும் ஒன்றுமே அநாதியானது ஒன்றுமே
கன்றல் நின்ற செம்பொனைக் களிம்பருத்து நாட்டினால்
அன்று தெய்வம் உம்முளே அறிந்ததே சிவாயமே!!! 

சக்தியும் சிவனும் ஒன்றாகி இந்த உலகம் அனைத்திலும் ஒன்றான சிவமே எல்லாமாய் இருக்கின்றது. இதனை சக்தியாகிய உடலையும் சிவனாகிய உயிரையும் ஒன்றில் ஒன்றாக்கி ஒன்றி தியானித்து சிவம் ஆகிய மெய்ப்பொருளை உணர்ந்து கொள்ளுங்கள். அன்றும் இன்றும் ஒன்றே தெய்வம். ஒருவனே தேவன். அவன் அனாதியாக என்றும் எப்போதும் நிலையான ஒன்றாக இருப்பவன். என்றும் இளமை மாறாமல் நின்ற செம்பொன்னம்பலத்தைக் கண்டு செம்பில் களிம்பருத்து பொன்னாக்குவது போல் நீங்கள் செய்த பாவங்கள் யாவையும் நீக்கி சோதியில் மனதை நாட்டி தியானித்தால் அப்போதே தெய்வம் உமக்குள்ளே இருப்பதை அறிவீர்கள். அது சிவம் என்று. (கன்றல் - இளமை) 

 
சிவவாக்கியம் - 184 

நட்ட தாவரங்களும் நவின்ற சாத்திரங்களும்
இட்டமான ஓமகுண்டம் இசைந்த நாலு வேதங்களும்
கட்டி வைத்த புத்தகம் கடும்பிதற்று இதற்கெலாம்
பொட்டதாய் முடிந்ததே பிரானை யான் அறிந்தபின்!

மரம் நடுவது போன்ற புண்ணியச் செயல்களும், தர்ம சாஸ்திரங்கள் சொல்லும் உயர்ந்த பரம் பொருளும், ஹோமங்கள் செய்ய அமைத்த யோனி குண்டங்களும், வேள்வியில் ஓதுகின்ற நான்கு வேத மந்திரங்களும், மிகவும் முக்கியமான நூல்கள் என்று பாதுகாத்து வைக்கும் புத்தகங்களும், ஞானியர் உபதேசிக்கும் யோக ஞானங்களும், அது பெரியது இது பெரியது என செய்யும் வாதங்களும் ஆகிய இவைகள் யாவுமே என் உடம்பில் பொட்டாக விளங்கும் பிரம்மத்தையே போதிக்கின்றது என்பதையே என் பிரானாகிய ஈசனை அறிந்தபின் யான் தெளிந்து உணர்ந்து கொண்டேன்.

 
சிவவாக்கியம் - 185
 
வட்டமான கூட்டிலே வளர்ந்தெழுந்த அம்புலி
சட்டமீ படைத்திலே சங்கு சக்கரங்களாய்
விட்டது அஞ்சுவாசலில் கதவினால் அடைத்த பின்
முட்டையில் எழுந்த சீவன் விட்டவாறது எங்ஙனே?

உடம்பாகிய கூட்டுக்குள்ளே வட்டமான பூரண நிலவாக வளர்ந்து எழுந்து நிற்கின்றது பிரமம். அதுவே இப்பூமியெங்கும் சங்கு சக்கரங்களாக திகழ்கின்றது. இதனை அறிந்து ஐம்புலன்களையும் அஞ்செழுத்தால் அடக்கி அண்டமாக விளங்கும் முட்டையில் எழுந்துள்ள உயிராகிய சீவனை சிவனுடன் சேருங்கள். இறவா நிலையடைந்து இறைவனுடன் இரண்டறக் கலந்து பேரின்பம் பெறலாம். 

 
சிவவாக்கியம் - 186

கோயில் பள்ளி ஏதடா குறித்து நின்றது ஏதடா
வாயினால் தொழுது நின்ற மந்திரங்கள் ஏதடா
ஞானமான பள்ளியில் நன்மையாய் வணங்கினால்
காயமான பள்ளியில் காணலாம் இறையையே!!!

கோயில் என்பதும் மெய் கல்வி கற்க வேண்டிய பள்ளி என்பதும் எது? மெய்ப்பொருளை குறித்து நின்றது எது? கோயில் என்ன்பது இறைவனை தொழுவதற்கும் பள்ளி என்பது arivai வளக்கவும் உள்ள இடங்களே! வெறும் வாயினால் மட்டும் சொல்லுன் மந்திரங்களால் மட்டுமே இறைவனைக் காண முடியுமா? இறைவனும் அறிவும் கோயிலாகவும் பள்ளியாகவும் உங்கள் உள்ளத்தில் உறைவதை உணருங்கள். யோக ஞானத்தால் அதனை அறிந்து இறை நாட்டத்துடன் நன்மையாய் வணங்கி மந்திரங்களைச் செபித்து தியானித்தால் இறைவனைக் காணலாம். 

 
சிவவாக்கியம் - 187 
 
நல்ல வெள்ளி ஆறதாய் நயந்த செம்பு நாலதாய்
கொள்ளு நாகம் மூன்றதாய் கலாவு செம்பொன் இறந்ததாய்
வில்லின் ஓசை ஒன்றுடன் விளங்க ஊதா வல்லிரேல்
எல்லை ஒத்த சொதியானை எட்டு மாற்ற தாகுமே!!!

நல்ல வெள்ளி ஆறுபங்கும், செம்பு நாலு பங்கும், துத்தநாகம் மூன்று பங்கும், தங்கம் இரண்டு பங்கும் சேர்ந்து துருத்தி கொண்டு ஊத்தி உருக்கினால் அது எட்டு மாற்றுத் தங்கமாகும் என்று பொருள் கண்டு ஏமாந்தது போனவர்கள் அநேகர். நான்கு இதழ் கமலமான மூலாதாரத்தில் உள்ள குண்ட்டளினியை மனம், புத்தி, அகங்காரம், சித்தம் என்ற நான்கு அந்த கரணங்களாலும் இணைத்து ஆனவம், கன்மம், மாயை என்ற மூன்று மலங்களையும் நீக்கி, நம்முள் செம்பொன்னம்பலமாக விளங்கும் சோதியில் அகாரம், உகாரம் என்ற எட்டிரண்டால் வாசியை வில்லில் இருந்து அம்புவிடும் போது தோன்றும் 'ம்' என்ற ஓசை லயத்துடன் உண்மை விளங்கி ஊதா வல்லவர்கலானால் ஆறு ஆதாரங்களையும் கடந்து அப்பாலாய் சோதியாய் நிற்கும் ஈசனிடம் சேரலாம். இப்படி யோக ஞான தியானம் செய்யும் சாதகர்களின் உடம்பு பொன் போல மின்னும். இது எல்லையில்லா அந்த பரம்பொருள் அருளால் ஆகும்.  

 
சிவவாக்கியம் - 188

மனத்தகத்து அழுக்கறாத மவுன ஞான யோகிகாள்
வனத்தகத்து இருக்கினும் மனத்தகத் அழுக்கறார்
மனத்தகத்து அழுக்கருத்த மவுன ஞானி யோகிகள்
முலைத்தடத்து இருக்கினும் பிறப்பறுத்து இருப்பரே!

மனதின் உள்ளே இருக்கும் பாவம், ஆசை எனும் மாசுகளை நீக்காமல் வாய்மூடி மவுனத்தில் இருக்கும் ஞான யோகி என்போர் காட்டிற்குள் சென்று ஆஸ்ரமம் அமைத்து இருந்தாலும், அவர்களின் மனத்தில் அழுக்கு அகலாது. காம கோப தாபங்களை விட்டு மனதின் ஆசைகளை ஒழித்து உண்மையான மவுனத்தை அறிந்த ஞான யோகியர் கலவி இன்பத்தில் பெண்ணில் முலைதடத்தில் கிடந்தாலும் அவர்களின் எண்ணம் முழுதையும் இறைவனிடத்திலேயே இருத்தி பிறப்பு இறப்பு எனும் மாயையில் சிக்காது இறைநிலை அடைவார்கள்.  

 
சிவவாக்கியம் - 189

உருவும் அல்ல ஒளியும் அல்ல ஒன்றதாகி நின்றதே
மருவும் அல்ல கந்தம் அல்ல மந்த நாடி உற்றதல்ல
பெரியதல்ல சிறியதல்ல பேசும் ஆவி தானும் அல்ல
அரியதாக நின்ற நேர்மை யாவர் காண வல்லிரே.

மெய்ப்பொருள் என்பது உருவும் அல்ல, ஒளியும் அல்ல, உருவும் ஒளியும் சேர்ந்து ஒன்றாகி நிற்பதே ! அது மருவாக இருப்பதல்ல, வாசனைப் பொருந்திய மனமாக வீசுவதல்ல, சுழுமுனை எண்டும் நாடியில் ஓடுவதல்ல. பெரியதும் அல்ல, சிறியதும் அல்ல, பேசுகின்ற ஆவியும் அல்ல. யாதுக்கும் நடுவாக இருந்து அறிவதற்கு அரியதாகி நிற்பதால் அந்த மெய்ப் பொருளை அறிந்து அதன் பெருமையை உணர்ந்து தியானித்து சோதியான ஈசனை யாவர் காண வல்லவர்கள். 

 
சிவவாக்கியம் - 190

ஒரேழுத்து உலகெலாம் உதித்த அட்சரத்துளே
ஈரெழுத்து இயம்புகின்ற இன்பமேது அறிகிலீர்
மூவெழுத்து மூவரை மூண்டெழுந்த மூர்த்தியை\
நாளேழுந்து நாவிலே நவ்வின்றதே சிவாயமே!

பிரம்மமே ஒரேழுத்து அட்சரமாக உதித்து உலகமெல்லாம் நின்று உடம்பாகியது. அதில் ஈரேழுத்தாக இயங்கும் ஒலியையும் ஒளியையும் அறிந்து அகார உகார அட்சரத்தின் உண்மையை உணர்ந்து வாசி எனும் யோக ஞானத்தால் இறை இன்பத்தை அடையும் வழியை அறியாமல் இருக்கின்றீர்கள். மூவெழுத்தான அகார, உகார, மகாரம் எனும் ஓங்காரத்தில் பிரம்மா விஷ்ணு சிவன் ஆகிய மூவராக மூண்டெழுந்த சிவத்தை நாள் தோறும் அதிகாலையில் எழுந்து மனம் மொழி மெய்யால் 'ஓம் சிவயநம' என உச்சரித்து நினைவால் நினைந்து தியானம் செய்யுங்கள்.


சிவவாக்கியம் - 191

ஆதி அந்த மூல விந்து நாதம் ஐந்து பூதமாம் 
ஆதி அந்த மூல விந்து நாதம் ஐந்து எழுத்துமாய் 
ஆதி அந்த மூல விந்து நாதம் மேவி நின்றதும் 
ஆதி அந்த மூல விந்து நாதம் சிவாயமே!!!

ஆதியான தோற்றத்திற்கும் அந்தமான முடிவிற்கும் மூலமாக இருப்பது விந்து நாதம். அதுவே ஐந்து பூதங்களாகவும் விரிந்து ஐந்து எழுத்தாகவும் அமைந்தது. அந்த நாத விந்தே ஒளியாகவும், ஒலியாகவும் நம் உடலில் மேவி நிற்கின்றது. ஆதியாகவும், அந்தமாகவும், நாதமாகவும், சிவனாகவும், சக்தியாகவும், ஒலியாகவும், ஒளியாகவும் உள்ளவை யாவுமே சிவம் என்ற பரம் பொருளால் ஆனதே!!!  

 
சிவவாக்கியம் - 192

அன்னம் இட்ட பேரெலாம் அநேக கோடி வாழவே
சொன்னம் இட்ட பேரெலாம் துரைத்தனங்கள் பண்ணலாம்
விண்ணம் இட்ட பேரெலாம் வீழ்வார் வெந் நரகிலே
கன்னம் இட்ட பேரெலாம் கடந்து நின்ற திண்ணமே!!

அரும்பசிக்கு அன்னதானம் செய்தவர்கள் கோடி வளம் பெற்று பல்லாண்டு காலம் வாழவேண்டும். அன்னதானம் செய்வதற்கு பொருள் வேண்டி செல்வந்தர்களிடம் சென்று உதவி கேட்டால் அவர்கள் அதிகாரம் செய்து இல்லை என்று விரட்டலாம். அன்னதானம் செய்வதை குற்றம் என்று சொல்லி வில்லங்கம் செய்பவர்கள் பாழும் நரகக் குழியில் வீழ்ந்து அல்லலுறுவார்கள். அனைத்து உயிரிலும் ஆண்டவன் இருப்பதை அறிந்து அவனைத் தனக்குள்ளேயே கண்டு கள்வர்கள் கன்னமிடுவதைப் போல் யோக ஞான சாதனத்தால் தியானிப்பவரால் பத்தாம் வாசலைக் கடந்து கடவுளை அடைவது நிச்சயம்.

 
சிவவாக்கியம் - 193 

ஒதொணாமல் நின்ற நீர் உறக்கம் ஊனும் அற்ற நீர்
சாதி பேதம் அற்ற நீர் சங்கையின்றி நின்ற நீர்
kothilaatha அறிவிலே குறிப்புணர்ந்து நின்ற நீர்
ஏதும் இன்றி நின்ற நீர் இயன்குமாறது எங்ஙனே !

ஓதாது உணரும் ஒரேழுத்தாக நின்றது நீர். உறக்கம் என்பதோ, உணவு என்பதோ அற்று நிற்பது நீர். சாதி பேதம் அற்று சகலரும் ஒன்றாக உள்ளது நீர். சங்கோசமில்லாமல் நிர்வாணமாக நிற்பது நீர். குற்றமேதுமில்லாத அறிவாகவும் ஆயுளின் குறிப்பையும் உணர்ந்து நிற்பது நீர். இப்படி யாவும் எனக்குள்ளே நீராக நின்று இயங்குவது ஈசா உன் செயலே!! (சங்கை =வெட்கம்)  

 
சிவவாக்கியம் - 194 

பிறந்த போது கோவணம் இலங்கு நூல் குடுமியும்
பிறந்துடன் பிறந்ததோ பிறங்கு நாள் சடங்கெலாம்
மறந்த நாலு வேதமும் மனத்துளே உதித்ததோ
நிலம் பிளந்து வான் இடிந்து நின்றது என்ன ஈசனே!!!

பிறந்தபோதே கோவணமும் பூணூலும் குடுமியும் கூடவே பிறக்கின்றதா? பிறக்கும் பொது இறைவனைத் தவிர வேறு எதையும் கொண்டு வருவது இல்லை என்பதை மறந்துவிட்டு வெறும் சடங்குகளை எல்லாம் குரங்குப் பிடியாக பிடித்துக் கொண்டு அதிலேயே மனம் வைத்து ஈசனை அறியாமல் இருக்கின்றார்கள். நான்கு வேதங்களும் மனதினுள்ளே உதித்ததா? அறிவிலே உதித்ததா? பிரம்மாவும், விஷ்ணுவும் தானே பெரியவன் என்ற சர்ச்சையில் எச்சன் நிலத்துக்கும் வானுக்கும் லிங்கோத்பவராக நின்று தானே அநாதி என நிரூபித்ததை அறிந்து அவ்வீசனை உங்களுக்குள் உணர்ந்து அவனை ஆயா தவம் செய்ய முயலுங்கள்.  

 
சிவவாக்கியம் - 195 

துருத்தியுண்டு கொல்லன் உண்டு சொர்ணமான சோதியுண்டு
திருத்தமாய் மனத்தில் உன்னித்திகழ ஊதா வல்லிரேல்
பெருத்ததூண் இலன்கியே பிழம்பதாய் விரிந்திடும்
திருத்தமான சோதியும் நீயும் அல்லது இல்லையே !

நாம் விடும் மூச்சில் வாசியைக் கண்டு அதனை யோகமாக்கி செய்ய உடம்பு உண்டு. அதில் உள்ள ஆன்மாவில் பொன்னார் மேனியாகிய ஈசன் விளங்கும் சோதி உண்டு. இந்த வாசி யோகத்தை தினமும் முறை பிசகாமல் மனதில் நிறுத்தி இறைவனை எண்ணி ஊத ஊத மனம் இலயமாகி பெருத்த தூணாக மறைக்கும் நந்தி விலகி நெருப்பாறு ஒளிபிழம்பாக விரிந்து நிற்கும். அங்கு மயிர்பாலம் எனும் பிரம்மாந்திரத்தில் ஏறிக் கடந்தால் கோடி சூரியப் பிரகாசமான சோதியில் சிவனும் சீவனுமின்றி வேறு எதுவுமில்லை. நீயே அந்த பரம்பொருள் என்பதை உணர்ந்து யோக தியானமும் செய்து ஈசனைச் சேருங்கள்.  

 
சிவவாக்கியம் - 196 

வேடமிட்டு மணிதுலக்கி மிக்க தூப தீபமாய்
ஆடறுத்து கூறுபோட்ட அவர்கள் போலும் பண்ணுறீர்
தேடி வைத்த செம்பெலாம் திரள்படப் பரப்பியே
போடுகின்ற புட்பபூஜை பூசை என்ன பூசையே!!

ஆசாரமாக வேடம் போட்டு ருத்திராட்சம் ஸ்படிகம் போன்ற மணிகளால் ஆன மாலைகளைக் கழுத்தில் போட்டு மணியோசையுடன் இறைவனுக்கு தூப தீபங்கள் காட்டுகின்றீர்கள். ஆட்டை அறுத்துக் கூறுபோட்டு விற்பவர்கள் போல சடங்குகள் பண்ணுகின்றீர்கள். தேடிக் கொணர்ந்து வைத்து செம்புகளில் நீர் நிரப்பி அதனை அங்கு திரளாகப் பரப்பி பூக்களால் அர்ச்சித்து செய்வதாக போடும் பூசை என்ன பூசையோ. உயிரை வளர்க்க செய்யும் பூசையை அறியாமல் வயிறை வளர்க்க செய்யும் பூசை என்ன பூசையோ?

 
சிவவாக்கியம் - 197 
 
முட்டு கண்ட தூமையின் முளைத்தெழுந்த சீவனை
கட்டிக் கொண்டு நின்றிடம் கடந்து நோக்க வல்லிரேல்
முட்டும் அற்று கட்டும் அற்று முடிவில் நின்ற நாதனை
எட்டுத்திக்கும் கையினால் இருந்த வீடதாகுமே !!!

தாயின் கருவிலே தூமையினால் உருவாக்கி பிறந்த உயிரானது உடலாகி வளர்ந்துள்ளது. உடம்பிலே நாத விந்தாக ஒன்று சேர்ந்து இலிங்கமாக கட்டிக் கொண்டு நின்று கொண்டிருக்கின்றது. அதனை அறிந்து கொண்டு எதனுடனும் முட்டாமலும், கட்டாமலும், ஒட்டாமலும் தனித்திருக்கும் முடிவாக நின்ற ஈசனை உணர்ந்து மனதை அங்கேயே இருத்தி அதையும் கடந்து சென்று நினைவு, உணர்வு, அறிவு என மூன்றையும் ஒன்றாக்கி தியானம் செய்ய வல்லவர்கள் தனக்குள் நின்ற நாதனான ஈசனைக் கண்டு அருள் பெறுவார்கள். அவ்வீசன் நின்ற இடமே கைலாயம். அது உனக்குள்ளேயே எட்டு திசைகளாகவும், நான்கு வேத கைகளாக இருக்கும் இடமே ஈசன் வாழும் வீடாகும்.

 
சிவவாக்கியம் - 198 

அருக்கனோடு சோமனும் அதுக்கும் அப்புறத்திலே
நெருக்கி ஏறு தாரகை நெருங்கி நின்ற நேர்மையை
உருக்கி ஓர் எழுத்துளே ஒப்பிலாத வெளியிலே
இருக்க வல்ல பேராலோ இனிப்பிறப்பது இல்லையே!

சூரியக்கலை, சந்திரக்கலை எனும் பிராணயாமத்திற்கு அப்பால் சுழுமுனை எனும் அக்னிக் கலையால் மூலாதாரத்திலிருந்து குண்டலினி சக்தியை முதுகுத்தண்டின் வழியாக வாசியை மேலேற்றும் நேர்மையை உள்ளுணர்ந்து செய்ய வேண்டும். வாசி ஒடுங்கும் ஓர் எழுத்தாக உனக்குள் இருக்கும் பிரம்மத்தில் சேர்க்க வேண்டும். அந்த ஓர் எழுத்து உனக்குள் ஒப்பற்ற வெளியாக இருப்பதை உணர்ந்து வாசியோகம் செய்து தியானத்தில் இருக்கும் உத்தம யோக ஞானிகள் இறவா நிலைப் பெற்று இறைவனுடன் சேர்ந்து இனி இப்பூமியில் பிறப்பெடுக்க மாட்டார்கள்.

 
சிவவாக்கியம் - 199 

மூலவட்டம் மீதிலே முளைத்த அஞ்சு எழுத்தின் மேல்
கோல வட்டம் மூன்றுமாய் குலைந்தலைந்து நின்ற நீர்
ஞான வட்டம் மன்றுளே நவின்ற ஞானம் ஆகிலோ
ஏலவட்டம் ஆகியே இருந்ததே சிவாயமே!!!

மூலவட்டம் எனும் பிரம்மத்திலிருந்து தோன்றிய பஞ்ச பூதங்கள் உடலாகிய கோலத்தில் மூன்று வட்டங்களாகி சூரிய, சந்திர, அக்னி மண்டலங்களாக உயிராகி நீராக நின்றது. அது இவ்வுலகம் முழுமையும் சொல்லுகின்ற ஞானமாக உனக்குள்ளேயே புருவமத்தி எனும் மன்றினுள் ஏகமாகி ஒரேழுத்தாக இருந்தது சிவமாகிய மெய்ப்பொருளே. இதனை ஞானிகளின் போதனையால் அறிந்து யோக ஞான சாதகத்தால் 'சிவயநம'' என்று தியானியுங்கள்.

 
சிவவாக்கியம் - 200

சுக்கிலத் திசையுளே சுரோணிதத்தின் வாசலுள்
முச்சதுரம் எட்டுளே மூலாதார வரையிலே
அச்சமற்ற சவ்வுளே அரி அரண் அயனுமாய்
உச்சரிக்கும் மந்திரம் உண்மையே சிவாயமே!!

சுக்கில சுரோணித கலப்பால் ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலங்களால் உருவாகி தோன்றிய எண்சான் உடம்பினுள், மூலாதாரத்தில் இருக்கும் குண்டலினி சக்தியை சகஸ்ராரதளத்தில் கொண்டு சேருங்கள். அச்சமற்ற வாசியை தொண்டை சவ்விலே வைத்து ஊதி உண்ணாக்கின் வழியாக மேலேற்றுங்கள் . அங்கெ வெட்டவெளியாக விஷ்ணு, சிவன், பிரம்மா என மூவரும் ஒன்றாக அமர்ந்துள்ளார்கள். அதனை அறிந்து மனதை ஒருமுகப்படுத்தி தியானத்தில் அமர்ந்து மூலாதாரத்திலிருந்து அஞ்ஞா வரை ஆறு ஆதாரச் சக்கரங்களையும் கடந்து சகஸ்ரார தளத்தில் சேர்க்க உச்சரிக்க வேண்டிய மந்திரம் சத்தியமாக விளங்கும் 'ஓம் நமசிவாயமே' 


சிவவாக்கியம் - 201

பூவும் நீரும் என்மனம் பொருந்து கோயில் என் உளம்
ஆவி ஓடி லிங்கமாய் அகண்டம் எங்கும் ஆகினாய்
மேவுகின்ற ஐவரும் விலங்கு தூப தீபமாய்
ஆடுகின்ற கூத்தனுக்கோர் அந்தி சந்தி இல்லையே!!!

பூவாகவும், நீராகவும் இருப்பது என் மனம். அதில் ஈசன் பொருந்தி கோயில் கொண்டிருப்பது என் உள்ளம். ஆவியான ஆன்மா இலிங்கமாக அமைந்து என் உடலிலும் இவ்வுலகங்கள் யாவிலும் நிறைந்து நின்றுள்ளது. இந்த அகிலம் எங்கும் நிறைந்த ஐம்பூதங்களும் என் உடலில் மேவி ஐம்புலங்களாக மணமாகவும், சோதியாகவும் விளங்கி ஆட்டுவிக்கின்ற ஈசன் எனக்குள் நடராஜனாக இரவு பகல் இல்லாது  எப்போதும் ஆடிக்கொண்டே இருக்கின்றான். அவனை இராப்பகல் இல்லா இடத்தே கண்டுகொண்டு தியானம் செய்யுங்கள்.  

 
சிவவாக்கியம் - 202 
 
உருக்கலந்த பின்னலோ உன்னை நான் அறிந்தது
இருக்கில்  என் மறக்கில் என் நினந்திருந்த போதெலாம்
உருக்கலந்து நின்ற போது நீயம் நானும் ஒன்றலோ
திருக்கலந்த போதலோ தெளிந்ததே சிவாயமே!!!

ஈஸ்வரா! நான் ஆன்மாவாக இருந்து உருவாகி வளர்ந்து, உன்னைக் கலந்து இவ்வுடம்பைப் பெற்றேன். என் உடலில் உருவாக நின்ற என்னை என்னிலே இருந்து, என்னிலே மறந்து, என்னிலே நினைந்து, என்னிலே அறிந்து கொண்டேன். உன் உருவை அறிந்து என் உடல் பொருள் ஆவியை உன்னிடம் ஒப்படைத்து என் ஊண் உருகி, உயிர் உருகி தியானித்து உன்னுடன் கலக்கும் போது, நீயும் நானும் ஒன்றாகி நிற்பதை உணர்ந்து கொண்டேன். உன் திருவருளால் ஞானம் பெற்று தவம் செய்யும் போது, சிவமே உண்மை என்பதை தெளிந்து கொண்டேன்.  

 
சிவவாக்கியம் - 203

சிவாயம் அஞ்செழுத்திலே தெளிந்து தேவர் ஆகலாம்
சிவாயம் அஞ்செழுத்திலே தெளிந்து வானம் ஆகலாம்
சிவாயம் அஞ்செழுத்திலே தெளிந்து கொண்ட வான் பொருள்
சிவாயம் அஞ்செழுத்திலே தெளிந்து கொள்ளும் உண்மையே!!!!

சிவயநம எனும் அஞ்செழுத்து மந்திரத்தின் உட்பொருளை உணர்ந்து ஓதி செபிப்பவர்கள் தேவர்கள் ஆவார்கள். சிவாயம் என்ற அஞ்செழுத்துக்குள்ளே ஓரெழுத்தை உணர்ந்து தியானித்து தெளிந்து கண்டு கொண்ட வான் பற்றி நின்ற மெய்ப்பொருளை அறிவார்கள். சிவயநம எனும் அஞ்செழுத்துகுள்ளே ஓரெழுத்தை உணர்ந்து தியானித்து தெளிந்து, கண்டு கொண்ட நான் பற்றி நின்ற மெய்ப்பொருளை அறிவார்கள். சிவயநம எனும் அஞ்செழுத்துக்குள்ளே அனைத்தும் அடங்கியிருக்கும் உண்மைகள் யாவையும் தெளிந்து, தெரிந்துகொண்டு தியானம் செய்து சிவத்தை சேர்வார்கள். 

 
சிவவாக்கியம் - 204  

பொய்க்குடத்தில் ஐந்தொதுங்கி போகம் வீசுமாறு போல்
இச்சடமும்  இந்திரியமும் நீரு மேல் அலைந்ததே
அக்குடம்  சலத்தை மொண்டு அமர்ந்திருந்த வாறு போல்
இச்சடம் சிவத்தை மொண்டு உகந்து அமர்ந்து இருப்பதே!!

பொய்க் குடமாகிய மானுட உடம்பில் ஐந்து பூதங்களும் அமைந்து மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐம்புலன்களும் சுகபோகங்களை அனுபவிக்கின்றது. இந்த உடம்பும் இந்திரியங்களும் நாதவிந்தாக நீரினால் அமைந்தே அலைந்து கொண்டிருக்கின்றது. மண் குடத்தில் நீரை ஊற்றி வைத்தால் அது எப்படி உறுதியாக சாயாமல் இருக்கின்றதோ, அது போலவே பொய்க் குடமான இந்த உடம்பில் மெய்ப் பொருளாக சிவம் உகந்து அமர்ந்திருப்பதால் தான் இவ்வுலகில் உயிர்கள் நிலைத்திருக்கின்றது. சிவம் போனால் சவமே!!

 
சிவவாக்கியம் - 205 

பட்டமும் கயிறுபோல் பறக்க நின்ற சீவனை
பார்வையாலே பார்த்து நீ படு முடிச்சுப் போடடா
திட்டவும் படாதடா சீவனை விடாதடா
கட்டடா நீ சிக்கெனக் களவறிந்த கள்வனை.

பட்டத்தைபோன்று உயிர் பறந்து கொண்டும், கயற்றினைப் போல் உடம்பு இருந்து கொண்டும் அதனை இயக்கும் ஈசனால் இயங்கிக் கொண்டு இருக்கின்றது. பட்டம் அந்தரத்தில் பறப்பது போல உன் அரங்கத்தில் உயிர் பறந்து கொண்டு இருக்கிறது. அதில் மூச்சானது நூல் கயிற்றைப் போல ஓடிக்கொண்டிருக்கின்றது. பார்ப்பானாகிய ஈசனை உன் பார்வையால் பார்த்து மூச்சுக் காற்றை கும்பகத்தால் நிறுத்தி படுமுடுச்சு போட வேண்டும். யோக ஞான சாதகத்தால் பூராக, கும்ப, ரேசகம் செய்து வாசியைப் பிடிக்கத் தெரியாமல் யாரையும் மனம் நோக வையாதீர்கள். சீவனாகிய உயிரையும், உடம்பையும் பேணிப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். தியானத்தைக் கடைப்பிடித்து உயிரின் உண்மையை உணர்ந்து அதில் உறையும் இறைவனை சிக்கெனப் பிடித்து அனைத்தையும் அறிந்த உள்ளங்கவர்ந்த கள்வனான ஈசனை அன்பினால் கட்டுங்கள்.  

 
சிவவாக்கியம் - 206

அல்லிறந்து பகலிறந்து அகம் பிரமம் இறந்து போய்
அண்டரண்டமும்  கடந்த அனேகனேகா ரூபமாய்
சொல்லிறந்து மனமிறந்த சுக சொரூப உண்மையைச்
சொல்லியாற என்னில் வேறு துணைவரில்லை ஆனதே!!

அல்லும் பகலும் அணுதினமும் அவனையே  நினைந்து அகமும் பிரமமும் ஒன்றி இணைந்து தவம புரியுங்கள். அண்டரண்டங்கள் அனைத்தையும் இவ்வுலகம் யாவிலும் விளங்கும் ஆன்மா ஒன்றே என்பதை உணருங்கள். அறிவையும் உணர்வையும் நினைவையும் ஒன்றிணைத்து மெய்ப் பொருளையே தியானிக்க மௌனம் எனும் சொல்லும், மனமும் இறந்த சுகம் கிடைத்து சமாதி என்ற பேரின்ப நிலையில் ஈசன் சொரூபத்தின் உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள். இப்படி அவன் அருளால் நான் அனுபவித்த சுகத்தை வெளியில் ஒருவரிடம் சொல்லியாற அனுபவித்தறிந்தஉன்னைத்தவிர எனக்கு வேறு நண்பர்கள் இல்லை.

 
சிவவாக்கியம் - 207

ஐயிரண்டு திங்களாய் அடங்கி நின்ற தூமைதான்
கைய்ரண்டு காலிரண்டு கண்ணிரண்டும் ஆகியே
மெய்திரண்டு சத்தமாய் விளங்கி ராசா கந்தமும்
துய்ய காயம் ஆனதும் சொல்லுகின்ற தூமையே!!!

பத்து மாத காலங்கள் தாயின் கருவறையில் அடங்கி நின்ற தீட்டினால் உயிர் வளர்ந்து, கைகள் இரண்டு, கால்கள் இரண்டு, கண்கள் இரண்டு ஆகி மெய்யாகிய உடம்பு திரண்டு உருவானது. அதில் சத்தம் கேட்கும் காதுகளும் ரசமாகிய சுவை உணர வாயும், கந்தமாகிய நாற்றம் உணர மூக்கும் தோன்றி சுத்தமான உடம்பு ஆனதும்  உலகோர் சொல்லும் தீண்டத்தகாத தீட்டினால் உருவானதே என்பதே உண்மை.

 
சிவவாக்கியம் - 208 

அங்கலிங்க பீடமும் அசவை மூன்று எழுத்தினும்
சங்கு சக்கரத்திலும் சகல வானகத்திலும்
பங்கு கொண்ட யோகிகள் பரம வாசல் அஞ்சினும்
சங்க நாத ஓசையும் சிவாயம் அல்லது இல்லையே!!!

நம் அங்கத்தில் சூட்சமாக இலிங்க பீடமாக இருப்பதும் அசபை மந்திரம் எனும் "அ, உ, ம்" என்ற மூன்று எழுத்தாக இருப்பதும், சங்கு சக்கரங்களாகவும், சகல சராசரங்கலாகவும் இருப்பதும் மெய்ப்பொருளான சிவமே. இதனை அறிந்து ஆகாயமான தன் மனத்தில் ஈசனையே நினைந்து வாசியோகம் செய்யும் யோகிகள் பத்தாவது வாசல் எனும் பரமபத வாசலில் நாத ஓசையை சேர்த்து பரமனைக் கண்டு ஐம்புலன்களையும் ஐந்தெழுத்தால் அடக்கி தியானத்தில் இருப்பார்கள்.

 
சிவவாக்கியம் - 209 

அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் என்றுரைக்கும் அன்பர்காள்
அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் அல்ல காணும் அப்பொருள்
அஞ்செழுத்து நெஞ்சழுத்தி அவ்வெழுத்தறிந்த பின்
அஞ்செழுத்தும் அ வ்வின் வண்ணம் ஆனதே சிவாயமே!!!

அஞ்செழுத்து பஞ்சாட்சரமென்றும் மூன்றெழுத்து ஓங்காரம் என்றும் உரைத்து அதனை ஓதி, உச்சரிக்கும் அன்பர்களே!!! நீங்கள் காண்கின்ற அந்த மெய்ப்பொருள் அஞ்செழுத்தாகவோ, மூன்றெழுத்தாகவோ இருப்பதில்லை. அஞ்செழுத்தின் அனைத்து உட்பொருளை யாவும் அறிந்து அதனை உடம்பில் நெஞ்செழுத்தாக இருக்கும் சிகாரத்தில் இருந்து 'சிவயநம' என்று உள்ளத்தில் இருத்தி தியானியுங்கள். அப்போது பிரமம் ஒரேழுத்தாகவும், உயிராகவும் உள்ளதை உணர்ந்து கொள்ளுங்கள். ஒரேழுத்திலே ஐந்தெழுத்தும் அடங்கி இருப்பதையும் அவ்வேழுத்தே பஞ்சாட்சரமாக ஐந்து வண்ணங்கள் ஆகி நிற்பதையும் அதிலேயே ஐந்து பூதங்களும் உள்ளதையும் அறிந்து உணர்ந்து அஞ்செழுத்தை உள்ளத்திலே ஓதி மெய்ப்பொருளை சேர்ந்து தியானம் செய்யுங்கள்.

 
சிவவாக்கியம் - 210

ஆதரித்த மந்திரம் அமைந்த ஆகமங்களும்
மாதர் மக்கள் சுற்றமும் மயக்க வந்த நித்திரை
ஏதுபுக்கொளித்ததோ எங்கும் ஆகி நின்றதோ
சோதிபுக் கொளித்திடம் சொல்லடா சுவாமியே!!! 
 
காலந்தோறும் சொல்லிவந்த மந்திரங்கள் அமைந்துள்ள ஆகம நெறிகளை கடைப்பிடித்து வாழ்ந்து வரும் போது மனைவி, மக்கள், உறவுகள், நட்புக்கள் என அனைத்தையும் மறக்கும் படியாக ஒரு நொடியில் மயக்க வந்த மரணம் எவ்வாறு ஏற்பட்டது? உடலில் உலாவிய உயிர் எங்கு போனது? ஆன்மா உடலிலேயே ஒளிந்து கொன்டதா? அல்லது அதுவே எங்குமான ஆகாயத்தில் போய் நின்றதா? ஆன்மாவில் சோதியாக துலங்கிய ஈசன் உடம்பை விட்டு எங்கு சென்று ஒளிந்து கொண்டான்? சோதி அப்போது இருக்கும் இடம் எங்கு என்பதை யாவும் சுவாமியாக வருபவர்கள் சொல்லி இறவா நிலை பெற உபதேசிக்க வேண்டும்.


சிவவாக்கியம் - 211 

அக்கரம் அனாதியோ ஆத்துமா அனாதியோ
புக்கிருந்த பூதமும் புலன்களும் அனாதியோ
தக்க மிக்க நூல்களும் சதாசிவம் அனாதியோ
மிக்க வந்த யோகிகாள் விரைந்துறக்க வேணுமே!!

உடம்பு அனாதியா? உயிர் அனாதியா? ஐம்பூதமும், ஐம்புலன்களும் அனாதியா? ஆராய்ந்தறிந்த தகுந்த நூல்கள் அனாதியா? ஆஞ்ஞா எனும் ஆகாயத்தில்  உள்ள சதாசிவம் அனாதியா? யோக ஞானம் விளக்க வரும் யோகிகளே!!! எது அனாதி என்பதை விரைந்து விளக்க வேண்டும். எது தொடக்கமும் முடியும் அற்று இருக்கின்றதோ, எது சுய ஒளிபடைத்து விளங்குகின்றதோ, எது உள்ளதும் இல்லாததாகவும் உள்ளதோ அதுவாகிய சிவமே அனாதி. எங்கும் எப்போதும் என்றென்றும் எக்காலத்தும் நித்தியமாய் உள்ளதே அனாதி. 

 
சிவவாக்கியம் - 212 

ஒன்பதான வாசல்தான்ஒழியுநாள் இருக்கையில்
ஒன்பதாம் ராம ராம ராம எனும் நாமமே
வன்மமான  பேர்கள் வாக்கில் வந்து நோய் அடைப்பராம்
அன்பரான பேர்கள் வாக்கில் ஆய்ந்தமைந்து இருப்பதே!!

ஒன்பது வாசல் கொண்ட உடம்பு ஒரு நாள் அழியும் என்பதுவே உண்மை என்றுணர்ந்து எந்நேரமும் இராம நாமம் செபித்து அவன் பாதம் பற்றியிருங்கள். இராம நாமம் மரணபயம் போக்கும். வஞ்சக நெஞ்சம் கொண்டவர்கள் இறக்கும் தருவாயில் நோய் வந்து அவர்கள் வாக்கில் இப்புண்ணிய நாமத்தை சொல்ல மாட்டாது இறப்பார்கள். இது அன்பே சிவம் என்று வாழும் அன்பர்கள் வாக்கில் எப்போதும் அமைந்திருக்கும். அவர்கள் இராமநாமம் என்பது என்ன என்பதைப் புரிந்து ஆராய்ந்து அறிந்து தியானம் தவம்  செய்வார்கள்.

 
சிவவாக்கியம் - 213 

அள்ளி நீரை இட்டதேது அங்கையில் குழைந்ததேது
மெல்லவே மினமினவென்று விளம்புகின்ற மூடர்காள்
கள்ள வேடம் இட்டதேது கண்ணை மூடி விட்டதேது
மெள்ளவே குருக்களே விளம்பிடீர் விளம்பிடீர்!

உள்ளங்கையில் விபூதி எடுத்து அதில் நீரை விட்டு குழைத்து உடம்பு முழுவதும் பட்டை போட்டு மெல்லவே வாய்க்குள்ளேயே முனுமுனுவென்று மந்திரங்களை சொல்லி விளம்பும் மூடர்களே! உங்களுக்குள் கள்ள வேடமாக சூட்சுமமாக விளங்கும் பொருள் எது? மரணம் நேர்ந்த போது கண்களை மூடிவிட்டதற்கு காரணம் எது? என்பதை குருவாக வருபவர்களே, மெதுவாக விளக்கிக் கூறுங்களேன்!!

 
சிவவாக்கியம் - 214 

அன்னை  கர்ப்பத் தூமையில் அவதரித்த சுக்கிலம்
மின்னையே தரித்ததும் பனித்துளி போலாகுமே
உன்னி தொக்குள் உழலும் தூமையுள் அடங்கிடும்
பிள்ளையே பிறப்பதும் தூமை காணும் பித்தரே!!

தாயின் கர்ப்பத்தில் உள்ள தூமையில் சேர்ந்த சுக்கிலம் மின்னலைப் போன்ற ஒளியால் தரித்து பனித்துளி அளவே ஆகி உயிர் உண்டாகும். அவ்வுயிரே சிசுவாக வளர்ந்து தாயின் வயிற்றுக்குள் உழன்று ஐம்புலன்களுடன் கூடிய உடம்பு உண்டாகி தூமையின் உள்ளேயே அடங்கி இருக்கும். பத்து மாதங்கள் தாயின் தூமையின் நீரிலேயே மிதந்து வளர்ந்து அதன் பின்னரே உலகில் உயிர், உடம்பு பிறக்கின்றது. இப்படி நாம் பிறந்ததே தீட்டினால்தான் என்பதனை உணர்ந்து கொண்டு யாரையும் தீட்டு என்று ஒதுக்காதீர்கள்  ஏனெனில் அத்தூமையை உடம்பில் ஒட்டியே பிரம்மம் இருக்கின்றது என்பதனைக் கண்டு அச்சிவத்தை சேர தியானியுங்கள்.


சிவவாக்கியம் - 215 
 
அழுக்கறத் தினங்குளித்து அழுக்கறாத மாந்தரே
அழுக்கிருந்த அவ்விடம் அழுக்கிலாதது எவ்விடம்
அழுக்கிருந்த அவ்விடத்து அழுக்கறுக்க வல்லிரேல்
அழுக்கிலாத சொதியோடு அணுகி வாழலாகுமே!!!
 
அழுக்குப் போகவேண்டும் என்று தினந்தினம் நீரில் குளித்தும் அழுக்கு அகலாத மனிதர்களே! அழுக்கான உடம்பில் அழுக்கான இடம் எது என்பதனை அறிந்தீரா? அவ்விடத்தில் மனதை நிறுத்தி அம்மனத்தில் உள்ள ஆசைகளையும் பாவங்களையும் பக்தி, தொண்டு, யோகம், ஞானம் என்ற சாதனங்களால் அறவே ஒழித்து தியானிக்க வல்லவர்களானால், அழுக்கே இல்லாத பரிசுத்தமான அவ்விடத்தில் சதியாக விளங்கும் ஈசனோடு இணைந்து மரணமிலா பெரு வாழ்வில் வாழலாம்.

 
சிவவாக்கியம் - 216 

அணுத் திரண்ட கண்டமாய் அனைத்து பல் யோனியாய்
மனுப் பிறந்து ஓதி வைத்த நூலிலே மயங்குறீர்
சனிப்பது ஏது சாவது ஏது தாபரத்தின் ஊடு போய்
நினைப்பது ஏது நிற்பது ஏது நீர் நினைந்து பாருமே!

அணுக்களால் திரண்டு உருவானது உடம்பு, அது இவ்வுலகில் அனைத்தும் பலவிதமான உயிரினங்களாக விளங்குகின்றது. நாள் வகை யோனிகளால்  வெளிவரும் உயிரில்தான் மனிதன் பிறக்கின்றான். இப்படி வந்த மனிதர்களின் அறிவில் உதித்த மனுதர்மம், சாஸ்திரங்கள் போன்ற நூல்களைப் படித்து உண்மையை உணராது மயங்குகின்றீர்கள். ஆத்மா பிறப்பதோ இறப்பதோ இல்லை. ஒன்று மற்றொன்றாக மாறி வருகின்றது. இவை யாவும் நன்குணர்ந்து தன்னை அறிந்து தற்பரமாய் இருக்கும் பரம்பொருளை பற்றி நினைவாக நினைப்பது எது? என்றும் நிலையாக நிற்பது எது என்பதையும் அது நீராக இருப்பதுவே என்பதையும் உணர்ந்து அவ்விடத்திலேயே தியானியுங்கள். நினைவுதனை நினைவு கொண்டு நினைந்து பாருங்கள். 

 
சிவவாக்கியம் - 217

ஆதியாகி அண்டரண்டம் அப்புறத்தும் அப்புறம்
சோதியாகி நின்றிலங்கு சுருதி நாத சோமனை
போதியாமல் தம்முளே பெற்றுணர்ந்த ஞானிகள்
சாதிபேதம் என்பதொன்று சற்றுமில்லை இல்லையே!!!

ஆதியாக அண்டங்கள் யாவிலும் தோன்றி அப்பாலுக்கப்பாலாய் நின்று சோதியாக இயங்கும் ஈசனை சுருதியுடன் கூடிய இசையோடும் நாதலயமாகவும் தனக்குள் யாரும் போதிக்காமல் ஓதாதுணர்ந்த மெய் ஞானிகள் சோமசுந்தரனையே தியானித்திருப்பார்கள். அவர்கள் எல்லோருக்குள்ளும் இறைவன் இருப்பதை உணர்ந்ததால் சாதி பேதம் என்பதை எங்கும் எப்போதும் யாரிடமும் பார்க்கமாட்டார்கள். சற்றும் பேதம் இல்லாது விளங்கும் பரம்பொருளையே அனைவரிடமும் பார்ப்பார்கள்.

 
சிவவாக்கியம் - 218

ஆக்கை முப்பது இல்லையே ஆதி காரணத்திலே
நாக்கை மூக்கையுள் மடித்து நாதநாடி யூடு போய்
எக்கறுத்தி  ரெட்டையும் இறுக்கழுத்த வல்லிரே
பார்க்க பார்க்க திக்கெல்லாம் பரப்பிரம்மம் ஆகுதே!! 

ஆக்கை என்ற வாழ்வில் ஆதியான ஆன்மாவிற்கு மூப்பு என்பதில்லை. ஆன்மா ஆதியாக இருப்பதால் உடம்பு மூப்பு அடைந்தாலும் அது என்றும் இளமையோடே இருக்கின்றது. நாக்கை உள் மடித்து உண்ணாக்கில் வாசியை வைத்து ஊதி நாதத்தை உண்டு பண்ணி நடு நாடியான சுழுமுனை  வாசலைத் திறக்கவேண்டும். இடகலை பிங்கலையாக ஓடும் மூச்சுக் காற்றை எக்கி எட்டு ரெண்டு அட்சரத்தால் இறுக்கி சுழுமுனையில் வாசியை அழுத்தி தியானிக்க வல்லவர்கள் ஆனால் தவம் கூடி மெய்ப்பொருளில் சேர்ந்து பார்க்கும் திசைகளில் எல்லாம் பரப்பிரம்மம் காட்சி தரும் நீயே அதுவாக ஆவாய்.

 
சிவவாக்கியம் - 219 

அஞ்சும் அஞ்சும் அஞ்சும் அஞ்சும் அல்லல் செய்து நிற்பதும்
அஞ்சும் அஞ்சும் அஞ்சும் அஞ்சுமே அமர்ந்துளே இருப்பதும்
அஞ்சும் அஞ்சும் அஞ்சுமே ஆதரிக்க வல்லிரேல்
அஞ்சும் அஞ்சும் உம்முளே அமர்ந்ததே சிவாயமே!

மானுட உடம்பில் ஐந்து பூதங்களும் ஐந்து புலன்களும் ஐந்து கோஷங்களும் ஐந்து அவஸ்தைகளாகவும் இருந்து அல்லல் செய்து நிற்கிறது. அஞ்செழுத்தே நமசிவய என்ற பஞ்சாட்சரமாக அமர்ந்து நமக்குள் இருக்கின்றது. ஐந்து பூதங்களாகவும் ஐந்து புலன்களில் இயங்கும் அஞ்செழுத்தை நமசிவய என்று உச்சரித்து செபித்து தியானிக்க வேண்டும். அஞ்செழுத்தின் உட்பொருள் யாவையும் நன்கு உணர்ந்து உடலையும் உயிரையும் பாதுகாத்து அஞ்செழுத்தை ஓதி வருபவர்க்கு அஞ்செழுத்தும் ஐந்து வண்ணங்களாக இருந்து உனக்குள்ளேயே உகாரமாக அமர்ந்திருப்பது மெய்ப் பொருளாக விளங்கும் சிவமே என்பதை அறிந்து அஞ்செழுத்தால் தியானம் செய்யுங்கள்.

 
சிவவாக்கியம் - 220

அஞ்செழுத்தின் அனாதியாய் அமர்ந்து நின்றது ஏதடா
நெஞ்செழுத்தி நின்று கொண்டு நீ செபிப்பது ஏதடா
அஞ்செழுத்தின் வாளதால் அறுப்பதாவது ஏதடா
பிஞ்செழுத்தின் நேர்மைதான் பிரிந்துரைக்க வேண்டுமே!!!
 
அஞ்செழுத்தில் ஓர் எழுத்தாய்  அனாதியாய் அமர்ந்து நின்றது சிகாரமே. அதை நெஞ்சமாகிய அனாகத சக்கரத்தில் நின்று சிவயநம என செபிக்க வேண்டும். இது பஞ்சாட்சரமாக பிஞ்செழுத்து எனும் ஊமைஎழுத்தாக இருப்பதை உணர்ந்து அங்கேயே மனதை நிறுத்தி நினைவால் நமசிவய, சிவயநம, யநமசிவ, மசிவயந, வயநமசி, என ஐம்பத்தோர் அட்சரங்களாக பிரித்து செபித்து தியானிக்க வேண்டும். 


சிவவாக்கியம் - 221 

உயிருந்தது எவ்விடம் உடம்பெடுப்பதின் முனம்
உயிரதாவது ஏதடா உடம்பாவதாவது ஏதடா
உயிரையும் உடம்பையும் ஒன்றுவிப்பது ஏதடா
உயிரினால் உடம்பெடுத்த உண்மை ஞானி சொல்லடா

இந்த உடம்பை எடுப்பதற்கு முன்னர் உயிர் எங்கு இருந்தது? உயிர் ஆவது எது? உடம்பாக ஆவது எது? உயிரையும் உடம்பையும் ஒன்றாக்குவது எது? உயிரினால் உடம்பெடுத்த ஞானியே உண்மையைக் கூற வேண்டும். உடம்பாக உருவெடுக்கும் முன்பு உயிர் நினைவு என்னும் ஆகாயத்தில் இருந்தது. உயிர் சிவனாகவும் உடம்பு சக்தியாகவும் இருக்கின்றது. உயிரையும் உடம்பையும் ஒன்றுவிப்பது சிவம். அச்சிவமே ஞானம். அதுவே மெய்ப்பொருள். அதுவே அநாதியான சோதி. ஆதலின் உடல் தத்துவங்களையும், உயிர் தத்துவங்களையும் நன்கு அறிந்து கொண்டு சிவத்தைச் சேர தியானியுங்கள்.

 
சிவவாக்கியம் - 222

சுழித்தவோர்  எழுத்தையும் சொன்முகத்து இருத்தியே
துன்ப இன்பமுங் கடந்து சொல்லு மூல நாடிகள்
அழுத்தமான அக்கரம் அங்கியுள் எழுப்பியே
ஆருபங்காயம் கலந்து அப்புறத் தலத்துளே.

சுழித்த ஒரேழுத்தான அகாரத்தை கண்டத்தில் வைத்து சொற்கள் உதிக்கும் முகமான மூலாதாரத்தில் செலுத்தி இருத்தி பின் உகாரத்தால் குண்டலினியை எழுப்பி மேலேற்ற வேண்டும். இதனால் ஏற்படும் இன்ப துன்பங்களைக் கடந்து மூல நாடியான சுழுமுனையில் அழுத்தி சிகாரத்தால் உடலில் உள்ள ஆறு ஆதாரங்களிலும் கலந்து வாசியை செலுத்தி அப்புறத்தலமான சகஸ்ராரத்தில் சேர்க்க வேண்டும். இதுவே சித்தர்களின் வாசியோகம். 

 
சிவவாக்கியம் - 223

உருத்தரிப்பதற்கு முன் உயிர் புகுந்த நாதமும்
கருத்தரிப்பதற்கு முன் காயம் என்ன சோணிதம்
அருள்தரிப்பதற்கு முன் அறிவு மூலாதாரமாம்
குறித்தறிந்து கொள்ளுவீர் குணங்கெடும் குருக்களே.  

உடம்பாக உருவாவதற்கு உயிரானது ஆகாயத்தில் நாதமாக புகுந்திருந்தது. கருத்தரிப்பதற்கு முன்பு உடம்பு தாயின் கருவறையில் சுக்கில சுரோணித நீராய் இருந்தது. உயிரும் உடலும் சேர்ந்து வளர்வதற்கு இறையருள் அறிவான சோதியாக மூலாதாரத்தில் இருந்தது. இப்படி வெளிவந்த உடம்பில் உயிர் சூட்சுமமாக இருப்பதை குறித்தறிந்து கொண்டு அதிலே இறைவனே குருவாக உறைவதை உணர்ந்து கொள்ளுங்கள்.

 
சிவவாக்கியம் - 224

எங்கும் உள்ள ஈசனார் எம்முடல் புகுந்த பின்
பங்கு கூறு பேசுவார் பாடு சென்று அணுகிலார்
எங்கள் தெய்வம் உங்கள் தெய்வம் என்றிரண்டு பேதமோ
உங்கள் பேதம் அன்றியே உண்மை இரண்டும் இல்லையே.

எங்கும் நீக்கமற நிறைந்துள்ள ஈசன் எனது உடலில் கர்த்தாவாக புகுந்திருந்தான் என்பதை என்னிலேயே உணர்ந்து கொண்டேன். ஒன்றாய் உள்ள இறைவனுக்கு பல பெயரிட்டு பங்கு போட்டு பேசுவோர்கள் அவனை அடைவதற்குரிய உண்மையான வழியை அறிந்து மெய்பாடுபடுவதற்கு அணுகமாட்டார்கள். எங்கள் தெய்வமே பெரிதென்றும் உங்கள் தெய்வம் சிறிது எனவும் பேசி இறைவனை பேதப் படுத்துவார்கள். அது உங்களது அறியாமையால் விளைந்த பேதமேயன்றி இதுவே இறைவனில் பேதம் இல்லை. உண்மையாக உள்ள இறைவன் ஒருவனேயன்றி இரண்டு பேதங்கள் ஏதும் இல்லை. அவன் எங்கும் எப்போதும் எல்லோர்க்கும் பொதுவாக ஒன்றாகவே  விளங்குகின்றான்.  

 
சிவவாக்கியம் - 225

அரியுமாகி அயனுமாகி அண்டமெங்கும் ஒன்றதாய்
பெரியதாகி உலகுதன்னில் நின்ற பாதம் ஒன்றலோ
விரிவதென்று வேறு செய்த வேடமிட்ட மூடரே
அறிவினோடு பாரும் இங்கும் அங்கும் எங்கும் ஒன்றதே!
 
விஷ்ணுவாலும் பிரம்மாவாலும் தேடிக்காண முடியாத அடி முடியை, யாவர்க்கும் பெரியவனாக நின்ற ஈசன் ஆண்ட சராசரங்கள் எங்கும் ஒன்றாக விளங்குகின்றான். ஈசன் ஒருவனே அநாதியானவன். இந்த உலகம் யாவும் உள்ள உயிர்கள் எல்லாவற்றிலும் பொருந்தி நின்ற பாதம் ஒன்று அல்லவோ, எல்லாமே அவனுக்குள் அடங்கி யாதும் ஒன்றாக இருப்பதை உணர்ந்து கொள்ளுங்கள். விஷ்ணு பிரம்மா சிவன் என மூவரையும் வேறுபடுத்தி விரிவுரைகள் செய்து வாய் ஜாலத்தால் வேடம் போட்டு திரியும் மூடர்களே! மூவரும் ஒன்றாக உனக்குள்ளேயே இருப்பதை அறிவை அறிவால் அறிந்து உண்மையை உணர்ந்து தெளிந்து பாருங்கள். இங்கும், அங்கும், எங்குமே ஒன்றான மெய்ப்பொருள் சிவமே!!!!  

 
சிவவாக்கியம் - 226

வெந்த நீறு மெய்க்கணிந்து வேடமும் தரிக்கிறீர்
சிந்தையுள் நினைந்துமே தினம் செபிக்கும் மந்திரம்
முந்த மந்திரத்திலோ மூல மந்திரத்திலோ
எந்த மந்திரத்திலோ ஈசன் வந்து இயங்குமே  

வேகா தலை சாகாக்கால் போகப் புனலாக இருக்கும் திருநீரை அறியாது வெந்த விபூதியை நீராக்கி உடம்பு முழுவதும் பூசி வேடம் போடுகிறீர். நீராக நின்ற மந்திரத்தில் நெருப்பாக ஈசன் இயங்குவதை அறிந்து அதையே சிந்தையுள் வைத்து சிவனை நினைந்து 'சிவயநம' என தினமும் செபித்து தியானம் செய்யுங்கள். அதுவே அனைத்துக்கும் முந்தி தோன்றிய மந்திரம். மூல மந்திரம், பஞ்சாட்சரத்தில்தான் ஈசன் இருந்து இயங்குகின்றான்.


சிவவாக்கியம் - 227 

அகார காரணத்திலே அனேகனேக ரூபமாய்
உகார காரணத்திலே உருத்தரித்து நின்றனன்
மகார காரணத்திலே மயங்குகின்ற வையகம்
சிகார காரணத்திலே தெளிந்ததே சிவாயமே!

ஓங்காரமே அனைத்தும் தோன்றுவதற்கு காரணம், அதில் அகாரம், உகாரம், மகாரம் என்ற மூன்றும் அடங்கியுள்ளது. இதில் யாவிலும் சிகரமாக இருப்பதுவே சிகாரம். அகாரமே உடம்பாகி அனேகனேக ரூபங்களாவதற்கு   காரணமாய் ஆனது. உகாரமே உயிராகி உருத்தரித்து நிற்பதற்கு காரணமாய் ஆனது. மகாரமே மணமாகி இந்த வையகம் முழுதும் மயங்குவதற்கு காரணமாய் ஆனது. இவை யாவிற்கும் ஆதியாக சிகாரமே காரணம் என்பதை அறிந்து சிவமே பொருளாய் இருப்பதை தெளிந்து உணர்ந்து கொண்டு தியானியுங்கள்.

 
சிவவாக்கியம் - 228
 
அவ்வெழுத்தில் உவ்வு வந்து அகாரமும் சனித்ததோ
உவ்வெழுத்து மவ்வெழுத்தும் ஒன்றை ஒன்றி நின்றதோ
செவ்வை ஒத்து நின்றலோ சிவபதங்கள் சேரினும்
மிவ்வையொத்த ஞானிகாள் விரித்துரைக்க வேணுமே.
.  
'ஓம்' என்ற ஓங்காரத்தில் அ, உ, ம் என்ற மந்திரங்கள் மூன்றேழுத்தாக இருக்கின்றது. இதனை சித்தர்கள் அவ், உவ், மவ் என்றும் அம், உம், இம் என்றும் சொல்கிறார்கள். அவ்வும் உவ்வும் ஆகிய நாத விந்து சேர்ந்தே அகாரமாகிய உடம்பு பிறந்தது. உவ்வும் மவ்வும் ஆகிய உயிரும் மனமும் ஒன்றாகி ஒன்றி நிற்கின்றது. இப்படி ஓங்காரம் உடலுயிராய் நிற்பதை உணர்ந்து அது செம்மையான பொருளாய் இருப்பதை அறிந்து மின்னலைப் போன்ற சோதியில் கலந்து தியானத்தால் சிவத்தின் திருவடியில் சேரலாம். இவ்விதமாக செய்து வரும் நற்குணம் நிறைந்த ஞானிகள் விரிவாக உபதேசிக்க வேணும். 

 
சிவவாக்கியம் - 229  

ஆதியான அஞ்சிலும் அநாதியான நாலிலும்
சோதியான மூன்றிலும் சொருபம் அற்ற ரெண்டிலும்
நீதியான தொன்றிலே நிறைந்து நின்ற வஸ்துவை
ஆதியான தோன்றுமே அற்றதஞ் செழுத்துமே.
 .
ஆதியாக உள்ள பஞ்சபூதங்கள் மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய அஞ்சிலும், அனாதியாக உள்ள அந்தக் கரணங்கள் மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற நான்கிலும் சோதியான ஓங்காரத்தில் அகாரம், உகாரம், மகாரம் என்ற மூன்றிலும், சொரூபம் அற்ற உயிர் உகாரத்தில் சூரிய சந்திர கலையில் இரண்டிலும் எல்லோர்க்கும் பொது நீதியாக விளங்கும் ஒன்றிலே நிறைந்து நின்ற வஸ்துவான மெய்ப்பொருளை அறிந்துகொள்ளுங்கள். இதுவே ஆதியான ஒன்றாக இருப்பதை உணர்ந்து அதிலேயே ஒன்றி அஞ்செழுத்தால் ஓதி தியானியுங்கள்.
 

சிவவாக்கியம் - 230

வானிலாதது ஒன்றுமில்லை வானுமில்லை வானிடில்
ஊனிலாதது  ஒன்றுமில்லை ஊனுமில்லை ஊனிடில்
நாணிலாதது ஒன்றுமில்லை நானுமில்லை நண்ணிடில்
தானிலாதது ஒன்றுமே தயங்கி ஆடுகின்றதே 
 
ஆகாயம் இல்லாதது எதுவும் இல்லை. ஒன்றும் இல்லாததே ஆகாயம் என்பதை அறிந்து அதிலேயே நாடி தியானம் செய். உடம்பு இல்லாத உயிர் ஒன்றுமில்லை. உடம்பு இல்லை என்ற நிலையில் உடம்பிலேயே யோகம் செய். நான் என்பது என்ன என்பதை உணர்ந்து, நான் என்ற ஆனவமில்லாது நான் நீயாக ஞான சாதகம் செய். நான் என்பதற்று தானாக நின்றது ஒன்றான சிவமே உன் உடம்பில் தங்கி இயங்கி ஆடுகின்றது. அத்திருவடி பற்றி இறவா நிலை அடையுங்கள்.


சிவவாக்கியம் - 231

விழுத்தகண் குவித்தபோ தடைந்துபோ யெழுத்தெலாம்
விளைந்துவிட்ட விந்திரசால வீடதான வெளியிலே
அழுத்தினாலு மதிமயங்கி யனுபவிக்கும் வேளையில்
அவனுமுண்டு நானுமில்லை யாருமில்லை யானதே.

விழித்திருக்கும் அகக்கண்ணில் எண்ணங்களைக் குவித்தால் ஓங்காரம், பஞ்சாட்சரம் என்ற எழுத்துக்கள் எல்லாம் அங்கேயே அடைந்து போய் மெய்யான மவுனம் கிட்டும். இந்திரியங்களால் விளைந்த வீடாகிய உடலில் உள்ள ஆகாயத்தில் மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய நான்கையும் அங்கேயே அழுத்தி நிறுத்தி உடலையும் உயிரையும் ஒன்றாக்கி பேரின்பத்தை அனுபவிக்கும் நேரத்தில் ஈசனில் ஒன்றலாம். அப்போது ஈசனுண்டு; நான் இல்லை.


சிவவாக்கியம் - 232

நல்லமஞ் சனங்கள்தேடி நாடிநாடி யோடுறீர்
நல்லமஞ் சனங்களுண்டு நாதனுண்டு நம்முளே
எல்லைமஞ் சனங்கள்தேடி யேகபூசை பண்ணினால்
தில்லைமேவுஞ் சீவனுஞ் சிவபதத்து ளாடுமே.

ஈசனுக்குத் திருமுழுக்காட்டு செய்ய எண்ணி, அதற்கெனத் தேவையான பொருள்களை நல்லதாகப் பார்த்து நாடிநாடித் தேடி ஓடுகிறீர்கள். நமக்குள்ளேயே நல்ல மஞ்சனங்கள் உண்டு, நாதனான ஈசன் உண்டு. நமக்குள் எல்லையாக இருக்கும் மனதில் நல்ல எண்ணங்களால் மனமுருகித் திருமுழுக்காட்டு செய்து ஒரே மனதாக ஈசனை எண்ணித் தியானியுங்கள். தில்லையாம் ஆகாயத்தலத்தில் உள்ள சீவன், சிவனின் திருவடியைச் சேர்ந்து நடனமாடும்.


சிவவாக்கியம் - 233

உயிரகத்தில் நின்றிடு முடம்பெடுத்த தற்குமுன்
உயிரகார மாயிடு முடலுகார மாயிடும்
உயிரையு முடம்பையு மொன்றுவிப்ப தச்சிவம்
உயிரினா லுடம்புதா னெடுத்தவா றுரைக்கினே.

உடம்பு எடுப்பதற்கு முன் உயிர் அகத்தில் உள்ள ஆகாயத்தில் நின்றிருக்கும். உயிர் அகாரமான சிவனாகவும் உடல் உகாரமான சக்தியாகவும் இருக்கும். உயிரையும் உடலையும் ஒன்று சேர்ப்பது சிவம். இவ்வாறு உயிர் உடம்பெடுத்து வந்ததை உரைக்கிறேன்.


சிவவாக்கியம் - 234

அண்டமேழு முழலவே யனந்தயோனி யுழலவே
பண்டுமா லயனுடன் பரந்துநின் றுழலவே
எண்டிசை கடந்துநின் றிருண்டசத்தி யுழலவே
அண்டரண்ட மொன்றதா யாதிநட்ட மாடுமே.

அண்டங்கள் ஏழும் சுற்றிக்கொண்டே இருக்கின்றது. அனந்த கோடி யோனியில் உதித்த உயிர்களும் சுற்றி உழன்று கொண்டிருக்கின்றது. உங்கள் உடலில் திருமால் முகுளமாகவும், பிரமன் மனமாகவும் இருந்து உழன்று கொண்டு உள்ளனர். இவர்கள் உடலின் உள்ளேயே காத்தும், படைத்தும் வருகிறார்கள். எண்திசைக்கு அப்பாலாய் கடந்து நின்ற இருளான சக்தி உழலவே அண்டங்கள் அனைத்தும் ஒன்றதாகிவிடும். அப்போது உடலில் நின்ற ஆதி உனக்குள் நடனமாடும்.


சிவவாக்கியம் - 235

உருவநீ ருறுப்புகொண் டுருத்தரித்து வைத்திடும்
பெரியபாதை பேசுமோ பிசாசையொத்த மூடரே
கரியமாலு மயனுமாக காணொணாத கடவுளை
உரிமையாக வும்முளே யுணர்ந் துணர்ந்து கொள்ளுமே.

நீராக இருக்கும் விந்து முட்டையில் கலந்து முழு மனிதனாக உருவெடுக்கிறது. மனிதனானபின், இந்த வழியில் சென்றால்தான் இறைவனைக் காணலாம், பக்தி வழிதான் சிறந்தது எனப் பல வழிகளிலும் அலந்தால் பலன் இல்லை. பிசாசைப்போல அங்கும் இங்கும் அலைந்து திரியும் மூடர்களே! திருமாலும் பிரமனும் தேடி அடிமுடி காண முடியாத ஈசனை உனக்குள்ளேயே உரிமையாகக் கண்டு உணர்ந்து ஞானவினை புரியுங்கள்.


சிவவாக்கியம் - 236

பண்ணிவைத்த கல்லையும் பழம்பொரு ளதென்றுநீர்
எண்ணமுற்று மென்னபே ருரைக்கிறீர்க ளேழைகாள்
பண்ணவும் படைக்கவும் படைத்து வைத்தளிக்கவும்
ஒண்ணுமாகி யுலகளித்த வொன்றை நெஞ்சிலுண்ணுமே.

ஏழைகளே! தெய்வம் என்று மனிதன் செய்து வைத்துள்ள கற்சிலையைப் பழமையான தெய்வம் என்று எண்ணிப் பல பெயரிட்டு அழைக்கிறீர்கள். எதையும் செய்யவும், உண்டாக்கிப் படைக்கவும், காத்து அளிக்கவும், ஒன்றாகிய இறைவனை, இவ்வுலகை அளித்த ஒன்றை, ஈசனை உள்ளத்தில் நிறுத்தி எண்ணித் தவம் செய்யுங்கள்.


சிவவாக்கியம் - 237

நாலதான யோனியுள் நவின்றவிந்து மொன்றதாய்
ஆலதான வித்துளே யமர்ந்தொடுங்கு மாறுபோல்
சூலதான வுற்பனஞ் சொல்வதான மந்திரம்
மேலதான ஞானிகாள் விரித்துரைக்க வேணுமே.

யோனிகள் நான்கு: ஊர்வன, பறப்பன, விலங்கினம், மனிதன். இவ்வகை யோனிகளுள் விந்து விழுந்து சூலாகிய கருப்பம் தரிக்கிறது. ஒரு சிறிய ஆல வித்துக்குள்தான் மிகப் பெரிய ஆலமரம் ஒடுங்கி உள்ளது. அவ்வாறே ஒரு துளி விந்துக்குள் இவ்வுடல் ஒடுங்கியுள்ளது. இதனை அறிந்த மேன்மையான ஞானிகள், உலகோருக்கு விளக்கிச் சொல்லுங்கள்.


சிவவாக்கியம் - 238

அருவமா யிருந்தபோ தன்னையங் கறிந்திலை
உருவமா யிருந்தபோ துன்னைநா னறிந்தனன்
குருவினால் தெளிந்துகொண்டு கோதிலாத ஞானமாம்
பருவமான போதலோ பரப்பிரம மானதே.

ஆகாயம், காற்று, நெருப்பு ஆகியசிவயஎன்ற அக்கரத்தில் ஆன்மா உருவின்றி இருந்தபோது அங்கு அன்னையால் கூட உன்னை அறியமுடியவில்லை. நீர், மண் ஆகியநமஎன்றதில் சேர்ந்து உருவாகி ஐம்பூதங்களும் சேர்ந்து உடலாகி இருந்தபோது உன்னை நான் அறிந்து கொண்டேன். குரு தொட்டுக்காட்டி சொல்லித்தந்த குறையில்லாத ஞானம் என்னைத் தெளிய வைத்தது. ஞானவினையைத் தொடர்ந்து செய்து, தக்க பருவம் வந்தபோது பரப்பிருமத்தை உணர்ந்து அத்துடன் கலந்தேன்.


சிவவாக்கியம் - 239

பிறப்பது மிறப்பதும் பிறந்திடா திருப்பதும்
மறப்பதும் நினைப்பதும் மறந்ததைத் தெளிந்ததும்
துறப்பதுந் தொடுப்பதும் சுகித்துவாரி யுண்பதும்
பிறப்பது மிறப்பதும் பிறந்தவீ டடங்குமே.

உலகில் பிறப்பதும், இறப்பதும், மீண்டும் பிறந்திடாது இருப்பதும் ஈசன் செயல். தன்னை மறந்து இருப்பதும், தன்னையே நினைந்து இருப்பதும், என்னுள்ளே மறைந்திருந்த ஈசனை அறிந்தபின் தெளிந்து, பின்னர் உலக சுகங்களைத் துறந்து அவனையே எண்ணித் தவம் புரிந்ததும், அப்போது கிடைத்த அமிர்தத்தை வாரி உண்பதும் ஆகியவை எல்லாம் பிறக்கவும் இறக்கவுமாக இருக்கும் பிறந்த வீடாக விளங்கும் உள்ளத்தில் அடங்கியுள்ளது.


சிவவாக்கியம் - 240

கண்ணிலே யிருப்பனே கருங்கடல் கடைந்தமால்
விண்ணிலே யிருப்பனே மேவியங்கு நிற்பனே
தன்னுளே யிருப்பனே தராதலம் படைத்தவன்
என்னுளே யிருப்பனே யெங்குமாகி நிற்பனே.

பாற்கடலை கடைந்த திருமால் கண்ணின் கருமணியில் உள்ளான். விண்ணாக விளங்கும் மனத்தை மேவி அங்கு நிற்பான். இந்த தராதலம் படைத்த பிரம்மன் தனக்குள்ளே இருப்பான். ஈசன் என்னுள்ளே எங்குமாகி நிற்பான். ஆக மும்மூர்த்திகளையும் உடலில் காணுங்கள்.


சிவவாக்கியம் - 241

கண்ணிலே யிருப்பனே கருங்கடல் கடைந்தமால்
விண்ணிலே யிருப்பனே மேவியங்கு நிற்பனே
தன்னுளே யிருப்பனே தராதலம் படைத்தவன்
என்னுளே யிருப்பனே யெங்குமாகி நிற்பனே.

பாற்கடலை கடைந்த திருமால் கண்ணின் கருமணியில் உள்ளான். விண்ணாக விளங்கும் மனத்தை மேவி அங்கு நிற்பான். இந்த தராதலம் படைத்த பிரம்மன் தனக்குள்ளே இருப்பான். ஈசன் என்னுள்ளே எங்குமாகி நிற்பான். ஆக மும்மூர்த்திகளையும் உடலில் காணுங்கள்.


சிவவாக்கியம் - 242

எள்ளிரும்பு கம்பளி யிடும்பருத்தி வெண்கலம்
அள்ளியுண்ட நாதனுக்கோ ராடைமாடை வத்திரம்
உள்ளிருக்கும் வேதியர்க் குற்றதான மீதிரால்
மெள்ளவந்து நோயனைத்து மீண்டிடுஞ் சிவாயமே.

பசியென வந்தோருக்கு அன்னமிட்டு, தானியங்கள், கம்பளிப் போர்வை, பருத்தி ஆடை, வெண்கலப் பாத்திரங்கள் போன்றவைகளைத் தானமாக கொடுத்து, தர்மங்கள் செய்து வாழ வேண்டும். முதுமையினால் உடல் நலிந்து வீட்டுக்குள் இருக்கும் வேதியர்களுக்குத் தேவையான உதவிகளை தேடிச் சென்று செய்து, தானம் கொடுக்க வேண்டும். இவ்வாறு தான தர்மங்கள் செய்பவர்களுக்கு மெள்ள வந்த நோய்கள் அனைத்தும் அவர்களை விட்டு விலகும். தான தர்மம் செய்வது ஈசனைச் சேர வழி.


சிவவாக்கியம் - 243

ஊரிலுள்ள மனிதர்கா ளொருமனதாய்க் கூடியே
தேரிலே வடத்தையிட்டு செம்பைவைத் திழுக்கிறீர்
ஆரினாலும் மறியொணாத வாதிசித்த நாதரை
பேதையான மனிதர்பண்ணும் பிரளிபாரும் பாருமே.

கோயில் திருவிழாக்களில் தேர் இழுப்பது வழக்கம். ஊரில் உள்ள மனிதர்கள் அனைவரும் ஒருமனதாய் ஒன்றாகக்கூடி தேரில் வடக்கயிற்றைக் கட்டி, செம்பினால் ஆன மூர்த்தங்களை வைத்து இழுக்கிறார்கள். தன் உடலைத் தேராக ஆக்கி, யாராலும் அறிய முடியாத ஆதிசித்த நாதனான ஈசனை அதனுள் இருத்தி, வாசியைக் கயிறாக ஆக்கித் தேரில் உள்ள ஈசனை இழுக்கவேண்டும். தன் உடலில் சோதியாக ஈசன் இருப்பதை உணராத பேதை மனிதர்கள் பண்ணும் பிரளியைப் பாருங்கள்.


சிவவாக்கியம் - 244

மருள்புகுந்த சிந்தையால் மயங்குகின்ற மாந்தரே
குருக்கொடுத்த மந்திரங் கொண்டுநீந்த வல்லிரேல்
குருக்கொடுத்த தொண்டருங் குகனொடிந்த பிள்ளையும்
பருத்திபட்ட பன்னிரண்டு பாடுதான் படுவரே.

சிந்தையில் அருளுக்குப் பதில் மருள் புகுந்ததால் மாயையில் சிக்கி மயங்குகின்ற மாந்தர்களே! குரு கொடுத்த மந்திரத்தால் ஞானவினை புரிந்து ஈசனை உணர்ந்து தெளியுங்கள். சிந்தையில் சிவம் இருப்பதை உணருங்கள். பருத்தி ஆடை ஆவதற்கு முன் பஞ்சானது பன்னிரண்டு பாடுபட்டே உடையாக மாறுகிறது. அதுபோல ஞானகுருவிடம் சீடராகப் பன்னிரண்டு ஆண்டுகள் இருந்து ஞானப்பாடுபட்டு என்றும் மாறா இளமையுடன் இருக்கும் ஈசனின் பிள்ளை முருகனை போல் நீங்களும் ஆகுங்கள்.


சிவவாக்கியம் - 245

அன்னைகர்ப்ப வறையதற்கு ளங்கியின்பிர காசமாய்
அந்தறைக்குள் வந்திருந் தரியவிந்து ரூபமாய்
தன்னையொத்து நின்றபோது தடையறுத்து வெளியதாய்
தங்கநற் பெருமைதந்து தலைவனாய் வளர்ந்ததே.

தாயின் கர்ப்ப அறையினுள் தீயின் ஒளியுடன் வந்த விந்து அங்கிருந்த முட்டையில் சேர்ந்து உருவாக்கி உடலாகிறது. அது முழு வளர்ச்சியுற்று தன்னைப் போல் கை, கால், தலை, முதலியவைகளுடன், தடை அனைத்தையும் உடைத்து வெளி வருகிறது. பின் அதுவே இப்பூமியில் தங்கி வளர்ந்து பல பெருமைகளையும் பெற்றுத் தலைவனாய் வாழ்கிறது. எல்லாம் விந்துவில் உள்ள சோதியில்தான் என்பதை உணருங்கள்.


சிவவாக்கியம் - 246

உன்னையற்ப நேரமு மறந்திருக்க லாகுமோ
உள்ளமீ துறைந்தெனை மறைப்பிலாத சோதியை
பொன்னைவென்ற பேரொளிப் பொருவிலாத வீசனே
பொன்னடிப் பிறப்பிலாமை யென்றுநல்க வேணுமே.

உள்ளம் எனும் கோயிலிலே உள்ள மறைப்பில்லா சோதியாக என்னுள் விளங்கும் ஈசனே! ஒரு நொடி நேரம்கூட உன்னை என்னால் மறந்து இருக்க முடியாது. பொன்னையும் மிஞ்சி சொக்கத் தங்கமான பேரொளியாக பொருந்தி விளங்கும் ஈசனே! உன் பொன்னான திருவடியை என் தலை மேல் வைத்துள்ளாய். அதைப் பிடித்து மேலேறி, நான் பிறவா நிலை நான் பெற அருள்புரியாய்.


சிவவாக்கியம் - 247

பிடித்ததெண்டு மும்மதோ பிரமமான பித்தர்காள்
தடித்தகோல மத்தைவிட்டு சாதிபேதங் கொண்மினோ
வடித்திருந்த தோர்சிவத்தை வாய்மைகூற வல்லிரேல்
திடுக்கமுற்ற வீசனைச் சென்றுகூட லாகுமே.

பித்தர்களே! உங்களுக்குப் பிடித்தவைகள் எல்லாம் என்றும் உங்களுக்கு சொந்தமோ? பிரமமே அனைவராயும் உள்ளது. இதை அறியாமல் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற சாதி பேதங்கள் கொள்ளாதீர்கள். உங்களுக்குள்ளேயே ஓரெழுத்தாக வடிவம் கொண்டிருக்கும் சிவத்தின் உண்மைகள் யாவையும் உணர்ந்து தெளிந்து ஞானவினை புரிந்தீர்களானால் ஈசனை அடையலாம்.


சிவவாக்கியம் - 248

சத்திநீ தயவுநீ தயங்குசங்கி னோசைநீ
சித்திநீ சிவனுநீ சிவாயமா மெழுத்துநீ
முத்திநீ முதலும்நீ மூவரான தேவர்நீ
அத்திபூர மும்முளே யறிந்துணர்ந்து கொள்ளுமே.

சக்தியான அம்மை நீ, தயாவாகிய கருணை நீ, திருமாலின் சங்கோசை நீ, சித்தி நீ, சீவனிலாடும் சிவனும் நீ, சிவாயநம எனும் ஐந்தெழுத்தும் நீ, முத்தி தருபவன் நீ, உயிரின் முதலாம் ஆதி நீ, மும்மூர்த்திகளும் நீ, பூரணமான அகத்தீயுமாய் என்னுள் இருக்கும் ஈசனே! நீ எனக்குள் சீவனாய் இருப்பதை அறிந்து உணர்ந்து கொண்டேன்.


சிவவாக்கியம் - 249

சட்டையிட்டு மணிதுலங்குஞ் சாத்திரச் சழக்கரே
பொத்தகத்தை மெத்தவைத்து போதமோதும் பொய்யரே
நிட்டையேது ஞானமேது நீரிருந்த வட்சரம்
பட்டைஏது சொல்லிரே பாதகக் கபடரே.

பளபளக்கும் பட்டுச்சட்டைகளை அணிந்து கொண்டு கழுத்தில் மணிமாலைகள் மின்ன, சாத்திரங்களை இட்டமுடன் வளைத்துப் பேசி மயக்கும் சாத்திரச் சழக்கரே! பொத்தகங்களை மட்டும் படித்துவிட்டு போதனை செய்யும் பொய்யர்களே! நிட்டை என்பது எது? ஞானம் என்பது எது? திருநீறாக தெய்வம் இருந்த அட்சரம் எது? பட்டை போடுவது எதற்காக என்னும் வினாக்களுக்கு விடை சொல்லுங்கள் கபட வேடதாரிகளே!


சிவவாக்கியம் - 250

உண்மையான சுக்கில முபாயமா யிருந்ததும்
வெண்மையாகி நீரிலே விரைந்துநீர தானதும்
தண்மையான காயமே தரித்துருவ மானதும்
தெண்மையான ஞானிகாள்தெளிந் துரைக்க வேணுமே.

உண்மையான விந்துவே சுக்கிலமாகி உயிர் உருவாகக் காரணம். யாவற்றையும் அறிந்த ஞானிகளே! வெண்மை நிறமான அவ்விந்து சுரோணிதத்தில் விரைந்து கலந்து நீராகிக் கருவாகிப் பின் உடலாக உருவானதையும், அதன் தத்துவங்களையும் தெளிவாக உலகோருக்கு எடுத்துச் சொல்ல வேண்டுமே.


சிவவாக்கியம் - 251

வஞ்சகப் பிறவியை மனத்துளே விரும்பியே
அஞ்செழுத்தி னுண்மையை யறிகிலாத மாந்தர்காள்
வஞ்சகப் பிறவியை வதைத்திடவும் வல்லிரேல்
அஞ்செழுத்தி னுண்மையை யறிந்துகொள்ள லாகுமே.

அஞ்செழுத்தால் ஆகிய இவ்வுடல் எதற்குக் கிட்டியது எனும் உண்மையை அறியாத மாந்தர்களே! வஞ்சகப் பிறவியாம் மானிடப் பிறவியின் மேல் ஆசை கொண்டு, அதனால் இன்னல்பல பட்டு வாழும் மனிதர்களே! மனதின் ஆசைகளைக் களைந்து, ஞானவினை புரிந்து இப்பிறவியை அறுக்க முடியுமானால், ஐந்தெழுத்தின் உண்மைத் தத்துவத்தை அறியமுடியும்.


சிவவாக்கியம் - 252

காயிலாத சோலையிற் கனியுகந்த வண்டுகள்
ஈயிலாத தேனையுண் டிராப்பக லுறங்குறீர்
பாயிலாத கப்பலேறி யக்கரைப் படுமுனே
வாயினா லுரைப்பதாகு மோமவுன ஞானமே.

காயே இல்லாமல் அனைத்தும் கனிகளாகக் காய்த்துள்ள சோலையில், வண்டுகள் கனிக்குள் புகுந்து, உண்டு, அதன் சுவையில் மயங்கி எந்நேரமும் அதற்குள்ளேயே கிடந்து அழிந்து விடுவதைப் போல, இல்லாத தேனைப்போல் உள்ள உலக இன்பங்களில் அமிழ்ந்து இராப்பகல் முழுதும் உறங்குகிறீர். உங்கள் உடலில் உள்ள காயில்லாக் கனி நிறைந்த கற்பகத் தரு எங்கே உள்ளது. மொய்க்காத் தேனாம் அமிர்தம் எங்கே உள்ளது. இவையெல்லாம் அறிந்து ஞானவினையாற்ற, பாய்மரம் இல்லாத கப்பலாம் நம் உடலை வைத்துக்கொண்டு பிறவிப் பெருங்கடல் தாண்டலாம். அப்பொழுது கிட்டும் இன்பத்தை வாயினால் சொல்ல முடியாது; உணர்வால்தான் உணர முடியும். அந்த நிலைதான் மவுனம்.


சிவவாக்கியம் - 253

பேய்கள்பேய்க ளென்கிறீர் பிதற்றுகின்ற பேயர்காள்
பேய்கள்பூசை கொள்ளுமோ பிடாரிபூசை கொள்ளுதோ
ஆதிபூசை கொள்ளுமோ வனாதி பூசை கொள்ளுதோ
காயமான பேயலோ கணக்கறிந்து கொண்டதே.

பேய்கள், பிசாசுகள் என்று பொய்களைப் பிதற்றி அவைகளுக்குப் பூசைகள் போடும் பேயர்களே! பேய்களும் பிடாரிகளும் பூசையை ஏற்றுக்கொள்கின்றவா? ஆதிசக்தி பூசையை ஏற்றுக்கொள்ளுமோ? அநாதியான ஈசன் பூசையை ஏற்றுக்கொள்கின்றானா? உடலெடுத்து வாழும் பேராசைப் பேய்களான மனிதனே பூசை செய்து அதனால் மற்றவர்களை ஏமாற்றிப் பொன்னும் பொருளும் பறித்து வாழ்கின்றனர். உலகோரே! இவ்வுண்மையைப் புரிந்து கொள்ளுங்கள்.


சிவவாக்கியம் - 254

மூலமண்ட லத்திலே முச்சதுர மாதியாய்
நாலுவாச லெம்பிரான் நடுவுதித்த மந்திரம்
கோலிஎட் டிதழுமாய் குளிர்ந்தலர்ந்த தீட்டமாய்
மேலும்வேறு காண்கிலேன் விளைந்ததே சிவாயமே.

நம் உடலில் மூலமண்டலமான இடம் கபாலம். அதற்குள் ஆதி முக்கோணச் சதுரத்துக்குள் உள்ளது. அங்கு நான்கு வாசல் உள்ளது. அனைத்துக்கும் நடுவில் உள்ள மந்திரம் உயிராம் சீவனே! இச்சீவன் எண்சாண் உடலெடுக்கும்; அல்லது குளிர்ந்து காய்ந்து தீட்டாக வெளிவரும். இதைத் தவிற வேறு எதையும் காண்கிலேன். அப்படி உடலெடுத்து வந்ததே சிவாயம்.


சிவவாக்கியம் - 255

ஆதிகூடு நாடியோடி காலைமாலை நீரிலே
சோதிமூல மானநாடி சொல்லிறந்த தூவெளி
யாதிகூடி நெற்பறித்த காரமாதி யாகமாம்
பேதபேத மாகியே பிறந்துட லிறந்ததே.

ஆதியான உயிர் மூச்சு நம் உடலில் உள்ள நாடிகளுக்குள் அல்லும் பகலும் ஓடி உடலுக்கு உயிர் தருகிறது. நீரில் எரியும் நெருப்பாகிய கண்களிலிருந்து உடலின் ஆகாயமான கபாலத்துக்கு ஒரு நாடி ஓடுகிறது. ஆதி கூடி விளைந்த விளைச்சலாம் நெற்பயிரைப் பறிக்க ஞானவினை புரியவேண்டும். ஆதி ஆகமங்கள் சொல்வதும் இதே. இங்ஙனம் செய்யாது மாறாக வாழ்ந்தால் உடல் பிறக்கும்; இறக்கும். இதுவே தொடரும். பிறப்பறுக்க இயலாது.


சிவவாக்கியம் - 256

பாங்கினோ டிருந்துகொண்டு பரமனஞ் செழுத்துளே
யோங்கிநாடி மேலிருந்து உச்சரித்த மந்திரம்
மூங்கில்வெட்டி நாருரித்து முச்சில்செய் விதத்தினி
னாய்ந்தநூலிற் றோன்றுமே யரிந்துணர்ந்து கொள்ளுமே.

ஐந்தெழுத்தினுள்ளே ஈசன் பாங்காக இருக்கிறான். கபாலத்தில் ஞானவினை புரிந்து ஒன்று சேர்த்த நாடியில் நின்று உச்சரித்த மந்திரமாம்ஓம்சிவயநமஈசனுடன் சேர்த்து பிறப்பறுக்கும். மூங்கில் மரங்களை வெட்டி, அதில் நார் உரித்து முறம், கூடை, தட்டு போன்ற பலவகைப் பொருட்கள் செய்கிறோம். அதேபோல் அனைத்து உயிர் உடல்களும் ஒரே பிரம்மத்திலிருந்தே வந்தன என்பதை உணருங்கள். இதைத்தான் திருவாசகம், திருமந்திரம், தேவாரம் போன்ற அனைத்து நூல்களும் உரைக்கின்றன. இவைகளை உணர்ந்து ஞானவினையாற்றுங்கள்.


சிவவாக்கியம் - 257

புண்டரீக மத்தியி லுதித்தெழுந்த சோதியை
மண்டலங்கள் மூன்றினோடு மன்னுகின்ற மாயனை
அண்டரண்ட மூடறுத் தறிந்துணர வல்லிரேல்
கண்டகோயில் தெய்வமென்று கையெடுப்ப தில்லையே.

புண்டரீகமாம் இருதயத் தாமரை கண்களே. கண்களில் உள்ள சோதியை சூரிய, சந்திர அக்கினி கலைகளில் ஒன்றுவிக்கவேண்டும். அப்பொழுது ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றால் மறைக்கப்பட்டுள்ள ஈசன் வெளிப்படுவான். அப்பொழுது உடலில் உள்ள மண்டலங்களுக்குள் ஊடுருவிச் செல்ல ஈசனுடன் ஒன்றலாம். இந்நிலை கிட்டியபின் கண்டகண்ட கோவிலுக்குச் செல்லவேண்டாம்; தெய்வங்களைக் கையெடுத்துக் கும்பிட வேண்டாம்.


சிவவாக்கியம் - 258

அம்பலங்கள் சந்தியி லாடுகின்ற வம்பனே
அன்பனுக்கு ளன்பனாய் நிற்பனாதி வீரனே
அன்பருக்கு ளன்பராய் நின்றவாதி நாயனே
உன்பருக்கு வுண்மையாய் நின்றவுண்மை யுண்மையே.

திருச்சிற்றம்பலம் போன்ற அம்பலங்கள் யாவிலும் நடனமாடும் ஆண்டவனே! உன்னை அன்போடு நினைக்கும் அன்பனுக்குள் அன்பனாய் நிற்கும் ஆதி வீரனே! அன்பருக்குள் அன்பராய் நிற்கும் ஆதி நாயகனே! உண்மை(உன்+மெய்) அடியார்களுக்கு நீ உண்மையாகக் காட்சி தந்து ஆட்கொண்டது யாவும் உண்மையே. அந்த உள் மெய்யே உண்மை என்பதை உணர்ந்து ஞானவினை புரியுங்கள்.


சிவவாக்கியம் - 259

அண்ணலாவ தேதடா வறிந்துரைத்த மந்திரம்
தண்ணலாக வந்தவன் சகலபுராணங் கற்றவன்
கண்ணனாக வந்தவன் காரணத் துதித்தவன்
ஒண்ணதாவ தேதடா உண்மையான மந்திரம்.

ஈசன் நம் உடலில் குருவாகி வந்தவன். குரு எனில் இருளைப் போக்கி ஒளி தருபவன். தண்ணீரில் தணலாய் இருப்பவன். அவன் மூலம்தான் சகல புராணங்களையும் படித்து அறியவேண்டும். கண்ணனாக வந்தவன். அது தான் கண். அதைத் திறந்ததும்தான் சகல காரணப் பிறப்புக்களும் உண்டாகின்றன. அதன் கருவிழியே ஓரெழுத்தாம் குத்தெழுத்து. அதுதான் உண்மையான மந்திரம்; அண்ணலாகிய குரு உபதேசிக்கும் மந்திரம். இதையறிந்து ஞானவினையாற்றி ஈசனை அடையுங்கள்.


சிவவாக்கியம் - 260

தன்மசிந்தை யாமளவுந் தவமறியாத் தன்மையாய்க்
கன்மசிந்தை வெயிலுழன்று கருத்தழிந்த கசடரே
சென்மசென்மந் தேடியுந் தெளியொணாத செல்வனை
நன்மையாக வும்முளே நயந்துகாண வேண்டுமே.

தர்மமே தவம் என்பதை அறியாது, தர்ம சிந்தையே இல்லாததால், அதர்ம வழி சென்று, அதனால் செய்யும் கரும வினைகளால் ஏற்பட்ட பந்த பாசங்களில் சிந்தையை வைத்து, அதனால் ஏற்படும் இன்ப துன்பங்களால் வெயிலில் விழுந்து துடிக்கும் புழுப்போல துடித்து, கருத்தழிந்த கசடர்களே! கோடி கோடி சென்மங்கள் எடுத்துத் தேடினாலும் கண்டு அறிந்து, இதுதான் எனத் தெளிவடைய முடியாத செல்வமான ஈசனை, நம் உடலுக்குள் நயந்து தேடிக் கண்டுபிடித்து, அங்கேயே நினைவை நிறுத்தித் தவம் செய்யுங்கள்.


சிவவாக்கியம் - 261

ஆரலைந்து பூதமா யளவிடாத யோனியும்
பாரமான தேவரும் பழுதிலாத பாசமும்
ஓரொணாத வண்டமு முலோகலோக லோகமும்
சேரவெந்து போயிருந்த தேகமேது செப்புமே.

உயிர் பஞ்சபூதங்களால் எண்ணற்ற யோனிகளில் பிறக்கிறது. உடல் சுமையுடன் மனதில் ஆசாபாசங்களையும் சுமக்கிறது. உடலாகிய அண்டம் உயிர் பிரிந்து பிணமாகி, தன் உடலில் உள்ள உலோகச் சத்துக்களுடன் ஒருசேர வெந்துபோனால், அத்தேகம் என்ன சொல்லும்.


சிவவாக்கியம் - 262

என்னகத்து ளென்னைநா னெங்குநாடி யோடினேன்
என்னகத்து ளென்னைநா னறிந்திலாத தாகையால்
என்னகத்து ளென்னைநா னறிந்துமே தெரிந்தபின்
என்னகத்து ளென்னையன்றி யாதுமொன்று மில்லையே.

என் உள்ளத்தில் இருக்கும் என்னை நான் அறியாததால், என் உள்ளத்தில் என்னை நான் அங்குமிங்கும் நாடித்தேடினேன். அப்படித் தேடிக் கண்டுகொண்டபின் என் உள்ளத்தில் நானாகிய சிவத்தைத் தவிர யாதுமில்லையே.


சிவவாக்கியம் - 263

விண்ணினின்று மின்னெழுந்து மின்னொடுங்கு மாறுபோல்
என்னுள்நின்று மெண்ணுமீச னென்னகத்திருக் கையால்
கண்ணினின்று கண்ணில்தோன்றும் கண்ணறிவி லாமையால்
என்னுளின்ற வென்னையும் யானறிந்த தில்லையே.

விண்ணில் உதிக்கும் மின்னலானது அந்த மின்னலிலேயே ஒடுங்கிவிடுவது போல், என் ஆகாயமான நினைவில் நிற்கும் ஈசன் நானாக என் உள்ளத்தில் இருக்கின்றான். கண்தான் நுழைவாயில் என்னும் உண்மையை அறியாமையால், கண்ணின் கருமணியில் நின்றுள்ள என் ஈசனை அறியாது இருந்தேன். ஈசனும் நானும் ஒன்றே என அறிந்தபின், என்னையும் அவனையும் தவிர யாரும் இல்லையே.


சிவவாக்கியம் - 264

அடக்கினு மடக்கொணாத வம்பலத்தி னூடுபோய்
அடக்கினு மடக்கொணா தன்பிருக்கு மென்னுளே
கிடக்கினு மிருக்கினுங் கிலேசம்வந் திருக்கினும்
நடக்கினு மிடைவிடாத நாதசங் கொலிக்குமே.

எவ்வளவுதான் அடக்கினாலும் அடக்க முடியாத மூச்சுக் காற்றை கபாலத்தில் உள்ள சிற்றம்பலத்தினுள் செலுத்தி, அதை அங்கேயே நிறுத்தி அடக்கவேண்டும். அடங்காத மனதை அன்பால் உருக்கவேண்டும். சதா சர்வ காலமும், எச்செயலைச் செய்து கொண்டிருந்தாலும், எந்நிலையில் இருப்பினும் நினைவை அவன்மேல் வையுங்கள். மனம் உதிக்கும் இடமாம் கண்ணிலேயே மனம் ஒடுங்கும். கருத்தில் நினைவு ஒன்றி இடைவிடாத சங்கோசை ஒலிக்கும்.


சிவவாக்கியம் - 265

மட்டுலாவு தண்துழா யலங்கலாய் புனற்கழல்
விட்டுவீழில் தாகபோக விண்ணில் கண்ணில் வெளியினும்
எட்டினோ டிரண்டினு மிதத்தினால் மனந்தனைக்
கட்டிவீடி லாதுவைத்த காதலின்ப மாகுமே.

துளசியிலிருந்து நறுமணம் எப்போதும் விலகாது. அதுபோல், எப்போதும் என் மனம் நீராக உள்ள ஈசனின் திருவடிகளை திருவடிகளை விட்டு விலகாது. ஆகாயமே எனக்குள் மனமாகி வெட்டவெளியாக உள்ளது. எட்டு இரண்டு எனும் அகார உகாரம் சேர்ந்து பத்தாகிக் கண்ணாகிக் கபாலத்தில் உள்ளது. அதனுள் சென்று ஞானவினை புரிய மனம் அடங்கும். அறிவு வீட்டினுள் சென்று ஈசனுடன் இணையலாம். பேரின்பக் காதல் இன்பம் கிட்டும்.


சிவவாக்கியம் - 266

ஏகமுத்தி மூன்றுமுத்தி நாலுமுத்தி நன்மைசேர்
போகமுற்றி புண்ணியத்தில் முத்தியன்றி முத்தியாய்
நாகமுற்ற சயனமாய் நலங்கடல் கடந்ததீ
யாகமுற்றி யாகிநின்ற தென்கொலாதி தேவனே.

ஈசனைச் சேர்ந்து ஏகமுத்தி பெற ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று மலங்களையும் நீக்கவேண்டும். மனம், புத்தி, அகங்காரம், சித்தம் என்ற நான்கு அந்தக் கரணங்களாலும் நன்மைகளைச் சேர்க்க வேண்டும். ஞானவினை செய்து போகம் முற்றிப் புண்ணியத்தால் முத்தி கிட்டும். மூன்று தீச்சுவாலைகளையும் ஒன்றாக்கி, கபாலத்தில் பள்ளிகொள்ளும் திருமாலாம் முகுளத்தில் உள்ள நினைவில் நிறுத்த, அது ஆதிதேவனிடம் அழைத்துச் செல்லும். அங்கு ஈசனுடன் ஒன்றலாம்.


சிவவாக்கியம் - 267

மூன்றுமுப்பத் தாறினோடு மூன்றுமூன்று மாயமாய்
மூன்றுமுத்தி யாகிமூன்று மூன்றுமூன்று மூன்றுமாய்
தோன்றுசாதி மூன்றதாய் துலக்கமில் விளக்கதாய்
என்றனாவி னுள்புகுந்த தென்கோலோநம் மீசனே.

(தத்துவங்கள் - மூன்று முப்பது ஆறு - தொண்ணூற்றி ஆறு. ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்று மலங்கள்.) மண், பெண், பொன் என்ற மூவாசைகள். 96 தத்துவங்களோடு இவைகள் மாயமாய் அமைந்து உள்ளன. அதில் மூன்று தீயாக சந்திரன், சூரியன், அக்னியாக உள்ளது. உயிர் சூரியநாடி, சந்திர நாடி, சுழுமுனை என்ற நாடிகளில் ஓடும் மூச்சாகும். இவ்வுடலில் ராஜசம், தாமசம், சாத்வீகம் என்ற மூன்று குணங்களும், வாதம், பித்தம், சிலேத்துமம் என்ற மூன்று பிணிகளும், லோக ஏடனை, அர்த்த ஏடனை, புத்திர ஏடனை என்ற மூன்று ஏடனைகளும் சேர்ந்து ஆண், பெண், அலி என்ற மூன்று சாதியாகி விளங்குகின்றது. உடலில் சோதி விளக்காக ஈசன் வாழுகின்றான். இவ்விளக்கத்தை என்நாவின் வழி சொல்லவைத்தாயே, ஈசா.


சிவவாக்கியம் - 268

ஐந்துமைந்தும் ஐந்துமா யல்லவத்து ளாயுமாய்
ஐந்துமூன்று மொன்றுமாகி நின்றவாதி தேவனே
ஐந்துமைந்து மைந்துமா யமைந்தனைத்தும் நின்றநீ
ஐந்துமைந்து மாயநின்னை யாவர்காண வல்லரே.

ஐந்தெழுத்தாகவும், பஞ்ச பூதங்களாகவும், ஐம்புலன்களாகவும் இவ்வுடல் உள்ளது. பஞ்சாக்கரமாகவும், ,, என்னும் ஓமாகவும் உள்ள அக்கரங்கள் ஒன்றாகி ஈசன் உட்லில் வாழ்கிறான். அகாரத்தின் ஆதியாம் குத்தெழுத்துதான் ஓரெழுத்து. ஓரெழுத்தாக உடலில் உள்ள ஆதி தேவனே! சிவயநம என்ற பஞ்சாக்கரமாகவும் ஐந்து வண்ணங்கள் கொண்ட திருவடியாகவும் நின்றுள்ள உன்னை யார் காணவல்லவர்.


சிவவாக்கியம் - 269

ஆறுமாறு மாறுமா யொரைந்துமைந்து மைந்துமாய்
ஏறுசீ ரிரண்டுமூன்று மேழுமாறு மெட்டுமாய்
வேறுவேறு ஞானமாகி மெய்யினோடு பொய்யுமாய்
ஊறுமோசை யாயமர்ந்த மாயமாயம் மாயனே.


ஆறு முதலிய தொகையை வாய்ந்த ரூபங்களைத்‌ தாங்கியிருக்கின்ற தேவரீர்‌, வெவ்வேறு அறிவுகளாகவும்‌, உண்மையாளர்க்கு உண்மையாகவும்‌, பொய்யினர்க்கும்‌ பொய்யாகவும்‌ ஊமை மந்திரத்தால்‌ அறியப்படும்‌ மூர்த்தியாயும்‌ அமர்ந்திருக்கும்‌ மாயம்‌ என்ன மாயமோ? அதையறியேன்‌.

ஆறு ஆறும் ஆறும் (180) 
ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்தும் (16
ஏறு சீர் இரண்டு (32 - 64
மூன்றும் = இடகலை, பிங்கலை, அக்கினிகலை
ஏழும் = ஏழு திரைகள்.
ஆறும் = ஆறு ஆதாரங்கள்.
எட்டு = ஆகாயம்.

சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய பதினெட்டு படிகளை உடைய நிலைகளை அடையவேண்டும். அதற்கு வளிப்பயிற்சி செய்யவேண்டும்.

ஏறுதல் - பூரகம் : சிவசிவ என நான்கு முறை கணித்து வலது நாசித் துவாரத்தினால் தூய மூச்சுக்காற்றை உள்ளிழுத்தல்.

ஆறுதல் - கும்பகம் : சிவசிவ எனப் பதினாறு முறை கணித்து உள்ளிழுத்த மூச்சை மூடி உள்ளே நிறுத்தல்.

ஊறுதல் - இரேசகம் : உள் நிறுத்திய மூச்சை சிவசிவ என எட்டுமுறை கணித்து வல நாசித் துளை வழியே மெதுவாக வெளியில் விடுவது.


சிவவாக்கியம் - 270

எட்டுமெட்டு மெட்டுமா யோரேழுமேழு மேழுமாய்
எட்டுமொன்று மூன்றுமாகி நின்றவாதி தேவனே
எட்டுமாய் பாதமோ டிறைஞ்சி நின்றவண்ணமே
எட்டெழுத்து மோதுவார்க ளல்லல்னீங்கி நிற்பரே.

ஈசன் எட்டு சாண் உடலில் எட்டாகிய அகரமான அறிவாகவும், காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சர்யம், இடம்பம், அகங்காரம் எனும் எட்டு ராகங்களாகவும் எண்குலங்களாகியும் உள்ளான். ஏழாம் நிலையான சகஸ்ராரத்தில் ஏழு திரைகளாகவும், இரசம், இரத்தம், மாமிசம், மேதஸ், அஸ்தி, மச்சை, சுக்கிலம் என்ற ஏழு தாதுக்களாகவும், சரிகமபதநீ எனும் ஏழிசை ஸ்வரங்களாகவும் உள்ளான். ஆதி தேவன், எட்டும் ஒன்றும் ஒன்பதான மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், சூரியன், சந்திரன், வெப்பமான அனல் நட்சத்திரம் ஆகிய பிரணவம் (ப்ர+நவம்), அகாரம், உகாரம், மகாரம் என்ற மூன்றாகிய ஓங்காரமாகி நம் உடலில் உள்ளான். அவனை இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி எனும் அட்டாங்க யோகம் புரிந்து, அகரமாகிய திருப்பாதமாம் கண்களைப்பற்றி, எட்டெழுத்தான ஓம் (அஉம்) சிவயநம என்ற அக்கரத்தால் ஓதுபவர்கள் துன்பங்களை யாவும் நீங்கி வாழ்வார்கள்.


சிவவாக்கியம் - 271

பத்தினோடு பத்துமா யோரேழினோ டொன்பதாய்
பத்துநாற் றிசைக்குநின்ற நாடுபெற்ற நன்மையா
பத்துமாய கொத்தமோடு மத்தலமிக் காதிமால்
பத்தர்கட்க லாதுமுத்தி முத்திமுத்தி யாகுமே.

பத்து நாடிகளாகவும்; பத்து வாயுக்களாகவும் உயிராம் ஆன்மா, ஓர் ஏழினோடும் (1+7) எட்டாகிய உடம்பில் ஒன்பது வாசல்கள் வழியாக இயங்குகிறது. இதில் நாற்பத்து முக்கோணமாய் விளங்கும் ஞானவீட்டில் ஆன்மாவை நிலைநிறுத்தி தியானிப்பதால் நன்மை கிட்டும். எட்டிரண்டும் பத்தாகிய யகாரமான ஆகாயத்தலத்தில், ஆதியாகவும் சிவனாகவும், திருமாலாகவும் பரம்பொருள் உள்ளதென அறிந்து உணரவேண்டும். இது ஞானவினை புரிவோருக்கு முத்தியைத் தரும். ஆன்மா சோதியாகிய ஈசனைச் சேர்ந்து முக்தி பெறும்.

பத்து நாடிகள் - இடகலை, பிங்கலை, சுழுமுனை, சிகுவை, புருடன், காந்தாரி, அத்தி, அலம்புடை, சங்கினி, குக்கு

தச வாயுக்கள் - பிராணன், அபாணன், வியானன், உதானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்செயன்


சிவவாக்கியம் - 272

வாசியாகி நேசமொன்றி வந்தெதிர்ந்த தென்னுக
நேசமாக நாளுலாவ நன்மைசேர் பவங்களில்
வீசிமேல் நிமிர்ந்ததோளி யில்லையாக்கி னாய்கழல்
ஆசையால் மறக்கலா தமரராக லாகுமே.

உண்மையான இறை பக்தியினாலும் குருவின் கருணையாலும் வாசியோக உபதேசம் கிடைத்தது. ஞானம் கிட்டியது. இவ்வாசி யோகத்தை நேசமுடன் எந்நாளும் இடைவிடாது பயிற்சி செய்துவருபவர்களுக்குப் பாவங்கள் யாவும் அகலும். ஞானானுபவம் கிடைக்கும். அவ்வாசியையே பிடித்து மேலேறினால் வெட்டவெளியாக வீசி நிமிர்ந்திருக்கும் ஈசன் திருவடியை அடையும். அத்திருவடியே மெய்; மற்றவைகள் பொய் என உணர்ந்து உலகாயத ஆசைகளில் மூழ்காது வாசியோகம் செய்ய அமரர்கள் போல் பிறவா நிலை பெறலாம்.


சிவவாக்கியம் - 273

எளியதான காயமீதி லெம்பிரா னிருப்பிடம்
அளிவுறாது நின்றதே அகாரமும் உகாரமும்
கொளுகையான சோதியுங் குலாவிநின்ற தவ்விடம்
வெளியதாகு மொன்றிலே விளைந்ததே சிவாயமே.

அகாரமாகவும், உகாரமாகவும், இரண்டும் சேர்ந்த யகாரமாய், எளிமையான என் உடலில் தலையில் உள்ள கண்ணில் உள்ளே ஈசனாகிய எம்பிரான் இருக்கிறான். அங்கேதான் சோதி வடிவில் ஈசன் உலவுகின்றான். வெட்ட வெளியாம் ஆகாயத் தலத்திலே அவன் சிவாயமாய் விளைந்து உள்ளான்.


சிவவாக்கியம் - 274

அஞ்செழுத்து மூன்றெழுத்து என்றுரைக்கும் அன்பர்காள்
அஞ்செழுத்தும் மூன்றெழுத்து மல்லகாணு மப்பொருள்
அஞ்செழுத்தை நெஞ்சழுத்தி யவ்வெழுத் தறிந்தபின்
அஞ்செழுத்து மூன்றெழுத்து மவ்வுமாஞ் சிவாயமே.

அருத்தம் புரியாது அஞ்செழுத்து, மூன்றெழுத்து எனக்கூறும் அன்பர்களே! ஈசனாம் மெய்ப்பொருள் அஞ்செழுத்தோ (சிவயநம), மூன்றெழுத்தோ (ஓம்=++ம்) அல்ல. சிவயநமவை நினைவினில் ஒன்றி ஓரெழுத்தாம் சிகாரத்தை அறிந்தபின், ஈசன் அஞ்செழுத்தாகவும் மூன்றெழுத்தாகவும் ஆகி நிற்பதை உணருங்கள்.


சிவவாக்கியம் - 275

பொய்யுரைக்க போதமென்று பொய்யருக் கிருக்கையால்
மெய்யுரைக்க வேண்டுதில்லை மெய்யர்மெய்க் கிலாமையால்
வையகத்தி னுண்மைதன்னை வாய்திறக்க வஞ்சினேன்
நையவைத்த தென்கொலோ நமசிவாய நாதனே.

நான் சித்தன்; ஞானி; அவதாரப் பிறப்பு; குரு; ஆச்சார்யார் எனப் பொய்கள் சொல்கிறார்கள். நான் உபதேசிப்பது வேதத்தின் தெளிவு; மற்றவையெல்லாம் பொய் என மக்களை ஏமாற்றுகிறார்கள். பணம் பறிக்கின்றனர். உண்மையை விரும்பும் சில நல்லவர்கள் கூட இப்பொய்களை நம்புகிறார்கள். ஆதலால் மெய்ப்பொருளை எடுத்து உரைக்க முடியவில்லை. உள் மெய் ஞானம் இதுதான் என்னும் உண்மையை வாய் திறந்து சொல்லவும் அஞ்சினேன். இங்ஙனம் என் மனத்தை நையச் செய்த்தும் ஏனோ, என் ஈசனே?


சிவவாக்கியம் - 276

ஒன்றையொன்று கொன்றுகூட னுணவுசெய் திருக்கினும்
மன்றினூடு பொய்களவு மாறுவேறு செய்யினும்
பன்றிதேடு மீசனைப் பரிந்துகூட வல்லிரேல்
அன்றுதேவ ரும்முளே யறிந்துணர்ந்து கொள்ளுமே.

ஒன்றையொன்று கொன்று தின்று வாழ்வதுதான் இவ்வுலக இயற்கை. இவ்வுலகில் வாழும் மனிதர்கள் திருட்டு, புரட்டு, பொய், களவு, ஏமாற்று ஆகியனவற்றைச் செய்துதான் வாழ்கிறார்கள். ஆனால் இவையெல்லாம் நிலையற்றவை; நிலையான மெய்ப்பொருளை உணரவேண்டும் என விழைபவர்கள், உலகாயத ஆசைகளைத் துறந்து ஈசனைத் தேடுகின்றனர். பக்தி, யோகம், ஞான மார்க்கங்களில் செல்கின்றனர். பன்றி உருவெடுத்து நிலத்தைக் கீறி ஈசனின் அடியைத் தேடினார் திருமால். அதுபோல, ஈசனின் திருவடியைத் தன் உடலிலே தோண்டிக் கண்டுகொண்டு, ஞானவினையாற்ற நாமும் ஈசனை உணர்ந்து தேவராகலாம்; பிறப்பறுக்கலாம்.


சிவவாக்கியம் - 277

மச்சகத்துளே யிவர்ந்து மாயைபேசும் வாயுவை
அச்சகத்துளே யிருந் தறிவுணர்த்திக் கொள்விரேல்
அச்சகத்துளே யிருந் தறிவுணர்த்திக் கொண்டபின்
இச்சையற்ற வெம்பிரா னெங்குமாகி நிற்பனே.

உடலில் உயிராய் ஓடும் பிராணனான மூச்சுக்காற்று வெளியேறினால் மரணம். இவ்வுலக வாழ்வில், நாம் அனுபவிக்கும் இகவாழ்வில் உள்ளே இருக்கும் மூச்சுக்காற்றைவிட வெளியேற்றுவது அதிகம். ஆயுள் குறைகிறது. இரேசக, பூரக, கும்பகம் எனும் வளிப்பயிற்சியால் பிராணனைக் கட்டுப்படுத்த வேண்டும். இது கைவரப்பெற்றால், ஆசையழித்த ஈசன் எங்கும் பரவி இருப்பதை உணரலாம்.


சிவவாக்கியம் - 278

வயலிலே முளைத்தசெந்நெல் களையதான வாறுபோல்
உலகினோரும் வண்மைகூறில் வுய்யுமாற தெங்ஙனே
விரகிலே முளைத்தெழுந்த மெய்யலாது பொய்யதாய்
நரகிலே பிறந்திருந்து நாடுபட்ட பாடதே.

உழவு செய்யும்போது பயிர் வளர்க்கும் முறை தவறினால் வயலிலே முளைக்கும் செந்நெல் களையாகும். அது போல பிறவி எடுத்த நோக்கம் அறியாது உலகிலுள்ள மனிதர்கள் நான், எனது என்று வண்மைகள் பேசிக் கொண்டிருந்தால் இப்பிறவிப் பிணியிலிருந்து தப்பிப் பிழைக்கும் வழி என்ன? விறகிலே முளைத்து எழுகின்ற தீயைப் போல் விரகத் தீயால் ஆண், பெண் சேர்ந்து முளைத்த இப்பொய்யான உடலை மெய்யென நினைக்கிறோம். உடலிலே மெய்சோதி இருப்பதை உணராது, பிறந்த நோக்கம் அறியாது வாழ்வதால், மீண்டும் பிறவிகளெடுத்து மாள்கிறோம். மெய்யாம் உடலே பொய்யாகி மாண்டு நரகத்திலே விழுகிறது. இதுதான் நாட்டில் நடக்கிறது.


சிவவாக்கியம் - 279

ஆடுகின்ற வெம்பிரானை யங்குமிங்கு மென்றுநீர்
தேடுகின்ற பாவிகாள் தெளிந்ததொன்றை யோர்கிலீர்
காடுநாடு வீடுவீண் கலந்துநின்ற கள்வனை
நாடியோடி யும்முளே நயந்துணர்ந்து பாருமே.

உங்கள் உடலுக்குள்ளே சித்தத்தில் நின்று நடனமாடும் எம்பிரானை அறியாமல் அங்குமிங்கும் தேடுகின்ற பாவிகளே!! தெளிந்த மெய்ப்பொருளாக விளங்கும் அந்த ஒரு பொருளை அறிந்து அதனுள்ளே சென்று நினைவில் நிற்கத் தெரியாது அலைகின்றீர். காட்டிலும், நாட்டிலும், வீட்டிலும், ஆகாயத்திலும் என்று கண்டவிடமெல்லாம் பரவி நிற்கும் கள்வனாம் ஈசனை, உங்கள் உடலிலேயே தேடி அறிந்து உணர்ந்து பாருங்கள்.


சிவவாக்கியம் - 280

ஆடுகின்ற வண்டர்கூடு மப்புற மதிப்புறம்
தேடுநாலு வேதமுந் தேவரான மூவரும்
நீடுவாழி பூதமும் நின்றதோர் நிலைகளும்
ஆடுவாழி னொழியலா தனைத்துமில்லை யில்லையே.

உடலினுள்ளே ஆடும் அருட்சோதியாக உள்ளது கண்கள். அக்கண்கள் சேருமிடம் அறிவு உள்ள இடம். நான்கு வேதங்களும் மும்மூர்த்திகளும் தேடுவது அதையே. ஐம்பூதங்களும், அவைகள் நின்ற நிலைகளும் ஆடவல்லானின் திருவடிகளே. இதையொழிய அனைத்தும் மெய் இல்லை.


சிவவாக்கியம் - 281

ஆவதும் பரத்துளே யழிவதும் பரத்துளே
போவதும் பரத்துளே புகுவதும் பரத்துளே
தேவரும் பரத்துளே திசைகளும் பரத்துளே
யாவரும் பரத்துளே யானுமப் பரத்துளே.

சகல சீவராசிகளும் பிறப்பதும் பின் இறந்து கலப்பதும் பரமாகிய பரிபூரணத்துள்ளேதான். இப்பிறவிப் பெருங்கடலைத் தாண்ட நாம் போகவேண்டியது பரமாகிய கண்ணுக்குள்ளே; புகவேண்டிய இடமும் அதுதான். அங்கேதான் தேவர்களும் திசைகளுமுள்ளன. எல்லோரும் இருப்பதும், நானும் இருப்பதும் அந்தப் பரிபூரணத்துக்குள்ளேதான்.


சிவவாக்கியம் - 282

ஏழுபா ரெழுகட லிடங்களெட்டு வெற்புடன்
சூழுவான் கிரிகடந்து சொல்லு மேழுலகமும்
ஆழிமால் விசும்புகொள் பிரமாண்ட ரண்டவண்டமும்
ஊழியா னொளிக்குளே யுதித்துட னொடுங்குமே.

அதலம், விதலம், சுதலம், தராதலம், இரசாதலம், மகாதலம், பாதாளம் ஆகியன கீழ் ஏழு உலகங்கள். பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், மகர்லோகம், ஜனலோகம், தபோலோகம், சத்தியலோகம் ஆகிய ஏழு மேல் உலகங்கள்.
கீழ் ஏழு உலகங்களும், ஏழு கடல்களும், எட்டுத் திசைகளும் வெப்பம் சூழ்ந்த மலை கடந்து உள்ள மேல் ஏழு உலகங்களும், பாற்கடல் பள்ளிகொண்ட திருமாலும், அண்டங்கள் யாவையும் ஊழியானாம் ஈசன் என்னும் சோதிக்குள்ளே உதித்துப் பின் ஒடுங்கும். சகலமும் உதிப்பதும் அடங்குவதும் சோதிக்குள்ளே. உடலில் உள்ள சோதி கண்கள்.


சிவவாக்கியம் - 283

கயத்துநீ ரிறைக்குறீர் கைகள்சோர்ந்து நிற்பதேன்
மனத்துளீர மொன்றிலாத மதியிலாத மாந்தர்காள்
அகத்துளீரங் கொண்டுநீ ரழுக்கறுக்க வல்லிரேல்
நினைத்திருந்த சோதியும் நீயும்நானு மொன்றலோ.

ஈவு, இரக்கம் ஆகிய ஈரம் எதுவும் இல்லாத மனத்தை உடைய மாந்தர்களே! மொள்ள சால் இல்லாது கயிற்றை மட்டும் வைத்துக்கொண்டு கேணியிலிருந்து நீர் இறைக்கிறீர்கள். கைதான் வலிக்குமே ஒழிய நீரை இறைக்க முடியாது. உங்கள் உள்ளத்தில் அன்பு, இரக்கம் ஆகிய ஈரம் சுரக்கவேண்டும். அதன்பின், செய்த பாவங்களாம் அழுக்கை அறுக்க முடியுமானால், நினைவில் நின்றுள்ள சோதிக்குள், நீயும், நானும் ஒன்றி விடுவோம். பின் அனைத்தும் பிரமம் என்பது புரியும்.


சிவவாக்கியம் - 284

நீரிலே பிறந்திருந்து நீர்சடங்கு செய்கிறீர்
ஆரையுன்னி நீரெலா மவத்திலே யிறைக்கிறீர்
வேரையுன்னி வித்தையுன்னி வித்திலே முளைத்தெழுஞ்
சீரையுன்ன வல்லிரேற் சிவபத மடைவிரே.

நீரால் உருவாகிய இவ்வுடலை வைத்து நீங்கள் சடங்குகள் செய்கிறீர்கள். யாரை எண்ணி நீரை இறைக்கிறீர். வேராக உள்ள ஆதியை எண்ணி, நினைவாகிய வித்தை எண்ணி, அதில் முளைத்தெழும் சீர்பெறும் சோதியை எண்ணி, அதில் கலக்க சிவபதம் அடையலாம்.


சிவவாக்கியம் - 285

பத்தொடுற்ற வாசலிற் பரந்துமூல வக்கர
முத்திசித்தி தொந்தமென் றியங்குகின்ற மூலமே
மத்தசித்த வைம்புலன் மகரமான கூத்தையே
அத்தியூரர் தம்முளே யமைந்ததே சிவாயமே.

உடலாகிய வீட்டுக்கு ஒன்பது வாசல். அதன்றி பத்தாம் வாசல் ஒன்று உண்டு. அங்குதான் மூல அக்கரமாம் ஓரெழுத்தாம் ஆதி உள்ளது. அதுவே முத்தி பெறுவதற்கும் சித்தி அடைவதற்கும் மூலம். மனம், புத்தி, சித்தம் அகங்காரம் எனும் அந்தகரணங்களையும், மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்புலன்களையும்ம்என்ற மகாரத்தில் குவித்து ஓத சோதியில் ஒன்றலாம். சோதியாக, தீயாக விளங்கும் ஈசன் நமக்குள்ளேயே இருப்பதை உணரலாலம்.


சிவவாக்கியம் - 286

அணுவினோடு மண்டமா யளவிடாத சோதியை
குணமதாகி யும்முளே குறித்திருக்கில் முத்தியா
முணமுணென்று உம்முளே விரலையொன்றி மீளவும்
தினந்தினம் மயக்குவீர் செம்புபூசை பண்ணியே.

முணுமுணுவென முனுத்தங்களை உச்சரித்து, அவைகளை விரல்களால் எண்ணி, பூசை செய்கிறேன் எனத் தானும் மயங்கி, தினமும் மற்றவர்களை மயக்கி, செம்பு சிலைகளை வைத்து பூசையிடும் வேடதாரிகளே! அணுவாகவும், அண்டமாகவும், அனைத்துமாகவும், எதனாலும் அளவிட முடியாத சோதியாகவும் இருப்பவன் ஈசனே. அவன் எண்குணத்தானாக இருப்பதை உணருங்கள். அவனையே நினைவில் நிறுத்தித் தவம் புரிவோருக்கு முக்தி கிட்டும்.


சிவவாக்கியம் - 287

மூலமான வக்கர முகப்பதற்கு முன்னெலாம்
மூடமாக மூடுகின்ற மூடமேது மூடரே
காலனான வஞ்சுபூத மஞ்சிலே யொடுங்கினால்
ஆதியோடு கூடுமோ வனாதியோடு கூடுமோ.

பிரசாதத்தை ஒரு பாத்திரத்தில் வைத்து மூடி, ஒருவரும் முகர்ந்து விடாமல் இறைவருக்கு படைப்பதாக நினைத்து, திறந்து மூடி நைவேத்தியம் செய்யும் மூடர்களே! அனைத்துக்கும் மூலமாய் இருக்கும் ஈசன் சமைக்கும்போதே முகர்ந்து விடுகிறானே! எமன் வந்து உயிரை எடுக்கும் பொழுது பஞ்ச பூதங்களும், அதனதன் கூறுகளில் கூடுமோ? அல்லது அனாதியாம் ஈசனோடு கூடுமோ?


சிவவாக்கியம் - 288

முச்சதுர மூலமாகி முடிவுமாகி யேகமாய்
அச்சதுர மாகியே யடங்கியோ ரெழுத்துமாய்
மெய்ச்சதுர மெய்யுளே விளங்குஞான தீபமாய்
உச்சரிக்கும் மந்திரத்தி னுண்மையே சிவாயமே.

இரு கண்களால் தலை உச்சியைக் காணும்போது உண்டாவது முக்கோணமாம் முச்சதுரம். அதுவே ஏக வழி. மூலவழி; முடிவான வழி. ஊசிப்பார்வை நாசி நுனிமீது வைக்கின் அதுவே மேலெழுந்து முக்கோணமாகி, பார்வை சுருங்கச் சுருங்க முக்கோணம் மறைந்து(அடங்கி) ஓரெழுத்தாம் குத்தெழுத்தாக இவ்வுடலில் விளங்கும். அங்கேதான் ஞான சோதி உள்ளது. அதன்மேல் நினைவு வைத்து தவம் புரியும்போது முனுமுனுக்கும் மந்திரத்தின் உண்மையே சிவாயம்.


சிவவாக்கியம் - 289

வண்டுலங்கள் போலுநீர் மனத்துமா சறுக்கிலீர்
குண்டலங்கள் போலுநீர் குளத்திலே முழுகுறீர்
பண்டுமுங்கள் நான்முகன் பறந்துதேடி காண்கிலான்
கண்டிருக்கு மும்முளே கலந்திருப்பர் காணுமே.

தேன்வண்டு தேன் எடுக்கவேண்டும் என்னும் ஒரே குறிக்கோளோடு நல்ல தேன் உள்ள மலர்களை மட்டும் நாடித் தேனைச் சேகரிக்கும். அதுபோல கவனம் சிதறாது ஒரே நினைவோடு தவம் செய்து மனத்தில் உள்ள அழுக்குகளை அகற்றத் தெரியாமல், உடல் அழுக்கை அகற்றும் மாடுகளைப் போல் குளத்தில் மூழ்குகிறீர்கள். என்ன பயன்? ஈசனின் முடியைக் காணச் சென்ற பெரு(பிர)மனால் பறந்து தேடியும் காண முடியவில்லை. இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடத்தில் தேடினால் கிட்டாது. நம் உடலில் ஒளியுள்ள கண்ணைக் கொண்டு கவனம் சிதறாது ஒரே நினைவோடு தவம் செய்தால், ஈசன் உம்மோடு கலந்திருப்பதைக் காணலாம்.


சிவவாக்கியம் - 290

நின்றதன் றிருந்ததன்று நேரிதன்று கூறிதன்று
பந்தமன்று வீடுமன்று பாவகங்க ளற்றது
கெந்தமன்று கேள்வியன்று கேடிலாத வானிலே
அந்தமின்றி நின்றதொன்றை யெங்ஙனே யுரைப்பதே.

பரிபூரணமாம் பரம்பொருள் ஒரு இடத்தில் நின்றது இல்லை; இருந்தது இல்லை. அதற்கு ஒப்பானது(சமமானது) ஒன்றுமில்லை; சொற்களால் கூற இயலாது; அதற்கு எந்த பந்தமும் இல்லை; எந்த வீடும் இல்லை. பாவங்களற்றது; மணங்கள் இல்லாதது; கேள்விகளற்றது; கேடில்லாத வானிலே முடிவற்று நின்ற ஒன்றை எப்படி உரைப்பது?


சிவவாக்கியம் - 291

பொருந்துநீரு மும்முளே புகுந்துநின்ற காரணம்
எருதிரண்டு கன்றையீன்ற வேகமொன்றை யோர்கிலீர்
அருகிருந்து சாவுகின்ற யாவையு மறிந்திலீர்
குருவிருந் துலாவுகின்ற கோலமென்ன கோலமே.

நீராகிய விந்துவினால் உருவாகிய உடலில் இரத்தமாம் நீர் உலவுவதன் காரணத்தை அறியமாட்டீர்கள். சூரிய சந்திர கலைகள் சேர்ந்து எழுப்பிய குண்டலினியின் வேகத்தை நினைத்துப் பார்க்க மாட்டீர்கள். அருகே வாழ்ந்து வந்தவர்கள் ஏன் இறந்தார்கள் என்றும் அறியீர். அதுபோல உடலில் ஈசன் இருக்குமிடத்தையும் உணரமாட்டீர்கள். அந்த ஒளிவீசும் குரு இவ்வுடலில் உலவும் கோலத்தை எவ்வாறு சொல்வேன்.


சிவவாக்கியம் - 292

அம்பரத்து ளாடுகின்ற வஞ்செழுத்து நீயலோ
சிம்புளாய் பரந்துநின்ற சிற்பரமு நீயலோ
எம்பிரானு மெவ்வுயிர்க்கு மேகபோக மாதலால்
எம்பிரானு நானுமா யிருந்ததே சிவாயமே.

அம்பரமாம் ஆலயத்துள்ளே ஆடுகிறான் பரமன்; அதுபோல் உடலான அம்பரத்துள்ளே ஆடுகிறது ஐந்தெழுத்து ஆன்மா. சிம்புள் என்னும் பறவை வானிலேயே முட்டை இடும். அம்முட்டை கீழே விழும்போதே அதன் குஞ்சு வெளிவந்து இறக்கைகள் முளைத்து தரையைத் தொடாமல் பறந்து சென்று வானில் தாயைச் சேரும். அது போலவே பூமியாகிய இகலோக சுகங்களைத் தொடாது, வானமாகிய மனத்தில் பரவி இருக்கும் பரம்பொருளும் நீ அல்லவா? எம்பிரானாகிய ஈசன் எல்லா உயிர்களுக்கும் பொதுவான ஒன்று. ஆகவே, அவனிருக்குமிடம் அறிந்து, உணர்ந்து தவம் செய்யுங்கள். எம்பிரானாகவும் நானாகவும் இருந்தது சிவாயமே.


சிவவாக்கியம் - 293

ஈரொளிய திங்களே யியங்கிநின்றது தப்புறம்
பேரொளிய திங்களே யாவரும் அறிகிலீர்
காரொளிய படலமுங் கடந்துபோன தற்பரம்
பேரொளிப் பெரும்பத மேகநாத பாதமே.

நம் முகத்தில், சூரியன், சந்திரன் ஆகிய இரண்டு ஒளிகள் இயங்கி வருகின்றன. அவைகளே இரு கண்கள். அதற்கு அப்புறம், அதாவது கபாலத்துக்குள்ளே, ஒரு பேரொளி உள்ளது. அதை யாரும் அறியீர். படலங்களாம் திரைகளைக் கடந்து சென்றால் ஏகநாதனின் திருவடிப் பேரொளியில் கலக்கலாம்.


சிவவாக்கியம் - 294

கொள்ளொணாது மெல்லொணாது கோதறக் குதட்டொணா
தள்ளொணா தணுகொணா தாகலான் மனத்துளே
தெள்ளொணாது தெளியொணாது சிற்பரத்தி னுட்பயன்
விள்ளொணாத பொருளைநான் விளம்புமாற தெங்ஙனே.

பரம்பொருள், கொள்ள முடியாதது, மெல்ல முடியாதது; மென்று சக்கையின்றிக் குதப்ப முடியாதது. தள்ள முடியாதது; அணுக முடியாதது. மனத்தினுள்ளே தெள்ளிப்பார்க்காமல் தெளிந்து உணராமல் இத்தகைய சிற்பரமாம் பரம்பொருளின் உட்பயனை உணர இயலாது. இவ்வாறு சொல்ல முடியாத பொருளை நான் சொல்லுவது எவ்வாறு? அது உணரவேண்டியது. உணர ஒரே வழி தவம் செய்வதுதான்.


சிவவாக்கியம் - 295

வாக்கினால் மனத்தினால் மதித்தகா ரணத்தினால்
நோக்கொணாத நோக்கையுன்னி நோக்கையாவர் நோக்குவார்
நோக்கொணாத நோக்குவந்து நோக்கநோக்க நோக்கிடில்
நோக்கொணாத நோக்குவந்து நோக்கையெங்க ணோக்குமே.

வாக்கினாலும் மனத்தினாலும் ஈசனை சதாசர்வ காலமும் மதித்து, நினைத்த காரணத்தால் மட்டுமே ஈசனை அடையமுடியும். பார்க்கமுடியாத பார்வையை நினைத்து அப்பார்வையை யார் பார்க்க முடியும்? அதாவது, இரு கண்களினாலும் கபாலத்துக்குள் ஐம்புலன்களும் சந்திக்கும் இடத்தை நோக்க வேண்டும். அப்படிப் பார்க்கமுடியாத பார்வையை நினைத்து அப்பார்வையைப் பார்த்துப் பார்த்து தவம் செய்ய அகக்கண் திறக்கும். பின்னர் பார்க்கும் இடமெல்லாம் பராபரமே தெரியும்.


சிவவாக்கியம் - 296

உள்ளினும் புறம்பினு முலகமெங்கணும் பரந்
தெள்ளிலெண்ணெய் போலநின் றியங்குகின்ற வெம்பிரான்
மெள்ளவந் தென்னுட்புகுந்து மெய்த்தவம் புரிந்தபின்
வள்ளலென்ன வள்ளலுக்கு வண்ணமென்ன வண்ணமே.

உடலின் உள்ளே மனமாகவும், வெளியே ஆகாயத் தலமாகவும், எள்ளில் எப்படி எண்ணை உள்ளதோ அதுபோல ஈசன் நின்று இயங்குகிறான். அவனே மெல்ல என்னுள் புகுந்து என்னை மெய்யில் தவம் புரிய வைக்கிறான். அத்தவம் புரிந்தபின் அவனே என்னை ஆட்கொள்ளுகிறான். அவன் வள்ளல். அவனுக்கு ஆயிரம் வண்ணம். அதில் எந்த வண்ணமென்று நான் சொல்ல?


சிவவாக்கியம் - 297

வேதமொன்று கண்டிலேன் வெம்பிறப் பிலாமையால்
போதநின்ற வடிவதாய் புவனமெங்கு மாயினாய்
சோதியுள் ளொளியுமாய்த் துரியமோ டதீதமாய்
ஆதிமூல மாதியா யமைந்ததே சிவாயமே.

நான்கு வேதங்களும் கூறும் இறைவனை நான் கண்டதில்லை. அப்படிக் கண்டிருந்தால் இக்கொடிய பிறப்பை ஒழித்திருக்கலாம். தெளிவுடன் நின்ற வடிவாய் இவ்வுலகமெங்கும் ஆயினாய்; சோதியில் ஒளியாய், துரியம் துரியாதீதமாய், ஆதி மூலமாய், ஆதியாய் அமைந்ததே சிவாயம்.


சிவவாக்கியம் - 298

சாணிரு மடங்கினாற் சரிந்தகொண்டை தன்னுளே
பேணியப் பதிக்குளே பிறந்திறந் துழலுவீர்
தோணியான வைவரைத் துறந்தறுக்க வல்லிரேல்
காணிகண்டு கோடியாய்க் கலந்ததே சிவாயமே.

வயிற்றிலிருந்து இரண்டு சாண் அளவுள்ள சரிந்த உறுப்புக்குள்ளே உருவாகிப் பிறந்து, இறந்து உழலுவீர். தோணியான இவ்வுடலில் நாட்டாமை செய்யும் ஐம்புலன்களால் ஏற்படும் இச்சை முதலிய மாசுக்களை முழுவதுமாக அறுக்கமுடியுமானால் ஈசனை இப்பூமியில் எங்குவேண்டுமாகிலும் காணலாம். கோடி உயிர்களிலும் சிவாயம் கலந்திருப்பதை உணரலாம்.


சிவவாக்கியம் - 299

அஞ்சுகோடி மந்திர மஞ்சுளே யடங்கினால்
நெஞ்சுகூற வும்முளே நினைப்பதோ ரெழுத்துளே
அஞ்சுநாலு மூன்றதாகி யும்முளே யடங்கினால்
அஞ்சுமோ ரெழுத்ததா யமைந்ததே சிவாயமே.

அஞ்சுகோடி மந்திரங்கள் அனைத்தும் சிவயநம என்ற அஞ்செழுத்து மந்திரத்தில் அடக்கம். அதை உங்களுக்குள்ளே மனதில் கூறி, நினைவில் நின்று சிகாராமாகிய ஓரெழுத்தைக் கருத்தில் பதிக்க, அஞ்சு பூதங்கள், நான்கு அந்தக்கரணங்கள், ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களும் அடங்கும். அப்போது அஞ்சு எழுத்துக்களும் ஓரெழுத்தாகி அமைந்ததே சிவாயம்.


சிவவாக்கியம் - 300

அக்கரந்த வக்கரத்தி லுட்கரந்த வக்கரம்
சக்கரத்து சிவ்வையுண்டு சம்புளத் திருந்ததும்
எட்கரந்த வெண்ணெய்போ லெவ்வெழுத்து மெம்பிரான்
உட்கரந்து நின்றநேர்மை யாவர்காண வல்லரே.

என்ற ஆயுத எழுத்தின் அட்சரத்தில் உள்ளே இருக்கும் புள்ளியே ஊமை எழுத்து. வெட்டாத சக்கரமும் அதுவே. அது சிகாரத்திலேறி சம்புவாகிய ஈசன் உள்ளத்தில் உள்ளது. எள்ளுக்குள் எண்ணெய் போல் எல்லா எழுத்துக்களிலும் (.) குத்து எழுத்தாக எம்பிரான் அமர்ந்து உள்ளான். பிண்டத்தில் குத்தெழுத்தாம் கண்ணின் கருவிழி. அதற்குள் சோதி வடிவில் ஈசன் உள்ளான் எனும் உண்மையை யார் காண வல்லவர். தவம் செய்தவர்தான்.


சிவவாக்கியம் - 301

ஆகமத்தி னுட்பொரு ளகண்டமூல மாதலால்
தாகபோக மன்றியே தரித்ததற் பரமும்நீ
ஏகபாதம் வைத்தனை யுணர்த்துமஞ் செழுத்துளே
ஏகபோக மாகியே யிருந்ததே சிவாயமே.

ஆகமங்கள் கூறும் உட்பொருள்; அகண்டங்களின் மூலமாக உள்ள பரம்பொருள்; இவையிரண்டும் ஒன்றேயான ஈசன்தான். விரக தாகம், சிற்றின்ப போகம், ஆகியவை ஏதும் இல்லாத தற்பரமான சதாசிவன் நீயே. நீ எனக்குள் உதித்தாய். அஞ்செழுத்தாம் உடலிலே, கண்ணின் கருமணியான ஏகபாதம் வைத்தாய். ஏகபாதத்தைப் பிடித்து உன்னையே உள்ளத்தில் வைத்துத் தவம் இயற்ற ஏகபோகமாக சிவாயம் இருப்பதை உணரலாம்.


சிவவாக்கியம் - 302

மூலவாசல் மீதுளே முச்சதுர மாகியே
நாலுவாச லெண்விரல் நடுவுதித்த மந்திரம்
கோலமொன்று மஞ்சுமாகு மிங்கலைந்து நின்றநீ
வேறுவேறு கண்டிலேன் விளைந்ததே சிவாயமே.

உடலுக்கு ஒன்பது வாயில். மூல வாசல் பத்தாம் வாசல். அதுவே கபாலக் குகை வாயில். நாலு வாசல் என்பது கண் இமைகளாகும். இவை மூன்றும் சேர முச்சதுரமாம் முக்கோணம் கிட்டும். இதன் சுற்றளவு எட்டு விரல் நடு அளவு. இம்முக்கோணத்தில் நினைவை வைத்து பிராணனைக் கட்ட ஈசனின் கோலம் அஞ்சாகும். இங்குமங்கும் அலைந்து திரியும் நீ இத்தவத்தைச் செய். இஞ்ஞனம் செய்த நான் வேறெதையும் கண்டிலேன். ஆக சிவாயம் என்னுள் விளைந்தது.


சிவவாக்கியம் - 303

சுக்கிலத் தடியுளே சுழித்ததோ ரெழுத்துளே
அக்கரத் தடியுளே யமர்ந்தவாதி சோதிநீ
உக்கரத் தடியுளே யுணர்ந்தவஞ் செழுத்துளே
அக்கரம தாகியே யமர்ந்ததே சிவாயமே.

ஆணுறுப்புக்குள்ளே விந்து சுழித்த ஒரு எழுத்துப்போல் உள்ளது. அகாரமான உடலில் ஆதியான சோதியாக அமர்ந்து இருப்பவன் ஈசன். அவனை உகாரமான உயிரில் உணரவேண்டும். அஞ்செழுத்துக்குள்ளே அவனே ஒரெழுத்தாகி அமர்ந்து இருப்பது சிவாயமே.


சிவவாக்கியம் - 304

குண்டலத்து ளேயுளே குறித்தகத்து நாயகன்
கண்டவந்த மண்டலங் கருத்தழித்த கூத்தனை
விண்டலர்ந்த சந்திரன் விளங்குகின்ற மெய்ப்பொருள்
கண்டுகொண்ட மண்டலஞ் சிவாயமல்ல தில்லையே.

காதில் அணியும் குண்டலங்கள் தொங்கி ஆடும். அதுபோல, முகத்தில் இரு பளபளக்கும் குண்டலங்கள் ஆடிக்கொண்டு இருக்கின்றன. அவைகள்தான் கண்கள். அதற்குள்ளேதான் சோதி வடிவான ஈசன் உள்ளான் என்பதைக் குறிப்பால் அறிந்து கொள்ளுங்கள். கண்ட அந்த மண்டலத்திலே இருளாகிய அஞ்ஞானக் கருத்துக்களை அழித்து, சந்திரனைத் தலையில் தாங்கி நடனமிடும் மெய்ப்பொருள் ஈசன் உள்ளான். அப்படிக் குறித்த இடத்தில் ஈசனைக் கண்டுகொண்டால், அவ்விடத்தே சிவாயம் மட்டுமே இருக்கும்.


சிவவாக்கியம் - 305

சுற்றுமைந்து கூடமொன்று சொல்லிறந்த தோர்வெளி
சத்தியுஞ் சிவனுமாக நின்றதன்மை யோர்கிலீர்
சத்தியாவ தும்முடல் தயங்குசீவ னுட்சிவம்
பித்தர்கா ளறிந்திலீர் பிரானிருந்த கோலமே.

ஐம்பூதங்களால் உருவாக்கப்பட்ட உடலில் மவுனவெளிக் கூடம் உள்ளது. அம்மையாம் உடலில் சீவனாம் சிவன் நின்ற தன்மையை அறிவீர்களா? இங்ஙனம் சிவசக்தி நம் உடலில் இருப்பதை அறியாத பித்தர்களே! எம்பிரான் இருந்த கோலத்தை அறியாமல் இருக்கிறீர்களே!


சிவவாக்கியம் - 306

மூலமென்ற மந்திர முளைத்தவஞ் செழுத்துளே
நாலுவேத நாவுளே நவின்றஞான மெய்யுளே
ஆலம்முண்ட கண்டனு மரியயனு மாதலால்
ஓலமென்ற மந்திரஞ் சிவாயமல்ல தில்லையே.

ஐந்து பூதங்களும் ஐந்து எழுத்துக்களாக உள்ளது. அதுவே உடல். அதற்குள் மூல மந்திரமாம் ஒரெழுத்து மந்திரம் உள்ளது. அதுவே ஆதி. நான்கு வேதங்களும், நாவினால் சொல்லும் ஞானக் கருத்துக்களும் அவ்வோரெழுத்தில் அடக்கம். விடமுண்ட கண்டனும், திருமால், பிரமனும் அதற்குள்ளேதான். ஆக, ஓம் என்னும் மந்திரம் சிவாயமே.


சிவவாக்கியம் - 307

தத்துவங்க ளென்றுநீர் தமைக்கடிந்து போவிர்காள்
தத்துவஞ் சிவமதாகில் தற்பரமும் நீரல்லோ
முத்திசீவ னாதமே மூலபாதம் வைத்தபின்
அத்தனாரு மும்முளே யறிந்துணர்ந்து கொள்ளுமே.

தன்னையும் தன் உடல், உயிர், இறைத் தத்துவங்களையும் உணராது தன்னையே கடிந்து கொள்வீர்கள். தத்துவம் சிவம் ஆனால் தற்பரம் நீங்கள் தானே? உங்கள் உடலில் மூலபாதமாகிய கண்களை வைத்தது அதற்குத்தானே. முக்தி என்பது சிவனாகிய உயிரிலும், நாதமானது உடலிலும் உள்ளது. ஆகவே, ஈசன் உமக்குள்ளே என்பதை அறிந்து உணர்ந்து கொள்ளுங்கள்.


சிவவாக்கியம் - 308

மூன்றுபத்து மூன்றையு மூன்றுசொன்ன மூலனே
தோன்றுசேர ஞானிகாள் துய்யபாத மென்றலை
என்றுவைத்த வைத்தபின் னியம்பு மஞ்செழுத்தையும்
தோன்றவோத வல்லிரேல் துய்யசோதி காணுமே.

தொண்ணூற்றி ஆறு தத்துவங்களையும் தன்னுடைய திருமந்திரத்தில் சொன்ன திருமூலன் வழியில் வந்த ஞானிகளே! துய்ய பாதத்தைக் கண்ணாக என் தலையில் வைத்துள்ளான் ஈசன். அதை அறிந்து ஓதும் ஐந்தெழுத்தையும் நினைவில் அழுத்தி ஓத வல்லவர்கள் ஆனால் பரிசுத்த சோதியான ஈசனைக் காணலாம்.


சிவவாக்கியம் - 309

உம்பர்வான கத்தினு முலகபார மேழினும்
நம்பர்நாடு தன்னிலும் நாவலென்ற தீவினும்
செம்பொன்மாட மல்குதில்லை யம்பலத்து ளாடுவான்
எம்பிரான லாதுதெய்வ மில்லையில்லை யில்லையே.

எங்கும் பரந்து விரிந்த ஆகாயத்திலும், ஈரேழு பதினான்கு உலகங்களிலும், நாம் வாழும் நாட்டிலும், நாவலந்தீவு என்ற தீவிலும், எங்கு பார்த்தாலும் ஈசன் ஒருவனே. அவன் தில்லையில் செம்பொன் மாடத்தில் நடனம் ஆடுகிறான். நம் உடலில் (செம்பொன் மாடத்தில்) சீவனாக ஆடிக்கொண்டுள்ளான்.. அந்த எம்பிரானைத் தவிர வேறு தெய்வம் இல்லை இல்லை இல்லையே


சிவவாக்கியம் - 310

பூவிலாய வைந்துமாய் புனலில்நின்ற நான்குமாய்
தீயிலாய மூன்றுமாய் சிறந்தகா லிரண்டுமாய்
வேயிலாய தொன்றுமாய் வேறுவேறு தன்மையாய்
நீயலாமல் நின்றநேர்மை யாவர்காண வல்லரே.

பஞ்ச பூதங்கள், இந்த உலகத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து வகையான நிலங்களாகவும், புனலாகிய நீரில் ஆற்று நீர், ஊற்று நீர், மழை நீர், கடல் நீர் என்ற நான்கு வகையாகவும், தீயாக சூரியன், சந்திரன், அக்னி என்று மூன்று வகையாகவும், காற்றில் தென்றல், சூறாவளி என்ற இரண்டு வகையாகவும், வெட்ட வெளியாகிய ஆகாயம் ஒன்றாகவும் அமைந்து வெவேறு தன்மை உடையதாய் உள்ளது. அவைகளுக்குள் நீ நின்ற நேர்மையை யார் காண வல்லவர்கள்.


சிவவாக்கியம் - 311

அந்தரத்தி லொன்றுமா யசைவுகா லிரண்டுமாய்
செந்தழலில் மூன்றுமாய்ச் சிறந்தவப்பு நான்குமாய்
ஐந்துபாரி லைந்துமா யமர்ந்திருந்த நாதனை
சிந்ததையிற் றெளிந்தமாயை யாவர்காண வல்லரே.

நம் உடலில் பஞ்சபூதங்கள் கீழ்கண்டவாறு அமைந்துள்ளன. ஆகாயம் அந்தரத்தில் மனம் என்ற ஒன்றாகவும், காற்று வெளிச்சுவாசம் உட்சுவாசம் என இரண்டு வகையாகவும், நெருப்பு சூரிய மண்டலம், சந்திர மண்டலம், அக்னி மண்டலம் என மூன்று வகையாகவும் நீர், இரத்தம், வியர்வை, எச்சில், சிறுநீர் என நான்கு வகையாகவும், மண், எலும்பு, நரம்பு, தசை, தோல், உரோமம் என ஐந்து வகையாகவும் அமைந்திருக்கிறது. இந்த பஞ்சபூதங்களிலும் அஞ்செழுத்தாக ஊடுருவியுள்ள நாதனை சிந்தையில் உணர்ந்து தெளியும் மாயம் யார் காண வல்லவர்கள்?


சிவவாக்கியம் - 312

மனவிகார மற்றுநீர் மதித்திருக்க வல்லிரேல்
நினைவிலாத மணிவிளக்கு நித்தமாகி நின்றிடும்
அனைவரோதும் வேதமு மகம்பிதற்ற வேணுமேல்
கனவுகண்ட துண்மைநீர் தெளிந்ததே சிவாயமே.

மன விகாரங்கள் நீங்கி ஈசனையே மதித்து நினைவில் நிற்க, மனதில் வேறு எண்ணங்களுக்கு இடமில்லை. உடலில் உள்ள மணிவிளக்காம் கண்களில் உள்ள சோதி நித்தியமாக ஒளிவீசும். அனைவரும் ஓதும் வேதம் கூறும் ஈசனை நினைந்து அகமாம் மனம் பிதற்ற, கனவு கண்டது போல் உண்மை தெரியும். அப்படித் தெளிந்தது சிவாயமே.


சிவவாக்கியம் - 313

இட்டகுண்ட மேதடா விருக்கு வேத மேதடா
சுட்டமட் கலத்திலே சுற்றுநூல்க ளேதடா
முட்டிநின்ற தூணிலே முளைத்தெழுந்த சோதியை
பற்றிநின்ற தேதடா பட்டநாத பட்டரே.

யாகம் செய்ய அமைக்கும் யோனி குண்டம் எதற்கு? அங்கே ஓதும் இருக்கு முதலிய நாலு வேதங்கள் சொல்வதின் பொருள் என்ன? அங்கு சுட்ட மண் பானைகளாம்(உடல்) கடங்களில் நூல் சுற்றி வைப்பது எதற்காக? யாக குண்டங்களில் உள்ள தீயில் நெய்யூற்றி அத்தீயை வளர்ப்பது எதற்கு? உனக்குள் உள்ள தீயை வளர்த்து மேலேற்ற, அது மேலேறி, கபாலத்தில் உள்ள உள்நாக்கு என்னும் நட்ட தூணிலே முட்டும். அங்கு முளைத்து எழுந்த சோதியைப் பற்றி நின்றது ஆன்மா. அதை அறியுங்கள் பட்டநாத பட்டரே!.


சிவவாக்கியம் - 314

நீரிலே முளைத்தெழுந்த தாமரையி னோரிலை
நீரினோடு கூடிநின்றும் நீரிலாத வாறுபோல்
பாரிலே முளைத்தெழுந்த பண்டிதப் பராபரம்
பாரினோடு கூடிநின்ற பண்புகண் டிருப்பிரே.

தடாகத்திலே முளைத்து உள்ள தாமரை இலையானது நீரில் மிதந்தாலும், அதன் மீது நீர் ஒட்டாது. அதுபோல, மண்ணாலான இவ்வுடலில் முளைத்தெழுந்த ஈசன், அனைத்து சீவராசிகளிலும் ஒட்டியும் ஒட்டாமலும், பற்றியும் பற்றாமலும் உள்ளான். இப்படிக் கூடிநின்ற பண்பை கண்டு, அவனை உணர முயலுங்கள்.


சிவவாக்கியம் - 315

உறங்கிலென் விழிக்கிலெ லுணர்வுசென் றொடுங்கிலென்
சிறந்தவைம் புலன்களுமந் திசைத்திசைக ளொன்றிலென்
புறம்புமுள்ளு மெங்கணும் பொருந்திருந்த தேகமாய்
நிறைந்திருந்த ஞானிகாள் நினைப்பதேது மில்லையே.

தூங்கினாலும், விழித்திருந்தாலும், உணர்வு நினைவில் ஒடுங்கினாலும், சிறந்த ஐம்புலன்களையும் ஒரு சேர அடக்கி எத்திசையும் ஒன்றே என ஒன்றி இருந்தாலும், உள்ளும் புறமும், எல்லா இடங்களிலும் ஈசன் இருப்பதை அறிந்த ஞானிகள், தங்கள் உடலில் பரம்பொருளே சிவமாக இருப்பதை உணர்ந்து அதைத் தவிர வேறு எதையும் நினைப்பது இல்லையே.


சிவவாக்கியம் - 316

ஓதுவார்க ளோதுகின்ற வோர்எழுத்து மொன்றதே
வேதமென்ற தேகமாய் விளம்புகின்ற தன்றிது
நாதமொன்று நான்முகன் மாலும்நானு மொன்றதே
ஏதுமன்றி நின்றதொன்றை யானுணர்ந்த நேர்மையே.

சைவமறைகளை ஓதும் ஓதுவார்கள் ஓதும் ஓர் எழுத்து சிகாரம். வேத மந்திரங்களைப் போல் வெளிப்படையாக உச்சரிக்கக் கூடாதது. நாதம், பிரம்மா, திருமால், நானாகிய சிவனும் இணைந்த ஒன்று. எல்லாமாய், ஏதுமின்றி நின்ற ஈசனை இங்ஙனம்தான் உணர்ந்தேன்.


சிவவாக்கியம் - 317

பொங்கியே தரித்தவச்சு புண்டரீக வெளியிலே
தங்கியே தரித்தபோது தாதுமா துளையதாம்
அங்கியுட் சரித்தபோது வடிவுக ளொளியுமாய்க்
கொம்புமேல் வடிவுகொண்டு குருவிருந்த கோலமே.

விந்துவும் முட்டையும் கலந்து உடல் உருவானது. உயிர், புண்டரீகம் எனும் ஆகாயத் தாமரையாம் நினைவிலே இருந்தது. இரண்டும் சேர்ந்து கருவாகி உருவாகி உடலாக வெளிவந்தது. தீயில் சேர்ந்தபோது வடிவுக்குள் ஒளி ஊடுருவியது. ஈசனான சோதிதான் சிகார வடிவு கொண்டு உடலில் உயிராகவும், ஒளியாகவும் விளங்கும் உண்மையான குரு என்பதை உணருங்கள்.


சிவவாக்கியம் - 318

மண்ணுளோரும் விண்ணுளோரும் வந்தவாற தெங்கெனில்
கண்ணினோடு சோதிபோற் கலந்தநாத விந்துவும்
அண்ணலோடு சத்தியு மஞ்சுபஞ்ச பூதமும்
பண்ணினோடு கொடுத்தழிப் பாரொடேழு மின்றுமே.

மண்ணில் வாழும் மனிதர்களும், விண்ணில் உள்ளவர்களும் கண்ணில் கலந்திருக்கும் சோதிபோல விந்துநாதம் சேர்ந்ததால் உருவானார்கள். அப்பனோடு அம்மையும் (அ+உ) ஐந்து பூதங்களும் சேர்ந்து உயிர் உண்டாயிற்று. ஏழு உலகங்களிலும் உள்ள சீவராசிகள் இங்ஙனம் பிறந்து வாழ்ந்து இறக்கின்றன. இதை உணர்ந்து தவம் செய்து பிறவிப் பெருங்கடல் தாண்டுங்கள்.


சிவவாக்கியம் - 319

ஒடுக்குகின்ற சோதியு முந்திநின்ற வொருவனும்
நடுத்தலத்தி லொருவனும் நடந்துகாலி லேறியே
விடுத்துநின்ற விருவரோடு மெய்யினோடு பொய்யுமாய்
அடுத்துநின் றறிமினோ வனாதிநின்ற வாதியே.

உந்திக்கமலமான மணிபூரகத்தில் நின்ற திருமாலையும் நடு உடம்பில் உள்ள சுவாதிட்டானத்தில் உள்ள பிரம்மனையும் அறிந்து, முக்கலை ஒன்றி வாசிக்காலால் மேலேறி, அனாகதத்தில் உருத்திரனையும் விசுத்தியில் மகேசுவரனையும் ஆஞ்ஞையில் சதாசிவனையும் அறிந்து வாசியை மேலேற்றித் தவம் செய்ய, அனைத்தையும் ஒடுக்கி இருக்கின்ற சோதியான ஈசனை அடையலாம். அனாதியாய் நிற்கும் ஆதியை இங்ஙனம் அறிந்து, உணர்வு நினைவு ஆகியவற்றை ஒன்றித்து, கருத்தினில் நிறுத்தவேண்டும். இதுவே தவம்.


சிவவாக்கியம் - 320

உதித்தமந் திரத்தினு மொடுங்கு மக்கரத்தினும்
மதித்தமண் டலத்தினும் மறைந்துநின்ற சோதிநீ
மதித்தமண் டலத்துளே மரித்துநீ ரிருந்தபின்
சிறுத்தமண் டலத்துளே சிறந்ததே சிவாயமே.

ஐந்தெழுத்து மந்திரமாம் உடல் உதித்தது. அவ்வுடலிலே ஒடுங்கிய அக்கரமாம் குத்தெழுத்தாம் கண் உள்ளது. அந்த மதித்த மண்டலத்திலே விளங்கும் ஈசனாம் சோதி நீ. அக்கண்ணின் கருமணிக்குள்ளே முக்கலையையும் ஒன்றி மனதை அழித்துப் பிணம்போல் தவம் செய்ய, அச்சிறிய துளைக்குள்ளே சிவாயம் காணலாம்.


சிவவாக்கியம் - 321

திருத்திவைத்த சற்குருவைச் சீர்பெற வணங்கிலீர்
குருக்கொடுக்கும் பித்தரே கொண்டுநீந்த வல்லிரோ
குருக்கொடுக்கும் பித்தருங் குருக்கொள் வந்தசீடனும்
பருத்திபட்ட பாடுதான் பன்னிரண்டும் பட்டதே.

மூன்று ஆசைகளாலும் அலைக்கழிக்கப்பட்டு, பாவங்கள் பல செய்த இப்பிறவியை திருத்தி, அறிவை உள் மெய்யில் அறிய வைத்து, உண்மையை உணர வைத்து, ஈசனைக் நமக்குள் காட்டிய சற்குருவாம் கண்களைச் சீர் பெற வணங்கமாட்டீர்கள். பித்தர்களே! அங்ஙனம் குரு உபதேசித்தவாறு தவம் செய்து பிறவி என்னும் கடலை நீந்திக் கடக்க முடியுமா? பருத்தி பல பாடுகள் பட்டு ஆடையாகும். அதுபோல், குரு உபதேசித்தபடி இன்னல் பல கடந்து பித்தராம் சிவனை அடையுங்கள்.


சிவவாக்கியம் - 322

விழித்தகண் துதிக்கவும் விந்துநாத வோசையும்
மேருவுங் கடந்தவண்ட கோளமுங் கடந்துபோய்
எழுத்தெலா மழிந்துவிட்ட விந்திரஞால வெளியிலே
யானும்நீயு மேகலந்த தென்னதன்மை யீசனே.

விழித்த கண்கள் உன்னையே துதித்திருந்தது. அதனுள்ளே சென்றால், அங்கே விந்துநாத ஓசை கேட்டது. நினைவு மேருவாம் தலை கடந்து, அண்டங்கள் கோளங்கள் என அனைத்தையும் கடந்து, எழுத்தெல்லாம் அழிந்துவிட்ட வெட்ட வெளியாம் இந்திரஞால வெளியிலே போய் சூனியமாய் இருந்த உன்னுடன் கலந்துவிட்டது. நீயும் நானும் கலந்து இருந்த தன்மையை என்னவெனச் சொல்வேன், ஈசா.


சிவவாக்கியம் - 323

ஓம்நம வென்றுளே பாவையென்று அறிந்தபின்
பானுடற் கருத்துளே பாவையென் றறிந்தபின்
நானும்நீயு முண்டடா நலங்குலம் துண்டடா
ஊனுமூணு மொன்றுமே யுணர்ந்திடா யுனக்குளே.

நமசிவய என்னும் உடலில் பாவையாம் பராசக்தி உயிராக உள்ளாள். அவள் ஊடாடும்போது நானும், நீயும், அனைத்து நலன்களும், குலங்களும் உண்டு. ஊனாகிய சதையும், ஊணாகிய ஆன்ம இன்பதுன்ப உணர்வும் ஒன்றும் என்பதை உணர்வாய் உனக்குள்ளே. பிண்டத்தில் பாவையைக் கண் என்று சொல்வார்கள். கண்வழி சென்று கருத்தினில் கலந்தபின், எல்லா நன்மைகளும் உண்டு. உயிர்போனால் ஒன்றுமில்லை.


சிவவாக்கியம் - 324

ஐம்புலனை வென்றவர்க் கன்னதான மீவதாய்
நன்புலன்க ளாகிநின்ற நாதருக்க தேறுமோ
ஐம்புலனை வென்றிடா தவத்தமே யுழன்றிடும்
வம்பருக்கு மீவதுங் கொடுப்பது மவத்தமே.

ஐம்புலன்களையும் வென்ற ஞானிகளுக்கு அன்னதானம் செய்தால், புண்ணியமாகி, அவர்களுக்குள் இருக்கும் ஈசனைச் சேரும். புண்ணியம் கிட்டும். அல்லாது, ஐம்புலன்களை அடக்கமுடியாமல் அவத்தத்தில் உழலும் வம்பர்களை ஞானி எனப்போற்றி தான தர்மம் செய்வது பாவம்.


சிவவாக்கியம் - 325

ஆதியான வைம்புலன்க ளவையுமொக்கு ளொக்குமோ
யோனியிற் பிறந்திருந்த துன்பமிக்கு மொக்குமோ
வீணர்காள் பிதற்றுவீர் மெய்மையே யுணர்த்திரேல்
ஊணுறக்க போகமு முமக்கெனக்கு மொக்குமே.

உலகில் அனைவருக்கும் உங்களுக்கு இருப்பது போல அனைத்தும் அமைந்துள்ளது. பாவ புண்ணியங்களுக்கு காரணமான ஐம்புலன்களும், அன்னையின் வயிற்றில் பத்து மாதம் இருந்து பிறந்த இன்பதுன்பங்களும், உணவு, உறக்கம், போகம் போன்றவைகளும் யாவருக்கும் ஒன்றாகவே அமைந்துள்ளது. அதுபோல் உடலில் அனைவருக்கும் ஒரே மாதிரி அமைந்திருக்கும் மெய்ப்பொருளை உணராமல் பிதற்றுகின்ற வீணர்களே! மெய்யில் மெய்யை உணருங்கள்.


சிவவாக்கியம் - 326

ஓடுகின்ற வைம்புல னொடுங்கவஞ் செழுத்துளே
நாடுகின்ற நான்மறை நவிலுகின்ற ஞானிகாள்
கூடுகின்ற கண்டித குணங்கள்மூன் றெழுத்துளே
ஆடுகின்ற பாவையா யமைந்ததே சிவாயமே.

உடலில் ஓடுகின்ற ஐம்புலன்களையும் ஐந்தெழுத்தால் அடக்கி, நாலு வேதத்தையும் பொருளுணர்ந்து ஓதும் ஞானிகளே! உங்களுக்குள் உள்ள கண்டித குணங்களாம், ராஜசம், தாமசம், சாத்வீகம் என்ற முக்குணங்களையும் விலக்க ஓம் (அ+உ+ம்) எனும் ஓங்காரத்தினுள் ஆடிக் கொண்டிருக்கும் கண்ணின் கருமணியைப் பிடித்து தவம் செய்யுங்கள். அதுவே சிவாயமாகும்.


சிவவாக்கியம் - 327

புவனசக் கரத்துளே பூதநாத வெளியிலே
பொங்குதீப வங்கியுள் பொதிந்தெழுந்த வாயுவைத்
தவனசோம ரிருவருந் தாமியங்கும் வாசலில்
தண்டுமாறி யேறிநின்ற சரசமான வெளியிலே.

புவன சக்கரமாம் கண்ணின் கருமணிக்குள் செல்ல பூதநாத வெளி செல்லலாம். சூரிய, சந்திர, அக்கினி கலைகளை ஒன்றுவித்து மேலேற்றி, கண்ணுக்குள் இருக்கும் தீபத்தில் உள்ள நெருப்பில் செலுத்த வேண்டும். அது கபாலத்துக்குள் மடைமாறி, ஏறி வெட்ட வெளிக்கு செல்லும். இதுதான் வாசியோகம்.


சிவவாக்கியம் - 328

மவுனவஞ் செழுத்திலே வாசியேறி மெள்ளவே
வானளாய் நிறைந்தசோதி மண்டலம் புகுந்தபின்
அவனுநானும் மெய்கலந் தனுபவித்த வளவிலே
அவனுமுண்டு நானுமில்லை யாருமில்லை யானதே.

ஐந்தெழுத்தாம் உடலிலே மவுனத்தில் இருந்து வாசியோகப் பயிற்சியால் வாசியை ஏற்றி ஆகாயத் தலமாம் வெட்ட வெளிக்குள் நிறைந்திருந்த சோதி மண்டலத்தில் புகுந்து ஈசனுடன் கலக்கவேண்டும். அப்போது ஈசன் மட்டும் உண்டு; நான் இல்லை; வேறு யாரும் இல்லை. சராசரம் முழுதும் ஈசனே நிறைந்திருப்பான்.


சிவவாக்கியம் - 329

வாளுறையில் வாளடக்கம் வாயுறையில் வாய்வடக்கம்
ஆளுறையில் ஆளடக்கம் அருமைஎன்ன வித்தைகாண்
தாளுறையில் தாளடக்கம் தன்மையான தன்மையும்
நாளுறையில் நாளடக்கம் நானும்நீயுங் கண்டதே.

வாளின் உறைக்குள்ளே வாள் அடங்கி உள்ளது. வாய் எனும் வாயுறையில் நம் ஆயுள் முழுதும் விடும் மூச்சுக் காற்று அடங்கியுள்ளது. மானிட உடலில் நான் எனும் ஆன்மா அடங்கியுள்ள விந்தை என்ன? நெற்பயிரின் தாளுக்குள்ளே மற்றொரு தாளும் உள்ளே ஒடுங்கி உள்ள தன்மையையும், சூரிய உதயம் மறுநாள் சூரிய உதயம் வரை ஒரு நாள் அடங்கியிருப்பதையும் அறிந்து கொள்ளுங்கள். இதுதான் அன்றுமின்றும் நீயும் நானும் கண்டதே.


சிவவாக்கியம் - 330

வழுத்திடா னழித்திடான் மாயரூப மாகிடான்
கழன்றிடான் வெகுண்டிடான் காலகால காலமும்
துவண்டிடா னசைந்திடான் தூயரூப மாகிடான்
சுவன்றிடா னுரைத்திடான் சூட்சசூட்ச சூட்சமே

ஈசனை வாழ்த்திக்கொண்டே ஆன்மா உடலுக்குள் இயங்குகிறது. அதனால் அழிவில்லாதது. கண்ணுக்குத் தெரியாததால் மாய ரூபம் ஆகி நின்றது. உடலை விட்டு கழன்றிடாது இருப்பது. சினமில்லாது இருப்பது. காலா காலமும் நித்தியமாக உள்ளது. எந்நிலையிலும் துவளாது ஒரே நிலையில் இருப்பது. அசையாத தூய உருவானது. ஒரே அளவில் அனைத்திலும் சுவன்றிடாது இருப்பது. அது வெளியாக உரைக்கப்படாதது. ஐதுதான் சூட்சுமத்தின் சூட்சுமம்.


சிவவாக்கியம் - 331

ஆகிகூவென் றேயுரைத்த வட்சரத்தி னானந்தம்
யோகியோகி யென்பர்கோடி யுற்றறிந்து கண்டிடார்
பூகமாய் மனக்குரங்கு பொங்குமங்கு மிங்குமாய்
ஏகமேக மாகவே யிருப்பர்கோடி கோடியே.

அ, இ, உ என்ற மூன்றெழுத்து மந்திரத்தை உச்சரித்து இறை ஆனந்தம் அடைந்த யோகி யோகி என்று சொல்லித் திரியும் பலர், அந்த அக்கரத்தையே உற்றுப் பார்த்து பயிற்சி செய்து கண்டறியார். அப்படி வாசி யோகம் செய்து இன்பம் கண்ட யோகிகள், அங்குமிங்கும் குரங்கைப் போல் தாவும் மனதை அடக்கி ஏகமாகிய மெய்ப்பொருளை உணர்ந்து ஏகமனதோடு தவத்தில் இருப்பார்கள்.


சிவவாக்கியம் - 332

கோடிகோடி கோடிகோடி குவலயத்தோ ராதியை
நாடிநாடி நாடிநாடி நாளகன்று வீணதாய்
தேடிதேடி தேடிதேடி தேகமுங் கசங்கியே
கூடிகூடி கூடிகூடி நிற்பர்கோடி கோடியே.

உலகில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் ஆதியாம் ஈசனை அடைந்தால் சொர்க்கத்தை அடையலாமென எண்ணி, அவனை நாடி, பூசைகள் பல செய்து நாட்கள் வீணாகியது. ஈசனிருக்கும் இடத்தை விட்டு, இல்லாத இடங்களில் எல்லாம் தேடி அலைந்து, உடல் இளைத்தது. அந்த ஆதியான மெய்ப்பொருள் தன் உடலின் உச்சியில் கபாலத்தில் இருப்பதை உணர மாட்டார்கள். இப்படி உணராதவர்கள் கூடிக்கூடி ஏங்கி நிற்பவர்கள் கோடி.


சிவவாக்கியம் - 333

கருத்திலான் வெளுத்திலான் பரனிருந்த காரணம்
இருத்திலா னொளித்திலா னொன்றுமிரண்டு மாகிலான்
ஒருத்திலான் மரித்திலா னொழிந்திடா னழிந்திடான்
கருத்திற்கீயுங் கூவுமுற்றோன் கண்டறிந்த வாதியே.

முதன்முதலில் பரனாம் ஈசன் இருந்த காரணத்தை அறியுங்கள். அது கருப்பு இல்லை; வெளுப்பும் இல்லை. இருப்பதும் இல்லை; ஒளிவதும் இல்லை. ஒன்றும் இல்லை; இரண்டும் இல்லை. ஒன்றாகவும் அநேகமாகவும் உள்ளது. பிறப்பதும் இல்லை; இறப்பதும் இல்லை. அது ஒழிந்து போவதோ அழிந்து போவதோ இல்லை. இவைகளைக் கருத்தில் கொண்டு தவம் செய்யவேண்டும். அப்போது வாசியினால் கீ என்று கூவி, கபாலத்திற்குள் ஊதவேண்டும். அப்படிச் செய்தவர்கள் ஆதியாம் ஈசனைக் கண்டறிவார்கள்.


சிவவாக்கியம் - 334

வாதிவாதி வாதிவாதி வண்டலை யறிந்திடான்
ஊதியூதி யூதியூதி யொளிமழுங்கி யுளறுவான்
வீதிவீதி வீதிவீதி விடைஎருப் பொறுக்குவோன்
சாதிசாதி சாதிசாதி சாகாரத்தை கண்டிடான்.

வாத வித்தை செய்யும் இரசவாதிகள் வழலையிலிருந்து காய்ச்சி எடுக்கும் வண்டலாகிய உப்பையும் அதை முப்பு ஆக்கும் முறையையும் அறியமாட்டார்கள். இரசவாதம் செய்கின்றேன் என்று செம்பை பொன்னாக்க முயற்சித்து உலையில் வைத்து ஊதி ஊதி, தனக்குள் உள்ள ஒளி மழுங்கி கண்டபடி உளறுவார்கள். வீதி வீதியாகச் சென்று மாட்டுச் சாணத்தாலாகிய எருவைப் பொறுக்கி, அதை வைத்துப் புடம் போடுவார்கள். இன்னல் பல பட்டும் சொக்கத் தங்கம் செய்ய இயலாது மடிவார்கள். இப்படிப்பட்டவர்கள் சொக்கத் தங்கமாக உடலில் விளங்கும் சாகரத்தில் உள்ள சோதியை உணர மாட்டார்கள்.


சிவவாக்கியம் - 335

ஆண்மையாண்மை யாண்மையாண்மை ஆண்மைகூறும் அசடரே
காண்மையான வாதிரூபங் காலகால காலமும்
பாண்மையாகி மோனமான பாசமாகி நின்றிடும்
நாண்மையான நரலைவாயில் நங்குமிங்கு மங்குமே.

ஆண்மைதான் உயர்வு என ஆண்மை பேசும் அசடர்களே! பெண்மை இல்லாத ஆண்மை எப்படி வந்தது? கிடையாது. உங்களின் உடலிலே உள்ள ஆதியான வாலைக்குமரி ரூபம்தான் காலா காலமாக அனைவருக்கும் இருக்கின்றது. அது மவுனத்திலே, பதி, பசு, பாசமாகி நின்றுள்ளது. அந்த வாலைக்குமரி நாற்றம் இல்லாத நரகல் வெளி வரும் வாசலில் தங்கி உள்ளாள் என்பதையும், இங்கும் அங்கும் எங்குமே அவளால் ஆகி நிற்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.


சிவவாக்கியம் - 336

மங்குவென்ற அட்சரத்தின் மீட்டுவாகிக் கூவுடன்
துங்கமாகச் சோமனோடு சோமன்மாறி நின்றிடும்
அங்கமா முனைச்சுழியி லாகுமேக வாகையால்
கங்குலற்றுக் கியானமுற்று காணுவாய் சுடரொளி.

மங்கு என்ற அட்சரத்தோடு கூவைச் சேர்த்து, சூரிய, சந்திர கலைகளை அக்கினியில் சேர்த்து கபாலத்தினுள் ஊதவேண்டும். கபாலத்தில் உள்ளே உள்ள சுழுமுனையில் மடைமாறி ஏகமாகி வெட்டவெளியில் நிற்கும். அந்த இரவு பகலற்ற இடத்தில் ஞானம் கிட்டி சுட்ரொளி காணலாம்.


சிவவாக்கியம் - 337

சுடரெழும்பும் சூட்சமுஞ் சுழுமுனையின் சூட்சமும்
அடரெழும்பி யேகமாக வமர்ந்துநின்ற சூட்சமுந்
திடரதான சூட்சமுந் திரியின்வாலை சூட்சமுங்
கடலெழும்பு சூட்சந்தன்னை கண்டறிந்தோன் ஞானியே.

உடலில் சீவ உறுப்பிலிருந்து சோதியை எழுப்பும் சூட்சமத்தையும், கபாலத்தின் உள்ளே உள்ள சுழிமுனையின் சூட்சமத்தையும், அக்கினியில் உயிர் கலந்து எழும்பி ஏகமாக அமர்ந்து நின்ற சூட்சமத்தையும், திடப்பொருளாக உள்ள மெய்ப்பொருளின் சூட்சமத்தையும், உடலில் உயிர் என்னும் திரியாக வாலைக்குமரி இருக்கும் சூட்சமத்தையும், ஏழு கடலையும் எழுப்பும் சூட்சமத்தையும், தன்னை அறிந்து தனக்குள்ளேயே கண்டவர்களே ஞானிகள்.


சிவவாக்கியம் - 338

ஞானிஞானி என்றுரைத்த நாய்கள் கோடிகோடியே
வானிலாத மழைநாளென்ற வாதிகோடி கோடியே
தானிலான சாகரத்தின் தன்மைகாணா மூடர்கள்
மூனிலாமற் கோடிகோடி முன்னறிந்த தென்பரே.

கோடி கோடியான பேர்கள் தன்னையே ஞானி ஞானி என்று அழைத்துக்கொண்டு அலையும் நாய்கள். வானிலிருந்து பெய்யாத நீரே அமுரி என்று நாள்தோறும் கூறி அதனை தேடித் தேடி அலையும் இரசவாதிகளும் கோடி கோடி. இவர்கள் எல்லாம் தன்னில் உள்ள கடலில் மிதக்கும் கண்களின் தன்மையை அறியாத மூடர்கள். தன் உடலின் முன் பகுதியில் உள்ள வாயிலைத் திறக்க வழி அறியார். இந்த இரகசியங்கள் எல்லாம் எங்களுக்கு முன்னரே தெரியும் எனப் பேசி மடிவார்கள்.


சிவவாக்கியம் - 339

சூட்சமான கொம்பிலே சுழிமுனைச் சுடரிலே
வீச்சமான வெயிலே விபுலைதங்கும் வாயிலே
கூச்சமான கொம்பிலே குடியிருந்த கோவிலே
தீட்சையான தீவிலே சிறந்ததே சிவாயமே.

கபாலத்தின் உள்ளே உள்நாக்கு தொங்கும் இடத்தில் உள்ள சுழி முனையில் உள்ள தீயான சுடரிலே ஆடிக்கொண்டு இருக்கும் உயிரில் வாலைக்குமரி தங்கியுள்ளாள். அந்தக் கொம்பிலேதான் ஈசன் குடியிருக்கிறான். அந்தக் கோயிலான இடத்திலே தொட்டுக் காட்டி குரு தீட்சை வழங்கிய சோதி விளங்கும் இடத்தில் சிறந்து இருந்தது சிவாயமே.


சிவவாக்கியம் - 340

பொங்கிநின்ற மோனமும் பொதிந்துநின்ற மோனமுந்
தங்கிநின்ற மோனமுந் தயங்கிநின்ற மோனமுங்
கங்கையான மோனமுங் கதித்துநின்ற மோனமுந்
திங்களான மோனமுஞ் சிவனிருந்த மோனமே.

உடலில் பொதிந்து நின்றது கண்கள். அது மவுனம். ஞானம் பொங்கி நின்றது, உயிரில் தங்கி நின்றது, தயங்கி ஆடுவது, கங்கையான நீரைப் பொழிவது, மூச்சோட்டத்தில் நின்றது, சந்திரனானது ஆகிய எல்லாம் சிவன் இருந்த மவுனமே.


சிவவாக்கியம் - 341

மோனமான வீதியில் முனைச்சுழியின் வாலையில்
பானமான வீதியில் பசைந்தசெஞ் சுடரிலே
ஞானமான மூலையில் நரலைதங்கும் வாயிலில்
ஓனமான செஞ்சுட ருதித்ததே சிவாயமே.

மவுனமான வீதியில் ஆகாயத் தலத்தில் வாலைக்குமரி உள்ளாள். முக்கலையையும் ஒன்றித்து மேலேற்றி வீதிகளைக்(ஆதாரங்கள்) கடந்து, செஞ்சுடரில் கலக்கவேண்டும். அப்போது ஞானம் விளங்கும் மூலையில், கழிவுப் பொருள் வெளியேறும் வாயிலில் ஓங்காரச் செஞ்சுடர் உதிக்கும். அதுவே சிவாயம்.


சிவவாக்கியம் - 342

உதித்தெழுந்த வாலையு முயங்கிநின்ற வாலையும்
கதித்தெழுந்த வாலையுங் காலையான வாலையும்
மதித்தெழுந்த வாலையும் மறைந்துநின்ற ஞானமுங்
கொதித்தெழுந்து கும்பலாகி ஹூவும்ஹீயும் ஆனதே.

வாலைக்குமரி, உதித்தெழுந்தவள்; உயிராய் இயங்குபவள்; உடலில் மூச்சுக் காற்றாய் கதி தவறாமல் ஓடுபவள்; காலையில் உதிக்கும் கதிரவனில் நின்றவள்; மதித்துப் பூசிக்க எழுபவள்; நமக்குள் மறைந்து நின்ற ஞானத்தைத் தருபவள். அவளை அறிந்து, வாசியோகம் செய்து, ஹூங்காரம் ஹீங்காரம் இரண்டையும் ஒன்று சேர்த்து ஓத, வாலை ஓங்காரமாகி நிற்பாள்.


சிவவாக்கியம் - 343

கூவுங்கியும் மோனமாகி கொள்கையான கொள்கையை
மூவிலே யுதித்தெழுந்த முச்சுடர் விரிவிலே
பூவிலே நறைகள்போற் பொருந்திநின்ற பூரணம்
ஆவியாவி யாவியாவி யன்பருள்ள முற்றதே.

கூ என்பது உகாரம்; கி என்பது இகாரம். இது அகாரத்துடன் சேர்ந்து மவுனமாக நின்றதை உணர்ந்திடுங்கள். மூன்று எழுத்தாக உதித்தெழுந்த வாசி சூரிய, சந்திர, அக்கினி கலையாக விரிவாகி நின்றது. பூவிலே உள்ள மணம் போல நமக்குள் பொருந்தி நின்ற அதுவே பூரணம். அது ஆவியாக ஆன்மாவாகி, சிவாமாய் அன்பர் உள்ளத்தில் உள்ளது.


சிவவாக்கியம் - 344

ஆண்மைகூறு மாந்தரே அருக்கனோடும் வீதியைக்
காண்மையாகக் காண்பிரே கசடறுக்க வல்லிரே
தூண்மையான வாதிசூட்சஞ் சோபமாகு மாகுமே
நாண்மையான வாயிலில் நடித்துநின்ற நாதமே.

ஆண்மை பேசும் மனிதர்களே! சூரிய கலை ஓடும் வழியை உற்று நோக்கி மெய்ப்பொருளைக் காணுங்கள். ஆணவம், கன்மம், மாயை ஆகியவைகளால் ஏற்பட்ட பாவங்களையும், குற்றங்களையும் அகற்ற வல்லவர்களானால் கபாலத்தில் தூணாகி நிற்கும் ஆதியின் சூட்சத்தில் பரஞ்சோதியைக் காணலாம். நாக்கில் நடமாடும் நாதமாக உள்ளவன் ஈசனே.


சிவவாக்கியம் - 345

நாதமான வாயிலில் நடித்துநின்ற சாயலில்
வேதமான வீதியில் விரிந்தமுச் சுடரிலே
கீதமான ஹீயிலே கிளர்ந்துநின்ற கூவிலே
பூதமான வாயிலைப் புகலறிவ னாதியே.

சூரிய, சந்திர, அக்கினி கலைகளை ஒன்றி, வேதமான நான்கு வாசல் பொருந்திய வீதியில் மேலேற்றி, நாதம் வெளிவரும் வாயால் ஹீங்கார ஒலி எழுப்பி, இரண்டையும் சேர்த்து கூவெனும் உகாரத்தில் சேர்க்கவேண்டும். ஐம்பூதங்களும் ஒன்றாகப் பொருந்தி நின்ற அகாரத்தினுள் புகுந்து செல்ல, அங்கிருப்பது அறிவாகிய ஆதியே.


சிவவாக்கியம் - 346

ஆவியாவி யாவியாவி ஐந்துகொம்பி னாவியே
மேவிமேவி மேவிமேவி மேதினியில் மானிடர்
வாவிவாவி வாவிவாவி வண்டல்க ளறிந்திடார்
பாவிபாவி பாவிபாவி படியிலுற்ற மாந்தரே.

ஆவி எனும் ஆன்மா ஐம்புலன்களிலும் கலந்து ஆவியாகவே உள்ளது. அது உலகில் மனிதர்களின் உடலில் பரவி நின்றுள்ளது. உடலில் மற்ற தன்மைகள் இல்லாதுபோயின், மிஞ்சி நிற்பது வண்டல்களாய் இருந்த உப்பு. அதன் தன்மைகளை யாரும் அறியவில்லை. உப்பைப் படியில் அளந்து அதனை உண்டு வாழ்பவர்கள் அதன் மகிமையை அறியாதது பாவமே.


சிவவாக்கியம் - 347

வித்திலே முளைத்தசோதி வில்வளைவின் மத்தியில்
உத்திலே யொளிவதாகி மோனமான தீபமே
நத்திலோதி ரட்சிபோன்ற நாதனை யறிந்திடார்
வத்திலே கிடந்துழன்ற வாலையான சூட்சமே.

ஆன்ம வித்தில் முளைத்த சோதி வில்லின் வளைவை ஒத்த புருவ மத்தியில் அமர்ந்துள்ளது. அந்த உத்தமமான ஒளிதான் ஆன்மசோதியாம் ஈசன். தவம் செய்து அதன் ஒளியைப் பெருக்குங்கள். நத்தையின் திரட்சி போன்று நம் உடலுக்குள் கண்களாக உள்ள நாதனை அறியாது இருக்கின்றீர்கள். அது நம் முகத்தில் இருந்து உழன்றுகொண்டிருக்கும் வாலை. அதுவே சூட்சமம்.


சிவவாக்கியம் - 348

வாலையோடு காலையும் வடிந்துபொங்கும் மோனமே
மாலையோடு காலையான வாறறிந்த மாந்தரே
மூலையான கோணமின் முளைத்தெழுந்த செஞ்சுடர்
காலையோடு பானகன்று தங்கிநின்ற மோனமே.

வாலைக்குமரியுடன் காலாகிய காற்றைச் சேர்க்க, அனைத்தும் அடங்கி, மவுனம் பொங்கி வடியும். காலையும் மாலையும் மாறிமாறி வருவதுபோல, பிறப்பும் இறப்பும் தொடர்ந்து வருகிறது. உங்கள் கபாலத்துக்குள்ளே உள்ள முக்கோணத்தின் மூலையில் முளைத்து எழுகின்ற செஞ்சுடராக விளங்கும் சோதியைக் கண்டு, சர்வகாலமும் சூரிய கலையில் நின்று தவம் இயற்ற தங்கி நின்றது மவுனம்தான்.


சிவவாக்கியம் - 349

மோனமான வீதியில் முடுகிநின்ற நாதமே
ஈனமின்றி வேகமான வேகமென்ன வேகமே
கானமான மூலையில் கனிந்திருந்த வாலையில்
ஞானமான செஞ்சுடர் நடந்ததே சிவாயமே.

வாசியோகத்தால் முக்கலையையும் ஒன்றாக்கி மேலேற்றி, கபாலத்துக்குள்ளே மவுனமான பாதையில் செல்ல ஹுங்கார நாதம் வேகமாகக் கேட்கும். இன்னும் மேலேற்ற, கபாலத்தின் உச்சியில் ஆகாயத்தில் கனிந்திருந்த வாலையில் உள்ள ஞானமான செஞ்சுடருடன் கலக்கும். இங்ஙனம், வாசியும் வாலையும் சேர்ந்தது சிவாயமே.


சிவவாக்கியம் - 349

உச்சிமத்தி வீதியி லொழிந்திருந்த சாதியிற்
பச்சியுற்ற சோமனும் பரந்துநின் றுலவவே
செச்சியான தீபமே தியானமான மோனமே
கச்சியான மோனமே கடந்ததே சிவாயமே.

கபாலத்தின் மத்தியில் சாதி பேதமற்ற மெய்ப்பொருள் உள்ளது. சூரிய, சந்திர, அக்கினி கலைகளை ஒன்றாக்கி மேலேற்ற, மனம் அழிந்து, உயிர் செக்கச் சிவந்த சோதியில் ஒன்றும். அங்கே மவுனத்தில் நின்று தவம் செய்ய, கச்சியாம் இறுதியைக் கடக்கலாம். கடந்ததும் இருப்பது சிவாயமே.


சிவவாக்கியம் - 351

அஞ்சுகொம்பி னின்றநாத மாலைபோ லெழும்பியே
பிஞ்சினோடு பூமலர்ந்து பெற்றியுற்ற சுத்தமே
செஞ்சுட ருதித்தபோது தேசிகன் சுழன்றுடன்
பஞ்சபூத மானதே பறந்துநின்ற மோனமே.

ஐம்புலன்களில் நின்ற நாதம் வாசியோகத்தால், ஆலையில் இருந்து கிளம்பும் புகைபோல் மேல் நோக்கி எழும். அது விந்துவுடன் சேர்ந்து பூவாக மலர்ந்து உடலில் பரிசுத்தமாகி நின்றிருக்கும். அதில்தான் செஞ்சுடராக சிவம் உதித்து சுழன்று கொண்டுள்ளது. அங்கே பஞ்ச பூதங்களும் பரந்து நின்றுள்ளது. அங்குதான் மவுனம் உள்ளது. அதில் நினைவை வைத்து ஈசனை அடையுங்கள்.


சிவவாக்கியம் - 352

சடுதியான கொம்பிலே தத்துவத்தின் ஹீயிலே
அடுதியான ஆவிலே அரனிருந்த ஹூவிலே
இடுதியென்ற சோலையி லிருந்தமுச் சுடரிலே
நடுதியென்று நாதமோடி நன்குற வமைந்ததே.

நொடியில் மறையும் இவ்வுடலின் தத்துவங்கள் எல்லாம்ஹீஎன்னும் எழுத்தில்தான் உள்ளது. அகாரமானது, அரன் இருக்கும் ஹூ. இரு தீயாக உள்ள சூரிய, சந்திர கலைகளை அக்கினி கலையுடன் சேர்த்து மேலேற்றி, நடுத் தீயாம் ஈசனுடன் கலக்கவேண்டும். அந்த இடத்தில் நாதம் வாசியுடன் சேர்ந்து கூடி நன்றாக அமைந்து உள்ளது.


சிவவாக்கியம் - 353

அமையுமால் மோனமு மரனிருந்த மோனமும்
சமையும்பூத மோனமுந் தரித்திருந்த மோனமும்
இமையு()ம்கொண்ட வேகமு மிலங்குமுச்சி மோனமும்
தமையறிந்த மாந்தரே சடத்தையுற்று நோக்கிலார்.

திருமாலும், சிவனும் மவுனத்தில் அமைந்திருப்பதையும், ஐந்து பூதங்களும் ஒன்றாகி சமைந்திருப்பதையும், அங்கு உடல் தரித்திருந்ததையும், தங்கள் உடலில் இமயம் என்ற மலையாம் தலையின் உச்சியில் வாசி இயங்கிக்கொண்டு இருப்பதையும், தன்னை உணர்ந்த ஞானிகளே அறிவார்கள். அவர்கள் இந்தப் பொய்யான உடலைப் பற்றியோ, அது அழிவதைப் பற்றியோ கவலைப்பட மாட்டார்கள்.


சிவவாக்கியம் - 354

பாய்ச்சலூர் வழியிலே பரனிருந்த சுழியிலே
காய்ச்சகொம்பி னுனியிலே கனியிருந்த மலையிலே
வீச்சமான தேதடா விரிவுதங்கு மிங்குமே
மூச்சினோடு மூச்சைவாங்கு முட்டிநின்ற சோதியே.

மனமாகிய நினைவு பாய்ந்து செல்லும் வழியிலேதான் பரம் பொருளான ஈசன், காயமான உடலினுள்ளே கபாலத்துக்குள் உள்ள சுழிமுனையில் உள்ளான். அனைவரின் உடலிலும் அது வெட்டவெளியாம் ஆகாயத்தில் இங்குமங்கும் தங்கியும், விரிந்தும் உள்ளது. அதை உணர்ந்து வெளி மூச்சோடு உள் மூச்சை முட்டி அவ்விடத்துக்கு ஏற்றி சுழிமுனையில் நிற்கும் சோதியோடு கலக்கலாம்.


சிவவாக்கியம் - 355

சோதிசோதி யென்றுநாடித் தோற்பவர் சிலவரே
ஆதிஆதி யென்றுநாடு மாடவர் சிலவரே
வாதிவாதி யென்றுசொல்லும் வம்பருஞ் சிலவரே
நீதிநீதி நீதிநீதி நின்றிடும் முழுச்சுடர்.

சோதியே ஈசன் என்று நாடித் தவமிருந்து அதை அடைய முடியாது தோற்றவர்கள் சிலரே. அதுவே ஆதி என உணர்ந்து, அதையே நாடித் தேடும் வல்லவர்கள் சிலரே. காயகற்பம் செய்து உண்டு ஈசனை அடையலாம் என்று சொல்லி இரசவாதம் செய்து வம்பு பேசுபவர்கள் சிலரே. அது ஆதியும் அந்தமும் இல்லாது; அனைவருக்கும் பொதுவான நீதியாக நிற்பது; முழுச்சுடர் என்பதை உணருங்கள்.


சிவவாக்கியம் - 356

சுடரதாகி யெழும்பியங்கு தூபமான காலமே
இடரதாய்ப் புவியும்விண்ணு மேகமா யமைக்கமுன்
படரதாக நின்றவாதி பஞ்சபூத மாகியே
அடரதாக அண்டமெங்கு மாண்மையாக நின்றதே.

ஈசன் இவ்வுடலில், காலங்காலமாக ஒளிமிக்க சுடராக இருந்து இயங்குகிறான். அந்த சோதியே பரிபூரணம். அந்த நெருப்புக் கோளத்திலிருந்துதான் அண்ட சராசரங்கள் உண்டாகியது. அது ஆதியாகி, அனைத்திலும் படர்ந்து பஞ்ச பூதங்கள் ஆகின. அதுவே அண்டத்திலும் பிண்டத்திலும் அகாரமான சீவனிலிருந்து ஆண்மையாகி, சிவனாக நின்றது.


சிவவாக்கியம் - 357

நின்றிருந்த சோதியை நிலத்திலுற்ற மானிடர்
கண்டறிந்து கண்குளிர்ந்து காதலுற் றுலாவுவோர்
கண்டமுற்ற மேன்முனையின் காட்சிதன்னைக் காணுவார்
நன்றியற்று நரலைபொங்கி நாதமும் மகிழ்ந்திடும்.

நம் உடலில் நின்று கொண்டிருக்கும் சோதியை இப்பூமியிலே உள்ள மனிதர்கள் தனக்குள்ளேயே கண்டு, அறிந்து, கண்களில் நீர் தளும்ப, அன்பே சிவம் என உணர்ந்து ஞானப் பயிற்சி செய்து வாழ்வார். தன் இரு கண்களால் உச்சியில் உள்ள ஞானக் கண்ணை நோக்கி ஞானப் பயிற்சி செய்ய, ஞானக் கண்ணில் தன்னையே காணுவார்கள். அப்போது, ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலங்களும் விலகி நரலை(கடல்) பொங்கி வடிந்திடும். விந்து நாதமாகிய சிவசக்தி இணையும். பேரின்பம் கிட்டும்.


சிவவாக்கியம் - 358

வயங்குமோனச் செஞ்சுடர் வடிந்தசோதி நாதமுங்
கயங்கள்போலக் கதறியே கருவூரற்ற வெளியிலே
பயங்கொடின்றி யின்றியே படர்ந்துநின்ற பான்மையை
நயங்கள்கோ வென்றேநடுங்கி நங்கையான தீபமே.

வடிந்த சோதியான ஒளியும் நாதமான ஒலியும் நிலையாக இயங்கும் மோனச் செஞ்சுடராகிய சிவத்திலிருந்து தோன்றியது. அதுவே யானைக்குட்டி போலக் கதறி அழுது பிறப்பெடுக்கின்றது. யோனியற்ற சூன்ய வெளியில் பஞ்ச பூதங்களும் கோள்களும் தோன்றிப் படர்ந்து நின்ற பாங்கைப் பாருங்கள். இவை யாவும் உடலிலே கபாலத்தின் உச்சியில் ஆடிக்கொண்டிருக்கும் வாலைத் தீபமே.


சிவவாக்கியம் - 359

தீபவுச்சி முனையிலே திவாகரத்தின் சுழியிலே
கோபமாறு கூவிலே கொதித்துநின்ற தீயிலே
தாபமான மூலையிற் சமைந்துநின்ற சூட்சமுஞ்
சாபமான மோட்சமுந் தடித்துநின் றிலங்குமே.

கபாலத்தில், தீபமாம் சோதியின் உச்சி முனையிலே சூரியன் என்னும் அகாரத்தின் சுழியில் கொதித்து நின்ற தீயாக ஈசன் உள்ளான். அத்தீயை, முக்கலைகளையும் ஒன்றாக்கி கோபமாக ஊதுவதைப்போல, கூ என்னும் உகாரத்தால் ஊதவேண்டும். தாபமான மூலையில் உள்ள வாலை அங்கு நிற்கும் சூட்சமம் தெரியும். சாபங்களையும், பாவங்களையும் ஒழித்து நினைவை அங்கேயே நிறுத்தித் தவம் செய்யுங்கள். அந்த வாலையில்தான் ஆன்மா உள்ளது.


சிவவாக்கியம் - 360

தேசிகன் சுழன்றதே திரிமுனையின் வாலையில்
வேசமோடு வாலையில் வியனிருந்த மூலையில்
நேசசந்தி ரோதயம் நிறைந்திருந்த வாரமில்
வீசிவீசி நின்றதே விரிந்துனின்ற மோனமே.

கபாலத்தில், மூன்று கலைகளும் ஒன்று சேருமிடத்தில் வாலை உள்ளாள். அங்குதான் ஈசன் சுழன்று ஆடிக் கொண்டிருக்கிறான்.. வேடமிட்டு நிற்கும் வாலையை அறிந்து அதன் மூலையில் உள்ள ஈசனை உணர்ந்து, கண்களைப் பவுர்ணமியாக்கி முக்கலைகளையும் வீசிவீசித் தவம் இருக்க மவுனம் விரியும்.


சிவவாக்கியம் - 361

உட்கமல மோனமி லுயங்கிநின்ற நந்தியை
விக்கலோடு கீயுமாகி வில்வளைவின் மத்தியில்
முட்பொதிந்த தென்னவே முடுகிநின்ற செஞ்சுடர்
கட்குவைகள் போலவுங் கடிந்துநின்ற காட்சியே

உடலில் உள்ள கண்களில் மவுனத்தில் இயங்கும் நம் தீயை அறியுங்கள். இரு கண்களால் வில்லைப் போல் வளைந்த புருவ மத்தியில் நோக்க, அது நெற்றிக்கண்ணாம் ஞானக் கண்ணில் உள்ள செஞ்சுடரில் கலக்கும். அப்போது வாசியைகீஎன்னும் ஒலியோடு மேலேற்ற வேண்டும். அப்படி ஞானத்தவம் செய்ய கல்லால மரத்தடியில் இருக்கும் குருவின் காட்சி கிட்டும்.


சிவவாக்கியம் - 362

உந்தியிற் சுழிவழியி லுச்சியுற்ற மத்தியிற்
சந்திர னொளிகிரணந் தாண்டிநின்ற செஞ்சுடர்
பந்தமாக வில்வளைவிற் பஞ்சபூத விஞ்சையாங்
கிந்துபோற் கீயில்நின்று கீச்சுமூச்சு வென்றதே.

உகாரமான உடலின் உந்தியில் (உன்+தீ) உள்ளே சுழிவழியாகச் சென்றால் கபாலத்தின் மத்தியில் செஞ்சுடர் உள்ளது. அது சூரிய சந்திர கலைகளைத் தாண்டி உள்ளது. இரு கண்களாலும் வில்வளவை ஒத்த புருவ மத்தியில் வைக்க, அது மேலேறி இந்துவாம் வேள்வித் தீயாக எழும்பி சோதியில் கலக்கும். அப்போது கீச்சுமூச்சு என ஒலி கேட்கும்.


சிவவாக்கியம் - 363

செச்சையென்ற மூச்சினோடு சிகாரமும் வகாரமும்
பச்சையாகி நின்றதே பரவெளியின் பான்மையே
இச்சையான ஹூவிலே இருந்தெழுந்த ஹீயிலே
உச்சியான கோணத்தி லுதித்ததே சிவாயமே.

சிவ சிவ எனும் சிகார வகாரத்தை நினைவில் வைத்து பிசிறு இல்லாத ஒழுங்குடன் வாசியை மேலேற்றுங்கள். ஈசன், சோதியாக, பச்சை பசேல் என்றுள்ள பரவெளியில் உள்ளான். வாசியை உள்ளே இழுத்து ஹூ என்ற உகாரத்தினால் ஊத, அதில் இருந்து எழுகின்ற ஹீ என்னும் சிகாரத்தின் மீத ஏறும். கபாலத்தின் உச்சியில் சோதியாக உதித்து நின்றது சிவாயம் என்னும் சோதி என அறிந்து, வாசியோகம் செய்யுங்கள்.


சிவவாக்கியம் - 364

ஆறுமூலைக் கோணத்தி லமைந்தவொன்ப தாத்திலே
நாறுமென்று நங்கையான நாவியுந் தெரிந்திட
கூறுமென்று ஐவரங்கு கொண்டுநின்ற மோனமே
பாறுகொண்டு நின்றது பரந்ததே சிவாயமே.

ஆறு ஆதாரங்களும் ஒன்பது வாயில்களும் கொண்ட இந்த உடல், உயிருடன் இருக்கும்போதும் மடிந்த பின்னும் நாற்றம் வீசுகிறது. அப்படி நாறுகின்ற இவ்வுடலில் நாறாத வாயிலில் வாலைக்குமரியாக நம் ஆவியில் உள்ளது வாலை. அதிலேயே ஐந்து பூதங்களும் இணைந்து நிற்கும் மவுனமே திருவடி. இது, இவ்வுலகம் முழுவதும் உள்ள எல்லா உயிர்களின் தலையிலும் உள்ளது. இத் திருவடி, கண்களாய் விளங்கிப் பரந்து நின்று இயங்குகிறது. அப்படி இயக்குவது சிவமே.


சிவவாக்கியம் - 365

பறந்ததே கறந்தபோது பாய்ச்சலூர் வழியிலே
பிறந்ததே பிராணனன்றிப் பெண்ணுமாணு மல்லவே
துறந்ததோ சிறந்ததோ தூயதுங்க மானதோ
இறந்தபோதி லன்றதே இலங்கிடுஞ் சிவாயமே.

உயிர் இறக்கும்போது பத்தாம் வாயிலாம் வாய் வழியாகப் பறந்து சென்றது. அங்கிருந்து பிரிந்த ஆன்மா ஆணுமல்ல; பெண்ணுமல்ல; அலியும் அல்ல. அவ்வான்மா மறு உடலில் பிறவி எடுத்து தூய தங்கமாக விளங்கியது. உடலில் உலாவி நின்ற உயிரானது இறந்த போதில் எங்கு சென்றது? யாவும் சிவத்தின் செயல் என்றுணர்ந்து, உயிரோடு உள்ள காலத்தில் தவம் செய்து அத்துடன் ஒன்றவேண்டும்.


சிவவாக்கியம் - 366

அருளிருந்த வெளியிலே அருக்கனின்ற விருளிலே
பொருளிருந்த சுழியிலே புரண்டெழுந்த வழியிலே
தெருளிருந்த கலையிலே தியங்கிநின்ற வலையிலே
குருவிருந்த வழியினின்று ஹூவும்ஹீயு மானதே.

சிவத்தின் அருள் இருந்தது வெட்டவெளியாகிய ஆகாயத்தில்; சூரியன் நின்றுள்ளது இருளாகிய மனத்தில்; மெய்ப்பொருள் இருந்தது சுழிமுனையில்; வாசி புரண்டு எழுந்து மேலே ஏறுவது சுழிமுனை வழியில். ஆன்மா அலைக்கழிக்கப் படுவது ஆசை என்னும் வலையில். இதனை எல்லாம் நன்குணர்ந்து தெளிவு பெறுங்கள். ஆன்மா கடைத்தேற வாசி யோகம் என்னும் கலையால் மட்டும் முடியும் எனத் தெளிவுற்று, குரு உபதேசித்த வழியில் அறிவு, உணர்வு, நினைவு ஆகியவற்றைக் கருத்தில் வைத்து, தவம் செய்யுங்கள். ஹூ என்னும் உயிரை, ஹீ என்னும் சிகாரத்தில் சேர்க்கும் வழி இதுதான்.


சிவவாக்கியம் - 367

ஆனதோ ரெழுத்திலே யமைந்துநின்ற வாதியே
கானமோடு தாலமீதிற் கண்டறிவ தில்லையே
தானுந்தானு மானதே சமைந்தமாலை காலையில்
வேனலோடு வாறுபோல் விரிந்ததே சிவாயமே.

ஆதி, குத்தெழுத்தாய் நம் முகத்தில் கண்ணாய் உள்ளது. அது கானல் நீரைப் போல் தனக்குள் இருப்பதை உலகத்தில் உள்ளவர்கள் உணர்வதில்லை. தானாகவே ஆகித் தானாக நின்ற அந்த ஆதியை இராப்பகல் இல்லாத இடத்தே கண்டு காலையும் மாலையும் நினைவைக் கருத்தில் நிறுத்தித் தவம் செய்யுங்கள். அது நம் உடலில் நெருப்பாறாக ஓடி விரிந்த இடமே. அதுதான் சிவாயம்.


சிவவாக்கியம் - 368

ஆறுகொண்ட வாரியு மமைந்துநின்ற தெய்வமுந்
தூறுகொண்ட மாரியுந் துலங்கிநின்ற தூபமும்
வீறுகொண்ட மோனமும் விளங்கு முட்கமலமும்
மாறுகொண்ட ஹூவிலே மடிந்ததே சிவாயமே.

ஆறுகள் கலக்கும் திருப்பாற்கடலும், அதில் பள்ளிகொண்ட திருமாலும், தூய்மையான மழை நீரும், விசுவரூபம் எடுக்கும் மவுனமும், உடலில் உள்ள தாமரையாம் மனமும் எல்லாம் ஒன்றாக ஹூங்காரத்தில் மறைந்து சிவமாகும்.


சிவவாக்கியம் - 369

வாயில்கண்ட கோணமில் வயங்குமைவர் வைகியே
சாயல்கண்டு சார்ந்ததும் தலைமன்னா யுறைந்ததுங்
காயவண்டு கண்டதும் கருவூரங்கு சென்றதும்
பாயுமென்று சென்றதும் பறந்ததே சிவாயமே.

ஐம்புலன்களை அடக்கி, ஈசனிருக்கும் வாயில் கண்டு, அவனின் கோணமில்லா சாயல் கண்டு, உடலுள் உள்ள தலையில் வாழும் அவனை வாசியோகத்தால் சார்ந்து, கருத்து என்னும் கரு இருக்கும் ஊரில் அவனுடன் சேருங்கள். உடல் இறந்ததும் பரந்து நின்ற சிவம் பாய்ந்து வெளியே சென்றதே.


சிவவாக்கியம் - 370

பறந்ததே துறந்தபோது பாய்ச்சலூர் வழியிலே
மறந்ததே கவ்வுமுற்ற வாணர்கையுன் மேவியே
பிறந்ததே யிறந்தபோதிற் பீடிடாமற் கீயிலே
சிறந்துநின்ற மோனமே தெளிந்ததே சிவாயமே.

உடலைத் துறந்து பறந்த சிவம் பாய்ச்சலூர் வழியிலே சென்றதை அறியுங்கள். வாசி யோகத்தினால், முக்கலைகளையும், வாணர்கை யாழிசையைப் போல் இடைவிடாது ஏற்றுங்கள். கபாலத்தின் உள்ளே சென்று ஈசனை அடையுங்கள். பிறப்பறுக்ககீஎன்னும் சிகாரத்தில் சோதியாக விளங்கும் மவுனத்தில் தவம் புரிந்து சிவத்தை தெளிந்து அதனுடன் ஒன்றுங்கள்.


சிவவாக்கியம் - 371

வடிவுபத் மாசனத் திருத்திமூல வனலையே
மாருதத்தி னாலெழுப்பி வாசலைந்து நாலையு
முடிவுமுத்தி ரைப்படுத்தி மூலவீணா தண்டினால்
முளரியால யங்கடந்து மூலநாடி யூடுபோய்.

பத்மாசனத்தில் அமர்ந்து மூலாதாரத்தில் கனலாக இருக்கும் குண்டலினி சக்தியை வாசிக் காற்றினால் எழுப்பி ஒன்பது வாசல்களையும் ஒருசேர அடைத்து, யோக முத்திரையில் இருந்து முதுகுத் தண்டின் மூலம் மேலேற்றுங்கள். முளரியாம் பிரமலோகத்தில் உள்ள ஆலயங்கடந்து, மூல நாடியான சுழுமுனையின் ஊடே செலுத்தி சிவத்தை அடையுங்கள்.


சிவவாக்கியம் - 372

அடிதுவக்கி முடியளவு மாறுமா நிலங்கடந்
தப்புறத்தில் வெளிகடந்த வாதிஎங்கள் சோதியை
யுடுபதிக்கண் ணமுதருந்தி யுண்மைஞான யுவகையுள்
உச்சிபட் டிறங்குகின்ற யோகிநல்ல யோகியே.

அடியாம் மூலாதாரத்திலிருந்து முடியாம் ஆகாயத் தலம் வரை முக்கலைகளையும் ஒன்றாக்கி சேர்த்து ஆறு ஆதாரங்களையும் கடந்து செலுத்த வேண்டும். அப்பாலுக்கு அப்பாலாய் அப்புறத்தில் வெளிக்கு உள் கடந்த வெளியில் ஆதியாக விளங்கும் சோதியில் சேர்த்துத் தவம் இருத்தல் வேண்டும். அப்போது அமிர்தம் உண்ணாக்கில் இறங்கும். உண்மையான ஞான ஆனந்தம் கிட்டும். உச்சிக்கு ஏற்றிப் பின், உச்சி முதல் பாதம் வரை உடல் முழுவதும் இறங்க வைத்து, தவம் செய்யும் யோகியே நல்ல யோகி.


சிவவாக்கியம் - 373

மந்திரங்கள் கற்றுநீர் மயங்குகின்ற மாந்தரே
மந்திரங்கள் கற்றநீர் மரித்தபோது சொல்விரோ
மந்திரங்க ளும்முளே மதித்தநீரு மும்முளே
மந்திரங்க ளாவது மனத்தினைந் தெழுத்துமே.

மந்திரங்கள் அனைத்தையும் ஐயமின்றிக் கற்று உச்சரித்து, அவைகளால்தான் ஈசனை அடைய முடியும் என்னும் மாயையில் மயங்குகின்ற மாந்தர்களே! இநத மந்திரங்களை வைத்துக்கொண்டு, இறக்குமுன் அவற்றை உச்சரித்து மரணத்தைத் தள்ளிப்போட முடியுமா? மந்திரமாக இருப்பது உனக்குள்ளே உள்ள குத்தெழுத்தே. அதுவே யாவரும் மதிக்கும்படி நீங்களாக உள்ள உயிராகி நின்றது. மந்திரங்கள் என்பது மனதின் திடம். பஞ்சாட்சரமே அந்த மந்திரங்கள் என்று உணருங்கள். நினைவாம் குத்தெழுத்தில்(ஆதி) உள்ளத்தை சேருங்கள்.


சிவவாக்கியம் - 374

உள்ளதோ புறம்பதோ உயிரொடுங்கி நின்றிடம்
மெள்ளவந்து கிட்டிநீர் வினாவவேண்டு மென்கிறீர்
உள்ளதும் பிறப்பது மொத்தபோது நாதமாங்
கள்ளவாச லைத்திறந்து காணவேண்டு மாந்தரே.

உயிர் உடலுள் உள்ளதா? அல்லது இவ்வுடலுக்கு வெளியே நின்றுள்ளதா? என மெல்ல அருகில் வந்து கேட்கவேண்டும் என்று சொல்லுகிறீர்கள். உயிர் உடலின் வெளியே நினைவு என்னும் ஆகாயத்திலும், பிறந்தபின் உடலுக்கு உள்ளே சோதியாகவும், இரண்டும் சேர்ந்தபோது நாதமாகவும் உள்ளது. இதை உணர்ந்து, இரகசிய வாயிலாம் வாயைத் திறந்து ஞான யோகம் செய்து அதனுள் சென்று ஈசனைக் காணவேண்டும், மனிதர்களே!


சிவவாக்கியம் - 375

ஓரெழுத்தி லிங்கமா யோதுமட் சரத்துளே
ஓரெழுத் தியங்குகின்ற வுண்மையை யறிகிலீர்
மூவெழுத்து மூவராய் முளைத்தெழுந்த சோதியை
நாவெழுத்து நாவுளே நவின்றதே சிவாயமே.

நம் உடலில், குத்தெழுத்தாம் புள்ளியே இலிங்கமாக உள்ளது. அது, ஓதுகின்ற அட்சர மந்திரங்கள் முதலாகவும், நடுவாகவும் முடிவாகவும் இருந்து இயங்குகின்ற உண்மையை அறியாது இருக்கின்றீர்கள். அதுவே அகார, உகார, மகாரமான மூன்றெழுத்தாகிறது. அங்கு அதுவே அரி, அரன், அயன் என்ற மூவராகவும், முளைத்து எழும் சோதியாகவும் உள்ளது. அந்த நாக்குதான் கபலத்துக்குள்ளே செல்லும் வழி என உணர்ந்து கொள்ளுங்கள். அந்த நாக்கால் அனுதினமும் ஐந்தெழுத்தாம் சிவாயத்தை ஓதித் தவம் செய்யுங்கள்.


சிவவாக்கியம் - 376

முத்திசித்தி தொந்தமா முயங்குகின்ற மூர்த்தியை
மற்றுதித்த வப்புனல்க ளாகுமத்தி மப்புலன்
அத்தர்நித்தர் காளகண்ட ரன்பினா லனுதினம்
உச்சரித் துளத்திலே யறிந்துணர்ந்து கொண்மினே.

முத்திக்கும் சித்திக்கும் காரணமான ஈசன், நம் உடலில், கண்களின் நடுவில் நீருக்குள் சோதியாய் மிதந்து கொண்டுள்ளான். பக்தர்களும், ஞானிகளும், யோகிகளும் அன்பினால் அனுதினமும் உள்ளத்தில் சிவயநம என உச்சரித்து ஈசனைப் பூசிக்கிறார்கள். அனைவரும் அவ்வழியே சென்று தவம் செய்ய ஈசனை உணரலாம்.


சிவவாக்கியம் - 377

மூன்றிரண்டு மைந்துமாய் முயன்றெழுந்த தேவராய்
மூன்றிரண்டு மைந்ததாய் முயன்றதே யுலகெலாம்
ஈன்றதாயு மப்பனு மியங்குகின்ற நாதமாய்
தோன்றுமோ ரெழுத்தினோடு சொல்லஒன்றும் இல்லையே.

அகார, உகார, மகாரம் என்ற மூன்றாகிய ஓங்காரமும் நாதம் விந்து ஆகிய இரண்டும் சேர்ந்து, அதில் முயன்றெழுகின்ற சக்தியே ஈசன். ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்றினோடு இரு வினைகள் சேர்ந்து, பெற்ற தாய் தந்தையாகி, உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் இயங்குகின்றன. இவை யாவும் நாதமாய் விளங்கும் குத்தெழுத்தால்தான் என்பதை உணருங்கள். இதைத் தவிர சொல்ல ஒன்றுமில்லையே!


சிவவாக்கியம் - 378

வெளியுருக்கி யஞ்செழுத்து விந்துநாத சத்தமுந்
தளியுருக்கி நெய்கலந்து சகலசத்தி யானதும்
வெளியிலு மவ்வினையிலு மிருவரை யறிந்தபின்
வெளிகலந்த தன்மையால் தெளிந்ததே சிவாயமே.

வெட்ட வெளியாகிய மனத்தை உருக்கி, சிவயநம என்று அஞ்செழுத்தை ஓதித் தவமிருக்க விந்தும், நாதமும் சேர்ந்து ஒலி கேட்கும். தயிரைக் கடைந்து நெய் எடுப்பது போல உடலை உருக்கி, உயிரினைக் கடைந்து, நெய்யாகிய மெய்ப்பொருளை உணருங்கள். அது உங்களுக்குள்ளே சகல சக்தியாக உள்ளது. வெளியான மனதையும் நல்வினை தீவினையையும் அறிந்து சக்தியான உடம்பையும், சிவனாகிய உயிரையும் ஒன்றாக்கித் தவம் இருங்கள். அப்போது சோதி வெட்டவெளியில் கலந்து இருப்பது தெளிவாகத் தெரியும். அதுவே சிவாயம்.


சிவவாக்கியம் - 379

முப்புறத்தி லப்புறம் முக்கண்ணன் விளைவிலே
சிற்பரத்து ளுற்பனஞ் சிவாயமஞ் செழுத்துமாந்
தற்பரமுதித்து நின்று தாணுவெங்கு மானபி
னிப்புற மொடுங்குமோடி யெங்கும்லிங்க மானதே.

சூரிய மண்டலம், சந்திர மண்டலம், அக்னி மண்டலம் ஆகிய மூன்று மண்டலங்களுக்கும் அப்பால் இருக்கும் முக்கண்ணாம் ஈசன் அருளால் அனைத்தும் விளைந்தது. உனக்குள் இருக்கும் சிற்றம்பலத்தில் உற்பத்தி ஆகி நிற்கும் சிவாயம் அஞ்செழுத்தே. அது தனக்குள் உதித்து நின்று, தாணு எனும் ஈசனாகி உலகெங்கும் பரவி உள்ளது. அதுவே உன் உடலில் ஒடுங்கி, ஓடி இலிங்கமாய் அமைந்துள்ளது.


சிவவாக்கியம் - 380

ஆடிநின்ற சீவனோ ரஞ்சுபஞ்ச பூதமோ
கூடிநின்ற சோதியோ குலாவிநின்ற மூலமோ
நாடுகண்டு நின்றதோ நாவுகற்ற கல்வியோ
வீடுகண்டு விண்டிடின் வெட்டவெளியு மானதே.

உடலில் ஆடி நின்ற சீவனே பஞ்சபூதங்களாய் விரிந்து நின்றது. அதிலே கூடி நின்றது சோதி. அங்கே குலாவி நின்றது மூலப் பொருளான ஆதி. அனைட்து நாட்டையும் கண்டு நின்ற கண்கள் அதுவே. நாவினால் கற்றுத் தெளிந்த ஞானக்கல்வி அதுவே. அது இருக்கும் இரகசிய வீட்டை கண்டு உணர்ந்து சொன்னால் அதுவே வெட்ட வெளியாம்.


சிவவாக்கியம் - 381

உருத்தரித்த போதுசீவ னொக்கநின்ற வுண்மையுந்
திருத்தமுள்ள தொன்றிலுஞ் சிவாயமஞ் செழுத்துமா
மிருத்துநின் றுறுத்தடங்கி யேகபோக மானபின்
கருத்தினின் றுதித்ததே கபாலமேந்தும் நாதனே.

உரு உண்டாகியபோதே சிவனும் சீவனும் ஒன்றாகி நின்ற உண்மையையும், அது உனக்குள் திருத்தமுள்ளதாக ஓரெழுத்தாகவும் அஞ்செழுத்தாகவும் ஆகி நிற்பதை அறிந்து கொள்ளுங்கள். அந்த ஒன்றிலேயே நினைவை இருத்தி நின்று வாசியை ஏற்றினால் மனம் அடங்கி ஐம்புலன்களும் ஒடுங்கும். கபாலம் ஏந்தும் நாதனாகிய ஈசனையே கருத்தில் வைத்து துதித்துத் தவம் செய்யுங்கள். அது ஏகபோகத்தைத் தரும்.


சிவவாக்கியம் - 382

கருத்தரித் துதித்தபோது கமலபீட மானதுங்
கருத்தரித் துதித்தபோது காரணங்க ளானதுங்
கருத்தரித் துதித்தபோது கரணமிரண்டு கண்களாய்
கருத்தினின் றுதித்ததே கபாலமேந்தும் நாதனே.

கருத்தரித்து உதித்த போது உயிர், உடலில் உள்ள ஆகாயத் தாமரையான கமல பீடத்தில் இருந்தது. அவ்வுயிரே, அனைத்திற்கும் காரணமானது. கருவாக உருவானபோது முதலில் தோன்றியது, காணும் இரண்டு கண்களே. நான் உருவாகும்போது என் கருத்தில் நின்று உதித்தது கபாலம் ஏந்தும் நாதனாகிய ஈசனே.


சிவவாக்கியம் - 383

ஆனவன்னி மூன்றுகோண மாறிரண்டு எட்டிலே
யானசீவ னஞ்செழுத் தகாரமிட் டலர்ந்தது
மானசோதி யுண்மையு மனாதியான வுண்மையு
மானதான தானதா யவலமாய் மறைந்திடும்

ஆறும் இரண்டும் எட்டாகிய உடலில் வன்னி என்னும் தீ சூரிய சந்திர அக்னி கலைகளாக (மூன்று கோணமாகி) உள்ளது. அதிலே ஆன அஞ்செழுத்தாகிய சீவன் அகாரத்திலே அமர்ந்திருக்கிறது. அதுவே தனக்குள்ளே தானாகி நின்றது. அந்த சீவ சோதியின் உண்மையையும் அதிலே அநாதியான ஈசனின் உண்மையையும் உணர்ந்து தவம் செய்யுங்கள். தவம் விளைய விளைய அனைத்து அவலங்களும் மறைந்திடும்.


சிவவாக்கியம் - 384

ஈன்றெழுந்த வெம்பிரான் திருவரங்க வெளியிலே
நான்றபாம்பின் வாயினால் நாலுதிக்கு மாயினான்
மூன்றுமூன்று வளையமாய் முப்புரங் கடந்தபின்
னீன்றெழுந்த அவ்வினோசை யெங்குமாகி நின்றதே.

திருவரங்கவெளியாம் உடலிலே எம்பிரானாகிய ஈசன் தலையில் எழுந்து நிற்கின்றான். நான்கு திசைகளாக ஆகி உள்ளான். குண்டலினி சக்தியாக ஆறு ஆதாரங்களையும் சூரிய சந்திர அக்னி மண்டலமான முப்புரங்களையும் கடந்த பின் அவ்வின் ஓசை எங்கும் கேட்கும். ஈசன் எங்குமாகி நாதமாகி நிற்கின்றான்.


சிவவாக்கியம் - 385

எங்குமெங்கு மொன்றலோ வீரேழ்லோக மொன்றலோ
அங்குமிங்கு மொன்றலோ வனாதியான தொன்றலோ
தங்குதா பரங்களுந் தரித்தவார தொன்றலோ
உங்களெங்கள் பங்கினி லுதித்ததே சிவாயமே.

எங்கெங்கும் ஈரேழு உலகத்திலும் அங்கும் இங்கும் அனாதியானதும் உள்ளது ஒன்றுதான். இப்பூமியில் உள்ள தாவரங்களிலும் உயிர் தரித்திருப்பதும் இவ்வாறே. உங்களிடமும் எங்களிடமும் உடலில் பங்கு கொண்டு இருப்பது அந்த ஒன்றாகிய மெய்ப்பொருளே. அதுவே சிவாயம்.


சிவவாக்கியம் - 386

அம்பரத்தி லாடுஞ்சோதி யானவன்னி மூலமா
மம்பரமுந் தம்பரமு மகோரமிட் டலர்ந்தது
மம்பரக் குழியிலே யங்கமிட் டுருக்கிட
வம்பரத்தி லாதியோ டமர்ந்ததே சிவாயமே.

உடலில் கண்களில் ஆடுகின்ற சோதியான தீயே அனைத்திற்கும் மூலம். உடலுக்குள் உயிர் அகாரத்தில் உள்ளது. கபாலக் குழியில் உள்ள கண்களில் உள்ள உயிரை அறியுங்கள். ஞானவினையால் அங்கம் உருகத் தவம் இருங்கள். உடலில் ஆதியான சோதியாக அமர்ந்திருப்பதே சிவாயம்.


சிவவாக்கியம் - 387

வாடிலாத பூமலர்ந்து வண்டுரிசை நாவிலே
யோடிநின் றுருவெடுத் துகாரமா யலர்ந்தது
மாடியாடி யங்கமு மகப்படக் கடந்தபின்
கூடிநின் றுலாவுமே குருவிருந்த கோலமே.

வாடாத பூவாகக் கண்களாக மலர்ந்திருக்கும் மலரடி அது. வண்டைப்போல் நாவிலே ரீங்காரமிட்டு ஓடி நின்று உருவெடுத்து உகாரமாய் மலர்ந்திருக்கிறது. வாசி யோகத்தால் அதனை உடலுக்குள் மேலும் கீழும் ஏற்றி இறக்கி, செலுத்தி, ஞானக்கண் சோதியில் கூடி நின்று உலாவுவது குரு இருந்த கோலமே.


சிவவாக்கியம் - 388

விட்டடி விரைத்ததோ வேருருக்கி நின்றதோ
எட்டிநின்ற சீவனு மீரேழ்லோகம் கண்டதோ
தட்டுருவ மாகிநின்ற சதாசிவத் தொளியதோ
வட்டவீ டறிந்தபேர்கள் வானதேவ ராவரோ.

உடலை விட்டு உயிர் போனால் மரணம். வேராகிய உயிர் உருக்கி வெளி வரும். வந்த சீவன் ஈரேழு லோகங்களையும் ஆகாயத் தலத்தில் நின்று கண்டது. பின்னர் தான் செய்த இரு வினைகளால் மறுபடியும் பிறப்பெடுக்கிறது. இது சதாசிவத்தின் ஒளியினால்தான். இவ்வொளி இருக்குமிடம் கண்களில்தான். அதையறிந்து தவம் செய்ய மனிதன், வானவர், தேவர் ஆகலாம்.


சிவவாக்கியம் - 389

வானவர் நிறைந்தசோதி மானிடக் கருவிலே
வானதேவ ரத்தனைக்குள் வந்தடைவர் வானவர்
வானகமும் மண்ணகமும் வட்டவீ டறிந்தபின்
வானெலாம் நிறைந்தமன்னு மாணிக்கங்க ளானதே.

ஆகாயத் தலத்தில் நிறைந்துள்ள ஈசனாம் சோதி, மானிடக் கருவில் உட்புகுந்து உயிருள்ள உடலாய் ஆனது. வானவர்கள், தேவர்கள் ஆகியோர் தவம் செய்து அந்த சோதியில் கலந்து ஈசனை அடைந்தனர். அதுபோல, மானிடரும் தன்னுள் உள்ள வட்ட வீடாம் கண்களை அறிந்து, அதனுள்ளே சென்று தவம் புரிய நிலைபெற்ற மாணிக்கங்களாய் வானில் நிறைந்து விளங்கும் ஈசனை அடைவார்கள்.


சிவவாக்கியம் - 390

பன்னிரண்டு கால்நிறுத்திப் பஞ்சவர்ண முற்றிடின்
மின்னியே வெளிக்குணின்று வேறிடத் தமர்ந்ததுஞ்
சென்னியாந் தலத்திலே சீவனின் றியங்கிடும்
பன்னியுன்னி யாய்ந்தவர் பரப்பிரம்ம மானதே.

ஐந்து வண்ணங்கள் கொண்ட திருவடியாம் கண்களில் மின்னியபடி உள்ள தீச்சுடர், வெட்டவெளிக்குள் இருந்ததையும், அத்தீயே உள்ளே சோதியாகக் கண்களில் இருப்பதையும் அறிந்து, நினைவைக் கருத்தில் வைத்து, பன்னிரண்டு அங்குலம் சூரியகலையில் ஏறும் காற்றை கும்பகம் செய்து நிறுத்திசிவயநமஎன தவம் செய்யுங்கள். அப்போது சென்னி எனும் தலையில் சீவனாகிய ஈசன் நின்று இயங்கும். இதனை உணர்ந்து தவம் செய்ய பரம்பொருளைச் சார்ந்து பரப்பிரம்மம் ஆவார்கள்.


சிவவாக்கியம் - 391

உச்சிகண்டு கண்கள்கட்டி யுண்மைகண்ட தெவ்விடம்
மச்சுமாளி கைக்குளே மானிடங் கலப்பிரேல்
எச்சிலான வாசல்களு மேகபோக மாய்விடும்
பச்சைமாலு மீசனும் பரந்ததே சிவாயமே.

கண்களை மூடி கபால உச்சியில் கருத்தை நிறுத்தித் தவமிருந்து மெய்ப்பொருளைக் கண்டது எந்த இடம்? நம் உடலிலே மச்சு வீடான தலைக்குள்ளே உள்ள சீவனுடன், அங்கேயே அறிவு, உணர்வு, நினைவு என்ற மூன்றையும் ஒன்றாக்கிக் கலந்து தவம் செய்யுங்கள். எச்சில் சுரக்கும் வாயில் அமிர்தம் சுரக்கும். அதையுண்டால் ஏகபோகம்தான். அந்த இடத்தில்தான் பச்சை வண்ணத் திருமாலும், ஈசனும் ஒன்றாகி நிறைந்து விரிந்து உள்ளனர்.


சிவவாக்கியம் - 392

வாயிலிட்டு நல்லுரிசை யட்சரத் தொலியிலே
கோயிலிட்டு வாவியுமங் கொம்பிலே யுலர்ந்தது
மாயிலிட்ட காயமு மனாதியிட்ட சீவனும்
வாயுவிட்ட வன்னியும் வளர்ந்ததே சிவாயமே.

வாயில் உள்ள உள்நாக்கை மேலெழுந்தவாறு மடக்கி, துளையை அடைத்து, வாசியை வாய்க்குள் இழுத்து மேலேற்ற நாதம் கேட்கும். கோயிலாம் உடலின் உச்சியில் உள்ளது உயிராம் ஈசன். மாயையான உடம்பும் அனாதியான சீவனான உயிரும் கபாலத்தில் தங்கியுள்ளது. கண்களில் உள்ள நந்தி(நம்+தீ)யாக விளங்கும் சோதியினுள்ளே சென்று தவம் செய்யுங்கள். அதனால் சீவன் சிவத்தை அடையும்.


சிவவாக்கியம் - 393

அட்சரத்தை யுச்சரித் தனாதியங்கி மூலமா
யட்சரத்தை யுந்திறந் தகோரமிட் டலர்ந்தது
மட்சரத்தி லுட்கர மகப்படக் கடந்தபின்
அட்சரத்தி லாதியோ டமர்ந்ததே சிவாயமே.

ஓம் நமசிவயஎனும் அட்சரத்தை உச்சரித்து உணர்வில் ஓத அதில் அனாதியாக இயங்கும் சிகாரமே அனைத்திற்கும் மூலமாய் உள்ளது. அதனை வாசி யோகத்தால் அறிந்து திறக்க அகாரம் மலரும். ‘ஓம்என்ற அட்சரத்தின் மெய்ப்பொருள் உணர்ந்து ஓரெழுத்தாம் குத்தெழுத்தை அறிந்து மாயையைக் கடந்த பின் அந்த ஓங்காரத்தில் ஆதியோடு அமர்ந்திருந்தது சிவாயமே.


சிவவாக்கியம் - 394

கோயிலுங் குளங்களுங் குறியினிற் குருக்களாய்
மாயிலும் மடியிலும் மனத்திலே மயங்குறீர்
ஆயனை யரனையு மறிந்துணர்ந்து கொள்விரேல்
தாயினுந் தகப்பனோடு தானமர்ந்த தொக்குமே.

கோயிலும் குளங்களும் தன் உடலில் கண்ணாக(குறியாக) இருக்கும் மெய்குருவை அறிவதற்குத்தான். அதுவே தாயாகவும் தகப்பனாகவும் தானாகவும் அமர்ந்திருப்பது. இதை உணராமல் உலக மாயையிலும் பெண்ணின் மடியிலும் விழுந்து மனம் போனபடி அலமலந்து, மயங்கி அலைகிறீர்கள். தனக்குள்ளே வசிக்கும் ஆயனாம் மாலையும், அரனாம் ஈசனையும் அறிந்து, உணர்ந்து தவம் செய்யுங்கள். அப்படிச் செய்ய ஈசனுடன் கலக்கலாம்.


சிவவாக்கியம் - 395

கோயிலெங்கு மொன்றலோ குளங்கணீர்க ளொன்றலோ
தேயுவாயு மொன்றலோ சிவனுமங்கே யொன்றலோ
ஆயசீவ னெங்குமா யமர்ந்துவார தொன்றலோ
காயமீ தறிந்தபேர்கள் காட்சியாவர் காணுமே.

அனைத்துக் கோயில்களிலும் இறைவன் ஒன்றே என்பதையும், எல்லாக் குளங்களிலும் உள்ள நீர் ஒன்றே என்பதையும், தேயுவாகிய நெருப்பும், வாயுவாகிய காற்றும் ஒன்றே என்பதையும், அனைத்து சீவராசிகளிலும் உள்ள சீவன் ஒன்றே என்பதையும் உணருங்கள். நம் உடலில் நீரில் நெருப்பாய், சோதியாய் ஈசன் கண்களில் உள்ளான். அதை உணர்ந்து உடலுக்குள் தவம் செய்ய ஈசன் காட்சி கிட்டும்.


சிவவாக்கியம் - 396

காதுகண்கள் மூக்குவாய் கலந்தவார தொன்றலோ
சோதியிட் டெடுத்ததுஞ் சுகங்களஞ்சு மொன்றலோ
ஓதிவைத்த சாத்திர முதித்தவார தொன்றலோ
நாதவீ டறிந்தபேர்கள் நாதராவர் காணுமே.

நம் உடலில், காது கண்கள் மூக்கு வாய் ஆகிய யாவும் கலந்து நின்ற இடம் கண்களில்தான். ஆங்குதான் சோதி தீயாக உதித்து ஆடிக்கொண்டுள்ளது. எண்சாண் உடல் எடுத்ததும், அதனால் அடையும் இன்பங்கள் பல(அஞ்சு) வகையாயினும் இன்பம் ஒன்றுதான். ஓதிவைத்த சாத்திரங்கள் யாவும் கூறுவதும் ஒன்றுதான். சோதியில் நாதம் ஒடுங்குமிடத்தை அறிந்தவர்கள் நாதனாம் ஈசன் ஆவர்.


சிவவாக்கியம் - 397

அவ்வுதித்த வட்சரத்தி னுட்கலந்த வட்சரம்
சவ்வுதித்த மந்திரஞ் சம்புளத் திருந்ததால்
மவ்வுதித்த மாய்கையால் மயங்குகின்ற மாந்தர்காள்
உவ்வுதித்த தவ்வுமா யுருத்தரித்த வுண்மையே.

எனும் எழுத்துக்குள் முன்பு உதித்த ஒரேழுத்து குத்தெழுத்தாம் புள்ளியாகிய ஆதி. தொண்டைச் சவ்வில் உதித்தஓம்எனும் மந்திரம்தான் சம்புவாகிய ஈசன் உள்ளத்து இருக்கும் மந்திரம். ‘மவ்எனும் மாயையால் மயங்குகின்ற மாந்தர்களே! ‘உவ்எனும் உகாரமாம் உடலில் உயிராகவும், ‘அவ்எனும் அகாரமாம் உயிரில் உடலாகவும் உருத்தரித்தது உண்மையே.


சிவவாக்கியம் - 398

அகாரமென்னு மக்கரத்தி லக்கர மெழுந்ததோ
அகாரமென்னு மக்கரத்தி லவ்வுவந் துதித்ததோ
உகாரமு மகாரமு மொன்றிநன்று நின்றதோ
விகாரமற்ற ஞானிகாள் விரிந்துரைக்க வேணுமே.

அகாரம்என்னும் உயிரில் குத்தெழுத்தாகிய அக்கரம் எழுந்தது. அகாரமாகிய உயிர் உகாரமாகிய உடலில் ஓடிக்கொண்டு உள்ளது. அத்துடன் மகாரமாகிய மனமும் சோதியில் உள்ளது. மனவிகாரமற்ற ஞானிகளே! இப்படி அகார, உகார, மகாரம் சேர்ந்து ஓங்காரமாகவும், உடல், பொருள், ஆன்மாவாகவும், அறிவு உணர்வு நினைவாகவும், எட்டும், இரண்டும் சேர்ந்து பத்தாகிய கண்ணாகவும் நம் உடலில் உள்ளதை விரிவாக விளக்கி சொல்ல வேண்டுமே.


சிவவாக்கியம் - 399

சத்தியாவ துன்னுடல் தயங்குசீவ னுட்சிவம்
பித்தர்கா ளிதற்குமேல் பிதற்றுகின்ற தில்லையே
சுத்தியைந்து கூடமொன்று சொல்லிறந்த தோர்வெளி
சத்திசிவமு மாகிநின்று தண்மை யாவதுண்மையே.

உன் உடல் சக்தி; அதில் இயங்கிக்கொண்டிருப்பது சீவன்; அதனுள் இருப்பது சிவம். இத்தத்துவங்களை அறியாத பித்தர்களே! இதற்குமேல் பிதற்றுவதற்கு ஒன்றும் இல்லையே. ஐம்புலன்களாக சுற்றி அமைந்துள்ள கபாலத்தில் உள்ளது சொல்லிறந்த மௌன வெளி. அங்கு சக்தியும் சிவமும் ஒன்றாகி சோதியாய் நின்ற தன்மையை உணருங்கள். அச்சோதியே மெய்ப்பொருளாம்.


சிவவாக்கியம் - 400

சுக்கிலத் துளையிலே சுரோணிதக் கருவுளே
முச்சதுர வாசலில் முளைத்தெழுந்த மோட்டினில்
மெய்ச்சதுர மெய்யுளே விளங்குஞான தீபமா
யுச்சரிக்கும் மந்திரம் ஓம்நமசி வாயமே.

சுக்கிலமாம் விந்துவும், சுரோணிதமாம் முட்டையும் கலந்து கரு உண்டானது. அது சீவனாம் சிவனுடன் கலந்து உயிருள்ள உடல் ஆனது. அதற்குள் சூரிய, சந்திர, அக்கினி கலைகள் ஊடாடிக் கொண்டுள்ளது. கண்களை உச்சிக்குக் கொண்டு செல்ல முக்கோணப் பார்வை கிடைக்கும். அங்கு உச்சி மோட்டினில் சோதி உள்ளது. மூன்று கலைகளையும் ஒன்றுவித்துக் குவித்து சோதியில் நிறுத்த உச்சரிக்க வேண்டிய மந்திரம்ஓம் நமசிவாயவே.


சிவவாக்கியம் - 401

அக்கர மனாதியல்ல வாத்தும மனாதியல்ல
புக்கிருந்த பூதமும் புலன்களு மனாதியல்ல
தக்கமிக்க நூல்களுஞ் சாத்திர மனாதியல்ல
ஒக்க நின்றுடன்கலந்த வுண்மைகாண் அனாதியே.

நம் உடல், அதில் வாழும் ஆன்மா, உடலில் உள்ளே உள்ள பஞ்சபூதங்கள், ஐம்புலன்கள், தகுதிமிக்க மெய் நூல்கள் சொல்லும் கருத்துக்கள், சாத்திரங்கள் உரைக்கும் உண்மைகள், ஆகியன யாவும் அனாதி இல்லை. உயிராம் சிவனும், உடலாம் சிவையும் ஒன்று கலந்து உள் மெய்யில் சோதியாய் நின்ற சிவம் ஒன்றுதான் அனாதி.
 

சிவவாக்கியம் - 402

மென்மையாகி நின்றதேது விட்டுநின்று தொட்டதேது
வுண்மையாக நீயுரைக்க வேணுமெங்க ளுத்தமா
பெண்மையாகி நின்றதொன்று விட்டுநின்று தொட்டதை
யுண்மையா யுரைக்கமுத்தி யுட்கலந் திருந்ததே.

உத்தமரே! நம் உடலில் மென்மையான மலரைப்போன்றதும், உடலை விட்டு நின்றும் உயிரைத் தொட்டும் உள்ளது எது என்ற உண்மையை உரைக்கவேண்டும். எண்ணங்களை உருவாக்கும் மனமென்னும் பெண்மையாகி நின்ற ஒன்றை என்ன என உரைப்பீர். அதுதான் கண்மலர். இந்த உண்மையை சொல்லிவிட்டால், அதற்குள்ளேயே முத்தி உட்கலந்து சோதியாய் இருக்கின்றது.


சிவவாக்கியம் - 403

அடக்கினா லடங்குமோ வண்டமஞ் செழுத்துளே
யுடக்கினா லெடுத்தகாய முண்மையென் றுணர்ந்துநீ
சடக்கிலாறு வேதமுந் தரிக்கவோதி லாமையால்
விடக்குநாயு மாயவோதி வேறுவேறு பேசுமோ.

நாம் முயன்று அடக்கினால், அஞ்செழுத்துக்குள்ளே அண்டங்களை அடக்கலாம். உள் மருமத்தால் (விந்துவும் முட்டையும்கூடி) வந்த இவ்வுடலை உள் மெய் என உணருங்கள். வேதங்கள் ஓதினாலும், சடங்குகள் செய்தாலும் ஈசனை அடையும் வழி அறியமாட்டீர்கள். எவ்வளவுதான் ஆற்றில் நீர் ஓடினும், நாய் நக்கித்தான் குடிக்கும். அதுபோல அலையாதீர்கள். ஈசனை அடையும் வழி அறிந்து, அதன் வழி சென்று மவுனத்தில் ஒன்றுங்கள்.


சிவவாக்கியம் - 404

உண்மையான சக்கர முபாயமா யிருந்ததும்
தண்மையான காயமுந் தரித்தரூப மானதும்
வெண்மையாகி நீறியே விளைந்துநின்ற தானது
முண்மையான ஞானிகள் விரிந்துரைக்க வேணுமே.

வெண்மையான விந்து முட்டையுடன் சேர்ந்த்து உடல் உருவானது. அதில் உள்ள சக்கரமான கண்வழி சென்றுதான் பரஞ்சோதியை அடையவேண்டும். உண்மையான ஞானிகளே! இந்த உண்மையை அனைவருக்கும் புரியும் வண்ணம் விரிவாய் எடுத்துச் சொல்ல வேண்டுமே.


சிவவாக்கியம் - 405

எள்ளகத்தி லெண்ணெய்போல வெங்குமாகி யெம்பிரா
னுள்ளகத்தி லேயிருக்க வூசலாடும் மூடர்காள்
கொள்ளைநாயின் வாலினைக் குணக்கெடுக்க வல்லிரேல்
வள்ளலாகி நின்றசோதி காணலாகு மெய்ம்மையே.

எம்பிரான் ஈசன், எள்ளுக்குள் இருக்கும் எண்ணெய் போல எங்கும் பரவி உள்ளான். ஈசனை நம் உடலில், கபாலத்தில் கண்ணாக இருப்பதை உணராமல் உலகமெங்கும் தேடி ஊசலாடும் மூடர்களே! திருட்டு நாயின் வாலைப்போல் ஆடிக் கொண்டிருக்கும் மனத்தின் அலைபாயும் குணத்தை அடக்கித் தவம் இருக்க வல்லவர்களானால், வள்ளலாகிய ஈசன் நமக்குள்ளே பரஞ்சோதியாக நின்றதைக் காணலாம். பரஞ்சோதியே மெய்ப்பொருள்.


சிவவாக்கியம் - 406

வேணுமென்ற ஞானமும் விரும்புகின்ற நூலிலே
தாணுவுண்டங் கென்கிறீர் தரிக்கிலீர் மறக்கிலீர்
தாணுவொன்று மூலநாடி தன்னுள்நாடி யும்முளே
காணுமன்றி வேறியாவுங் கனாமயக்க மொக்குமே.

ஞான நூல்களை எல்லாம் படித்துவிட்டு மட்டும், தாணுவாம் ஈசனைக் காணாது, அவன் நமக்குள்ளே இருக்கிறான் என்று சொல்கிறீர்கள். தன்னை மறந்து தவம் செய்து அவனை உணரவில்லை. மூலநாடியைத் தன் நாடியுடன் சேர்த்து மேலேற்றித் தவம் செய்து மெய்ப்பொருளுடன் கலக்கவேண்டும். அவ்வின்பத்தை உணரவேண்டும். மற்றவை அனைத்தும் கனவில் கண்ட காட்சி போலத்தான்.


சிவவாக்கியம் - 407

வழக்கிலே யுரைக்கிறீர் மனத்துளே தவிக்கிறீர்
உழக்கிலாது நாழியான வாறுபோலு மூமைகாள்
உழக்குநாலு நாழியான வாறுபோலு மும்முளே
வழக்கிலே யுரைக்கிறீர் மனத்துளீசன் மன்னுமே.

இறைவன் எங்கு இருக்கிறான்? என வழக்காடும்போது, பல வாதங்களையும் எடுத்து வைக்கிறீர்கள். ஆனால் அவன் எங்குள்ளான் என உங்களுக்கே தெரியாது. மனதுக்குள் தவிக்கிறீர்கள். எப்படிக் கடல் நீரைச் சூடாக்கி, உப்பை எடுத்து அளப்பது என்ற உண்மையை அறியாதது போல், ஈசன் எங்கு உள்ளான் என்னும் உண்மையை உணராத ஊமைகளே! கடல் நீரினில் உப்பாக, உப்பு இருப்பதைப்போல், உங்கள் உடலுக்குள்ளே உப்பான மெய்ப் பொருளாய் ஈசன் இருப்பதை உணருங்கள். உள்ளுக்குள்ளே தவம் செய்து வந்தால் மனதுக்குள்ளேயே ஈசன் உள்ளதை அறியலாம்.


சிவவாக்கியம் - 408

சுத்தியைந்து கூடமொன்று சொல்லிறந்த தோர்வெளி
சத்தியுஞ் சிவமுமாகி நின்றதன்மை யோர்கிலீர்
சத்தியாவ தும்முடல் தயங்குசீவ னுட்சிவம்
பித்தர்கா ளறிந்துகொள் பிரானிருந்த கோலமே.

சக்தியாவது உங்கள் உடல்; அதில் இயங்கும் சீவனாம் சிவம் உயிர். இங்ஙனம் இவ்வுடலில் சக்தியும் சிவனும் இணைந்து உலவுவதை அறியமாட்டீர்கள். ஐம்பூதங்களாலாகிய உடலின் மேல் உள்ள மவுன வெளியில் ஈசன் சக்தியுடன் கூடி சோதி வடிவில் உள்ளான். பித்தர்களே! இதுதான் எம்பிரான் உடலில் இருக்கும் கோலம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.


சிவவாக்கியம் - 409

அகாரமான தம்பலம் மனாதியான தம்பலம்
உகாரமான தம்பல முண்மையான தம்பலம்
மகாரமான தம்பலம் வடிவமான தம்பலஞ்
சிகாரமான தம்பலம் தெளிந்ததே சிவாயமே.

அகாரமாகிய உயிர்தான் அநாதியான ஈசன். அவன், உகாரம் என்னும் உடலில், உள் மெய்யில், குடி கொண்டு இருக்கிறான். மகாரமாகிய மனதில் சோதி வடிவாகி உள்ளான். ஆதி, நடு, அந்தம் ஆகிய அனைத்துமான சிகாரத்தில் நினைவை வைத்துத் தவம் செய்ய சிவாயம் தெளிவாய் விளங்கும்.


சிவவாக்கியம் - 410

சக்கரம் பறந்தோடி சக்கரமேல் பலகையாய்
செக்கிலாடு மெண்ணெய்போல சிங்குவாயு தேயுவு
முக்கிலே யொளிகலந்து யுகங்களுங் கலக்கமாய்
புக்கிலே புகுந்தபோது போனவாற தெங்ஙனே.

வண்டிச் சக்கரம் கழன்று ஓடினால், வண்டி வெறும் பலகைதான். சக்கரமாக இருக்கும் கண்களிலிருந்து உயிர் பிரிந்தால் உடல் வெறும் கட்டைதான். கண்களில் உள்ள சோதியில் உள்ள நெருப்பையும், உயிரில் உள்ள வாயுவையும் இணைத்து சோதியில் நிறுத்தி யுகங்கள் தோறும் தவம் செய்யுங்கள். கண்களாகிய பூவினுள்ளே இருந்த ஆன்மா கலங்கி உடலை விட்டு போனது எவ்வாறு என்பதை ஆராயுங்கள்.


சிவவாக்கியம் - 411

வளர்ந்தெழுந்த கொங்கைதன்னைமாய மென்றெண்ணிநீ
ரருள்கொள்சீவ ராருடம்புடைமை யாகத்தேர்வீர்காள்
விளங்கு ஞானமேவியே மிக்கோர்சொல்லலைக் கேட்பிரேல்
களங்கமற்று நெஞ்சுளே கருத்துவந்து புக்குமே.

வளர்ந்து கொழுத்த மார்பகங்களை உடைய பெண்களின் மேல் உள்ள ஆசையை மாயம் எனப் புறந்தள்ளி, அருளுடைய சீவனிருக்கும் உடலை நிலையென நினைத்து, ஞானமிகுந்தவர்களின் போதனைகளைக் கேட்டு, அதன்படி நடந்து தவமிருக்க, களங்கம் இல்லா மனம் கிட்டும். அதனுள் கருத்தாய் ஈசன் வந்து அமர்வான்.


சிவவாக்கியம் - 412

நாலுவேத மோதுகின்ற ஞானம்ஒன் றறிவிரோ
நாலுசாம மாகியே நவின்றஞான போதமா
யாலமுண்ட கண்டனு மயனுமந்த மாலுமாய்ச்
சாலவுன்னி நெஞ்சுளே தரித்ததே சிவாயமே.

நான்கு வேதங்களும், நான்கு சமயங்களும் ஓதும் ஞானம் ஒன்றுதான். ஈசன் நம் உடலினுள்ளே உள்ளான் என்பதுதானது. அவனை அடையும் வழியையும் அவைகள் சொல்கின்றன. அதன்படி முக்கலைகளையும் ஒன்றாக்கி மேலேற்றித் தவம் புரிய, விடமுண்ட கண்டனாம் சிவன், பிரம்மா, திருமால் ஆகிய மூவரும் ஒன்றாகி நெஞ்சத்தில் சிவாயமாகி இருப்பார்கள்.


சிவவாக்கியம் - 413

சுற்றமென்று சொல்வதுஞ் சுருதிமுடிவில் வைத்திடீ
ரத்தன்நித்த மாடியே யமர்ந்திருந்த தெவ்விடம்
பத்திமுற்றி யன்பர்கள் பரத்திலொன்று பாழது
பித்தரே யிதைக்கருதி பேசலாவ தெங்ஙனே.

உயிர் பிரியும்போது சுற்றம் எங்கு போயிற்று. நம் உடலில், தினம்தோறும், அத்தனாகிய ஈசன் ஆடிக்கொண்டு இருக்கும் இடம் எந்த இடம்? அதுவே கண்கள். ஞானிகள் அதனை அறிந்து அதிலேயே பக்தியுடன் நினைவை வைத்துத் தவம் செய்து, பாழ் என்ற சூன்யமே பரம்பொருள் என்பதை உணர்ந்து, பரத்தை அடைவார்கள். பித்தர்களே! இதைக் கருத்தில் கொண்டு ஈசனை அடைவதைத் தவிர வேறு பேசுவதால் என்ன பயன்?


சிவவாக்கியம் - 414

எங்ஙனே விளக்கதுக்கு ளேற்றவாறு னின்றுதா
னெங்ஙனே எழுந்தருளி யீசனேச ரென்பரே
லங்ஙனே இருந்தருளு மாதியான தற்பரம்
சிங்கமண்மி யானைபோலத் திரிமலங்க ளற்றவே.

நம் உடலில் உள்ள கபாலக் குகையில் உள்ள கண்களில் உள்ள சோதியான விளக்கின் உள்ளே நினைவை நிறுத்திக் கருத்தில் கலவுங்கள். அங்கே ஆதியான தற்பரத்தில் ஈசன் எழுந்தருளி உள்ளான். அவனை அறிந்து அங்கேயே நின்று அவனையே நினைத்துத் தவமிருக்க, நாம் யோக சிங்கங்களாக ஆகி, யானையைப் போன்ற அறிவு பெற்று, ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களையும் அறுத்துப் பிறவாநிலை அடையலாம்.


சிவவாக்கியம் - 415

அற்றவுள் ளகத்தையு மலக்கிடு மெழுகிடு
மெத்ததீப மிட்டதிற்பிற வாதபூசை யேத்தியே
நற்றவம் புரிந்துஏக நாதர்பாதம் நாடியே
கற்றிருப்ப தேசரிதை கண்டுகொள்ளு மும்முளே.

உள் மனதினுள்ளே உள்ள மும்மலங்களையும் விலக்கி, ஈசனைப் பற்றிய சிந்தனையால் மெழுகி, தலையில் ஏற்றி வைத்த தீபமாம் கண்களில் உள்ள சோதியிலேயே நினைவை நிறுத்துங்கள். மூன்று கலைகளையும் ஒன்றாக்கி உயிர் மூச்சை மேலேற்றி, ஈசனின் திருவடி நாடித் தவம் செய்யுங்கள். இதுவே நீங்கள் கற்கவேண்டிய ஞானக்கல்வி. தவம் செய்யச் செய்ய விளங்காத உண்மைகளெல்லாம் விளங்கும். சாத்திரப் பூட்டுக்கள் உடையும்.


சிவவாக்கியம் - 416

பார்த்துநின்ற தம்பலம் பரமனாடு மம்பலங்
கூத்துநின்ற தம்பலங் கோரமான தம்பலம்
வார்த்தையான தம்பலம் வன்னியான தம்பலஞ்
சீற்றமான தம்பலந் தெளிந்ததே சிவாயமே.

மெய்ப்பொருள் எது? அதுவே கண்கள். அது பார்த்து நின்றது. பரமன் சோதியாக ஆடிக் கொண்டிருக்கும் இடம். விழித்துக் கூர்மையாகப் பார்ப்பது. விழிக்கும்போது கோரமாக உள்ளது. சொல்லாத சொல்லின்(மவுனம்) பொருள். வன்னியாகிய தீச்சுடரை உள்ளடக்கியது. சினந்து பார்க்க சீற்றம் தோன்றும். இதுவே ஈசனின் அம்பலமாம் கோயில். அறிவாகத் தெளிவாக இருப்பது கண்களாம் சிவாயமே.


சிவவாக்கியம் - 417

சென்றுசென் றிடந்தொறும் சிறந்தசெம்பொன் னம்பலம்
அன்றுமின்று நின்றதோ ரனாதியான தம்பலம்
என்றுமென்று மிருப்பதோ ருறுதியான வம்பல
மொன்றியொன்றி நின்றது ளொழிந்ததே சிவாயமே.

ஆலயங்கள் இல்லாவிடினும் நாம் செல்லுமிடங்களில் எல்லாம் சிறந்த பொன்னம்பலமாக விளங்குவது கண்கள். அன்றும் இன்றும் எப்பொழுதும் இருக்கும் அநாதியான, உறுதியான ஆலயம். அதன் உள்ளே சென்று சோதியில் நினைவை ஒன்றித் தவம் செய்யவேண்டும். அச்சோதியில் ஒளிந்திருப்பது சிவாயமே.


சிவவாக்கியம் - 418

தந்தைதாய் தமரும்நீ சகலதே வதையும்நீ
சிந்தைநீ தெளிவுநீ சித்திமுத்தி தானும்நீ
விந்துநீ விளைவுநீ மேலதாய வேதம்நீ
யெந்தைநீ யிறைவனீ யென்னையாண்ட வீசனே.

என்னுள் இருந்து என்னை ஆண்டுகொண்டிருக்கும் ஈசனே! என் தந்தை, தாய், மற்றும் சுற்றமும் நீயே. அனைத்து தேவதைகளும் நீயே. என் சிந்தை நீயே. சிந்தையில் தெளிந்த அறிவும் நீயே. சித்தியும் முத்தியும் நீயே. விந்தாகிய முதலும் நீயே. அதில் விளைந்த உயிரும் நீயே. வேதங்கள் உரைக்கும் இறையும் நீயே. எந்தையாம் ஏக இறைவன் நீயே. அனைத்தும் நீயே.


சிவவாக்கியம் - 419

எப்பிறப்பி லும்பிறந் திருந்தழிந்த வேழைகா
ளிப்பிறப்பி லும்பிறந்து என்னநீறு பூசுறீ
ரப்புடன் மலமறுத்து ஆசைநீக்க வல்லிரேல்
செப்புநாத வோசையிற் றெளிந்துகாண லாகுமே.

எந்தப் பிறவி எடுத்தாலும், பிறக்கிறீர்; வாழ்கிறீர்; இறக்கிறீர். கிடைத்தற்கரிய மானிடப் பிறவி எடுத்தும், ஈசனை அடையும் வழி என்ன என்று தேடாது, எருவாலாகிய சாம்பலை உடல் முழுதும் பூசிக்கொள்கிறீர்கள். நீரால் ஆகிய உடல் பற்றி இருக்கும் மும்மலங்களையும் அறுத்து, ஆசைகளை ஒழிக்க வல்லவர்களானால், ஞானிகள் சொல்லியுள்ள நாத ஓசையாம்நமசிவயஎன ஓதித் தவம் இருந்து, அந்த நாதத்தில் கலக்கத் தெளிவு உண்டாகும்.


சிவவாக்கியம் - 420

எட்டுயோக மானது மியங்குகின்ற நாதமு
மெட்டுவக்க ரத்துளே உகாரமு மகாரமும்
விட்டலர்ந்த மந்திரம் வீணாதண்டி னூடுபோ
யட்டவட்ச ரத்துளே யமர்ந்ததே சிவாயமே.

எண் சாண் அளவுள்ள உடலில் செய்யும் யோகத்தால், ஓம்(அகாரமாம் உயிர்+உகாரமாம் உடல்+மகாரமாம் மனம்) எனும் நாதத்தை எழுப்பி மேலேற்ற வேண்டும். அது வீணாத் தண்டின் ஊடே போய்என்னும் உயிர் அட்சரத்துள் செல்லும். அங்குதான் சிவாயம் அமர்ந்துள்ளது.


சிவவாக்கியம் - 421

பிரான்பிரா னென்றுநீர் பினாத்துகின்ற மூடரே
பிரானைவிட்டு மெம்பிரான் பிரிந்தவாற தெங்ஙனே
பிரானுமாய் பிரானுமாய் பேருலகு தானுமாய்
பிரானிலே முளைத்தெழுந்த பித்தர்காணு மும்முடல்.

உடலை விட்டு சீவன் பிரியும் நேரத்திலே, எம்பிரானே! ஈசா! என பிதற்றுகின்ற பித்தர்களே! நம் உடலில் ஓடும் சீவனாகிய பிராணனை விட்டு எம்பிரான் பிரியவே இல்லை. அவனை நீங்கள் அப்போது உணரவில்லை. பிராணனாகவும், அதனுள் எம்பிரானாகவும் இப்பேருலகில் உள்ள அனைத்து சீவராசிகளிலும் ஈசன் இருக்கிறான். அப்பிராணனில் முளைத்தெழுந்ததே நம் உடல்.


சிவவாக்கியம் - 422

ஆதியில்லை யந்தமில்லை யானநாலு வேதமில்லை
சோதியில்லை சொல்லுமில்லை சொல்லிறந்த தூவெளி
நீதியில்லை நேசமில்லை நிச்சயப் படாததும்
ஆதிகண்டு கொண்டபின் னஞ்செழுத்து மில்லையே.

இறைவனுக்கு ஆதியில்லை; அந்தமுமில்லை. நான்கு வேதங்களால் ஆனதும் இல்லை. அது சோதி இல்லை; சொல்லாலாகிய மந்திரங்களும் இல்லை; சொல்லற்ற மவுன தூய வெட்டவெளி; அதற்கென்று எந்த நீதியும் இல்லை; அன்பும் இல்லை. அது இப்படித்தான் என வரையறுக்க முடியாதது. இப்படிப்பட்டதான, இருந்தும் இல்லாததான ஆதியைக் கண்டபின் எந்த எழுத்தாலாகிய மந்திரமும் வேண்டாம். அஞ்செழுத்தாகிய நமசிவய என்னும் மந்திரமும் இல்லை.


சிவவாக்கியம் - 423

அம்மையப்ப னப்பநீ ரமர்ந்தபோ தறிகிலீ
ரம்மையப்ப னானநீ ராதியான பாசமே
அம்மையப்ப னின்னையன்றி யாருமில்லை யானபின்
னம்மையப்ப னின்னையன்றி யாருமில்லை யில்லையே.

நம் உடலில் அம்மையப்பன் அமர்ந்திருந்த போது நீங்கள் அவனை அறியவில்லை. நீரான விந்துவும், அம்மையப்பனும் ஆதியான பாசமாகவும், மனமாகவும் உள்ளதை அறியுங்கள். அனைத்தையும் அம்மையப்பனிடம் ஒப்படைத்து, சரணடைந்து, அவன் திருவடியில் நினைவை வைத்துவிட்ட பின், அவனைத் தவிர யாரும் இல்லையே.


சிவவாக்கியம் - 424

முந்தவோ ரெழுத்துளே முளைத்தெழுந்த செஞ்சுட
ரந்தவோ ரெழுத்துளே பிறந்துகாய மானது
மந்தவோ ரெழுத்துளே யேகமாகி நின்றது
மந்தவோ ரெழுத்தையு மறிந்துணர்ந்து கொள்ளுமே.

ஆதியாகிய விந்துவால் உண்டாகியது பிறப்பு. அவ்வுடலில் ஏகமாக நின்றது உயிராகிய சோதி. எந்த எழுத்தையும் எழுத ஆரம்பிக்கும்பொழுது முதலில் ஒரு புள்ளி வைத்து அதிலிருந்துதான் எழுதத் தொடங்குகிறோம். அப்புள்ளியே முந்திய எழுத்து. அதுவே ஆதி. அதுதான் கண்ணின் கருமணி. அதனுள் முளைத்து எழுந்து ஆடிக்கொண்டிருக்கும் சோதி. அந்த சோதியை அறிந்து, உணர்ந்து கொள்ளுங்கள்.


சிவவாக்கியம் - 425

கூட்டமிட்டு நீங்களுங் கூடிவேத மோதுறீர்
ஏட்டகத்து ளீசனு மிருப்பதென் னெழுத்துளே
நாட்டமிட்டு நாடிடும் நாலுமூன்று தன்னுளே
யாட்டகத்து ளாடிடு மம்மையாணை யுண்மையே.

சகல காரியங்களும் நிறைவேற இதைச் செய்; அதைச் செய் எனக் கூறி, கூட்டங்களைச் சேர்த்து வேத மந்திரங்களை ஓதுகிறீர்கள். நூல் ஏடுகளின் உள்ளே ஈசன் எந்த எழுத்தில் இருக்கின்றான் என்பதை அறிவீர்களா? நாலும் மூன்றுமான சப்த(ஏழு)நாடிகளுக்குள்ளே ஓடிடும் ஆன்மா, கபாலமெனும் ஆட்ட அரங்கிலே ஆடிடும் சோதியில் கலந்தால் ஈசனை அடையலாம். இதுவே உண்மை. இது பராசக்தியின் மீது ஆணை.


சிவவாக்கியம் - 426

காக்கைமூக்கை யாமையா ரெடுத்துரைத்த காரணம்
நாக்கையூன்றி யுள்வளைத்து ஞானநாடி யூடுபோ
யேக்கைநோக்க வட்சர மிரண்டெழுத்து யேத்திடிற்
பார்த்தபார்த்த திக்கெலாம் பரப்பிரம்ம மானதே.

தவம் செய்யும் முறை பற்றி காகனாம் காகபுசுண்டர், மூலனாம் திருமூலர், ஆமையாம் அகத்தியர் போன்ற சித்தர்கள் எடுத்துரைத்த உண்மையை உணருங்கள். நாக்கை உள்மடக்கி உண்ணாக்கைத் தொட்டு, கபாலத்துக்குள் போய் ஏக்கத்துடன் மேலே நோக்கி, வாசியை அம், உம் என மேலேற்ற, பார்த்த திக்கில் எல்லாம் பரப்பிருமமே தெரியும்.


சிவவாக்கியம் - 427

ஓசையுள்ள கல்லைநீ ருடைத்திரண்டாய் செய்துமே
வாசலிற் பதித்தகல்லை மழுங்கவே மிதிக்கிறீர்
பூசனைக்கு வைத்தகல்லில் பூவும்நீருஞ் சாத்துறீர்
ஈசனுக் குகந்தகல் லெந்தக்கல்லு சொல்லுமே.

தட்டினால் ஓசை வரும் ஒரே பாறையை இரண்டாய் உடைத்து, ஒன்றை வாசல்படியாக்கி வாசலில் போடுகிறீர்கள்; மற்றொன்றில் ஈசனை சிலையாய் வடித்து பூசைகள் செய்கிறீர்கள். வாசல்படி மழுங்கும்படி மிதிக்கிறீர்கள். ஆனால், அதே கல்லில் செய்த ஈசனின் உருவுக்கு நீரால் முழுக்காட்டி பூ சாத்தி வணங்குகிறீர்கள். இவ்விரு கற்களில் எந்தக்கல் ஈசனுக்கு உகந்த கல் எனக் கூறுங்கள். அவனிருப்பதோ பிண்டக்கல்லாம் உடலில்தான் என்பதை உணருங்கள்.


சிவவாக்கியம் - 428

ஓட்டுவைத்து கட்டிநீ ருபாயமான மந்திரங்
கட்டுபட்ட போதிலுங் கர்த்தனங்கு வாழுமோ
எட்டுமெட்டு மெட்டுளே யியங்குகின்ற வாயுவை
வட்டமிட்ட யவ்விலே வைத்துணர்ந்து பாருமே.

விந்தாகிய நீரால் உருவாகிய இவ்வுடல் எலும்பும் தோலும் ஒட்டு போட்ட ஒன்று. இதில் பிறப்பறுக்கும் மந்திரம் ஓரெழுத்தாம் கண்ணே. அதில்தான் ஈசன் சோதி உருவாகக் கட்டுப்பட்டுள்ளான். எண்சாண் உடலிலே எட்டும் வரைக்கும் ஓடும் பிராணனை வட்டமான கண்களின் உள்ளே வைத்து, உணர்ந்து பாருங்கள்.


சிவவாக்கியம் - 429

இந்தவூரி லில்லையென்று எங்குநாடி யோடுறீ
ரந்தவூரி லீசனு மமர்ந்துவாழ்வ தெங்ஙனே
யந்தமான பொந்திலாரில் மேவிநின்ற நாதனை
யந்தமான சீயிலவ்வி லறிந்துணர்ந்து கொள்ளுமே.

இந்த ஊரில் ஈசன் இல்லை; அந்த ஊரில்தான் இருக்கிறான்; என்று எண்ணி அவனை நாடி ஓடுகிறீர்கள். அவன் இருக்கும் இடத்தை விட்டு எங்கெங்கோ அலைகிறீர்கள். இந்த ஊரில் இல்லாத அந்த ஈசன் அந்த ஊரில் எங்கு உள்ளான். கபாலத்தில் முடிவான பொந்து ஒன்று உண்டு. அதில்தான் கண்கள் உள்ளது. கண்களில் உள்ளே உள்ள ஈசனை அறிய வழி என்ன? சிகாரமாம் கண்களில் அகாரமாம் உயிரை ஏற்றி, ஈசனை அறிந்து உணர்ந்து கொள்ளுங்கள். அதாவது உயிர் மூச்சை கண்களில் உள்ளே செலுத்துங்கள்.


சிவவாக்கியம் - 430

புக்கிருந்த தும்முளே பூரியிட்ட தோத்திரம்
தொக்குசட்சு சிங்குவை யாக்கிராணன் சூழ்ந்திடி
லக்குமணி கொன்றைசூடி யம்பலத்து ளாடுவார்
மிக்கசோதி யன்புடன் விளம்பிடாது பின்னையே.

நம் உடலில் புகுந்திருந்ததும், பூரணமானதும் கண்ணே. தொக்கு, சட்சு, சிங்கு என்னும் மூன்று நாடிகளையும் ஆக்கிராணன் என்னும் நாடியில் இணைத்து மேலேற்றினால் கபாலத்துக்குள் உருத்திராட்சமும் கொன்றையும் சூடிய சிவன் சோதி உருவில் தாண்டவம் செய்வதைக் காணலாம்.


சிவவாக்கியம் - 431

பின்னெழுந்த மாங்கிசத்தை பேதையர் கண்பற்றியே
பின்புமாங்கி சத்தினால் போகமாய்கை பண்ணினால்
துன்புறும் வினைகள்தாம் சூழ்ந்திடும்பி னென்றலோ
அன்பரா யிருந்தபேர்க ளாறுநீந்தல் போல்விடே.

பெண்களின் உடலில் பின்புறம் முதுகுக்கு கீழே முட்டிக் கொண்டுள்ள சதையின் மேல் ஆசை கொண்டு, அவர்களின் கண் வீச்சில் மயங்கி, பெண்ணாசையால் அவர்களை புணர்ந்து அலைந்தால், அதன் பலனாகத் தீராத நோய்களும் வினையும் வந்து சூழும். அதைவிடுத்து பேரின்பம் பெற விழைந்தால், ஆற்றைக் கடந்து அக்கரை செல்வது போல் எளிதாகப் பிறவிப் பெருங் கடலைத் தாண்டலாம்.


சிவவாக்கியம் - 432

விட்டிருந்த தும்முளே விதனமற் றிருக்கிறீர்
கட்டிவைத்த வாசல்மூன்று காட்சியான வாசலொன்று
கட்டிவைத்த வாசலுங் கதவுதாள் திறந்துபோய்த்
திட்டமான வீசனைத் தெளியுமாங் கிசத்துளே.

ஈசனிருப்பது உன் உடலுக்குள்ளே கபாலத்தில். அதை பற்றிய கவலை ஏதும் இல்லாது இருக்கிறீர்கள். உடலுக்குள் சந்திர, சூரிய, அக்கினி மண்டலங்கள் மூன்று. இவைகள் கட்டி வைத்த வாசல்கள். கண்கள் காட்சியான வாசல். கண்களைத் திறந்து மூன்று மண்டலங்களையும் ஒன்றாக்கி மேலேற்றி உள்நாக்கின் மேல் உள்ள கதவைத் திறக்க, இச்சதைப் பிண்டத்தினுள்ளே திடமாக ஈசனைக் காணலாம்.


சிவவாக்கியம் - 433

ஆகுமாகு மாகுமே யனாதியான வப்பொருள்
ஏகர்பாதம் நாடிநாடி யேத்திநிற்க வல்லிரேல்
பாகுசேர் மொழியுமைக்குப் பாலனாகி வாழலாம்
வாகுடனே வன்னியை மருவியே வருந்திடீர்.

அநாதியான ஈசனை அடைய நம் உடலில் உள்ள கண்ணால்தான் முடியும். அதனால்தான் எல்லாமே ஆகும். அதுவே ஏகராம் ஈசன் பாதமாம் திருவடி. அதுவே சூரிய, சந்திர கலைகளாம். அத்துடன் வன்னியாம் அக்கினி கலையை சேர்த்து மேலேற்றி அங்கேயே நிற்க முடியுமானால், இனிய மொழியுடைய உமைக்குப் பாலனாகி வாழலாம். ஆகவே முக்கலைகளும் ஒன்றிய வன்னியாகிய சுத்த அக்கினியைத் தழுவி வாழ்ந்து, இறையடியே கதியென வருந்தித் தவம் செய்யுங்கள்.


சிவவாக்கியம் - 434

உண்மையான தொன்றதொன்றை யுற்று நோக்கியும்முளே
வண்மையான வாசியுண்டு வாழ்த்தியேத்த வல்லிரேல்
தண்மைபெற் றிருக்கலாம் தவமும்வந்து நேரிடும்
கன்மதன்ம மாகுமீசர் காட்சிதானுங் காணுமே.

உண்மையானது எது? உள் மெய்யில் உள்ள கண்கள்தான். அதனுள் உற்று நோக்கி, முக்கலைகளை ஒன்றாக்கி உயிர் மூச்சை(வாசி) வாழ்த்தி ஏற்ற முடிந்தவரானால், குளிர்ச்சி பொருந்தியவராகலாம். தவமும் வந்து சேரும். இதுவே மனிதனின் கர்மமும் தருமமும் ஆகும். இதனால் ஈசனின் காட்சி கிட்டும்.


சிவவாக்கியம் - 435

பாலனாக வேணுமென்று பத்திமுற்று மென்பரே
நாலுபாத முண்டதில் நினைந்திரண் டடுத்ததால்
மூலநாடி தன்னில்வன்னி மூட்டியந்த நீருண
ஏலவார் குழலியூடே யீசர்பாத மெய்துமே.

இளமையாக வாழவேண்டும் என்றால், உடலும் உயிரும் பக்தியிலேயே முற்றி மூழ்கியிருக்க வேண்டும் என்பார்கள். நான்கு இதழ் கமலமாம் மூலாதாரத்தில் எழும் குண்டலினி சக்தியை ஞான வினையால் எழுப்பி, சூரிய, சந்திர கலைகளை அக்கினி கலையோடு சேர்த்து மூல நாடியில் ஏற்றி, அங்கேயே நினைவில் நின்று தவம் செய்தல் வேண்டும். அப்படி செய்ய, ஏலவார் குழலியுடன் இருக்கும் ஈசனின் திருவடி அடையலாம்.


சிவவாக்கியம் - 436

எய்துநின்னை யன்பினா லிறைஞ்சியேத்த வல்லிரே
லெய்துமுண்மை தன்னிலே யிறப்பிறப் பகற்றிடும்
மையிலங்கு கண்ணிபங்கன் வாசிவானி லேறிமுன்
செய்தவல் வினைகளுஞ் சிதறுமது திண்ணமே.

மனிதப் பிறப்பு எடுத்த நோக்கமே இறைவனை அடைவதுதான். அவனை அடைய அவன் திருவடியிலேயே அறிவு உணர்வு நினைவு என்ற மூன்றையும் இணைத்து, நின்று அன்பினால் கெஞ்சித் தவம் இருத்தல் வேண்டும். அப்படி செய்ய வல்லவராயின், பிறப்பும் இறப்பும் இன்றி இருக்கலாம். வாசியானது ஆகாயத்தலத்தில் ஏறி நிற்க, மைதீட்டிய கண்ணை உடைய உமைபாகன் அருளால் முன் செய்த தீவினைகள் அனைத்தும் சிதறி ஓடும். இது திண்ணமே.


சிவவாக்கியம் - 437

திண்ணமென்று சேதிசொன்ன செவ்வியோர்கள் கேண்மினோ
யண்ணலன் புளன்புகுந் தறிந்து நோக்கலாயிடும்
மண்ணதிர விண்ணதிர வாசியை நடத்திடில்
நண்ணியெங்க ளீசனும் நமதுடலி லிருப்பனே.

வாசி யோகம் செய்தால் பிறவா நிலை கிடைக்கும்; இது உறுதி என்ற சேதி சொன்ன செம்மை வழி நின்றவர்களே! கேளுங்கள். அண்ணல் அன்பு உள்ளத்தில் உள்ளான் என்பதை உணர்ந்து, அவனை நோக்கித் தவம் இருங்கள். மண்ணாம் உடல் அதிர, விண்ணாம் உயிர் அதிர வாசியை மேலேற்ற, நம் ஈசனும் நம்மை நாடி வந்து நம் உடலில் இருப்பானே! அப்போது பிறவா நிலை தானே கிட்டும்.


சிவவாக்கியம் - 438

இருப்பனெட் டெட்டெண்ணிலே இருந்துவேற தாகுவன்
நெருப்பவாயு நீருமண்ணும் நீள்விசும்பு மாகுவன்
கருப்புகுந்து காலமே கலந்தசோதி நாதனைக்
குருப்புனலில் மூழ்கினார் குறித்துணர்ந்து கொள்வரே.

படுக்கவைத்த 8 கண்கள். அதுவே தமிழ் எழுத்தான அகாரம். ஆக, எண்ணாகவும் எழுத்தாகவும் இருப்பது ஈசனான கண்கள். உடலுக்குள் இருக்கும் அகாரம் சிகாராமாகும்; அதுவும் வேறான ஒன்றாகும். நெருப்பு, காற்று, நீர், மண், ஆகாயம் என ஐந்து பூதங்களாகவும் இருக்கும். சோதி வடிவில் நாம் கருவில் உருவானபோதே நம் உடலில் கலந்தது. அதுவே குரு. இருளை நீக்கி ஒளி தருவதால் குரு. அது மிதப்பது நீரில். இதுவே ஈசனின் திருவடி. ஆக, இந்த இரகசியத்தை அறிந்து தவம் செய்யவேண்டும்.


சிவவாக்கியம் - 439

கொள்ளுவார்கள் சிந்தையிற் குறிப்புணர்ந்த ஞானிகள்
விள்ளுவார்கள் பக்குவத்தில் வேண்டிவேண்டி யேத்தினால்
உள்ளுமாய்ப் புறம்புமா யுணர்வதற் குணர்வுமாய்த்
தெள்ளிதாக நின்றசோதி செம்மையைத் தெளிந்திடே.

ஈசனை அடைய வழி அறிந்த ஞானிகள், எந்த நேரமும் நினைவைக் கருத்தினில் ஒன்றி வைத்திருப்பர். அவர்களை அடையாளம் கண்டு, சென்று, பக்குவமாக திரும்பத் திரும்ப வேண்டிக்கொண்டால், அந்த வழியை சொல்லித் தருவார்கள். அவ்வழியில் தவம் செய்ய, நமக்கு உள்ளாகவும், புறமாகவும், உணர்வதற்கு உணர்வாகவும், தெளிவானதாகவும் நின்ற சோதியை அடையும் செம்மையான வழி தெளிவாகத் தெரியும்.


சிவவாக்கியம் - 440

தெளிந்தநற் சரியைதன்னில் சென்று சாலோகம்பெறும்
தெளிந்தநற் கிரியைபூசை சேரலாஞ் சாமீபமே
தெளிந்தநல் யோகந்தன்னில் சேரலாகுஞ் சாரூபந்
தெளிந்தஞானம் நான்கிலும் சேரலாஞ் சாயுச்சியமே.

சரியை வழி செல்ல சாலோகம் அடையலாம். நல்ல கிரியை வழி செல்ல சாமீபம் கிட்டும். தெளிந்த நல்ல யோகம் செய்தால் சாரூபம் என்னும் நிலை கிட்டும். ஞானம் நான்கு வகை. அவையாவன: ஞானத்தில் சரியை, ஞானத்தில் கிரியை, ஞானத்தில் யோகம், ஞானத்தில் ஞானம் ஆகும். இவ்வழிகளில் செல்ல சாயுச்சியம் என்னும் நிலை அடைந்து ஈசனுடன் கலந்து இருக்கலாம்.


சிவவாக்கியம் - 441

சேருவார்கள் ஞானமென்று செப்புவார் தெளிவுளோர்
சேருவார்கள் நாலுபாதச் செம்மையென்ற தில்லையே
சேருவார்கள் சிவகதி திருவருளைப் பெற்றபேர்
சேருமாறு கண்டுநாலுஞ் செய்தொழில் திடப்படே.

ஈசனிருக்கும் இடம் செல்ல வழி அறிந்து, அதனுடன் பொருந்தினால்தான் ஞானம் கிட்டும் என்பர் ஞானிகள். தெளிவோடு தவம் செய்பவர் அதனுடன் சேருவார்கள். நான்கு இதழ் தாமரையாம் மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சக்தியை எழுப்பித் தவம் செய்வதுதான் செம்மையாகும். முக்கலை ஒன்றி, குண்டலினி எழுப்பி சோதியில் ஒன்றித் தவம் செய்ய ஈசனின் திருவருள் கிட்டும். அதற்கு, சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு நிலைகளிலும் நின்று திடமாகத் தவம் செய்யவேண்டும்.


சிவவாக்கியம் - 442

திறமலிக்கு நாலுபாதஞ் செம்மையுந் திடப்படார்
அறிவிலிகள் தேசநாடி யவத்திலே யலைவதே
குழி(றி)யதனைக் காட்டியுட் குறித்துநோக்க வல்லிரேல்
வெறிகமழ் சடையுடையோன் மெய்ப்பத மடைவரே.

நான்கு இதழ் தாமரையாம் மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சக்தியை திறமை அனைத்தையும் பயன்படுத்தி மேலேற்றி, செம்மையாகத் தவம் செய்து திடப்படார்கள். அறிவிலிகள் இறைவனை நாடெங்கும் தேடி அங்குமிங்கும் அலைந்து அவத்தைப் படுகின்றனர். கபாலத்தில் குழியில் உள்ள குறியை அறிந்து அதற்குள் உற்று நோக்க வல்லவராயின், கங்கையையும் பிறையையும் தாங்கிய சடையுடைய ஈசனின் மெய்ப்பாதத்தை அடைவார்கள்.


சிவவாக்கியம் - 443

அடைவுளோர்கள் முத்தியை யறிந்திடாத மூடரே,
படையுடைய தத்துவமும் பாதகங்க ளல்லவோ
மடைதிறக்க வாரியின் மடையிலேறு மாறுபோல்
உடலில்மூல நாடியை யுயரவேத்தி யூன்றிடே.

எல்லா அறிவும் இருந்தாலும், முத்தியை அறியாத முட்டாள்களே! ஏகப்பட்ட அலங்காரங்கள் செய்து, தத்துவங்கள் பல சொல்லி, “நான் முத்தியடையும் வழி கண்டுவிட்டேன்என மற்றவர்களை ஏமாற்றுவது பாவம். அது உனக்கே பாதகங்கள் செய்யும். அதனால், தத்துவம் பேசிக்கொண்டிருக்காது,, அணையில் தேக்கி வைத்துள்ள நீர் மடை திறந்ததும் வெள்ளமாக மடை மீது ஏறுவது போல, குண்டலினி சக்தியை மூல நாடியினுள் மேலேற்றி அங்கேயே ஊன்றி நில்லுங்கள்.


சிவவாக்கியம் - 444

ஊன்றியேத்தி மண்டல முருவிமூன்று தாள்திறந்
தான்றுதந்தி யேறிடி லமுர்தம்வந் திறங்கிடும்
நான்றிதென்று தொண்டருக்கு நாதனும் வெளிப்படு
மான்றியு முயிர்பரம் பொருந்திவாழ்வ தாகவே.

முக்கலைகளையும் ஒன்றாக்கி, அதை ஊன்றி மேலே ஏற்றி மூன்று மண்டலங்களையும் ஊடுருவிக் கடந்து, உண்ணாக்கின் மேல் உள்ள கதவின் தாளைத் திறக்க, அமிர்தம் வந்து உண்ணாக்கில் இறங்கிடும். அப்போது ஞான வினை செய்பவருக்கு, நான் என்பது என்ன? எனும் வினாவுக்கு விடை கிட்டும். நாதனான ஈசனும் சோதியாய் வெளிப்படும். நம் உயிரில் பரம்பொருள் பொருந்தி இருப்பதை, நன்கு ஆராய்ந்து அறிந்துணர்ந்து தவம் புரிந்து எம பயமின்றி வாழுங்கள்.


சிவவாக்கியம் - 445

ஆகமூல நாடியி லனலெழுப்பி யன்புடன்
மோகமான மாயையில் முயல்வது மொழிந்திடில்
தாகமேரு நாடியே கனேகமான வாறுபோல்
ஏகபாத மன்புட னிறைஞ்சினா ரறிவரே.

மோகமாகிய மாயையில் மயங்கி, சிற்றின்பத்தை ஒழித்தபின், வாசி யோகத்தால் மூல நாடியில் மூலக் கனலை எழுப்பி அன்புடன் கபாலத்தில் உள்ள மேருவை நாடி, அங்கேயே நின்று தவம் செய்யுங்கள். ஏகன் அனேகன் ஆனதுபோல் இருக்கும் ஏகபாதனாம் ஈசனை அன்புடன் கெஞ்சிக் கெஞ்சி வேண்டினால், அந்த ஈசனை அறியலாம்.


சிவவாக்கியம் - 446

அறிந்துநோக்கி யும்முளே யயன்தியான மும்முளே
யிருந்திராம லேகர்பாதம் பெற்றிருப்ப துண்மையே
யறிந்துமீள வைத்திடா வகையுமரண மேத்தினார்
செறிந்துமேலை வாசலைத் திறந்துபாரு மும்முளே.

கபாலக் குகையின் வாசல் கண்தான் என்று அறிந்து அதற்குள்ளேயே நோக்கி ஈசனையே எண்ணித் தவமிருக்க, மும்மூர்த்திகளும் அந்தத் திருவடியாம் ஏகபாதத்தில் இருக்கும் உண்மையை உணரலாம். உணர்ந்த பின்னர் முக்கலைகளையும் ஒன்றாக்கி, மேலேற்றி, உண்ணாக்கின் மேல் உள்ள வாயிலைத் திறந்து, நினைவைக் கருத்தில் இருத்தினால் மரணத்தை வெல்லலாம்.


சிவவாக்கியம் - 447

சோதியாக வும்முளே தெளிந்துநோக்க வல்லிரேல்
சோதிவந் துதித்திடுந் துரியாதீத முற்றிடு
மாதிசக் கரத்தினி லமர்ந்துதீர்த்த மாடுவான்
பேதியாது கண்டுகொள் பிராணனைத் திருத்தியே.

நம் உடலில் சோதியாக உள்ளது கண்கள். அதற்குள்ளே தெளிவாக உற்று நோக்கி பிராணனைத் திருத்தினால் வாசி இலயமாகும்; கபாலத்துக்குள் சோதி உதிக்கும். அதன் பின்னர், இவையிரண்டும் சேர்ந்து துரியாதீதமாகிய வெட்டவெளிக்குள் செல்லும். இலயமான வாசியை இலயம் தவறவிடாது (பேதியாது) ஞான வினையாற்ற, ஆதி சக்கரமாகிய கண்ணின் கருமணிக்குள் நீரில் அமர்ந்து தீர்த்தமாடும் ஈசனைக் கண்டு கொள்ளலாம்.


சிவவாக்கியம் - 448

திருவுமாய் சிவனுமாய் தெளிந்துளோர்கள் சிந்தையில்
மருவிலே யெழுந்துவீசும் வாசனைய தாகுவன்
கருவிலே விழுந்தெழுந்த கன்மவா தனையெலாம்
பருதிமுன் னிருளதாய் பறியுமங்கு பாருமே.

மரு என்னும் மலரின் வாசனையை உடைய ஈசன், திருவுமாகி சிவனுமாகி இருப்பதைத் தெளிந்து வாழுவோர் நினைவில் உள்ளான். கருவில் உருவாகிய உடல் எடுத்தபோதும், பின்னரும் உண்டாகிய கர்ம வினைகளெல்லாம், பகலவனைக் கண்ட இருளைப்போல் விலகி ஓடிவிடும். ஆகவே, நினைவைக் கருத்தில் வைத்து அங்கு பாருங்கள்.


சிவவாக்கியம் - 449

பாருமெந்தை யீசர்வைத்த பண்பிலே யிருந்துநீர்
சேருமே நடுவறிந்து செம்மையான வப்பொருள்
வேரையும் முடியையும் விரைந்துதேடி மாலயன்
பாரிடந்து விண்ணிலே பறந்துங்கண்ட தில்லையே.

அனைத்துலக சீவராசிகளுக்கும் எந்தையாம் ஈசர், தன் திருவடியை ஒளிபொருந்திய பாகமாகத் தத்தம் உடலில் வைத்துள்ளார். அந்த செம்மையான மெய்ப்பொருள் கண்கள்தான். திருமாலும் பிரமனும் அடி முடி தேடி ஒருவர் நிலத்தைத் தோண்ட, மற்றொருவர் மேலே பறக்க, ஒருவராலும் காண இயலவில்லை. ஏனெனில் ஈசன் இருப்பது ஒவ்வொருவர் உடலிலேதான். கண்ணின் நடு அறிந்து மேலேறிக் கபாலத்துக்குள் செல்ல ஈசனைக் காணலாம்.


சிவவாக்கியம் - 450

கண்டிலா தயன்மாலென்று காட்சியாக சொல்லுறீர்
மிண்டினா லரனுடன் மேவலா யிருக்குமோ
தொண்டுபட்டு மன்புடன் தொழுதுநோக்க வல்லிரேல்
பண்டுமுப் புரமெரித்த பத்திவந்து முத்துமே.

திருமாலும், பிரமனும் ஈசனின் அடிமுடியைத் தேடிக் கண்டதில்லை என்று கதை கதையாய்ப் பார்க்காமலே சொல்லுகிறீர்கள். செருக்குடன்(மிண்டு) பேசித் திரிவதால் ஈசனுடன் மேவி இருப்பது எங்ஙனம்? இறைத்தொண்டுகள் பல செய்து, அன்புடன் ஈசனை நினைந்து, தொழுது, திருவடிக்குள் (கண்) நோக்க வல்லவர்களானால், முன்னொரு காலத்தில் முப்புறம் எரித்த ஈசன் நம் அருகில் வந்து ஆட்கொள்ளுவான்.


சிவவாக்கியம் - 451

முற்றுமே யவனொழிந்து முன்பினொன்று காண்கிலேன்
பற்றிலாத தொன்றுதன்னை பற்றிநிற்க வல்லது
கற்றதாலோ யீசர்பாதங் காணலா யிருக்குமோ
பெற்றபேரை யன்புடன் பிரியமாகக் கேளுமே.

அனைத்திலுமே ஈசன் பரவியுள்ளான். அதனால் அவனைத் தவிர முன்னும் பின்னும் வேறு ஒன்றையும் காண்கிலேன். அவன் பற்றில்லாத பரம்பொருள். ஆயினும் நம்மைப் பற்றி நிற்கும் வல்லமையுடைய ஒன்று. கண்டதையெல்லாம் கற்றுப் பண்டிதன் ஆனாலும், உனக்குள் இருக்கும் ஈசனின் திருவடி அறியாது இருக்கலாமோ? கல்வியால் மட்டும் ஈசன் பாதம் அறிய முடியாது. திருவடியைப் பற்றி நின்று பரம் பொருளை அடைவதுதான் மெய் கல்வி. ஈசனின் திருவடி வழி சென்று ஞானம் அடைந்த பெரியோரை அணுகி, அவர்கள் பெற்ற பெரும் பேற்றைத் தனக்குத் தருமாறு அன்புடன் வேண்டிக் கேட்டால் தருவார்கள். அவ்வழி நின்று வாழுங்கள்.
 

சிவவாக்கியம் - 452

கேட்டு நின்ற உன்னிலை கிடைத்த காலந் தன்னுளே 
வாட்டமுள்ள தத்துவ மயக்கமும் அகற்றிடும் 
வீட்டிலே வெளியதாகும் விளங்க வந்து நேரிடும் 
கூட்டி வன்னி மாருதம் குயத்தை விட்டெழுப்புமே.

ஞானம் கேட்டு நின்ற உனக்கு நிலையான மெய்ப்பொருள் கிடைத்த காலத்தில் தன்னுள்ளேயே அறிந்து உணர்ந்த நேரத்தில், உனக்குள்ளே உன்னை சந்தேகித்து சங்கடப்படுத்தி வாட வைத்த தத்துவ மயக்கங்கள் யாவையும் அகற்றி தெளிய வைக்கும் உன் உடம்பாகிய வீட்டிலேயே புதிர்களாய் இருந்தவை யாவும் விளக்கமாக விளங்கி மெய்யறிவு வந்து சேர்ந்திடும். வன்னி எனும் அனலையும் மாருதமான தனஞ்செயன் வாயுவான கனலையும் வாசியினால் கூட்டி ஏற்றினால் மூலாதாரத்தை விட்டு குண்டலினி சக்தி மேலே எழும்பி நாத ஒலியுடன் கிளம்பும்.


சிவவாக்கியம் - 453

எழுப்பி மூலநாடியை யிதப் படுத்தலாகுமோ 
மழுப்பிலாத சபையை நீர் வலித்து வாங்க வல்லிரேல் 
சுழுத்தியுங் கடந்து போய் சொப்பணத்தில் அப்புறம் 
அழுத்தியோரெழுத்துளே அமைப்பதுண்மை ஐயனே.

குண்டலினியை எழுப்பி சுழுமுனை நாடியில் வாசியை லயபடுத்தி நாதமாக உடலில் எங்கணும் செலுத்த உங்களால் முடியுமோ. அப்படி வாசி லயமானால் அதனை எல்லாம் அடங்கிய சிற்சபைக்கு நீங்கள் வலித்து வாங்கி ஏற்றி மெய்ப் பொருளில் சேர்த்து தியானித்து இருங்கள். அப்போது ஏற்படும் சுழுத்தியாகிய மயக்க நிலையைக் கடந்து போய் கனவு காணும் இடத்திற்கு அப்புறத்தில் மனதை நிறுத்தி இருந்திடுங்கள். ஒரேழுத்திலேயே தியானத்திலிருந்து அழுந்தியிருங்கள். எல்லாம் அந்த ஒரெழுத்துக் குள்ளேயே அமைத்து அதிலேயே நீ அமர்ந்திருப்பது உண்மை என்பதை உணர்ந்து கொண்டேன் ஐயனே!!!


சிவவாக்கியம் - 454

அல்ல தில்லை யென்று தானாவியும் பொருளுடல் 
நல்லவீசர் தாளினைக்கும் நாதனுக்கும் ஈந்திலை 
என்றும் என்னுள் நேசமும் வாசியை வருந்தினால் 
தொல்லையாம் வினை விடென்று தூர தூரமானதே.

இதற்கு இணையாக வேறொன்றுமில்லை என்பதை நன்கு உணர்ந்து கொண்டு அதுவே நல்லதான ஈசர் திருவடித்தாளிணை என்பதனை அறிந்து கொண்டு தன் உடல் பொருள் ஆவியை குருநாதனுக்கு கொடுத்திடுங்கள். என்றும் தனக்குள் அன்பை வளர்த்து அன்பே சிவமாய் இருப்பதை அறிந்து வாசியை நடத்தி தியானித்திருந்தால் தொல்லையாக வந்த வினைகளும் வருகின்ற வினைகளும் நமக்குத் துன்பம் தராமல் நம்மை விட்டு அகன்று வெகு தூரம் ஓடிவிடும்.


சிவவாக்கியம் - 455

ஆனதே பதியது அற்றதே பசு பாசம் 
போனதே மலங்களும் புலன்களும் வினைகளும் 
கானகத்தில் இட்ட தீயில் காற்று வந்து அடுத்ததோ 
ஊனகத்தில் வாயு உன்னி ஒன்றியே உலாவுமே.

இறைவனால் பதியாக ஆனதே மெய்ப்பொருள். அதிலேயே பசுவாகிய உயிரும், பாசமாகிய மனமும் உற்று இருக்கின்றது. அதிலேயே தியானித்திருப்போர்க்கு ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களும் அகன்று ஐம்புலன்களும் ஒடுங்கி எல்லா வினைகளும் ஒழிந்து போய்விடும். காட்டில் இட்ட தீயுடன் காற்று வந்து சேர்ந்து அக்கானகமே பற்றி எரிவதைப் போல் உங்கள் உடம்பிற்குள் உள்ள தீயில் வாசிக்காற்று சேர்ந்து இரண்டும் ஒன்றாகி ஒன்றி சோதியாக உலாவும்.


சிவவாக்கியம் - 456

உலாவும் உவ்வும் அவ்வுமாய் உதித்தடர்ந்து நின்றதும் 
உலாவி ஐம்புலன்களும் ஒரு தலத்திருந்திடும் 
நிலாவும் அங்கு நேசமாகி நின்றமுர்தம் உண்டு தாங் 
குலாவும் எங்கள் ஈசனைக் குறித்துணர்ந்து கும்பிடே.

உடம்பினில் உகாரமாக சந்திரனும் அகாரமாக சூரியனும் உலாவி உதித்து உயிர் அடர்ந்து நின்றதும் ஐம்புலன்களும் அகாரமாக ஒரு தலத்தில் இருந்ததும் அறிந்து அதிலேயே யோக ஞானத்தில் தவம் புரிந்து இருந்திடுங்கள். உடலையும், உயிரையும் பக்தியால் கரைத்து அன்பால் உருகி தியானித்து நின்றிட சூரியனில் நேசமாகி சந்திரனும் இணைந்து அமுர்தகலை உருவாகி சுழுமுனை திறந்து அமிர்தம் இறங்கிடும். மெய்ப் பொருளில் சோதியாக குலாவுகின்ற ஈசனையே குறித்து உணர்ந்து கும்பிட்டு இருந்திடுங்கள்.


சிவவாக்கியம் - 457

கும்பிடும் கருத்துளே குகனையும் ஐங்கரனையும் 
நம்பியே இடம் வலம் நமஸ்கரித்து நாடிட 
எம்பிரானும் அம்மையும் இருத்தியே நடுவணைத் 
தும்பி போல வாசகந் தொடர்ந்து சோம்பி நீங்குமே.

நமக்குள்ளேயே கருத்தாக இருந்து கும்பிடுவது எவ்வாறெனில் முழு ஆகிய கணபதியை ஓங்காரத்தாலும் உச்சரித்து சந்திர சூரிய கலைகளால் பிராணாயாமம் செய்து சுற்றி வந்து குனிந்து மண்டியிட்டு நமஸ்கரித்து நாட்டமுடன் தியானித்திடுங்கள். நடுவணையில் இருக்கும் மெய்ப் பொருளில் சிவனையும் சக்தியையும் சிவகதியால் இணைத்து வாசியை இருத்தி தொடர்ந்து நடத்திடுங்கள். அதனால் வாசி லயமாகி தும்பியின் ரீங்கார நாதம் ஒலித்து ஓரெழுத்தான சோதியில் சேர்ந்து பரவசம் கிடைக்கும். எல்லாத் துன்பங்களும் சோம்பலும் நீங்கி இறை இன்பம் அடையுங்கள்.


சிவவாக்கியம் - 458

நீங்குமைம் புலன்களும் நிறைந்த வல் வினைகளும் 
ஆங்காரமா மாசையும் அருந்தடர்ந்த பாவமும் 
ஓங்காரத்தினுள்ளிருந்த ஒன்பதொழிற் தொன்றிலத் 
தூங்க விசர் சொற்படி துணிந்திருக்க சுத்தமே.

ஐந்து புலன்களின் சேட்டைகளும், உடம்பையும் உயிரையும் பற்றி நிறைந்திருந்த வல்வினைகளும், ஆங்காரமும், மூவாசைகளும் பிறவியை தொடர்ந்த பாவங்களும் மெய்ப் பொருளில் தியானம் செய்து வர நீங்கும். ஓங்காரத்தின் உள்ளிருக்கும் ஒரெழுத்தில் ஒன்பது வாசலில் ஒளிந்து கொண்டிருக்கும் ஒன்றான பத்தாம் வாசல் தலத்தில் சோதியாக துலங்க விளங்கும் ஈசனை அறிந்துணர்ந்து அந்த பரிசுத்தமான இடத்தில் குரு சொற்படி துணிவுடன் யோக ஞானத்தால் தியானித்து தூயவனாகுங்கள்.


சிவவாக்கியம் - 459

நினைப்ப தொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை 
நினைப்புமாய் மறப்புமாய் நின்ற மாய்கை மாய்கையே 
அனைத்துமாய் அகண்டமாய் அனாதி முன் அனாதியாய் 
நினைக்குள் நானெனக்குள் நீ நினைக்கு மாறது எங்ஙனே.

உன்னை நினைப்பது ஒன்றில் தான். அந்த ஒன்றைத் தவிர வேறெதிலும் உன்னை நான் காணவில்லை. என்னில் நினைவாகவும், மறதியாகவும் நின்றது மாயையால் வரும் மயக்கமே. அனைத்திலும் நீயாய் அகண்டம் யாவும் நீயாய் அனாதியான மெய்ப் பொருளுக்கு முன்பே உள்ள அனாதியாய் இருப்பவன் நீயே, நினைக்கும் நினக்குள் நானும் எனக்குள் நீயும் இருப்பதையும் என் நினைவே நீயாக ஆனபின் உன்னை நினைப்பதும், மறப்பதும் எவ்வாறு ஐயனே!!!


சிவவாக்கியம் - 460

கருக்கலந்த காலமே கண்டு நின்ற காரணம் 
உருக்கலந்த போதலோ உன்னை நானுணர்ந்தது 
விரிக்கிலென் மறைக்கிலென் வினைக் கிசைந்த போதெலாம் 
உருக்கலந்து நின்றபோது நீயும் நானும் ஒன்றலோ

நான் கருவான காலத்திலேயே என்னில் கலந்து நின்றவன் ஈசன். அனைத்திற்கும் காரணமானவன் அவனே. காரண குருவாக அவனை எனக்குள் மெய்ப்பொருளாக கண்டு உருவாக கலந்து நின்ற உன்னை அறிந்து உண்மையான தியானத்தில் இருந்த போதல்லவோ உன்னை நான் உணர்ந்தேன். அது என்பதை விரிவாக சொன்னாலும் மறைவாக சொன்னாலும் அது ஒன்றுதான். இருவினைக்கு உட்பட்டு இன்ப துன்பங்கள் யாவினுக்கும் என்னோடு இசைத்திருந்தது அதுவே. என் அனுபவமாக வந்த மெய்ப் பொருள் உண்மையை உணர்ந்து அவ்வுருவில் கலந்து நின்று தவம் புரிந்தபோது நீயும் நானும் ஒன்றே.


சிவவாக்கியம் - 461

ஞான நூல்கள் தேடியே நவின்ற ஞான யோகிகாள் 
ஞானமான சோதியை நாடியுள் அறிகிலீர் 
ஞானமாகி நின்றதோர் நாதனை அறிந்த பின் 
ஞானமற்ற தில்லை வேறு நாமுரைத்ததுண்மையே.

ஞான நூல்கள் பலவும் தேடிப்படித்துவிட்டு ஞான போதனை செய்து உபதேசிக்கும் ஞான யோகிகளே!! ஞானப் பொருளானதில் நின்ற சோதியை சுழுமுனை நாடியில் உங்களுக்குள் தேடி நாடியே தியானித்து அதை அறிந்தீர்களா? ஞானமாகி நின்ற ஓரெழுத்தாகிய மெய்ப்பொருளில் குருநாதனாக உள்ள ஈசனை அறிந்து கொண்டபின் ஞானமாகி நின்ற அந்த மெய்ப்பொருளைத் தவிர வேறெதுவும் இல்லை என்பதே யாம் உரைக்கும் உண்மையாகும்.


சிவவாக்கியம் - 462

கருத்தரிப்பதற்கு முன் காயம் நின்றது எவ்விடம் 
உருத்தரிப்பதற்கு முன் உயிர்ப்பு நின்றது எவ்விடம் 
மருட்பொதிந்த சிந்தையில் மயக்கம் நின்றது எவ்விடம் 
விருப்புணர்ந்த ஞானிகாள் விரித்துரைக்க வேணுமே.

நாம் கருவில் தரிப்பதற்கு முன் உடம்பு எங்கு எவ்வாறு இருந்தது. உருவாக தரித்து உடம்பு வருவதற்கு முன் உயிர் எங்கு எவ்வாறு நின்றது. மனம் பொருந்தியிருந்த சிந்தையில் மயக்கம் நின்றது எவ்விடத்தில் எங்கள் ஞான வேட்கையை உணர்ந்த அருளடைந்த ஞானிகளே! இவைகளை விரிவாகவும் விளக்கமாகவும் எடுத்துரைத்து உபதேசிக்க வேண்டும்.


சிவவாக்கியம் - 463

கருவினில் கருவதாய் எடுத்த ஏழு தோற்றமும் 
இருவினைப் பயத்தினால் பிறந்திறந்து உழன்றிடும் 
மறுவினைப் பிறவி மூன்று காலமும் வகுத்த பின் 
உறுவினைப் பயனிதென்று உணர்ந்த ஞானி சொல்லுமே.

கருவினில் கருவாகி நின்ற அதுவால் எடுத்த உடலும் உயிரும் ஏழு பிறவிகள் எடுத்து தோன்றுகின்றது. அப்பிறவியில் செய்யும் இரு வினைகள் மட்டுமே உயிரைப் பற்றி இறந்தும் பிறந்தும் இவ்வுலகில் உழன்று கொண்டிருக்கின்றது. வினையால் எடுக்கும் மறு பிறவியில் இரு வினைகளின் நியதிப்படி இறைவனால் முக்காலங்களும் வகுத்து அமைக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்து இப்பிறப்பிலாவது இறைவனைச் சேர்ந்து உய்வடைய இறவா நிலையடைய உறுவினைப் பயனாக உள்ள மெய்ப்பொருள் இதுதான் என்று அதை உணர்ந்த ஞானிகள் விரிவாக எடுத்துச் சொல்லி உபதேசிக்கவேண்டும்.


சிவவாக்கியம் - 464

வாயில் எச்சில் போகவே நீர் குடித்து துப்புவீர் 
வாயிருக்க எச்சில் போனவாற தென்ன தெவ்விடம் 
வாயிலெச்சில் அல்லவோ நீருரைத்த மந்திரம் 
நாதனை அறிந்தபோது நாடும் எச்சில் ஏதுசொல்.

வாயில் எச்சில் போக வேண்டும் என்று நீரைக் குடித்து வாய் கொப்புளித்து துப்புவீர். வாய் இருக்க அதைவிட்டு எச்சில் போவது எவ்வாறு? நீங்கள் ஓதுகின்ற போதெலாம் மந்திரங்கள் வாயிலுள்ள எச்சிலால் அல்லவோ உருவாகி வெளிவருகின்றது. ஆதலால் எச்சிலால் ஆன நீரே ஈசன்தான் என்பதை அறிந்து அவனையே நமக்குள் நாடி தவம் புரியும் இடமே எச்சிலால் ஆனது. அது எது என்பதைச் சொல்லுங்கள்.


சிவவாக்கியம் - 465

தொடக்கதேன்று நீர் விழத் தொடங்குகின்ற வூமர்காள் 
தொடக்கிருந்த தெவ்விடம் சுத்தியான தெவ்விடம் 
தொடக்கிருந்த வாறறிந்து சுத்தி பண்ண வல்லிரேல் 
தொடக்கிலாத சோதியைத் தொடர்ந்து காணலாகுமோ.

சுக்கிலமான விந்தையும் அதன் சக்தித் திறனையும் அறியாது, அந்த நீரை தொடர்ந்து விரயமாக்கி அதனால் செத்து விழப்போகின்ற உன்மத்தர்களே! அந்த நீர் தொடக்காக இருந்தது எவ்விடம்? அது சுத்தியாகும் இடம் ஏது? அது எவ்விதம் என்பதை அறிவீர்களா? தொடக்காக விழும் விந்தையும் அது உருவாகும் விதத்தையும், அதன் சக்தியையும், அதன் சக்தி வீரியத்தையும் அறிந்து கொண்டு வாசியினால் சுத்தி பண்ணி உடல் முழுவதும் ஆவியாக அந்நீரை மாற்றி தோன்றும் உயிரிலேயே சேர்த்து தியானம் செய்ய வல்லவர்கள் ஆனால் அந்த விந்து தோன்றும் சோதியை தொடர்ந்து உங்கள் கண்களில் காணலாம். அதுவே சோதி மேனியாகி உங்கள் உடம்பும் பொன்னார் மேனி பெற்று காணலாகும்.


சிவவாக்கியம் - 466

மேதியோடும் ஆவுமே விரும்பியே புணர்ந்திடில் 
சாதிபேதமாய் உருத்தரிக்குமாறு போலவே 
வேதமோது வானுடன் புலைச்சி சென்று மேவிடில் 
பேதமாய்ப் பிறக்கிலாத வாறதென்ன பேசுமே.

எருமைக் கெடாவும் பசுமாடும் இணைந்து புணர்ந்தால் அதனால் ஏற்படும் பசுவின் சூலில் இரண்டுங் கெட்ட தன்மையான உருத்தரித்து பிறந்து இறக்கும். ஏனெனில் அவை இரண்டும் வேறு வேறு சாதி. ஆனால் அதைப் போல மனிதர்களில் சாதி பேதம் பேசும் மதியில்லாதவர்களே! வேதம் ஓதும் மேல் சாதி எனக் கூறும் பிராமணன் கீழ் சாதி எனக் கூறும் புலைச்சியுடன் இணைந்து புணர்ந்தால் அதனால் அப்பெண் கருவுற்று பிறக்கும் குழந்தை எந்த சாதி பேதமும் இல்லாமல் தானே பிறந்து வளர்கிறது. இயற்கை இப்படி இருக்கும் போது இதில் எங்கிருந்து வந்தது சாதி? ஆதலால் மனிதகுலம் யாவும் ஓரினம்தான் என்பதை உணருங்கள்.


சிவவாக்கியம் - 467

வகைக் குலங்கள் பேசியே வழக்குரைக்கு மாந்தர்கள் 
தொகைக் குலங்கலான நேர்மை நாடியே யுணர்ந்தபின் 
மிகைத்த சுக்கிலமன்றியே வேறுமொன்று கண்டிலீர் 
நகைத்த நாதன் மன்றுள் நின்ற நந்தினியாரு பேசுமே.

எங்கள் குலமே உயர்ந்தவகை என்று விதண்டவாதம் பேசி வழக்குரைக்கும் மனிதர்களே எல்லா மனிதர்களும் ஒரே வகைதான் என்ற உண்மையை உணர்ந்து அவையாவும் நீரினில் தோன்றிய நேர்மையை அறிந்து எல்லோர்க்கும் பொது நீதியாக உள்ள அதையே நாடி தியானித்திருங்கள். இதுவரையில் அதை அறியாமல் இரைத்த சுக்கிலத்தால் வரும் இன்பத்தை யன்றி வேறு ஒன்றையும் நீங்கள் கண்டதில்லை. சோதியான விந்தி லிருந்தே அனைத்தும் வந்தது என்பதையும் அதைச் சேர்வதுவே மெய்யான பேரின்பம் என்பதையும் அறிந்துணர்ந்து அதியே நாடியிருந்து பிறவிப் பிணியை ஒழியுங்கள். சிரித்துத் திரிபுரம் எரித்த ஈசன் நம்புருவ நடுவில் நின்று ஆடுவதையும் முத்தீயும் ஒன்றாகி நம் தீயான நந்தியாக நின்றதையும் அறிந்து தியானித்திருங்கள். நந்தியே நம் குருவாக வந்து பேசுவதை உணர்ந்து கொள்ளுங்கள்.


சிவவாக்கியம் - 468

ஓதும் நாலு வேதமும் உரைத்த சாத்திரங்களும் 
பூதத் தத்துவங்களும் பொருந்தும் ஆகமங்களும் 
சாதி பேத உண்மையும் தயங்குகின்ற நூல்களும் 
பேத பேத மாகியே பிறந்துழன்று இருந்ததே.

ஓதுகின்ற நான்கு வேதங்கள் கூறும் உண்மையும், அனைத்து சாஸ்திரங்களில் உரைத்த உண்மையும், ஐந்து பூத தத்துவங்களில் உள்ள உண்மையும், ஒன்றான மெய்ப்பொருளை அறிவதற்கே அமையப் பெற்றுள்ளது. அதுவே சாதி பேதம் இல்லாத உண்மையாக இருப்பது. அதைப் பற்றியே அனைத்து நூல்களும் பலவிதமான பேதமாக கூறி வருகின்றது. அந்த மெய்ப்பொருளே உலகம் எங்கினும் பலவிதமான சாதி பேதங்களாக பிறந்து உழன்று கொண்டிருக்கின்றது.


சிவவாக்கியம் - 469

உறங்கிலென் விழிக்கிலென் உணர்வு சென்று ஒடுங்கிலென் 
திரும்பிலென் திகைக்கிலென் சில திசைகள் எட்டிலென் 
புறம்புமுள்ளும் எங்ஙணும் பொதிந்திருந்த தேகமாய் 
நிறைந்திருந்த ஞானிகள் நினைப்பது ஏதுமில்லையே. 

உறங்குவது எது? விழிப்பது எது? உணர்வு சென்று ஒடுங்குவது எங்கு? திரும்பிப் பார்ப்பது எது? திகைப்பு ஏற்படுவது எது? திசைகள் எட்டும் எட்டான அகாரமாக நிற்பது எது, என்பதை அறிந்து கொண்டு அது மெய்ப்பொருளே என்பதனை உணர்ந்து கொண்டு அதிலேயே தங்கள் உடம்பில் வெளியாகவும் உள்ளத்தின் உள்வெளியான மனமாகவும் பொருத்தி சூட்சம தேகத்திலேயே நினைவை நிறுத்தி தியானித்திருக்கும் ஞானிகள் இறைவனைத் தவிர வேறு ஒன்றை நினைப்பது இல்லை.


சிவவாக்கியம் - 470

அங்கலிங்கம் பூண்டு நீரகண்ட பூசை செய்கிறீர் 
அங்கலிங்கம் பூண்டு நீரமர்ந்திருந்த மார்பரே 
எங்குமோடி எங்குமெங்கும் ஈடழிந்து மாய்கிறீர் 
செங்கல் செம்பு கல்லெலாஞ் சிறந்து பார்க்கும் மூடரே.

உங்களுக்குள் இருக்கும் ஆத்மலிங்கத்தை உணராமல், உங்கள் அங்கத்தில் லிங்கத்தை மாலையாகக் கட்டி அதை மார்பில் அணிந்து கொண்டு நீங்கள் மிகவும் பிரம்மாண்டமாக சிவபூசை செய்கிறீர்கள். ஈசன் எங்கெங்கெல்லாம் கோயில் கொண்டிருக்கின்றான் என்பதை அறிந்து எல்லாத் தலங்களும் ஓடியோடி வணங்கித் தேடுகின்றீர்கள். உங்கள் உடலுக்குள்ளே கட்டாத லிங்கமாய் ஈசன் இருப்பதை அறியாமல் எங்கும் அலைந்து ஈசனைக் காணாமல் ஈடில்லா உயிரை இழக்கின்றீர்கள். செங்கல்லால் ஆன சுதைகளிலும், செம்பு, கருங்கல்லால் செய்த சிலைகளிலும் சிவன் இருக்கின்றான் என்று சிறப்பாக சொன்ன நூல்களை எல்லாம் ஆராய்ந்து அங்கெல்லாம் சென்று பார்க்கின்றீர்கள். உங்கள் அங்கத்திலேயே அவன் லிங்கமாகி நிற்பதை ஆராய்ந்து பார்க்காத மூடர்களே!


சிவவாக்கியம் - 471

தீட்டந்தீட்டமென்று நீர் தினமுழுகும் மூடரே 
தீட்டமாகி யல்லவோ திரண்டு காய மானதும் 
பூட்டகாயமும்முளே புகழுகின்ற பேயரே 
தீட்டு வந்து கொண்டாலோ தெளிந்ததே சிவாயமே.

எதெற்கெடுத்தாலும் தீட்டு தீட்டு என்று கூறிக் கொண்டு தினமும் நீரில் மூழ்கி குளித்துவிட்டு ஆச்சாரமாக இருப்பதாக சொல்லும் மூடர்களே! தீட்டினால் தானே உயிர் உருவாகி உடம்பு திரண்டு உண்டாகியுள்ளது. அதே தீட்டில் பூடகமாக பொருந்தியிருக்கும் சூட்சம உடம்பையும் மெய்ப் பொருள் உண்மையையும் உணர்ந்து அந்த ஒன்றையே பேணிப் புகழ்ந்து இருக்கும் பேயர்களான ஞானிகள், தீட்டாக வந்து நின்ற அதற்குள்ளேயே தியானித்திருந்து தெளிந்து கண்ட சோதியே சிவம் என்பதை அறிந்து அடைவார்கள்.


சிவவாக்கியம் - 472

மூல நாடி நம்முள்ளே முளைத்தெழுந்த வாயுவை 
நாளு நாளும் உம்முளே நடுவிருத்த வல்லிரேல் 
பாலனாகும் உம்முடல் பறந்து போகலாய் விடும் 
ஆலமுண்ட கண்டர் பாதம் அம்மை பாதம் உண்மையே.

வாசி யோகத்தினால் மூலாதாரத்தில் குண்டலினி சக்தியாக உறங்கிக் கொண்டிருக்கும் தனஞ்செயன் வாயுவை எழுப்பி சுழுமுனை நாடியில் செலுத்தி தியானம் செய்யுங்கள். ஒவ்வொரு நாளும் இதை உங்களுக்குள் வைராக்கியமாக இருந்து அப்பியாசித்து உம்மில் நடுவாக இருக்கும் மெய்ப்பொருளில் வாசியை இருத்தி நிறுத்தி நினைத்து தியானித்து ஞானத்தில் வல்லாராகுங்கள். அதனால் உங்கள் உடம்பு வஜ்ர தேகமாகி இளமையாகவே இருக்கும். ககன மார்க்கத்தில் பறவை போல் பறந்து போகும் சித்து கிடைக்கும். இது ஆலகால விஷம் உண்ட நீலகண்டர் பாதமாகவும் அகிலத்தையே ஆளும் அம்மையின் பாதமாகவும் நம்முள் இருக்கும் மெய்ப்பொருளே என்பதை உணர்ந்து தியானியுங்கள், இது உண்மையாகும்.


சிவவாக்கியம் - 473

உந்தி மேலே நாலும் மூன்றும் ஓம் நமசிவாயமாம் 
சந்தி சந்தி யென்று நீர் சாற்றுகின்ற பேயரே 
முந்த வந்து நம்முளே மூலநாடி யூடுபோய் 
அந்தி சந்தி அற்றிடம் அறிந்துணர்ந்து பாருமே.

உந்தி என்ற உங்கள் தீயாக உலாவும் சோதிக்கு மேல் உள்ள மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்பவை நான்கு வேத வாசல்களாகவும் அதற்குள் உள்ள முக்கோண வட்டங்களாகியதில் அறிவு, உணர்வு, நினைவு என்ற மூன்றும் சேர்ந்திருப்பதுவே ஓம் நமசிவாயமாக அமைந்துள்ளது. இதனை அறிந்து கொண்டு அந்தி சந்தி கூடும் நேரங்களில் சந்தியாவந்தணம் செய்து ஓம் நமசிவாய சிவாயநம ஓம் என்று சாற்றி தியானம் செய்யும் பேயரென்ற ஞானிகளே ஆதியாக வந்ததும் அனாதியாய் நின்றதும் ஆன மெய்ப்பொருளை உங்களில் கண்டு அந்த மூலநாடியான சுழுமுனையில் வாசியை செலுத்தி இராப்பகல் இல்லாத இடத்தில் மௌனமுற்று இவ்வுண்மையை அறிந்து உணர்ந்து தவத்தில் இருந்து பாருங்கள்.


சிவவாக்கியம் - 474

வன்னி மூன்று தீயினில் வாழும் எங்கள் நாதனும் 
கன்னியான துள்ளிருக்க காதல் கொண்ட தெவ்விடம் 
சென்னி நாளு கையிரண்டு சிந்தையில் இரண்டிலொன்று 
உன்னியுன்னி நம்முளே உய்த்துணர்ந்து பாருமே.

வன்னி எனும் சோதியில் சந்திரன் சூரியன் அக்னி எனும் மூன்று தீயாகி வாழ்கின்றான் எங்கள் நாதனாகிய ஈசன், காமம் எனும் காதல் தோன்றும் இடத்தில்தான் கன்னியாக வாலை உள்ளே இருக்கின்றாள். சென்னியாகிய சிரசிலே சூட்சமாக நான்கு கைகளாகவும் சிவசக்தி என்ற இரண்டு பாதங்களும் உள்ளது. அந்த இரண்டு பாதங்களும் ஒன்றாகி ஒன்றான மெய்ப்பொருளை அறிந்து அதையே சிந்தையில் வைத்து தியானித் திருங்கள். நமக்குள் உள்ள வாசியினால் அதையே உன்னி உன்னி நோக்கியிருந்து உய்வடையும் ஈசன் திருவடி அதுவே என்பதை உணர்ந்து கொண்டு தியானித்து பாருங்கள்..


சிவவாக்கியம் - 475

தொண்டு செய்து நீங்களும் சூழவோடி மாள்கிறீர் 
உண்டுழன்று நம்முளே உற்றுணர்ந்து பார்க்கிலீர் 
வண்டுலாவும் சோலை சூழ வாழுமெங்கள் நாதனும் 
பண்டு போல நம்முளே பகுத்திருப்பனீசனே.

இவரே குருவென்றும் அவதாரமென்றும் கூறிக் கொண்டு அப்பொய் குருவுக்கே வாழ்நாள் முழுதும் தொண்டு செய்தும், கூட்டமாக கூடி சூழ்ந்து ஓடி ஆடி உழன்று உண்மையை உணராமல் நீங்கள் செத்துப் போகின்றீர்கள். மெய்குருவாக அவர் நமக்குள்ளேயே உண்டு என்பதை அறிந்து அதிலேயே உழன்று தியானம் செய்தும், சத்விசாரம் செய்தும், உற்றுணர்ந்து பார்க்க மாட்டீர்கள். கற்பகத்தரு விளங்கும் சோலையில் வண்டுகள் போல் உலாவிக் கொண்டுள்ள எங்கள் உள்ளத்தில் வாழும் எங்கள் குருநாதன் ஆதியான மெய்ப்பொருளில் புகுந்து பகுத்தறிவாக இருப்பான் ஈசன் என்பதை உணர்ந்து அதையே பற்றித் தியானித்திருங்கள்.


சிவவாக்கியம் - 476

அரியதோர் நமச்சிவாயம் ஆதி அந்தமானதும் 
ஆறிரண்டு நூறு கோடி அளவிடாத மந்திரம் 
தெரிய நாலு வேத மாறு சாத்திர புராணமும் 
தேடு மாலும் அயனும் சர்வ தேவ தேவ தேவனே.

அனாதியான அறிவதற்கரிய ஒரெழுத்தே நமசிவய என்ற அஞ்செழுத்தாகி ஆதி அந்தமான மெய்ப்பொருளாய் ஆகி உள்ளது. அதுவே எட்டான அகாரமாகி அளவிடமுடியாத ஆகாயம் போல் விரிந்து நூறு கோடி மந்திரங்களாக அமைந்தது. இதனையே தெரிந்து கொள்ளுமாறு நான்கு வேதங்களும், ஆறு சாஸ்திரங்களும் புராணங்களும் தேடுமாறு சொல்லுகின்றது. அந்த ஒன்றான ஈசனையே திருமாலும், பிரமனும் தேடியும் காணமுடியவில்லை. அந்த ஒன்றே சர்வ தேவர்களும் மேலான தேவ தேவனான ஈசன் என்பதை உணர்ந்து அறியுங்கள்.


சிவவாக்கியம் - 477

பரமுனக்கு எனக்கு வேறு பயமும் இல்லை பாரையா 
கரமுனக்கு நித்தமுங் குவித்திடக் கடமையாம் 
சிரமுருக்கி அமுதளித்த சீருலாவு நாதனே 
உரமெனக்கு நீயளித்த உண்மை யுண்மை உண்மையே.

ஈசா! நீயே பரம்பொருள் என அறிந்து உனக்கே என்னை அளித்து விட்டேன். எனக்கு வேறு எதைப்பற்றியும் எந்த பயமும் இல்லை. பரமனையே பார்த்து தியானித்து இருக்கின்றேன். என்னுடைய கைகள் நித்தமும் நின்னையே வணங்கி குவித்திடுவதே கடமையாகக் கொண்டிருக்கின்றன. என் சிரசில் நின்று அன்பால் உருக வைத்து அமுத ஞானத்தைக் கொடுத்து ஆனந்தம் தந்து சீராக என்னுள் உலாவுகின்ற குருநாதனே! உரமாக நீ நின்று எனக்களித்த ஓம் நமசிவாயமே உண்மையான மெய்ப்பொருள் என்பதுவே உண்மையாகும்.


சிவவாக்கியம் - 478

மூல வட்ட மீதிலே முளைத்த ஐந் தெழுத்திலே 
கோலவட்டம் மூன்றுமாய்க் குளிர்ந்தலர்ந்து நின்ற நீ 
ஞால வட்ட மன்றுலே நவின்ற ஞானி மேலதாய் 
ஏக வட்டம் ஆகியே இருந்ததே சிவாயமே.

மூல வட்டம் என்ற பிரமத்திலிருந்து முளைத்து விளைந்த ஐந்பூதங்களும் ஐந்தெழுத்தாகி இந்த உடம்பின் கோலமானது. அதில் மூன்று வட்டமாகி அகார உகார மகாரமான ஓங்காரத்தில் குளிர்ந்த நீராகவும் அலர்ந்த தீயாகவும் நின்றவன் ஈசன். உலக வட்டமே உங்கள் மன்றுளே ஞானப் பொருள் ஒன்றிலேயே அமைந்துள்ளது. அண்டத்தில் உள்ளவை யாவும் தங்கள் பிண்டத்திலே கண்டு அறிந்து சொல்பவர்கள் ஞானிகள். தங்களுக்குள் ஞானமே மேலாக ஏக வட்டமாகி நின்ற பிரமத்தில் இருந்த அதுவே சிவம் என்பதை உணர்ந்து அறிந்து தியானியுங்கள்.


சிவவாக்கியம் - 479

என்னகத்தில் என்னை நான் எங்குமோடி நாடினேன் 
என்னகத்தில் என்னையன்றி ஏது மொன்று கண்டிலேன் 
மின்னெழும்பி வின்னகத்தின் மின்னொடுங்கு மாறு போல் 
என்னகத்துள் ஈசனோடி யானுமல்ல தில்லையே.

என்னகத்தில் ஆறு ஆதாரங்களிலும் ஏழாம் தலமான சகஸ்ராரத்திலும் என் உள்ளமாகிய கோயிலிலும் எல்லா இடங்களிலும் மனதை ஒட்டி ஈசனையே நாடி தேடினேன். என் உள்ளத்தில் நானாக நின்ற மெய்ப்பொருள் ஒன்றை யன்றி வேறு ஒன்றும் ஏதும் இல்லை என்பதை கண்டு கொண்டேன். மின்னல் தோன்றிய விண்ணிலேயே மின்னல் ஒடுங்குவது போல் என் அகத்திலேயே ஆகாயத்தில் ஈசன் ஒடுங்கியிருப்பதை அறிந்து கொண்டேன். என் அகத்துள் உள்ள மெய்ப்பொருளில் ஈசனும் யானும் இணைந்து ஒன்றாகி இருப்பதை உணர்ந்தேன். என் உயிரில் உள்ள ஈசன் ஓடிவிட்டால் நான் என்ற ஒன்று இல்லையே..


சிவவாக்கியம் - 480

நாலுவேதம் ஓதுகின்ற ஞானமொன்று அறிவிரோ 
நாலு சாம மாகிய நவின்ற ஞான போதமாய் 
ஆலமுண்ட கண்டனும் அயனுமந்த மாலுமாய்ச் 
சாலவுன்னி நெஞ்சிலே தரித்ததே சிவாயமே.

நான்கு வேதங்களும் சொல்லுகின்ற ஞானப் பொருள் ஒன்றை அறிவீர்களா? சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு வழிகளிலும் சொல்லப்படும் ஞான போதமாய் அமைந்திருந்த மெய்ப்பொருள் அதுவாய் உள்ளது. ஆலமுண்ட நீலகண்டனும் பிரமனும், திருமாலும் ஒன்றாகி அதிலேயே அமர்ந்திருப்பதை நன்கு ஆராய்ந்து அறிந்து தங்கள் நெஞ்சமாகிய உள்ளக் கோவிலில் தரித்து நின்ற அதுவே சிவம் என்பதை உணர்ந்துகொண்டு அதிலேயே நினைவை வைத்து தியானத்தில் இருங்கள்.


சிவவாக்கியம் - 481

முச்சதுர மூலமாகி மூன்றதான பேதமாய் 
அச்சதுர மும்முளே அடங்க வாசி யோகமாம் 
மெய்ச்சதுர மெய்யுளே விளங்கு ஞான தீபமாய் 
உச்சரித்த மந்திரம் ஓம் நமச்சிவாயவே.

பனிரெண்டு அங்குல அளவு வெளிச் செல்லும் பிராணவாயுவான மூச்சினால் மூலமாகி மூலாதாரத்தில் உறங்கும் குண்டலினி சக்தியை எழுப்ப சந்திர, சூரிய, அக்னி கலைகளால் மூன்று வித பேதமாக நின்ற அகார, உகார, மகார அட்சரங்களால் சுழுமுனை வழியாக முதுகுத் தண்டின் ஊடே மேலேற்றி, நான்கு கைகள் பொருந்தியிருக்கும் சதுர வீட்டில் வீற்றிருக்கும். உமக்குள் இருக்கும் மெய்ப்பொருளில் அடங்கச் செய்வதே வாசி யோகமாகும். மெய்யெனும் உடம்பில் சதுரமாகிய வீட்டில் உள்ள மெய்ப்பொருளில் ஞான தீபமாய் விளங்கும் சோதியே ஈசன். அதையே எண்ணி உச்சரிக்கும் மந்திரம் ஓம் நமசிவாயவே. (முச்சதுரம்= 3 X 4= 12)


சிவவாக்கியம் - 482

மூல மண்டலத்துலே முச்சதுர மாயமாய் 
நாலு வாசல் என்விரல் நடு உதித்த மந்திரம் 
கோலியென்றும் ஐந்துமாய்க் குளிர்ந்தலந்து நின்றறீ 
மேலுமேலு நாடினேன் விழைந்ததே சிவாயமே.

மூல மண்டலத்திலுள்ள உயிரிலிருந்து பனிரெண்டு அங்குல அளவு வெளிவிடும் மூச்சில் நான்கு அங்குல அளவு உயிரில் உள்ள பிராணவாயு மாயமாக சென்று கொண்டே இருக்கின்றது. அந்த உயிர்காற்று மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற நான்கும் இருக்கும் நான்கு வேதங்களாய் நமக்குள் இருக்கும் வாசலில் நம் கட்டை விரல் அன்குஷ்ட அளவில் அமைந்திருக்கின்றது. அதன் நடுவில் நடுவாக உதித்திருக்கும் ஓரெழுத்து மந்திரமே சிகாரம். அதுவே நமசிவய என்ற அஞ்செழுத்தாகி ஐந்து பூதங்களும் நீராகவும் நெருப்பாகவும் குளிர்ந்தலர்ந்த பனிக்கட்டி போல நின்றதை அறிந்து உணர்ந்து அதிலேயே தியானித்து நில்லுங்கள். அதுவே சிவம் என்பதை அனுபவத்தால் உணர்ந்து கொண்டு அதன் மேலேயே ஒரே நாட்டமுடன் விரும்பித் தவம் செய்யுங்கள்.


சிவவாக்கியம் - 483

இடங்கள் பண்ணி சுத்தி செய்தே யிட்ட பீடமீதிலே 
அடங்க நீரும் பூசல் செய்து அருந்தவங்கள் பண்ணுவீர்
ஓங்குகின்ற நாதனார் உதிக்கு ஞானம் எவ்விடம் 
அடங்குகின்ற தெவ்விடம் அறிந்து பூசை செய்யுமே.

புண்ணிய இடங்களைத் தேடிச் சென்று கருவறையை சுத்தம் செய்து பீடமிட்டு அமைத்திருக்கும் சிலைகளில் வாசனை திரவியங்களாலும் புனித நீராலும் அபிஷேகம் செய்து பூசைகள் பண்ணுவீர்கள். ஆனால் உங்கள் உள்ளத்தை அறிந்து அதனை சுத்தி செய்து ஈசனார் கட்டாதலிங்கமாக இருக்கும் பீடத்தை உணர்ந்து அதிலேயே அடங்கி பூவாக விளங்கும் உங்கள் ஆன்மாவை அசையாமல் நிறுத்தி பூசை செய்வதே அரியதான தவம் என்பதை அறிந்து கொள்ளுங்கள். உங்களுக்குள் பீடம் மீதில் ஒதுங்கியிருக்கும் ஈசனார் ஞானப் பொருளாகி உதிப்பது எந்த இடம்? அடங்கி இருப்பது எந்த இடம்? என்பதனை அறிந்து கொண்டு அங்கேயே உங்கள் ஆன்மாவை நிறுத்தி இந்த மெய் பூசையை செய்து தியானித்திருங்கள்.


சிவவாக்கியம் - 484

புத்தகங்களை சுமந்து பொய்களைப் பிதற்றுவீர் 
செத்திடம் பிறந்திடம் அது எங்ஙனென்று அறிகிலீர் 
அத்தனைய சிந்தனை அறிந்து நோக்க வல்லிரேல் 
உத்தமத்துளாய சோதி யுணரும் போக மாகுமே.

புத்தகங்கள் பலவும் நிரம்பப் படித்து தலைக்கனத்தை சுமந்து உண்மையை உணராது, கற்ற கர்வத்தினால் பொய்களையே பிதற்றித் திரிகின்றீர்கள். நீங்கள் பிறந்த இடம் எது? சாகப் போகும் இடம் எது? என்பதையும் அது உங்களுக்குள் எங்ஙனமாய் எங்கு உள்ளது என்பதை அறிந்து கொள்ளுங்கள். அதுவே மெய்யறிவு என்பதையும் அதிலேயே அத்தனை தத்துவங்களும் பொருந்திய சித்தனாம் சிவன் இருப்பதை அறிந்து கொண்டு அதையே நோக்கி தியானம் செய்து ஞானத்தில் வல்லவராகுங்கள். உங்கள் உள்தமரில் உள்ள உத்தமமான சோதியை உணர்ந்து இறை இன்பம் பெறுங்கள்.


சிவவாக்கியம் - 485

அருளிலே பிறந்த உதித்து மாயை ரூபமாகிய 
இருளிலே தயங்குகின்ற ஏழை மாந்தர் கேண்மினோ 
பொருளிலே தவம் புனைந்து பொருந்தி நோக்க வல்லிரேல் 
மருளதேது வன்னியின் மறைந்ததே சிவாயமே..

ஈசன் அருளினாலே பிறந்து வளர்ந்து மாயா ரூபமான இந்த பொய்யான உடம்பைப் பெற்று இருளாகிய துன்பத்தில் வீழ்ந்து சாகும் மனிதர்களே! நான் சொல்லுவதை கேளுங்கள். உங்கள் உடம்பிலேயே மெய்ப்பொருளை அறிந்து அங்கு சோதியான ஈசனை உணர்ந்து அப்பொருளிலேயே வாசியைப் புனைந்து மனம், அறிவு, உணர்வு என்ற மூன்றையும் அதிலேயே பொருந்தி நோக்கி தவம் புரிந்து வல்லவராகுங்கள். மருளாகிய மயக்கமும் துன்பங்களும் வன்னியாகியசோதியில் மறைந்துவிடும். வன்னியாக நின்ற அதுவே சிவம் என்பதை அறிந்து தியானியுங்கள்.


சிவவாக்கியம் - 486

கருக்கலந்த காலமே கண்டிருந்த காரணா 
உருக்கலந்த சோதியைத் தெளிந்து யானறிந்த பின் 
தருக் கலந்த சோதியைத் தெளிந்து யானறிந்த பின் 
இருக்கிலேன் இறக்கிலேன் இரண்டு மற்றிருந்ததே.

கருவாக உருவாகிய போதே என்னோடு கலந்து நின்றவன் ஈசன் என்பதை நான் கண்டுகொண்டேன். நான் காணவும் அனைத்துக்கும் காரணமானவன் ஈசன். அவன் என்னுள் உருவாகவும் சோதியாகவும் கலந்து நின்றதை தெளிவாகத் தெரிந்து கொண்டேன். அண்டங்கள் யாவும் கலந்து நின்றது அச்சோதியே என்பதைத் தெளிந்து அவ்வீசனையே பற்றி தியானித்திருக்கின்றேன். அதன்பின் நான் இருப்பதைப் பற்றியோ இறப்பதைப் பற்றியோ எந்த நினைவும் இன்றி எல்லாம் அவ்வீசனிடமே ஒப்படைத்து சரணடைந்து என்றும் நித்தியமான இரண்டுமற்றிருந்த மெய்ப்பொருள் ஒன்றிலேயே தியானித்து இருக்கின்றேன்.


சிவவாக்கியம் - 487

தன்ம சிந்தை யாமளவுந் தவமறியாத் தன்மையாய்க் 
கன்ம சிந்தை வெயிலுழன்ற கருத்தழிந்த கசடரே 
சென்ம சென்மந் தேடியும் தெளியொணாத செல்வனே 
நன்மையாக வும்முளே நயந்து காண வேண்டுமே.

தர்ம எண்ணம் சிறிதும் இல்லாத தன்மையினால் தர்மமே தவம் என்பதை அறியாமல் கர்மாவினால் ஏற்பட்ட பந்தங்களில் சிந்தையை வைத்து அதனால் வருகின்ற இன்ப துன்பங்களால் கடும் வெயிலில் விழுந்து துடிக்கும் புழுப்போல துடித்து இப்பிறப்பின் உண்மையானக் கருத்தை அறியாமல் அழிந்து போகும் கசடர்களே! எத்தனை சென்மங்கள் எடுத்து தேடினாலும் கண்டு தெரிந்து கொள்ள முடியாத செல்வமான ஈசனை நமக்குள் நல்ல பொருளாகவும் நன்மையை தரவல்ல மெய்ப் பொருளாகவும் நடுவாகவும் இருப்பதை அறிந்து அதையே எப்போதும் நினைவில் நிறுத்தி தியானித்து நயந்து காண வேண்டும்.


சிவவாக்கியம் - 488

கள்ள உள்ளமே யிருக்கக் கடந்த ஞானம் ஒதுவீர் 
கள்ள உள்ளம் அறுத்த போது கதியிதன்றிக் காணகிலீர் 
உள்ளமே விளக்கி நித்தம் ஒளியை அணுக வல்லிரேல் 
தெள்ளு ஞானமும் முளே சிறந்ததே சிவாயமே.

கள்ளத்தனமான எண்ணங்களை உங்கள் உள்ளத்தில் வைத்துக் கொண்டு, எல்லாம் கடந்த எல்லையைக் கண்டது போல் ஞானம் பேசி உபதேசம் செய்கின்றீர். அந்த கள்ள எண்ணங்கள் யாவையும் வேரோடு அறுத்து உள்ளத்தை பரிசுத்தமாக்கி தியானிக்கும் போது நமக்கு நற்கதி கொடுக்கும் திருவடி மெய்ப்பொருளையன்றி வேறு எதையும் பார்க்காதீர்கள். நம் உள்ளத்தில் உள்ள அழுக்குகள் யாவையும் அன்பால் கசிந்துருகி அகற்றி நித்தமும் வாசியினால் ஒலியை ஏற்றி ஒளியுடன் கூட்டி தியானிக்க வல்லவரானால் தெளிந்த சோதியாகிய ஞானம் உங்களுக்குள் சிறந்து அதுவே சிவத்தோடு சேர்க்கும்.


சிவவாக்கியம் - 489

காணவேண்டும் என்று நீர் கடல் மலைகள் ஏறுவீர் 
ஆணவம் அதல்லவோ அறிவிலாத மாந்தரே 
வேணுமென்ற அவ்வீசர் பாதம் மெய்யுளே தரிப்பிரேல் 
தாணுவாக நின்ற தான் சிவமதாகுமே.

இறைவனைக் காண வேண்டும் என்று ஆவல் கொண்டு கடல் கடந்தும் மலைகள் பல ஏறியும் செல்கின்றீர்கள். அதனால் நீங்கள் ஆண்டவனைக் கண்டு கொண்டீர்களா? அதனால் ஆணவம் வருமே அன்றி ஆண்டவனை அறிய முடியாது. அறிவை அறியமுடியாத அறியாத மனிதர்களே! ஞானம் அடைய வேண்டும் என்ற ஞான வேட்கையுடன் அந்த ஈசனின் பாதம் நமது உடம்பிலேயே இருப்பதை அறிந்து அதையே பற்றித் தியானித்து இருந்திடுங்கள். தாணுவாகிய சிவனே நம் சீவனாகிய உயிரிலே தங்கியிருப்பதைக் கண்டு கொள்ளலாம். அதுவே சிவமாகிய பரம்பொருள்


சிவவாக்கியம் - 490

அணுவினோடு அகண்டமாய் அளவிடாத சோதியைக் 
குணமதாக உம்முளே குறித்து நோக்கின் முக்தியாம் 
மிண மிணென்று விரலை என்னும் மீலொணா மயக்கமாய்த் 
துணிவிலாத படியினால் தொடர்ந்து பூசை செய்குவீர்.

அணுவிற்குள் அனுவாகவும் அளவிட முடியாத அகண்டமாகவும்யாவிலும் நிறைந்திருக்கும் சோதியை உங்களுக்குள் அறிந்து உணர்ந்து கொள்ளுங்கள். அதை அடைவது ஒன்றே நோக்கமாகக் கொண்டு உமக்குள் குணமாக குறித்து நோக்கி மெய்ப்பொருளில் தியானிப்பதே முக்திக்கு வழியாகும். இது இறப்பைத் தடுக்கும் இதை விடுத்து மனதிற்குள்ளேயே மந்திரங்களை முணுமுணுத்து விரல் விட்டு எண்ணும் செபங்களைச் செய்து தியானித்து வருவதால் மீள முடியாத இறப்பைத் தவிர்க்க முடியாது. மரணமிலாப் பெருவாழ்வைப் பெற துணிவு இல்லாவிட்டாலும் படிப்படியாக ஞானத்தில் துணிவு வருவதற்கு தொடர்ந்து பூசைகளையும் இறைதொண்டு களையும் செய்து வாருங்கள்.


சிவவாக்கியம் - 491

எச்சிலெச்சில் என்று நீரிடைந்திருக்கும் எழைகாள் 
துச்சிலெச்சில் அல்லவோ தூய காய மானதும் 
வைச்சலெச்சில் தேனலோ வண்டின் எச்சில் பூவலோ 
கைச் சுதாவில் வைத்ததுடன் கறந்த பாலும் எச்சிலே.

எச்சில் எச்சில் என்று சொல்லி எச்சலாகிய நீரால் ஆன உடம்பைப் பெற்று அதனால் இடர் அடைந்து வாழும் ஏழை மக்களே! உங்கள் உச்சியிலிருந்து இறங்கி விழுந்த எச்சிலான சுக்கிலத்தால் தானே இத்தூல உடம்பு உண்டானது. தேன் வண்டு பூக்களில் இருந்து உறிஞ்சி எடுத்து தேனடையில் வைத்த எச்சில் தானே சுவை மிகுந்த தேன் ஆகியது. கைப்பாத்திரத்தில் பசுவின் மடியிலிருந்து கறந்தவுடன் எடுத்து வரும் தூய பாலும் கன்றின் எச்சில் தானே. ஆகையால் எச்சில் என்று இகழாமல் எச்சில் ஆகிய நீரை அறிந்து கொள்ளுங்கள்.


சிவவாக்கியம் - 492

தீர்த்த லிங்க மூர்த்தியென்று தேடி ஓடும் தீதரே 
தீர்த்த லிங்க முள்ளில் நின்று சிவனைத் தெளியுமே 
தீர்த்தலிங்கம் உம்முளே தெளிந்து காண வல்லிரேல் 
தீர்த்தலிங்கம் தானதாய்ச் சிறந்ததே சிவாயமே.

தீர்த்தம் தலம் மூர்த்தி என்றும் ஜோதிர்லிங்கம் என்றும் தேடி ஓடும் தீயை அறியாத பக்தர்களே! தீர்த்தமாகிய நீரையும் லிங்கமாகிய நெருப்பையும் ஒன்றாக்கி நின்று உலாவும் உயிரைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள். நீராகவும், லிங்கமாகவும் உமக்குள் உள்ள மெய்ப்பொருளை அறிந்து அதையே தெளிந்து தியானித்துக் கண்டு ஞானத்தில் வல்லவராகுங்கள். நீராகவும் லிங்கமாகவும் திகழும் அதுவே தான் என்ற ஞானமாகி சிறந்து இருப்பதுவே சிவம் என்பதை உணர்ந்து தியானியுங்கள்.


சிவவாக்கியம் - 593

ஆடுகொண்டு கூறுசெய்து அமர்ந்திருக்குமாறு போல் 
தேடுகின்ற செம்பினைத் திடப்படப் பரப்பியே 
நாடுகின்ற தம்பிரானும் நம்முளே இருக்கவே 
போடு தர்ப்ப பூசையொன்றும் பூசை யென்ன பூசையே.

ஆட்டைக் கொன்று அதன் தசைகளை கூறு போட்டு அடுக்கி வைத்து அதை விற்பதற்கு அமர்ந்திருப்பதைப் போல், ஆண்டவனுக்கு பூசை செய்கிறோம் என்று தேடி வைத்த செம்புச் சொம்புகளில் எல்லாம் நீர் நிரப்பி எட்டுத் திசைகளிலும் திடப்படப் பரப்பி வைத்து நீங்கள் போடுகின்ற பூசை என்ன பூசையோ! நீங்கள் நாடி செய்கின்ற பூசைக்குரிய தம்பிரான் ஆன ஈசன் நமக்குள் உள்ள ஆன்மாவில் பூவாக இருப்பதை அறிந்து அதிலேயே மனதை ஒன்றி நிறுத்தி அசையாமல் இருந்து அதிலேயே மனதை ஒன்றி இருந்து தியானிப்பதுவே உண்மையான பூசையாகும்.


சிவவாக்கியம் - 594

என்னை அற்ப நேரமும் மறக்கிலாத நாதனே 
ஏகனே இறைவனே இராச ராச ராசனே 
உன்னை அற்பநேரமுமொழிந்திருக்க லாகுமோ 
உனது நாமம் எனது நாவிலுதவி செய்த ஈசனே.

அற்பனான இந்நாயேனை கண் இமைக்கும் நேரங்கூட மறக்காது என்னுள் இருக்கும் என் குருனாதனே! ஏகப் பொருளாகிய ஒருவனே! யாவிற்கும் மேலான இறைவனே! எனக்குள் கோனான இராசனாகி யாவர்க்கும் மேலான இராச ராசனே! ஒரு நொடி நேரங்கூட நீ இல்லாது இவ்வுடம்பில் நான் இருக்க முடியுமோ? ஆகையால் உனது நாமமான நமசிவய என்ற அஞ்செழுத்தை எனது நாவில் மறக்காது ஓதவும் எனக்கு உபதேசித்து உதவி செய்த என் ஈசனே. உன்னை ஒரு கணநேரங்கூட மறக்காது உன்னையே நானடைய உதவி செய் ஈசா.


சிவவாக்கியம் - 595

எல்லையற்று நின்ற சோதி ஏகமா யெரிக்கவே 
வல்ல பூரணப்ரகாச யோக போக மாகியே 
நல்ல வின்ப மோன சாகரத்திலே அழுத்தியே 
நாடொணாத அமிர்தம் உண்டு நானழிந்து நின்ற நாள்.

எல்லையற்ற பரம்பொருளே நமக்குள் சோதியாக நின்று ஏகமாய் எரிந்து கொண்டிருக்கிறது. அது எல்லாம் வல்ல பூரணப் பொருளாகி பிரகாசம் பொருந்தி மிளிர்வதை அறிந்து கொள்ளுங்கள். அதிலேயே வாசி யோகத்தைத் தரும் மெளனத்தில் இருந்து திருப்பாற்கடலாகிய இடத்திலேயே நினைவை அழுத்தி தியானம் செய்யுங்கள். அதனால் நான் என்ற ஆணவம் அழிந்து நானே அதுவாகி நின்ற நாளில் எவரும் நாடிக் கிடைக்காத அமிர்தம் அருந்தி இறவா நிலையை அடைந்திடுங்கள்.


சிவவாக்கியம் - 596

ஆனவாற தாயிடும் அகண்டமான சோதியை 
ஊணைக்காட்டி உம்முளே உகந்து காண வல்லிரேல் 
ஊண காய மாளலாம் உலகபார மாளலாம் 
வான நாடு மாளலாம் வண்ண நாடரானையே

எல்லா மனிதர்களுக்கும் ஒரே அளவில் ஆனவாறு அமைந்திருப்பது மெய்ப்பொருள். அகண்டம் முழுதும் நிறைந்த அளவிட முடியாத சோதியை உங்கள் உடம்பிற்குள்ளேயே ஊமை எழுத்தாக நின்றதை கண்டு கொண்டு அதையே உகந்து இருந்து, காணும் அப்பொருளையே தியானித்து ஞானம் பெற்று வல்லவர் ஆகுங்கள். அதனால் இந்த உடம்பையும் உயிரையும் காத்து ஆளலாம். உலகம் யாவையும் அன்பால் ஆட்சி செய்யலாம். வானக தேவராகி வானுலகம் ஆளலாம். இது ஐவண்ண பாதத்தில் இருந்து நம்மை ஆளும் ஈசன் ஆணையாக உண்மை.


சிவவாக்கியம் - 597

நித்தமும் மணிதுலக்கி நீடுமூலை புக்கிருந்து 
கத்தியே கதறியே கண்கள் மூடி என் பயன் 
எத்தனை பேர் எண்ணினாலும் எட்டிரண்டும் பத்தலோ 
அத்தனுக்கிது ஏற்குமோ அறிவிலாத மாந்தரே

நித்தமும் மணி ஒலித்து வீட்டின் மூலையில் இருக்கும் பூசை அறைதனில் பூசைகள் செய்து உரக்கக் கத்தி ஒதுவதாலும் கதறுவதாலும் கண்கள் மூடியபடி அமர்ந்து இருப்பதாலும் என்ன பயன் கண்டீர்கள். எத்தனை பேர்கள் எந்தனை முறை எண்ணினாலும் எட்டும் இரண்டும் பத்துதானே. உண்மை அறியாது நீங்கள் இவ்வாறு செய்யும் பூசைகளை நமையீன்ற அத்தனாகிய ஈசன் ஏற்பானா? அறிவை அறியாத மனிதர்களே! எட்டும் இரண்டுமாகிய ஆகாரத்தையும், உகாரத்தையும் தம்மில் அறிந்து பத்தாம் வாசலில் இருக்கும் ஈசனையே பற்றியிருந்து வாசியினால் நாத ஒலியை மணி ஓசை போல ஒலிக்கச் செய்து ஒளியான சோதியில் சேர்த்து கண்களை மூடி தியானித்து இருந்திடுங்கள். இதுவே ஈசனுக்கு ஏற்ற உகந்த பூசை.


சிவவாக்கியம் - 598

எட்டிரண்டு கூடியே இலிங்கமான தேவனை 
மட்டதாக உம்ள மதித்து நோக்க வல்லிரேல் 
கட்டமான பிறவியென் கருங்கடல் கடக்கலாம் 
இட்டமான வெளியினோடு இசைந்திருப்பீர் காண்மினே.

எட்டாகிய அகாரமும் இரண்டாகிய உகாரமும் கூடியே இலிங்கமாக ஆகியுள்ளது. அதிலே இருந்து ஆளும் தேவனான ஈசனை, எல்லோர்க்கும் பொதுவாக ஒன்றாக உனக்குள் உள்ள மெய்ப்பொருளை மதித்து அதையே நோக்கி தியானித்து இருந்திடுங்கள். மிகவும் கஷ்டமான பிறவி என்ற கருங்கடலை கடந்து ஈசன் திருவடியில் சேரலாம். ஈசனுக்கு விருப்பமான ஆகாய வெளியில் ஈசனோடு இசைந்து இருந்து கண்டு கொள்ளுங்கள்.


சிவவாக்கியம் - 599

உண்மையான மந்திரம் ஒளியிலே இருந்திடும் 
தன்மையான மந்திரம் சமைந்து ரூபமாகியே 
வெண்மையான மந்திரம் விளைந்து நீறதானதே 
உண்மையான மந்திரம் ஒன்றுமே சிவாயமே.

உண்மையான மந்திரமான ஓரெழுத்து ஒளியாகிய சோதியில் இருக்கின்றது. அச்சோதியிலிருந்து ஐம்பூதத் தன்மைகளால் ஐந்தெழுத்து மந்திரமாக அமைந்து அதனாலேயே உருவம் ஆகி உடம்பு வந்தது. அதிலிருந்தே வெண்மையான நீராக விளைந்து அதுவே மந்திரமான நீராக நிற்கின்றது. இவை யாவையும் உங்களுக்குள் நன்கு ஆய்ந்தறிந்து மெய்யிலே ஒன்றான ஓரெழுத்து மந்திரமே உண்மையான சிவம் என்பதை உணர்ந்து கொண்டு அந்த ஒன்றிலேயே ஒன்றி தியானம் செய்யுங்கள்.


சிவவாக்கியம் - 500

பண்ணிரண்டு நாணிருத்திப் பஞ்ச வண்ணம் ஒத்திட 
மின்னி யவ் வெளிக்குள் நின்று வேறேடுத் தமர்ந்து 
சென்னியான தலத்திலே சீவனின்றி மாங்கிடும் 
பன்னியுண்ணி ஆய்ந்தவர் பரப்பிரம்மம் ஆவரே.

பண்ணிரண்டு அங்குல அளவு வெளியேறும் மூச்சுக் காற்றை வில்லில் உள்ள நாணில் அம்பை ஏற்றி விடுவது போல் மேலேற்றி வாசியாக்கி ஐந்து வண்ணங்கள் கொண்ட பரமன் திருவடியில் சேர்த்து இருத்தி அதிலேயே ஒத்து ஒன்றாக்கி இருங்கள். சோதியானது மின்னிக் கொண்டு யகாரமான ஆகாயவெளிக்குள் நின்று அங்கிருந்து வேராக இறங்கி அமர்ந்து இருக்கின்றது. சென்னியான தலையில் தான் சீவனாகிய உயிர் நின்று இயங்குகின்றது. இதனை நன்கு அறிந்து அத்தலத்திலேயே யோக ஞான சாதகம் செய்து அதைய உன்னிப்பாய் ஆராய்ந்து தியானிப்பவர் பரம்பொருளான ஈசனோடு சேர்ந்து பரப்பிரம்மம் ஆவார்கள்.


சிவவாக்கியம் - 501

தச்சு வாயிலுச்சி மேல் ஆயிரந் தலங்களாய் 
முச்சுடரும் மூவிரண்டு மூண்டெழுந்த தீச்சுடர் 
வச்சிரமதாகியே வளர்ந்து நின்ற தெவ்விடம் 
இச்சுடரும் இந்திரியமும் ஏகமான தெங்ஙனே

உடம்பின் தலை உச்சியில் மேல் ஆயிரம் இதழ் கமலமான சஸ்ரதலத்தில் சூரிய சந்திர அக்னி என்ற முச்சுடரிலும், ஆறு ஆதாரங்களிலும் மூண்டெழுந்த தீச்சுடராகிய சோதி சூட்சமாய் வச்சிர தேகமாகி சாகாத் தலையாக வளர்ந்து நின்றது நமக்குள் எந்த இடம் என்பதை அறிந்து உணர்ந்து கொள்ளுங்கள். இந்த மூன்று தீயும், பஞ்சேந்திரியங்களும் ஏகமான மெய்ப்பொருளில் அமைந்திருப்பது எவ்வாறு என்பதை நன்கு அறிந்து அந்த பொருளிலேயே ஏகமாகி நின்று தியானியுங்கள்.


சிவவாக்கியம் - 502

முத்தி சித்தி தொந்தமாய் முயுங்குகின்ற மூர்த்தியை 
மற்றுதித்த வைம்புலன்களாகு மத்திமப் புலன் 
அத்தனித்த கால கண்டரன்பினால் அனுதினம் 
உச்சரித்து ளத்திலே அறிந்துணர்ந்து கொண்மினே

முத்தி தருவதற்கும் சித்தி அளிக்கவும் வல்ல ஈசன் நமக்குள் சொந்தப் பொருளாக இயங்குகின்ற மூர்த்தியாக இருக்கின்றான். அதை வைத்தே உதித்த மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐம்புலன்களில் நடுவாக இருக்கின்றான். மார்க்கண்டேயனைக் காக்க எமனை எட்டி உதைத்த காலகண்டரான அப்பனே அணுதினமும் அன்பினால் உங்கள் உள்ளத்திலேயே சிவயநம என உச்சரித்து அவனையே எண்ணித் தியானித்து அறிந்து உணர்ந்து கொள்ளுங்கள். அந்த நடுவாக நின்ற ஒன்றே எமனை உதைத்த திருவடி என்பதை உணர்ந்து அந்த ஒன்றையே பற்றியிருந்து மரணத்தை வெல்லுங்கள்.


சிவவாக்கியம் - 503

அண்ணலார் அனாதியாய் அனாதிமுன் அனாதியாய் 
பெண்ணும் ஆணும் ஒன்றலோ பிறப்பதாகு முன்னல்லோ 
கண்ணிலானின் சுக்கிலம் கருத்தொடுங்கி நின்ற பின் 
மன்னுளோரும் விண்ணுளோரும் வந்த வார தெங்ஙனே.

அண்ணலாகிய ஈசனே அனாதியானவன். நம்முள் அனாதியாகிய மெய்ப்பொருளுக்கு முன் உள்ள அனாதியாய் இருக்கின்றான். பெண்ணும் ஆணும் இணைந்ததனால் உருவாகும் உயிர் பிறப்பதற்கு முன்பு பெண்ணுமின்றி ஆணுமின்றி ஒன்றான ஆன்மாவாகவே இருந்தது. கண்ணில் ஆணியாக சுக்கிலம் நினைவிலேயே ஒடுங்கி நின்றது. இதன் பின்னரே கருவில் உருவாகி உயிர் வளர்ந்து பிறக்கின்றது. இப்படி நீரினால் தான் மண்ணில் வந்த மனிதர்களும் விண்ணில் உள்ள தேவர்களும் தோன்றியுள்ளார்கள். வந்த அவ்வழியை அறிந்து அதிலேயே ஒடுங்கி தியானித்திருங்கள்.


சிவவாக்கியம் - 504

எத்திசைக்கும் எவ்வுயிர்க்கும் எங்களப்பன் எம்பிரான் 
முத்தியான வித்துளே முளைத்தெழுந்த செஞ்சுடர் 
சித்தினில் தெளிந்தபோது தேவர் கோயில் சேர்ந்தன 
அத்தன் ஆடல் கண்டபோது அடங்கி ஆடலுற்றதே.

எல்லாத் திசைகளுக்கும் எல்லா உயிர்களுக்கும் தந்தையாகவிளங்குபவன் எம்பிரானாகிய ஈசன்!! முத்தீயும் ஒன்றாக அமைந்துள்ள வித்தாகிய மெய்ப் பொருளில் முளைத்து எழுந்த செஞ்சுடரான சோதியானவன். இதனை உங்கள் சித்தமாகிய அறிவை அறிந்து தெளிந்தபோது தேவனாகிய ஈசன் நம் உள்ளக் கோயிலில் சேர்ந்திருப்பதை உணர்ந்து தியானத்தில் நில்லுங்கள். அங்கே அத்தன் நடராஜனாக நடம் புரிந்து கொண்டிருப்பதை கண்டபோது மனம் அதிலேயே அடங்கி அவனது ஆடலிலேயே உற்று அறிவாக பிரகாசித்திருந்தது.


சிவவாக்கியம் - 505

வல்ல வாசல் ஒன்பதும் அருத்தடைத்த வாசலும் 
சொல்லும் வாசலோ ரைந்தும் சொல்லி விம்மி நின்றதும் 
நல்ல வாசலைத் திறந்த ஞான வாசலூடு போய் 
எல்லை வாசல் கண்டபின் இனிப் பிறப்ப தில்லையே.

நம் உடலில் உள்ள ஒன்பது வாசலில் அருத்தடைத்த வாசலாகியதாகச் சொல்லும் பத்தாம் வாசலில் உள்ள ஓரெழுத்தை அறிந்து அதிலேயே ஐந்தே பூதங்களும் அடங்கியிருப்பதை உணர்ந்து கொள்ளுங்கள். அதிலேயே நமசிவய என்ற அஞ்செழுத்தை ஓதி தியானிக்க மெய்ப்பொருள் நீராக விம்மி நின்றது. அதுவே நம் தீயாகிய நந்தியாகிய நல்ல வாசலை வாசியினால் திறந்து ஞானம் விளங்கும் மெளனத்தில் ஊன்றி சோதியாக ஈசன் உலாவுகின்ற எல்லையான வாசலைக் கண்டு கொண்டு அவனையே தியானித்திருப்பவர்கள் இறவா நிலை பெற்று இனி இப்பூமியில் பிறப்பது இல்லையே.


சிவவாக்கியம் - 506

ஆதியான தொன்றுமே அநேக ரூப மாயமாய்ப் 
பேத பேதமாய் எழுந்து சர்வ சீவன் ஆனபின் 
ஆதியோடு கூடி மீண்டெழுந்து சன்மமான பின் 
சோதியான ஞானியரும் சத்தமா யிருப்பரே.

ஆதியான அது ஒன்று தான் அநேக விதமான உருவங்களாகி மாயமான நிலையில்லா உடம்பாகி பல விதமான பேதங்களாய்மனிதன், விலங்கு, பறவை, பாம்பு போன்ற சகல விதமான உயிர்களாக ஆனது. அந்த ஆதியோடு கூடி சோதியாக நின்ற ஈசனை அறிந்து உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த உண்மையை உணர்ந்த ஞானிகள் வாசிலயத்தால் நாத சப்தத்தை கிளப்பி ஆதியாகிய மெய்ப்பொருளில் கூடி சோதியிலேயே நிலைத்து தியானித்திருப்பார்கள்.


சிவவாக்கியம் - 507

வண்டு பூ மணங்களோடு வந்திருந்த தேனெலாம் 
உண்டுளே யடங்குவண்ணம் ஒதுலிங்க மூலமாய்க் 
கண்டு கண்டு வேரிலே கருத்தொடுங்க வல்லிரேல் 
பண்டு கொண்ட வல்வினை பறந்திடும் சிவாயமே.

தேன் வண்டு மணம் வீசும் பூக்களிலிருந்து தேனை உறிஞ்சி எடுத்து வந்து தேனடையில் சேர்த்து வைத்து பின் அதையே உண்டு உள்ளேயே அடங்கி இருக்கும். அது போல நீங்கள் ஓதுகின்ற அஞ்செழுத்து மந்திரம் உங்களுக்குள்ளேயே இலிங்கமாகி மூலப் பொருளாக இருப்பதை அறிந்து கொண்டு அந்த லிங்கத்தையே கண்களில் கண்டு அஞ்செழுத்தை ஓதி அதன் வேறாக உள்ளிருக்கும் விதத்திலேயே அறிவு உணர்வு நினைவு என்ற மூன்றையும் இனத்து மனதை ஒடுக்கி ஈசனையே நினைந்து தியானம் செய்து அதிலேயே ஒடுங்கியிருங்கள். நீங்கள் முன் சென்மங்களில் செய்த பாவங்களும் வலிய ஊழ்வினைகளும் உங்களை விட்டு விலகி ஓடச் செய்வது சிவாயமே.


சிவவாக்கியம் - 508

ஒரெழுத்தில் லிங்கமாக ஒதுமக்கரத்துளே 
ஒரெழுத்தில் இயங்குகின்ற உண்மையை அறிகிலீர் 
மூவெழுத்தும் மூவரை முளைத்தெழுந்த சோதியை 
நாலெழுத்து நாவுளே நவின்றதே சிவாயமே.

உங்கள் உடம்பிலேயே உணர்வுறு மந்திரமாகிய ஒரேழுத்தே பஞ்ச பூதங்களாகி ஓதுகின்ற அஞ்செழுத்தான இலிங்கமாக அமைந்துள்ளது. ஒரெழுத்தில் ஈசன் இருந்து இயங்குகின்ற உண்மையை அறியாமல் இருக்கின்றீர்கள். அந்த ஒரெழுத்தில் இருந்தே தோன்றி அகாரம், உகாரம், மகாரம் என்ற மூன்றெழுத்தான ஒன்காரமாகவும் சிவன், விஷ்ணு, பிரம்மன் ஆகிய மும்மூர்த்திகளாகவும் முளைத்தெழுந்த சோதியை உணருங்கள். மணம், புத்தி, சித்தம் அகங்காரம் என்ற நான்கு அந்தக் கரணங்களையும் தினமும் அதிகாலமே எழுந்து சுத்தி செய்து நாவிலே நமசிவய மந்திரத்தை நவின்று அதுவே சிவன் என்பதை தெளிந்து தியானியுங்கள்.


சிவவாக்கியம் - 509

தூர தூரமும் தொடர்ந்தெழுந்த தூரமும் 
பார பாரம் என்றுமே பரிந்திருந்த பாவிகாள் 
நேர நேர நேரமும் நினைந்திருக்க வல்லிரேல் 
தூர தூர தூரமும் தொடர்ந்து கூடலாகுமே.

இறைவன் ஆகாயத்தில் இருக்கின்றான் என்று எவ்வளவு தூரம் சென்று தேடினாலும் அது தொடர்ந்து தூரமாக எழுந்து நிற்கின்றது. அவனை அடைவது என்பது மிகவும் கஷ்டம் என்று எண்ணி தொடர்ந்த துன்பங்களில் வாழ்ந்திருக்கும் பாவிகளே!!! அல்லும் பகலும் அனவரதமும் எந்த நேரத்திலும் ஈசனையே எண்ணி நினைவால் நினைந்து தியானித்து இருக்க வல்லவரானால் வெகு தூர தூரமாய் உள்ள ஆகாயம் உங்களுக்குள்ளேயே வெளியான மனதிலேயே இறைவனைக் கண்டு அவனையே தொடர்ந்து முயன்று பயின்று கூடலாம். இது உண்மையே.


சிவவாக்கியம் - 510

குண்டலங்கள் பூண்டு நீர் குளங்கள் தோறும் மூழ்கிறீர் 
மண்டுகங்கள் போல நீர் மனத்தின் மாசரறுக்கிலீர் 
மண்டையேந்து கியரை மனத்திருத்த வல்லிரேல் 
பண்டை மாலயன் தொழப் பணிந்து வாழலாகுமே.

காதில் குண்டலங்கள் அணிந்து கொண்டு பெரிய பக்தர் என எண்ணும்படி வேடம் பூண்டு புண்ணிய நீர்கள் உள்ள திருக்குளங்கள் தோறும் தேடிச் சென்று, அதில் மூழ்கி எழுந்தால் பாவங்கள் யாவும் அகன்று விடும் என்று சொல்லி மண்டுகங்கலான வாத்து போல மூழ்கிக் குளிக்கின்றீர்களே! அதனால் நீங்கள் செய்த பாவம் போய்விடுமா? உங்களுக்குள் உள்ள மனதை அறிந்து அதிலுள்ள பாவங்களையும் குற்றங்களையும் நீக்கும் நீர் உள்ள குளமான இடத்தில் அன்பால் கசிந்துருகி ஈசனையே எண்ணத்தில் வைத்து மூழ்கியிருந்தால் மன மாசுகள் யாவுமே அகன்றுவிடும். கபாலத்தை கையில் ஏந்தியுள்ள ஈசனை மனத்திலேயே இருத்தி தியானிக்க வல்லவரானால் உங்கள் உள்ளத்தில் ஆதியான மெய்ப் பொருளில் திருமாலும் பிரமனும் தேடியும் கிடைக்காத திருவடியில் பணிந்து ஈசனோடு சேர்ந்து வாழல் ஆகும்.


சிவவாக்கியம் - 511

கூடுகட்டி முட்டையிட்டுக் கொண்டிருந்த வாறு போல் 
ஆடிரண்டு கன்றையீன்ற அம்பலத்துள் ஆடுதே 
மாடு கொண்டு வெண்ணையுண்ணும் மானிடப் பசுக்களே 
வீடு கண்டு கொண்டபின்பு வெட்ட வெளியும் காணுமே.

சிலந்தியானது தன் வாயிலிருந்த எச்சிலால் கூடு கட்டி அதிலே முட்டையிட்டு அடைகாத்து அதிலேயே வாழ்ந்து கொண்டிருப்பதைப் போல் நம் உடம்பில் சந்திர சூரிய கலைகளாக ஆடிக் கொண்டிருந்த அகாரமும் உகாரமும் ஒரேழுத்தான ஆதியிலிருந்தே பிறந்து வெளியாக அம்பலத்தில் ஆடிக் கொண்டிருக்கின்றது. அதுவே நம் உயிர் உள்ள இடம் என்பதையும் அறிந்து கொள்ளாமல், ஈசனை அடைய சைவத்தை கடைப் பிடிக்க வேண்டும் என்று உபதேசம் செய்து, பசுவின் இரத்தத்திலிருந்து வரும் பாலில் இருந்து கடைந்த வெண்ணெய்யை உண்ணும் மானிடப் பசுக்களே! உங்கள் உயிர் இருக்கும் வீட்டை அறிந்து கண்டு கொண்ட பின்பு வெட்ட வெளியாக ஈசனை காணலாம்.


சிவவாக்கியம் - 512

உள்ளதோ புறம்பதோ உயிர்ப்படங்கி நின்றிடம் 
மெல்ல வந்து கிட்ட நீர் வினவ வேண்டும் என்கிறீர் 
உள்ளதும் புறம்பதும் ஒத்த போது நாதமாம் 
கள்ள வாசலைத் திறந்து காணவேண்டும் மாந்தரே.

உடம்பில் உயிர் அடங்கி நிற்பது உடம்பின் உள்ளேயா உடம்பில் வெளியிலா என்பதை என்னிடம் மெல்ல வந்து அருகில் நின்று சொல்ல வேண்டும் என்று கேட்கின்றீர்கள். உடம்பின் உள்ளேயும்வெளியேயும் ஒத்து ஒட்டியும் ஒட்டாமலும் ஒரே பொருளில் அடங்கியே உயிர் நின்று கொண்டிருக்கின்றது. உட் சுவாசத்தையும் வெளிச் சுவாசத்தையும் இணைத்து வாசியாக்கி, நாதமாகிய அகாரத்தில் சேர்த்து நம் உடம்பிலேயே ஈசன் குடியிருக்கும் கள்ள வாசல் எனும் பத்தாம் வாசலை யோக ஞானத்தால் திறந்து அதிலேயே நின்று தியானித்து காணவேண்டும் மனிதர்களே


சிவவாக்கியம் - 513

நட்ட கல்லைத் தெய்வமென்று நாலுபுட்பம் சாற்றியே 
சுற்றி வந்து முணமுணென்று சொல்லு மந்த்ர மேதடா 
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் 
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ.

நட்டு வைத்த கற்சிலைகளையே தெய்வம் என்று சொல்லி பூக்களைச் சூடி அலங்கரித்து கோயிலைச் சுற்றி வந்து வாய்க்குள் முணுமுணுத்து மந்திரங்களைச் சொல்லி வணங்குகிறீர்கள். அந்த நட்ட கல்லும் பேசுமா? நாதன் இருப்பதைக் காட்டுமா? சட்டியில் வைத்து சுட்டு சமைத்த கறியின் சுவையை அந்தச் சட்டி, சட்டுவம் அறிய முடியுமா? அது போல இல்லாமல் நாதனாகிய ஈசன் நம்முள் நடுவாக நட்டகல்லாக இருப்பதை உணர்ந்து கொள்ளுங்கள். அதையே தெய்வம் என்று அறிந்து மனம் புத்தி சித்தம் அகங்காரம் என்ற நான்கு மலர்களை சாற்றி அதையே நினைவால் சுற்றிவந்து மௌனம் என்ற மந்திரத்தையே தியானம் செய்யுங்கள். நம் உள்ளிருக்கும் குருநாதன் பேசுவார். உடலில் உள்ளே உள்ள இந்த உண்மையை உணர்ந்து ஊணுருக உயிர் உருக தவம் இருந்து அறிந்து கொள்ளுங்கள்.


சிவவாக்கியம் - 514

நானுமல்ல நீயுமல்ல நாதனல்ல ஒதுவேன் 
வானிலுள்ள சோதியல்ல சோதி நம்முள் உள்ளதே 
நானும் நீயும் ஒத்த போது நாடிக் காணலாகுமே 
தான தான தத்தான நாதனான தானனா

நான் என்பதும் இல்லை, நீ என்பதும் இல்லை, நாதன் பார்த்து என்பதும் இல்லை எல்லாம் பரம்பொருள் என்றே சொல்லுவேன். வானிலுள்ள சந்திர சூரிய ஒளியில் அல்ல நம்முள் உள்ள மெய்ப் பொருளே சோதி. வானாகிய யகாரமும் நீயாகிய சிகாரமும் ஒன்றாக ஒத்து சோதியாக நின்றதை உணர்ந்து அதையே நாடி ஒரே நினைவாக நின்று தியானித்து கண்டு கொள்ளுங்கள். தானாக நின்ற அதுவே வத்துவான பொருளானதாகி நாதனான ஈசனே தானாகி ஆடிக் கொண்டிருக்கிறான்.


சிவவாக்கியம் - 515

நல்லதல்ல கெட்டதல்ல நடுவில் நிற்பது ஒன்றுதான் 
நல்லதென்ற போது அது நல்லதாகி நின்று பின் 
நல்லதல்ல கேட்டதென்றால் கெட்டதாகும் ஆதலால் 
நல்லதென்று நாடி நின்ற நாமம் சொல்ல வேண்டுமே.

நல்லதும் அல்ல கெட்டதுமல்ல நம் நடுவில் நிற்பது மெய்ப் பொருள்தான். அந்த ஒன்றை அறிந்து உணர்ந்த பிறகு நல்லதே நடக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் நல்லது தான் நடக்கும். நல்லதை எண்ணாமல் கெட்டதுதான் நடக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் கெடுதலே நடக்கும். அதலால் மெய்ப் பொருளை அறிந்து உணர்ந்தவர்கள் அது நல்லதே தரும் என நாடி ஈசனை எண்ணி அவன் நாமத்தை சொல்லி தியானத்தில் இருக்க வேண்டும்.


சிவவாக்கியம் - 516

பேய்கள் கூடி பிணங்கள் தின்னும் பிரியமில்லாக் காட்டிலே 
நாய்கள் கற்ற நடனமாடம் நம்பன் வாழ்க்கை ஏதடா 
தாய்கள் பாலுதிக்கும் இச்சை தவிர வேண்டி நாடினால் 
நோய்கள் பட்டு உழல்வதேது நோக்கிப்பாரும் உம்முளே.

நமக்குள் நாய்கள் போல் சுற்றும் மனதிற்குள் நடனமாடும் நம் அப்பனான ஈசன் இல்லாது போய்விட்டால் நமக்கு வாழ்க்கை என்பது ஏது? இவ்வுடம்பிற்கு பிணம் என்று பேர் வைத்து பேய்கள் கூடிப் பிணங்கள் தின்னும் நாம் விரும்பாத சுடுகாட்டிற்குத் தான் கொண்டு செல்வார்கள். பெண்களை தாயாக பாவித்து அவர்களின் இளமையிலும், செழுமையிலும் ஏற்படும் காம இச்சையை தவிர்த்துவிட்டு அவனை தனக்குள்ளேயே நாடி யோக ஞானத்தால் தியானித்திருப்பவர்களுக்கு நோய்கள் பட்டு உழலும் துன்ப வாழ்க்கை ஏற்படாது. ஈசனையே நாடியிருந்து அவன் இருக்கும் இடத்தையே தியானம் செய்யுங்கள்.


சிவவாக்கியம் - 517

உப்பை நீக்கில் அழுகிப் போகும் ஊற்றையாகும் உடலில் நீ 
அப்பியாசை கொண்டிருக்க லாகுமோ சொலறிவிலா 
தப்பிலிப் பொய் மானங்கெட்ட தடியனாகும் மனமே கேள் 
ஒப்பிலாச் செஞ்சடையனாகும் ஒருவன் பாதம் உண்மையே.

உப்பான பொருள் நீங்கினால் உயிர் போய் அழுகி நாற்றமடித்து ஊத்தையாகும் உடம்பில் நீங்கள் அபிப்பிராயம் வைத்து ஆசை கொண்டு இருப்பதால் பயன் ஏதும் ஆகுமோ சொல்லுங்கள். அறிவில்லாமல் தப்பிலித் தனங்களை செய்து பொய் பேசும் மானங்கெட்ட தடியனாக திரியும் மனமே கேள். குரங்கு போல் தாவும் மனதை ஒருமுகப்படுத்தி ஒப்பிலாத ஒருவனாகிய செஞ்சடையனாகும் ஈசன் பாதம் மெய்ப் பொருளாக உண்மையில் உள்ளதை உணர்ந்து அந்த ஒன்றையே மனதில் நிறுத்தி தியானம் செய்யுங்கள். அதன் பயனால் உயிரும் போகாது, உடம்பும் நாறாது, மரணமிலாப் பெரு வாழ்வில் வாழலாகும். ஈசன் பாதம் ஒன்றே உண்மை என்பதை உணருங்கள்.


சிவவாக்கியம் - 518

பிறப்பதேலாம் இறப்பதுண்டு பேதை மக்கள் தெரிகிலாது 
இறப்பதில்லை யென மகிழ்ந்தே எங்கள் உங்கள் சொத்தெனக் 
குறிப்புப் பேசித் திரிவரன்றிக் கொண்ட கோலம் என்னவோ 
நிரப்பும் பொந்தி அழிந்தபோது நேசமாமோ வீசனே.

இப்பூமியில் பிறப்பவை எல்லாம் ஒருநாள் இறந்து போகும் என்பதை தெரிந்து கொள்ளாமல் பேதை மனிதர்கள், நாமும் ஒரு நாள் இறந்து போவோம் என்பதை அறியாமல், இது என் சொத்து, அது உன் சொத்து என மகிழ்ந்து அது குறித்தே பேசிக் கொண்டு திரிவார்கள். அதனால் அவர்களின் மரணத்தை தடுத்து நிறுத்த முடியுமா? அவர்கள் இன்றிருக்கும் கோலம் என்றும் நிலைத்திடுமா? வயிறு நிரம்ப தின்று வளர்த்த இந்த உடம்பு அழிந்த போது அவையாவும் உங்களுடன் நேசமாகி கூட வருமா? ஈசன் ஒருவனே என்றும் நித்தியமானவன்.


சிவவாக்கியம் - 519

சுட்டெரித்த சாந்து பூசும் சுந்தரப் பெண் மதிமுகத் 
திட்ட நெட்டெழுத்தறியா தேங்கி நோக்கு மதவலீர் 
பெட்டகத்துப் பாம்புறங்கும் பித்தலாட்ட மறியிரே 
கட்டவிழ்த்துப் பிரமன் பார்க்கில் கதி உமக்கு ஏது காண்.

சுட்டெரிக்கும் நெருப்பான பொட்டாக இருக்கும் சுந்தரப் பெண்ணான வாலை நம் அகத்தில் அறிவாகவும் முகத்தில் அழகாக இருப்பதையும், அதில் ஓர் எழுத்தாக உள்ள தலையெழுத்தை அறியாமலும், அதிலயே ஏங்கி அதையே நோக்கி தவம் புரியும் வழியை உணராமலும் இருக்கின்றீர்கள். பெட்டகம் போன்ற மூலாதாரத்தில் பாம்பினைப் போல் உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி சக்தியையும் அதனால் நம் தலை எழுத்தை மாற்றும் வல்லமை உள்ளதையும் அறியாமல் இருக்கின்றீர்களே! நீங்கள் உருவான போதே உங்கள் ஆயுள் கணக்கை கட்டவிழ்த்துப் பார்த்தால் என்ன செய்வீர்கள். உங்களுக்குள் கதியாக இருக்கும் வாசியை உணர்ந்து வாலையை அறிந்து சோதியில் சேர்த்து தியானித்து மரணத்தை வென்று இறவா நிலை பெற முயற்சி செய்யுங்கள்.


சிவவாக்கியம் - 520

வேத மோது வேலையோ வீணதாகும் பாரிலே 
காத காத தூரமொடிக் காதல் பூசை வேணுமோ 
ஆதிநாதன் வெண்ணையுண்ட அவனிருக்க நம்முளே 
கோது பூசை வேதமோது குறித்துப் பாரும் உம்முளே.

வேதம் ஓதுவது சிறப்பானதுதான், ஆனால் அது ஒன்றை மட்டும் வேலையாக கொண்டு செய்து கொண்டிருப்பது வீணாகத்தான் போகும். இந்த பூமியெங்கும் பலகாத தூரங்கள் ஓடி ஓடி ஆசையினால் செய்யும் பூசைகள் இறைவனை அடைய முடியுமா? ஆதி மூலமாக நமக்குள்ளே வெண்ணை உண்ட கண்ணன் இருக்கும் பொது கோ பூசை செய்வது எதற்கு? வேதங்கள் நான்கும் சொல்லுகின்ற மெய்ப்பொருளை அறிந்து அதையே உங்களுக்குள் குறித்து நோக்கி தியானித்துப் பாருங்கள். அது இறைவனை காட்டி இறவா நிலைத் தரும்.


சிவவாக்கியம் - 521

பரமிலாத தெவ்விடம் பரமிருப்ப தெவ்விடம் 
அறமிலாத பாவிகட்குப் பரமிலை யதுண்மையே 
கரமிருந்தும் பொருளிருந்தும் அருளிலாது போதது 
பரமிலாத சூன்யமாகும் பாழ் நரக மாகுமே.

பரம்பொருள் இல்லாத இடம் ஏதுமில்லை. நமக்குள் பரம்பொருள் எந்த இடத்தில் இருக்கின்றது என்பதை அறிந்து கொண்டு தியானியுங்கள். அறம் சிறிதும் நெஞ்சில் இல்லாத பாவிகளுக்கு பரமன் இல்லை என்பதும் அதை அறியாமலே அழிவதும் உண்மையே. இறைவனைவணங்குவதற்கு கரங்கள் இருந்தும், அவனையே நினைத்து தியானம் செய்ய மெய்ப்பொருள் இருந்தும், கடவுள் இல்லை என்று சொல்லி அவனை வணங்காத் தன்மையினால் அவன் அருள் இல்லாத உயிர், பரம் பொருள் இல்லாத சூன்யமாகி, கண்களில் குருடு ஏற்பட்டு, பாழும் நரக வாழ்வில் உழல்வது உண்மையாக நடக்கும். ஆதலால் கடவுள் இல்லை என்று சொல்லி உங்கள் உயிர் இருக்கும்போது அதை உணராமல் பாழ் நரகில் விழாதீர்கள்.


சிவவாக்கியம் - 522

மாதர் தோள் சேராதவர் மாநிலத்தில் இல்லையே 
மாதர் தோள் புணர்ந்தபோது மனிதர் வாழ் சிறக்குமே 
மாதராகும் சக்தியொன்று மாட்டிக்கொண்ட தாதலால் 
மாதராகும் நீலிகங்கை மகிழ்ந்து கொண்டான் ஈசனே.

மாதரைச் சேர்ந்து பெண்ணால் வரும் சுகத்தை அறியாதவர் எவரும்இப்பூவுலகில் இல்லையே. நன் மங்கையரை மணந்து நன்மக்களைப் பெற்று வாழ்வதே மனிதர் வாழ்வு சிறப்படையும், சக்தியே உமதுடல், சிவனே உமதுயிர் என்பதை உணருங்கள். சக்தியும் சிவனும் இணைந்தே மனித வாழ்வு அமைந்துள்ளது. ஈசன் சக்திக்கு தன் உடம்பில் பாதியையும், நீலியான கங்கையை தன் தலையிலும் வைத்து மகிழ்ந்து கொண்டான் என்பதை அறிந்து கொண்டு மாதரை இம்மாநிலத்தில் மதித்து இருங்கள்.


சிவவாக்கியம் - 523

சித்தரென்றும் சிறியரென்றும் அறியொணாத சீவர்காள் 
சித்தரிங்கு இருந்தபோது பித்தரென்றே எண்ணுவீர் 
சித்தரிங்கு இருந்துமென்ன பித்தனாட்டிருப்பரே 
அத்தநாடும் இந்த நாடு மவர்களுக்கு எலாம் ஒன்றே.

இவர் பரந்த உள்ளம் கொண்ட சித்தரா அல்லது குறுகிய எண்ணம் கொண்டு வேடமிட்ட சிறியரா என்பதை அறிய முடியாத மனிதர்களே! சித்தர் இங்கு இருந்த போதும் அவரை பித்தம் பிடித்தவர் என்றே எண்ணுவீர்கள். சித்தர் இங்கிருந்தும் அவரை அறியாமல் பித்தன் என்று விரட்டும் பைத்தியக்கார உலகில் இருக்கும் மூடர்களே! அத்தன் ஈசன் ஆடும் சுடுகாடும், அவன் ஆலயம் கொண்டிருக்கும் இந்த நாடும், அவர்களுக்கு எல்லாம் ஒன்றே.


சிவவாக்கியம் -  524

மாந்தர் வாழ்வு மண்ணிலே மறைந்த போது விண்ணிலே 
சாந்தனான ஆவியைச் சரிப்படுத்த வல்லிரேல் 
வேந்தனாகி மன்றுளாடும் விமலன் பாதம் காணலாம் 
கூந்தலம்மை கோணலென்றுங் குறிக்கொனாதி துண்மையே.

மனிதர் வாழ்வு இப்பூமியில்தான், உயிர் மறைந்தபோது ஆவியாகச் சேர்வது ஆகாயத்தில்தான். ஆகையால் பஞ்ச பூதங்களையும் உணர்ந்து நம் உயிர் உள்ள இடத்தை உடம்பிலேயே அறிந்து கொண்டு அதை யோக ஞான சாதகங்களினால் சரியான பாதையில் நடத்தி ஞானத்தில் வல்லவராக மாறுங்கள். கோன் என்ற அரசனாக உங்கள் உடம்பில் மன்றுள் ஆடும் விமலன் ஆனா ஈசன் பாதம் கண்டு அதையே பற்றி நில்லுங்கள். கருங்கூந்தலை உடைய அம்மையும் கோனாகிய இடம் ஒன்றிலேயே இணைந்து இருப்பதை உணர்ந்து கொள்ளுங்கள். அத்திருவடியையே குறித்து நோக்கி தியானித்திருங்கள். மரணத்தை வென்று ஈசன் திருவடியை சேர்ந்து இறவா நிலை பெறலாம் இது உண்மையே.


சிவவாக்கியம் - 525

சருகருந்தி நீர்குடித்துச் சாரல் வாழ் தவசிகள் 
சருகருந்தில் தேகங்குன்றிச் சஞ்சலம் உண்டாகுமே 
வருவிருந்தோடு உண்டுடுத்தி வளர் மனை சுகிப்பிரேல் 
வருவிருந்தோன் ஈசனாகி வாழ்வளிக்கும் சிவாயமே.

ஞானம் அடையவேண்டி வீட்டைத் துறந்து காட்டிற்கு சென்று தவம் செய்பவர்களுக்கும் பசி வருத்த வரும். அதனால் காட்டில் உள்ள இலைசருகுகளை அருந்தி அருவி நீரை அள்ளிக்குடித்து மலைசாரல்களில் வாழ்ந்து வரும் தவசிகளே! அந்த சருகுகளை மட்டுமே உண்டு வந்தால் தேகத்தில் உள்ள திசுக்களின் செயலிழந்து உடல் சுருங்கி மன சஞ்சலங்கள்தான் உண்டாகும். மனம் அடங்காது போனால் ஞானம் பெறுவது எவ்வாறு? அவனை அடைவதே இலட்சியமாய் அனைத்தையும் துறந்து வரும் தவசிகள் பலரும் தவத்தை மறந்து பசியினால் பிச்சைக்கார சாமியார்களாக அலைவதைக் கண்டுணருங்கள். செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருந்து உழைத்து உண்டு நல்ல உடைகள் உடுத்தி எல்லாம் சிவன் செயலே என எண்ணி உங்கள் வீட்டிலேயே இல்லறத்தோடிருந்து சகல செல்வ யோகம் ஞானம் மிக்க வாழ்வில் அன்பே சிவமாய் தியானித்து சுகமாய் இருந்து வாருங்கள். ஈசனே உங்களைத் தேடி விருந்தாக வருவான். உங்களுக்கு வேண்டியதை வழங்கி நல வாழ்வைத் தருவான். இது சிவாயம் ஆன உண்மையே.


சிவவாக்கியம் - 526

காடு மேடு குன்று பள்ளம் கானினாற சுற்றியும் 
நாடு தேசம் விட்டலைவர் நாதன் பாதம் காண்பரோ 
கூடுவிட்டகன்று உன் ஆவி கூத்தனூர்க்கே நோக்கலால் 
வீடு பெற்று அரன் பதத்தில் வீற்றிருப்பார் இல்லையே.

ஈசனைத் தேடி காடு மேடு குன்று பள்ளம் என்று பாத யாத்திரைகள் செய்து நாடு தேசம் விட்டு தேசம் சுற்றி அலைபவர்கள் நாதன் பாதம் காண்பாரோ!! உங்கள் உடம்பை விட்டு அகன்று உங்கள் உயிர் ஆவியாகி எமனூர்க்குத் தான் போகும். இருந்த இடத்திலிருந்தே உங்களுக்குள் உள்ள மெய்ப் பொருளையே நோக்கித் தவமிருந்து பிறவியின் வீடு பேற்றைப் பெற்று அரன் பாதத்தை பற்றி தியானித்திருப்பவர் இல்லையே.


சிவவாக்கியம் - 527

கட்டையாற் செய் தேவரும் கல்லினாற் செய்தேவரும் 
மட்டையாற் செய் தேவரும் மஞ்சளாற் செய்தேவரும் 
சட்டையாற் செய் தேவரும் சானியாற் செய்தேவரும் 
வெட்டவெளி யதன்றி மற்று வேறு தெய்வம் இல்லையே.

மரக்கட்டையால் செய்த தெய்வச் சிலைகளும், கருங்கல்லினால் செய்த தெய்வச் சிலைகளும், தென்னை மட்டையால் செய்த தேவரும், மஞ்சளால் செய்து வைத்த பிள்ளையாரும், சட்டைத் துணியால் செய்யும் தேவரும், பசுஞ்சாணியால் செய்த தேவரும், வெட்ட வெளியாக உள்ள மெய்ப் பொருளையே காட்டும். நமக்குள் வெட்ட வெளியாக உள்ள மெய்ப் பொருளை அன்றி மற்ற வேறு தெய்வம் ஏதும் இல்லையே.


சிவவாக்கியம் - 528

தங்கள் தேகம் நோய் பெறின் தனைப் பிடாரி கோயிலில் 
பொங்கல் வைத்தும் ஆடு கோழிப் பூசைப்பலியை இட்டிட 
நங்க சொல்லு நலிமிகுந்து நாளுந் தேய்ந்து மூஞ்சூராய் 
உங்கள் குல தெய்வம் உங்களைக் குலைப்ப துண்மையே.

தங்களுடைய உடம்பு நோயுற்றால் அதிலிருந்து மீள்வதற்கு தங்கள் தெய்வமான பிடாரி கோயிலில் பொங்கல் வைத்து ஆடு கோழிகளைப் பலி கொடுத்து பூசைப் போடுகின்றீர்களே! அதனால் பிணி நீங்குகின்றதா? இதனால் எப்பயனுமின்றி உங்கள் உடம்பு மேலும் நலிவடைந்து ஒவ்வொரு நாளும் நோய் அதிகமாகி மூஞ்சூரைப்போல தேய்ந்து சுருங்கித் தானே போகின்றீகள். உங்களுக்குள் உள்ள தெய்வத்தை அறிந்து நோயை நீக்கும் வழியை உணர்ந்து கொள்ளாமல் இப்படி உங்கள் குல தெய்வங்களுக்குப் போடுகின்ற பூசைகள் உங்களை உருக்குலைத்து அழிப்பதுதான் உண்மை.


சிவவாக்கியம் - 529

ஆசைகொண்டு அனுதினமும் அன்னியர் பொருளினை 
மோசம் செய்து அபகரிக்க முற்றிலும் அலைபவர் 
பூசையோடு நேம நிட்டை பூரிக்கச் செய் பாதகர் 
காசினியில் எழுநரகைக் காத்திருப்பதுண்மையே.

பூசைகளைப்போட்டு நேம நிட்டைகளோடு மற்றவர் பார்த்து வியப்படைய பூரித்து நடிக்கும் பாதகர்கள் ஆசை கொண்டு அனுதினமும் அன்னியர் பொருள்களை அபகரித்து மோசம் செய்வதற்கே முற்றிலும் அலைகின்றனர். அவர்களுக்கு இவ்வுலகில் ஏமாற்றுவதால் பொருளோடு வாழ்ந்திருந்தாலும், அதனால் இக்காசியினில் ஏழு பிறப்பும் நரகம் காத்திருப்பது உண்மையாகும்.


சிவவாக்கியம் - 530

நேசமுற்று பூசை சித்து நீறு பூசிச் சந்தானம் 
வாசமோடு அணிந்து நெற்றி மைதிலர்தம் இட்டுமே 
மோசம் பொய் புனை சுருட்டு முற்றிலும் செய் மூடர்காள் 
வேசரி கலம்புரண்ட வெண்ணீராகும் மேனியே.

ஈசன் மீது மிகவும் அன்புற்று இருப்பது போல் நடித்துக் கொண்டு அன்றாடம் பூசைகள் செய்து உடல் நிறைய விபூதியை தரித்து வாசமுடைய சந்தனத்தை உடம்பு முழுதும் அணிந்து கொண்டு நெற்றியில் அஞ்சன மையினால் கறுப்புத் திலகமிட்டு மற்றவர் மதிக்க பெரிய பக்தராக வேடமிட்டு மோசம் பொய் புனைசுருட்டு போன்ற அத்தனை திருட்டுத் தனங்களையும் செய்து வாழ்ந்து வரும் மூடர்களே! அதனால் வரும் வினை என்ன தெரியுமா? போர்க்களத்தில் வெட்டுப்பட்டு ரண வேதனையால் புரளும் குதிரையைப் போல் உங்கள் உடம்பில் ரண வேதனைகள் உண்டாகி கொதிக்கும் வெந்நீரைப் போல் மேனி கொதித்து துன்பத்தில் உழல்வீர் எச்சரிக்கை.


சிவவாக்கியம் - 531

வாதஞ்செய்வேன் வெள்ளியும் பொன் மாற்றுயர்ந்த தங்கமும் 
போதவே குருமுடிக்கப் பொன் பணங்கள் தாவேனச் 
சாதனை செயதெத்திச் சொத்துத் தந்ததைக் கவர்ந்துமே 
காத தூரம் ஓடிச்செல்வர் காண்பதும் அருமையே.

நான் இரும்பைச் தங்கமாக்கும் வாதவித்தை செய்வேன் வெள்ளியும் பொன்னும் பத்தரை மாற்று தங்கமும் செய்ய சாகாத வேகாத போகாத குருமருந்து செய்ய வேண்டும். அந்த குரு செய்து முடிக்க ஒரு மண்டல காலம் ஆகும். அதற்கு வேண்டிய பொன்னும் பணமும் தாருங்கள். உங்களை இந்த உலகத்திலேயே பெரிய பணக்காரனாக மாற்றுவேன் என ஆசை காட்டி எத்தாகப் பேசி ஏமாற்றி வாக்கிய சொத்துக்களை கவர்ந்து கொண்டு வெகுதூரம் ஓடிவிடுவார்கள். அவர்களைத் திரும்பவும் காண்பதென்பது அருமையே. ஆதலால் இம்மாதிரியான போலி சித்தர்களை நம்பி ஆசையில் அகப்பட்டு ஏமாறாதீர்.


சிவவாக்கியம் - 532

யோக சாடை காட்டுவார் உயரவும் மெழும்புவார் 
வேகமாக அட்ட சித்து வித்தை கற்று நெட்டுவார் 
மோகங் கொண்டு மாதரின் மூத்திரப்பை சிக்கிப் பின் 
பேயது பிடித்தவர் போல் பேருலகில் சாவரே.

மற்றவர்கள் தம்மை மதிக்க வேண்டும் என்று யோக சாடைகளை செய்து காட்டுவார்கள். தரையிலிருந்து உயரவும் எழுவார். வெகு வேகமாக சித்து விளையாட்டுக்களை கற்று அதனைச் செய்து வித்தைக் காட்டி வியப்படையச் செய்வார். இதனால் மாயையில் அகப்பட்டு காம ஆசையினால் மோகங் கொண்டு பெண்களில் சிற்றின்பத்தில் சிக்கிக் கொள்வார். அதன் பின் உண்மையான யோக ஞானத்தை இழந்து பெண்ணாசையால் பேய் பிடித்தவர் போல அலைந்து இப்பேருலகில் சாவார்கள். ஆகையால் சித்து வித்தைகளை விட்டு அவைகளில் நாட்டமில்லாது மெய்ஞானத்தில் நில்லுங்கள்.


சிவவாக்கியம் - 533

காய காய முன்பதாகக் கண்டவர் மதித்திட 
மாய வித்தை செய்வதெங்கு மடிப்பு மோசஞ் செய்பவர் 
நேயமாக்கஞ் சாவடித்து நேரபிணியைத் தின்பதால் 
நாயதாக நக்கி முக்கி நாட்டினில் அலைவரே

காயகற்பம் உண்டு கல்ப தேகம் பெற்றதாக, கண்டவர்கள் மதிக்கும்படி சொல்லிக் கொள்வார்கள். கற்பத்தினால் மற்றவர் கண்களில் படாது மாயமாய் மறையலாம், ககன மார்க்கத்தில் எங்கும் பறந்து செல்லலாம் என்று ஜாலமாகிப் பேசி மோசமான காரியங்கள் செய்வார்கள். அன்பு மார்க்கத்தை சாகடித்து விட்டு எந்நேரமும் அபினியை காயகற்பம் என்று தின்பார்கள். அதனால் பைத்தியம் பிடித்து நாயைப் போல சாக்கடை நீர நக்கி குடித்து நாட்டில் அலைவார்கள்.


சிவவாக்கியம் - 534

நீரினில் குமிழியொத்த நிலையிலாத காயமென்று 
ஊரினிற் பறையடித்து உதாரியாய்த் திரிபவர் 
சீரினிற் உனக்கு ஞான சித்தி செய்வேன் பாரென 
நேரினிற் பிறர் பொருளை நீளவுங் கைப்பற்றுவர்.

நீர்மேல் நிற்கும் குமிழியைப் போன்றது நிலையில்லாத உடம்பு இது என்று ஞானம் பேசி, தாங்களே அவதாரமாக வந்த உண்மையான குருவென்று ஊர் முழுவது பறையடித்து பிரச்சாரம் செய்து உண்மைப்பொருள் அறியாத உதாரியாய் திரியும் போலிக் குருவானவர் ஊரிலுள்ளோரை எல்லாம் அழைத்து ஞானம் பெற என்னிடம் உபதேசம் பெற்றுக்கொள்ளுங்கள். வெகு சீக்கிரத்தில் உங்களுக்கு ஞான சித்தியை நானே கொடுப்பேன் என அழைப்பு விடுத்து ஒவ்வொரு படியாக உபதேசம் பெறவேண்டும் எனக் கூறி அதற்கு நிகராக பிறர் பொருளை கட்டணம் என்று கட்டாயமாக வசூல் செய்து வாழ்நாள் முழுதும் நெடுக கைப்பற்றுவார்கள். இவர்களை கண்டு ஏமாறாதீர்கள்.


சிவவாக்கியம் - 535

காவியுஞ் சடைமுடி கமண்டலங்கள் ஆசனம் 
தாவுருத்திராட்சம் யோகத்தண்டு கொண்ட மாடுகள் 
தேவியை அலைய விட்டுத் தேசமெங்குஞ் சுற்றியே 
பாவியென்ன வீடெலாம் பருக்கை கேட்டலைவரே.

காவி ஆடை, சடாமுடி, கமண்டலம், மான் தோல் ஆசனம், கழுத்திலும் உடம்பிலும் உருத்திராட்சம் யோகத்தண்டு இவைகளைக் கொண்டு சாமியார் வேடம் போட்ட சோம்பேறி மாடுகளான மனிதர்கள், தங்கள் மனைவியை தவிக்கும்படி அலையவிட்டு விட்டு தேசமெங்கும் சுற்றி பிச்சை எடுப்பார்கள். அதனால் பாவியாகி சோற்றுக்காக வீடெல்லாம் சென்று அம்மா தாயே பசி என்று கேட்டு அலைவார்கள்.


சிவவாக்கியம் - 536

முத்தி சேறச் சித்தியிங்கு முன்னளிப்பேன் பாரெனச் 
சத்தியங்கள் சொல்லி அங்கும் சாமி வேடம் பூண்டவர் 
நித்தியம் வயிறு வளர்க்க நீதி ஞானம் பேசியே 
பத்தியாய்ப் பணம் பறித்துப் பாழ் நரகில் வீழ்வரே.

ஜீவன் முக்தி அடைவதற்குள்ள சித்தியை இங்கு முன்னதாக உடனே நான் தருவேன் பாருங்கள் என்று சத்தியங்கள் சொல்லி சாமி வேடம் பூண்டவர், நித்தியம் தன் வயிறு வளர்க்க பல நீதிக் கதைகளையும் சொல்லி ஞானப் பொருளறியாமல் ஞானம் பேசிப் பேசியே குருபக்தியை எடுத்துரைத்து பணத்தை பறிப்பார்கள். யோக ஞானத்தை விலை வைத்து விற்பதால் இவர்கள் பாழும் நரகத்தில் விழுவார்கள்.


சிவவாக்கியம் - 537

செம்மை சேர் மரத்திலே சிலை தலைகள் செய்கிறீர் 
கொம்மையற்ற கிளையில் பாதகுறடு செய்தழிக்கிறீர் 
நும்முளே விளங்குவோனை நாடி நோக்க வல்லிரேல் 
இம்மலமும் மும்மலமும் எம்மலமும் அல்லவே.

செம்மை மிகுந்த பழமையான மரத்தில் சிலைகளையும் தலைகளையும் செய்து வணங்குகின்றீர்கள். கொம்பில்லாத அம்மரக்கிளையில் பாதக் குறடுகள் செய்து காலில் போட்டு அழிக்கிறீர்கள். கையெடுத்து வணங்கியதும் காலில் போட்டு மிதித்ததும் ஒரே மரத்தில் ஆனது தானே. உங்களுக்குள்ளே சோதியாக விளங்கும் ஈசனை அறிந்து அவனையே நாடியிருந்து நோக்கி தியானிக்க வல்லவரானால் இம்மலமான உடம்பில் ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களும் எக்குற்றங்களும் இல்லாது மனத்தூய்மை பெறுவீர்கள். மாசற்ற மனதில் ஈசன் வாழ்வான்.


சிவவாக்கியம் - 538

எத்திசை எங்கெங்குமோடி எண்ணிலாத நதிகளில் 
சுற்றியும் தலை முழுகச் சுத்த ஞானி யாவரோ 
பக்தியோடு அரன்பதம் பணிந்திடாத பாவிகாள் 
முத்தியின்றிப் பாழ் நரகில் மூழ்கி நொந்தலைவரே

எல்லாத் திசைகளுக்கும் சென்று எங்கெங்கும் ஓடி சுற்றி வந்தாலும் எண்ணற்ற புண்ணிய நதிகளில் தலை முழுகுவதாலும் சுத்த ஞானியாக ஆக முடியுமோ! மெய்பக்தியோடு மெய்ப்பொருளை அறிந்து அரன்பதம் பணிந்திடாத பாவிகளே! மெய்ப்பொருளை அறிந்து தவம் செய்து உணர்ந்தால் தான் சுத்த ஞானி ஆக முடியும். இதைவிடுத்து அலைவதால் முக்தி கிடைக்காது. பாழும் நரகத்தில்தான் மூழ்கி நொந்து போவீர்கள். ஆதலால் மெய்ப்பொருளை அறிந்து தியானியுங்கள்.


சிவவாக்கியம் - 539

கல்லு வெள்ளி செம்பிரும்பு கைச்சிடும் தராக்களில் 
வல்ல தேவ ரூபபேதம் அங்கமைத்துப் போற்றிடின் 
தொல்லையற்றிடப் பெருஞ் சுகம் தருமோ சொல்லுவீர் 
இல்லை இல்லை இல்லை இல்லை ஈசன் ஆணை.

கல்லிலும், வெள்ளி, செம்பு, இரும்பு என்று காய்ச்சிடும் தராக்களிலும் வல்லமையுள்ள தெய்வ உருவங்களை பலவித பேதங்களில் அமைத்து அங்கு போற்றி வழிப்பட்டாலும் தொல்லையற்று இருக்க முடியமா? அது உண்மையில் பெருஞ்சுகமாகிய இறை இன்பத்தை தருமோ சொல்லுங்கள். உங்களில் உள்ள சோதியில்தான் மெய்யின்பம் பெற முடியுமேயன்றி வேறு வகைகளில் போற்றுவதனால் இல்லையென்று ஈசன் மீது ஆணையிட்டு சொல்கின்றேன்.


சிவவாக்கியம் - 540

இச்சகஞ் சனித்ததுவும் ஈசனைந் தெழுத்திலே 
மெச்சவுஞ் சராசரங்கள் மேவுமைந்தேழுத்திலே 
உச்சிதப் பல உயிர்கள் ஒங்கலஞ் செழுத்திலே 
நிச்சய மெய்ஞ்ஞான போதம் நிற்குமைந்தெழுத்திலே.

இந்த உலகம் தோன்றியது ஈசனுடைய நமசிவய என்றஅஞ்செழுத்தாலே, அனைத்து மேலான சராசரங்கள் யாவிலும் மேவியிருப்பது ஐந்தெழுத்தே. சத்தியமான மெய்ஞ்ஞானப் போதப்பொருளாக நிற்பதும் ஐந்தெழுத்தே. ஆனதால் ஐந்தெழுத்தை ஓதி ஐந்தெழுத்தின் உண்மைகளையும் பஞ்சபூத தன்மைகளையும் உணர்ந்து, ஐந்தெழுத்தே பஞ்சாட்சரமாகிய மெய்ப் பொருளாக இருப்பதை இருந்து அதையே நோக்கி தியானித்து ஈசன் அருள் பெறுங்கள்.


சிவவாக்கியம் - 541

சாத்திரங்கள் பார்த்துப் பார்த்துத் தாங்குருடாவதால் 
நேத்திரங்கெட வெய்யோனை நேர்துதி செய் மூடர்காள் 
பாத்திர மறிந்து மோன பத்தி செய்ய வல்லிரேல் 
சூத்திரப்படி யாவரும் சுத்தராவர் அங்ஙனே.

சாத்திரங்களைப் பார்த்துப் பார்த்து அதன்படியே நடந்து வந்தும் மெய்யறிவை அறியாமல் தாங்கள் குருடாகி இருளிலேயே இருக்கின்றீர்கள். கண்கள் கெட்டுப் போகும்படி உச்சி வெயிலில் சூரியனை நேராகப் பார்த்து மந்திரங்களை ஓதி துதி செய்யும் முட்டாள்களே! பக்குவப்பட்டு பாத்திரமாக இருக்கும் உயிரை அறிந்து, அதுவே மோனம் என்ற மெய்ப் பொருள் என்பதை உணர்ந்து, அதையே ஈசன் திருவடி எனப் பற்றி பக்தியுடன் தியானம் செய்ய வல்லவர் ஆனால், சாஸ்திரங்களின் சூத்திரப்படி, அதைத் தெரிந்தவர்கள் யாவரும் சுத்த ஞானியாக ஞானியாக ஆவார்கள்.


சிவவாக்கியம் - 542

மன உறுதி தான் இலாத மட்டிப் பிண மாடுகள் 
சினமுறப் பிறர் பொருளைச் சேகரித்து வைத்ததைத் 
தினந்தினமும் ஊரெங்குஞ் சுற்றித் திண்டிக்கே அலைபவர் 
இளமதிற் பலர்கள் வையும் இன்பற்ற பாவிகாள்.

தன்னிடம் மனதில் திட நம்பிக்கையுடன் இறைவனை எண்ணி தியானம் செய்ய வேண்டும். மனதில் உறுதியில்லாத மடமந்தை கொண்ட மாடுக்களைப் போன்று வாழ்ந்து கொண்டு பிணமாகப் போகும் மனிதர்களே! கோபம் அடைவார்கள். பிறர் பொருளை ஏமாற்றி சேகரித்து வைத்து யாருக்கும் சொல்லாமல் எதற்கும் பயனின்றி இறந்து போவார்கள். தினந்தோறும் ஊரெல்லாம் சுற்றி சோற்றுக்கு அலைபவர்கள் மெய்யின்பத்தை அறியா பாவிகள். இவர்களை வருங்காலம் தூற்றும் ஆதலால் இளமையிலேயே உண்மையை உணர்ந்து மனத்தில் உறுதியுடன் செத்தாலும் வைத்த அடி மாறாத திடநம்பிக்கையுடன் ஈசனைத் தியானித்திடுங்கள்.


சிவவாக்கியம் - 543

சிவாய வசியென்னவுஞ் செபிக்க இச்சகமெலாம் 
சிவாய வசியென்னவுஞ் செபிக்க யாவும் சித்தியாம் 
சிவாய வசியென்னவுஞ் செபிக்க வானமாளலாம் 
சிவாய வசியென்பதே இருதலைத் தீயாகுமே.

சிவாய வசி என்று ஓதி செபிக்க இந்த சகம் எல்லாம் நம் வசம் ஆகுமே. சிவாயவசி என்று எண்ணி மனதிலேயே செபித்து தியானிக்க யாவும் சித்தியாகுமே. சிவாய வசி என வாசியேற்றி செபிக்க ஆகாயதலத்தில் ஆண்டவனைச் சேர்ந்து தேவர்களாகி வானம் ஆளலாம். சிவாய வசி என்பது இருதலைத் தீயாகி அதுவே சோதியான ஈசன் ஆகும்.


நன்றி 

Post a Comment

0 Comments