இராமாயணம் பகுதி - 95 - RAMAYANAM PART - 95


இராமாயணம் பகுதி - 95


இராமாயணம் பகுதி - 95 - RAMAYANAM PART - 95

சீதை அனுமனிடம், மாருதியே! நீ எனக்கு செய்த உதவிக்கு, நான் உனக்கு என்ன கைம்மாறு செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை. அன்று என் உயிரை மாய்த்து கொள்ளும் தருவாயில் இருந்த எனக்கு, நீ கொண்டு வந்த கணையாழி என் உயிரை காப்பாற்றியது. இன்று நீ சொன்ன சுபச் செய்தி என் மனதை குளிர வைத்தது. இந்த மூன்று உலகத்தையும் உனக்கு காணிக்கையாக கொடுத்தாலும் நீ செய்த உதவிக்கு ஈடாகாது. ஏனென்றால் உலகங்கள் அழியக்கூடியது. உன்னை என் தலையில் வைத்து தொழுவதே சிறந்தது. மாருதியே! உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேள். அவ்வரத்தை நான் உனக்கு தருவேன் என சீதை கூறினாள். அனுமன் சீதையிடம், அன்னையே! நான் திருமணம் ஆகாத பிரம்மச்சாரி. எனக்கு வேண்டுவது உலகத்தில் இல்லை. தாங்கள் எனக்கு வரம் தருகிறேன் என்று கூறியுள்ளீர்கள்.

அன்னையே! தங்களை பத்து மாதங்கள் கத்தியும், கோடாரியும் காட்டி தங்களைப் பயமுறுத்திய இந்த அரக்கிகளை நான் கொல்வேன். தாங்கள் இந்த வரத்தை எனக்கு அருள வேண்டும் எனக் கேட்டான். இதைக்கேட்ட அரக்கியர்கள் அனைவரும் பயத்தில் சீதையை சரணடைந்தனர். சீதை, அரக்கியர்களுக்கு அபயம் அளித்தார். பிறகு சீதை, அனுமனிடம், மாருதியே! இந்த அரக்கியர்கள் எனக்கு தீங்கு செய்யவில்லை. நான் செய்த தவறினால் இந்த துன்பம் ஏற்பட்டது. எனக்கு இத்தனை நாட்கள் ஏற்பட்ட துன்பத்திற்கு இந்த பெண்கள் காரணம் அல்ல. இராவணனின் ஏவலினால் தான் இவர்கள் எனக்கு துன்பத்தை தந்தார்கள். நான் எம்பெருமானுக்கு துணையாக இக்கானகத்திற்கு வந்தேன். கானகம் வந்த நான், ஒரு மானின் மேல் ஆசைப்பட்டது என் தவறு

நான் அந்த மானை வேண்டும் என்று கேட்காமல் இருந்திருந்தால் இத்தனை துன்பங்கள் நேர்ந்திருக்காது. பதினான்கு ஆண்டுகள் உண்ணாமலும், உறங்காமலும் எம்பெருமானை காவல் புரிந்த இலட்சுமணனின் மனதை புண்படும்படி பேசினேன். நான் அவ்வாறு பேசாமல் இருந்திருந்தால் இத்துன்பம் நேராமல் இருந்திருக்கும். எங்களை பதினான்கு ஆண்டுகள் வனவாசம் அனுப்ப காரணமாய் இருந்த கூனியை விடவா இவர்கள் கொடியவர்கள். நயவஞ்சகம் செய்து வனவாசம் அனுப்பிய கூனியை, நான் நினைத்தால் அக்கூனி அன்றே மடிந்திருப்பாள். கூனி செய்த குற்றத்தை பொறுத்த என்னால் இவர்கள் செய்த துன்பங்களை பொறுக்க வேண்டும் அல்லவா? அதனால் நீ இவர்களின் மேல் கருணை காட்டி விட்டுவிடுவாயாக எனக் கூறினார்.

இதைக்கேட்ட பின் அனுமன், அன்னையே நான் தங்களின் வார்த்தைகளுக்கு உட்பட்டு இந்த அரக்க பெண்கள் மேல் கருணை காட்டுகிறேன் எனக் கூறிவிட்டு சீதையிடம் ஆசிப்பெற்று அங்கிருந்து விடைப்பெற்று சென்றான். பிறகு அனுமன் இராமரிடம் வந்து, பெருமானே! தாங்கள் இராவணனை வதம் செய்த செய்தியை நான் அன்னை சீதையிடம் கூறினேன். அவர் அதைக்கேட்டு அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார் எனக் கூறினான். அதன் பின் இராமர் விபீ‘ணனை பார்த்து, தம்பி விபீ‘ணா! பணிப்பெண்களிடம் சீதைக்கு தேவையான ஆடை ஆபரணங்களை கொடுத்து சீதையை அலங்கரித்து அழைத்து வரச் சொல் எனக் கட்டளையிட்டார். விபீ‘ணன் இராமரிடம் இருந்து விடைப்பெற்று அசோகவனம் நோக்கிச் சென்றான்.

விபீஷணன் இராமரிடம் இருந்து விடைப்பெற்று அசோகவனம் நோக்கிச் சென்றான். விபீஷணன் அசோக வனத்தில் இருக்கும் சீதையை வணங்கி, சீதையின் திருவடிகளில் விழுந்து வணங்கினான். அப்பொழுது அருகில் இருந்த திரிசடை சீதையிடம், அம்மா சீதை! இவர் தான் என் தந்தை என அறிமுகம் செய்து வைத்தாள். விபீஷணன் சீதையிடம்! தாயே! எம்பெருமான் இராம சந்திர மூர்த்தி தங்களை காண விரும்புகின்றார். தேவர்களும் தங்களை தொழுவதற்காக எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். அதனால் ஸ்ரீராமர் தங்களுக்கு ஆடை ஆபரணங்கள் கொடுத்து அலங்கரித்து அழைத்து வரச் சொல்லி கட்டளையிட்டுள்ளார் எனக் கூறினான். இதைக்கேட்ட சீதை விபீஷணனிடம், அன்பனே! நான் ஆடை ஆபரணங்கள் இன்றி தவ கோலத்திலேயே வர விரும்புகிறேன்.

நான் இத்தனை நாட்கள் உண்ணாமலும், உறங்காமலும், தவ செய்த கோலத்தை அவர்கள் காண வேண்டாமா? அதனால் நான் தவக் கோலத்திலேயே வருகிறேன் எனக் கூறினாள். விபீஷணன், அன்னையே! இது எம்பெருமான் ஸ்ரீராமனின் கட்டளை. இதை எவ்வாறு மீறுவது? எனக் கேட்டான். பிறகு சீதை, இது எம்பெருமானின் கட்டளை என்பதால் சரி என சம்மதித்தாள். அதன் பின் விபீஷணன் சீதையை அலங்கரித்து வரச் சொல்லி தேவ மாதர்களுக்கு கட்டளையிட்டு அங்கிருந்துச் சென்றான். பிறகு இரம்பை, ஊர்வசி, மேனகை முதலிய தேவ மாதர்கள் சீதையை நறுமண நீரால் குளிர்வித்து, நறுமண தைலங்கள் பூசி, ஆடை ஆபரணங்களால் அழகாய் அலங்கரித்தனர். அதன் பின் சீதையை பல்லக்கில் ஏற்றி இராமர் முன் கொண்டு வந்து நிறுத்தினர்.

சீதையை பார்க்க தேவர்களும் முனிவர்களும் அங்கு வந்த கூடினர். வானர வீரர்கள் சீதையைப் பார்த்து பணிந்து நின்றனர். சீதை இராமரை பார்த்து தரிசித்தாள். சீதை பல்லக்கில் இருந்து இறங்கி இராமரை வணங்கி, கண்களில் கண்ணீர் தழும்ப அவரின் திருவடியில் விழுந்து வணங்கினாள். இராமரும் சீதையை கருணைக்கொண்டு அன்பாக நோக்கினார். ஆனால் சீதையை நோக்கிய மறு நிமிடத்தில் இராமரின் முகத்தில் கருணையும் தென்படவில்லை, அன்பும் தென்படவில்லை. இராமரைப் பொருத்தவரை அவருக்கு சீதை மேல் பரிபுசிரணமான நம்பிக்கை உண்டு என்றாலும், மாற்றானின் சிறை வைக்கப்பட்டிருந்த சீதையைப் பற்றி மக்கள் என்ன நினைப்பார்கள் என்றதொரு சந்தேகம் அவருக்கு வரவே, அவர் சீதையை மறுபடியும் மனைவியாக ஏற்றுக்கொள்வதில் ஒரு மனத்தடை ஏற்பட்டது. அதனால் இராமரின் கண்களில் கோபம் சீற்றமாய் நிறைந்திருந்தது.

இராமர் சீதையைப் பார்த்து, ஜானகி! நீ நலமாக இருக்கின்றாயா? நான் உன்னை அரக்கர்களின் சிறையில் இருந்து மீட்கவே இவ்வளவு பெரிய யுத்தத்தை செய்தேன். உன்னை மீட்பதற்காக நான் கடலில் அணை கட்டினேன். ரகு குலத்தில் பிறந்த நான், என் மனைவியை அரக்கர்கள் கவர்ந்து சென்றார்கள் என்னும் பழியை தீர்க்கும் பொருட்டே இத்தகைய மிகப்பெரிய யுத்தத்தை வெற்றிகரமாக முடித்தேன். ஜானகி! நீ இராவணனின் சிறையில் நெடுநாள் இருந்திருக்கிறாய். உனக்கு அங்கு நல்ல உணவுகள் கிடைத்திருக்குமே? அரக்கிகளுடன் சேர்த்து மாமிசம் உண்டாயா? மது அருந்தினாயா? நீதி தவறிய அரக்கனின் நகரில் அவனுக்கு அடங்கி நீ உயிர் வாழ்ந்து இருக்கிறாய்.

தொடரும்.....

Post a Comment

0 Comments