இராமாயணம் பகுதி - 63
வருணன், பெருமானே! தாங்கள் கடல் தாண்டிச் செல்ல, கடலை வற்றச் செய்வதற்கு நான் காரணமாக இருக்கக் கூடாது. தாங்கள் செல்வதற்கு கடல் நீரை திடம் ஆக்கினாலும் கடலில் உள்ள உயிரினங்கள் துன்பப்படும். இதற்கு வேறொரு வழியும் உண்டு. என் மீது அணைக்கட்டினால் தாங்கள் அனைவரும் கடல் தாண்டிச் செல்லலாம். அணையில் தாங்கள் இடும் குன்றுகளையும், பாறைகளையும், மலைகளையும் மூழ்கிவிடாமல் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். இராமர், வருணனை பார்த்து, நல்லதொரு யோசனை சொன்னாய் என்று வருணனை பாராட்டினார். பிறகு வானர சேனைகளை அழைத்து, குன்றுகளை கொண்டு வந்து கடலில் மேல் அணைக் கட்டுங்கள் என பணித்தார். இராமர், சுக்ரீவனிடமும், விபீஷணனிடமும், அணைக் கட்டுவதற்கான வேலையை முன்னின்று யாரை செய்யச் சொல்வது என ஆலோசனை நடத்தினார்.
அவர்கள் நளன் தான் அணைக்கட்ட தகுதியானவன் என தீர்மானித்து நளனை அழைத்து வரச் சொன்னார்கள். நளன் அங்கு வந்து சேர்த்தான். இராமர், நளனிடம் நீ அணையை திறம்பட கட்டி முடிக்க வேண்டும் என்றார். நளன் இராமரிடம், நான் அணையை திறம்பட கட்டி முடிக்கிறேன் எனக் கூறினான். அணையைக் கட்ட வானரங்கள் மலைகளும், குன்றுகளும் கொண்டு வர ஆரம்பித்தனர். சில வாரங்கள் மலைகளையும், பாறைகளையும் கால்களில் உருட்டிக் கொண்டும், சில வானரங்கள் கைகளால் சுமந்து கொண்டும் வந்தனர். அனுமன் ஒரே நேரத்தில் பல மலைகளும், குன்றுகளும், பாறைகளும் கொண்டு வந்து சேர்த்தான். வானரங்கள் மலைகளும், குன்றுகளும், பாறைகளும் கொண்டு வந்து கொடுக்க நளன் அதை தன் இடக்கையால் வாங்கி அணைக் கட்டினான். அனுமன் கொண்டு வந்து கொடுக்கும் மலைகளையும், குன்றுகளையும் நளன் தன் இடக்கையால் வாங்கி அணைக் கட்டினான்.
அமைச்சராக இருக்கும் என்னை மதிக்காமல் இடக்கையால் வாங்கி அணை கட்டுகிறானே என நளன் மீது கோபம் கொண்டான் அனுமன். உடனே அனுமன் தானே அணைக்கட்ட மலைகளை கடலில் சேர்த்தான். ஆனால் அம்மலைகள் கடலில் மூழ்கிவிட்டன. இதை தொலைவில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த இராமர், அனுமனை பார்த்து தொழிலில் பெரியவர், சிறியவர் என்று பார்க்கக் கூடாது. அதனால் நீ மலைகளை நளன் மூலமாகவே அணையில் சேர்ப்பாயாக என்றார். இதை பார்த்து கொண்டிருந்த இலட்சுமணர் இராமரிடம், அண்ணா! நளன் கையால் சேர்க்கின்ற மலைகளும் குன்றுகளும் நீரில் மூழ்காமல் மிதக்கின்றன. ஆனால் அனுமன் சேர்த்த பாறைகள் நீரில் மூழ்கிவிட்டன. அதற்கான காரணம் என்ன? என்று கேட்டார். அதற்கு இராமர் தம்பி இலட்சுமணா, சூர்ய கிரகணம் நடக்கும் கிரகண காலத்தில் தெய்வத்தினை, குறித்து ஜபம் செய்தால் ஒன்றுக்கு ஆயிரம் மடங்கு பலன் உண்டாகும்.
அதைவிட தண்ணீரில் மூழ்கி மந்திர ஜபம் செய்தால் ஒன்றுக்கு லட்சமாக, மடங்கு பலன் அதிகமாகும். ஒருமுறை மாதவேந்திரர் என்ற மகரிஷி , கானகத்தில் சூர்ய கிரகணம் அன்று நீரில் மூழ்கி தவம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது நளன் குட்டி வானரமாக இருந்தது. குரங்குகளுக்குச் சேட்டை செய்வது என்பது பிடித்தமான ஒன்று. அப்படி குரங்குகள், நீரில் தவம் செய்து கொண்டிருந்த முனிவரை பார்த்தனர். உடனே வானரங்கள் முனிவர் மீது கற்களை எறிந்து விளையாடிக் கொண்டிருந்தது. முனிவர் தவத்தை விட்டு எழுந்து வந்து குரங்குகளை விரட்டி விட்டு மீண்டும் நீரில் மூழ்கி தவம் செய்தார். முனிவர் பலமுறை நளன் என்ற அந்த குட்டிக் குரங்கை விரட்டியும், குட்டிக் குரங்கு கல்லை எறிந்து கொண்டே தான் இருந்தது.
ஜபம் செய்யும் பொழுது கோபம் கொண்டு சாபம் விட்டால் ஜபசக்தி குறைந்து விடும். அதனால் முனிவர் குரங்குக்கு சாபம் கொடுக்காமல், இக்குரங்கு எரியும் கற்கள் தண்ணீருக்குள் மூழ்காமல் மிதக்க வேண்டும் என்று கூறிக்கொண்டு தண்ணீருக்குள் ஜபம் செய்ய தொடங்கினார். நளன் என்னும் குரங்கு தான் எறியும் கற்கள் மூழ்காமல் மிதப்பதினால் விளையாட்டில் ஆர்வம் இல்லாமல், அங்கிருந்து சென்று விட்டது. அந்த சாபத்தின் நன்மையால் தான், நளன் இடுகிற கற்கள் தண்ணீரில் மூழ்காமல் மிதக்கின்றன என்றார் ராமர். இவ்வாறு வானரங்கள் இரவு பகலாக வேலை செய்து ஐந்து நாட்களில் அணையைக் கட்டி முடித்தனர். அணை கட்டி முடிக்கப்பட்ட செய்தியை அறிந்ததும் இராமர் அவர்களை கட்டி தழுவி பாராட்டினார். கட்டி முடித்த அணையின் அழகைக் கண்டு இராமர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.
அதற்கு பரிசாக நளனை கௌரவிக்கும் விதமாக வருண பகவான் தனக்கு முன் கொடுத்த நவரத்தின மாலையை நளனுக்குப் பரிசாக வழங்கினார். பிறகு அனைவரும் அங்கிருந்து இலங்கை நோக்கி செல்ல ஆயத்தமாகினர். வானரங்கள் பயணத்திற்கு தேவையான உணவு பொருட்களை சேகரித்து கொண்டனர். வானர சேனைகள் அணிவகுத்து புறப்பட்டன. சுக்ரீவனின் விருப்பப்படி அனுமன் இராமரையும், அங்கதன் இலட்சுமணரையும் தூக்கிக் கொண்டு சென்றான். இராமரும், வானர வீரர்களும் இலங்கை தீவை அடைந்தார்கள். அங்கு அவர்கள் ஒரு குன்றின் அடிவாரத்தில் தங்கினார்கள். சுக்ரீவனின் கட்டளைப்படி நளனும், நீலனும் தங்குவதற்கான பர்ணசாலையை அமைத்தனர். அன்றிரவு இராமர் சீதையை நினைத்து மிகவும் வருந்திக் கொண்டு இருந்தார்.
அப்பொழுது இராவணனால் ஏவப்பட்ட ஒற்றர்கள் சுகன், சாரணன் என்னும் இரண்டு அரக்கர்கள் இவர்களை அறிந்து கொள்ளும் வகையில் வானர உருவம் கொண்டு அங்கு வந்தனர். இவர்களை அடையாளம் கண்டுகொண்ட விபீஷணன், இவர்களை அடித்து, உதைத்து கயிற்றால் கட்டிக்கொண்டு இராமர் முன் நிறுத்தினான். இராமர், இவர்கள் வானரங்கள் என நினைத்து விபீஷணனை பார்த்து, தம்பி விபீஷணா! இவர்கள் என்ன தவறு செய்தார்கள்? இவர்களை ஏன் கயிற்றால் கட்டிக்கொண்டு வந்துள்ளாய்? என வினவினார். விபீஷணன், பெருமானே! இவர்கள் வானரங்கள் இல்லை. இராவணனால் ஏவப்பட்ட அரக்கர் குலத்தைச் சார்ந்த ஒற்றர்கள். இவர்கள் பெயர் சுகன், சாரணன். இவர்கள் நம்மை ஆராய்ந்து பார்க்க வந்துள்ளார்கள். உடனே அந்த ஒற்றர்கள், பெருமானே! நாங்கள் ஒன்றும் அரக்கர் குலத்தைச் சார்ந்த ஒற்றர்கள் இல்லை.
தங்கள் முன் நிற்கும் இந்த விபீஷணன் கபட நாடகமாடி தங்களை போரில் தோற்கடிக்க திட்டமிட்டுள்ளான். நாங்கள் உண்மையில் வானர வீரர்கள் என்று நாடகமாடினார்கள். விபீஷணன், இவர்களின் இந்த நாடகத்தை நிறுத்த ஒரு மந்திரத்தை உச்சரித்தான். பிறகு அவர்கள் சுய உருவத்தில் (அரக்க) தோன்றினார்கள். இவர்கள் இராவணனின் ஒற்றர்கள் என்பது உறுதியாகிவிட்டது என்றான் விபீஷணன். தன் சுய உருவத்தை பெற்ற அரக்கர்கள் இராமரை பார்த்து நடுங்கினார்கள். இராமர் அவர்களிடம், என்னை பார்த்து நீங்கள் அஞ்ச வேண்டாம். நீங்கள் இங்கு வருவதற்கான காரணம் என்ன என்று சொல்லுங்கள் என்றார். ஒற்றர்கள் இராமரை பார்த்து, வீரனே! சீதையை யாரும் இல்லாத நேரத்தில் கவர்ந்து வந்த இராவணனுக்கு அழிவு வந்துவிட்டது என்பதை உணராமல் தங்களை பற்றி வஞ்சனை செய்து ஒற்று பார்க்க அனுப்பினான் என்றார்கள்.
தொடரும்.....
0 Comments