இராமாயணம் பகுதி - 46
அங்கதன் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்த ஜாம்பவான், வானர இளவரசனே! வீரனே! உன் கருத்துக்கள் சிறப்பானது. நீ உன் உயிரை மாய்த்துக் கொண்ட பின் நாங்கள் மட்டும் உயிரோடு இருப்போமா என்ன? இல்லை, கிஷ்கிந்தைக்கு சென்று நடந்த விஷயங்களை எல்லாம் சொல்லி இராமனின் திருவடியிலும், சுக்ரீவனின் திருவடியிலும் வீழ்ந்து உயிர் வாழ்வோம் என நினைத்தாயா? நாங்கள் மட்டும் உயிர் வாழ்ந்து என்ன பயன்? ஆதலால் நாங்களும் எங்கள் உயிரை மாய்த்து கொள்வோம். ஆனால் நீ எங்களுக்கு ஓர் சத்தியம் செய்ய வேண்டும். நாங்கள் இறந்த பின் நீ உயிர் வாழ வேண்டும். இது எங்களின் விருப்பம் ஆகும் என்றான்.
அதற்கு அங்கதன், நீங்கள் எல்லோரும் மாண்டு போன பின் நான் உயிருடன் நாடு திரும்புவது நன்றல்ல. அதனால் நாம் அனைவரும் உயிரை துறப்போம் என்றான். இதைக்கேட்ட ஜாம்பவான், அங்கதனே! நீ அரச பதவிக்கு உரியவன். ஆதலால் தான் உன்னை உயிருடன் நாடு திரும்ப சொன்னேன் என்று கூறினான். இவர்களின் உரையாடல்களை கேட்டுக் கொண்டிருந்த அனுமன், நாம் அனைத்து உலங்களிலும் இன்னும் சீதையை தேடி முடிக்கவில்லை. சீதையை தேடி கண்டுபிடித்து இராமரிடம் ஒப்படைப்பதுதான் நம் கடமையும், வீரமும் ஆகும். நாம் சுக்ரீவன் குறித்த காலத்திற்குள் சீதையை தேடி கண்டுபிடிக்க முடியவில்லை. குறித்த காலத்திற்குள் வராததால் நாம் இன்னும் சீதையை தேடி கண்டுபிடிக்கவில்லை என்பதை சுக்ரீவன் புரிந்து கொண்டிருப்பான். ஆதலால் நாம் சீதையை தேடிச் செல்வது தான் சிறந்தது.
சீதையை இராவணன் கவர்ந்து சென்றபோது, ஜடாயு இராவணனிடம் போரிட்டு உயிர் துறந்தார். அதுபோல நாம் சீதையை தேடும்போது உயிர் துறக்க நேரிட்டால் அது தான் சிறப்பு. அதை விட்டுவிட்டு சீதையை கண்டுபிடிக்கவில்லை என்று உயிரை மாய்த்து கொள்வது தான் ஓர் வீரனின் சிறப்பா? என்றான். இப்படி அனுமன் பேசிக் கொண்டிருக்கும் போது, சற்று தொலைவில் ஓர் மலையில் அமர்ந்திருந்த சம்பாதி என்ற கழுகின் அரசன், தம் தம்பி ஜடாயு இறந்து விட்டான் என்ற செய்தியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தான். ஜடாயுவை நினைத்து புலம்பி அழுதான்.
சம்பாதியும் ஜடாயுவும், சிறு வயதில் தாம் பெற்ற அபார சக்தியை அனுபவித்துக் கொண்டு இருந்தனர். அப்படி ஒரு நாள் இருவரும் ஆகாயத்தில் போட்டி போட்டுக் கொண்டு உயரப் பறந்து சென்று கொண்டு இருந்தனர். சூரியனை நெருங்க நெருங்க வெப்பம் அதிகரித்து கொண்டு இருந்தது. ஜடாயுவை வெப்பம் கொளுத்தி விடும் போல் இருந்தது. அப்போது சம்பாதி தன் சிறகுகளை விரித்து ஜடாயுவைக் காப்பற்றினான். ஆனால் சம்பாதியின் சிறகு எரிந்து போனது. சம்பாதி பறக்க முடியாமல் கீழே மலை மேல் விழுந்தான். அன்றிலிருந்து சம்பாதி பறக்க முடியாமல் துன்பப்பட்டுக் கொண்டிருந்தான்.
பிறகு சம்பாதி, வானர வீரர்களை நோக்கி வந்தான். அவர்களிடம் சம்பாதி கண்ணீர் மல்க, என் தம்பி ஜடாயு இறந்து விட்டானா? எப்படி இறந்தான்? என்று கேட்டான். அப்போது அங்கு இருந்த வானர வீரர்கள், சம்பாதியை பார்த்து பயந்து ஓடினர். ஆனால் அனுமன் சம்பாதியை எதிர்கொண்டு, நீ யார்? வஞ்சகம் செய்யும் அரக்கனா? உயிர் மேல் ஆசை இருந்தால் இங்கிருந்து தப்பித்து ஓடி விடு என்றான். ஆனால் சம்பாதி, அனுமனின் சொற்களை கேட்டு கோபப்படாமல் ஜடாயு இறந்த சோகத்தால் அழுது கொண்டிருந்தான். மறுபடியும் சம்பாதி, ஜடாயு எப்படி இறந்தான்? ஜடாயுவை கொன்றவர் யார் எனக் கேட்டான். அதற்கு அனுமன், முதலில் நீ யார் என்பதை சொன்னால் தான் நான் ஜடாயுவைக் கொன்றவர் யார் எனச் சொல்வேன் என்றான். சம்பாதி, ஜடாயு என் உடன் பிறந்த சகோதரன். அவனது பிரிவால் நான் மிகவும் துன்பப்பட்டுக் கொண்டு இருக்கிறேன் என்றான்.
அனுமன் சம்பாதியிடம், இராவணன் சீதையை கவர்ந்து சென்ற போது ஜடாயு இராவணனிடம் போரிட்டார். போரின் போது இராவணன், சிவன் கொடுத்த வாளால் ஜடாயுவின் சிறகுகளையும், கால்களையும் வெட்டி வீழ்த்தியதால் ஜடாயு இறந்து விட்டார் எனக் கூறினார். இதைக்கேட்ட சம்பாதி மயங்கி கீழே விழுந்தார். மயக்கம் தெளிந்த சம்பாதி, எம்பெருமான்! இராமரின் மனைவியை காக்கும் பொருட்டு ஜடாயு உயிர் துறந்து புகழை அடைந்துள்ளான். பிறகு சம்பாதி, அனுமனையும், மற்ற வானர வீரர்களையும் பாராட்டினான். சம்பாதி, வானர வீரர்கள் அனைவரிடமும் இராம நாமத்தை சொல்லச் சொன்னான். அனைவரும் இராம நாமத்தை சொல்லும்போது சம்பாதியின் சிறகுகள் முளைக்க ஆரம்பித்தது. திரும்பவும் தன் சிறகுகளை பெற்ற சம்பாதி மிகவும் வலிமையுடையவனாக மாறினான்.
பிறகு சம்பாதி, நானும் என் தம்பி ஜடாயுவும் ஆகாயத்தில் போட்டிப் போட்டுக் கொண்டு பறந்தோம். தம்பி ஜடாயு சூரியனை நெருங்க நெருங்க அவன் வெப்பத்தை தாங்க முடியாமல் துன்பப்பட்டான். அப்போது நான் என் சிறகுகளை விரித்து ஜடாயுவை காப்பற்றினேன். வெப்பத்தினால் என் சிறகுகள் கருகி நான் மலையின் மேல் விழுந்து உயிர் தப்பினேன். அப்பொழுது சூரியன் என்னிடம், சம்பாதி நீ வருந்த வேண்டாம். ஜனக மகாராஜரின் குமாரியும், இராமபிரானின் மனைவியுமான சீதையை தேடி வானர வீரர்கள் வருவார்கள். அவர்களிடம் இராமரின் நாமத்தை உச்சரிக்க சொல்லி உன் சிறகுகளை நீ திரும்ப பெற்றுக் கொள் என்று அருளினார். உங்களால் நான் என் சிறகுகளை பெற்று வலிமையுடையவனாக மாறினேன் என்றான்.
சம்பாதி சொன்னதை கேட்ட அனைவரும், இராமரைப் போற்றி கொண்டாடினர். பிறகு அனுமன், இராவணன் சீதையை தென் திசை நோக்கி கவர்ந்து சென்றதால் இவ்வழியாகத் தேடி வந்துள்ளோம் என்றான். சம்பாதி, வீரர்களே! வருந்த வேண்டாம். நான் அரக்கன் இராவணன் சீதையை கவர்ந்து சென்றதை பார்த்தேன். அவன் அன்னை சீதையை கவர்ந்து கொண்டு இலங்கை நோக்கிச் சென்றான். மிகுந்த துன்பத்தில் இருந்த அன்னையை அங்கே இராவணன் சிறை வைத்து உள்ளான். நீங்கள் அங்கே சென்று சீதையை காண்பீராக என்றான். பிறகு சம்பாதி, நீங்கள் அனைவரும் அங்கே செல்வது எளிதான விஷயம் அல்ல. உங்களில் மிக்க வலிமையும், தைரியமும் மிக்கவர் அங்கு சென்று, இராமர் கூறியதை சீதையிடம் கூறி அவரின் துயரங்களை நீக்கிவிட்டு வருவீராக என்றான். அப்படி உங்களால் இலங்கை செல்ல முடியாவிட்டால் இராமரிடம் சென்று சீதை இருக்கும் இடத்தை சொல்லுங்கள் என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு பறந்து சென்றான்.
சம்பாதி சென்ற பிறகு, அங்கிருந்த வானர வீரர்கள், கழுகரசன் பொய் சொல்ல மாட்டான். ஆதலால் நாம் சீதையை தேடி கண்டுபிடித்தால் தான் நம்மால் உயிர் வாழ முடியும் என்றனர். பிறகு அனைவரும் யார் கடலை கடந்து இலங்கை செல்வது என்று ஆலோசித்துக் கொண்டு இருந்தனர். அங்கிருந்த பல வீரர்கள் தங்களால் கடலை கடந்து செல்ல இயலாது எனக் கூறினர். அங்கதன், என்னால் கடலை கடந்து செல்ல முடியும். ஆனால் அங்கிருந்து என்னால் திரும்பி வர இயலாது எனக் கூறினான். கரடி வீரனான ஜாம்பவான், தன்னாலும் கடலை தாண்டிச் செல்ல முடியாது என வருந்திக் கூறினான். பிறகு ஜாம்பவான் அங்கதனிடம், அரச குமாரரே! நம்மில் கடலை கடந்து செல்லவும், மிக்க வலிமை உடையவனும், எல்லா விதங்களிலும் ஏற்ற தகுதி உடையவன் அனுமன் தான் என்றான்.
தொடரும்.....
0 Comments