இராமாயணம் பகுதி - 42
தாரை, கணவன் உள்ளத்தில் மனைவி இருப்பாள். அதைபோலவே மனைவியின் உள்ளத்தில் கணவன் இருப்பார். நான் தங்கள் உள்ளத்தில் இருந்திருந்தால் என் மார்பின் மீதும் அன்பு பாய்ந்திருக்க வேண்டுமே. ஏன் நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன் என கதறி அழுதாள். அனுமன் தாரைக்கு ஆறுதல் சொன்னான். பிறகு அங்கிருந்து தாரையை அழைத்துச் சென்றான். அங்கதன் தன் தந்தைக்கு செய்ய வேண்டிய காரியங்களை எல்லாம் செய்து முடித்தான்.
பிறகு சில நாட்கள் கழித்து, ஒரு நல்ல நாளில் இராமன் இலட்சுமணனிடம், சுக்ரீவனுக்கு முடி சூட்டும் படி கட்டளையிட்டார். பிறகு இலட்சுமணன் அனுமனிடம் பட்டாபிஷேகத்திற்கு தேவையான பொருட்களை கொண்டுவரும்படி கூறினான். அனுமனும் புண்ணிய தீர்த்தங்கள், மாங்கல்ய பொருட்கள் என பட்டாபிஷேகத்திற்கு தேவையான அனைத்து பொருட்களையும் கொண்டு வந்து சேர்த்தான். முனிவர்கள் ஆசியுடன், தேவர்கள் மலர்தூவ இராமனின் முன்னிலையில் இலட்சுமணன், சுக்ரீவனுக்கு முடிசூட்டினான். அங்கதனுக்கு இளவரசர் பட்டம் சூட்டினார்கள். கிஷ்கிந்தையின் அரசனாக முடிசூட்டிக் கொண்ட சுக்ரீவன், இராமன் திருவடியில் விழுந்து வணங்கினான். இராமர் சுக்ரீவனை கட்டி தழுவிக் கொண்டார்.
சுக்ரீவா! உன் அரசு ஓங்குக. நீ உன் ஆட்சியில் தருமநெறிப் படி நடந்து, உன் அரசாட்சிக்கு பெருமை சேர்க்க வேண்டும். நீ வாலியின் மகன் அங்கதனுடன் சேர்ந்து நலமாக ஆட்சி புரிய வேண்டும் என்று வாழ்த்தினார். பிறகு இராமர், சுக்ரீவா! நீ மன்னன் என்னும் உன் மரியாதையை பாதுகாத்து கொள்ள வேண்டும். பகைமை, விரோதம், இகழ்ச்சி, வேற்றுமை இவற்றை மனதில் வைத்துக் கொள்ள கூடாது. நேர்மையாகவும், அறநெறியுடன் அரசு புரிய வேண்டும். சிறியவர், பெரியவர் என்று எவரையும் இகழ்ந்து பேசுதல் கூடாது. அழிவுக்கு காரணம் பாவங்களே. ஒருபோதும் செய்யக்கூடாது. அதனால் பாவச்செயலை ஒரு பெண்ணாசையால் தான் வாலி மாண்டான். ஒரு பெண்ணால் தான் நான் இன்று பெரிதும் துன்பப்பட்டுக் கொண்டு இருக்கிறேன். ஆதலால் பெண்களிடம் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரைக் கூறினார். மழைக்காலம் வரப் இருப்பதால், மழைக்காலம் முடிந்து உன் சேனையை திரட்டிக் கொண்டு வா! நாம் சீதையை தேடிச் செல்வோம் என்றார். பிறகு அங்கதன் இராமனின் திருவடியில் விழுந்து வணங்கினான். இராமர் அங்கதனிடம், அங்கதா! நீ பண்புள்ளவனாக, ஒழுக்கமுள்ளவனாக நடந்து கொள்ள வேண்டும். இளவரசனுக்கு உரிய பெருமையை பாதுகாத்து கொள்ள வேண்டும். சுக்ரீவனை உன் சிறிய தந்தை என நினைக்காமல், உன் தந்தை போலவே பாவித்து மரியாதையுடன் மதித்து நடக்க வேண்டும் என அறிவுரைக் கூறினார். பிறகு சுக்ரீவன் இராமனிடம் தன்னுடன் வந்து அரண்மனையில் தங்கும்படி வேண்டினான். ஆனால் இராமர், நான் தவக்கோலம் பூண்டுள்ளதால் அரண்மனையில் வாழ்வது முறையாகாது. ஆதலால் என்னால் உன்னுடன் வர இயலாது எனக் கூறினார். இராமர் தவக்கோலம் பூண்டுள்ளதால் அவரை மறுத்து சுக்ரீவன் எதுவும் கூறவில்லை. சுக்ரீவன் இராமரின் பிரிவை எண்ணி மிகவும் வருந்தினான். பிறகு இராமரையும், இலட்சுமணரையும் பிரிய மனமின்றி கண்களில் கண்ணீர் தழும்ப விடை கொடுத்து கிஷ்கிந்தை நோக்கி புறப்பட்டான். சுக்ரீவனும், அங்கதனும் அரண்மனைக்கு சென்று, தாரையின் திருவடியில் விழுந்து வணங்கினார்கள்.
இராமர் அனுமனிடம், வீரனே! நீ சுக்ரீவனுக்கு துணையாக அவர்களுடன் சேர்ந்து இரு என்றார். அனுமன், பெருமானே! தங்கள் அடியேன், தங்களுடன் இருந்து சேவைபுரிய விரும்புகிறேன் என்றான். இராமன், அனுமனே! வாலி நாட்டை வலிமையுடனும், திறமையுடனும் ஆண்டு வந்தான். வாலியின் மறைவுக்கு பின் சுக்ரீவன் அரசனாக முடிசூட்டி உள்ளான். சுக்ரீவனின் ஆட்சியில் யாரெனும் நாட்டை கைப்பற்றக் கூடும். ஆதலால் நீ சுக்ரீவனுக்கு துணையாக அவனுடம் இரு என்று கூறினார். மழைக்காலம் முடிந்து எனக்கு சுக்ரீவனுடன் உதவி புரிய வருவாயாக எனக் கூறினார். இராமரின் ஆணையை மீற முடியாத அனுமன் இராமரை வணங்கிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றான்.
சுக்ரீவன் தனது அமைச்சர்கள், அண்ணன் வாலியின் மனைவியான தாரையின் அறிவுரைகளின்படி நாட்டை நெறி தவறாமல் ஆட்சி புரிந்து வந்தான். இளவரசனாக முடிசூட்டிக் கொண்ட அங்கதன், தன் நகரத்தை கண்ணும் கருத்துமாக ஆண்டு வந்தான். அனுமனை நாட்டுக்கு அனுப்பிவிட்டு, இராமரும் இலட்மணரும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் பிரஸ்ரவண மலை என்னும் மலைபகுதியை அடைந்தனர். அங்கு அவர்கள் ஒரு குகையில் வாழ்ந்தனர். மழைக்காலமும் வந்தது. சுக்ரீவன் தன் மனைவி ருமாதேவியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தான். அனுமன் மக்களுக்கு நீதி நெறிகளை பரப்பிக் கொண்டு இருந்தான். அங்கதனும் நீதி தவறாமல் நகரத்தை ஆட்சி செய்தான்.
கார்மேகம் சூழ்ந்தது. இடியும், மின்னலுமாக மழை பெய்தது. மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இராமர் சீதையை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டு இருந்தார். இலட்சுமணர் இராமரை சமாதானம் செய்தார். காற்றும் மழையினால் வெளியில் எங்கும் போகாத நிலை இராமருக்கு. சீதை இப்பொழுது என்ன துன்பத்தை அனுபவித்துக் கொண்டு இருக்கிறாளோ என வருந்தினார் இராமர். இராமருக்கு சீதையின் பிரிவும், தனிமையும் பெரும்துன்பத்தை ஏற்படுத்தியது. இலட்சுமணன் இராமனுக்கு ஆறுதல் சொல்வதால் இராமரின் மனம் சாந்தம் அடைந்தது. கார்காலம் ஒருவழியாக முடிந்தது. வெயில் படர தொடங்கியது. வானம் தெளிவடைந்து வெளிச்சத்தைக் கொண்டு வந்தது.
இராமரும் இலட்சுமணரும் குகையைவிட்டு வெளியே வந்தனர். கார்காலம் முடிந்து தன் படைகளுடன் வருவதாக சொன்ன சுக்ரீவன் வராததால் கோபமடைந்த இராமர் இலட்சுமணனிடம், தம்பி இலட்சுமணா! சுக்ரீவன் கொடுத்த வாக்குறுதியை மறந்து விட்டான். கார்காலம் முடிந்து வருவதாக சொன்ன சுக்ரீவன் இன்னும் திரும்பி வரவில்லை. அவன் நட்பையும், நன்றியையும் மறந்து அரச வாழ்வில் மூழ்கி விட்டான் போலும். நன்றியை மறந்தவனை கொல்வது கூட தவறில்லை. வாலியை கொல்ல என்னிடம் உதவியை நாடினான். நம்மை கொல்ல வேறு ஒருவரிடம் கூட உதவியை நாடலாம். அப்படி இருந்தால் இவ்வுலகில் வானரங்கள் இல்லாதவாறு நான் செய்து விடுவேன்.
நீ கிஷ்கிந்தைக்கு சென்று அவனின் மனநிலையை அறிந்து வா. உன் கோபத்தில் அவனை ஒன்றும் செய்து விடாதே. கிஷ்கிந்தையில் அவன் மனநிலை மாறிருந்தால் என்னிடம் வந்து சொல். நீ கிஷ்கிந்தை சென்று வருவாயாக என்று இலட்சுமணருக்கு விடைக் கொடுத்தார். இலட்சுமணரும் விடைப்பெற்று கிஷ்கிந்தை நோக்கி புறப்பட்டுச் சென்றார்.
தொடரும்.....
0 Comments