இராமாயணம் பகுதி - 40 - RAMAYANAM PART - 40


இராமாயணம் பகுதி - 40


இராமாயணம் பகுதி - 40 - RAMAYANAM PART - 40

மன்னா! சுக்ரீவனுக்கு துணையாக இராமன் என்பவர் வந்துள்ளதாக நம் அன்புக்கு உரியவர்கள் கூறினார்கள். அவரை வெல்ல எவராலும் முடியாது. ஆகையால் தாங்கள் செல்ல வேண்டாம் என்றாள் தாரை. நீ என்ன சொல்கிறாய். இராமர் சுக்ரீவன் உடன் உறவு கொண்டு உள்ளாரா? இராமர் அறவழியில் நடப்பவர். ஒருவேளை இராமர் சுக்ரீவன் உடன் இருந்தால் இராமருக்கு கிடைக்கபோகும் பலன் தான் என்ன? தன் தாயின் கட்டளையால் நாட்டை தம்பி பரதனுக்கு தந்துவிட்டு, இராமர் வனம் வந்துள்ளார். உலகையே எதிர்த்து நின்றாலும் வெற்றி பெறுபவர், இராமர். அவர் கையில் பெரிதும் துணையாக கோதண்டம் உள்ளது. அவருக்கு உறுதுணையாக அவரின் தம்பி இலட்சுமணர் உள்ளார். இதற்கு மேல் வேறென்ன துணை வேண்டும். அவருக்கு அவர் சூரிய குலத்தவர், நாம் வானரங்கள். அதுவும் சுக்ரீவனிடம் ஏன் அவர் நட்பு கொள்ள வேண்டும். தம் தம்பிகள் மீது மிகவும் அன்புக் கொண்ட, அத்தகைய இராமர் எங்களின் சண்டைக்கு இடையில் வருவாரா? நிச்சயம் வரமாட்டார். இவ்வளவு சிறப்பு வாய்ந்த இராமரை தவறாக எண்ணி விடாதே. நான் சீக்கிரம் சென்று சுக்ரீவனின் உயிரை எடுத்துவிட்டு வருகிறேன் என்று மனைவி தாரையிடம் சொல்லிவிட்டு புறப்பட்டார். தாரை, இதற்குமேல் இவரிடம் பேசி ஒரு பயனும் இல்லை என நினைத்து அமைதியாக இருந்தாள். வாலி தன் தம்பி சுக்ரீவனை தேடிக் கொண்டு சோலைக்கு அருகில் உள்ள மலைக்கு வந்தான்.

அங்கு சுக்ரீவன் வாலிக்காக காத்து கொண்டு இருந்தான். பிறகு இருவரும் சண்டையிட தொடங்கினர்.

ஓர் இடத்தில் சண்டையிடாமல் சுழன்று சுழன்று சண்டையிட்டார்கள். இராமர் இலட்சுமணனிடம், தம்பி! பார்த்தாயா இருவரும் இரு சிங்கங்கள் போல கர்ஜித்து கொண்டு சண்டை போடுகிறார்கள் என்றார். ஆனால் இலட்சுமணர், அண்ணனை காத்து துணைபுரிவதே தம்பியின் கடமையாகும். ஆனால் இங்கு அண்ணன் தம்பி இருவரும் சண்டை போட்டு கொண்டு இருக்கிறார்கள் எனக் கூறி மனம் வருந்தினார். அதற்கு இராமர், தம்பி இலட்சுமணா! தம்பி பரதனை போல் உயர்ந்த பண்புடையவர் எவரெனும் உள்ளார்களா? ஆனால் இவர்கள் புரிதல், பொறுமை இன்றி சண்டை போட்டு கொண்டு இருக்கிறார்கள் என்றார்.

அவர்களின் சண்டை வெகுநேரம் நடந்தது. வாலியால் சுக்ரீவன் மிகுந்த அடிப்பட்டான். பிறகு சுக்ரீவன் இராமரிடம் வந்து, பெருமானே! நான் என்ன தவறு செய்தேன். அண்ணன் வாலி என்னை அடித்துக் கொண்டே இருக்கிறார். ஆனால் தாங்கள் ஒன்றும் செய்யாமல் அமைதியாகவே உள்ளீர்கள் என வலி தாங்க முடியாமல் கேட்டான். இதற்கு இராமர், தம்பி! சுக்ரீவா, எனக்கு உங்கள் இருவர்களில் யார் வாலி யார் சுக்ரீவன் என வேற்றுமை தெரியவில்லை. அதனால் தான் நான் பாணத்தை தொடுக்காமல் அமைதியாக இருந்தேன் என்றார். இந்த பூமாலையை நீ அணிந்து கொண்டு சண்டையிடு. இந்த பூமாலை உனக்கு வெற்றி மாலையாக அமையும். நான் எளிதாக வேற்றுமை அறிந்து வாலியை வதம் செய்வேன் என்றார்.

சுக்ரீவன் பூமாலையை வாங்கி கழுத்தில் போட்டுக் கொண்டு மறுபடியும் வாலியுடன் சண்டையிட சென்றான்.

மறுபடியும் தன்னிடம் சுக்ரீவன் சண்டையிட வருவதை கண்ட வாலி மிகவும் கோபம் அடைந்தான். அதனால் சுக்ரீவனை பலமாக அடித்தான். வாலியின் பலமான அடியால் சுக்ரீவன் உயிர்போகும் நிலைக்கு வந்தான். அப்போது இராமர் ஒரு மரத்தின் மறைவில் நின்றுக் கொண்டு வாலியை நோக்கி பாணத்தை பூட்டிக் கொண்டு இருந்தார். சுக்ரீவன் என்ன செய்வதென்று திகைத்து நின்றான். அப்போது வாலி சுக்ரீவனை பார்த்து இப்போதே உன்னை கொன்று விடுகிறேன் என்று சொல்லி சுக்ரீவனை தன் தலைக்கு மேலே தூக்கினான். அப்போது இராமர் வாலியை நோக்கி பாணத்தை எய்தினார். இராமனின் பாணம் வாலியின் மார்பில் பாய்ந்தது.

இராமனின் பாணம் வாலியின் மார்பில் துளைத்தது. வாலி மயங்கி கீழே விழுந்தான். பிறகு சிறிது மயக்கம் தெளிந்த வாலி தன் மார்பில் அம்பு துளைத்தை பார்த்து மிகவும் கோபமுற்றான். வாலி கோபத்தில், என் மீது அம்பு எய்தியவரை நான் உயிரோடு விடமாட்டேன். இவ்வுலகை அழிப்பேன் என உரைத்தான். பிறகு வாலி என் மீது அம்பை தொடுத்தவர் யாராக இருப்பார்கள். தேவர்களாக இருப்பார்களா? ஆனால் தேவர்களுக்கு இந்த அளவுக்கு வலிமை உள்ளதா என எண்ணினான். வாலி தன் மார்பில் பாய்ந்த அம்பை எடுக்க முயற்சித்தான். எவ்வளவு முயன்றும் அந்த அம்பை அவனால் வெளி கொண்டு வர முடியவில்லை. இதனால் அவன் மனம் வருந்தினான். அவன் கோபத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் சிரித்தான். அவன் மார்பில் இருந்து இரத்தம் ஆறு போல் பெருகியது.

இதனை பார்த்துக் கொண்டிருந்த சுக்ரீவன், அண்ணன் மீது கொண்ட பாசத்தில் அழுது கீழே விழுந்தான். பிறகு வாலி மார்பின் மீது பாய்ந்த அம்பில் உள்ள பெயரை பார்த்தான். அதில் ராம் என எழுதப்பட்டிருந்தது. இதனை பார்த்த வாலி மிகவும் அதிர்ச்சி அடைந்தான். தருமநெறியில் நடக்கும் இராமனா இச்செயலை செய்தது. தாரையிடம் இராமனை பற்றி பெருமையாக பேசி அவளை கடிந்துவிட்டு வந்தேனே என நினைத்து ஏளனமாக சிரித்தான். ரகு குலத்தில் பிறந்த இராமர் தவறே செய்யாத என்மீது அம்பு எய்தியது எதற்காக? தசரதரின் புதல்வர் இராமர் நீதிநெறி தவறலாமா? இராமனின் இச்செய்கையை பார்த்து ஏளனமாக சிரித்தான். பிறகு அம்பு வந்த திசையை உற்று பார்த்தான். இராமர் வாலியை நோக்கி வந்துக் கொண்டு இருந்தார்.

வாலி முன் இராமர் வந்து நின்றார். ஒளிவீசும் தோற்றத்தோடும், கையில் வில் ஏந்தி வந்த இராமரை பார்த்தான் வாலி. மிகவும் கோபம் கொண்ட வாலி இராமரிடம், என் மீது அம்பை எதற்காக துளைத்தாய்? நான் உனக்கு என்ன தவறு செய்தேன்? எல்லோருக்கும் தீமையை அகற்றி நன்மை செய்யும் நீ எனக்கு இத்தகைய தீங்கு விளைவிக்க காரணம் என்ன? இராமா! வாய்மையும், மரபையும் காக்கும் தசரதனின் புதல்வனா நீ? இராகவா! உத்தம குணமிக்க பரதனின் அண்ணனா நீ! வசிஷ்ட முனிவரிடம் கற்ற கல்வியை நீ மறந்து விட்டாயா? அரக்கர்களை அழித்து முனிவர்களை காத்தாய். என்னை அழித்து நீ யாரை காக்க போகிறாய்? அன்னம் போன்ற உன் மனைவி சீதா தேவியை பிரிந்த பிறகு உனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லையா?

ஓர் அரக்கன் உன் மனைவியை கவர்ந்து சென்றதால் குரங்கினத்தின் அரசனாகிய என்னை வதம் செய்வதா? இராமா! உன்னிடத்தில் இருந்த அன்பும், பாசமும் எங்கே போனது? வேந்தனே! நாட்டை உன் தம்பி பரதனுக்கு கொடுத்துவிட்டு, இக்கானகத்துக்கு வந்த நீ, என்னை கொன்றுவிட்டு அரசை தம்பி சுக்ரீவனிடம் கொடுக்கத்தான் இவ்வாறு செய்தாயா? ஓர் உயிரை காக்கும் நீ, ஓர் உயிரை எடுப்பது அதர்மத்திற்கு சமமாகும். எந்த ஒரு வீரனும் பின் நின்று அம்பு எய்த மாட்டான். இதிலிருந்து தெரிகிறது நீ எத்தகைய வீரன் என்று. இன்று நீ அறநெறிப்படி நடக்கவில்லை.

சுக்ரீவன் அழைத்ததால் இங்கு வந்து சண்டையிட்டு கொண்டு இருந்த என்னை இக்கதிக்கு ஆளாக்கிவிட்டாய். இது உனக்கு நியாயமாகப்படுகிறதா? நீ என்னை கொன்று என்ன சாதிக்க போகிறாய். நேருக்குநேர் என்னிடம் சண்டை போடாமல் பின் நின்று என் மீது அம்பு எய்திய உன்னை மக்கள் பாராட்டுவார்களா? இல்லை தூற்றுவார்களா? நீ வில்வித்தையில் சிறந்தவன் என்று கூறுகிறார்கள். நீ பின் நின்று அம்பு எய்துவது தான் உன் வில்வித்தையின் சிறப்பா? என்று கேட்டான் வாலி.

தொடரும்.....

Post a Comment

0 Comments