மாணிக்கவாசகர் - MANIKKAVASAGAR


மாணிக்கவாசகர்


மாணிக்கவாசகர் - MANIKKAVASAGAR

திருவாதவூரார் பாண்டிய நாட்டில் சம்புபாத சரிதருக்கும், சிவஞானவதிக்கும் மகனாகப் பிறந்தார். இவர் கல்வி கேள்விகளில் சிறந்து, மன்னன் அரிமர்த்தன பாண்டியனுக்கு அமைச்சராகப் பதவி அமர்ந்தார். அரிமர்த்தன பாண்டியன் மதுரையை இருப்பிடமாகக் கொண்டு ஆண்டுவந்தான். தன் புலமையால் தென்னவன் பிரமராயன் எனும் பட்டத்தையும் பெற்றார்.

உயர்ந்த பதவி, செல்வம், செல்வாக்கு எல்லாம் இருந்தபோதும் இவை வாழ்வின் இறுதி நோக்கமல்ல என்பதை உணர்ந்த திருவாதவூரார் சைவசித்தாந்தத்தை ஆராய்ந்து சிவ வழிபாடு மேற்கொண்டு ஒழுகி வரலானார்.சுந்தரருக்குப் பிற்பட்ட காலத்தவர் மாணிக்கவாசகர் என்பது ஆய்வாளர்கள் கருத்து. எனினும் மாணிக்கவாசகர் தேவார மூவருக்கும் முற்பட்டவர் என்றும் சிலரால் கருதப்படுகிறது.

ஒருமுறை மன்னனுக்குச் சோழநாட்டில் நல்ல குதிரைகள் வந்திருக்கின்றன என்று கேள்விப்பட்டு, அமைச்சர் மாணிக்கவாசகரிடம் பொன் கொடுத்து, அந்தக் குதிரைகளை வாங்கி வரும்படி பாண்டிய மன்னன் பணித்தான். மாணிக்கவாசகர், பொன்னோடு திருப்பெருந்துறையை  அடைந்தார். அங்கே, இருந்த குருந்த மரத்தின் அடியில் சிவபெருமானே குருவடிவு எடுத்து அமர்ந்திருந்தார். அவர்முன் சென்று மாணிக்கவாசகர் பணிந்தார். குருவின் திருக்கரத்தில் இருப்பது என்னவென்று மாணிக்கவாசகர் கேட்க, அவர் சிவஞான போதம் என்றார்.

சிவம் என்பதும், ஞானம் என்பதும், போதம் என்பதும் யாது? அடியேனுக்கு இவற்றைப் போதித்தால் நான் உமது அடிமையாவேன் என்றார் பக்குவமடைந்திருந்த மாணிக்கவாசகர். சிவஞானத்தை அவருக்குப் போதித்துத் திருவடி தீட்சையும் கொடுத்தார் குருமூர்த்தி வடிவத்தில் வந்த சிவபிரான்.

தன் மந்திரி கோலத்தை அகற்றிக் கோவணம் பூண்டு, வாய்பொத்திக் குருவின் முன் வாய்பொத்தி நின்ற மாணிக்கவாசகரை, அவருடன் வந்த அரசனின் சிப்பந்திகள் அழைத்தனர். உடன் செல்ல மறுத்துவிட்டார் மாணிக்கவாசகர்.

பாண்டியன் ஒற்றர்களிடம் திருமுகம்  கொடுத்துக் கையோடு மாணிக்கவாசகர் அழைத்துவரக் கட்டளையிட்டான். குருமூர்த்தியின் திருமுகம் கண்ட கண்ணால் வேறொரு திருமுகம் காண்பதில்லை என்று கூறி மாணிக்கவாசகர் அதனைக் குருவிடமே கொடுத்துவிட்டார். அதைப் படித்த குருமூர்த்தி, ஒரு மாணிக்கக் கல்லை ஒற்றர் கையில் கொடுத்துக் குதிரைகள் வர நல்ல நாளில்லை. ஆவணிமாத மூல நட்சத்திர நாளன்று மதுரைக்குக் குதிரைகள் வந்து சேருமென்று போய்ச் சொல் என்று அரசனிடம் திருப்பி அனுப்பினார்.

சொன்ன நாளும் அருகில் வந்துகொண்டிருந்தது. ஆனால் குதிரைகள் வருவதாகக் காணோம். மன்னனுக்குக் கோபம் வந்தது. மீண்டும் ஒற்றர்களிடம் குதிரைகள் இருக்குமிடத்தை அறிந்துகொண்டு வரச்சொல்லி அனுப்பினான். அவர்கள் எங்குமே குதிரைகள் தென்படவில்லை என்ற செய்தியோடு திரும்பினர்.

ஆவணி மூலமும் வந்தது. குதிரைகள் வரவில்லை. 'இன்றைக்குள் குதிரைகள் வராவிட்டால் உம்மை வெயிலில் நிறுத்துவேன்' என்று கூறிப் பாண்டிய மன்னன் மாணிக்கவாசகரை எரிக்கும் வெயிலில் நிறுத்தினான். அதற்கும் மாணிக்கவாசகர் அசையவில்லை. இரும்புக் கிட்டியால்  இறுக்கினர். மாணிக்கவாசகர் சிவனைத் தஞ்சம் அடைந்தார்.

உடனே சிவபெருமானின் சிவகணங்களைக் குதிரை வீரர்களாகவும், நரிகளைக் குதிரைகளாகவும் மாற்றி மதுரைக்கு அனுப்பி, தாமே அதற்குத் தலைவராக நடத்தி வந்தார். இதனாலே, இறைவனுக்குப் பரிமேலழகர் எனும் கரணியப் பெயர் ஏற்பட்டது. ஏராளமான உயர் ரகக் குதிரைகள் மதுரையை நோக்கி வரும் செய்தியை ஒற்றர்கள் மன்னனுக்குச் சொல்லவே அவன் மகிழ்ந்து அமைச்சரைப் போற்றினான்.

குதிரை அணிவகுப்புத் தலைவன் அரசனிடம் குதிரைகளை முன்னும் பின்னும் நடத்தி, அவற்றின் உறுப்புச் சிறப்பைக் கூறி, இவை உன்னுடையவை' என்று கூறி ஒப்படைத்தான். விலைகூடிய பீதாம்பரம் ஒன்றை அரசன் அவனுக்குப் பரிசாக அளித்தான். அவனோ அதைத் தன் சவுக்கினால் வாங்கிக் குதிரையின் மேல் போட்டுவிட்டு விடைபெற்றான். அன்றிரவே குதிரைகள் மீண்டும் நரியாக மாறி, முதலில் அந்தக் கொட்டடியில் இருந்த குதிரைகளையும் கடித்துவிட்டு ஓடின. இதை அறிந்த அரிமர்த்தன பாண்டியன் மிகவும் கோபம் கொண்டான். கொடுத்த பொன்னையெல்லாம் திருப்பித் தரும்வரை திருவாதவூராரை வைகையாற்று சுடுமணலில் நிறுத்தி வைக்குமாறு கூறினான்.

சிவபெருமானுக்கு அடியவரின் துன்பம் பொறுக்கவில்லை. கங்கையை வைகையில் பெருக்கெடுக்கச் செய்கிறார்.கரையை உடைத்துக்கொண்டு ஆறு பெருக்கெடுக்கத் தொடங்கிவிட்டது. உடனே பாண்டியன் வீட்டுக்கு ஓர் இளைஞன் வந்து கரையை அடைக்கவேண்டும் என்று முரசு அறைவிக்கிறான். வந்திக் கிழவி எனும் ஒரே ஒருத்தி மட்டும் வீட்டிலும் யாருமில்லாமலும், ஏவலாளரும் இல்லாமல் யோசித்துக் கொண்டிருக்கையில் சிவபெருமானே ஓர் இளைஞன் வடிவில் வந்தியிடம் வந்து வேலை செய்யட்டுமா ? என்று கேட்கிறார். செய், ஆனால் நான் கூலியாக உதிர்ந்த பிட்டு மட்டுமே தருவேன் என்று வந்தி கூறுகிறாள். அதற்கு உடன்பட்ட சிவபெருமான் தனது வேலையைத் தொடங்குகிறார்.

அன்றைக்குப் பார்த்து வந்திக்கு எல்லாப் பிட்டும் உதிர்ந்து போகிறது. இளைஞன் மூக்கு முட்டச் சாப்பிட்டுவிட்டு, மரநிழலில் துண்டை விரித்துத் தூங்குகிறான். மன்னன் வந்து பார்க்கிறான். கரையில் மற்றவர் பங்குகள் அடைபட்டிருக்கின்றன. வந்தியின் பகுதி உடைந்தே கிடக்கிறது. கோபம் கொண்ட அரசன் கூலியாளைப் பிரம்பால் அடித்தான். கூலியாளோ ஒரு கூடை மண்ணை உடைப்பில் கொட்ட, அது மாயமாகச் சரியாகிவிட்டது. அவன் மறைந்து போனான். ஆனால் அவன் மீது பட்ட பிரம்படி உலகெல்லாம் உள்ள அனைத்து உயிர்களின் மேலும், கருவில் இருந்த குழந்தை மீதும், படவே பாண்டியன் கலங்கிப் போனான்.

அப்போது சிவபிரானின் குரல் அசரீரியாய்க் கேட்டது, 'மன்னவா! வாதவூராரின் பொருட்டு இத்திருவிளையாடலை நாம் செய்தோம். இதனை அறியாது நீ கோபம் கொண்டாய்' என்று அக்குரல் சொல்லிற்று. மன்னன் மீண்டும் வாதவூரடிகளைத் தனக்கு மந்திரியாக இருக்க வேண்டினான். அவருக்கு அந்த ஆசை சிறிதும் இல்லாமையால், சிவத்தலங்களுக்குச் சென்று பாடித் துதித்துப் பின் திருச்சிற்றம்பலம் எனப்படும் சிதம்பரத்துக்கு வந்தார்.

சிதம்பரத்திலும் சிவபிரான் மாணிக்கவாசகர் முன்னர் ஒரு வேதியர் போல வந்தார். அவரை வரவேற்று வணங்கி தாங்கள் யாரோ?' என்று வாதவூரார் கேட்டார். நான் பாண்டி நாட்டைச் சேர்ந்தவன். உமது புகழைக் கேட்டு நீர் பாடிய பதிகங்களை ஓத வந்தேன்' என்று அந்தணர் கூறினார்.

நான் சொல்கிறேன், நீர் அவற்றை எழுதும் என்று கூறினார் திருவாதவூரார். அதற்கு ஒப்புக்கொண்ட அந்தணர் பலப்பல செய்யுட்களை எழுதி முடித்தார். இறுதியில் திருச்சிற்றம்பலமுடையார் மீது ஒரு கோவைப் பிரபந்தம் பாடவேண்டும் என்று வேண்டினார். வாதவூரடிகளும் பாடி முடித்தார். முடித்ததும், ஓலைச்சுவடியின் முடிவில் மாணிக்கவாசகன் சொற்படி அம்பலவாணன் என்று கையொப்பமிட்டுத் திருமுறையைக் கோவிலின் திருவாயிற்படியில் வைத்து மறைந்தார். அதைப் பார்த்த ஒருவர் அவ்வேடுகளை எடுத்துப் பார்க்க, அது திருவாசகமும் திருக்கோவையும் கொண்ட சுவடியாய் இருந்தது. மிகவும் மனம் மகிழ்ந்த அவர் தில்லை மூவாயிரவரைக் கூட்டிப் பூசைகள் செய்தார். மூவாயிரவர் நடந்த நிகழ்ச்சிகளின் பொருள் என்ன என்று வாதவூராரைக் கேட்டனர். அவர்கள் அனைவரையும் திருச்சிற்றம்பலத்துக்கு அழைத்துச் சென்ற வாதவூரார் பொருள் இதுவே என்று கூறித் தில்லையம்பலத்தைக் காட்டி மறைந்தார்.

மாணிக்கவாசகர் வாழ்ந்த காலகட்டம் 9 ஆம் நூற்றாண்டு என்றும் 13 அல்லது 14 ஆம் நூற்றாண்டு காலகட்டம் என்றும் இருவேறு கருத்துகள் உள்ளன.

மாணிக்கவாசகரின் பணிகள்

பெருகும் வையை தனை அழைப்பிக்குமே 
பிரம்படிக்கு பிரான் மேனி கன்றுமே 
நரியெல்லாம் பரியாக நடத்துமே 
நாடி மூகைதனைப் பேசுவிக்குமே 
பரிவிற் பிட்டுக்கு மண் சுமப்பிக்குமே 
பரமன் ஏடெழுதக் கோவை பாடுமே 
வருகும் புத்தரை வாதில் வெல்லுமே 
வாதவூரர் வழங்கிய பாடலே

என்று மாணிக்க வாசகரது அற்புதங்களை பழம் பாடலொன்று குறிப்பிடுகின்றது. மாணிக்கவாசகர் தேவாரமுதலிகளுக்குப் பிற்பட்ட காலத்தவர். கி.பி 9ஆம் நூற்றாண்டில் இரண்டாம் வரகுணபாண்டியனது (கி.பி 863- கி.பி 911) ஆட்சிக் காலப் பகுதியில் வாழ்ந்தவராகக் கருதப்படுகின்றார். அவர் அரிமர்த்தன பாண்டியனின் முதலமைச்சராகவும் விளங்கியவர்.

சைவ சமயப் பணிகள்

உயர் பதவி, செல்வம், செல்வாக்கு இவையெல்லாம் இருந்த போதிலும் இவை வாழ்வின் இறுதி நோக்கமல்ல என்பதை உணர்ந்த மாணிக்கவாசகர் சித்தத்தைச் சிவன்பால் கொண்டார். சிவனை எண்ணிப் பல சிவப்பணிகள் மேற்கொண்டார்.

தலயாத்திரை மேற்கொள்ளல்.

மாணிக்கவாசர் திருவாரூரில் இருந்து தில்லை வரை பல தரப்பட்ட சிவாலயங்களுக்கு தலயாத்திரை சென்று அங்கு எழுந்தருளியுள்ள இறைவனை வழிபட்டார். திருவாச கத்தில் 39 தலங்கள் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. இறுதியில் தில்லையில் தங்கி கூத்தப்பிரானது திருவடிகளை அடைந்தார்.

திருவாசகம், திருக்கோவையார் அருளல்.

மாணிக்கவாசகரது சைவ சமயப்பணிகளுள் சிறப்பானது அவர் நமக்களித்த திருவாசகமும் திருக்கோவையாருமாகும். மாணிக்கவாசகரது பாடல்களை அந்தணர் வடிவில் வந்த சிவபெருமான், மாணிக்கவாசகர் கூற எழுதி அருளினார். அதாவது "வாதவூரர் விளம்பிட அம்பலவன் எழுதியது" என்று வரையப்பட்டும் "அழகிய சிற்றம்பலமுடையான் என சிவபெருமான் ஒப்பமிட்டும் திருவாசக ஏட்டினை நிறைவு செய்திருந்தார். திருவாசகத்தில் சிவபுராணம் முதல் அச்சோபதிகம் ஈறான 51 பதிகங்கள் அமைந்துள்ளன. இவற்றுள் திருவம்மானை, திருவுந்தியார், திருவெம்பாவை, திருச்ச ஈழல், திருத்தெள்ளேணம், திருத்தோணோக்கம், திருப்பூவல்லி, திருப்பொற் சுண்ணம், திருப்பொன்னூஞ்சல் என்பன நாட்டுப்புறப் பெண்கள் பாடப்படும் பாடல்கள் வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார்

என்று போற்றத்தக்க அளவுக்கு திருவாசகப்பாடல்கள் எளிமை நயம் மிக்கவையாகக் காணப்படுகின்றன. இதன் பக்தி வெளிப்பாட்டினைக் கண்டு வியந்த இத்தாலி நாட்டைச் சார்ந்த கிறிஸ்தவப்பாதிரியரான ஐ.யூ.போப் அவர்கள் இதனைக் கற்று அதனை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்தார். 'தமிழ் பக்தியின் மொழி' என மேலை நாட்டவர்கள் வியந்து குறிப்பிடுவதற்கு இத் திருவாசமே காரணமாக அமைகின்றது. இதேபோன்று மாணிக்கவாசகர் இறைவனைத் (தில்லை நடராஜப் பெருமானை) தலைவனாகவும் தன்னைத் தலைவியாகவும் எண்ணி அன்பு கலந்துருகப் பாடிய பாடல்கள் திருக்கோவையார் ஆகும். இதனை திருச்சிற்றம்பலக் கோவையார் எனவும் சிறப்பித்து அழைப்பர். இது தமிழில் உள்ள கோவை நூல்களுக்கெல்லாம் தலை சிறந்ததாகப் போற்றப்படுகின்றது. மாணிக்கவாசகர் பாடிய திருவாசகம் 656 பாசுரங்களையும் திருக்கோவையார் 400 பாசுரங்களையும் கொண்டு எட்டாம் திருமுறையாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

சைவமே மேலானது என நிரூபித்தல்.

மாணிக்கவாசகர் தமது காலத்தில் வாழ்ந்த ஏனைய சமயத்தவர்களை வாதில் வென்று சைவசமய உண்மைகளே மேலானவை என நிரூபித்துள்ளார். தில்லைக்கு வருகை தந்த பௌத்த மன்னனும் பெளத்த குருமாரும் புத்தசமயமே மேலானது என வாதிட்டனர். மாணிக்கவாசகர் சைவசமய உண்மைகளை எடுத்துக் கூறி அவர்களை மௌனிகளாக்கினார். பின்னர் தமது தவறுகளை உணர்ந்த பௌத்த குருமார்களும் பௌத்த மன்னனும் சைவ சமயத்தைத் தழுவினர்.

சமூகப் பணிகள்

மாணிக்கவாசகர் சிவபெருமானது திருவருளுடன் குறிப்பிடத்தக்க சமூகப் பணிகளையும் ஆற்றியதை அறிய முடிகின்றது.

அடியவர்களின் பசியை நீக்கியமை.

அரிமர்த்தன பாண்டியனது முதலமைச்சராக விளங்கியபோது திருப்பெருந்துறையில் குதிரைகள் வாங்குவதற்காகச் சென்ற வாதவூரர், மன்னன் தமக்களித்த பொற்காசுகள் அனைத்தையும் சமூக நன்நோக்கில் நின்று சிவனடியார்களது பசியைப் போக்க உணவு வழங்கியது மட்டுமன்றி, திருமடங்கள் அமைக்கவும் செலவிட்டார்.

ஊமைப் பெண்ணைப் பேசவைத்தல்.

தில்லையில் சைவசமய உண்மைகள் சார்பாக வாதிட வந்த பெளத்த மன்னனின் மகளின் ஊமைத்தன்மையை இறை திருவருளினால் நீக்கி அவளைப் பேசச் செய்தமை என்பன இவரது சமூகப்பணிகளுக்குச் சான்றாகும்.

நன்றி 

Post a Comment

0 Comments