திருக்குறள் அதிகாரம் 50 - இடனறிதல் - IDANARITHAL


இடனறிதல் 


திருக்குறள் அதிகாரம் 50 - இடனறிதல் - IDANARITHAL


குறள் 491

தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும் 
இடங்கண்ட பின்னல் லது 

மு.வ விளக்க உரை - முற்றுகை செய்வதற்கு ஏற்ற இடத்தைக் கண்டபின் அல்லாமல் எச் செயலையும் தொடங்கக்கூடாது, பகைவரை இகழவும் கூடாது.

சாலமன் பாப்பையா விளக்க உரை - பகைவரை வளைத்து வெல்லும் இடத்தைக் காணும் முன் எந்தச் செயலையும் தொடங்க வேண்டா; பகைவரை அற்பர் என்று இகழவும் வேண்டா. 

கலைஞர் விளக்க உரை - ஈடுபடும் செயல் ஒன்றும் பெரிதல்ல என இகழ்ச்சியாகக் கருதாமல், முற்றிலும் சரியான இடத்தைத் தேர்ந்தெடுத்து அச்செயலில் இறங்க வேண்டும்.

குறள் 492

முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம் 
ஆக்கம் பலவுந் தரும் 

மு.வ விளக்க உரை - மாறுபாடு பொருந்திய வலிமை உடையவர்க்கும் அரணோடு பொருந்தி ஏற்படுகின்ற வெற்றியானது பல வகைப் பயன்களையும் கொடுக்கும். 

சாலமன் பாப்பையா விளக்க உரை - பகை உணர்வுகள் நிறைந்தும், ஆற்றலில் மிகுந்தும் இருப்பவர்க்குப் பாதுகாப்பான இடத்துள் இருப்பது பல பயன்களையும் தரும். 

கலைஞர் விளக்க உரை - வரும்பகையை எதிர்க்கும் வலிமை இருப்பினும், அத்துடன் அரணைச் சார்ந்து போரிடும் வாய்ப்பும் இணையுமானால் பெரும்பயன் கிட்டும். 

குறள் 493

ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து 
போற்றார்கண் போற்றிச் செயின் 

மு.வ விளக்க உரை - தக்க இடத்தை அறிந்து தம்மைக் காத்துக் கொண்டு பகைவரிடத்திற் சென்று தம் செயலைச் செய்தால், வலிமை இல்லாதவறும் வலிமை உடையவராக வெல்வர், 

சாலமன் பாப்பையா விளக்க உரை - பலம் இல்லாதவர் என்றாலும்கூட ஏற்ற இடத்தை அறிந்து, தம்மையும் காத்து, பகைவரோடு மோதுபவர், பலம் உள்ளவராய்ப் பகையை அழிப்பர். 

கலைஞர் விளக்க உரை - தாக்குதல் நடத்துவதற்குரிய இடத்தையும் தேர்ந்து, தம்மையும் காத்துக்கொண்டு பகைவருடன் மோதினால் வலிமையில்லாதவர்க்கும் வலிமை ஏற்பட்டு வெற்றி கிட்டும். 

குறள் 494

எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து 
துன்னியார் துன்னிச் செயின் 

மு.வ விளக்க உரை - தக்க இடத்தை அறிந்து பொருந்தியவராய்ச் செயலைச் செய்வாராயின், அவரை வெல்ல எண்ணியிருந்த பகைவர் தம் எண்ணத்தை இழந்துவிடுவார். 

சாலமன் பாப்பையா விளக்க உரை - ஏற்ற இடத்தை அறிந்து அதைச் சூழ்ந்து செயல் செய்வார் என்றால், அவரை வெல்ல எண்ணிய பகைவர். அவ் எண்ணத்தில் தோல்வி அடைவர். 

கலைஞர் விளக்க உரை - ஏற்ற இடமறிந்து தொடர்ந்து தாக்கினால் பகைவர்கள், வெற்றி என்பதை நினைத்துக்கூடப் பார்க்க மாட்டார்கள். 

குறள் 495 

நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின் 
நீங்கின் அதனைப் பிற 

மு.வ விளக்க உரை - ஆழமுள்ள நீரில் முதலை மற்ற உயிர்களை வெல்லும், ஆனால் நீரிலிருந்து விலகிவந்தால் அந்த முதலையையும் மற்ற உயிர்கள் வென்றுவிடும். 

சாலமன் பாப்பையா விளக்க உரை - முதலை நீரில் வெற்றி பெறும்; நீரைவிட்டு வெளியே வந்தால் அதனை மற்றவை வெல்லும். 

கலைஞர் விளக்க உரை - தண்ணீரில் இருக்கும் வரையில்தான் முதலைக்குப் பலம்; தண்ணீரைவிட்டு வெளியே வந்து விட்டால் ஒரு சாதாரண உயிர்கூட அதனை விரட்டி விடும். 

குறள் 496

கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் 
நாவாயும் ஓடா நிலத்து 

மு.வ விளக்க உரை - வலிய சக்கரங்களையுடைய பெரியத் தேர்கள் கடலில் ஓடமுடியாது, கடலில் ஓடுகின்ற கப்பல்களும் நிலத்தில் ஓடமுடியாது. 

சாலமன் பாப்பையா விளக்க உரை - வலிய சக்கரங்களை உடைய நெடிய தேர்கள் கடலில் ஒடமாட்டா; கடலில் ஓடும் கப்பல்கள் நிலத்தில் ஓடமாட்டா. 

கலைஞர் விளக்க உரை - ஒரு செயலுக்குரிய இடத்தைத் தேர்ந்தெடுப்பவர் `தேர் கடலிலே ஓடாது’ `கப்பல் நிலத்தில் போகாது’ என்பதையாவது தெரிந்தவராக இருக்க வேண்டும். 

குறள் 497 

அஞ்சாமை யல்லால் துணைவேண்டா எஞ்சாமை 
எண்ணி யிடத்தாற் செயின் 

மு.வ விளக்க உரை - (செய்யும் வழிவகைகமைக்) குறைவில்லாமல் எண்ணித் தக்க இடத்தில் பொருந்திச் செய்தால், அஞ்சாமை அல்லாமல் வேறு துணை வேண்டியதில்லை. 

சாலமன் பாப்பையா விளக்க உரை - செய்யும் செயலை இடைவிடாமல் எண்ணி, இடம் அறிந்து செயதால், பகைக்குப் பயப்படாத மனஉறுதி போதும்; வேறு துணை தேவை இல்லை. 

கலைஞர் விளக்க உரை - ஒரு செயலுக்குரிய வழி முறைகளைக் குறையின்றிச் சிந்தித்துச் செய்யுமிடத்து, அஞ்சாமை ஒன்றைத் தவிர, வேறு துணை தேவையில்லை. 

குறள் 498 

சிறுபடையான் செல்லிடஞ் சேரின் உறுபடையான் 
ஊக்கம் அழிந்து விடும் 

மு.வ விளக்க உரை - சிறிய படை உடையவனுக்குத் தக்கதாக உள்ள இடத்தில் பொருந்தி நின்றால், பெரிய படை உடையவன் தன் ஊக்கம் அழிவான். 

சாலமன் பாப்பையா விளக்க உரை - பெரிய படையை உடையவன், சிறிய படையை உடையவன் ஓடி இருக்கும் இடந்தேடிப் போனால், போனவனின் பெருமை அழியும். 

கலைஞர் விளக்க உரை - சிறிய படை என்றாலும் அது தனக்குரிய இடத்தில் இருந்து போரிட்டால் பெரிய படையை வென்று விட முடியும். 

குறள் 499 

சிறைநலனுஞ் சீறும் இலரெனினும் மாந்தர் 
உறைநிலத்தோ டொட்ட லரிது 

மு.வ விளக்க உரை - அரணாகிய நன்மையும் மற்றச் சிறப்பும் இல்லாதவராயினும் பகைவர் வாழ்கின்ற இடத்திற்குச் சென்று அவரைத் தாக்குதல் அரிது. 

சாலமன் பாப்பையா விளக்க உரை - மனிதர்கள் வலிமையான கோட்டையும், மிகுந்த பலமும் இல்லாதவர்தாம் என்றாலும் அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று தாக்குவது கடினம். 

கலைஞர் விளக்க உரை - பாதுகாப்புக்கான கோட்டையும், மற்றும் பல படைச் சிறப்புகளும் இல்லாதிருப்பினும், அப்பகைவர் வாழும் நிலையான இடத்திற்குப் படையெடுத்துச் சென்று தாக்குவது எளிதான செயல் அல்ல.

குறள் 500 

காலாழ் களரின் நரியடுங் கண்ணஞ்சா 
வேலாள் முகத்த களிறு
 
மு.வ விளக்க உரை - வேல் ஏந்திய வீரரைக் கோர்த்தெடுத்த கொம்பு உடைய யானையையும், கால் ஆழும் சேற்று நில்த்தில் அகப்பட்ட போது நரிகள் கொன்றுவிடும். 

சாலமன் பாப்பையா விளக்க உரை - பாகனுக்கு அடங்காததும், தன்னை எதிர்த்துப் பிடித்த வீரனைத் தன் தந்தத்தால் தாக்கித் தூக்கியதுமான ஆண்யானை, கால் புதையும் சேற்றில் சிக்கிக் கொண்டால், நரிகூட அதைக் கொன்றுவிடும். 

கலைஞர் விளக்க உரை - வேலேந்திய வீரர்களை வீழ்த்துகின்ற ஆற்றல் படைத்த யானை, சேற்றில் சிக்கி விட்டால் அதனை நரிகள் கூடக் கொன்று விடும்.

நன்றி

Post a Comment

0 Comments