திருக்குறள் அதிகாரம் 37 - அவா அறுத்தல் - AVA ARUTHTAL


அவா அறுத்தல் 


திருக்குறள் அதிகாரம் 37 - அவா அறுத்தல் - AVA ARUTHTAL


குறள் 361  

அவாவென்ப எல்லா உயிர்க்குமெஞ் ஞான்றுந் 
தவாஅப் பிறப்பீனும் வித்து 

மு.வ விளக்க உரை - எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் ஒழியாமல் வருகின்ற பிறவித்துன்பத்தை உண்டாக்கும் வித்து அவா என்றுக் கூறுவர்.

சாலமன் பாப்பையா விளக்க உரை - எல்லா உயிர்களுக்கும், எந்தக் காலத்திலும் அழியாமல் வரும் பிறப்பை உண்டாக்கும் விதைதான் ஆசை என்று பெரியோர் கூறுவர். 

கலைஞர் விளக்க உரை - ஆசையை, எல்லா உயிர்களிடமும், எல்லாக் காலத்திலும் தவறாமல் தோன்றி முளைக்கும் விதை என்று கூறலாம்.

குறள் 362 

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது 
வேண்டாமை வேண்ட வரும் 

மு.வ விளக்க உரை - ஒருவன் ஒன்றை விரும்புவதனால் பிறவா நிலைமையை விரும்ப வேண்டும், அது அவா அற்ற நிலையை விரும்பினால் உண்டாகும். 

சாலமன் பாப்பையா விளக்க உரை - பிறவாமையை எப்போது விரும்புகிறோமோ அப்போது அந்த நிலை நமக்கு வர வேண்டும். ஆசையற்று இருப்பதை விரும்பும்போதுதான் அந்த நிலை நமக்கு உண்டாகும். 

கலைஞர் விளக்க உரை - விரும்புவதானால் பிறக்காமலே இருந்திருக்கவேண்டும் என்று ஒருவன் எண்ணுகிற அளவுக்கு ஏற்படுகிற துன்ப நிலை, ஆசைகளை ஒழிக்காவிடில் வரும். 

குறள் 363  

வேண்டாமை யன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை 
ஆண்டும் அஃதொப்ப தில் 

மு.வ விளக்க உரை - அவா அற்ற நிலைமை போன்ற சிறந்த செல்வம் இவ்வுலகில் இல்லை, வேறு எங்கும் அதற்க்கு நிகரான ஒன்று இல்லை. 

சாலமன் பாப்பையா விளக்க உரை - எந்தப் பொருளையும் விரும்பாமல் இருப்பது போன்ற சிறந்த செல்வம் இப்பூமியில் வேறு ஒன்று இல்லை; வான் உலகத்திலும் இதற்கு ஒப்பானது இல்லை. 

கலைஞர் விளக்க உரை - தீமை விளைவிக்கும் ஆசைகளை வேண்டாம் என்று புறக்கணிப்பதைப் போன்ற செல்வம் இங்கு எதுவுமில்லை; வேறு எங்கும் கூட அத்தகைய ஒப்பற்ற செல்வம் இல்லையென்றே கூறலாம். 

குறள் 364  

தூஉய்மை யென்ப தவாவின்மை மற்றது 
வாஅய்மை வேண்ட வரும் 

மு.வ விளக்க உரை - தூயநிலை என்றுக் கூறப்படுவது அவா இல்லா திருத்தலே யாகும், அவா அற்ற அத்தன்மை மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும். 

சாலமன் பாப்பையா விளக்க உரை - மனத்தூய்மை என்பது ஆசை இல்லாமல் இருப்பதே; ஆசை இல்லாமல் இருப்பதோ மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்.

கலைஞர் விளக்க உரை - தூய்மை என்பது பேராசையற்ற தன்மையாகும் அத்தூய்மை வாய்மையை நாடுவோர்க்கே வாய்க்கும். 

குறள் 365  

அற்றவ ரென்பார் அவாவற்றார் மற்றையார் 
அற்றாக அற்ற திலர் 

மு.வ விளக்க உரை - பற்றற்றவர் என்றுக் கூறப்படுவோர் அவா அற்றவரே, அவா அறாத மற்றவர் அவ்வளவாகப் பற்று அற்றவர் அல்லர்.

சாலமன் பாப்பையா விளக்க உரை - ஆசை இல்லாதவரே எதுவும் இல்லாதவர்; மற்றவரோ முழுவதும் இல்லாதவர் ஆகார். 

கலைஞர் விளக்க உரை - ஆசையனைத்தும் விட்டவரே துறவி எனப்படுவார் முற்றும் துறவாதவர், தூய துறவியாக மாட்டார். 

குறள் 366  

அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை 
வஞ்சிப்ப தோரும் அவா 

மு.வ விளக்க உரை - ஒருவன் அவாவிற்கு அஞ்சி வாழ்வதே அறம், ஏன் எனில் ஒருவனைச் சோர்வு கண்டுகொடுத்து வஞ்சிப்பது அவாவே. 

சாலமன் பாப்பையா விளக்க உரை - ஒருவனை வஞ்சித்துக் கெடுப்பது ஆசையே. அதனால் ஆசை உண்டாகி விடாமல் அஞ்சி வாழ்வதே அறம். 

கலைஞர் விளக்க உரை - ஒருவரை வஞ்சித்துக் கெடுப்பதற்குக் காரணமாக இருப்பது ஆசையேயாகும் எனவே, ஆசைக்கு அடிமையாகக் கூடாது என்ற அச்சத்துடன் வாழ வேண்டும். 

குறள் 367 

அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை 
தான்வேண்டு மாற்றான் வரும் 

மு.வ விளக்க உரை - ஒருவன் ஆசையை முழுதும் ஒழித்தால், அவன் கெடாமல் வாழ்வதற்கு உரிய நல்ல செயல் அவன் விரும்புமாறு வாய்க்கும். 

சாலமன் பாப்பையா விளக்க உரை - ஆசையை முழுவதுமாக அறுத்து ஒழித்து விட்டால், தான் விரும்பும் வண்ணமே அழியாமல் வாழ்வதற்கான செயல் உண்டாகும். 

கலைஞர் விளக்க உரை - கெடாமல் வாழ்வதற்குரிய நிலை, ஒருவன் விரும்புமாறு வாய்ப்பதற்கு, அவன் பேராசைக் குணத்தை முற்றிலும் ஒழித்தவனாக இருக்க வேண்டும். 

குறள் 368 

அவாவில்லார்க் கில்லாகுந் துன்பமஃ துண்டேல் 
தவாஅது மேன்மேல் வரும் 

மு.வ விளக்க உரை - அவா இல்லாதவர்க்குத் துன்பம் இல்லையாகும், அவா இருந்தால் எல்லாத் துன்பங்களும் மேலும் மேலும் ஒழியாமல் வரும். 

சாலமன் பாப்பையா விளக்க உரை - ஆசை இல்லாதவர்க்குத் துன்பம் வராது; இருப்பவர்க்கோ இடைவிடாமல், தொடர்ந்து துன்பம் வரும். 

கலைஞர் விளக்க உரை - ஆசை இல்லாதவர்களுக்குத் துன்பம் இல்லை ஆசை உண்டானால், அதைத் தொடர்ந்து துன்பமும் மேலும் மேலும் வந்து கொண்டிருக்கும். 

குறள் 369 

இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னுந் 
துன்பத்துள் துன்பங் கெடின் 

மு.வ விளக்க உரை - அவா என்று சொல்லப்படுகின்ற துன்பங்களுள் பொல்லாதத் துன்பம் கெடுமானால் இவ் வுலகில் இன்பம் இடையறாமல் வாய்க்கும். 

சாலமன் பாப்பையா விளக்க உரை - ஆசை எனப்படும் பெருந்துன்பம் இல்லாது போனால், இன்பம் இடைவிடாமல் வரும். 

கலைஞர் விளக்க உரை - பெருந்துன்பம் தரக்கூடிய பேராசை ஒழிந்தால் வாழ்வில் இன்பம் விடாமல் தொடரும். 

குறள் 370 

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே 
பேரா இயற்கை தரும் 

மு.வ விளக்க உரை - ஒருபோதும் நிரம்பாத தன்மை உடைய அவாவை ஒழித்தால் ஒழித்த அந்நிலையே எப்போதும் மாறாதிருக்கும் இன்ப வாழ்வைத் தரும். 

சாலமன் பாப்பையா விளக்க உரை - ஒரு காலமும் முடிவு பெறாத குணத்தை உடைய ஆசையை விட்டுவிட்டால், அதுவே ஒருவனுக்கு நிலைத்து வாழும் இயல்பைக் கொடுக்கும். 

கலைஞர் விளக்க உரை - இயல்பாகவே எழும் அடங்காத பேராசையை அகற்றி வாழும் நிலை, நீங்காத இன்பத்தை இயல்பாகவே தரக்கூடியதாகும்.

நன்றி

Post a Comment

0 Comments