திருக்குறள் அதிகாரம் 25 - அருளுடைமை - ARULUDAIMAI


அருளுடைமை
 

திருக்குறள் அதிகாரம் 25 - அருளுடைமை - ARULUDAIMAI


குறள் 241

அருட்செல்வஞ் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் 
பூரியார் கண்ணு முள
 

மு.வ விளக்க உரை - பொருள்களாகிய செல்வங்கள் இழிந்தவரிடத்திலும் 
உள்ளன; (உயர்ந்தவரிடத்தில் மட்டுமே உள்ள) அருளாகிய செல்வமே செல்வங்களில் சிறந்த செல்வமாகும். 

சாலமன் பாப்பையா விளக்க உரை - செல்வங்கள் பலவற்றுள்ளும் சிறந்தது அருள் என்னும் செல்வமே. பொருட்செல்வம் இழிந்த மனிதரிடமும் உண்டு. 

கலைஞர் விளக்க உரை - கொடிய உள்ளம் கொண்ட இழிமக்களிடம்கூடக் கோடிக்கணக்கில் செல்வம் குவிந்திருக்கலாம்; ஆனாலும் அந்தச் செல்வம் அருட் செல்வத்துக்கு ஈடாகாது 

குறள் 242

நல்லாற்றான் நாடி யருளாள்க பல்லாற்றால் 
தேரினும் அஃதே துணை 

மு.வ விளக்க உரை - நல்ல வழியால் ஆராய்ந்து அருளுடையவர்களாக விளங்க வேண்டும்; பலவழிகளால் ஆராய்ந்து கண்டாலும் அருளே வாழ்க்கைக்குத் துணையாக இருக்கும். 

சாலமன் பாப்பையா விளக்க உரை - நல்லநெறியில் வாழ்ந்து, நமக்கு உதவும் அறம் எது என ஆய்ந்து, அருளுடன் வாழ்க; எல்லாச் சமய நெறிகளால் ஆய்ந்தாலும் அருளே நமக்குத் துணையாகும். 

கலைஞர் விளக்க உரை - பலவழிகளால் ஆராய்ந்து கண்டாலும் அருள் உடைமையே வாழ்க்கைக்குத் துணையாய் விளங்கும் நல்வழி எனக் கொள்ளல் வேண்டும் 

குறள் 243

அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த 
இன்னா உலகம் புகல் 


மு.வ விளக்க உரை - அறியாமையாகிய இருள் பொருந்திய துன்ப உலகில் இருந்து வாழும் வாழ்க்கை, அருள் பொருந்திய நெஞ்சம் உடையவர்களுக்கு இல்லை. 

சாலமன் பாப்பையா விளக்க உரை - அருள் நிறைந்த நெஞ்சத்தவர்க்கு, இருட்டான, துன்ப உலகமாகிய நரகம் புகும் நெருக்கடி இல்லை. 

கலைஞர் விளக்க உரை - அருள் நிறைந்த மனம் படைத்தவர் அறியாமை எனும் இருள் சூழ்ந்த துன்ப உலகில் உழலமாட்டார் 

குறள் 244

மன்னுயி ரோம்பி அருளாள்வாற் கில்லென்ப 
தன்னுயி ரஞ்சும் வினை 


மு.வ விளக்க உரை - தன் உயிரின் பொருட்டு அஞ்சி வாழ்கின்ற தீவினை, உலகில் நிலைபெற்றுள்ள மற்ற உயிர்களைப் போற்றி அருளுடையவனாக இருப்பவனுக்கு இல்லை. 

சாலமன் பாப்பையா விளக்க உரை - நிலைத்து வரும் உயிர்களைக் காத்து அவற்றின் மீது அருள் உள்ளவனுக்குத் தன் உயிரைப் பற்றிய பயம் வராது. 

கலைஞர் விளக்க உரை - எல்லா உயிர்களிடத்தும் கருணைக்கொண்டு அவற்றைக் காத்திடுவதைக் கடமையாகக் கொண்ட சான்றோர்கள் தமது உயிரைப் பற்றிக் கவலை அடைய மாட்டார்கள் 

குறள் 245

அல்லல் அருளாள்வார்க் கில்லை வளிவழங்கு 
மல்லன்மா ஞாலங் கரி 


மு.வ விளக்க உரை - அருளுடையவராக வாழ்கின்றவர்களுக்குத் துன்பம் இல்லை, காற்று இயங்குகின்ற வளம் பெரிய உலகத்தில் வாழ்வோரே இதற்குச் சான்று ஆவர். 

சாலமன் பாப்பையா விளக்க உரை - அருள் உடையவர்க்கு இவ்வுலகில் துன்பம் வராது; இதற்குக் காற்று உலவும், வளம் மிக்க இந்தப் பேருலகமே சான்று. 

கலைஞர் விளக்க உரை - உள்ளத்தில் ஊறிடும் அருளின் இயக்கத்தினால் துன்பத்தை உணராமல் கடமையாற்றலாம் என்பதற்கு, காற்றின் இயக்கத்தினால் வலிமையுடன் திகழும் இந்தப் பெரிய உலகமே சான்று 

குறள் 246

பொருள்நீங்கிப் பொச்சாந்தா ரென்பர் அருள்நீங்கி 
அல்லவை செய்தொழுகு வார் 


மு.வ விளக்க உரை - அருள் இல்லாதவராய் அறமல்லாதவைகளைச் செய்து நடப்பவர்களை, உறுதிப்பொருளாகிய அறத்திலிருந்து நீங்கித் தம் வாழ்க்கையின் குறிக்கோளை மறந்தவர் என்பார். 

சாலமன் பாப்பையா விளக்க உரை - அருள் இல்லாமல் தீமைகளைச் செய்து வாழ்பவரைப் பொருளையும் இழந்து தாம் துன்பம் அடைந்ததையும் மறந்தவர் என்று அறிஞர் கூறுவர். 

கலைஞர் விளக்க உரை - அருளற்றவர்களாய்த் தீமைகளைச் செய்து வாழ்பவர்கள், பொருளற்றவர்களாகவும், கடமை மறந்தவர்களாகவும் ஆவர் 

குறள் 247

அருளில்லார்க் கவ்வுலகம் இல்லை பொருளில்லார்க் 
கிவ்வுலகம் இல்லாகி யாங்கு
 

மு.வ விளக்க உரை - பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகத்து வாழ்க்கை இல்லாதவாறு போல உயிர்களிடத்தில் அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகத்து வாழ்க்கை இல்லையாம். 

சாலமன் பாப்பையா விளக்க உரை - பொருள் இல்லாதவர்க்கு இப்பூவுலக இன்பம் இல்லாதது போலவே, அருள் இல்லாதவர்க்கு மேல் உலக இன்பம் இல்லை. 

கலைஞர் விளக்க உரை - பொருள் இல்லாதவர்களுக்கு இல்லற வாழ்க்கை சிறப்பாக இராது அதுபோலவே கருணை உள்ளம் இல்லாதவர்களின் துறவற வாழ்க்கையும் சிறப்பாக அமையாது 

குறள் 248

பொருளற்றார் பூப்ப ரொருகால் அருளற்றார் 
அற்றார்மற் றாதல் அரிது 


மு.வ விளக்க உரை - பொருள் இல்லாதவர் ஒரு காலத்தில் வளம் பெற்று விளங்குவர், அருள் இல்லாதவர் வாழ்க்கையின் பயம் அற்றவரே அவர் ஒரு காலத்திலும் சிறந்து விளங்குதல் இல்லை. 

சாலமன் பாப்பையா விளக்க உரை - பொருள் இல்லாமல் ஏழையாய்ப் போனவர் திரும்பவும் செல்வத்தால் பொலிவு பெறலாம்; அருள் இல்லாமல் போனவரோ, போனவர்தாம்; மீண்டும் அருள் உள்ளவராய் ஆவது கடினம். 

கலைஞர் விளக்க உரை - பொருளை இழந்தவர் அதனை மீண்டும் தேடிப் பெறலாம் அருளை இழந்தால் இழந்ததுதான்; மீண்டும் பெற இயலாது 

குறள் 249

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின் 
அருளாதான் செய்யும் அறம் 


மு.வ விளக்க உரை - அருள் மேற்கொள்ளாதவன் செய்கின்ற அறச்செயலை ஆராய்ந்தால், அஃது அறிவு தெளியாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டாற் போன்றது. 

சாலமன் பாப்பையா விளக்க உரை - மனத்துள் அருள் இல்லாதவன் செய்யும் அறத்தை ஆராய்ந்து பார்த்தால், ஞானம் இல்லாதவன் மெய்ப்பொருளை உணர்ந்தது போல ஆகும். 

கலைஞர் விளக்க உரை - அறிவுத் தெளிவு இல்லாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டறிய முடியுமா? அது போலத்தான் அருள் இல்லாதவன் செய்யும் அறச்செயலும் இருக்கும் 

குறள் 250

வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின் 
மெலியார்மேற் செல்லு மிடத்து
 

மு.வ விளக்க உரை - (அருள் இல்லாதவன் ) தன்னை விட மெலிந்தவர் மேல் துன்புறுத்த செல்லும் போது, தன்னை விட வலியவரின் முன் தான் அஞ்சி நிற்கும் நிலைமையை நினைக்க வேண்டும். 

சாலமன் பாப்பையா விளக்க உரை - அருள் இல்லாதவள், தன்னைவிட எளிய மனிதரைத் துன்புறுத்தச் செல்லும்போது, தன்னைவிட பலசாலி தன்னைத் துன்புறுத்த வந்தால் அவருக்கு முன் தான் அஞ்சி நிற்பதாக எண்ணிப் பார்க்க. 

கலைஞர் விளக்க உரை - தன்னைவிட மெலிந்தவர்களைத் துன்புறுத்த நினைக்கும் போது, தன்னைவிட வலியவர் முன்னால் அஞ்சி நிற்கும் நிலைமை தனக்கு இருப்பதை மறந்துவிடக் கூடாது

நன்றி

Post a Comment

0 Comments