திருக்குறள் அதிகாரம் 18 - வெஃகாமை - VEGKAMAI


வெஃகாமை

 
திருக்குறள் அதிகாரம் 18 - வெஃகாமை  - VEGKAMAI



குறள் 171

நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக் 
குற்றமும் ஆங்கே தரும் 


மு.வ விளக்க உரை - நடுவுநிலைமை இல்லாமல் பிறர்க்குரிய நல்ல பொருளை ஒருவன் கவர விரும்பினால் அவனுடைய குடியும் கெட்டுக் குற்றமும் அப்போழுதே வந்து சேரும். 

சாலமன் பாப்பையா விளக்க உரை - பிறர்க்குரிய பொருளை அநீதியாக விரும்பிக் கவர்ந்தால், கவர்ந்தவனின் குடும்பம் அழியும்; குற்றங்கள் பெருகும். 

கலைஞர் விளக்க உரை - மனச்சான்றை ஒதுக்கிவிட்டுப் பிறர்க்குரிய அரும் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்புகிறவரின் குடியும் கெட்டொழிந்து, பழியும் வந்து சேரும் 

குறள் 172

படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் 
நடுவன்மை நாணு பவர் 


மு.வ விளக்க உரை - நடுவுநிலைமை அல்லாதவற்றைக் கண்டு நாணி ஒதுங்குகின்றவர், பிறர் பொருளைக் கவர்வதால் வரும் பயனை விரும்பிப் பழியான செயல்களைச் செய்யார். 

சாலமன் பாப்பையா விளக்க உரை - பிறர் பொருளைக் கவர்ந்து அனுபவிக்க எண்ணிப் பழி தரும் செயல்களை, நீதிக்கு அஞ்சுபவர் செய்ய மாட்டார். 

கலைஞர் விளக்க உரை - நடுவுநிலை தவறுவது நாணித் தலைகுனியத் தக்கது என்று நினைப்பவர் தமக்கு ஒரு பயன் கிடைக்கும் என்பதற்காக, பழிக்கப்படும் செயலில் ஈடுபடமாட்டார் 

குறள் 173

சிற்றின்பம் வெஃகி யறனல்ல செய்யாரே 
மற்றின்பம் வேண்டு பவர்


மு.வ விளக்க உரை - அறநெறியால் பெறும் இன்பத்தை விரும்புகின்றவர், நிலையில்லாத சிறிய இன்பத்தை விரும்பி அறம் அல்லாதவற்றைச் செய்யார். 

சாலமன் பாப்பையா விளக்க உரை - அறத்தால் வரும் நிலையான இன்பங்களை விரும்புவோர் நிலையில்லாத இன்பத்தை விரும்பிப் பிறர் 
பொருளைக் கவரும் அறம் இல்லாத செயல்களைச் செய்ய மாட்டார். 
கலைஞர் விளக்க உரை - அறவழியில் நிலையான பயனை விரும்புகிறவர் உடனடிப் பயன் கிடைக்கிறது என்பதற்காக அறவழி தவறி நடக்க மாட்டார் 

குறள் 174

இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர் 

மு.வ விளக்க உரை - ஐம்புலன்களையும் வென்ற குற்றமில்லாத அறிவை உடையவர், யாம் வறுமை அடைந்தோம் என்று எண்ணியும் பிறர் பொருளை விரும்பார். 

சாலமன் பாப்பையா விளக்க உரை - ஏதும் இல்லாத ஏழையாய் இருக்கிறோமோ என எண்ணி, ஐம்புலன் ஆசைகளையும் வென்ற பேர் அறிஞர், பிறர் பொருளைக் கவரமாட்டார். 

கலைஞர் விளக்க உரை - புலனடக்கம் வாய்ந்த தூயவர், வறுமையில் வாடும் நிலையிலேகூடப் பிறர் பொருளைக் கவர்ந்திட விரும்ப மாட்டார் 

குறள் 175

அஃகி யகன்ற அறிவென்னாம் யார்மாட்டும் 
வெஃகி வெறிய செயின் 

மு.வ விளக்க உரை - யாரிடத்திலும் பொருளைக் கவர விரும்பிப் பொருந்தாதவற்றைச் செய்தால், நுட்பமானதாய் விரிவுடையதாய் வளர்ந்த அறிவால் பயன் என்ன? 

சாலமன் பாப்பையா விளக்க உரை - பிறர் பொருள் மீது, ஆசை கொண்டு எவரிடத்திலும் அறிவற்ற செயல்களைச் செய்தால் செய்பவரின் கூரிய, பல நூல் பயின்று பரந்த அறிவினால் அவருக்கு ஆகும் பயன்தான் என்ன? 

கலைஞர் விளக்க உரை - யாராயிருப்பினும் அவரது உடைமையை அறவழிக்குப் புறம்பாகக் கவர விரும்பினால் ஒருவருக்குப் பகுத்துணரும் நுண்ணிய அறிவு இருந்துதான் என்ன பயன்? 

குறள் 176

அருள்வெஃகி யாற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப் 
பொல்லாத சூழக் கெடும் 

மு.வ விளக்க உரை - அருளை விரும்பி அறநெறியில் நின்றவன், பிறனுடைய பொருளை விரும்பிப் பொல்லாத குற்றங்களை எண்ணினால் கெடுவான். 

சாலமன் பாப்பையா விளக்க உரை - அருளை விரும்பிக் குடும்ப வாழ்வில் இருப்பவன், பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டுப் பொல்லாதது செய்தால், அவன் கெட்டுப் போவான். 

கலைஞர் விளக்க உரை - அருளை விரும்பி அதனை அடைவதற்கான வழியில் செல்பவன் தவறிப்போய்ப் பிறர் பொருளை விரும்பிப் பொல்லாத செயலில் ஈடுபட்டால் கெட்டொழிய நேரிடும் 

குறள் 177

வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின் 
மாண்டற் கரிதாம் பயன் 


மு.வ விளக்க உரை - பிறர் பொருளைக் கவர விரும்புவதால் ஆகும் ஆக்கத்தை விரும்பாதிருக்க வேண்டும்; அது பயன் விளைவிக்கும்போது அப்பயன் நன்மையாவது அரிதாகும். 

சாலமன் பாப்பையா விளக்க உரை - பிறர் பொருளை அவர் விரும்பாதிருக்க, நாம் விரும்பிப் பெற்று அனுபவிக்கும்போது அதன் பயன் நல்லதாக இல்லை என்று அறிவதால், பிறர் பொருளைக் கவர்வதற்கு விரும்ப வேண்டா. 

கலைஞர் விளக்க உரை - பிறர் பொருளைக் கவர்ந்து ஒருவன் வளம்பெற விரும்பினால் அந்த வளத்தின் பயன், நலம் தருவதாக இருக்காது 

குறள் 178

அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமை 
வேண்டும் பிறன்கைப் பொருள் 

மு.வ விளக்க உரை - ஒருவனுடைய செல்வத்திற்குக் குறைவு நேராதிருக்க வழி எது என்றால், அவன் பிறனுடைய கைப்பொருளை விரும்பாதிருத்தலாகும். 

சாலமன் பாப்பையா விளக்க உரை - செல்வம் குறையாமல் இருக்க வழி என்ன என்றால், பிறனுக்கு உரிய பொருளை விரும்பாமல் இருப்பதே. 

கலைஞர் விளக்க உரை - தன்னுடைய செல்வச் செழிப்பு குறையாமலிருக்க வேண்டுமென்றால் பிறருடைய பொருளையும் தானே அடைய வேண்டுமென்று ஆசைப்படாமலிருக்க வேண்டும் 

குறள் 179

அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேருந் 
திறனறிந் தாங்கே திரு 


மு.வ விளக்க உரை - அறம் இஃது என்று அறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரைத் திருமகள் தான் சேரும் திறன் அறிந்து அதற்கு ஏற்றவாறு சேர்வாள். 

சாலமன் பாப்பையா விளக்க உரை - பிறர் பொருளுக்கு ஆசைப்படாதிருப்பதே அறம் என்னும் அறிவுடையோரின் பெருமையை அறிந்து, திருமகள் தானே அவரிடம் போய் இருப்பாள். 

கலைஞர் விளக்க உரை - பிறர் பொருளைக் கவர விரும்பாத அறநெறி உணர்ந்த அறிஞர் பெருமக்களின் ஆற்றலுக்கேற்ப அவர்களிடம் செல்வம் சேரும் 

குறள் 180

இறலீனும் எண்ணாது வெஃகின் விறலீனும் 
வேண்டாமை யென்னுஞ் செருக்கு 


மு.வ விளக்க உரை - விளைவை எண்ணாமல் பிறர் பொருளை விரும்பினால் அஃது அழிவைத் தரும்; அப்பொருளை விரும்பாமல் வாழும் பெருமை வெற்றியைத் தரும். 

சாலமன் பாப்பையா விளக்க உரை - பின் விளைவை எண்ணாமல் அடுத்தவர் பொருளை விரும்பிக் கவர்ந்தால், அது நமக்கு அழிவைக் கொடுக்கும்; அதற்கு ஆசைப்படாத செல்வமோ வெற்றியைக் கொடுக்கும். 

கலைஞர் விளக்க உரை - விளைவுகளைப் பற்றி நினைக்காமல் பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்பினால் அழிவும், அத்தகைய விருப்பம் கொள்ளாதிருந்தால் வாழ்க்கையில் வெற்றியும் கிட்டும்

Post a Comment

0 Comments