இராமாயணம் பகுதி - 87 - RAMAYANAM PART - 87


இராமாயணம் பகுதி - 87


இராமாயணம் பகுதி - 87 - RAMAYANAM PART - 87

வானரங்கள் அனுமனை சூழ்ந்துக் கொண்டு வாழ்த்தினர். அனைவரும் உயிர்ப்பெற்று எழுந்தவுடன் ஜாம்பவான் அனுமனிடம், சஞ்சீவி மலையை சிறிதும் தாமதிக்காமல் அதை எடுத்த இடத்திலேயே கொண்டு போய் வைத்துவிட்டு வா எனக் கூறினான். அனுமன், சஞ்சீவி மலையை இருந்த இடத்தில் வைக்க சென்றான். இந்திரஜித் ஏவிய பிரம்மாஸ்திரம் இராமர் முன் வந்து தோன்றியது. என்னை வில்லில் பூட்டி செலுத்திய பின் நான் கொல்லுவது என்பது உறுதி என்ற உண்மையை நீ நிலை நிறுத்திவிட்டாய் எனக் கூறிவிட்டு இராமரை சரணடைந்தது. இராவணனின் அரண்மனையில், இந்திரஜித் தன் பிரம்மாஸ்திரத்தால் இராம இலட்சுமணன் உள்ளிட்ட வானரங்கள் வீழ்ந்ததை வெற்றி விழாவாகக் கொண்டாடிக் கொண்டு இருந்தனர். அரக்கர்களும், அரக்கியர்களும் மது அருந்தி ஆட்டம் பாட்டம் என மகிழ்ச்சியாக கொண்டாடினர். அங்கு வானர வீரர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். வானரங்களின் ஆரவாரங்களை கேட்டு இராவணன் திடுக்கிட்டான். அப்பொழுது இராவணனின் தூதர்கள் அங்கு வந்தனர்.

அரசே! அனுமன் சஞ்சீவி மலையைக் கொண்டு வந்ததால் பிரம்மாஸ்திரத்தால் வீழ்ந்தவர்கள் புத்துயிர் பெற்று எழுந்து ஆரவாரம் செய்துக் கொண்டு இருக்கின்றனர் என்றார்கள். இதைக்கேட்ட இராவணனின் மகிழ்ச்சி நிரம்பிய உள்ளம் சோகத்தால் வாடியது. உடனே இராவணன் மந்திர ஆலோசனைக்கு விரைந்துச் சென்றான். அங்கு இந்திரஜித், மாலியவான், மகோதரன் உள்ளிட்ட மற்ற மந்திர தலைவர்கள் அங்கு வந்துச் சேர்ந்தனர். இராவணன், இராம இலட்சுமணர் மற்றும் வானர வீரர்கள் உயிர் பிழைத்ததைக் கூறினான். அப்போது மாலியவான், இராவணா! நீ அவசரப்பட்டு அரக்கர்களின் பிணங்களை கடலில் போட்டு விட்டாய். அப்படி செய்யாமல் இருந்தால் அனுமன் கொண்டு வந்த சஞ்சீவி மலையால் அவர்களும் உயிர் பிழைத்திருப்பார்கள். சஞ்சீவி மலையை தூக்கிய அனுமன் இந்த இலங்கை நகரை தூக்கி கடலில் எறிந்தாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. நீ உன் பிடிவாதத்தைக் கொண்டு உன் மதியை இழந்து விடாதே.

நீ சீதையை கொண்டு போய் இராமனிடம் ஒப்படைத்து விட்டு, இராமனை சரணடைந்தால் இலங்கையில் மீதமுள்ள அரக்கர்களும் உயிர் வாழ்வார்கள் என்றான். இதைக் கேட்டு இராவணன், மிகுந்த கோபங்கொண்டு தங்களின் அறிவுரைகளுக்கு நன்று எனக் கூறி அமர வைத்தான். இலங்கையில் அரக்கர்கள் அனைவரும் அழிந்தாலும், நான் ஒருவனே தனித்து நின்று போர் புரிவேன். போர் புரிவதற்கு யாருக்கேனும் பயம் இருந்தால் ஓடி விடுங்கள். அது மகனாக இருந்தாலும் சரி. என் எதிரிகளை அழிக்கும் ஆற்றல் என்னிடம் உள்ளது. எனக்கு துணையாக யாரும் வர வேண்டாம். நானே அவர்களை அழிப்பேன் எனக் கூறினான். அப்பொழுது இந்திரஜித் தந்தையை வணங்கி, தந்தையே! நான் அனைவரையும் கொல்லுமாறு பிரம்மாஸ்திரத்தை ஏவினேன். ஆனால் அதிலிருந்து இராமன் தப்பித்து விட்டான். இதிலிருந்து விபீஷணன் கூறியவாறு இராமன் பரம்பொருள் என்பதை தாங்கள் உணர வேண்டும் என்றான்.

இராவணன் கோபங்கொண்டு, என் ஆற்றலை நீ அறியவில்லை. நாளை நானே போருக்குச் சென்று அவர்களை கொல்லுவேன் என்றான். இதைக்கேட்ட இந்திரஜித், தந்தையே! தாங்கள் என்னை மன்னித்தருள வேண்டும். நாளை நான் போருக்குச் செல்கிறேன். அதற்கு முன் நான் இராம இலட்சுமணனை வெல்ல நிகும்பலா யாகம் செய்ய வேண்டும். இதற்கும் ஒரு தடை உள்ளது. நான் நிகும்பலா யாகம் செய்வதை விபீஷணன் இராம இலட்சுமணனிடம் சொல்லாமல் இருக்க வேண்டும். இதனை தடுக்க நாம், மாய சீதையை கொன்றுவிட்டு பிறகு அயோத்திக்கு செல்வது போல் பாசாங்கு காட்ட வேண்டும். அதன்பின் நான் நிகும்பலா யாகத்தை செய்து முடிப்பேன் என்றான். இந்திரஜித்தின் யோசனையை ஏற்று இராவணன் இதற்கு சம்மதம் தெரிவித்தான்.

இந்திரஜித்தின் யோசனைப்படி, அனுமன் சஞ்சீவி மலையை வைத்துவிட்டு வான மார்க்கமாக வந்துக் கொண்டிருக்கும்போது இந்திரஜித் ஓர் அரக்கனை மாய சீதையாக மாற்றி அனுமன் முன்தோன்றினான். இந்திரஜித் மாய சீதையின் கூந்தலை கையில் பிடித்துக் கொண்டு, ஒரு வாளை கையில் வைத்திருந்தான். இந்திரஜித் அனுமனை பார்த்து, அடேய், வானரமே! இத்தனை விளைவுகளும் இந்த சீதையினால் தான் நிகழ்ந்தது. அதனால் இவளை நான் கொல்லப் போகிறேன். அது மட்டுமல்லாமல் நான் அயோத்திக்குச் சென்று பரதன், சத்ருக்கனையும் கொல்லப் போகிறேன் என்றான். அனுமன், அவனிடம் பணிவாக, பெண்ணை கொல்வது என்பது பாவச் செயலாகும். இதனால் உனக்கு பாவங்கள் தான் அதிகரிக்கும். அறநெறியை அழித்து பாவத்தை தேடிக் கொள்ளாதே என தடுத்தான்.

ஆனால் இந்திரஜித் அனுமனின் சொல்லைக் கேட்காமல் மாய சீதையை அனுமன் கண் முன் தன் வாளால் வெட்டிவிட்டு, நான் அயோத்திக்குச் சென்று பரதன், சத்ருக்கனையும் கொல்லப் போகிறேன் எனக் கூறி அயோத்திக்குச் செல்வதை போல் நிகும்பலா யாகம் செய்யும் இடத்திற்குச் சென்றான். அனுமன் நிஜமாகவே சீதை இறந்த விட்டதாக நினைத்து புலம்பி அழுதான். பிறகு அனுமன், விரைந்துச் சென்று இராமரிடம் சீதை இறந்தச் செய்தியையும், இந்திரஜித் அயோத்தி சென்றிருப்பதையும் கூறினான். இதைக் கேட்ட இராமர், அசைவற்று இருந்தார். வானரங்கள் எல்லாம் புலம்பி அழுதனர். இராமரின் நிலைமையை பார்த்த இலட்சுமணன், அண்ணா! தாங்கள் இவ்வாறு வருந்துவது அறிவுடைமையாகாது. நாம் இந்த மூவுலகங்களையும் அழிக்க வேண்டும் என்றான்.

அப்பொழுது விபீஷணன் இராமரை பணிந்து, பெருமானே! இது எல்லாம் அரக்கர்களின் மாய வேலையாகத் தான் இருக்க வேண்டும். உங்களை திசை திருப்பிவிட்டு, இந்திரஜித் நிகும்பலா யாகம் செய்யச் சென்றிருப்பான். அந்த யாகத்தை அவன் திறம்பட செய்துவிட்டால் அவனை வெல்ல எவராலும் முடியாது. தாங்கள் கவலை கொள்ளாமல் இருங்கள். நான் வண்டு போல் சிறு உருவம் எடுத்து அன்னை சீதை எவ்வாறு இருக்கிறார் என்பதை பார்த்துவிட்டு வருகிறேன் என்றான். பிறகு விபீஷணன் சிறு வண்டு போல் உருவம் எடுத்து, அசோக வனத்திற்குச் சென்றான். அங்கு சீதை நலமுடன் இருப்பதைக் கண்டு மகிழ்ந்தான். உடனே விபீஷணன் அங்கிருந்து விரைந்து வந்து இராமரிடம், அன்னை சீதை நலமுடன் இருக்கிறார் எனக் கூறினான்.

தொடரும்.....

Post a Comment

0 Comments