இராமாயணம் பகுதி - 66 - RAMAYANAM PART - 66


இராமாயணம் பகுதி - 66


இராமாயணம் பகுதி - 66 - RAMAYANAM PART - 66

மந்திர ஆலோசனையில் நடந்தவற்றை விபீஷணனின் மனைவி கேட்டுக் கொண்டு சீதையிடம் சென்று கூறினாள். சீதா! இராமனை வெல்ல இவ்வுலகில் எவரும் இல்லை. இராவணன் உன்னிடம் நாடகமாடி உள்ளான். இலங்கை நகரத்தின் போர் முழக்கங்கள் உனக்கு கேட்கிறதா! இல்லையா!. இராமன் போருக்கு ஆயத்தமாக இலங்கை நகரின் வாயிலில் நின்றுக் கொண்டு இருக்கிறான். அதனால் நீ கவலைக் கொள்ள வேண்டாம் எனக் கூறினாள். இராவணன் மந்திர ஆலோசனையில், இராவணனின் மாமனான மாலி எழுந்து, இராவணா! காம உணர்வு துன்பத்தைத்தான் தரும் என்பதை புரிந்துக் கொள்.

இலங்கைக்குள் புகுந்து நம் அரக்கர்களை அழித்து, நம் நகரை தீ வைத்த அனுமனின் கையில் என்ன ஆயுதம் தான் இருந்தது? சுக்ரீவன் உன்னுடன் போரிட்டு உன் கிரீடத்தில் இருந்த மணிகளைப் பறித்துச் சென்றபோது அவன் கையில் இருந்த ஆயுதம் தான் என்ன? உனக்கு இதிலிருந்து தப்பிக்க ஒரு வழி தான் உள்ளது. நீ சீதையை இராமனிடம் ஒப்படைத்துவிட்டு அவனிடம் சரணடைவது தான் நல்லது என்றான். மாலி சொன்னதை கேட்டு இராவணன் கடுங்கோபம் கொண்டான். இராவணன் மாலியிடம், என் வலிமை என்ன என்பது தெரியாமல் நீ பேசுகிறாய். நீ எனக்கு நல்ல வழியைக் காட்டவில்லை, பெரும் அழிவைத்தான் காட்டுகிறாய். நீ இதுபோன்ற அறிவுரைகள் கூறுவதாக இருந்தால், நீ பேசாமல் இருப்பது தான் நல்லது என்றான் கோபத்துடன்.

பிறகு இராவணன் தன் படைபலம் கொண்ட சேனைக்கு உத்தரவுகளைப் பிறப்பித்தான். இலங்கையின் கிழக்குதிசை வாயிலுக்கு படைத்தலைவனுடன் இருநூறு வெள்ளம் ஆயுதம் தாங்கிய அரக்கர் படையை அனுப்பி, அங்கு தயார் நிலையில் நிற்கும் வானரப் படை தளபதி நீலனோடு போரிடுவதற்கு அனுப்பி வைத்தான். இராவணன் தனது மகன் மகோதரனை அழைத்து, இருநூறு வெள்ளம் படையுடன் சென்று, தென் திசை வாயிலில் தயாராக இருக்கும் அங்கதனுடன் போரிடத் தயாராகுமாறு அனுப்பினான்.

பிறகு இராவணன் இந்திரஜித்தை அழைத்து, மகனே! நீ இருநூறு வெள்ளம் சேனையுடன் மேற்கு வாயிலுக்குச் சென்று அங்கு போருக்குத் தயார் நிலையில் நிற்கும், நம் நகருக்கு பேரழிவை செய்த அந்த அனுமனிடம் போர் புரிய தயாராக இரு என்றான். அடுத்து இராவணன் விரூபாட்சா! நீ நம் சேனைகளோடும், அமைச்சர்களோடும், இலங்கை நகரத்தின் காவல் பொறுப்பை ஏற்றுக்கொள் என்றான். நான் யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை, காலாட்படை என இருநூறு வெள்ளம் படைகளுடன் வடக்கு வாயிலுக்குச் சென்று அந்த இராமனோடும், இலட்சுமணனோடும் போரிடத் தயாராக இருப்பேன் என்று நகரின் பாதுகாப்பையும், படைகளின் அணிவகுப்பையும் நிர்ணயித்தான்.

நான்கு புறங்களில் நிற்கும் இராம இலட்சுமணர் மற்றும் வானர படைகள், இராவணனின் உத்தரவின்படி நிற்கும் அரக்கர் படைகள் பற்றி சிறு தொகுப்பு :

இராம இலட்சுமணர் வானர படைகள் :
மேற்கு திசை - அனுமன் - பதினேழு வெள்ளம் வானர படை
கிழக்கு திசை - நீலன் - பதினேழு வெள்ளம் வானர படை
தெற்கு திசை - அங்கதன் - பதினேழு வெள்ளம் வானர படை
வடக்கு திசை - இராம இலட்சுமணர் - பதினேழு வெள்ளம் வானர படை
விபீஷணன் - அரக்கர்களை கண்காணிக்கும் பணி

இராவணனின் படை :
மேற்கு திசை - இந்திரஜித் - இருநூறு வெள்ளம் அரக்க சேனை
கிழக்கு திசை - படைத்தலைவன் - இருநூறு வெள்ளம் அரக்க சேனை
தெற்கு திசை - மகோதரன் - இருநூறு வெள்ளம் அரக்க சேனை
வடக்கு திசை - இராவணன் - இருநூறு வெள்ளம் அரக்க சேனை
விரூபாட்சன் - நகர காவல் பொறுப்பு 

அன்றைய பொழுது கழிந்து, சூரியன் தன் ஒளிகளை வீசிக் கொண்டிருந்தது. வடக்கு வாயிலுக்கு வெளியே இராமர் தனது பதினேழு வெள்ளம் படையுடன் போருக்கு ஆயத்தமாக நின்று கொண்டிருந்தார். இராமர், இராவணனுக்காக தன் கோதண்டத்தை ஏந்தி போருக்குத் தயார் நிலையில் இருந்தார். இராவணன் வடக்கு வாயில் வழியாக போருக்கு வருவான் என வெகுநேரம் எதிர்பார்த்து இராமர் காத்து கொண்டிருந்தார். வெகுநேரம் ஆகியும் இராவணன் போருக்கு வருவதுபோல் தெரியவில்லை. இதற்கு மேல் காத்திருப்பதில் ஒரு பயனும் இல்லை என்று நினைத்த இராமர், விபீஷணனை அழைத்து, இதற்கு மேல் நாம் என்ன செய்ய வேண்டும் என ஆலோசனை தொடங்கினார். இராமர், சிறை வைத்திருக்கும் சீதையை விடுவிக்குமாறும், அப்படி இல்லையென்றால் போருக்கு வருவமாறும் நாம் ஒரு தூதுவனை அனுப்பலாம் என்றார்.

இராமரின் ஆலோசனையை கேட்ட விபீஷணன், இது தான் சரியான செயல் என்றான். சுக்ரீவன், நாம் மிகவும் வலிமை வாய்ந்த வீரனை அனுப்பவது தான் சிறந்தது என்றான். இதைக் கேட்ட இலட்சுமணன், அண்ணா! இராவணனின் மேல் இரக்கம் காட்டி தூது அனுப்புவது சரிதானா? நாம் இப்பொழுது இராவணனை அழிப்பதை விட்டுவிட்டு அவனுக்கு தூது அனுப்புவதா? அந்த இராவணன், தேவர்கள் முதற்கொண்டு அனைவரையும் துன்புறுத்தியவன். அன்னை சீதையையும் கவர்ந்துச் சென்று சிறையில் வைத்தவன். அவன் நம் தந்தை போன்ற ஜடாயுவை கொன்றவன். இவ்வளவு செய்த இராவணனின் மீது கருணை காட்டி அவனுக்கு தூது அனுப்புவது சரி தானா? எனக் கேட்டான். இராமர் இலட்சுமணனிடம், தம்பி. இலட்சுமணா! நீ சொல்வது முற்றிலும் உண்மை தான். அரக்கர்கள் அழிவது நிச்சயம். ஆனால் நம் தர்ம நெறிப்படி தூது அனுப்புவது தான் பெருந்தன்மையைக் குறிக்கும் என்றார்.

பிறகு இலட்சுமணன் தூது அனுப்புவதற்கு சம்மதித்தான். பிறகு அனைவரிடமும் யாரை தூது அனுப்புவது என ஆலோசித்தார். இராமர், நாம் மறுபடியும் அனுமனை அனுப்பினால் நம்மிடம் சிறந்த வீரர்கள் எவரும் இல்லை என அவன் நினைத்துக் கொள்வான். அனுமனை தவிர சிறந்த வலிமைமிக்க வீரர் உள்ளார்களா? என யோசித்தார். உடனே இராமனின் நினைவுக்கு வந்தது வாலியின் மைந்தன் அங்கதன் தான். இராமர் அனைவரிடமும் நாம் அங்கதனை தூது அனுப்பலாம் என்றார். அனைவரும் இதற்கு சம்மதித்தனர். அங்கதனை வரச் சொல்லி செய்தி அனுப்பினர். அங்கதனும் உடனே அங்கு வந்துச் சேர்ந்தான். அங்கதன் இராமரை நோக்கி பணிந்து வணங்கினான். பிறகு இராமர் அங்கதனிடம், அங்கதா! நீ தூதுவனாக இராவணனிடம் சென்று நான் சொல்லும் இரண்டு விஷயங்களை கூறி அதற்கு அவன் கூறும் பதிலை எனக்கு வந்து சொல்வாயாக என்றார். இராமர் சொன்னதை கேட்ட அங்கதன் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தான்.

அங்கதன் இராமரிடம், ஐயனே! தாங்கள் என்னை தூதுவனாக தேர்வு செய்ததை நினைத்து மிக்க மகிழ்ச்சியடைகிறேன். நான் இராவணனிடம் என்ன செய்தியை சொல்ல வேண்டும்? என்பதை என்னிடம் கூறுங்கள் என்றான். இராமர், அங்கதா! நீ இராவணனின் இருப்பிடத்திற்குச் சென்று சீதையை என்னிடம் ஒப்படைத்துவிட்டால் நான் அவனை விட்டுவிடுகிறேன். அப்படி இல்லையென்றால் போரில் அவனின் பத்து தலைகளையும் சிதைத்துவிடுவேன். இவற்றில் சரியான வழியை தேர்ந்தெடுக்கும்படி கூறுவாயாக. இதற்கு அவன் கூறும் பதிலை என்னிடம் வந்து கூறுவாயாக எனக் கூறி அங்கதனுக்கு விடை கொடுத்தார். அங்கதன், இராமர் தன்னை தூதுவனாக தேர்ந்தெடுத்ததை நினைத்து மிகவும் பெருமைப்பட்டு அங்கிருந்து விரைந்துச் சென்றான்.

தொடரும்.....

Post a Comment

0 Comments