மகாபாரதம் பகுதி - 53
அதன்படியே அந்த மந்திரத்தை கேட்டு சகாதேவனை எழுப்பினார் தர்மர். மகனே! உன் உடன் பிறந்த அர்ஜுனனையோ, பீமனையோ எழுப்பாமல் இந்த சகாதேவனை நீ எழுப்பியதற்கு காரணம் என்ன? என்று கேட்டார் எமதர்மராஜா. இதற்கு பதிலளித்த தர்மர், தந்தையே! எனது தாயான குந்திக்கு நான் ஒருவன் பிழைத்திருக்கிறேன். ஆனால், என் தம்பியரை எழுப்பினால், என் சிற்றன்னை மாத்ரிக்கு யார் இருப்பார்கள்? மேலும், என் தம்பிகளை எழுப்பினால், குந்தியின் மைந்தர்களை மட்டும் பாதுகாத்தேன் என்ற அவச்சொல்லுக்கு ஆளாவேன். இது எவ்வகையிலும் நியாயமாகதே? என்ற தனது பெருத்தன்மையை வெளிப்படுத்தினார். இதைக்கேட்டு எமதர்மன் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். அங்கே இறந்து கிடந்த அனைத்து தம்பியரையும் உயிர்பெறச்செய்தார். தர்மர் கேட்ட வரத்தைக் கொடுத்ததுடன், பகைவர்களையும் வெல்லும் மந்திரங்களையும் கற்றுத் தந்தார். பல ஆயுதங்களையும் தந்து உதவினார். இந்த கலியுகத்தில், உடன் பிறந்த சகோதரர்களே அடித்துக் கொள்கிறார்கள். அவர்களெல்லாம் தர்மர் சொன்ன வார்த்தைகளை திரும்ப திரும்ப சிந்தித்துப் பார்க்க வேண்டும். பாரதம் போன்ற கதைகளை குழந்தைகளுக்கு கற்றுத்தரவேண்டும் என்பது இதனால் தான். திரவுபதி எப்படி ஐந்து பேருக்கு மனைவியாக இருந்தாள் என்பது போன்ற விரச ஆராய்ச்சிகள், பட்டிமன்றங்களையெல்லாம் ஒதுக்கிவிட்டு, ஒரு நூலில் சொல்லப்பட்டுள்ள உயர்ந்த கருத்துக்களை எடுத்துக் கொள்ள வேண்டும். அதைப்படித்து திருந்த வேண்டும்.
பங்காளி சண்டையை விட்டொழிக்க வேண்டும். உடன்பிறந்தவன், சித்தப்பா மகன், பெரியப்பா மகன், அவனுக்கென சொத்து... என்பது போன்ற வார்த்தைகளே இதைப் படிப்பவர் வாயில் இனி வரக்கூடாது. இந்த சம்பவங்களெல்லாம் ஏன் நடந்தன என்பது பாண்டவர்களுக்கு புரியாமல் இருந்தது. எமதர்மன் அவர்களிடம் இதை விளக்கிச் சொன்னான். துரியோதனனால் -- முனிவர் மூலமாக நடத்தப்பட்ட யாகத்தையும், அதன் விளைவாக அவர்கள் அனுபவித்த --ன்பத்தையும், துன்பமே அவர்களுக்கு சாதகமாக அமைந்ததையும் எடுத்துச் சொன்னான். துன்பமும் இன்பத்தை தரவே வருகிறது என்ற தத்துவத்தை அவர்களுக்கு உணர்த்தினான். பின்னர் பாண்டவர்கள் எமதர்மராஜாவின் பாதங்களில் பணிந்து விடை பெற்றனர். இப்படியாக, 12 வருடங்கள் முடிந்து விட்டன. இந்த வனவாசத்தில் தங்களுக்கு ஏற்பட்ட துன்பங்கள் மூலம் பல படிப்பினைகளை சமர்ப்பித்தான் அர்ஜுனன். தர்மருக்கும் அதுவே சரியென்று பட்டது. மச்சநாட்டை விராடன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவன் தர்மவான். நல்லவன். நீதி நெறியில் உயர்ந்தவன். அந்த நாட்டின் தலைநகரான விராநகரத்தின் எல்லைக்குள், இரவோடு இரவாக யார் கண்ணிலும் படாமல் நுழைந்தனர் பாண்டவர்களும், திரவுபதியும்.
ஊர் எல்லையில் இருந்த ஒரு மயானத்தில் காளிகோயில் ஒன்று இருந்தது. அம்பிகை காளியின் சிலை உக்ரமாக காட்சியளித்தது. அந்த கோயிலுக்குள் சென்ற அவர்கள் அங்கிருந்த வன்னிமரப் பொந்தில் தங்கள் ஆயுதங்கள், ஆடைகளை ஒளித்து வைத்தார்கள். தர்மர் ஒரு அந்தணரைப் போல வேடமிட்டுக் கொண்டார். கங்கன் என்று பெயர் சூட்டிக் கொண்டார். தம்பிகளையும், திரவுபதியையும் அங்கே விட்டுவிட்டு, விராடராஜனின் அவைக்குச் சென்றார். அந்தணர்களை வரவேற்று உபசரிப்பதில் அக்கால மன்னர்கள் மிகுந்த அக்கறை காட்டினர். அந்தணர்களை உபசரிப்பவர்கள் சொர்க்கம் பெறுவர். அவர்களைத் தூற்றுவோர் ஏழேழு ஜென்மமும் நரகத்தை அடைந்து மீளாத்துயரில் ஆழ்வர் என குருமார்கள் கற்றுத் தந்ததை கடைபிடித்தவர்கள் அவர்கள். அவ்வகையில் அந்தணராகிய கங்கனை வரவேற்ற விராடமன்னன், ஐயனே! தாங்கள் யார்? எந்த தேசத்தில் இருந்து வருகிறீர்கள்? உங்களுக்கு சேவை ஏதும் செய்ய உத்தரவு தருகிறீர்களா? என பணிவுடன் கேட்டான்.
தொடரும்.....
0 Comments